Saturday, December 18, 2010

வாத்சாயனாரின் காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கோயில்களை தரைமட்டமாக்க வேண்டும்


தலித் முரசு - காஞ்சா அய்லய்யா நேர்காணல் - பகுதி IV



நீங்கள் பல தடைகளைக் கடந்து, உலக அளவில் உங்களை நிரூபித்திருக்கிறீர்கள். இளம் ஆய்வாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் முன்மாதிரியாகவும் திகழ்கிறீர்கள். அவர்கள் அறிவுத்தளத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை என்பது, இன்னமும் உலகத்தால் விளங்கிக் கொள்ளப்படாத, அறியப்படாத ஓர் அறிவுக் களஞ்சியமாகவே இருக்கிறது. இந்திய மக்களின் மனங்களில் உலகத்திற்கான அறிவு கொட்டிக் கிடக்கிறது. நான் கிராமங்களை கூறுகிறேன். அறிவியல், தொழில்நுட்பம், உற்பத்தி, இந்து மத எதிர்ப்பு ஆகியவை நூல்களில் கொண்டுவரப் படுவதில்லை; பதிவு செய்யப்படுவதில்லை. என்னைப் பொருத்தவரை, அய்ரோப்பா, சீனா போன்றவை சோர்ந்து விட்டன. நல்லவேளையாக சுயநலமிக்க பார்ப்பனியத்தால் – படைப்பாற்றலையும், அறிவாற்றலையும் தரமுடியாமல் போனதால், இன்னும் இந்தியாவின் கிராமங்களிலுள்ள தலித் – பெரும்பான்மை சமூகங்களில் அறிவுச் சுரங்கங்கள் இருக்கின்றன. பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் வென்று விட்டால் மிஞ்சுவது எதிர்காலத்தில் அறிவியலே. உங்கள் கிராமத்தில் அமர்ந்தோ, அறிவியல் சோதனைக்கூடத்தில் அமர்ந்தோ இவ்வுலகை மாற்ற முடியும். இதைத்தான் இணையம் சாத்தியமாக்கியிருக்கிறது. இருப்பினும், உலக அறிவியலின் பார்வையில் படாமல் இன்னமும் மறைவாக இருக்கும் ஒரு பகுதி இருக்கிறது. அதுதான் இந்தியா. தலித் – பெரும்பான்மை இந்தியா! இதைத்தான் நான் இந்நூலில் சொல்லியிருக்கிறேன்.

நாம் நம் மக்களின் மனங்களிலிருந்து பார்ப்பனியத்தை களைந்தெறிய வேண்டி இருக்கிறது. பார்ப்பனியத்தைவிட, இந்து மதத்தையே தூக்கியெறிய வேண்டியிருக்கிறது. நம் நாட்டை இந்து மதத்திலிருந்து விடுவிக்க வேண்டும். இதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இந்தியா ஒரு கிறித்துவ நாடாகவோ, பவுத்த நாடாகவோ, இஸ்லாமிய நாடாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குக் கவலையில்லை. ஆனால், அது ஓர் இந்து நாடாக மட்டும் இருக்கக் கூடாது என்பதே முக்கியமானது. ஏனெனில், இந்து மதம் அறிவியலுக்கெதிரானது. மனித இனத்திற்கெதிரானது. உற்பத்திக்கெதிரானது.

மதச்சார்பற்ற இந்துக்களையும் நாம் கையாள வேண்டியிருக்கிறது. வகுப்புவாத இந்துக்களிடம்கூட அத்தனை பிரச்சனையில்லை. ஆனால், மதச்சார்பற்ற இந்துக்கள்தான் இந்து மதத்தை காப்பாற்றுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத்காரர்கள் கூட இந்து மதத்தைக் காப்பாற்ற முடியாது. எடுத்துக்காட்டாக, "தேசிய இந்து மதசார்பற்ற உதவித் தொகை'யை எடுத்துக் கொள்ளுங்கள். அவை மேற்கு வங்கத்திலிருந்து, மகாராட்டிராவிலிருந்து, தமிழ் நாட்டிலிருந்து வருகின்றன. மகாராட்டிரா பவுத்தத்தோடு தொடர்புடையது. தமிழ் நாடு பெரியாரோடு தொடர்புடையது. மேற்கு வங்கம் கம்யூனிஸ்டுகளோடு தொடர்புடையது. ஆனால், வங்கம் இன்று உலகின் மிக ஏழ்மையான பகுதியாகிவிட்டது. ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளை விட வங்கம் இன்று ஏழ்மையான இடமாகிவிட்டது. வங்கத்தில் தலித் அறிவுஜீவி என்று எவரும் கிடையாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்துகூட ஓர் அறிவுஜீவிகூட இல்லை. இந்த மதச்சார்பற்ற இந்துக்களை, மிதவாத இந்துக்களை கையாளாமல் விட்டால், இந்து மதத்தை ஒழிக்க முடியாது. அவர்கள் இந்து மதத்தை காப்பவர்களாக மாறிவிட்டனர். ""வகுப்புவாத இந்து மதம் நல்லதல்ல. ஆனால், இதற்கு இந்து மதத்தை குற்றம் சொல்ல முடியாது'' என்கின்றனர்.

இந்து மதத்தில் உள்ளவற்றைப் பாருங்கள். கொலை செய்யும் தெய்வங்களெல்லாம்கூட இருக்கின்றன. தெய்வீகம் என்று சொல்லப்படக்கூடிய இடத்திலிருந்து வரும் நேர்மறையான அன்பைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒழுக்கத்தை அறிவுறுத்துபவையாக அவை மாறும்போது – நான் இந்த இந்து தெய்வங்களைவிட புத்தர், ஏசு, நபிகள் ஆகியோர் அறிவுறுத்திய ஒழுக்கங்களையே பரிந்துரைப்பேன். நிச்சயமாக பிரம்மன், இந்திரன், ராமன், கிருஷ்ணன் ஆகியோர் செய்த கொலைகள், பாலியல் வன்முறைகள், திருட்டுத்தனங்கள் ஆகியவற்றை அல்ல. நான் வாத்சாயனாரின் காமசூத்திரத்தை பரிந்துரைக்க மாட்டேன். 64 வகைகளில் பாலியல் தொழிலாளியுடன் பாலுறவு கொள்வது எப்படி என்பதை விளக்கும் இவைகளை கற்றுக் கொடுத்தால், எய்ட்ஸ்தான் பரவும். ஆண் – பெண் உறவு நிலைமைகள் ஏசு கூறியதைப் போல இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். புத்தரைப் பொருத்தவரை, இந்த விஷயத்தில் அவருடைய கருத்து என்னவாக இருந்தது என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை. ஆனால், ஏசு என்ன சொல்கிறார் என்றால், ""கடவுள் கணவனையும் மனைவியையும் சரிபாதியாக ஓருடலில் படைத்தார்'' என்கிறார். இதில் ஒரு நீதி இருக்கிறது. அதனால்தான் அய்ரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறையுள்ளது.
ஆனால், இந்தியாவில் உள்ள இந்து மதத்தில், சாதியை அடிப்படையாகக் கொண்டு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்தான் நடக்கின்றன. காதல் திருமணங்களும், இந்து மதமும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க முடியாது. என்னுடைய போர், இனி மதச்சார்பற்ற இந்துக்களிடம்தான். இந்து மதத்தை தோற்கடிக்கவில்லையெனில், அதை அழிக்க முடியாது. கிறித்துவத்தைப் பரப்புவதை சுதந்திரமான மனித உரிமையாக விரிவுபடுத்த வேண்டும். நல்ல மதங்கள் மக்களிடையே போட்டி போட வேண்டும். போட்டி என்பது அடிப்படை உரிமை. இந்த இடத்தில் மார்க்சிஸ்டுகளோடு  நான் ஒத்துப்போகவில்லை. நமக்கு இந்தியாவில் உலகளாவிய ஆன்மிகப் போட்டி ஒன்று தேவை.

உங்களுடைய இந்தக் கூற்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கொஞ்சம் விளக்குவீர்களா?

நான் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன். இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியிலும் மக்களை பணம் கொடுத்து கிறித்துவத்திற்கு மதமாற்றம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. மதம் பரப்புதல் என்றாலே கிறித்துவம் மட்டும்தான் செய்கிறது என்று நினைக்கிறார்கள். முஸ்லிம்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதில்லை. சூபி இனத்தவரே தங்கள் மதத்தைப் பரப்புகிறார்கள். பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் மதத்தைப் பரப்புவதில் ஈடுபட்ட சூபியிஸத்தினால் இஸ்லாமுக்கு மாறினார்கள். அவர்கள் குரானோடு மக்களிடம் போனார்கள். அதனால்தான் மக்கள் மதம் மாறினார்கள். ஆனால் எங்கே முதலில் மதப் பரப்புரை நடந்திருக்கும்? உலகின் முதல் மதப்பரப்புரையாளர் அசோகர்தான். தன் மகனை, மகளை, தன் படைகளை புத்த மதத்திற்கு மாற்ற – அவர்களை சீனாவுக்கும், இலங்கைக்கும் அனுப்பவில்லையா? ஆகவே, கிறித்துவம் தான் முதலில் மதப் பரப்புரை செய்யப்பட்ட மதம் என்று ஏன் நினைக்க வேண்டும்? இந்தியாவில் வாழும் மதச்சார்பற்ற இந்துக்கள், இந்திய வரலாற்றை சரியாகத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

அசோகரின் மதம் பரப்பும் நடவடிக்கைகள் குறித்து ஒரு முழுநீளப் படம் எடுக்க வேண்டும். வெகுமக்கள் ரசனைக்கேற்ற வகையில் ஒரு நல்ல படம் அசோகரைப் பற்றி எடுக்க வேண்டும். ஹாலிவுட் ஆட்களிடம் இந்த கோரிக்கையை வைக்கப் போகிறேன். ஹாலிவுட் ஆட்கள் எடுத்தால் அது ஹிட் தான். சீனா, இலங்கை, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் உள்ள மக்களை யார் புத்த மதத்திற்கு மாற்றியது? அசோகர்தான். பார்ப்பனியத்திற்கு படைப்பாற்றால் கொண்ட மூளை கிடையாது. பார்ப்பானின் மூளை பாறை போன்றது. அதிலிருந்து படைப்பாற்றல் வராது. தலித் – பெரும்பான்மை மக்களின் மூளை பச்சை மண் போன்றது. அதிலிருந்து என்ன வேண்டுமானாலும் விளையும்.

புத்த மதம், கிறித்துவ மதம், சூபியிசம் ஆகியவை போட்டியில் இருக்கட்டும். மக்கள் தேர்ந்தெடுக்கட்டும் தங்கள் மதத்தை. சந்தையில் நல்ல பொருளை வாங்குவதை மார்க்சியம் ஆதரிக்கிறது. பின் ஏன் அது மத விஷயத்திலும் நடக்கக் கூடாது? இந்து மதம் தோற்றுப் போய் நிற்கிறது. அது தலித்துகளையோ, பிற்படுத்தப்பட்டவர்களையோ கவரவில்லை. நேர்மறையான பிரதிகளே அதில் இல்லை. மனிதத் தன்மையுடைய கடவுள்களே இந்து மதத்தில் இல்லை. இருக்கும் எல்லா கடவுளர்களும் – பெண்ணை பாலியல் வன்முறை செய்பவர்களாகவும், கொலை செய்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.

ஆகவே என் மக்கள் ஏசு, புத்தர், நபிகள், மார்க்ஸ், அம்பேத்கர் ஆகியோரில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்தத் தேர்வின் மூலம் மார்க்சிஸ்டுகளாக சிலர் மாறலாம். அவர்களுக்கு மதமில்லை. பெரியார் இருந்தார். நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பெரும்பான்மையான மக்கள் மதத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது, மதங்களின் காலம். முதலாளித்துவமும், முதலாளித்துவத்திற்குப் பிந்தைய காலகட்டமும் மதங்களை அழிக்கவில்லை. இன்னமும் இஸ்லாமும் கிறித்துவமும் தங்கள் மதத்தை விரிவாக்கம் செய்ய வும், ஜனநாயகப்படுத்தவும் போட்டியிடுகின்றன. புத்த மதமும் போட்டியில் இருக்கிறது. ஆகவே, இளம் ஆய்வாளர்களுக்கு நான் கூற விரும்புவதெல்லாம் இந்தியா மற்றும் இந்திய கிராமங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆன்மிகம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு கவனம் செலுத்துங்கள் என்பதே.

இந்திய மக்களிடையே போதுமான வாசிப்புத் திறன் இல்லை. பார்ப்பனியம் மக்களுக்கு வாசிப்பை மறைத்தும் மறுத்தும் வைத்திருந்தது. அதோடு பார்ப்பனியம் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும். ஒருபோதும் வாசிக்காது. திருமணமாக இருந்தாலும், ஏரோபிளேன் முதன்முதலில் விடும் பூஜையாக இருந்தாலும் சரி, அங்கே போய் மந்திரங்களை ஒப்பித்துவிட்டு வருவார்கள் புரோகிதர்கள். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இவர் என்ன சொல்கிறார் என்றே தெரியாது. "சமர்ப்பயாமே' என்றும் "ஸ்வாகா' என்றும் சொல்லி, அவர்களின் சொத்தை சுருட்டிக் கொள்வார்கள். அவர்களை ஒன்றாக வாழச் சொல்கிறாரா அல்லது நாளைக்கே விவாகரத்து பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா என்றுகூட நமக்குத் தெரியாது.
பவுத்தத்திலும்கூட பெரிதாக வாசிக்கும் பழக்கம் இருப்பதாக சொல்ல முடியாது. கிறித்துவமும், இஸ்லாமும் அப்படியல்ல. வாசிக்க வைப்பவை. அதனால்தான் கிறித்துவ உலகத்தில் கல்வி பரவுகிறது. அரசாங்கங்களால் அல்ல, தேவாலயங்களால் பரவுகிறது. சொல்லப் போனால், அரசைவிட தேவாலயங்கள்தான் அதிக மக்களுக்கு கல்வியறிவு அளித்திருக்கிறது. இஸ்லாமில் மதரசாக்கள் மசூதிகளால் கட்டப்பட்டன. ஆனால் நாம் இதில் கோட்டை விட்டோம். வாசிப்பதில் உள்ள முக்கியத்துவத்தை உணரத் தவறினோம். இன்றைக்கு இந்தியாவில் யாரும் வாசிப்பதேயில்லை. இது, மிகவும் வருத்தத்திற்குரியது. எனவே, வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே அதிகரிப்பதற்கான செயலில் ஈடுபட வேண்டும். பைபிள் அனுபவங்கள் வழி நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதல் அச்சு எந்திரம் உருவானதே பைபிளை அச்சிடுவதற்காகத்தான். அச்சுத் தொழில்நுட்பம் வளர்ந்ததே பைபிள்களை வெவ்வேறு முறைகளில் அச்சிடுவதற்காகத்தான். கத்தோலிக்க பெண் துறவிகளும், அருட்தந்தைகளும் மதவுணர்வினால் செய்த தியாகத்தில் விளைந்தவைதான் இவையெல்லாம். எழுதுபவர் ஒருவராக இருக்கலாம்; ஆனால் விநியோகித்தவர்கள் பலர்.

நான், "போஸ்ட் இந்து இந்தியா' (இந்து இந்தியாவுக்குப் பிறகு) அல்லது "நான் ஏன் இந்து அல்ல' போன்ற நூல்களை எழுதும்போது, அதை வாசிக்க ஆளில்லையென்றால் நான் எழுதி என்ன பயன்? மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த ஊழியர்களை நியமித்தால் மட்டும் போதாது. வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். அம்பேத்கரின் "சாதி ஒழிப்பு', புலேவின் "குலாம்கிரி', "நான் ஏன் இந்து அல்ல', "போஸ்ட் இந்து இந்தியா' போன்ற சில குறிப்பிட்ட நூல்களை எடுத்து, ஒரு பத்து லட்சம் மக்களையாவது வாசிக்க வைக்க வேண்டும். இதோடு சேர்த்து தலித் – பெரும்பான்மை மக்களில் ஒரு பகுதியினரை ஆங்கிலம் வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொடுக்க வேண்டும். பிராந்திய மொழிகளில் உள்ள அறிவு என்பது ஒரு பகுதி அறிவுதான். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள மக்களுக்கு இது பயனளிக்காது. இந்தியாவை ஆங்கிலமயப்படுத்த வேண்டும்.

பிராந்திய மொழிகளின் ஆதிக்கத்தைப் பார்த்தோ, பார்ப்பனியத்தைப் பார்த்தோ நாம் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில், அவை ஏற்கனவே சமஸ்கிருதமயமாகி இருக்கின்றன. நாம் நம்முடைய இந்திய ஆங்கிலத்தை வளர்ப்போம். அமெரிக்க ஆங்கிலமும் அய்ரோப்பிய ஆங்கிலமும் வெவ்வேறானவை. ஆங்கிலம் ஏற்கனவே நம்முடைய தேசிய மொழி. ஆகவே, ஆங்கிலத்தை நமது தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள நாம் அச்சப்படக் கூடாது. நம் பழங்குடியின மக்களின் மொழிக்கு மீண்டும் நாம் போவது என்பது சாத்தியப்படாது. நாம் முற்போக்காகவும், உலக நடப்புகளை, அறிவியல் வளர்ச்சிகளை அறிந்து கொள்ளவும் ஆங்கிலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சொற்களைக் கொண்டுள்ளது. வருங்காலத்தில் குழந்தைகள், அரசுப் பள்ளிகளில் ஏன் ஆங்கில வழிக் கல்வி கற்றுக் கொடுக்கப்படவில்லை என்று கேள்வி கேட்கத் தொடங்குவார்கள்.

ஆகவே "பாம்செப்' போன்ற அமைப்புகள் பிரச்சாரம் செய்தால், 25 ஆண்டுகளில் இந்தியாவை தலித் மயமாக்கலாம். ஆங்கிலமயமாக்கலாம். எந்த மாதிரியான அறிவாளிகள் உலகில் உருவாவார்கள் என்று யாரும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஒரு குக்கிராமத்திலிருந்து ஒரு காஞ்சா அய்லைய்யா இதுபோன்றதொரு ஆங்கிலப் புலமையையும், எழுத்துத் திறனும் கொண்டு உருவாவாரென்று அம்பேத்கர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். மார்டின் லூதர் கிங், ஒபாமாவைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், அவர்கள் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். கல்வித் துறையில் பாடத் திட்டத்தில் நம்முடையவை வரவேண்டும். அதனால்தான் கல்வியில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறேன். என்னுடைய “Turning the pot Tilling the Land” என்ற நூல்தான் இலக்கியப் பின்னணியில் வந்த கல்வி தொடர்பான நூல். நம்மிடம் நிறைய நூல்கள் வேண்டும். கதை நூல்கள் வேண்டும். அதன்பிறகுதான் நாம் பாடத்திட்டத்தில் நம்மைப் பற்றிய பாடங்களை சேர்க்க முடியும். எல்.கே.ஜி. முதல் சொல்லித்தரப்படும் A for Apple கதை, A for Ant என்றாக வேண்டும். B for Buffalo, C for Cattle என்றாக வேண்டும். C for Cow நீக்கப்பட வேண்டும். நமக்கான சொற்களை அந்த கட்டத்திலிருந்தே உருவாக்க வேண்டும்.

பார்ப்பன இலக்கணங்களை ஒழிக்க வேண்டும். அவை subject, object, predication என்று தான் இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கின்றன. அதை எப்படி சொல்லித் தருகிறார்கள் என்று பாருங்கள். Rama killed Raavana இதில் ராமன் Object, ராவணன் subject. செய்யும் செயல் கொல்வது இளம் வயதிலேயே கொலை செய்வதையா சொல்லித் தருவார்கள்? அதற்கு பதில், அவை இப்படி மாற்றப்பட வேண்டும். Farmer is Tilling the land அல்லது Mother is cooking the food, Father is looking after the Cattle என்பது இப்படி மாற வேண்டும் : Father should also cook the food and Mother should also look after the Cattle. நாம் இப்போது ஆண் இருக்கும் இடத்தில் பெண்ணையும், பெண் இருக்கும் இடத்தில் ஆணையும் மாற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது, மிகவும் முக்கியம். Rama killed Raavana என்று இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கும் இந்த தேசம் மாற வேண்டும். Krishna has stolen the butter. ஆக, கடவுளே திருடுகிறார் என்று தொடக்கத்திலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். இதுவா தேவை? இல்லை. இந்தியாவிலிருந்து இந்த கடவுளர்களை முற்றாக நீக்க வேண்டும்.

வாத்சாயனாரின் காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிலைகளைக் கொண்ட கோயில்களை தரைமட்டமாக்க வேண்டும். இது, நமது குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பாடு அல்ல. பாலுறவு என்பது இயல்பானதாக இருக்க வேண்டும். இந்த பாழாய்ப்போன வாத்சாயனாருக்கு முன்பிருந்தே தலித் – பெரும்பான்மையினர் மத்தியில் மகிழ்ச்சியான பாலுறவு வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக நீடித்து இருந்து வந்தது தானே? நாம் பாலுறவை அறிவியலாகக் கற்றுக் கொள்ளலாம். அதை எதற்கு வாத்சாயனõரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்? பாலுறவு குறித்த நமது பிரதிநிதிகளை நாம் உருவாக்குவோம். அம்பேத்கரை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். காந்தி இளம் பெண்களுடன் ஆடையின்றி நிர்வாணமாக உறங்கினார். அம்பேத்கரோ இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதுதான் இயல்பான வாழ்க்கை. ஆக, ஒவ்வொரு விஷயத்திலும் நாம் சாத்தியமான மாற்று ஒன்றை உருவாக்க வேண்டி இருக்கிறது.

ஆன்மிகப் பாசிசத்தின் (இந்து மதம்) உருவாக்கம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நான் பின்னோக்கிப் பார்க்கிறேன். பாசிசம் என்றால் என்ன? ஒடுக்கும் தன்மையுடைய, அழிக்கக்கூடிய ஒன்று எனலாம், உலகளாவிய அளவில் எடுத்துக் கொண்டால், போருக்கு இட்டுச் செல்வது பாசிசம் என்று பிரதிகள் நமக்கு பாசிசம் பற்றிக் கூறுகின்றன. ஜெர்மனியிலிருந்தும், இத்தாலியிலிருந்தும் இது தோன்றியதாக நாம் அறிகிறோம். ஹிட்லரும், முசோலினியும் எடுத்துக்காட்டுகள். உற்று நோக்கினால், இந்து மதத்திற்கும் நாஜிக்களின் தத்துவத்திற்கும் "ஸ்வஸ்திக்' சின்னம் உட்பட நிறைய தொடர்பிருக்கிறது.

ஹிட்லரே நாஜிக்களை ஆரியர்கள் என்றுதான் குறிப்பிட்டார். நான் இந்திய ஆரியர்களை நாஜிக்களோடு பொருத்திப் பார்த்தேன். ஜெர்மனியில் ஆரியர்களுக்கு தொன்மையான வேர்கள் கிடையாது. ஆனால், இந்தியாவில் உள்ளது. பார்ப்பனர்கள் ஜெர்மனியிலிருந்து வந்தார்களா அல்லது ஈரானிலிருந்தா என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. பாசிசத்தின் தன்மைகளாக அடக்குவதையும் ஒடுக்குவதையும், போருக்கு இட்டுச் செல்வதையும், பாலியல் வல்லாங்கு செய்வதையும் வைத்துப் பார்க்கும்போது, இவையெல்லாம் ரிக்வேதத்திலும் இருக்கின்றன. "ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களைப் படைக்கிறார் கடவுள்' என்கிறது ரிக்வேதம். இது எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்றும் சொல்கிறது வேதம். அதுமட்டுமல்ல, சிலர் காலில் பிறந்தார்களாம். சிலர் தலையில் பிறந்தார்களாம். சிலர் பிறக்கவேயில்லையாம்! ஆகவே மதத்தின் பெயரால், ஆன்மிகத்தின் பெயரால் கடவுளே ஒரு பெரிய ஒடுக்குமுறையை கடைப்பிடிக்கிறார்.

புருஷசுத்தம் என்பது சமமற்ற தன்மை எனும்போது, அது எப்படியெல்லாம் இந்து மதத்தோடு பொருந்திப் போகிறது என்பது மிகவும் முக்கியம். ஆகவே, இந்து மதத்தின் இந்தத் தன்மையை எப்படி விளக்குவது என்று நான் யோசித்தேன். அப்போது ஒரு விஷயம் புரிந்தது. நாஜியிசமோ, பாசிசமோ அரசியலோடு தொடர்புடையது என்பது புரிந்தது. அங்கே ஆன்மிகமோ, மதமோ வரவேயில்லை. ஏனெனில், அங்கு கிறித்துவப் பின்னணி இருந்தது. இது குறித்து ஆழ்ந்து யோசிக்கையில் இங்கிருப்பது ஆன்மிகப் பாசிசம் என்று புலப்பட்டது. பாசிசத்தின் மீது ஆன்மிகத்தை கட்டியெழுப்பினால், அதற்கு வலிமை அதிகமாகி, நீண்டகாலம் நீடிக்கும். இந்த ஆன்மிக பாசிசத்தன்மையினால் தான் இந்து மதம் இத்தனை காலம் தாக்குப்பிடித்து வந்திருக்கிறது. பெரிய அளவு இழப்புகளோடு குறுகிய காலத்தில் அய்ரோப்பாவில் அரசியல் ரீதியான பாசிசத்தை ஒழித்துவிட முடியும்.

ஆனால் ஆன்மிகப் பாசிசத்தை அழித்துவிட முடியாது. அதன் முக்கியமான பரிமாணங்களை மக்கள் புரிந்து கொள்வதும் கடினம்தான். ஒரு மதத்தை அல்லது அரசை புரிந்து கொள்ள ஒரு காலகட்டம் தேவை. நமது காலத்தில்தான் இந்த ஆன்மிகப் பாசிசம் என்கிற சொல் பிடிபட்டிருக்கிறது. ஏனெனில், பாசிசத்தின் பல கோணங்களை நாம் உணர்ந்திருக்கிறோம். அன்று தேசியம், காலனித்துவம் போன்றவை முக்கியப் பங்கு வகித்தன. காலனியாதிக்கத்திற்கெதிரான போராட்ட காலத்தில் அம்பேத்கரால் கிறித்துவம் குறித்த ஒரு சாதகமான பார்வையை வைத்திருக்க முடியாது. இப்போது செய்தாலே குற்றவாளியாக்குகிறார்கள். அன்றைக்கு அப்படி அவர் செய்திருந்தால், அவரையும் குற்றவாளியாக்கி இருப்பார்கள்.

ஆனால் எந்த விருப்பு வெறுப்புமின்றி, என்னால் பவுத்தத்தை வெளியிலிருந்து ஆராய முடிகிறது. ஆனால், நான் அம்பேத்கரின் தோள்களில் நின்று கொண்டு பார்க்கிறேன் என்பதுதான் முக்கியமானது. ஒவ்வொரு காலகட்டமும் அந்த காலத்திற்கேற்ப ஒரு சிந்தனையாளரை உருவாக்குகிறது. அம்பேத்கரின் "நவயான' பவுத்தத்திற்குப் பிறகு, இந்து மதத்திற்கு சவாலாக கிறித்துவமும், இஸ்லாமும்தான் இருக்கின்றன. இஸ்லாத்தைப் பொருத்தவரை சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் போல விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனால் இந்து மதத்திற்கு சவால் விட ஒரே ஒரு நூல் "நான் ஏன் இந்து அல்ல' மட்டுமே வந்திருக்கிறது. ஆனால், இஸ்லாத்திற்குள்ளேயே அதற்கு சவால் விட்டு நிறைய நூல்கள் வந்திருக்கின்றன. கிறித்துவத்திற்கும் இது பொருந்தும். இந்த நிலைமையில்தான் ஒரு கருத்தியல் ரீதியான முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. ஆன்மிக ஜனநாயகம் என்கிற புதிய சொல்லாடல் இங்கே சாத்தியமாகிறது. பவுத்தம், கிறித்துவம், இஸ்லாம் ஆகியவற்றை ஒரு செவ்வகத்திற்குள் அடைக்கலாம். இவற்றுக்கிடையே வேறுபாடுகளும் உண்டு. அது குறித்த விவாதங்களும் உண்டு. இந்த விவாதங்கள் தொடர வேண்டியது அவசியம். 

- முற்றும்

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால், ஆர்.ஆர். சீனிவாசன்
தமிழில் : கவின் மலர்


Wednesday, December 08, 2010

மக்களின் அறிவைக் கொண்டு உருவான நூல்கள் அதிகமாக வெளிவர வேண்டும்

கடந்த இரு இதழ்களில் வெளிவந்த பேராசிரியர் காஞ்சா
அய்லைய்யா அவர்களின் பேட்டி, இந்த இதழிலும் தொடர்கிறது


தலித்முரசு காஞ்சா அய்லய்யா நேர்காணல் பகுதி III

இந்தியாவின் அறிவுத்தளம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து சொல்லுங்கள்.

இந்தியாவின் அறிவுத்தளம் என்பது, மேற்கோள்களாகச் சுருங்கிவிட்டது. நாம் மக்களின் வாழ்க்கையிலிருந்து ஆய்வுகளைச் செய்யும்போது, மேற்கோள் காட்ட வேண்டிய அவசியமில்லை. அம்பேத்கர், புலே போன்றோரின் மேற்கோள்களை எடுத்தாளலாம். ஆனால், எப்போதும் மக்களிடமிருந்துதான் முதன்முதலில் நிரப்பப்பட வேண்டும். அதனால்தான் நான் மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்ட எழுத்துகளை நிராகரித்தேன். பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், ஏன்? மார்க்ஸ், அம்பேத்கர் இவர்களில் யாருடைய அனுபவங்களையாவது வரித்துக் கொண்டு எழுதப்படும் எழுத்துகளையும் நிராகரித்தேன். இவர்களில்யாருடைய நூல்களையாவது பாருங்கள்! மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டா எழுதியிருக்கிறார்கள்? மார்க்ஸின் "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யோ, அம்பேத்கரின் "சாதி ஒழிப்பு' நூலோ மேற்கோள் சார்ந்தவை அல்ல. எனவே, மக்களின் மனங்களுக்குள் சென்று அவற்றிலிருந்து ஒரு தத்துவார்த்த பிரதி உருவாவதையே நான் விரும்புகிறேன்.
மக்களின் வாழ்க்கை முறை, உற்பத்தி, அறிவியல், தொழில்நுட்பம், உணவுப் பண்பாடு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. மரக்கறி உணவையே இந்திய உணவு என இந்து மதம் கட்டமைத்தபோது, நாம் ஆற்றலிழந்து போனோம். நம்மிடையே கால்பந்து வீரர்கள் இல்லை. ஏன்? மரக்கறி உணவை மட்டும் உண்பவர் கால்பந்து வீரராக முடியாது; ஒலிம்பிக் சாம்பியனாக முடியாது. ஆக, உணவுப் பண்பாடு  ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தலித் – பெரும்பான்மை உணவுப் பண்பாடு, சங்கராச்சாரியின் வருகைக்குப் பிறகு இந்து மதத்தால் அழிக்கப்பட்டது. ஆகவே, மக்களின்  அனுபவங்களின் மூலம் இந்து மதம் தகர்க்கப்பட வேண்டும் என்று நினைத்தேன்.

எனவே, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உழைத்து Post Hindu India என்ற நூலை  உருவாக்கினேன். பார்ப்பன அறிவாளிகள் கூறும் தேசியம் என்கிற கருத்துருவாக்கத்தையும் அழிக்க விரும்பினேன். ஏனென்றால், பார்ப்பனியம் ஒரே வடிவத்தில் இல்லை. அது மார்க்சியம், தேசியம், பெண்ணியம் உட்பட பல்வேறு வடிவங்களில் வருகிறது. நம்மிடையே போதுமான பெண் அறிவாளிகள் இல்லை. நானேகூட கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று விட்டு வரவில்லை. மாறாக, உள்ளூர் சரக்குதான். இதுவே என் பலமும் பலவீனமுமாக இருக்கிறது. ஆனால், என் பலவீனத்தை நான் பலமாக மாற்றிக் கொள்ள வேண்டுமென விரும்பினேன்.

ஆகவே, "பாப்புலர் பிரஸ்ஸி'ல் பல மணி நேரங்களை எழுதுவதிலும், படிப்பதிலும் செலவழித்தேன். மேலும், கிராமங்களுக்குச் செல்வதன் மூலம், மக்களின் உற்பத்தி வாழ்க்கை குறித்த பெரும் தகவல்களை சேகரித்து வந்தேன். கருவிகளின் பெயர்கள், மக்களிடையே புழங்கும் பழமொழிகள், உணவுப் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுப் பின்னணி போன்ற பல தகவல்களை சேகரித்தேன். அதிலிருந்து சிந்திக்கத் தொடங்கினேன். என்னுடைய சமீபத்திய நூல் Weapon of the other இது குறித்ததே. இப்படித்தான் தலித்தியம் # பார்ப்பனியம் என்கிற கருத்தாடலுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தேன். ராஜாராம் மோகன்ராயின் தேசியத்திற்கு எதிராக புலேயின் தேசியம், கவுடில்யருக்கும் மநுவுக்கும் எதிரான புத்தரின் தேசியம் போன்றவற்றை நீங்கள் அறிவீர்கள்.
நேரு நினைவு அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் பார்வையிட்டபோது நேரு, காந்தி, ராஜாராம் மோகன்ராய் எல்லோரும் அங்கே இருக்கிறார்கள். ஆனால் அம்பேத்கர், புலே, பசவா, பெரியார் ஆகியோர் இல்லை. இந்த அறிவுஜீவி வாழ்க்கை ஒரு துன்புறுத்தலாகவும், ஓய்வற்றதாக வும் இருந்தாலும்  – நான் அதை கடின உழைப்புக்குரியதாகவும், முடிந்தவரை வெகுமக்களுக்குரியதாகவும் ஆக்கிக் கொள்ள முனைந்தேன். ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக அறிவாளிகளுக்காகவும், வெகுமக்களுக்காகவும் எழுதுவது என்பது கடினமானது. எடுத்துக்காட்டாக, என்னுடைய Buffalo Nationalism என்கிற தலைப்பை நான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ இந்து பரிஷத்தின் பசு தேசியத்தை எதிர்த்துதான் வைத்தேன். ஆனால் என்னுடைய நண்பர்களே, ""இதென்ன தலைப்பு?'' என்று சிரித்தார்கள். ""நான் ஏன் இந்து அல்ல'' எழுதியபோது அதைக் கொஞ்சம் போல ரசித்தவர்கள்கூட, இந்தத் தலைப்பைப் பிடிக்கவில்லை என்றார்கள்.

அவர்களிடம் நான் சொன்னேன் : இது என்னுடைய மூளையில் உதித்ததல்ல. எருமைøய ஒவ்வொரு வீட்டின் விலங்கு என்று சொல்லலாம். இந்தியாவில் பால் உற்பத்தி, எருமை மாடுகளிடமிருந்துதான் வருகிறது; பசுக்களிடமிருந்து அல்ல. இந்த பாழாய்ப்போன படைப்பாற்றலற்ற பார்ப்பனிய மூளையோ – ஒன்றுக்கும் உதவாத ஒரு விலங்கை தெய்வமாக்கியும், கருப்பாக இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக – உற்பத்திக்கு உதவும் ஒரு விலங்கை எமனுக்கு வாகனமாகவும் மாற்றி விட்டிருக்கிறது. ஆனால், அது கொடுக்கும் பாலின் நிறம் வெள்ளை என்பதால் மட்டும் பருகுகிறார்கள் என்றேன்.

ஆகவே, புதியதாய் எதையாவது செய்ய வேண்டி இருக்கிறது. சில வேளைகளில் அதற்காக எள்ளி நகையாடப்படுவதையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. என்னுடைய நண்பர்கள் சிலருக்கு இருக்கும் பார்ப்பனிய தாக்கம்; கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் பயின்று விட்டுத் திரும்பியவர்களிடம் இருக்கும் மேற்கோள்களால் நிரப்பப்பட்ட ஆய்வு மனப்பான்மை மற்றும் மேலைநாட்டு சிந்தனைகள் ஆகிய எல்லாவற்றோடும் போராட வேண்டி இருக்கிறது. சிலர் நம்மை ஏற்றுக் கொள்வார்கள். சிலர் நம்மை மறுப் பார்கள். ஆனால் இறுதித் தீர்ப்பு மக்கள் கையில் உள்ளது. இயக்கங்கள்தான் இத்தகைய பணிகளை கைக்கொள்ள வேண்டும். என்னுடைய நூல்களைப் பொருத்தவரையில் வெகுமக்கள் இயக்கங்கள், அறிவுத்தளம் இரண்டிலுமே நல்ல வரவேற்பைப் பெற்றன. பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டவையெல்லாம் சூடான விவாதங்களைக் கிளப்பவில்லை.

இந்தியாவில் தற்பொழுது ஆங்கிலம் பேசக்கூடிய அறிவாளிகள் குழு ஒன்று உருவாகியுள்ளது. இத்தகைய ஓர் ஆக்கம் வெளிவரும்போது, ஆதிக்க சாதிகளிலிருந்து மிகப்பெரிய அளவில், கலவையான எதிர்வினைகள் வந்தன. சிலர் அதனை வரவேற்றாலும், பார்ப்பனர்கள் மிகவும் எரிச்சலுக்குள்ளானார்கள் என்று சொல்லலாம். "நான் ஏன் இந்த அல்ல?' நூல் வெளிவந்தபோது, நூல் குறித்து நிறைய திறனாய்வுகள் வந்தன. தற்போதைய பதிப்பில் அனைத்து திறனாய்வு களையும் இணைத்துள்ளேன்.  என்னுடைய நூலுக்கு ராஜ்தீப் சர்தேசாய், ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். அவருடைய மனைவி சகரிகா கோஷ், இந்நூலால் கவரப்பட்டு என்னை ஒரு நீண்ட நேர்காணல் எடுத்தார். குடும்பத்தில் ஒரு தத்துவப் போரே நடைபெற்றது அப்போது. இந்நூல் பல குடும்பங்களிற்குள் சண்டையை உண்டாக்கியது. எனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால், இந்நூல் ஒரு விவாதத்தை தோற்றுவித்தது.

Post Hindu India வந்தபோது ஒரு பெரிய தாவல் நடந்தது. எடுத்துக்காட்டாக, ""இந்நூலில் தீவிரத்தன்மை இல்லை. ஆய்வுத்தன்மை இல்லை. முடிவுக்கு வர உதவிய தரவுகள் குறித்த குறிப்புகள் இல்லை'' என்று "ஹிமால்' இதழில் மீரா நந்தா எழுதியிருந்தார். அதற்கு நான் ஒரு பதில் எழுதினேன் : ஆய்வுத்தன்மை, தரவுகள் என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? என்னுடைய நூலில் அடிக்குறிப்புகளும், தரவுகளும் இல்லையென்பதற்காக நீங்கள் அதன் தீவிரத்தன்மையை குறைத்து மதிப்பிடுவீர்களானால் – பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், மார்க்ஸ் போன்றவர்களுடையதையும் நீங்கள் அப்படி சொல்லிவிட முடியுமா? பார்ப்பனிய அறிவுஜீவி குண்டர்த்தனம் எதை நிராகரிக்கச் சொல்கிறதோ, அதனை நிராகரிக்க வேண்டுமாம். எதைப் புகழ வேண்டுமெனச் சொல்கிறதோ அதை மற்றவர்களும் புகழ வேண்டுமாம். இது என்ன நியாயம்? எந்தவொரு மானுடவியலாளரின் நூலிலாவது, அவர்களை ஒரு முடிவுக்கு வரவைத்த தரவுகள் குறித்த குறிப்புகள் இருக்கின்றனவா?

மானுடவியல் என்பது, ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் உணவுப் பழக்கம், கருவிகள், உற்பத்தி உறவுகள் குறித்தான ஆய்வுகள் தானே? அவற்றை எல்லாம் எங்காவது போய் இதெல்லாம் உண்மைதானா என்று கள ஆய்வு செய்து பார்த்துதான் ஒப்புக் கொள்கிறார்களா? வெறும் பார்ப்பனியத்திற்கும் தலித்தியத்திற்கும் இடையேயானதல்ல இது. இதில் அறிவியல், தொழில்நுட்பம், மதங்கள் எல்லாமே கலந்திருக்கின்றன. இந்து, முஸ்லிம், தலித் – பெரும்பான்மை மக்கள், பழங்குடியினர் ஆகியோரிடையே அறிவியலும் தொழில்நுட்பமும் உள்ளன. ஆனால், இந்து மதம் இதனை அழித்துவிட்டது. இதனாலேயே நாம் அறிவியலுக்கு உலகளவிலான எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்றாகிப் போனது.

பவுத்த உலகமான சீனா, அறிவியல் துறையில் உலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்று விட்டது. கோபர் நிக்கஸ் முதல் சிப் உருவாக்கம் வரை, கிறித்துவ உலகம் நிறையவே பங்களித்து விட்டது. இவற்றில் "சர்ச்சு'கள் பெரிய பங்கு வகித்தன. இஸ்லாமிய உலகத்தை எடுத்துக் கொண்டால், நபிகள்கூட அறிவியல் அறிவுடன் இருந்தவர். துணிகளைத் தைப்பது, ஆண் – பெண் உறவுகள் குறித்த கருத்தாக்கங்கள், மணற்பாங்கான பகுதிகளில் எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்தது போன்ற பல விஷயங்களைச் சொல்லலாம். இதுபோன்ற எதையாவது இந்து உலகம் தந்திருக்கிறதா? ஆர்யபட்டாவைச் சொல்வார்கள். பூஜ்யத்தை கண்டு பிடித்ததை, இந்து மதத்தின் பங்களிப்பாகச் சொல்வார்கள். நான் என்னுடைய நூலில் இதை ஒரு "நான்சென்ஸ்' என்று நிரூபித்திருக்கிறேன். இடையர்கள்தான் பூஜ்யத்தை கண்டுபிடித்தார்கள். ஆர்யபட்டா 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். நம் இடையர்கள் ஆடுகளையும், மாடுகளையும் அதற்கு முன்னரே கணக்கு வைத்து எண்ணிக் கொண்டுதானே இருந்தார்கள், அதுவும் நூற்றுக்கணக்கில்! பூஜ்யம் இல்லாமல் எப்படி நூறு வரும், 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்னால்?

இதனைத் தவறு என்றால் ராமாயணம், மகாபாரதம் எல்லாமே தவறுதான். அதில் தலைகளின் எண்ணிக்கை, நபர்களின் எண் ணிக்கை, ஆடுகளின் எண்ணிக்கை எல்லாம் வருகிறதே? என்ன கொடுமையென்றால் இடையர்கள் இவற்றைப் பற்றி எழுதுவதற்கான அனுமதி இன்றி இருந்தனர். அவர்களுடைய விரல்கள் துண்டிக்கப்பட்டன. அறிவியல், தொழில்நுட்ப, கணித சூத்திரங்களை எல்லாம் ஒரு நூலாகப் பதிவு செய்ய முடியாமல் போனதன் விளைவு, ஆர்யபட்டா பூஜ்யத்தை கண்டுபிடித்தவராகிவிட்டார். இவர் ஒரு பார்ப்பனர் என்பதால், ""நான்தான் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தேன்'' என்று முந்திக் கொண்டார்.

நம்மிடையே இன்று மிகப்பெரிய பண்பாட்டு அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன. மக்களின் அறிவைக் கொண்டு உருவான நூல்கள் அதிகமõக வெளிவர இயக்கங்கள் முயல வேண்டும். இவற்றை சிறந்த முறையில் செய்ய வேண்டும். இல்லையெனில், ஆக்ஸ்போர்டு, ஹார்வார்ட், கேம்பிரிட்ஜிலிருந்து வரும் பார்ப்பனர்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளி விடுவார்கள். நான் இப்படிச் சொல்வதால், நம் பிள்ளைகள் இப்பல்கலைக் கழகங்களுக்குச் சென்று பயிலக்கூடாது என்பதில்லை. எனக்கெல்லாம் அந்த வாய்ப்பு நிச்சயமாக இல்லை. டெல்லிக்குச் சென்று பயில்வதைக்கூட என்னால் கற்பனை செய்து பார்க்க இயலாத நிலையில் இருந்தேன்.

அறிவு சார்ந்த விஷயங்களைப் புதிய முறையில் கூறுவது, புதிய சொற்களை உருவாக்குவது, தத்துவம் சார்ந்த கருத்துருவாக்கம். பல்கலைக்கழக கல்வியையும், மக்கள் போராட்டங்களையும் இணைப்பது போன்றவை மக்கள் போராட்டங்களிலிருந்தே சாத்தியப்படும். எடுத்துக்காட்டாக, ""இந்தியா தலித்மயமானது; சமஸ்கிருதமயமானதல்ல'' என்று சொன்னபோது, எம்.என். சீனிவாசன் போன்றவர்கள், கேம்பிரிட்ஜ் வரை சென்று பயின்றுவிட்டு இந்தியாவுக்கு வந்து இந்திய கிராமங்கள் பார்ப்பனமயமாக்கப்பட்டிருக்கின்றன என்றார். பார்ப்பனர்கள் வெளியே சொல்லாமல் தங்கள் கொல்லைப்புறத்தில் மாமிச உணவு உண்ண முயற்சி செய்து கொண் டிருப்பதை அறியாமல் அவர்கள் இப்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள். விஸ்கி, பிராந்தி மற்றும் இன்னபிற குடிவகைகள் அனைத்தையும் வெளியே தெரியாமல் குடிக்கும் பார்ப்பனர்கள் இல்லையா என்ன? பார்ப்பனப் பெண்களிடையே புகைக்கும் பழக்கமும்கூட அந்த சமயத்தில் இருந்தது. இவையெல்லாம் தலித்துகளின் பழக்கங்கள் என்று நீங்கள் சொல்வதானால், பார்ப்பன குலம் தலித்மயமாகி விட்டது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்? ஆனால் அவரோ, இந்திய கிராமங்கள் பார்ப்பன மயமாகி விட்டன என்றார். ஆகவே நான், "இந்தியா தலித்மயமாகியிருக்கிறது' என்று கூறியது உலகின் கவனத்தை ஈர்த்தது. ரவுட்லட்ஜ் பதிப்பகம், பின் – காலனிய இலக்கியங்களை தொகுத்தபோது, அதில் என்னுடைய அத்தியாயம் ஒன்று இருந்தது. அய்லைய்யா இருந்தார். மார்க்ஸ் இருந்தார். மாவோ இருந்தார். பிராங் பனான் இருந்தார் ஆனால் எம்.என். சீனிவாசன் இல்லை!
இந்திய பார்ப்பனர்கள் எங்களை ஓரங்கட்ட நினைத்தனர். ஆனால் அங்கீகாரமளிக்க உலகம் தயாராக இருக்கிறது.

ஆக, இந்த போர்க்களமே மிகுந்த மன அழுத்தத்தைத் தரக்கூடியது. அதிலும் கல்விப்புலத்தில் தேர்ந்தெடுத்தவர்களைத்தான் முன்னேற அனுமதிப்பார்கள். நம்முடைய நூல்களைப் புறக்கணிப்பார்கள். அவர்கள் நினைப்பதையெல்லாம் பாடமாக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வரலாறை எடுத்துக் கொண்டால், இப்போது இருவகை வரலாற்று நூல்கள் நம்மிடையே உள்ளன. புத்தர் முதல் இன்று வரையிலான தலித் – பெரும்பான்மை மக்களின் போராட்டங்கள் அடங்கிய வரலாறு ஒன்று; கவுடில்யர் முதல் இன்று வரையிலான அவர்களின் வரலாறு மற்றொன்று. ஆனால், நம்முடைய வரலாறை பாடமாக நடத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஆகவே, பார்ப்பனியத்திலிருந்து இந்தியாவை விடுவிக்க மிக கவனமாகவும், போட்டி மனப்பான்மையுடனும் நாம் இலக்கியங்களை உருவாக்க வேண்டும். போட்டி மனப்பான்மை மிகவும் முக்கியமானது.

– அடுத்த இதழிலும்

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால்,
ஆர்.ஆர். சீனிவாசன்
தமிழில் : கவின் மலர்