Tuesday, February 22, 2011

செருப்பு துடைப்பது கேவலமா?


த்தரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதியின் காலணிகளை அவருடைய பாதுகாப்பு அதிகாரி பதம்சிங் தனது கைக்குட்டையால் துடைத்த படங்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி இருக்கின்றன.


மாயாவதி உத்தரப்பிரதேசத்தின் நௌனிப்பூர் என்கிற கிராமத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கியவுடன் அங்கிருந்த அரசு அதிகாரிகளிடம் உரையாடுகிறார். அப்போது அவருடைய பாதுகாப்பு அதிகாரி தனது கைக்குட்டையால் துடைக்கிறார். மாயாவதியோ இதை அறியாதவர் போல அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து உரையாடுகிறார். இந்தக்காட்சியை அங்கிருந்த ஒரு உள்ளூர் தொலைக்காட்சி சேனலின் செய்தியாளர் படம்பிடித்தார். அன்றிரவு அத்தொலைக்காட்சியில் இக்காட்சிகள் ஒளிபரப்பாக, அதன்பின் இக்காட்சிகளைப் கடன் வாங்கி மற்ற அகில இந்திய ஆங்கில சேனல்கள் தொடர்ந்து இக்காட்சியை காண்பித்தவண்ணமிருந்தன.

ஒரு பாதுகாப்பு அதிகாரி தனது மேலதிகாரிக்கு இப்படியான பணிவிடைகளை செய்வது சரியா? இது அவரது சுயமரியாதைக்கு இழுக்கு இல்லையா? என்பது பலரும் முன்வைக்கும் கேள்வியாக இருக்கிறது.

பதம்சிங் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமோடு நெருங்கிய தொடர்பிலிருந்தவர். அவரைத்தொடர்ந்து மாயாவதியிடமும் நெடுங்காலமாக பணியாற்றுகிறார். இச்சம்பவம் குறித்துக் கூறுகையில் பதம்சிங் “மனிதாபிமான அடிப்படையில் தான் செய்தேன்.” என்றார்.

உத்தரப்பிரதேசத்தின் எதிர்க்கட்சிகளோ “இச்சம்பவம் துரதிஷ்டவசமானது. இது மாயாவதியின் நிலபிரபுத்துவ மனநிலையைக் காட்டுகிறது. அவர் தன் சிலைகளை தானே நிறுவினார். அதன் தொடர்ச்சியாக இப்படியொரு சம்பவம்” என்று குற்றம் சாட்டுகின்றன. காங்கிரஸ் கட்சி மாயாவதியின் பதவி விலகலைக் கோருகிறது.

மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் அ.மார்க்ஸ் இது குறித்து என்ன கூறுகிறார்?
“யாரும் யாருடைய காலிலும் விழுவதையோ ஷுக்களை சுத்தம் செய்வதையோ  ஏற்றுக்கொள்ள முடியாது. அது இழிவான செயல். அதிகாரத்தில் உள்ளவர்கள் இதனை தடுத்திருக்க வேண்டும். ஒரு முறை நேரு சென்னைக்கு வந்தார். அப்போது காங்கிரஸில் இணைந்திருந்த கண்ணதாசன் அவருடைய காலில் விழுந்தார். அதைக் கண்டு பதறிய பின்னே துள்ளி நகர்ந்த நேரு “வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்” என்று கத்தினார். இயல்பாக அவர் இதற்கு எதிர்வினை செய்தார். இப்படியான ஒரு கலாசாரம் அப்போது இருந்த்து. ஆனால் இப்போதோ காலில் விழுவது, பணிவிடை செய்வது என்ற கலாசாரமாகி விட்டது. இது தமிழ்நாட்டிலிருந்து வளர்கிறது என்று சொல்ல்லாம். ஜெயலலிதாவின் காலில் அவரது கட்சியினர் விழுகிறார்கள். ஆனால் அது இந்தளவுக்கான சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. மாயாவதி ஒரு தலித் என்பதும் இந்த சர்ச்சை பெரிதாக்கப்படுவதற்கொரு காரணம். ஆனால் அவர் தலித் என்பதற்காகவோ அவர் ஒரு பெண் என்பதற்காகவோ அவருடைய இந்த செயலை நாம் நியாயப்படுத்த முடியாது. இயல்பாக அவர் அதை தடுத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. மனிதன் இன்னொரு மனிதனுக்கு செருப்புத் துடைப்பது என்பது இழிவான செயல் தான். அதை ஆண்டாண்டு காலமாக பலர் செய்து வருகிறார்களே என்று கேட்கலாம். ஆனால் அதற்காக  பதிலுக்கு பழிவாங்குவது போல இவர் செருப்பை இவர் துடைக்கலாம் என்கிற வாதம் லாஜிக் இல்லாத ஒன்று.” என்கிறார் அ.மார்க்ஸ்.

உத்தரப்பிரதேச அமைச்சரவைச் செயலாளர் ஷஷங்க் சேகர் சிங் இது குறித்து கூறுகையில் ”வழக்கத்திற்கு மாறாக இதிலொன்றுமில்லை. ஒரு பாதுகாப்பு அதிகாரியின் கடமையாகவும் மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் தான் அவர் இதைச் செய்தார். ஒரு முறை காங்கிரஸ் எம்.பியான பி.எல்.புனியா கன்ஷிராம் ஷூ அணிய சிரமப்பட்டபோது அவருக்கு உதவினார். அப்போது புனியா மாயாவதியின் தனிச்செயலராக பதவியில் இருந்தார். இதையெல்லாம் ஒரு தவறு என்று கூறமுடியுமா? மாயாவதியின் காலணிகளின் ஏதோ ஒன்று ஒட்டிக்கொண்டிருந்த்து. அது ஒருவேளை அவரை இடறச்செய்யலாம் அல்லது காயம்படச்செய்யலாம் என்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே பதம் சிங் இதனைச் செய்தார்” என்கிறார்.

பதம்சிங் 2007ல் ஒரு கொள்ளைக்குமபலை எதிர்த்து சண்டையிட்டதற்காக ஜனாதிபதி பதக்கம் வாங்கியவர். பணிஓய்வு பெற வேண்டிய அவரது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ரீடா பக்குணா ஜோஷி ”தலித்துகளின் முன்னேற்றம் குறித்துப் பேசும் மாயாவதி ஒரு தலித் அதிகாரியை இவ்வாறு கேவலப்படுத்தலாமா?” என்று காட்டமாகக் கேட்கிறார்.
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டரில் இவ்வாறு எழுதியுள்ளார். “என் சூட்கேஸை என் பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்து வர நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்”  என்று மறைமுகமாக மாயாவதியை சாடுகிறார்.

”மாயாவதி தன் காலணிகளை சுத்தம் செய்யச்சொல்லிக் கேட்கவில்லை. அவர் பாட்டுக்கும் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இதற்கு மாயாவதியை குற்றம் சாட்டுவது சரியல்ல. ஒரு கைக்குட்டை கீழே விழுந்தால் குனிந்து எடுப்பதுபோன்ற ஒரு இயல்பான சம்பவத்தை இத்தனை பெரிதுபடுத்தத் தேவையில்லை” என்கிறார் மாயாவதி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சையது காசிம் அலி.

இச்சம்பவம் குறித்து ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவர் ஷரத் யாதவிடம் கருத்து கேட்கப்பட்டபோது நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க இப்போது இது பெரிய பிரச்சனையில்லை என்பதே அவரின் பதிலாக இருந்தது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரோ இதுகுறித்து சொல்ல ஒன்றுமில்லையென்று கூறி கருத்துக் கூற மறுத்துவிட்டார்.

இதே சம்பவம் நான்கு சுவர்களுக்குள் நடந்திருந்தாலோ அல்லது காமிரா கண்களுக்குப் படாமல் நடந்திருந்தாலோ இவ்வளவு பெரிய சர்ச்சையை உண்டாக்கியிருக்காது. இன்னமும் பலர் அதிகாரத்தின் ஆணைக்கு அடிபணிந்தோ அல்லது பதவி உயர்வுக்காகவோ இப்படிச் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தனக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் தங்களுக்கு பணிவிடை செய்தாகவேண்டும் என்று மமதோயோடும் அதிகார போதையோடும் அதை சலுகையாக அல்ல, உரிமையாகவே எதிர்பார்க்கும் தலைவர்கள் உண்டு. அவர்களின் கதையெல்லாம் வெளிச்சத்துக்கு வரவில்லை. இந்த ஒரு சம்பவம் வெளியே தெரிந்துவிட்டது. அவ்வளவே வித்தியாசம்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரஹாம் லிங்கனின் குடும்பம் பரம்பரையாக ஷூக்களை பாலிஷ் செய்யும் வேலையைச் செய்து வந்த குடும்பம். அவர் பதவியிலிருந்த போது அவரை கேலி செய்வதற்கு இவ்விஷயம் ஓர் ஆயுதமாக பயன்பட்டது. ஒரு விருந்தின் போது பலர் முன்னிலையில் அவரை அவமானப்படுத்தும் நோக்கில் “உங்கள் ஷுக்களுக்கு நீங்களே தான் பாலிஷ் செய்வீர்கள். அப்படித்தானே லிங்கன்?” என்று ஒருவர் கேள்வி எழுப்ப, லிங்கன் கூறிய பதில் இது.
“என் ஷூக்களை நான் தான் பாலிஷ் செய்து கொள்கிறேன். ஏன்? நீங்கள் யாருடைய ஷூக்களை பாலிஷ் செய்கிறீர்கள்?”

காலணிகளை பாலிஷ் செய்யும் தொழில் எப்போதும் வர்க்கத்தோடு தொடர்புடையது. இந்தியாவில் வர்க்கத்தோடு சேர்த்து சாதியுடனும் தொடர்புடையது. மற்றவரின் காலணியைத் துடைப்பது கேவலமும் அவமானமும் நிரம்பிய ஒரு இழிவான செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் சுயவிருப்பத்தின் பேரில்லாலாமல் கல்வியும் உரிமையும் மறுக்கப்பட்டு காலங்காலமாக சமூகத்தின் ஒரு பிரிவினர் செருப்புத் தைக்கும், செருப்புத் துடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்கிற உண்மையையும் நாம் மறந்துவிட முடியாது.. இன்று நாம் தெருக்களிலும், பேருந்து நிலையங்களிலும் பார்க்கும் செருப்புத்தைக்கும் தொழிலாளி தினமும் தினமும் அடுத்தவரின் காலணிகளைத் தொட்டு தூய்மைப்படுத்தும் வேலையை செய்துகொண்டுதானிருக்கிறார். ஒரு அதிகாரி இதைச் செய்கையில் சுயமரியாதயற்ற செயல் என்றும், மாயாவதி மமதையோடு இருக்கிறார் என்றும் குற்றம் சொல்லும் நாம், அதே வேலையைச் செய்யும் ஒரு தொழிலாளியிடம், எந்த குற்றவுணர்வுமின்றி நம் காலணிகளை கழற்றிக்கொடுத்து அந்த வேலையை செய்யச் சொல்கிறோம். குற்றம் சொல்லும் கட்சிகளும் கூட இழிவென கருதப்படும் ஒரு தொழிலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்காக எதுவும் செய்வதில்லை.

பதம்சிங் மட்டுமல்ல, நாட்டில் எவரொருவரும் அப்படியானதொரு செயலில் ஈடுபடாதிருக்கும் நிலையை நாடு அடையும் நாள் என்று?

நன்றி : புதிய தலைமுறை

Saturday, February 12, 2011

பிரியம் சமைக்கிற கூடொன்று

சில ஆண்டுகளுக்கு முன் தீக்கதிர் அலுவலகத்தில் அமர்ந்து கூகிளில் எதையோ தேடிக்கொண்டிருந்தேன். எதையோ தேட எதோ சிக்கியது போல என் கண்களுக்குத் தென்பட்டது அந்தத் தலைப்பு. “வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு” (http://www.agiilan.com/?p=329). படிக்கத் தொடங்கினேன். அந்த மொழிநடையும், அனுபவமும் மனதைத் தைத்து வலியுண்டாக்கின. ஈழத்திலிருந்து அகதியாய் வந்து சென்னையில் வீடு கிடைக்காமல் அனைவராலும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்படும் துயர் வலியுடன் சித்தரிக்கப்பட்டிருந்தது. 

எதை வாசித்தாலும் பிடித்திருந்தால் அதை பிறரிடம் சொல்லி வாசிக்கச் சொல்வேன். ஆனால் எழுதியவரைத் தேடிப்பிடித்து பாராட்டுவதெல்லாம் நான் செய்ததேயில்லை. யதேச்சையாக பேச நேர்ந்தால் சொல்வதுண்டு. இதற்காக எந்த மெனக்கெடலும் செய்ததில்லை. அதிலும் முன் பின் அறியாத ஒருவர் என்றால் சொல்லவே வேண்டாம். பேசாமல் விட்டு விடுவேன். ஆனால் இந்தக் கட்டுரை என்னை அப்படி இருக்க விடவில்லை. கட்டுரை இருந்த வலைப்பூவிலேயே தொடர்பு எண் இருந்தது. அந்த எண்ணிற்கு என் கைபேசியில் அழைத்தேன்.

மறுமுனையில் ஒரு குரல்.

“நான் அகிலன் பேசுறேன். நீங்க?”

என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத்தொடங்கினேன். பேசிமுடிக்கப் போகும் சமயத்தில் நான் சந்தேகம் கேட்டேன்..”என்ன நீங்க? எனககு இலங்கைத் தமிழ் என்றால் ரொம்பப் பிடிக்கும். நீங்க அப்படித்தான் பேசுவீங்க..காது குளிர அந்த பாஷையைக் கேட்கப் போறேன்னு நினைச்சேன். நீங்க என்ன எங்களைப் போல தமிழ் பேசுறீங்க?” என்றேன்.

“அது நானாக மாத்திக்கொண்டது..இங்கே என் பாஷையை வைத்தும் கூட சந்தேகப்படுறாங்க. ஒரு ஆட்டோ பிடிக்கணும் என்றால் கூட முடிய மாட்டேங்குது” - இது பதில்

பேசி முடித்தபின்னும் நெடுநேரம் இது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். அருகிலிருந்த நீதிராஜன், அ.குமரேசன் ஆகியோரிடம் இதைப் பகிர்ந்துகொள்ள அவர்களோடு கொஞ்ச நேரம் அகதிகள் குறித்தும் அவர்களின் மனநிலை குறித்துமாய் விவாதித்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கே அமர்ந்து அகிலனின் வலைப்பூவிலிருந்த சில கவிதைகளையும், வேறு பல கட்டுரைகளை வாசித்தேன். நண்பர்களுக்கும் கூட சுட்டிகள் அனுப்பி வைத்தேன். அகிலனின் மொழி எனக்குப் பிடித்திருந்தது. அதில் அடர்த்தி, உண்மை, நேர்மை என எல்லாமும் இருந்தன. அவற்றை என்னால் உணர முடிந்தது. போர் தந்த வேதனையையும், அதன் கொடூரத்தையும் அகிலனின் எழுத்து மூலம் மேலும் விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆயிரம் இருந்தாலும் நாம் இங்கே பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு ஈழம் குறித்து கதைபப்வர்கள் தானே. பட்டவர்கள் சொல்லும்போதுதானே அதன் வலியும் வேதனையும் புரியும்? 

அதன் பின்னர் அவ்வபோது அகிலனின் வலைப்பூ பக்கம் செல்வதுண்டு. அவ்வளவே. அதற்குப்பிறகு மீண்டுமொரு முறை பேசினேன் என்று நினைக்கிறேன். எதற்கு என்று நினைவில்லை. கிட்டத்தட்ட ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை புத்தகச்சந்தையில் கருப்புப்பிரதிகள் ஸ்டாலில் இருந்தபோது பாரதிதம்பியோடு வந்த அந்தப் பையனை எங்கோ பார்த்தது போலிருந்தது. யோசித்துக்கொண்டே விட்டுவிட்டேன்

 அவன் என்னை நெருங்கி “கவின்மலரக்கா தானே நீங்க?” என்றான். 

 நான் “ஆமாம்! நீங்க?” என்றேன்.

 “நான் அகிலன்” என்றான். 

எனக்குப் புரியவில்லை. “எந்த அகிலன்?” என்றேன். “த.அகிலன். ஒருமுறை நீங்க போன் பண்ணினீங்களேக்கா?” என்றான்.

நான் அதிர்ந்துதான் போனேன். ஏனென்றால் அகிலன் எழுதுவதை வாசித்து கொஞ்சம் பெரியவராக கற்பனை செய்து வைத்திருந்தேன். என்னைவிட வயதில் மூத்தவராய்த்தான் அகிலன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியதோ தெரியவில்லை. அப்படி நினைத்துத்தான் கைபேசியிலும் பேசினேன். ஒரு பொடியனாக என்னை அக்கா என்று அழைக்கும் அளவிற்குச் சின்னப் பையன் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. முதன் முதலில் பார்த்தபோது இப்போதுள்ளதை விட இன்னும் ஒல்லியாக இருந்தான் அகிலன்.




அன்றிலிருந்து ஏனோ அகிலனை ரொம்பப் பிடித்துப்போனது. காரணம் தெரியாமல் சிலர் மீது நமக்கு அன்பு ஊற்றெடுக்கும். ஒரு காட்டுச்செடியாய் அது பாட்டுக்கு வளரும். சில நேரம் நாம் யார் மீது அன்பு செலுத்துகிறோமோ அவர்களுக்கே தெரியாது நம் அன்பின் அளவு. அப்ப்டியானதொரு அன்பும் பாசமும் அகிலன் மீதெனக்கு ஏறபட்டதற்கு இன்று வ்ரை காரணம் தெரியவில்லை. கூடப் பிறவாத சகோதரனாய் அவன் எனக்குத் தோன்றினான். ஒரு வேளை அவனுடைய துயரங்கள் என்னை அப்படி நினைக்கவைத்தனவோ என்னவோ?

’அக்கா’ என்ற சொல் ரொம்ப இனிமையாய்த் தோன்றியது அவன் அழைத்தபோதுதான். அதன்பின்னும் கூட நாங்கள் அதிகம் சந்தித்துக்கொள்ளவில்லை. அதிகம் சாட்டிலும், கைபேசியிலும் பேசுவோம். நடுவில் இலங்கை போனபோது பனைவெல்லம் வாங்கி வந்து தந்தான். ஒரே ஒருமுறை வீட்டிற்கு வந்திருக்கிறான். அன்றைக்கு நீலகண்டன், அமுதா, பாரதிதம்பி, அகிலன், லிவிங் ஸ்மைல் வித்யா என்று நண்பர்கள் அனைவரும் வந்து வீட்டில் ஒரு பொழுதை மீன்குழம்போடு உண்டு களித்தோம். அப்போது தன் வடலி பதிப்பக வெளியீட்டு நூலொன்றை எனக்கு பரிசளித்தான். எப்போதும் தன் குறித்து ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது “பாரதிதம்பி அண்ணா இதை உங்ககிட்ட சொல்லலையா?” என்று கேட்டுத்தான் ஆரம்பிக்கவேண்டும் என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறான்.

நான் ஒருமுறை கூட அவன் வீட்டிற்குப் போகும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவன் எனக்கு சமைத்து சாப்பாடு போடுவதாகச் சொல்லிக்கொண்டேயிருந்தான். 

“இரவில் கரையும் நிழல்கள்” -  என் முதல் கதை.  தலைப்பெல்லாம் வைககவில்லை அப்போதே எழுதி முடித்தவுடன் அவனுக்குத்தான் மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன். வாசித்துவிட்டு நெடுநேரம் பேசினான்.

 “உங்களுக்கு ஏன் என்னுடைய ‘வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு’ கட்டுரை பாதித்தது என்று இப்போது புரிகிறதக்கா.உங்கள் கதையில் உள்ளதுபோல நானும் இருந்திருக்கிறேன். உணர்ந்திருக்கிறேன்” என்றான். 

நான் அவனிடம் சொன்னேன் ”அந்த அனுபவம் உன் கட்டுரையை வாசித்ததற்கு பின்பு எனக்கு நிகழ்ந்தது அகிலன். எனவே உன் எழுத்து என்னை பாதித்ததற்கு உன் எழுத்து மட்டுமே காரணம். என் அனுபவம் அல்ல” என்றேன்.

“நம் இருவருக்கும் வீடு விஷயத்தில் ஒரே அனுபவம்” என்றான்.

நிச்சயமாக ஒன்றில்லை. ஒரு நாட்டின் குடியுரிமை பெற்று அந்த நாட்டின் ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், இன்ன்பிற இதியாதிக்கள் என்று எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு உள்நாட்டில், தெரிந்த் சூழலில் வீடில்லாமல் இருபப்தற்கும், யாருமேயில்லாமல், புதிய சூழலில், நாடு விட்டு நாடு வந்து வீடு கிடைக்காமல், இருக்க இடமின்றித் திரிவதற்கும் வேறுபாடுண்டு. அகிலன் போன்ற அகதிகளின் அவலத்தோடு ஒப்பிடுகையில் என் அனுபவம் கால்தூசு. போரில் இழந்த தன் தம்பியைக் குறித்த பதிவொன்றையும்,அம்மாவின் ஆர்மோனியப்பெட்டியும் (’நான் சங்கீத ரீச்சரிண்ட மகன்’ - இது அகிலன் அடிக்கடி சொல்லும் வாசகம்), வாசித்து கலங்கியிருக்கிறேன்.  புத்தர் பற்றிய குறிப்புகள் வாசித்தபோது அவன் எழுத்துக்கு விசிறியாகி இருந்தேன்.


மீண்டும் அகிலன் இலங்கைக்குப் போகும் நாள் வந்தது. இந்த முறை உங்களுக்கு செருப்பு வாங்கி வருகிறேன் என்று சொல்லிச் சென்றான். திரும்ப வரவில்லை. அப்ப்டியே கனடா பறந்துவிட்டான் தன் துணையைத் தேடி. 

துஷ்யந்தி - அங்கே அகிலனுக்காக காத்துக்கிடந்த அவன் காதலி.
அவளைத்.தேடி பறந்துவிட்டான். இருவரது இரவையும் பகலையும் ஒன்றாக்கிக்கொள்ள அவன் கனடா சென்றுவிட்டான்.

இன்று அவர்களுக்குத் திருமணம்.  போக இயலாது.. இங்கிருந்தே வாழ்த்திக்கொள்ள வேண்டியதுதான். புது வாழ்க்கையில் இன்றைக்கு அடியெடுத்துவைக்கும் அகிலனுக்கும் துஷிக்கும் அன்பான வாழ்த்துகளை அவர்களை இணைத்த இணையத்தின் மூலமே அனுப்பி வைக்கிறேன்.

அகிலனின் வரவுக்காக வடலி பதிப்பகத்தோடு சேர்த்து,  சில நண்பர்களும் காத்திருக்கிறோம்.

அகதியாய் வந்த அகிலன் தமிழ்நாட்டில் எத்தனை மனங்களை சம்பாதித்துவிட்டுச் சென்றிருக்கிறான்!  இனியொரு முறை “வீடெனப்படுவது பிரியம் சமைக்கிற கூடு” போன்றதொரு கட்டுரையை எழுதும் வாய்ப்பு அகிலனுக்கு இருக்காது .

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அகிலன் மீண்டும் துஷியோடு இங்கு வரக்கூடும். அப்போது அவனையும் துஷியையும் வரவேறக வீடொன்று காத்துக்கிடக்கிறது. 

அகிலன்! எப்பொது வரப்போகிறாய் உன் துணையுடன்?

பிரியம் சமைக்கிற இந்தக் கூடு உங்களிருவருக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறது அகிலன்! 



Thursday, February 10, 2011

பிம்பங்களின் பிடியில்


நேற்று யதேச்சையாய் பார்க்க நேர்ந்த ஒரு புகைப்படம் என்னை இப்போது வரை அலைக்கழித்து கலங்கடிக்கிறது. நடிகை சாவித்ரியின் இறுதிகாலத்தில் எடுக்கப்பட்ட படம் அது. அதிர்ந்து போனேன். கொஞ்சம் பருமனான உடல்வாகு கொண்டவராக மனதில் பதிந்திருந்த பிம்பதத்தை குலைத்துப்போட்டது அப்படம். கைகால்களெல்லாம் குச்சி குச்சியாக கன்னங்கள் ஒட்டிப்போய் சுயநினைவிழந்து படுக்கையில் கிடக்கிறார். அய்யோ! நெஞ்சு பதறியது. அருகில் ஜெமினி கணேசன் இன்னுமிருவர் இருக்கின்றனர் அப்படத்தில்.

இனி சாவித்ரி என்ற பெயரை நினைத்தால் எனக்கு பாசமலர் சாவித்ரியின் நினைவு வரப்போவதில்லை. இந்த சாவித்ரி தான் வருவார். அப்புகைப்படத்தை பார்க்காமலிருந்திருக்கலாம். அந்த முகம் மனக்கண்ணில் வந்து வந்து அதிர்ச்சியூட்டுகிறது.எல்லையில்லா வேதனை அடைந்தேன். நவராத்திரியில் சிவாஜியோடு நடித்த தெருக்கூத்து காட்சி முதல் பல காட்சிகள் மனக்கண்ணில் தோன்றி அலைக்கழித்தன.

மனிதர்கள் பிம்பங்களின் அடிமைகள் என்பது மீண்டும் எனக்கு நிரூபணமானது. பிம்பங்களுக்கு நேரும் ஒரு சிறு இடையூறைக் கூட மனம் தாங்கமாட்டேனென்கிறது. இந்த பிம்பங்கள் உடைபடும்போது அதனை தாங்கிக்கொள்வது அத்தனை எளிதாக இருப்பதில்லை. அதிலும் நாம் நேசிக்கும் சிலரது இயலாமையையோ அல்லது வேதனையையோ கண்கொண்டு காணச் சகியா மனநிலையில் வாழ்கிறோம். இது அநேகமாக அனைவருக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. 

இதனாலேயே இன்றைக்கு டி.எம்.சவுந்தர்ராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி போன்ற நான் மிகவும் நேசிக்கும் கலைஞர்கள் தங்கள் பாட்டையே மிகச் சிரமப்பட்டு பாடும்போது மனம் கனத்துபோகிறது. அய்யோ! இவர்கள் பாடாமல் இருக்கலாமே என்று மனம் அங்கலாய்க்கும். ஆனால் அவர்கள் ஒருபோதும் பாடாமல் இருப்பதில்லை. பாடகருக்கு பாடாமல் இருப்பது சிரமமே. இயலாவிடினும் இரண்டு வரியாவது பாடினால்தான் ஆத்ம திருப்தி அவர்களுக்கு. அது உயிரின் வாதை. இசை ரசிகர்களுக்கோ வேதனையின் உச்சம்.

உயிர்மையில் மலேசியா வாசுதேவன் குறித்து ஷாஜி எழுதிய கட்டுரையை( http://musicshaji.blogspot.com/2010/08/blog-post_16.html) வாசித்துமுடித்தபோது தாரைதாரையாய் கண்ணில் நீர் வழிந்து கொண்டிருந்தது எனக்கு. இனி மலேசியா வாசுதேவனால் ஒரு வரி கூட பாட முடியாது என்கிற உண்மையை மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. அவரும் மனிதர் தான். அவருக்கும் நோய் வரும். இப்படியான சிக்க்லகள் வரலாம் என்றெல்லாம் ஒப்புக்கொள்ள மறுக்கும் அறிவை எந்தக் குப்பைக்கூடையில் தூக்கியெறிய? இந்தக் கட்டுரையை வாசித்தவர்களெல்லோரும் ஒரு சொட்டு கண்ணீராவது விட்டதைக் கண்டேன்.

விஜய், ரஜினி போன்றவர்கள் மசாலா தவிர வேறு படங்களில் தங்களுக்கிருக்கும் இமேஜை மீறி வித்தியாசமாக நடித்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கும் சராசரி ரசிக மனநிலையில் இருக்கிறோமோ என்கிற சந்தேகம் வந்ததெனக்கு. ஆனால் யோசித்ததில் அப்படி ஒப்பிடுவது தவறென்று படுகிறது.

பிம்பங்களுக்கு மனிதர்கள் ஆட்பட்டிருந்தாலும், சாவித்ரி விஷயத்திலோ, மலேசியா வாசுதேவன் விஷயத்திலோ ஒப்புக்கொள்ள மறுத்து வேதனைப்படுகிறோம் என்பது அக்கலைஞர்களின் கலையை நாம் எந்தளவு நேசித்தோம் என்பதன் வெளிப்பாடு.  தான் நேசிக்கும் கலைஞர்களுக்கு ஒன்று என்றால் துடித்துப்போவது வெறும் ரசிக மனநிலை என்று புறந்தள்ள முடியவில்லை. அதன் பின்னால அடிநாதமாய் இயங்கிக்கொண்டிருப்பது மனிதநேயம். ஆம்! மனிதநேயம்தான். அது நமக்குப் பிடித்த கலைஞர்களாகவோ அல்லது வேறு யாராகவோ இருக்கையில் இன்னும் கூடுதலாய் வேதனைப்படுகிறோம்.

பிம்பங்களின் பிடியிலிருந்தாலும் மனிதநேயத்தில் தானே இயங்குகிறது இவ்வுலகம்!

Wednesday, February 02, 2011

பத்திரிகைத்துறைக்கு வருவதற்கு முன்னும் பின்னும்


நான் சாஃப்ட்வேர் துறையில் இருந்தபோது என்னோடு கூட பணியாற்றிய ஒருவருடன் இன்று இணையம் மூலம் பேசினேன். அவரோடு உரையாடுகையில் தான் உணர்ந்தேன். நான் முன்பு வாழ்ந்த வாழ்க்கைக்கும், இப்போது வாழும் வாழ்க்கைக்குமான வேறுபாடு.

அப்போது எனக்கு ஊதியம் அதிகம். இப்போது பெறுவதை விட சரியாய் இரண்டு மடங்கு. அதையும் கூட சேமித்ததில்லை. குறுந்தகடு வெளியிடுவது, பதிப்பகம் வைத்து நூல்கள் வெளியிடுவது என்று செலவு செய்து வாழ்ந்த வாழ்க்கை அது.  ”வியர்வையின் குரல்” என்கிற புதுகை பூபாளம் கலைக்குழுவின் இசைப்பேழைக்காக மட்டும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவானது. இப்போது அப்படியான வெளியீட்டு முயற்சிகளையோ, பதிப்பக முயற்சிகளையோ நினைத்துக்கூட பார்க்க முடியாது. அப்போது இரண்டு அறைகள, ஒரு கூடம், சமையலறை கொண்ட இப்போதுள்ளதை விட கொஞ்சம் பெரிய வீடு..நண்பர்கள் புடைசூழ எப்போதும் நிறைந்திருக்கும் வீடு. வெளியூர்களிலிருந்து வரும் இயக்கத்தோழர்கள் பலர் எங்கள் வீட்டில் தான் தங்குவார்கள். எல்லோரும் எந்த விகல்பமுமின்றி ஒன்றாக வாழ்ந்த வீடு அது. ஆதம்பாக்கத்தில் இருந்தோம் அப்போது. நான் அப்போது Web programmer ஆக இருந்ததால் உருப்படியாக இரண்டு விஷயங்கள் செய்தேன். தமுஎகசவிற்கென்றும் தீக்கதிர் நாளிதழுக்கென்றும் தனியாக இரண்டு இணையதளங்கள் வேண்டுமென்பது என் நெடுநாளைய கனவாய் இருந்தது.

சண்முகராஜ் வேண்டிய இமேஜ்கள் எல்லாவற்றையும் செய்து தர நான் இணையதளத்தை டிசைன் செய்தேன். தமுஎகச இணையதளம் எப்படி அமையவேண்டும் என்பதை ஒரு நாள் இரவு
ச. தமிழ்ச்செல்வன், நண்பர் ரமேஷ் (கீற்று) , நான், சண்முகராஜ் நால்வரும் அமர்ந்து எங்கள் வீட்டில் இரவு முழுவதும் பேசிப் பேசி.. பேச்சு பின்னர் பொதுவான அரசியல், பண்பாட்டுத்தளத்திற்குச் சென்று....மூன்றரை மணிக்கே தூங்கினோம்.  மென்பொருள்துறையில் இருந்துகொண்டு சமூகம் பற்றி சிந்திப்பவர்கள் மிகக்குறைவு. அது முடிஞ்சவன் பொழைச்சுக்கோ என்கிற கொள்கை உள்ள ஒரு துறை. அதில் ரமேஷ் வித்தியாமானவராய் நின்றார். சிற்றிதழ்களை வாங்கி கீற்று.காமில் இலவசமாக வெளியிட்டார். அப்போது நான் என்னைப் போல் ஒருவரைப் பார்த்தேனென்றால் அது ரமேஷ் ஒருவராகவே இருந்தார். இன்றைக்கு நிறைய இளைஞர்கள் ஐ.டி. துறையிலிருந்து பல்வேறு இயக்கங்களில் செயல்படுவதைப் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது.

சரி. அதிருக்கட்டும். விஷ்யத்திற்கு வருகிறேன். தமுஎகசவின் இணையதளத்தை உருவாக்கி முடித்துவிட்டு திருவண்ணாமலை தமுஎகச மாநாட்டில் அறிவித்தோம். மிக சந்தோஷமான தருணமது. தோழர் தமிழ்ச்செல்வன் என்னையும் சண்முகராஜையும் மேடைக்கு அழைத்து இணையதளம் உருவாகியிருப்பதை அறிவித்தார்.  முதன்முதலில் “மகளே” என்று அப்போது என்னை அழைத்தார் தமிழ்ச்செல்வன். இன்றளவும் என்னை கலவையான உணர்வுகளுக்குள் ஆழ்த்தும் ஒற்றைச்சொல்லாக அந்த “மகளே” உள்ளது.  அப்போது ரமேஷும் மாநாட்டுக்கு வந்திருந்தார். அவருக்குத் திருமணமாகவில்லை அப்போது. அதன்பின்னர் ரமேஷின் திருமணம் நடந்தது. அவருடைய திருமணத்தில் திருவுடையானும் நானும் இயக்கப்பாடல்கள் கொண்ட கச்சேரி பாடினோம். இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது ரமேஷ் - பிரியா தம்பி திருமணம். சீமான், சுபவீ, ஜெயபாஸ்கரன், ஞானி உள்ளிட்ட பலரும் வந்து வாழ்த்தினார்கள். .

அதன்பின்னர் தீக்கதிருக்கான இணையதளத்தை உருவாக்குவதில் மும்முரமானேன். இன்றைக்கு தீக்கதிர் இணையதளம் ஒரு நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டாலும், அதன் முதல் முயற்சியும், முதல் இணையதளம் நான் தான் உருவாக்கினேன் என்பதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியும் திருப்தியும். இதிலும் சண்முகராஜின் உழைப்பு பெரும் பங்கு வகித்தது. எனக்கு போட்டோஷாப், பிளாஷ் வகையறாவெல்லாம் எதுவும் தெரியாது. சண்முகராஜ் தான் இதையெல்லாம் செய்து கொடுத்தது. இருவரும் இணைந்து செய்த முயற்சியால் தீக்கதிர் இணையதளம் உருவானது. அன்றைய சி.பி.எம். மாநிலச் செய்லாளர் என்.வரதராஜன் இணையதளத்தை துவங்கி வைத்தார். அது மற்றொரு சந்தோஷமான தருணம்.

இந்த வேலையெல்லாம் செய்துகொண்டிருந்தாலும் இடையிடையே தீக்கதிர் நாளிதழுக்காக தோழர் குமரேசனும் தோழர் மயிலைபாலுவும் அவ்வபோது அளிக்கும் அசைன்மெண்டுகளை என் விடுமுறை நாட்களில் செய்வேன். எனக்கு இந்த வேலை பிடித்திருந்தது. ரொம்பப் பிடித்திருந்தது. பேசாமல் வேலையை விட்டுவிட்டு பத்திரிகைத்துறைக்குச் சென்றாலென்ன என்று தோன்றியது. அதற்கு முக்கிய காரணம் தோழர் அ.குமரேசன் கொடுத்த ஊக்கம்தான். மனம் ஒரு குரங்குதானே. இடையில் ஒரு முறை தமுஎகசவின் பயிற்சி முகாம் ஒன்று காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் நடந்தது. அம்முகாமிற்கு வந்த பேராசிரியர் ச. மாடசாமியின் பேச்சில் லயித்துப்போன நான் அன்று பூராவும் டீச்சராக வேண்டும் என்று..அதிலும் குழந்தைகளுக்கு டீச்சராக வேண்டுமென்றும் கனவு காண ஆரம்பித்தேன்.

அப்போதுதான் தோன்றியது ...நான் ஏன் அந்த வேலை செய்யவேண்டும்..இந்த வேலை செய்ய வேண்டுமென்று குரங்கு போல தாவித்தாவி யோசிக்கிறேன் என்று சிந்தித்தேன். என் இயல்புக்கு கொஞ்சம் கூட பொருந்தாத ஒரு மென்பொருள் வல்லுனராய நான் வேலை பார்ப்பதைவிட கலையோடு தொடர்புடையை, இலக்கியத்தோடு தொடர்புடைய், மக்களோடு தொடர்புடைய ஏதாவதொரு பணியை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமே என்று நினைத்தேன். ஆனால் பெரும் ஊதியம் வாங்கும் நான் அதை விட்டுவிட்டு வந்தால் என்னை உலகம் என்னை பைத்தியம் என்று தான் சொல்லும். அதனால் சமயம் பார்த்துப் பொறுத்திருந்தேன்.

அந்தச் சமயமும் வந்தது உலகப் பொருளாதார நெருக்கடி (Recession).எங்கள் கம்பெனியில் சேர்ந்து 6 மாதத்தில் கன்பர்ம் பண்னுவார்கள். கன்பர்ம் பண்ணியவர்களை வேலையை விட்டுத்தூக்குவதில் நடைமுறை சிக்கலிருந்ததால், சேர்ந்து ஆறுமாதங்கள் ஆகாதவர்களை முதலில் வேலையை விட்டு அனுப்பினாரக்ள். அதில் நம்ம வேலையும் காலி. துயரமும் கவலையும் வருவதற்கு பதில் சந்தோஷமும் நிம்மதியும் வந்தது. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்கிற கேள்வி இருந்தாலும் கூட எனக்குப் பிடித்தமான மீடியா துறையில் செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பு என்று தோன்றியது. வந்துவிட்டேன்.

அதைவிட இதில் சம்பளம் குறைவுதான். ஆனால் ஒரு கேபினுக்குள் அமர்ந்துகொண்டு யாருக்காகவோ டாட் நெட்டையும், ஏ.எஸ்.பி.யையும், ஜாவாஸ்கிரிப்டையும் படிக்க வேண்டியதில்லை. கூகுள் சர்ச் போக வேண்டியதில்லை. மூளையை யாருக்கோ வாடகைக்கு விடவேண்டியதில்லை என்று குதூகலித்தது மனம். பெரும் விடுதலை கிட்டிய உணர்வெனக்கு.

இதோ.. இன்று நான் ஒரு பத்திரிகையாளர். அதே சிஸ்டம், அதே கேபின், அதே கூகுள்.. ஆனால் தேடுபொருள் வேறு. Product வேறு. என் product ஐ பயன்படுத்தப்போவது யாரென்றே தெரியாத நிலையில்லை. என் சாஃப்ட்வேர் துறையில் மக்களுக்காக, இயக்கத்துக்காக என்று செய்ய நினைத்ததை செய்ய எனக்கு பெரும்பொருள் தேவைப்பட்டது. அது இணையதள உருவாக்கமாக இருந்தாலும் சரி..பதிப்பகம் வைத்து நூல்கள், சி.டி.க்கள் போடுவதாக இருந்தாலும் சரி. இப்போது என்னிடம் அத்தனை பணமில்லை. ஆனால் அப்போதிருந்ததை விட இப்போது இன்னும் அதிகமான மக்களைச் சென்று சேர்வதாய் உணர்கிறேன்.

சாஃப்ட்வேரில் ஒவ்வொரு பாராட்டும் பணமாக உருமாறும். ஒவ்வொரு இடித்துரைப்பும் பணிமீதான மிரட்டலாக ஒலிக்கும். ஆனால் பத்திரிகைத்துறையில் ஒவ்வொரு பாராட்டும் என் முடிவு சரிதானென்று எனக்குக் கூறிக்கொண்டேயிருக்கின்றது. ஒவ்வொரு இடித்துரைப்பும் என்னை மென்மேலும் வளர்த்துக்கொள்ள உதவுகின்றது. 

முகம் தெரியாத வாசகர்கள் நம் எழுத்தைப் பார்த்து எழுதும் கடிதங்க்ளிலும், தொலைபேசியிலும் மின்னஞ்சல்களிலும் கூறும் வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது எனக்கான தேடலும் வெளியும்.

என் வேலையைப் பறித்த உலகப் பொருளாதார நெருக்கடிக்கு நன்றி!
Thank you Recession!