Friday, August 19, 2011

நிராகரிப்பு



அனைத்து உயிரினங்களிலும்
ஆணும் பெண்ணுமாய்
ஒரு ஜோடி
நோவாவின் கப்பலில்.
நீராலழிந்த புவிக்கோளத்தின்
மீட்டுருவாக்கத்தின்பின்
திகைத்து நிற்கிறான் நோவா
கப்பலில் இடம் மறுக்கப்பட்டும்
பேரழிவுக்குப் பின்னும் உயிர்த்தெழுந்த
மூன்றாம் பாலினம் நோக்கி!

Monday, August 08, 2011

எதிரொலிக்கும் கரவொலிகள்!




ண்களால், பெண்களால் நுழைய முடியாதது திருநங்கைகளின் உலகம். சமூகத்தில் திருநங்கைகள் குறித்த பார்வை முற்றாக மாறிவிடவில்லை. எனினும், ஆங்காங்கே நடக்கும் சில அபூர்வ நிகழ்வுகள் மாற்றம் குறித்த நம்பிக்கைத் தருகின்றன. அதில் ஒன்றுதான் கடந்த வாரம் கன்னிமரா நூலக அண்ணா சிற்றரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்து இருந்த 'திருநங்கையர் படைப்புலகம்’ என்ற நிகழ்வு. திருநங்கைகளின் எழுத்துக்கள், அவர்களைப் பற்றிய பதிவுகள் குறித்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்ட இந்நிகழ்ச்சி, தமிழ்ச் சூழலில் முதல் முயற்சி.
 நிகழ்ச்சியில் சுபாஷ் இயக்கிய 'காந்தள் மலர்கள்’, சி.ஜெ.முத்துக்குமார் இயக்கிய 'கோத்தி’ ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக வேலை தர மறுக்கும் நிறுவனங்களின் போக்கை காந்தள் மலர்களும், பெற்றோர் வெறுத்து ஒதுக்கிய நிலையில், வாழ வழியின்றி கடைகளில் காசு கேட்கச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுவதை கோத்தியும் படம் பிடித்துக்காட்டின.

மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய 'வாடாமல்லி’ நாவல் குறித்தும், நாடக இயக்குநர் அ.மங்கை எழுதிய 'எதிரொலிக்கும் கரவொலிகள்’ நூல் குறித்தும் பிரியா பாபு ஆய்வுரை நிகழ்த்தினார். தமிழ் இலக்கியத்தில் ஒரு திருநங்கையை முக்கியக் கதாபாத்திரமாக வைத்துப் படைக்கப்பட்ட முதல் நாவல் 'வாடாமல்லி’. சு.சமுத்திரம் அந்த நாவலை எழுதக் காரணமாக இருந்த மூத்த திருநங்கை நூரியும் நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார்.

'அ.மங்கை 'கண்ணாடிக் கலைக் குழு’ என்று திருநங்கைகளைக்கொண்டு ஒரு கலைக் குழுவைத் தொடங்கி 'மனசின் அழைப்பு’ என்கிற நாடகத்தின் மூலம் திருநங்கைகள் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்கியவர். அவருடைய நூலில் சமபாலின ஈர்ப்புகொண்டவர்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையேயான வேறுபாடு நுட்பமாக விளக்கப்பட்டு இருக்கிறது. திருநங்கைகள் குறித்து அறிந்துகொள்ள நினைப்பவர்கள் அந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும்!'' என்றார் பிரியா பாபு.
திருநங்கைகள் குறித்து தமிழ் இலக்கியத்தில் உள்ள பதிவுகள் குறித்துப் பேசிய கவிஞரும், அரங்கக் கலைஞருமாகிய 'லிவிங் ஸ்மைல்’ வித்யா, சங்க காலத்தில் இருந்தே திருநங்கையர் குறித்த பதிவுகள் தமிழ் இலக்கியத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டினார். ''எஸ்.பாலபாரதியின் 'அவன்-அது=அவள்’ நாவல் முதன்முதலில் திருநங்கைகளின் காதல் குறித்து நுட்பமாகப் பேசியது. கி.ராஜநாராயணன் 1960-ல் எழுதிய 'கோமதி’ திருநங்கைகள் குறித்தான முதல் சிறுகதை. 1995-ல் ஹவி எழுதிய 'தீட்டு’, இரா.நடராசனின் 'மதி என்னும் மனிதனின் மரணம்’, திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் 'ஆச்சிமுத்து’, லட்சுமண பெருமாளின் 'ஊமாங்கொட்டை’, 1997-ல் வெளியான 'வக்கிரம்’, 2009-ல் வெளியான பாரதி தம்பியின் 'தீராக் கனவு’ ஆகிய கதைகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.

திருநங்கைகளோடு ஒப்பிடுகையில் திருநம்பிகள் குறித்தான பதிவுகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை. (பெண் உணர்வுகொண்டு பெண்ணாக மாறும் ஆணை திருநங்கை என்பதுபோல, பெண் ஆணாக உணர்ந்து மாறினால் அவர்கள் திருநம்பிகள்!) இது மிகவும் வருத்தத்துக்கு உரியது. அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ளவர்கள்!'' என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார் 'லிவிங் ஸ்மைல்’ வித்யா.
இவரின் 'நான் சரவணன் வித்யா’, ரேவதியின் 'உணர்வும் உருவமும்’, ப்ரியாபாபுவின் 'மூன்றாம் பாலின் முகம்’ ஆகிய மூன்று நூல்கள் குறித்து பேராசிரியை சந்திரா தன் கருத்துக்களைப் பதிவு செய்தார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகும் 'லிவிங் ஸ்மைல்’ வித்யா மேடையில் வாசித்த அவரது கவிதை மட்டும் செவிகளில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.

'அப்போது நான்
முழுக்கை சட்டையும், கால் சராயும்
அணிவது வழக்கம்
அப்போது நான்
மாதம் ஒருமுறையென
சீராக முடிதிருத்தி வந்தேன்
அப்போது நான்
ஆண்களுடன்
பள்ளியில்தான் படித்தேன்
இருந்தாலும் அவர்கள்
கிண்டல் செய்தார்கள்
நான் ஆணில்லை என
இப்போது நான்
புடவை கட்டி
ஒத்தசடை பின்னி
பூ முடிந்து
பாந்தமாக வளைய வந்தாலும்
அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்களாம்
'நான் பெண் இல்லை’என்று.!’


Saturday, August 06, 2011

கன்னித் தீவு கதையா கல்வி?


சிந்துபாத் கதை, 1001 அரேபிய இரவுகள் கதை என்று பலப் பல கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது, ஜெயலலிதா முடக்கிய சமச்சீர்க் கல்விக் கதை. 'இதோ வருது... அதோ வருது’ என்று எதிர்பார்த்து, புத்தகங்களுக்காக மாணவர்கள் காத்திருப்பதுதான் மிச்சம்!

ஜூலை 29 அன்று, மாணவர்களைப் போராட்டத்துக்கு அழைத்தது தி.மு.க. ஆங்காங்கே பள்ளிகளின் முன் போராட்டம் நடத்தி, சிலர் கைதானார்கள். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுவிடுவார்களோ என்கிற பயத்தில், அ.தி.மு.க. அரசு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது. பள்ளிகளைக் கண்காணிக்க, காவல் துறையினர் வேறு. இந்தப் போராட்டத்துக்கு எதிராக, மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சென்னையில் போட்டி போராட்டம் நடத்தினார்கள்.
தி.மு.க-வின் போராட்டத்துக்குக் கிடைத்த ஆதரவை வைத்து சமச்சீர்க் கல்விக்கு ஆதரவு இல்லை என்று எண்ணிவிட முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில், தி.மு.க. அழைப்பு விடுத்த போராட்டத்தில் கலந்துகொண்டால் கதி என்னவாகும் என்பது தெரியாதா என்ன?

ஆரம்பத்தில் இருந்தே சமச்சீர்க் கல்வி கேட்டுப் போராட்டங்களை நடத்திவரும் இந்திய மாணவர் சங்கம், தி.மு.க. அழைப்பு விடுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. சங்கத்தின் மாநிலச் செயலர் கனகராஜிடம் காரணம் கேட்டபோது, ''தி.மு.க. தனது ஆட்சிக் காலத்தில், இந்த விஷயத்தில் ஒழுங்காக நடந்து இருந்தால் இவ்வளவு பிரச்னைகளுக்கே இடம் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளிலேயே இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி இருக்கலாம். நிறைய அவகாசம் இருந்தது. அந்த நேரத்தை எல்லாம் வீணடித்தது தி.மு.க. அரசு. 2009 ஜூலையில் சமச்சீர்க் கல்வி கேட்டுப் போராடிய எங்கள் தோழர்கள் மீது தடியடி நடத்தியது தி.மு.க. அரசு. மறு நாள் சட்டமன்றத்தில் கலைஞர், 'சமச்சீர்க் கல்வியை உடனே கொண்டுவர முடியாது. யாரையும் பாதிக்காமல்தான் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். பொறுமை காக்க வேண்டும்’ என்று பேசினார். யாரையும் பாதிக்காமல் என்றால், தனியார் பள்ளிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராமல்தான் சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவர வேண்டும் என்றுதானே பொருள்?
ஆக, எல்லாக் குளறுபடிகளையும் செய்து விட்டு, இன்றைக்கு அரசியல் ஆதாயத்துக் காக... சமச்சீர்க் கல்விக்காகப் போராடுகிறோம் வாருங்கள் என்று தி.மு.க. சொன்னால் நாங்கள் எப்படி இணைந்துகொள்வது?' என்றார் கனகராஜ்.

இது ஒருபுறமிருக்க, உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, புத்தகங்களை வழங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேலும் கால அவகாசம் கேட்க, மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இப்படி இழுத்தடித்துக்கொண்டே இருப்பது கல்வித் துறையில் அனைவருக்கும் அலுப்பையும் ஆயாசத்தையும் தோற்றுவித்து இருக்கிறது. அரசு வழக்கறிஞர் திடீரென்று, 'தமிழக அரசுக்குச் சரியான ஆலோசனை சொல்ல யாரும் இல்லை. அதனால்தான் சமச்சீர்க் கல்விச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துவிட்டது. அதனால், நீதிமன்றத்தின் நேரமும் வீணாகிவிட்டது'' என்று பல்டி அடித்தது இன்னும் பயங்கரம்.

ஆனால், இப்படி ஸேம் சைடு கோல் அடிப்பதன் காரணத்தை சமச்சீர்க் கல்வியைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் பேராசிரியர் அ.மார்க்ஸிடம் கேட்டபோது, 'சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் விவாதித்துக் கொண்டுவரப்பட்ட சமச்சீர்க் கல்விக்கான சட்டத்தில் எந்த விவாதமும் இன்றி அ.தி.மு.க. அரசு திருத்தம் கொண்டுவந்ததை, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே கண்டித்து உள்ளது. சமச்சீர்க் கல்வி வழக்கைப் பொறுத்தவரை, இதுவரை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அளித்து வந்த தீர்ப்புகள் அத்தனையிலுமே சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அடிப்படையாக இருக்கிறது.


இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தில் இருந்து தப்பிக்கவே தமிழக அரசு வழக்கறிஞரை இப்படிப் பேசவைத்து ஒரு நடைமுறைத் தந்திரத்தைக் கையாண்டு இருக்கிறது தமிழக அரசு. இதற்கிடையே தமிழக அரசு சமச்சீர்க் கல்வியின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி பார்த்தால், இப்போது முடக்கிவைக்கப்பட்டுள்ள சமச்சீர்க் கல்விப் பாடப் புத்தகங்கள் தவிர, இதில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புத்தகங் களை வாங்கி மெட்ரிக் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்குக் கொடுக்கலாம். ஒரு வகையில் இதைக் கேள்வி கேட்கவும் முடியாது. ஏனென்றால், பொதுப் பாடத் திட்டத்தின் கீழ்தான் இந்தப் பாடப் புத்தகங்களும் வருகின்றன. அதாவது, பாடத் திட்டம் பொது. ஆனால், பாடப் புத்தகம் பொது கிடையாது. அப்படி என்றால், அரசுப் பள்ளிகளில் 
ஒரு பாடப் புத்தகமும், மெட்ரிக் பள்ளிகளில் ஒரு பாடப் புத்தகமும் வைக்க அரசே வழி வகுத்துக் கொடுக்கிறது. எப்படியோ ஒரு வகையில் மாணவர்களை இரண்டு வகையினராகப் பிரித்துவிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது' என்கிறார் அ.மார்க்ஸ்.


வர்க்க பேதமும் வர்ண பேதமும் ஏதோ ஒரு விதத்தில் தொடர வேண்டும் என்பதுதான் அரசின் ஆசையா?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றே இப்போதைக்கு இந்த பேதம் களையும் அருமருந்து என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தீர்ப்பு மருந்தாக அமையுமா அல்லது மேலும் மாணவர்களைச் சிக்கலுக்கு உள்ளாக்குமா என்பதே இப்போதைய கேள்வி!