Sunday, September 26, 2010

ஏன் டீச்சர் என்னை பெயிலாக்கினீங்க?

ன் இங்கே வேலை செய்ய வந்தே? படிக்கலையா நீ?”

இந்தக் கேள்வியை கோவில்பட்டி போன்ற நகரங்களைச் சுற்றியுள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளிலோ, காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள நெசவுத் தொழிற்சாலைகளிலோ அல்லது வேறு எங்குமோ பணிபுரியும் சிறுவர்களிடம் கேட்டுப்பாருஙகள் அவர்கள் சொல்லும் பதில் இதுவாகத்தானிருக்கும்.

”பெயிலாயிட்டேன். அதனால் மேல படிக்கலை. வீட்டுல வேற கஷ்டம். அதனால தான்”

“உனக்கு படிப்பு ஏறாது. மாடு மேய்க்கத்தான் லாயக்கு” போன்ற ஆசிரியரின் வசவுகள், பள்ளி ஆண்டுத்தேர்வில் சரியாக மதிப்பெண்கள் பெறவில்லையெனில் தோல்வியடைவதால் உண்டாகும் அழுத்தம், கூடப்படித்தவர்கள் மேல்வகுப்பிலிருக்க, தான் மட்டும் கீழ்வகுப்பிலிருந்தவர்களோடு படிக்க வேண்டிய அவமானம், பெற்றோரின் திட்டு இவற்றையெல்லாம் விட பள்ளிக்குச் செல்லாமலிருப்பது மேல் என்ற எண்ணமே மாணவர்களிடத்தில் தோன்றுவது இயற்கை. பிஞ்சுக் குழந்தைகளின் மனங்களில் தோல்வியினால் உண்டாகும் தாழ்வு மனப்பான்மையை நம் தேர்வு முறை வளர்க்கிறது. வறுமையான குடும்பத்திலிருந்து வரும் பிள்ளைகளின் பெற்றோருக்கு பெயிலாகும் பிள்ளையை படிக்க வைத்து என்ன பயன் என்கிற உணர்வு எல்லாமும் சேர்ந்து குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்குகின்றன.

இந்தப் பின்னணியில், எட்டாம்வகுப்பு வரையில் எந்த மாணவரையும் பெயிலாக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த அறிவிப்பு குறித்து கல்வியாளர் ச.மாடசாமியின் கருத்தையறிய அவரை அணுகினோம்.

“வரவேற்கத்தக்க அறிவிப்பு இது. இந்திய வகுப்பறையில் கற்பிக்கும் முறையே தேர்வில் வெற்றி பெறுவதை நோக்கியதாக இருக்கிறது. பாஸ் பண்ணுவதற்கும், மதிப்பெண் எடுப்பதற்குமாகவே பாடங்கள் கற்பிக்கப்படுகிறதேயன்றி கற்றுக்கொடுக்கும் நோக்கில் இல்லை. அதனாலேயே பெயிலாகும் குழந்தைகளுக்கு அடியும் திட்டும் கிடைகின்றன. ஒரு முதல் ரேங்க் மாணவன் கூட வகுப்பிற்கு பயத்துடன் தான் செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேர்வு என்பதே முதலில் மாணவர்களுக்கு பாதுகாப்பின்மையையும், பயத்தையும் உருவாக்குகின்றது. பெயிலாகும் சிறுமிகளை பள்ளியை விட்டு நிறுத்தி வீட்டுவேலைக்கு, சித்தாள் வேலைக்கு அனுப்புவது தான் கிராமப்புறங்களில் நடக்கிறது. பெயிலாகும் பையன்கள்  பின்னாளில் கிரிமனல்களாகவே கூட ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறது. இவற்றிற்கெல்லாம் இந்த அறிவிப்பு ஒரு முடிவு கட்டும்”  என்கிறார்.

இதற்கு நேர்மாறான பார்வையும் இருக்கிறது. மாணவர்களுக்கு படிப்பின் மேல் ஆர்வம் குறைந்துவிடும். படித்தாலும், படிக்காவிட்டாலும் தான் தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்ற தெரிந்துவிட்டால் படிப்பில் ஆர்வம் குறைந்துவிடும் என்று ஒரு அச்சமும் நிலவுகிறது. அதன் காரணமாகவே இந்த அறிவிப்பை எதிர்க்கிறவர்களும் இருக்கிறார்கள். இது குறித்து ஆசிரியர்கள் என்ன நினைக்கிறார்கள்.?

“எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை. ஒரு ஓட்டப்பந்தயம் வைத்துவிட்டு அதில் கடைசியாய் வந்தாலும் முதலாவதாக வந்ததற்கு சமம் என்று சொல்லி பரிசு கொடுத்தால் ஆற்றலை வீணாக்கி யார் தான் ஓடவேண்டும் என்று நினைப்பார்கள்? மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து ஏ,பி,சி,டி என கிரேடு கொடுக்கலாம். பாஸானாலும், தான் வாங்கிய கிரேடை வைத்து தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை மாணவருக்கு உணர்ந்து கொண்டு தன்னை வளர்த்துக்கொள்ள வசதியாக இருக்கும்” என்கிறார் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன்.

நம் கல்விமுறை, தேர்வு முறை எல்லாமே மாணவர்களை பயமுறுத்துகின்றன. ஆனால் இப்போது பின்பற்றப்படும் முறைகளை அப்படியே வைத்துக்கொண்டு இந்த அறிவிப்பை மட்டும் வெளியிடுவதால் என்ன பலன் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

“மேலைநாடுகளில் பாஸ் செய்வதற்கு 80 மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும். பெரும்பாலும் யாரும் அங்கு பெயிலாவதில்லை. ஆனால் இங்கே வெறும் 35 மதிப்பெண்கள் மட்டுமே பாஸ் செய்ய எடுக்க வேண்டிய நிலையில், மாணவர்கள் 25 எடுத்தாலே எப்படியாவது அவர்களுக்கு 35 போட்டு பாஸ் போட்டு விடுகிறார்கள். அப்படியும் கூட மாணவர்கள் பெயில் ஆகிறார்கள் என்றால் பிரச்சனை எங்கேயிருக்கிறது? ஓராண்டு முழுக்க கற்கும் கல்வியை ஒரு மூன்று மணி நேரத்தில் எழுதி அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.  அப்படியென்றால் நம் கல்வித்திட்டத்திலேயே ஓட்டை இருக்கிறது என்று பொருள். பாடநூல் சுமையை அவர்களுக்குக் குறைக்கவில்லை. கற்பித்தல் முறை எளிதாக்கப்படவில்லை. தேர்வு முறை மாற்றியமைக்கப்படவில்லை. “participative learning” என்று சொல்லக்கூடிய பங்கேற்பு கற்றலை மாண்வர்களிடையே உருவாக்கவில்லை. இந்த சீர்திருத்தங்களையெல்லாம் செய்யாமல் வெறுமனே அவர்களை பெயிலாக்காமல் பாஸ் போட்டுவிடவேண்டுமென்றால் மாணவர்களை முட்டாள்களாகவே வைப்பதற்கான வழிதானிது. அறியாமையோடு மாணவர்களை நாம் மேல்வகுப்புக்கு அனுப்புவோம்.” என்கிறார் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்.

”இது அரசாங்கத்தின் ஏமாற்று வேலை” என்கிறார் தனியார் பள்ளியில் தாளாளராக இருக்கும் பிரின்ஸ் கஜேந்திர பாபு. “எட்டாம் வகுப்பு வரை எல்லோரையும் தேர்ச்சியடையச் செய்துவிட்டால் 9ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களால சமாளிக்க முடியுமா? அந்த நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாமல் இந்த அறிவிப்பினை மட்டும் வெளியிடுவது எப்படி சரியானதாக இருக்கும்? எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் ஐ.டி.ஐ படிக்கலாம். அதற்கு எந்த மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்துக் கணக்கிடுவது.? இப்பொது 250 மாணவர்கள் இருந்தால்தான் ஒரு தலைமையாசிரியர் இருக்கிறார் ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் இருக்கிறார். கிராமப்புறஙகளில் 250 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் இருக்கின்றன. அவற்றின் கதி? தொடக்கப்பள்ளிகளில் ஓவியத்திற்கும் பாட்டிற்கும் ஆசிரியர்கள் கிடையாது. தொடக்கப்பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு ஓவியமும் பாட்டும் வேண்டாமா? அதுதானே கற்றுக்கொள்ளும் வயது. இப்படி மாணவர்களுக்கு தேவையான எதையுமே செய்யாமல் இந்த அறிவிப்பினை மட்டும் அரசு வெளியிடுவது மேம்போக்காக பார்த்தால் முற்போக்காகத் தெரிந்தாலும், உள்ளூரப் பார்த்தால் இது அரசின் ஏமாற்று வேலை. நம் தேர்வு முறை மதிப்பெண்ணை ஒட்டியதாக இல்லாமல் திறன் மதிப்பீட்டைக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த சீர்திருத்தங்களை எல்லாம் செய்துவிட்டு அதன்பின் இந்த முடிவுக்கு வருவதே பொருத்தமானதாக இருக்கும்” என்கிறார் ப்ரின்ஸ்.

சரி! திறன் மதிப்பீட்டு அடிப்படையில் மாற்று தேர்வு முறைகளை எப்படியெல்லாம் செயல்படுத்தலாம்?

மாணவர்களை ஓபன் புக் எக்ஸாம் முறையில் தேர்வெழுத வைக்கலாம். இதன் மூலம் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். ஆனால் இந்த முறையில் மாணவர்கள் மிக எளிதாக காப்பி அடித்துவிடுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் கல்வியாளர் மாடசாமியோ “சிந்து சமவெளி நாகரிகம் குறித்த கேள்வி என்றால் அது குறித்த மாணவரது உணர்வுகளையும் புரிதலையும் கேள்வியாக்காமல் வெறுமனே எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது; அங்கு கண்டுபிடிக்கப்ப்ட்ட மண்பானை எந்த நிறத்தில் இருந்தது; செங்கல்லின் நீளம் அகலம் எவ்வளவு என்பது போன்ற தகவல் அடிப்படையிலான கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள்? புரிதல் அடிப்படையில் கேள்வி கேட்டால் பாடப்புத்தகத்தை திறந்து  வைத்துக்கொண்டிருந்தாலும், மாணவருக்கு என்ன புரிந்ததோ அதைத்தான் எழுதமுடியும். ஆக தேர்வு முறை மாற வேண்டியிருக்கிறது. எந்த மாணவனுக்கு நினைவாற்றல் அதிகமோ அந்த மாணவனே ஜெயிக்க முடிகிறது. விடைகளை நோக்கி மாணவர்களை நாம் துரத்துகிறோம். உணர்வுகளை உள்வாங்குபவனுக்கு இத்தேர்வு முறையில் இடமில்லை. கற்பனைத்திறனும், படைப்பற்றலும் கொண்டு பன்முகத்தன்மையோடுள்ள மாணவர்களை நாம் இழக்கிறோம். மாணவர்கள்   மட்டுமல்ல் எத்தனையோ பன்முகத்தன்மையுள்ள ஆசிரியர்களையும் நாம் இழக்கிறோம். பள்ளியில் நடக்கும் விழாக்களில் ஒரு ஆசிரியர் ஒரு பாட்டு பாடினால் அதை கைதட்டி மாணவர்கள் வரவேற்பார்கள். பாடப்புத்தகத்தோடு கையில் பிரம்போடு மட்டுமே பார்த்த ஆசிரியரை மாணவர்கள் வேறு மாதிரி பார்ப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. இந்த ஆசிரியர்களும் கூட மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்பவர்களாகவே மாறிவிடுகின்றனர். எவ்வளவு கலாசார விரயம்?”  என்று ஆதங்கப்படுகிறார்.

அது ஏன் மாணவர்கள் மூன்று மணிநேரம் மட்டும்தான் தேர்வெழுதவேண்டும்? இறுதி 5 நிமிடத்தில் தேர்வுக்கூட கண்காணிப்பாளர் “பேப்பரைக் கட்டி விட்டு எழுது” என்று அவசரப்படுத்தி, அந்த பரபரப்பில் தெரிந்த விடையும் மறந்து போகும் மாணவர்கள் இருக்கிறார்கள். “எல்லா மாணவர்களும் ஒரே வேகத்தில் எழுதுபவர்கள் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்கையில் எப்படி எல்லோருக்கும் பொதுவாக மூன்று மணி நேரம் என்று வைக்க முடியும்? எத்தனையோ மாணவர்கள் பதட்டத்தில் மாற்றி மாற்றிக் கட்டி விடைத்தாள் திருத்தப்படும்போது மொத்தமாக மதிப்பெண்கள் பறிபோகும் அபாயமிருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுத முடியாதவர்களுக்கு மேலும் சிறிது நேரம் கொடுக்கலாமே? அதோடு ஒரே நாளில்தான் அந்தத் தேர்வை எழுதவேண்டிய அவசியமும் இல்லை. ஒரு தேர்வை மூன்று நாட்களுக்கு நடத்துங்கள் என்கிறார்கள் வல்லுநர்கள். ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் என்று கூட பிரித்துக்கொள்ளலாம் ” என்கிறார் ச.மாடசாமி.

மேலைநாடுகளில் பின்பற்றப்படும் “collaborative testing” எனப்படும் 2 மாணவர்கள் சேர்ந்து ஒரு தேர்வை எழுதும் முறையை இங்கு கொண்டு வந்தாலென்ன? சேர்ந்து எழுதும் தேர்வில் இருவருக்கும் ஒரே மதிப்பெண்கள் வழங்கப்படும். அப்படியென்றால் ஒரு மாணவன் மட்டுமே படித்துவிட்டு வரும் வாய்ப்பிருக்கிறதே? “முதலில் மாணவர்களை நம்பவேண்டும். பிலிப் ஜிம்பார்டோ என்ற உளவியலாளர் ஒரு வகுப்பில் 40 % மாணவர்களை இந்தக் கூட்டுத்தேர்வு முறையிலும், 60% மாணவர்களை தனித்தேர்வு முறையிலும் பயில வைத்து ஆய்வு செய்ததில் கூட்டுத்தேர்வு முறை மாணவர்களே பாடங்களை நன்றாகப் புரிந்து வைத்து புத்திசாலிகளாக   இருந்தனர்.”  என்கிறார் ச. மாடசாமி.

தேசிய பாடத்திட்ட அமைப்பு 2005ல் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர் என அனைத்துத் தரப்பினரையும் ஆய்வு செய்து ஒரு அறிக்கை சமர்ப்பித்தது. பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பைத் தவிர மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுவது என்பதே கூடாது என்றது அவ்வறிக்கை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நகர்புறத்தில் உள்ள பெற்றோரும் கூட இதே கருத்தைத்தான் கூறியிருக்கின்றனர்.

சற்று கவனித்து நோக்கினால் வகுப்பறையில் நடக்கும் சித்திரவதைகள், குழந்தைகளுக்குக் கிடைக்கும் பிரம்படிகள், தண்டனைகள் எல்லாமே மதிப்பெண்களை நோக்கிய கரடு முரடான பாதையில் பயணிக்க வேண்டிய நிர்பந்தத்தில் குழந்தைகள் இருப்பதாலும், அவர்களை அந்த இலக்கை நோக்கி உந்தித்தள்ளவேண்டியவர்களாய் ஆசிரியர்கள் இருப்பதாலும் தான் நடக்கின்றன. எனவே மதிப்பெண் அடிப்படையிலான நம் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்தாலொழிய முழுமையான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியாது. ஆனாலும் கூட அரசின் இந்த அறிவிப்பு ஒருவகையில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கி அவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் என்பதில் நாம் மகிழ்ச்சி கொள்ளலாம்.

*****************************
  
அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கலைக்கோட்டுதயம். அவருடைய மகன் பிரபாகரன் பயிலும் டான்போஸ்கோ பள்ளி அச்சிறுவனை 6ஆம் வகுப்பில் பெயிலாக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.. இன்று மீண்டும் பிரபாகரன் அதே பள்ளியில் 7ஆம் வகுப்பு படிப்பது அவ்வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் தான். இதுகுறித்து கலைக்கோட்டுதயம் என்ன சொல்கிறார்?
  
“என் மகனை பெயிலாக்கியதும் நான் சென்று பள்ளி நிர்வாகத்திடம் பேசினேன். என் மகனின் மனநிலை பாதிக்கும் என்று சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. அவனோ அதே பள்ளிக்குப் போக மாட்டேன் என்றான். என்னை வேறு பள்ளியில் சேருங்கள் என்றான். பாஸ் போட்டுத் தாருங்கள். நான் வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்கிறேன் என்று நிர்வாகத்திடம் கேட்டேன். அதற்கும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் வழக்கு தொடர்ந்தேன்.

கடந்த 2009-ம் ஆண்டு, மத்திய அரசு  14 வயது வரையிலான குழந்தைகளுக்கு (8-ம் வகுப்பு வரை) இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இந்த சட்டத்தை துரதிருஷ்டவசமாக இங்குள்ள மெட்ரிக் பள்ளிகள் முனைப்போடு அமல்படுத்தவில்லை. மார்க் குறைவு, வருகைப் பதிவு குறைவு, படிப்பில் மந்தநிலை ஆகிய காரணங்களைக் கூறி ஆயிரக்கணக்கான குழந்தைகளை பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள் பெயிலாக்கிவிடுகின்றன.இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் 16-ம் பிரிவின் படி, 8-ம் வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் பெயிலாக்கவோ, பள்ளியை விட்டு வெளியேற்றவோ கூடாது. இந்த சட்டத்தை மீறும் வகையில் டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி எனது மகனை பெயிலாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கூறி வழக்கு தொடர்ந்தேன். நல்ல தீர்ப்பு கிடைத்த்து. தமிழ்நாடு அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்க்க்கூடாது என்று உத்தரவிட்டிருப்பதை மனமார வரவேகிறேன்.

- கவின் மலர்

நன்றி : புதிய தலைமுறை கல்வி

Wednesday, September 15, 2010

உடையும் கண்ணாடிக் கூரைகள்

பெண்களுக்கென்று தனியாக ஓர் அமைப்பை சில தினங்களுக்கு முன் உருவாக்கியிருக்கிறது ஐ.நா. பெண்களின் உரிமைக்கு ஆதரவாகவும், அவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் செயல்படவிருக்கிறது இந்த அமைப்பு. எப்படி இருக்கிறது நம் நாட்டில் பெண்களின் நிலைமை?

இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஒரு பெண். ஆளும்கட்சியின் தலைவர் ஒரு பெண், மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவர் ஒரு பெண், மக்களவை சபாநாயகர் ஒரு பெண். இப்படி அரசியலில் உள்ள எல்லா முக்கியப் பதவிகளிலும் பெண்கள். இது போன்ற ஒரு நிலை இந்திய வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை. மக்களவையில் உள்ள பெண் எம்.பி.க்கள் 58 பேர். சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளில்இப்போதுதான் முதல்முறையாக மக்களவையில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை 50ஐத் தாண்டுகிறது.

இதனால், பெண்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் கிடைத்துவிட்டது என்று சோல்ல முடியுமா?
"அப்படிச் சோல்லமுடியாது. சட்ட மன்றத்திலேயே கூட பாலினப் பாகுபாடு பார்க்கப்படுகிறது. ஸீரோ அவர், கேள்வி நேரத்தின்போது எழுப்பவேண்டிய துணைக் கேள்விகள், பாயிண்ட் ஆஃப் ஆர்டர் போன்றவற்றிற்காகப் பெண் எம்.எல்.ஏ.க்கள் கை உயர்த்தினால்அவர்களைப் பேச அழைப்பதேஇல்லை. ஆண்கள்தான் பேச அழைக்கப்படுகிறார்கள். இதுகுறித்து சட்டமன்றத்திலேயே நான் புகார் எழுப்பினேன்" என்கிறார் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி.

இந்த ஆண்டு ஜனவரியில் முதன்முறையாகப் பெண் ஒருவர் தமிழகக் காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியாவில் காவல்துறையில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரிகள் மிகக் குறைவு (இந்தியாவில் தமிழகத்தைத் தவிர, அருணாச்சலப் பிரதேசத்தில்தான் பெண் அதிகாரி ஒருவர் காவல்துறைத் தலைவராக இருக்கிறார்). இது நிச்சயம் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயம்தான். ஆனால், காவல் நிலையங்களில் நம் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?

"நம் பெண்களுக்கு காவல் நிலையத்திற்குச் செல்வது என்பதே ஒரு கௌரவப் பிரச்சினையா இருக்கிறது.அதையும் மீறி அவர்கள் புகார் கொடுக்கச் செல்லும்போது அவர்கள் நடத்தப்படும் விதம் சரியானதாக இல்லை. வழக்கைப் பதிவு செய்ய வைக்கவே போராட வேண்டி இருக்கிறது. எப்.ஐ.ஆர். போடாமலேயே கட்டப் பஞ்சாயத்து சேவது போன்றவைதான் காவல் நிலையங்களில் நடக்கின்றன. விசாரணைக்காக காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்படும் பெண்கள் வசைச் சொற்களுக்கும் வன்முறைக்கும், ஏன் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் கூட உள்ளாகிறார்கள். அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்ட புதிதில் பெண்களுக்குப் புகார் கொடுப்பது என்பது எளிதாக இருந்தது. ஆனால், அவற்றிலும் இப்போது கட்டப்பஞ்சாயத்து செய்வது அதிகமாகி விட்டது" என்கிறார் எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான வ.கீதா.

விவாகரத்து வழக்குகளைக் கவனிக்கும் குடும்ப நீதிமன்றங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பணிக்குச் சேல்லும் பெண்கள் வார நாட்களில் நீதிமன்றங்களுக்கு வருவதில் சிரமங்கள் உள்ளதால் வழக்கு இழுத்துக்கொண்டேயிருப்பதை கருத்தில்கொண்டு இந்த முடிவு என்று சொல்லப்பட்டாலும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதும் இதற்கு ஒரு காரணம். கல்வியறிவு பெருகியிருப்பதாலும், பணிக்குச் சேல்லும் பெண்கள் பொருளாதாரச் சுயசார்போடு இருப்பதாலும், பொருத்தமற்ற மணவாழ்வில் பிரச்சினைகளைச் சகித்துக்கொண்டு மன உளைச்சலோடு போலியாக வாழ்வதைக் காட்டிலும் அதிலிருந்து விடுபடவே விரும்புகின்றனர். இது, சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் முக்கியமானதொரு மாற்றம்.

இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் நீதித்துறையில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?
வழக்கறிஞராக இருக்கும் கீதாராமசேஷன், "இந்தியச் சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகவே இருக்கின்றன. அவை கண்டிப்பாக நீதிமன்றத்திலும்,காவல் நிலையத்திலும் பிரதிபலிக்கும். இங்கெல்லாம் ஒரு பெண், ஒரு புகாரோடு நுழையும்போது முதலில் எந்தச் சிக்கலும் வராது. ஆனால், போகப்போக அந்தப் பெண் சார்ந்திருக்கும் சாதி, அவளின் பொருளாதார நிலை, திருமண உறவுகள் போன்றவை அவள் நடத்தப்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கும். ஆணுக்கு இருப்பதைவிட பெண் இன்னும் அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்" என்கிறார்.

சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் எனப் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஊடகங்களிலும் நிறைய மாற்றங்கள் நேர்ந்திருக்கின்றன. இருபதாண்டுகளுக்கு முன்பு, தமிழ்ப் பத்திரிகை உலகில் முழுநேரப் பத்திரிகையாளர்களாக இருந்த பெண்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெண்கள் பத்திரிகைகளுக்குக் கூட ஆண்களே ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். ஆண்களே பெண்கள் பெயரில் எழுதினார்கள். கதைகள் எழுதும் பெண்களை, பெண் எழுத்தாளர்கள் எனப் பாலினத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தும் நிலை இருந்தது. திரைப்படத் துறையில் முழுநேரமாகப் பங்கேற்ற பெண் கவிஞர்களோ, வசனகர்த்தாக்களோ, தொழில்நுட்பக் கலைஞர்களோ அநேகமாக இல்லை. ஆனால், இன்று எல்லாம் மாறியிருக்கிறது. நிறைய இளம் பெண்கள் பத்திரிகை, தொலைக்காட்சி, திரைப்படம் என ஊடகங்களில் பணியாற்றுகிறார்கள்.

கௌதம் மேனனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றும் ரேவதி, "ஒரு பத்தாண்டுகளுக்குமுன்பிருந்ததைவிட இப்போது நிறைய பெண்கள் டெக்னீஷியன்களாகஇருக்கிறார்கள். ஆனாலும் கூட ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அது பத்து சதவிகிதத்திற்கும் குறைவானதே. எங்கள் யூனிட்டில் பெண்களுக்கென்று சலுகைகளும் இல்லை. பாரபட்சமும் இல்லை. அனைவரும் சமமாகவே நடத்தப்படுகிறோம்" என்கிறார். இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம்.

ஊடக உலகில் பெரும்பாலும் பணிரீதியாகப் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. ஆனால், அங்கும் மற்ற பல இடங்களில் இருப்பதைப் போன்றே பெண்கள் பாலியல் பிரச்சினைகளைச் சந்திக்க நேர்வதுண்டு. அண்மையில் ஒரு பிரபல தமிழ்ப் பத்திரிகைக் குழுமத்தில் பணியாற்றிய பெண் பத்திரிகையாளர், சக ஊழியர் மீது காவல்துறை ஆணையரிடம் நேரில் சேன்று புகார் அளித்த சேதியை தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களிலும் பார்த்தோம். திரை உலகில் வெளியே சோல்லப்படாத சேதிகள் நிறைய உண்டு. "பொதுவாக சினிமாத் துறையில் ஈடுபடும் பெண்களுக்கு வரும் பிரச்சினைகளை யாரும் வெளியே சோல்வதில்லை" என்கிறார் ரேவதி.

ஷோ கேசில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருக்கும் அலங்காரப் பொம்மைகளைப் போல பெண்கள் சமூகத்தில் நடத்தப்படுகிறார்கள் எனப் பெண்ணியவாதிகள் குறைப்பட்டுக் கொள்வதுண்டு. ஆனால், அந்தக் கண்ணாடிப் பெட்டியின் கூரையை உடைத்துக்கொண்டு நிறைய பெண்கள் வெளியே வந்து ஜீவனோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அப்படி உடைத்துக்கொண்டு வரும்போது அவர்கள் அடைந்த காயங்களிலிருந்து இன்னமும் ரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. அதற்கு நம் சமூகம், பெண்களைப் பார்க்கும் பார்வையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடவில்லை என்பதும் ஒரு காரணம்.
******************
பிறந்தது ஐ.நா. மகளிர் அமைப்பு


ஐ.நா. சபையில் சுகாதாரத்திற்கு, குழந்தைகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று ஒவ்வொரு துறை சார்ந்து தனித்தனியாக அமைப்புகள் உண்டு. பெண்களுக்கு? இது வரை இல்லை. அந்தக் குறை நீங்கிவிட்டது. பாலினச் சமத்துவத்தை நோக்கமாகக் கொண்டு ஐ.நா.விற்கான பெண்கள் அமைப்பு தொடங்கப்படுகிறது இந்த அமைப்பை உருவாக்க ஆதரவு தெரிவித்து 192 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. எந்தவித எதிர்ப்புமின்றி இத்தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. ‘ஐக்கிய நாடுகள் சபை மகளிர் அமைப்பு’ என்ற பெயரில் இவ்வமைப்பு செயல்படவிருக்கிறது. ஆங்கிலத்தில் ‘UN Women’ என்றழைக்கப்படும். இதற்கான தீர்மானம் ஜூன் 30 அன்று நிறைவேற்றப்பட்டது.

ஏற்கெனவே ஐ.நா.வில் பெண்களின் பிரச்சினைகளுக்காகச் செயல்பட்டு வரும் 4 அமைப்புகள் இப்போது ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. உலகளவில் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் பாரபட்சமின்றி அனைத்து நாடுகளிலும் உள்ளன. இந்நிலையில் அவர்களின் பிரச்சினைகளைச் செவிமடுப்பதற்கான ஒரு களமாக, அமைப்பாக இந்த அமைப்பு சேயல்படும்.

இந்த அமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்புதல் பெற நான்காண்டுகள் தேவைப்பட்டன. இதற்காக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மகளிர் அமைப்புகளோடு ஐ.நா. சபையில் உள்ள பிற மகளிர் அமைப்புகள் ஒன்றிணைந்து இப்பணியை மேற்கொண்டன. பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, பெண்களின் முன்னேற்றத்திற்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துப் பாடுபடும் என துணைப் பொதுச் செயலர் ஆஷா ரோஸ்மிகிரோ தெரிவித்தார். அவரே இந்த மகளிர் அமைப்பின் தலைமைப் பொறுப்பையும் ஏற்கிறார். வரும் 2011ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இப்புதிய அமைப்பு செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் மீதான வன்முறை, ஒடுக்குமுறைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகளின் மீதான வன்முறை, பாலியல் வன்முறைகள் போன்ற குற்றங்களை ஆய்வு சேது அவற்றைக் குறைப்பதற்கும், அறவே நீக்குவதற்குமான தருணம் வந்து விட்டது என்று மகிழ்கின்றனர் பெண்ணியவாதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும். இந்த அமைப்பு பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே, மனித உரிமைகளுக்காகவும், பெண்கள் நலனில் அக்கறை கொண்டும் இயங்கி வரும் அமைப்புகளோடு கைகோர்த்து தனது பணிகளைச் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- கவின் மலர்
(நன்றி: புதிய தலைமுறை)

Thursday, September 09, 2010

தலைநகர் சென்ற கலைமகள்

புதுடில்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா என்றழைக்கப்படும் தேசிய நாடகப் பள்ளி - நாடகத்துறையில் ஈடுபாடு கொண்ட அத்தனை பேரின் கனவுக் கல்லூரி. அத்தனை மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு நாடகப்பள்ளி. அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் வருவதால் ஒரு குட்டி இந்தியாவே அங்கிருக்கும். நாடு முழுவதும் விண்ணப்பிக்கும் மாணவர்களில் 30 பேர் மட்டும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தேடுக்கப்பட்டு இக்கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இங்கு இந்தி மட்டுமே பயிற்று மொழி. இந்தி தெரியவில்லையென்றால் சிரமம்தான்.

தமிழ்நாட்டிலிருந்து பல பேர் இக்கல்லூரிக்குச் சென்று பயின்றிருந்தாலும், பெண்கள் யாரும் இது வரை சென்றதில்லை என்பது வியப்பான உண்மையாய் இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து தேசிய நாடகப் பள்ளிக்குச் சென்ற முதல் பெண் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழிக்கு அருகே உள்ள தேவசகாயம்மவுண்ட் என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஜானகி.



”ஒவ்வொரு மாணவருக்கும் 18 லட்ச ரூபாய் செலவு செய்கிறது அரசு. மாதந்தோறும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்குகிறது. 1963ல் இருந்து தேசிய நாடகப் பள்ளி செயல்படுகிறது. கர்நாடகா போன்ற மாநிலங்களிலெல்லாம் இதுவரை கிட்டத்தட்ட 45 பேர் இப்பள்ளியில் பயின்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து இதுவரை ராமானுஜம், கோபாலி, கே.எஸ்.ராஜேந்திரன், ராஜூ, சண்முகராஜா, பாரதி, ராஜேஷ் ஆகிய 7 பேர் மட்டுமே பயின்றிருக்கிறார்கள்  இத்தனை ஆண்டுகளில். தலித் சமூகத்தைச் சார்ந்த, மக்கள் மத்தியில் பணியாற்றக்கூடிய குழுவிலிருந்து செயல்பட்ட ஜானகி தமிழ்நாட்டிலிருந்து செல்லும் முதல் பெண்ணாகி இருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை தரக்கூடிய விஷயம்.” என்கிறார் நாடகவியலாளர் பிரளயன்.

ஜானகியின் தந்தை செங்கல் சூளையில் கூலி வேலை செய்பவர். அம்மா விவசாயக்கூலி. “நான் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கு மேல் படிக்க வைக்க வீட்டில் வசதியில்லாததால் என்னை வேலைக்குப் போகச் சொன்னார்கள். அப்போது ’களரி’ கலைக்குழுவில் கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் என்று நிறைய ஆட்டக்கலைகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இதையெல்லாம் பார்த்த எனக்கு அதையெல்லாம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வந்தது. வீட்டில் சொல்லி அனுமதி பெற்று கலைக்குழுவில் சேர்ந்தேன். நிகழ்ச்சிகளுக்குச் செல்லுவதால் கிடைக்கும் பணமும் வீட்டிற்குக் கொஞ்சம் உதவியாக இருந்தது. அதன்பின் ‘முரசு’ கலைக்குழுவில் சேர்ந்தேன். கலைக்குழுக்களின் மூலம் எனக்கு சமூகம் குறித்த அக்கறையும் விரிந்த பார்வையும் வந்து சேர்ந்தன. சுற்றி நடப்பவற்றை கவனிக்க ஆரம்பித்தேன். கலைக்குழுவில் ஊர் ஊராகச் சென்று நிறைய வீதி நாடகங்கள் போடுவோம். அந்த அனுபவம் எனக்கு நிறைய கற்றுத்தந்தது. விசாலப் பார்வையை எனக்குள் ஏற்படுத்தியது. அதுதான் எனக்குள் நாடகம் குறித்த வேட்கையை உண்டுபண்ணியது.” என்கிறார்.

தேசிய நாடகப்பள்ளியில் சேருவதற்கான முதல் தகுதியே இந்தி தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஆங்கிலமாவது தெரிந்திருக்கவேண்டும். ஜானகிக்கு இந்தி சுத்தமாகத் தெரியாது. ஆங்கிலம் சரியாகப் பேச வராது. எப்படி சமாளித்தார்?

“நாடக் முகாம் ஒன்று நடந்த்து. அப்போதுதான் தேசிய நாடக பள்ளி பற்றி அறிந்துகொண்டேன். முகாமில் பயிற்சி பெற்ற பின் அதில் பயில்வதற்கு விண்ணப்பித்தேன். ஆனால் நேர்முகத்தேர்வில் என்னால் சரியாக பேச முடியவில்லை. எனக்கு விடை தெரிகிறது. தமிழில் சொல்லச் சொல்லி இருந்தால் கடகடவென்று சொல்லி இருப்பேன். ஆனால் ஆங்கிலத்தில் பேச வரவில்லை. அதில் நான் தேர்வாகவில்லை. அதன்பின் எங்கள் கலைக்குழு எனக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு என்னை ஆங்கில வகுப்புக்கும் இந்தி வகுப்புக்கும் அனுப்பினார்கள். அடுத்த ஆண்டு விண்ணப்பிப்பதற்கு முன் இரண்டு மொழிகளையும் கற்றுக்கொள்ள என்னை எங்கள் முரசு கலைக்குழு ஊக்குவித்த்து. அடுத்த ஆண்டு விண்ணப்பித்து நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றபின் டெல்லிக்குச் செல்வதற்கு முன் நாடக இயக்குனர் அ.மங்கை என்னை அவரது வீட்டிலேயே தங்க வைத்து ஒரு மாதம் ஆங்கில இலக்கணம் கற்றுத்தந்தார். பிரளயன், பார்த்திபராஜா, சண்முகராஜா போன்ற பல பெரிய நாடக ஆளுமைகள் என்னை ஊக்குவித்தனர். கலைக்குழு தான் என்னை இப்போதும் என் படிப்புக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு என்னை படிக்க வைக்கிறது.” என்கிறார் நெகிழ்ச்சியாக



நாடக இயக்குநர் அ.மங்கை “ஜானகியிடம் தமிழ்நாட்டு நாடகச்சூழல் மிகவும் எதிர்பார்க்கிறது. மக்கள் கலைகள், மக்கள் பிரச்சனைகளின் அடிப்படையில் நாடகங்களைக் கையாளும் ஒரு குழுவிலிருந்து ஒரு பெண்ணுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் பெருமைப்படத்தக்க விஷயம். ஜானகியின் குடும்பம் ஒன்றும் கலைக்குடும்பம் அல்ல. பொருளாதாரத்திலும் பின் தங்கிய குடும்பம் தான். ஆகவே இப்படி ஒரு பின்னணியிலிருந்து ஒருவர் நாடகப்பள்ளிக்கு தேர்வானதில் இரட்டிப்பு சந்தோஷம். மொழி ஜானகிக்கு பிரச்சனையாக இருந்தது. ஆனாலும் ஓராண்டு மொழியை கற்றுக்கொள்ளும்போது அவர் தனது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் இழக்காமல் இருந்த்து பெரிய விஷயம். தேசிய நாடகப்பள்ளி என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக இருக்கும்போது இந்தியும் ஆங்கிலமும் தெரிந்தால் தான் அங்கு செல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்தப் பிரச்சனை நெடுங்காலமாக நீடித்துக்கொண்டே இருக்கிறது” என்கிறார்.

ஏற்கனவே ஒரு தமிழ்ப்பெண் தேசிய நாடகப் பள்ளியில் படித்திருக்கிறார். ஆனாலும் அவர் டெல்லி வாழ் தமிழர். ஆக, தமிழ்நாட்டிலிருந்து நம் பெண் ஒருவர் தேசிய நாடகப்ப்பள்ளியில் சென்று சேர்ந்திருக்கிறார். இப்போது இரண்டாம் ஆண்டு படிக்கிறார் ஜானகி.

கல்லூரி வாழ்க்கை குறித்து உற்சாகமாக பேசத் தொடங்குகிறார்.
“அங்கு வெவ்வேறு மாநிலங்களிலிருந்து மாணவர்கள் வந்திருப்பதால் முதலில் மொழி பிரச்சனை இருந்த்து. எனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியால் கடும் சிரம்மாய் இருந்த்து. எனக்கு சில சமயம் இந்தியில் நட்த்தும் பாடங்கள் புரியாது. அப்போதெல்லாம் வகுப்பில் இடையில் நிறுத்தி அது என்ன என்று கேட்டு தெரிந்து கொள்ளாமல் அடுத்த வார்த்தை பேச ஆசிரியரை விட மாட்டேன். மாணவர்களிடமும் அப்படித்தான். என்னைப் பார்த்தாலே வகுப்பு மாணவர்கள் கொஞ்ச நாள் அய்யோ இவள் அது என்ன் இது என்ன என்று கேள்வி கேட்பாள் என்று பயந்து ஓடினார்கள். என்னைப் பார்த்து இவளுக்கு என்ன தெரியும் என்று நினைத்தவர்களும் உண்டு. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு வகுப்பிலும் நான் என்னை வெளிப்ப்டுத்த்த் துவங்கினேன். Body movements வகுப்பில் நான் தான் முதல் எப்போதும். எனக்கு ஏற்கனவே ஆட்டக்கலைகள் அத்தனையும் அத்துப்படி என்பதால் மிக எளிதாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்வேன். சில சமயங்களில் ஆசிரியர் வரவில்லையென்றால் என்னையே வகுப்பெடுக்கச் சொல்கிறார் இப்போதெல்லாம். இரண்டு இந்தி நாடகங்களிலும் நடித்துவிட்டேன்.” எனும் ஜானகி இப்போது தேசிய நாடகப் பள்ளியின் செல்லப் பிள்ளையாகி விட்டார்.

“நாங்களெல்லாம் துறைக்கு வந்த புதிதில் எங்களுக்கு வழிகாட்ட யாருமில்லை. எங்களுக்கெல்லாம் தேசிய நாடகப் பள்ளி என்று ஒன்றிருப்பதே தெரியாது. எங்கள் ஏக்கத்தையும் கனவையும் ஜானகி மூலம் நாங்கள் தீர்த்துக்கொள்கிறோம். ஜானகியின் திறமை மேல் நம்பிக்கை இருக்கிறது. ஒரு மிகப்பெரிய ஆளுமையாக ஜானகி தமிழ் நாடகத்துறையில் வரும் நாள் விரைவில் வரும்” என்கிறார் ஜானகி சார்ந்திருக்கும் முரசு கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த்.

- கவின் மலர்


நன்றி : புதிய தலைமுறை