Wednesday, June 29, 2011

வகுப்பறை வன்முறை நீங்குமா?






ம் பக்கத்து மாநிலமான கேரளத்தில், பள்ளி மாணவர்களுக்கான வினாத்தாளில் 'கேரளத்தின் நெற்களஞ்சியம்’ என்று அழைக்கப்படும் பாலக்காட்டின் வரைபடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாவட்டத்தில் உள்ள ஓடைகள், வயல்கள், நதிகள் என்று அனைத்து விவரங்களும் அந்த வரைபடத்தில் இருக்கின்றன. தேர்வில், 'கேரளத்தின் நெற்களஞ்சியம் என்று பாலக்காடு அழைக்கப்படுவதற்கான மூன்று காரணங்களை மேற்கண்ட வரைபடத்தில் இருந்து கண்டு அறிந்து எழுதவும்!’ என்பது கேள்வி. இந்தக் கேள்விக்கு விடையைப் பாடப் புத்தகத்தில் இருந்து மாணவர்களால் எழுத முடியாது. சொந்தமாக யோசித்துதான் எழுத வேண்டும்.


இப்படி ஒரு வேறுபட்ட கல்விமுறையை நோக்கி நம் பக்கத்து மாநிலமான கேரளம் நகர்ந்துகொண்டு இருக்க, தமிழகமோ இன்னமும் முதற்படியில்கூட ஏறாமல் நிற்கிறது. சமச்சீர் கல்விக்கான முதல் படியாக அனைத்து மாணவர்களுக்குமான பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடந்த முயற்சிக்கு, புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் அ.தி.மு.க. அரசு, முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது. சமச்சீர் கல்விக்கான சட்டத் திருத்த மசோதாவும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், சமச்சீர் கல்வி கூட்டு நடவடிக்கைக் குழு ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தி, அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. தீர்மானத்தில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, எஸ்.எஸ்.ராஜகோபாலன், அ.மார்க்ஸ், பேராசிரியர் கல்யாணி, பேராசிரியர் திருமாவளவன், பா.செயப்பிரகாசம், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் கையெழுத்திட்டு உள்ளனர். ஆனால், அரசு இதுபற்றி எல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தனது முடிவில் உறுதியாக நிற்கிறது!

அரசு முடக்கியுள்ள பொதுப் பாடத்திட்டப் பாட நூல்கள் நான்கு கட்டங்களைத் தாண்டி வெளியிடப்பட்டன என்பதை நினைவு படுத்திக்கொள்வது நல்லது.

1.தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககத்தில் நூற்றுக்கணக்கான வல்லுநர்கள் ஊதியம், பிரதிபலன்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இரவு பகலாக உழைத்து உருவாக்கிய பாடத் திட்டம் இது. ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக்,  ஓரியன்டல், அரசுப் பள்ளிகள் என  நான்கு வகையான பாடத்திட்டங்களையும் ஆய்வுசெய்து, அவற்றை மத்திய பாடத் திட்டத்தோடு ஒப்பிட்டு, 'தேசியக் கல்வித் திட்டம் 2005’-ன் வழிகாட்டுதலின்படி, ஒரு வரைவுப் பாடத்திட்டத்தை உருவாக்கி வலை தளத்தில் வெளியிட்டனர்.

2. கல்வியாளர்களும், கல்விசார் அமைப்புகளும் இணைந்து பாடத்திட்டத்தின் மீதான, விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். அவர்களின் ஆலோசனைகளையும் கணக்கில்கொண்டே பொதுப் பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டது.


3. பள்ளிக் கல்வித் துறையின் உயர் அதிகாரிகளையும் கல்வியாளர்களையும் 
4 வகை பள்ளிகளின் ஆசிரியர் பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாகக்கொண்ட பொதுக்கல்வி வாரியத்தால், பாடத்திட்டம் மீண்டும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டே ஏற்பு அளிக்கப்பட்டது.

4. இறுதி செய்யப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களையும் கல்வியாளர்களையும் கொண்ட குழுவால் பாடநூல்கள் எழுதப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வெளியிடப் பட்டன.

இந்நிலையில், தமிழ்நாட்டின் கல்வித் துறையை மீண்டும் பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியாகவே பாட நூல்கள் முடக்கத்தைப் பார்க்கிறார்கள் கல்வியாளர்கள். இத்தனை வல்லுநர்கள் சேர்ந்து உருவாக்கிய பாடநூல்களைத் திரும்பப் பெறும் முடிவை எடுப்பதற்கு முன் கல்வியாளர்கள் யாரையும் அரசு கலந்தாலோசிக்கவில்லை என்பது முக்கியமான குற்றச்சாட்டு.

பாடநூல்கள் தரமானதாக இல்லை என்கிறது அரசு. தரத்தை நிர்ணயம் செய்வது யார் என்பதே இப்போதைய கேள்வி. கல்வியாளர்களும் வல்லுநர்களும்கொண்ட குழுவா? அல்லது அமைச்சரவையா? தரத்தை யார் நிர்ணயிப்பது?

தடைக்குக் காரணம் எதுவாக இருந்தாலும், இனி இந்த ஆண்டு இந்தப் பாடத்திட்டம் கிடையாது என்றாகிவிட்ட நிலையில், இனி என்ன செய்வது? இந்த இடைவெளியைப் பயன்படுத்தி கல்விமுறையிலேயே மாற்றம் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால், குறைந்தபட்சம் இந்த இடை வெளியைப் பயன்படுத்திக்கொண்ட ஆறுதலாவது மக்களுக்குக் கிடைக்கும்.

அடிப்படை மொழி, கணிதம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வது குழந்தைகளுக்குப் பெரிய சவாலாக உள்ளதாகக் கூறுகிறது 'அஸர் 2010’ அறிக்கை (Annual Status of Education Report) கூறுகிறது. இந்திய அளவில் கேரளத்துக்கு அடுத்தபடியாகக் கல்வியில் இரண்டாம் இடம் பெற்றிருக்கிறது தமிழ்நாடு என்று நாம் பெருமைப்பட்டுக்கொண்டு இருக்க, அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 69% பேர் இரண்டாம் வகுப்புப் பாடத்தை வாசிக்கவே சிரமப்படுகின்றனர் என்கிறது இந்த அறிக்கை!

இந்த நிலைக்கு காரணம் வகுப்பறை, பிள்ளைகளின் தண்டனைக் கூடமாக இருப்பதே! இதனை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல அழுது அடம் பிடிப்பதைத் தானே பார்க்க முடிகிறது? குழந்தைகளுக்கும் உரிமைகள் உண்டு என்பதை நாம் மறந்து விடுகிறோம். பிரம்போடு வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்களே அதிகம் இருக்கின்றனர். நாமக்கல்-ராசிபுரம் பகுதிகளில் உள்ள பல பள்ளிகளில் நல்ல தேர்ச்சி வேண்டும் என்பதற்காகவே, மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்துபோனால் கொடுக்கப்படும் தண்டனை கள் மனித உரிமை மீறலாக இருப்பதாகக் குற்றச்சாட்டு உண்டு. இத்தகைய தண்டனைகள் ஐ.நா. சபை வெளியிட்ட சித்ரவதைத் தடுப்புப் பிரகடனத்துக்கு எதிரானது. இந்தப் பள்ளிகளைக் கண்காணிக்க மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள்கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டியது அவசியம். மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் குறித்து எந்நேரமும் இந்தக் குழுவிடம் புகார் தெரிவிக் கலாம் என்கிற நிலை இருக்க வேண்டும். புகார்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

தேர்ச்சி விகிதத்தை வைத்து ஒரு பள்ளியின் தரத்தை நிர்ணயம் செய்யும் முறை மாற வேண்டும். ஏனெனில், மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே இங்கே வகுப்பறை வன்முறைகள் நடக்கின்றன. வகுப்பறை என்பது இங்கே அதிகாரத்தின் குறியீடாக இருக்கிறது. கேள்வி கேட்கும் குழந்தையை ஒழுங்கீன முத்திரை குத்தி ஒதுக்கும் போக்கு இருப்பதை மாற்றியாக வேண்டும். கல்வி கற்பது என்பது ஓர் இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் செயல் படுத்தப்பட்டு இருக்கும் செயல்வழிக் கற்றல் முறை குறிப்பிட்ட அளவுக்கு இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறதுஎன்றே சொல்ல வேண்டும். ஆசிரியர் - மாணவர் உறவுமுறை இறுக்கம் தளர்ந்து இருப்பதை ஓரளவுக்குக் காண முடிகிறது. ஆனால், உயர்நிலைப் பள்ளி அளவில் மீண்டும் பிரம்பு முறை கல்வியே ஆள்கிறது. விளையாட்டு முறையில் குழந்தைகள் கல்வி கற்பதுதான் அவர்களைச் சிறந்த அறிவாளிகளாக்கும் என்று அறிவியல் சொல்கிறது. மெக்காலே கல்வி முறையைப் பின்பற்றும் நம் பள்ளிகளோ அவர்களை ஒரு மனப்பாடம் செய்யும் எந்திர மாகவே மாற்றிவைத்திருக்கிறது. புரிந்து கொண்டு எழுதும் மாணவனுக்குக் கிடைப் பதைவிட, மனப்பாடம் செய்து புத்தகத்தில் உள்ளதை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வைக்கும் மாணவர்களுக்குத்தான் அதிக மதிப்பெண் கிடைக்கிறது. வினாத்தாள்கள் முதலில் கேரளத்தை முன் மாதிரியாகக் கொண்டு மாற்றப்பட வேண்டும். வழக்கமான ஒரு மதிப்பெண் கேள்வி, சுருக்கி எழுதுக, விரித்து எழுதுக என்று புளித்துப்போன வினாத்தாள் முறையை நீக்கிவிட்டு, கல்வி யாளர்களின் ஆலோசனைகளையும் உலக அளவில் உள்ள முன் மாதிரிகளையும் அடிப் படையாகக் கொண்டு ஒவ்வொரு பாடத்துக்கும் மாதிரி வினாத்தாள் தயாரிக்கப்பட வேண்டும். இதற்கென்றும் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். இதைச் செய்தால் நம் பிள்ளைகளை இந்த மனப்பாடக் கல்வி முறையில் இருந்து காப்பாற்றலாம். ஆனால், அரசியலுக்கு அப்பாற்பட்ட குழுவாக இந்தக் குழுக்கள் இருத்தல் அவசியம்.


பொருளாதார அடிப்படையில் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காகவே காமராஜர் சீருடைத் திட்டத்தை மாணவர்களுக்குக் கொண்டுவந்தார். இது சீருடையில் மட்டும்அல்லாது, பாடத்திட்டம், பள்ளியின் கட்ட மைப்பு வசதிகள் போன்ற அனைத்து விஷயங் களிலும் செயல்படுத்தப்படும் நிலைமை வந்தால் தான் சமச்சீர் கல்வி முழுமை பெறும்.. தமிழகம் என்றைக்கு இந்த நிலையை எட்டும்?


20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதே உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆசிரியர்-மாணவர் விகிதம். இங்கேயோ 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பது அனுமதிக்கப்பட்ட விகிதம். ஆனால், 70 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதே உண்மை நிலை. ஓராசிரியர் பள்ளிக்கூடங்கள் இன்னும் இருக்கின்றன. தங்கள் பிள்ளைகள் இந்த நொடி பள்ளியில் எந்த மூலையில் இருக்கிறார்கள் என்று பெற்றோர் கண்டறிந்து கொள்ளும் வகையில் மிக நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் பள்ளிகள் இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் உண்டு. இந்தச் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய அரசு என்ன செய்யப்போகிறது?

இப்படி விடை தெரியாத பல கேள்விகள் இருக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளுக்குக் கல்வியாளர்களுக்கும் கல்வியில் அக்கறை கொண்டோருக்கும் கடும் பணி காத்திருக்கிறது!

நன்றி: ஆனந்த விகடன்

Tuesday, June 28, 2011

"குழந்தைகளுக்காக எழுதுவது ஒரு சவால்!"

படம்: ஜெ.முருகன்

இரா.நடராசன் - தனக்கு அடையாளமாகவே ஆகிவிட்ட 'ஆயிஷா’ குறுநாவலின் ஆசிரியர். ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது 'ஆயிஷா’. நிறைய பேருக்கு 'ஆயிஷா நடராசன்’ என்று சொன்னால்தான் தெரியும். கவிஞர், சிறுகதைஆசிரியர், புதிய புத்தகங்களின் வரவையும் தரத்தையும் சொல்லும் 'புதிய புத்தகம் பேசுது’ இதழின் ஆசிரியர் என்று பல முகங்கள் இருந்தாலும், அவருடைய பணி ஆசிரியப் பணி! பள்ளித் தலைமை ஆசிரியரான நடராசன், குழந்தைகளின் மீதும் குழந்தைகளுக்கான கல்வியின் மீதும் தீராக் காதல்கொண்டவர். அவருடன் உரையாடியதில் இருந்து...

''எழுத்து ஆர்வம் எப்படி ஏற்பட்டது?'

''கரூர் என்னுடைய சொந்த ஊர். என் தந்தை ஒரு நேர்மையான அரசு அதிகாரி. அப்படிப்பட்ட ஒருவரை எப்படி ஒரே இடத்தில் நிரந்தரமாக வைத்திருக்கும் அரசு? அடிக்கடி மாற்றல் செய்வார்கள். அதனால், வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பள்ளிகளில்தான் படித்தேன். தமிழ் வழி, ஆங்கில வழி என்று நகரங்களிலும் கிராமங்களிலும் மாறி மாறிப் படித்தேன். அதனால், நிறைய மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிறு வயதிலேயே 'அம்புலிமாமா’, 'கோகுலம்’ என்றுதான் என் வாசிப்பு தொடங்கியது. பாடப் புத்தகங்களைவிட இவற்றைப் படிப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. இப்படித் தொடங்கிய என் வாசிப்பு, பின்னர் படிப்படியாக விரிவடைந்தது. அவ்வப்போது கவிதைகள் எழுதத் தொடங்கினேன். என் முதல் கவிதை 1976-ல் ஆனந்த விகடனில் வெளிவந்தது. பிறகு, கவிதைகளாக எழுதிக்கொண்டு இருந்தேன். அதன் பின் சிறுகதைகள் எழுதினேன். நான் பி.யூ.சி. பயிலும்போது, இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்தேன். வெங்கடேஷ் ஆத்ரேயா போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது. மார்க்சியம் என்னை ஆட்கொண்டது. நான் முதலில் தீவிர இலக்கியத் தளத்தில்தான் இயங்கத் தொடங்கினேன். 'பாலிதீன் பைகள்’ என்ற என்னுடைய படைப்பு திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் விருது பெற்றது!''



''குழந்தை இலக்கியத்தில் எப்படி உங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டது?''  



''25 ஆண்டுகளாக லட்சக் கணக்கான குழந்தைகளைச் சந்தித்து இருக்கிறேன். சினிமா பார்க்கும் பழக்கத்தை ஒரு பெரிய குற்றச்சாட்டாகக் கூறும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கான நூல்களும்கூட நீதிநெறிக் கதைகள், நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது எப்படி, தீய பழக்கவழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது எப்படி என்பதோடு நிறுத்திக்கொள்கின்றன. இந்தச் சூழலில் குழந்தைகளுக்காகப் புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுவது ஒரு சவால்தான்! 'ஆயிஷா’வை 'ஸ்நேகா பதிப்பகம்’ 40,000 பிரதிகள் அச்சடித்து விற்றது. நிறைய ஆசிரியர் அமைப்புகள், குழந்தை உரிமைகள் தொடர்பான அமைப்புகள் எல்லாம் வரவேற்றன. அப்போதுதான் குழந்தை இலக்கியத்தில் இருக்கக்கூடிய வெற்றிடத்தை உணர்ந்தேன். அதனால், தீவிர இலக்கியத்தில் என்னுடைய பணியாக மொழியாக்கம் மட்டுமே செய்வது என்றும் குழந்தை இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபடுவது என்றும் முடிவு செய்தேன்!''

''இன்றைய பதிப்பு உலகில் குழந்தை இலக்கியத்துக்கு எந்த அளவுக்கு இடம் தரப்படுகிறது?''

''பஞ்ச தந்திரக் கதைகள், அரபிக் கதைகள், அறிவியல் - தொழில்நுட்பம், பொது அறிவு சார்ந்த புத்தகங்கள் நிறைய விற்பனை ஆகின்றன. ஒரு ஐஸ்க்ரீம் அல்லது கோக் கேட்டால் உடனே வாங்கித் தரும் பெற்றோரின் உள்ளம் குழந்தைக்குப் புத்தகம் வாங்கித் தர வேண்டும் என்றால் மட்டும் கொஞ்சம் யோசிக்கிறது. இதன் காரணமாகவே குழந்தைகளுக்கான நூல்களின் விற்பனையில் மந்தநிலை இருக்கிறது. அதனால், குழந்தை எழுத்தாளர்களுக்கு அங்கீகாரமும் கிடைப்பதில்லை. ஒரு சோதனை முயற்சியாகவே குழந்தை இலக்கிய எழுத்தாளர்கள் எழுத வேண்டி இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு, தான் ஒரு குழந்தை என்கிற நினைப்பு ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும்போதே மாறிவிடுவதால் மிகக் குறுகிய காலமே ஒரு குழந்தை தனக்கான நூல்களை வாசிக்கிறது. அதன் பின் மனநிலை மாறிவிடும். ஆகவே, குழந்தை இலக்கியத்துக்கான சந்தை என்பது மிகக் குறுகியதாக இருக்கிறது. இந்தச் சூழலிலும் யூமா வாசுகி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் பாராட்டத் தக்க வகையில் குழந்தை இலக்கியம் படைக்கிறார்கள்!''



''ஆயிஷா உருவான கதையைச் சொல்கிறீர்களா?''

''என்னிடம் பயின்ற முஸ்லிம் மாணவன் ஒருவன்தான் 'ஆயிஷா’வுக்கான உந்துதலாக இருந்தான். மாணவனைக் கதையில் மாணவி என்று மட்டும் மாற்றிக்கொண்டேன். வகுப்பறை என்பது குழந்தைகளுக்கு ஒரு வெறுக்கத்தக்க இடமாக இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். ஒரு கடையில் ஒரு பொருள் வாங்கும் நுகர்வோருக்கு அந்தப் பொருளில் திருப்தி இல்லை எனில் நீதிமன்றத்துக்குப் போகலாம். ஆனால், நம் சட்டமும் சமூகமும் கல்வி பயிலும் மாணவர்களை நுகர்வோராகப் பார்ப்பது இல்லை. அவர்களுக்கு உகந்த கல்வி இல்லை எனில், அவர்கள் ஆட்சேபிக்கும் உரிமைகூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஆசிரியர் நினைப்பதுபோல் எல்லாம் மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டும் இங்கே! கேள்வி கேட்கக் கூடாது. குழந்தைகள் ஆசிரியர்களிடம் வாதாடக் கூடாது. இந்தக் கொடுமைகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்கும் இதே சமூகத்தில்தான் திண்டிவனம் அருகே ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச் சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தைத் தழுவினான். இதை வைத்து 'ஆயிஷா’வை எழுதினேன். 1985-ம் ஆண்டே 'ஆயிஷா’ எழுதப்பட்டுவிட்டது என்றால் நம்புவீர்களா? அனுப்பிய இடங்களில் எல்லாம் கதை திரும்பி வந்தது. 'ஆயிஷா’ சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது நம் சமூகத்தில் இல்லை. குழந்தைகளுக்கு நம் கல்விமுறையில் அளிக்கப்படும் தண்டனைகளில் ஒரு தவறும் இல்லை என்றேதான் நினைத்துஇருந்தது சமூகம். 10 ஆண்டுகள் விடாமல் முயன்றேன். பின்னர், 1995-ல் 'கணையாழி’ குறுநாவல் போட்டியில் இரா.முருகன், சுஜாதா இருவரும் நடுவராக இருந்து 'ஆயிஷா’வைத் தேர்ந்தெடுத்தார்கள்.''

''நீங்கள் நிறைய அறிவியல் புனைகதைகள் எழுதுகிறீர்கள். தமிழில் இந்த வகையான நூல்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது?''

''தமிழில் ஓரளவு நன்றாகவே இருக்கிறது. 'பூஜ்யமாம் ஆண்டு’, 'சர்க்கஸ்.காம்’, 'மலர் அல்ஜீப்ரா’ போன்ற என்னுடைய நூல்கள் நல்ல விற்பனையில் இருக்கின்றன. என்னுடைய 'பூஜ்யமாம் ஆண்டு’  என்கிற புத்தகம் பார்வை இழந்த குழந்தைகளும் படிக்கும் வண்ணம் ப்ரெயில் முறையிலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. சுஜாதாதான் அறிவியல் புனைகதைகளின் முன்னோடி என்று சொல்லலாம். தமிழில் 'எந்திரன்’ போன்றதொரு சினிமா வருவதற்குக்கூட அறிவியல் புனைகதைகளுக்குக் கிடைத்த வெற்றியைக் காரணமாகச் சொல்லலாம்!''

''தமிழ்ப் பதிப்புலகத்தின் தற்போதைய நிலை குறித்து?''

''தமிழ்ப் பதிப்புலகின் பொற்காலம் இது என்று சொல்லலாம். தொலைக்காட்சி, சினிமா என்று மற்ற ஊடகங்களின் தாக்கத்தை எல்லாம் கடந்து, ஒரு மாதத்துக்கு சராசரியாக 1,000 புத்தகங்கள் வெளிவருகின்றன.  நல்வழிப்படுத்துவது எப்படி, பணம் சம்பாதிப்பது எப்படி போன்ற மத்தியத்தர வர்க்கத்துக்குரிய புத்தகங்கள், பெண்களுக்கான சமையல், சாமியார்களின் ஆன்மிகம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய எண்ணிக்கை இது. ஆனாலும், அற்புதமான முயற்சிகள் பல நடக்கின்றன. உலக இலக்கியங்கள் பல மொழியாக்க நூல்களாக வருகின்றன. உலக சினிமா குறித்த நூல்கள், நோபல் பரிசு பெற்ற நூல்கள் என்று பல முக்கிய நூல்கள் வருகின்றன!''

''இன்றைய கல்வி முறை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?''

''இன்றைய ஆசிரியர்கள் நிறைய பேருக்கு பாடப் புத்தகத்தை அவர்கள் கையில் இருந்து பிடுங்கிவிட்டால், எப்படிப் பாடம் நடத்துவது என்று புரியாத சூழலே நிலவுகிறது. ஆசிரியர்களுக்கு வாசிப்புப் பழக்கம் கட்டாயம் தேவை. பானிபட் போர் குறித்து ஒரு வரலாற்று ஆசிரியர் நடத்துகிறார் என்றால், அந்தப் போரின் முக்கியத்துவம், அதில் பீரங்கி பயன்படுத்தப்பட்டது என்பதை மாணவர்களுக்குச் சொல்வதோடு, பீரங்கி எப்படிச் செயல்படுகிறது என்பதையும் சொல்ல வேண்டும். ஆனால், அது அறிவியல் ஆசிரியரின் வேலை என்று இவர் விட்டுவிடுவார். அதுபோலவே, பீரங்கியின் செயல்முறை குறித்து ஒரு அறிவியல் ஆசிரியர் சொன்னால், கூடவே பானிபட் போர் பற்றியும் சொல்ல வேண்டும். பாடங்களை இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தும் கலை(lnerlinkng of Subjects) நிறைய ஆசிரியர்களுக்குத் தெரிவது இல்லை!''

''உங்களிடம் பயிலும் குழந்தைகளுக்கு நீங்கள் எவ்விதமான பயிற்சி அளிக்கிறீர்கள்?''

''எனக்கு அறிவியல் ஆர்வம் மிகவும் அதிகம். அறிவியல் உலகம் ஓர் அற்பு தமான உலகம். குழந்தைகள் அறிவியல் உணர்வுடன் வளர வேண்டும் என்று விரும்புகிறேன். விண்வெளி காட்சிகளைக் குழந்தைகளுக்குக் காட்டுவதற்காகவே வீட்டில் ஒரு டெலஸ்கோப் வைத்து இருக்கிறேன். அதை ஒரு பெட்டியில் எடுத்துக்கொண்டு ஒரு மாய மந்திரவாதிபோலத்தான் எப்போதும் திரிகிறேன். எப்போது வேண்டுமானாலும் குழந்தைகள் என் வீட்டுக்கு வந்து மொட்டை மாடியில் நட்சத்திரங்களையும் கோள்களையும் விண்வெளியில் தெரியும் அத்தனை விஷயங்களையும் பார்க்கலாம். மதிப்பெண்கள் வாங்குவது முக்கியம் இல்லை. உலகத்தையும் வாழ்க்கையையும் நம்மைச் சுற்றி நடப்பவற்றையும் கூர்ந்து நோக்கி அதன் மூலம் கற்றுக்கொள்வது முக்கியம் இல்லையா?''

''சமச்சீர் கல்வி இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டு இருக்கிறதே?''

''சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் ஓர் ஆசிரியருக்கான அடித்தளம் மிக நன்றாக இருக்கிறது. ஆசிரியர் தனது திறமையை வெளிப்படுத்த, குழந்தைகளுடனான உறவை நெறிப்படுத்த நல்ல வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்குமான இடைவெளி பெருமளவு குறைக்கப்படும். மெட்ரிக் பாடத்திட்டத்தின் சுமைகளைச் சுமந்து திரியும் குழந்தைகளுக்கு விடுதலை கிடைக்கும். 'இந்தியாவில் பள்ளிக்கு வர விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பள்ளிக்கு வர விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையைவிடக் குறைவு’ என்கிறார் அமர்த்தியா சென். எளிமையான பாடப் புத்தகங்கள் குழந்தைகளைப் பள்ளியின் பால் ஈர்க்கும். ஆனாலும், திரும்பத் திரும்ப பாடப் புத்தகங்களை ஒட்டியதாகவே நம் கல்விமுறை இருப்பதை நாம் மாற்றியாக வேண்டும். இந்த ஆண்டு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் தந்திரமாகவே புதிய அரசு செயல்பட்டு இருக்கிறது. ஆனால், இப்படி நிறுத்தப்பட்டு இருப்பது சமச்சீர் கல்வியை மேலும் மேம்படுத்துவதற்கு என்றால் நாம் தாராளமாக வரவேற்கலாம். அதை விட்டுவிட்டு மீண்டும் பாடப் புத்தகங்கள் சார்ந்துதான் கல்விமுறை இருக்கப் போகிறது, பாடப் புத்தகத்தின் சாராம்சத்தை மட்டுமே மாற்றுவேன் என்றால் அதை வரவேற்க முடியாது. சமச்சீர் கல்விப் புத்தகங்களை எழுதியவர்களில் நானும் ஒருவன். இங்கே கல்வித் துறை அதிகாரிகளின் விருப்பப்படியான கல்விதான் வழங்கப்படுகிறதே ஒழிய குழந்தைகள் விரும்பும் கல்வி வழங்கப்படுவது இல்லை. நமக்கு என்று தனியாக ஒரு பாடத்திட்டத்தை வடிவமைக்காமல், அகில இந்திய அளவில் உள்ள சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தையே நாமும் பின்பற்றலாம் என்பது என்னுடைய கருத்து!''

''ஆசிரியப் பணி, எழுத்துப் பணி - இவற்றில் நீங்கள் விரும்புவது எதை?''

''இடது கண், வலது கண் - இரண்டில் எது பிடிக்கும் என்று கேட்பது மாதிரி இருக்கிறது. ஆசிரியப் பணியிலும் நான் குழந்தைகளோடுதான் வேலை செய்கிறேன். எழுத்தின் மூலமும் குழந்தைகளைத்தான் சென்றடைகிறேன். அதனால் இரண்டுமே எனக்குப் பிடித்தவைதான்!''

நன்றி: ஆனந்த விகடன்

Thursday, June 23, 2011

அவன் - இவன்


என் மனதுக்கு நெருக்கமான அபிமான இயக்குநர்களாக நான் வரித்திருந்த அத்தனை பேரையும் ஒரே படத்தில் தூக்கி எறிந்தார் பாலா. ’சேது’ என்றொரு படம் வந்ததே தெரியாமல் இருந்தது. தோழர் பாரதி கிருஷ்ணகுமார் “சேது என்றொரு படம். கட்டாயம் பார்க்க வேண்டிய படம். பார்த்து மனம் கனமாகி விட்டது” என்று கூறினார்.  அதன்பின்னர் தான் அப்படியொரு படம் வந்ததே எனக்குத் தெரியும். திரையரங்கிற்குச் சென்று ’சேது’ பார்த்துவிட்டு அந்த உச்சகட்ட காட்சி கொடுத்த அதிர்ச்சியில் உறைந்து விடுதி வரை எதுவும் யாரோடும் பேசாமல் வீடு திரும்பியது இன்னும் நினைவில் இருக்கிறது. அதே அதிர்ச்சியைத்தான் இன்று “அவன் - இவன்’’ கொடுத்திருக்கிறது. எந்த வகையிலும் தேறாத ஒரு படத்தைக் கொடுக்க பாலாவால் முடியுமா?

“அவன் - இவன்” படம் தனியாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் திரைக்கு வெளியே தனியாக இருக்கிறோம். ஒரு காட்சியில் கூட ஒன்ற முடியவில்லை. இடைவேளை வந்தபோது “இந்தப் படத்தை இயக்கியது பாலாதானா?” என்கிற சந்தேகம் வந்தது. காமெடி சுத்தமாக கைகூடவில்லை. இடைவேளைக்குப் பின்னரான வழக்கமான பாலா படத்தில் வரும் வில்லனை கதாநாயகனுக்கு நெருக்கமான ஒருவரை கொடூரமாகக் கொல்வது. அதற்கு கோரமாக பழிவாங்குவது என்கிற ஃபார்முலா வந்து இது பாலா படம் தான் எனக் காட்டிக் கொடுக்கிறது. 

எங்கே இப்படியொரு கிராமம் இருக்கிறதோ? எல்லாம் அந்நியமாய் இருக்கிறது. பாத்திரப்படைப்பில் இருந்து எல்லாமே...! யுவன் சங்கர் பாவம்..அவரும் என்ன செய்வார்..? இப்படியொரு படத்தில் ஸ்கோர் செய்ய அவருக்கு இடமே இல்லை. காட்சிகளெல்லாம் வழ வழாவென்று போய்க்கொண்டிருப்பதால் அவரும் அலுப்பில் எதையோ அடித்து வைத்துள்ளார். என்னதான் ஆர்யா, விஷால், ஜி.எம்.குமார் எல்லோரும் உயிரைக்கொடுத்து நடித்திருந்தாலும் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர். அதிலும் அந்த அகரம் ஃபவுண்டேஷன் காட்சியில் விஷால் அப்படி நடித்தும் அந்தக் காட்சி துருத்திக்கொண்டு தெரிவதால் ஒட்டவே முடியாமல் போகிறது. 

மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்றால் அத்தனை கேவலமா உங்களுக்கு? மாட்டுக்கறி விற்பவர் தான் வில்லன். அவர் தொழிலில் மண் அள்ளிப் போடுபவர் நல்லவர். அப்படித்தானே? இந்த கோமாதா பாலிடிக்ஸ் பார்க்கையில் வயிறு பற்றி எரிகிறது. ப்ளூகிராஸ் பாணியில் பிராணிகளை சித்திரவதை செய்யக்கூடாது என்றுதான் சொல்லி இருக்கிறேன் என்றெல்லாம் சமாதானம் சொல்ல முடியாது. அப்படியான ஒரு வசனமோ காட்சியோ படத்தில் இல்லை. படத்தில் மாட்டிறைச்சி விற்பவரைக் காட்டிக்கொடுப்பவர் வாழ்ந்து கெட்ட ஒரு ஜமீன்தார். அவரிடம் போய் கிராமத்து மக்கள் கொஞ்சிக்குலாவுகிறார்கள். இந்த வெட்டி ஜமீன் பரம்பரை பாசம், அவருக்காக பொங்குவது எல்லாமே கடும் எரிச்சலூட்டும் விஷயங்கள். 

அத்தோடு ஒரு வசனம்..”ஏதோ கோட்டாவில் இந்த வேலை கிடைச்சு வந்திருக்கேன்’’ அன்று போலீஸ் வேலைக்கு சற்றும் பொருந்தாமல் திருடியவனிடம் வந்து கெஞ்சும் கையாலாகாத பெண் போலீஸ் சொல்கிறார். போகிற போக்கில் என்னமாய் இடஒதுக்கீட்டை கிண்டல் செய்கிறார் பாலா?!!! எஸ்.ராமகிருஷ்ணனின் வசனங்களின் மூலம்?  கோட்டா என்று ஒன்று இருப்பதே தெரியாத, முதல் தலைமுறையாக கல்வி கற்காத தலித் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

’சேது’ வந்தபோதே ”நந்தன்” இதழில் “ஆனா ரூனா” எழுதினார். ’ஒரு பாப்பாத்தியை காதலித்தவன் ஐயோ என்று போவான் என்று தான் படம் சொல்கிறது’ என்றார். இந்தளவுக்கு யோசிக்கணுமாஎன்று அன்றைக்கு யோசித்தேன். ஆமாம். யோசித்திருக்க வேண்டும் என்று “நான் கடவுள்” வந்த போது நினைத்தேன். நந்தாவில் ஈழத்தமிழருக்கு ஆதரவான குரல் தருகிறார் பாலா என்று சந்தோஷப்படும் அதே சமயத்தில் ராமேஸ்வரம் கடற்கரையில் ஒலிக்கும் சமஸ்கிருத மந்திர உச்சாடனங்கள் நெருடிக்கொண்டிருந்தன. ஆனாலும் பாலாவின் perfect shots வாயடைக்கச் செய்தன. ஜெயமோகனோடு சேர்ந்து கொடுத்த  “நான் கடவுள்” என்கிற ஆபத்தான படத்திலும் கூட ஒவ்வொரு ஷாட்டும் செதுக்கியது போன்றிருந்தது. இந்த அவன் - இவன் படத்தில் shot perfection கூட இல்லை.

’அவன் - இவன்’ - மிக மிகத் தவறான படம்.  ஆபத்தான படமும் கூட,  அழகியலிலும் அரசியலிலும்!

இனி...பாலாவிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! 

Thursday, June 02, 2011

பாதல் சர்க்கார்

மே 13 - பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிமாற்றத்திற்கான அச்சாரம் இடப்பட்ட நேரம் ஓர் அற்புதமான நாடக ஆளுமை நம்மை விட்டுப் பிரிந்தார். பாதல் சர்க்கார் - வீதி நாடகம் என்ற பெயரை நாடெங்கும் பிரபலப்படுத்தியவர். இந்தியாவின் மிகப்பெரும் நாடக ஆளுமைகளில் ஒருவர். தனது 86வது வயதில் உடல்நலம் குன்றி கல்கத்தாவில் காலமானார். தேர்தல் முடிவுகளின் பரபரப்பில் அந்த மாமனிதரின் மரணம் கவனிக்கப்படாமலேயே போயிற்று. ஊடகங்களில் பெரிதாய் வந்திருக்க வேண்டிய அவரது மரணச்செய்திக்கு இடமே இல்லாத அளவு அன்று தேர்தல் முடிவுகள் குறித்த செய்திகள் ஆக்ரமித்தன.

பாதல் சர்க்கார் இந்திய நாடகத்துறையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். சாலைகளின் சந்திப்பில், தெருவோரத்தில், பேருந்துநிலையத்தில் என்று எங்கு வேண்டுமானாலும் வீதிநாடகங்கள் நிகழ்த்தப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சாலையில் போவோர் வருவோர் அங்கேயே நின்று வேடிக்கை பார்த்து அவர்களும் நாடகத்தில் ஒரு அங்கமாகும் தன்மை வீதிநாடகங்களில் உண்டு. இத்தகைய திறந்தவெளி நாடகங்களை இந்தியாவெங்கும் பிரபலமாக்கியவர்.ஒரு வரலாற்று ஆசிரியரின் மகனாகப் பிறந்து, சிவில் இஞ்சினியரிங் படித்து இங்கிலாந்து, நைஜீரியா போன்ற நாடுகளில் நகர்நிர்மாண நிபுணராக பணியாற்றினாலும் பாதலை இந்தியாவெங்கும் அறிமுகம் செய்து வைத்தவை அவர் இறுதிமூச்சு வரை நேசித்த நாடகங்கள் தான்.

நாடகங்களில் பலவகை உண்டு. முதல் வகை மரபுவழி நாடகங்கள். இவை பெரும்பாலும் பிற்போக்கு கருத்துக்களையே அடிப்படையாகக் கொண்டிருந்ததாக பாதல் சர்க்கார் நினைத்தார்.இவற்றை பாதல் முதலாம் அரங்கு என்கிறார். ஐரோப்பிய பாணியிலான மேடை நாடகங்கள் பார்வையாளருக்கும் நாடகத்திற்குமான தொடர்பை அறவே துண்டிக்கின்றன என்று கருதும் பாதல் இவற்றை இரண்டாம் அரங்கு என்றழைத்தார். இந்த இரண்டு அரங்குகளையும் நிராகரித்த பாதல் ‘மூன்றாம் அரங்கு‘ என்ற பெயரில் திறந்தவெளி நாடகங்களை எழுதி இயக்கத் தொடங்கினார். இவை மக்களோடு நேரடியாக பேசுபவை. முக்கியமாக நாடகம் நிகழ்த்தப்படும் இடம் இதுவாகத்தானிருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை உடைத்தவர் பாதல். வீதி நாடகத்தை எங்கு வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். அதுவே அதன் சிறப்பு. பெரிதாய் ஒப்பனைகளின்றி, கதைமாந்தர்களே நடிப்பிடத்தை உருவாக்குவது, உருவங்களை உருவாக்குவது போன்ற தன்மைகளே இதன் சிறப்பு. ஒளியமைப்பு, அரங்கம் என்று தேடி அலையவேண்டியதில்லை. ஆகவே ஒரு நாடகம் உருவாவதற்கான பொருட்செல்வு குறைந்தது. எல்லாவற்றையும் விட மூன்றாம் அரங்கு நாடகங்கள் மக்கள் பிரச்சனைகளைப் பேசின. சமூக சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. மேற்குவங்கம் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் இவரது தாக்கத்தால் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. பல நாடகக்குழுக்கள் உருவாகின.

ஆனால் பாதல் முதல் இரண்டு வகை நாடகங்களையும்கூட நிகழ்த்தியிருக்கிறார். அதில் திருப்தியடையாமல் அவற்றை நிராகரித்தபின்னர் திறந்தவெளி நாடகங்களை இயக்கத்தொடங்கினார். இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்ஸியை எதிர்த்து நாடெங்கிலும் நாடகங்கள் நிகழ்த்தப்பட முக்கிய காரணமாய் இருந்தார் பாதல். இவரது ’பிறிதொரு இந்திரஜித்’ நாடகம் மிக அதிகமாக மொழிமாற்றம் செய்யப்பட்ட நாடகம். ஏறத்தாழ இருபது நாடகங்களை இயக்கியிருக்கும் இவரது நாடக ஆக்கஙகள் நூலாகவும் வெளிவந்திருக்கின்றன.



‘‘கர்நாடகாவின் ‘சமுதாயா‘ குழுவினருடன் இணைந்து பாதல் உருவாக்கிய ‘ஓ சாசானா‘ என்ற நாடகத்தை முதன் முதலாக பார்த்தேன். அவரது நாடகங்களால் உந்தப்பட்டு வீதிநாடகத்திற்குள் வந்தவன் நான். பாதல் மூன்று முறை தமிழகத்திற்கு வந்து பயிற்சிப்பட்டறைகள் நடத்தியிருக்கிறார். நாடகவியலாளர் பிரசன்னா, நிஜநாடக இயக்குநர் மு.ராமசாமி போன்றவர்கள் அவரிடம் பயின்றவர்கள் தான். பாதல் இந்திய நாடக எல்லையை விஸ்தீரணப்படுத்தியவர். இந்திய நாடகத்தின் முகத்தையே எழுபதுகளில் மாற்றியமைத்து யார் வேண்டுமானாலும் நாடகம் பண்ணலாம் என்கிற நிலையை உருவாக்கியவர்.‘‘ என்கிறார் தமிழகத்தில் 28 ஆண்டுகளாக வீதிநாடகங்களை நிகழ்த்திவரும் சென்னை கலைக்குழுவின் இயக்குநர் பிரளயன்

பாதலுக்கு 1972ல் இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்தது மத்திய அரசு.  ‘சதாப்தி‘ என்ற நாடகக்குழுவை தொடங்கி நடத்தி வந்தார் பாதல். சங்கீத நாடக அகாதமி விருது, சங்கீத நாடக அகாதமி ஃபெல்லோஷிப் விருது என்று விருதுப்பட்டியல் தொடர்ந்தது. 1997ல் அரசு அவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்தபோது ஏற்கனவே தான் சாகித்ய அகாதமி விருது பெற்றுவிட்டபடியால், அதுவே ஒரு எழுத்தாளருக்குக் கிடைக்கும் உயரிய அங்கீகாரம் என்று கூறி பதமபூஷனை மறுத்தார்.தமிழகத்திற்கு வந்து பல பயிற்சி பட்டறைகளையும் நடத்தி இருக்கிறார் பாதல் சர்க்கார். அந்த பயிற்சிப் பட்டறைகளில் பயின்றவர்கள் பலர் இன்று நாடகத்துறையில் புகழ்பெற்று விளங்குகிறார்கள். அவரது ’ஸ்பார்டகஸ்’, ’பிறிதொரு இந்திரஜித்’, ’ஊர்வலம்’ போன்ற நாடகங்கள் தமிழில் வரவேற்பு பெற்றவை. திரைத்துறையிலும் நாடகத்துறையிலும் அவரது தாக்கத்துடன் ஸ்கிரிப்ட் எழுதும் பலருண்டு.

ஒரு மிகப்பெரிய நாடக ஆளுமை மறைந்து விட்டார் என்று கூறுவதை விட எங்கோ தெருவோரத்தில் நடக்கும் வீதிநாடகத்தின் ஆன்மாவில் பாதல் சர்க்கார் வாழ்கிறார் என்று சொல்வதே சரியாக இருக்கும்.