Tuesday, October 18, 2011

நீளும் கனவு


சின்னு வந்திருக்கிறாள். அவளுக்கு அனுவின் சமையல் என்றால் ரொம்ப இஷ்டம். அனு அவளுக்காக மீன் குழம்பு வைத்திருந்தாள் .  காரம் கொஞ்சம் அதிகமாகி விட்டது. ஆனாலும் என்ன? சின்னுவுக்குப் பிடிக்கும் தான். இரண்டு தட்டுகளை கழுவி எடுத்து வந்தாள். சின்னு சாப்பிட அமர்ந்தாள். தன் சின்ன கைகளால் மெல்ல தட்டிலிருந்து ஒரு பிடி எடுத்து உருட்டினாள். “நம்பி சாப்பிடலாமா? ஆம்புலன்ஸுக்கு சொல்லி வச்சுட்டு வாய்ல வைக்கவா?’’ என்று கேலி செய்தவாறே ஒரு கவளத்தை வாய்க்குள் வைத்தவள் சாப்பிட்ட வாயாலேயே அனுவின் கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள்.

‘’நல்லாருக்கு!..உப்பு காரம் எல்லாம் சரியாய் இருக்கு!’’ என்றவாறே ரசித்து  சாப்பிட்டாள். சோறு கொஞ்சம் குழைவாய் வடித்திருந்தது நன்றாகவே இருந்தது. அனு தனக்கும் கொஞ்சம் எடுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.. நல்ல சாப்பாடு சில சமயம் மனதை ரசனையாக்கி விடுகிறதுதான். சின்னு பெரும்பாலும் சமைப்பதில்லை. வெளியில் ஹோட்டலில் தான் சாப்பிடுகிறாள். அதனால் அவளுக்கு சோற்றை அள்ளி நிறைய வைத்தாள் அனு. 

‘’இப்படி யாராச்சும் தினமும் சமைச்சு வச்சா நல்லா சாப்பிடலாம்!’’ என்றாள் சின்னு. அவள் வாய் பேசிக்கொண்டே இருந்தது. ஏதேதோ பேசினாள். இடையிடையே சாப்பிட்டாள். பேசியதில் பாதி மீன்குழம்பின் ருசி பற்றியே இருந்தது. சாப்பிட்டு முடிந்ததும் கையைத் துடைத்துக் கொண்டே வந்தவள் அருகில் வந்து நின்று தலையை சாய்த்து சொன்னாள்

“அனு! சாப்பாடு ரொம்ப நல்லாருந்தது. ரொம்ப நாளைக்குப் பிறகு ரசிச்சு சாப்பிட்டேன்….’’

’’சமைக்கும்போது வெறும் எண்ணெய், மிளகாய் மட்டுமா போட்டேன். அன்பும் ஒரு துளி கலந்து தானே சமைச்சேன்?’’

‘’ஒரு துளி தானா?’’

‘’சமைக்கும்போது ஒரு துளிதான்...பரிமாறும்போது நிறைய…....ஒரு பொன்மொழி தெரியுமா...?

’எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள். ஆனால் அன்புடன் பரிமாறுங்கள்’..கேள்விப்பட்டிருக்கியா?’’

”இல்லையே! நல்லாருக்கு..!’’” என்றவள் உண்ட மயக்கத்தில் அருகில் இருந்த பாயை எடுத்து விரித்துப் போட்டுப் படுத்தாள்.

னவில் தான் செந்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். கனவும் நனவுமான வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை. கனவு மட்டுமே போதுமானதாகத் தோன்றியது. காணும் கனவு அப்படியே வாழ்நாளின் இறுதி வரை நீடிக்காதா என்று ஆசையாய் இருந்தது. இப்போதும் கனவு கண்டு கொண்டிருக்கிறான். இந்தக் கனவு இப்படியே நீளாதா? என்ன ஆச்சரியம்? அவன் கனவு நீடித்தது. உறக்கத்தில் கால்களை நீட்டிக்கொள்வதை அவன் உணர்கிறான். ஆனாலும் தொடர்ந்து கனவு கண்டுகொண்டிருக்கிறான்.

பாட்டி அடிக்கடி ‘உனக்குன்னு ஒரு ராஜகுமாரி எங்கே வளர்ந்த்துக்கிட்டு இருக்காளோ?’ என்று சிறுவயதிலிருந்து சொல்வதைக் கேட்டிருக்கிறான் செந்தில். அந்த ராஜகுமாரி ஒருமுறை கூட அவன் கனவில் வருவதில்லை. கனவில் அம்மா, அப்பா, பாட்டி, பக்கத்து வீட்டு ஜேம்ஸ், எதிர்வீட்டு சீனு  என்று எல்லோரும் வந்தார்கள். ஆனால் ராஜகுமாரி மட்டும் வரவேயில்லை.

செந்திலுக்கு நிறைய முடி..சுருள் சுருளாக நெற்றியில் புரளும். காற்றில் ஆடும் அவன் முடிக்கென்றே சின்ன வயதிலிருந்தே அவன் வயதையொத்த பையன்கள் ரசிகர்கள். ‘உனக்கு மட்டும் எப்படி இப்படி வந்து விழுது?’’ என்று தொட்டுத் தொட்டுப் பார்ப்பார்கள். அவனுக்கு உள்ளூர பெருமையாக இருந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ள மாட்டான். அவனைப் பார்த்து பையன்கள் அந்த ஒரு விஷயத்தில் தான் பொறாமைப் படுவார்கள். அதனால் சரியாய் முடியை முன்னும் பின்னும் கத்தரித்து நெற்றியில் மட்டும் வந்து சரிந்து விழும்படி த்ன்னுடைய தலையலங்காரத்தை வைத்துக் கொள்வான். பையன்கள் பொறாமைப்படும்போதெல்லாம் அவனுக்கு சந்தோஷம் தாங்காது.

இப்போது கனவிலும் பையன்கள் நிறைய பேர் வந்து சுற்றி சுற்றி வருகிறார்கள்.. இவனுடைய முடியை தொட்டுப் பார்க்கிறார்கள். இவனுக்கு சற்றுக் கூச்சமாக இருக்கிறது. ஒருவன் வந்து செந்திலின் கரங்களைத் தொட்டுப் பார்த்துக் கேட்கிறான். ‘’உன் கை ரொம்ப அழகு! உன் கையைப் பிடிச்சுக்கவா கொஞ்ச நேரம்?’’ இவன் தலையாட்ட கைகளை கெட்டியாகப் பற்றிக்கொள்கிறான். இன்னொருவன் வந்து ‘’உனக்கு அழகான கண்ணுடா!’’’’ என்றான். இவனுக்குப் பெருமையாய் இருந்தாலும் கூச்சமாக இருக்கிறது.. வெளிக்காட்டிக் கொள்ளாமல் படபடப்போடு நிற்கிறான் எதிர்வீட்டு சீனு இப்போது வருகிறான். ‘’செந்தில்! உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். தெரியுமா உனக்கு?’’ என்றபோது செந்தில் கனவில் மட்டுமில்லாமல் நிஜமாகவே தன் உடல் சிலிர்த்ததை உணர்ந்தான்.

கனவில் இன்னும் ஏதேதோ காட்சிகள்!. ஒரு சர்ச், மசூதி, கோவில் என்று எங்கெல்லாமோ சுத்துவது போலவும், வகுப்புப் பையன்களோடு சேர்ந்து சிகிரெட் குடிப்பது போலவும் விதவிதமாய் கனவுகள்.

கனவுகளுக்குத்தான் எத்தனை விதமான கால்கள்? சில நீளமானவை. சில குட்டையானவை. சில வேகமாய் ஓடக்கூடிய கால்கள். சில அன்னநடை போடும் கால்கள். அவை எப்படியிருந்தாலும் மெலிதான ஏதோவொரு இடப்பெயர்ச்சி அல்லது அசைவு மட்டும் கனவில் உத்தரவாதமாய் இருக்கிறது.

அப்பா இப்போது செந்திலின் கனவில் வருகிறார். அப்பா! அவனுக்கு முதல் நண்பன் அப்பா தான். ஒரு நாளின் அத்தனை நிகழ்வுகளையும் சொல்லும்போது அப்பா விழுந்து விழுந்து சிரிப்பார். அப்பாவுக்கு செந்திலின் நகைச்சுவை உணர்வு ரொம்பவே பிடிக்கும். இருவருமாய் சேர்ந்து அம்மாவையும் தம்பியையும் கிண்டல் செய்வது, தொலைக்காட்சி பார்ப்பது, கடைத்தெருவுக்குப் போவது என்று ஒன்றாகவே திரிவார்கள். அப்பாவை அண்ணனா என்று பலர் கேட்பதுண்டு. அப்பா அத்தனை இளமை. ஆனால் கொஞ்ச நாட்களாக அப்பா அவனோடு பேசுவதில்லை.  கனவில் இப்போது வருகிறார். நிஜத்தில் இப்போது இருப்பது போலவே கனவிலும் அப்பா பேசவில்லை. அவருடைய முகம் வாடியிருக்கிறது. “ஏன்பா?’’ என்கிறான் செந்தில். ‘’நீ போறது கஷ்டமாவும் பயமாவும் இருக்கு செந்தில்’’ என்றார். ‘’அய்யோ! நான் எங்கப் போகப்போறேன். இதோ இருக்குற மெட்ராஸுக்குத் தான படிக்கப் போறேன். இதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படுறீங்க?’’ என்றவாறே அப்பாவின் அருகில் சென்று அமர்ந்து கொள்கிறான் செந்தில். அப்பா அவனையே பார்த்துவிட்டு சொல்கிறார் ‘’உனக்கு இது புரியாதுடா!’’ என்கிறார். அப்பாவின் கண்கள் கலங்கி இருந்தன. ஆண்பிள்ளை அழக்கூடாது என்று எவனோ சொல்லி வைத்ததை நம்பி அப்பா அழுகையை அடக்கிக் கொள்வது தெரிகிறது. அவன் அப்பாவையே பார்த்துக் கொண்டு நிற்கிறான்.

அப்பா சிறிது நேரத்திலேயே கனவிலிருந்து போய்விடுகிறார். பின்னாடியே அம்மா வந்து கனவிற்குள் நுழையும்போதே பெரிதான ஓலத்தோடு அழுதவாறே வருகிறாள். அப்பாவைப் போல அவளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. பெண்கள் அழலாம். பெண்கள் அழுதுதான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் பெண்ணேயில்லை என்று எவனோ சொன்னது அம்மாவுக்கு வசதியாய்ப் போய்விட்டது. அழுகை வந்தால் மறைக்க வேண்டியதில்லை. அப்பா போல அம்மா கண்ணீரை உள்ளுக்குள் உறைய வைக்கவில்லை. உருகி உருகி அழுகிறாள். இவனுக்குத்தான் எரிச்சலாக இருக்கிறது. என்ன இது? எல்லோரும் வந்து அழுதால் எப்படி? கனவிலேயே அம்மாவை அழாமலிருக்கும்படி மன்றாடுகிறான். அம்மா கேட்கவில்லை. இந்தக் கனவு பிடிக்கவில்லை. நீண்ட கனவு வேண்டும் என்று நினைத்ததால் தானே இந்தப் பிரச்சனை? கனவு நின்று போக்க்கூடாதா?

என்ன ஆச்சரியம்! கனவு கலைந்து போனது. கண்களைத் திறந்தான். அப்பா கண் முன்னால் நின்றார். ஒரு வார்த்தையும் பேசாமல் கண்களால் மட்டுமே வெறுப்பைக் கொட்டும் வித்தை அப்பாவுக்குத் தெரிந்திருந்தது.  அவனுக்கு ஆயாசமாய் இருந்தது. 

கனவு மட்டும் இல்லையென்றால் வாழ்க்கை ரணமாகி இருக்கும். துன்பத்தையும் துயரங்களையும் கரைத்து மனிதர்களை புது மனிதர்களாக்கும் சக்தி கனவுகளுக்கு உண்டு. மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். இந்த முறை அவனுக்கு அவ்ன் நினைத்த நேரத்தில் கனவு வரவில்லை.

னு புரண்டு படுத்தாள். சின்னு அருகில் படுத்திருந்தாள். சின்னுவிடமிருந்து  இளங்குறட்டை வந்தது. அவளுடைய சின்னப் புருவங்களும், கூர்மையான நாசியும் அவளுடைய அழகுக்கு மெருகூட்டின. சின்னுவோடு வாழப்போகிறவன் கொடுத்து வைத்தவன். சின்னு சின்ன வயதிலேயே அம்மாவை இழந்தவள். அன்பைத் தேடித் தேடி அலைபவள். சின்னதாய் அன்பு செலுத்தும் ஜீவனையும் பாய்ந்து பாய்ந்து நேசிப்பவள். அன்பைக் கண்டறியாத சின்னுவுக்கும், அன்பு என்பதே மறந்துபோன அனுவுக்கும் இடையேயான நட்பு அவர்களுக்குத் தந்த ஆறுதல் போல வேறெதுவும் தரவில்லை. சாப்பிடும்போது சின்னு கொடுத்த முத்தம் நினைவுக்கு வந்தது. அனுவுக்கு கண்களில் நீர் திரண்டது. பதிலுக்கு இப்போது அவளை முத்தமிட வேண்டும்போல் தோன்றியது அவள் உறக்கத்தைக் கலைக்க மனமில்லாமல் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள்.

ஆனால் மனம் அனபை எப்படியாவது வெளிப்படுத்தச் சொல்லி அலறியது. தன் கரங்களால் மெல்ல அவள் உறக்கம் கலையாதபடிக்கு அவள் தலையைக் கோதினாள். லேசாகப் புரண்டு படுத்தாள் சின்னு. ‘’என்னைப் பிடிச்சிருக்கா?’’ என்று சன்னமாக அவள் இதழ்கள் முணுமுணுத்தன. கனவு காண்கிறாள் போலிருக்கிறது. கனவில் வந்த ராஜகுமாரன் யாரோ? அனுவின் முகத்தில் புன்னகை அரும்பியது. தானும் அவள் அருகில் படுத்துக்கொண்டாள். ஆனால் உறக்கம் மட்டும் வரவில்லை.  கண்கள் திறந்தபடியே இருந்தன. மனம் மட்டும் எங்கெங்கோ சென்று விட்டு   மீண்டு, பின் மறுபடி மறுபடி எங்கோ சென்று மீண்டு வந்தது.

செந்தில் கண்களை மீண்டும் மூடிக்கொண்டான். உறங்குவது போலும் சாக்காடு. இப்படியே போய்விட்டால் நன்றாக இருக்கும். நீண்ட கனவு வருவது போலவே நீண்ட தூக்கமும் வந்து விட்டால் இனி ஜென்மத்துக்கும் எழ வேண்டியதில்லை. அம்மா, அப்பாவின் கோபக்குரல்களையும் ஒப்பாரிகளையும் கேட்கவோ பார்க்கவோ வேண்டியிருக்காது. கனவே! வா! வந்துவிடு! என் துயர் துடைக்க வந்து விடு! என்னை இந்த உலகை விட்டு நீங்க வைத்து எங்காவது அழைத்துச் சென்று இந்த பிரபஞ்சத்தை சுற்றிக் காண்பிப்பாயா? மானுட துன்பம் நீங்கி, என் ஆசை, காதல்,  காமம், உடல் குறித்த பிரக்ஞையற்ற ஒரு வெளிக்குள் என்னை திணிப்பாயா? உடல் கரைந்து உருகி...எலும்புகள் உடைந்து நொறுங்கி, உறுப்புகள் தூள் தூளாக சிதறி வெறும் மனம் மட்டுமே உலவும் இடமென்று எங்கேனும் இருந்தால் என்னை அங்கே கொண்டு சேர்ப்பாயா கனவே! – அவன் மனம் அரற்றியது. அவன் உறக்கம் கனவைத் தேடித் திரிந்து...இதோ..கண்டடைந்தும் விட்டது. கனவு அவனை நெருங்கியது.

கனவில் வகுப்புப் பையன்கள் அவனைக் கண்டதும் தெறித்து ஓடுகிறார்கள். அசூயையாய் விலகிச் செல்கிறார்கள். இவன் அழுகிறான். கனவிலுமா? இங்குமா? இங்குமா? வேண்டாம்! கனவைத் துரத்த முயன்று தோற்றுப் போகிறான். கனவு அவனைத் துரத்தியபடியே இருந்தது. இந்தக் கனவில் அவளாவது வரக்கூடாதா? அவள்..அவள்..என்றால்..அவள் பெயர் செல்வி. இவன் வகுப்பின் ஒரே மாணவி.. அவள் மனதை வெல்வது யார் என்பதில் பையன்கள் மத்தியில் கடும் போட்டி  இவனுக்கு மட்டும் அவளிடம் அப்படியெதுவும் தோன்றியது இல்லை. ஆனால் செல்வியை அவனுக்குப் பிடிக்கும். ’நீயாவது வா செல்வி! வந்து என்னைக் காப்பாற்று இந்தக் கொடுமையிலிருந்து...’ இதோ.... இதோ.. வந்துவிட்டாள். அவன் ஓடிச் சென்று அவள் கரம் பற்றுகிறான். அவளோ பயந்து உதறுகிறாள். அவன் அவளை விடாமல் பற்றிக்கொண்டு நிற்கிறான். அவள் பதட்டம் தணிந்து நடுக்கம் குறைந்து மெலிதாய் புன்னகைக்கிறாள். இவன் நிம்மதியடைகிறான். ’’செல்வி..! முடியல செல்வி...எதெல்லாம் நடக்க்க்கூடாதுன்னு நினைக்கிறேனோ அதெல்லாம் கனவுலயும் நடந்தா எப்படி. அதான்.. நீ வந்தா நல்லாருக்குமேன்னு நினைச்சேன். வநதுட்டே..கிளாஸ்ல யார் கிட்டயும் பேசப்பிடிக்கலை உன்னைத் தவிர.  சீனு, ஜேம்ஸ்கிட்டக் கூட பேசுறது குறைஞ்சு போச்சு. எப்பவும் நீ என் ஃபிரண்டா இருப்பியா?’’ – இவன் செல்வியிடம் அரற்றினான். அவள் ஆதரவாய் அவன் கரம் பற்றுகிறாள். ‘’நான் இருக்கேன் உனக்கு!’’ என்கிற மூன்று சொற்கள் அவள் கரங்களின் வழியே அவனுக்குள் இறங்குகின்றன.

சட்டென்று செல்வி காணாமல் போகிறாள். மீண்டும் அம்மாவும் அப்பாவும் வந்து அழுகிறார்கள். அவன் அவர்களை துரத்துகிறான். செல்வியின் வருகைக்காக காத்திருந்தான். அவள் வரவில்லை. பதிலுக்கு சீனு வந்தான். சீனுவைப் பார்த்ததும் நிஜத்தில் வரும் படபடப்பை இப்போதும் கனவிலும் உணர்கிறான் செந்தில். சீனு கருப்புக்கும் சிகப்புக்கும் நடுவில் மாநிறம். சிரித்தால் கன்னத்தில் குழி விழும். சீனு ஒரு அழகன். சிறு வயதிலிருந்து ஒன்றாக விளையாடித் திரிந்த இருவருக்குள் ஏதோ ஒரு திரை விழுந்தது போலாகி விட்டது இப்போதெல்லாம். அவனைப் பார்த்தாலே செந்திலுக்கு லேசான படபடப்பு தோன்றி விடுகிறது. இயல்பாக அவனோடு பேச முடியவில்லை. இந்த விலகல் ஏன் என்பது சீனுவுக்குத் தெரியுமா? தெரியாது என்றுதான் தோன்றியது செந்திலுக்கு. அவனிடம் பேச முடியவில்லை என்றாலும் அவனைப் பார்ப்பதே கூட போதுமானதாக இருந்தது

சீனு அவனருகே வருகிறான். ‘’ஏண்டா! இப்போவெல்லாம் சரியா பேச மாட்டேங்குற? என்னாச்சு?’’  என்கிறான். இவன் தலைகுனிந்து நிற்கிறான். இந்த வார்த்தையை நிஜத்தில் அவன் கேட்க மாட்டானா என்று துடித்திருக்கிறான் செந்தில். ஆனால் ஒருபோதும் அவன் கேட்டதில்லை. இவன் விலக விலக அவனும் விலகியே சென்றான். ஆனால் இப்போது கனவில் வந்து கேட்கிறான். அவனிடம் எதைச் சொல்வது? மௌனமாய் நிற்கிறான். அருகில் வந்த சீனு மெதுவாய் அவன் கைகளைப் பற்றி தன் கைகளுக்குள் வைத்துக்கொள்கிறான். செந்தில் உடலுக்குள் மெலிதான மின்சாரம் பாய்ந்து நரம்புகளில் ஏற...வெடுக்கென்று கையை எடுத்துக் கொள்கிறான். கனவு இங்கே தடைப்பட... திடுக்கிட்டு விழித்தவன் தன் உடல் நடுங்குவதை உணர்ந்தான். வியர்த்துக் கொட்டியது. அந்தக் கணம், அடிக்கடி இப்போதெல்லாம் தோன்றுகிற அதே உணர்வு. மிக அந்தரங்கமாய் தன் தொடைகளுக்கிடையே அனாவசியமான இடைச்செருகலொன்றை உணர்ந்தான்.

எப்போது இப்படியான ஒரு உணர்வு தோன்றியது என்று யோசித்துப் பார்த்தான் செந்தில். சரியாய்த் தெரியவில்லை. உடலின் ஒவ்வொரு அணுவிலும அவன் தன் ஆண்தன்மையின் மிச்ச சொச்சம் அழிந்து கொண்டிருப்பதை உணர்ந்து ஆண்டுகளாகி விட்டன. அப்பாவும் அம்மாவும் எப்போது எப்படி கண்டுபிடித்தார்கள் என்று இவனுக்குத் தெரியவில்லை. ஆனால் இவனை வெறுக்க ஆரம்பித்த்தை மட்டும் அவன் உணர்ந்து கொண்டான். ஆனால் அதிலிருந்து அவனை அப்பா பார்க்கிற பார்வையில் அசூயையும், அம்மா பார்க்கிற பார்வையில் துயரமும் அவனைக் கொன்றன. பெண்ணுடலோடு இருக்கும் மனிதர்களைப் பார்க்கையில் பொறாமை வந்த்து. ஏக்கம் தின்றது. எந்த அழகான பெண்ணைப் பார்த்தாலும் அவள் அணிந்திருக்கும் உடையைப் போன்றதொரு உடையை தான் அணிந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி கற்பனையில் மிதந்தான். சினிமா பார்க்கும்போது கதாநாயகியின் இட்த்தில் தன்னை வைத்துப் பொருத்திப் பார்த்து “என் கிட்ட யாராவது இப்படி நடந்துக்கிட்டா அவன் அவ்வளவுதான்’’ என்று பெண் பாத்திரத்தோடு மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான். அழகான ஆண்களைப் நிரம்பப் பிடித்த்து. தன் பாலியல் விழைவுகளை சமூகத்தில் உள்ள மற்ற பெண்களைப் போலவே அடக்கக் கற்றுக்கொண்டான். பெண்மையின் நெருப்பு அவனுக்குள் கொழுந்து விட்டெரிந்த்து. அதன் தீப்பிழம்புகள் அவனைச் சுடத் தொடங்கியபோது அவன் செய்வதறியாது திகைத்தான். யாரிடம் சொல்ல? எப்படி சொல்ல? என்னவென்று சொல்ல?

ஜேம்ஸ் வந்தான் ஒரு நாள். “உனக்குள் ஒரு பெண் இருக்கிறாள்!’’ என்றான். அவனையே பார்த்தான் செந்தில். ஒரு துளி நீர் விழிகளிலிருந்து வெளிப்பட்டு நதியாகி கடலானது. என்ன இது? எது அவன் அந்தரங்கமோ, எதற்கு அவன் பயப்பட்டானோ, எதைச் சொல்ல எண்ணியும் சொல்ல முடியாமலும் தவித்தானோ, அதை சர்வசாதாரணமாகச் சொல்கிறான் ஜேம்ஸ். செந்தில் கதறினான். ஜேம்ஸ் அருகில் வந்து அவன் தோளைப் பற்றி தன் மார்போடு அணைத்துக்கொண்டான். இப்போது செந்திலின் கரங்கள் சீனு தொடும்போது நடுங்குவது போல் நடுங்கவில்லை. மனம் படபடக்கவில்லை. சீனு தொட்டால் மட்டுமே அத்தகையதொரு உணர்வு. அதற்குப் பெயரென்ன? தெரியவில்லை. ஆனால் ஜேம்ஸின் அணைப்பில் தன்னுடலை ஒப்படைத்துவிட்டு செந்தில் நிர்வாணமாய் நிற்பவன் போல் நின்றான்

செந்தில் இதுநாள் வரை வெளியே தெரியாமல் பொத்திக் காப்பாற்றிய பெண்மை உள்ளுக்குள் உறங்கிப் போக, உலகம் அவனைப் பார்த்த ஆண்மையும் மறைந்து போக, ஜேம்ஸின் மனிதம் விழித்துக்கொண்டு செந்திலை அரவணைக்க, பால்பேதமற்ற இரு உடல்கள் தழுவிக்கொண்டன. ஜேம்ஸ் கண்டறிந்த உண்மையை அவன் எந்த ஆரவாரமுமின்றி சொன்னை விதத்தில் ஒரு கண்ணில் ஆனந்தக் கண்ணீரும், ஒரு கண்ணில் துயரக்கண்ணிருமாய் வழிய, கண்ணீரைத் துடைக்காமலும் கூட அவனைக் கட்டிக்கொண்டு கதறினான் செந்தில். அந்தக் கண்ணீரில் அவனுக்குள் மிச்சமிருந்த ஆண்மையை துளித்துளியாய் வெளியேற்றினான். அவன் அழுது தீரும் வரை அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு, முதுகில் ஆதரவாய்த் தட்டிக்கொடுத்தான் ஜேம்ஸ். ‘’ஒண்ணுமில்ல! சரி பண்ணிடலாம்!’’ என்பதே அவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகள். “இந்த உடம்பு வேணாம் ஜேம்ஸ்’’ – கதறிக்கொண்டே இருந்தான் செந்தில்.  

னுவின் புகைப்பட ஆல்பத்தையெடுத்து பார்த்துக்கொண்டிருந்தாள் சின்னு. தோழிகளோடு கடற்கரையில் எடுத்தது, ம்காபலிபுரத்தில் சிற்பங்களுக்கு மத்தியில் நின்று எடுத்துக்கொண்டது, மும்பையின் தாராவி பகுதியில் உள்ள தமிழர்களோடு எடுத்தது என்று விதவிதமாய் புகைப்படங்கள்....பார்த்துக்கொண்டே வந்தவள் ஒரு புகைப்படத்தைப் பார்த்ததும் நிமிர்ந்து இவளைப் பார்த்தாள். அது கல்லூரி காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு குரூப் போட்டோ. அதில் ஒரே ஒரு முகத்தின் மேல் மட்டும் கருப்பு மை பூசப்பட்டிருந்தது. சின்னு நிமிர்ந்து புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

”ஏன் இப்படி கிறுக்கி வச்சுருக்கே?’’

‘’அது எதுக்கு இனிமே? பழசை நினைவுபடுத்தும் எதுவுமே வேணாம்  அதான் கருப்புப்பேனாவால் கிறுக்கி முகத்தை மறைச்சு வச்சிருக்கேன். கிழிச்சுப் போட்டுடலாம்னு நினைச்சேன். ஆனா மத்தவங்க முகத்தை நான் பார்க்கணுமில்லையா? அதனால தான் வச்சிருக்கேன்’’

அனு சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டு கொஞ்ச நேரத்தில் உறங்கிப் போனாள்.  

கனவு காணத் தொடங்கினாள் அனு. கனவில் ஜேம்ஸ் தூரத்தில் புள்ளியாய்த் தெரிய, செல்வி சற்று தொலைவில் நிற்கிறாள். சீனு இவளைப் பார்த்து புன்னகைத்து அருகில் வந்து அவள் கரத்தை எடுத்து தன் கைகளுக்குள் பொத்திக் கொள்கிறான். ஒரு வெப்பக்கடத்தி போல அவன் கைகளின் சூடு இவள் உடலில் பரவ, நிஜத்தில் இவள் உடல் சிலிர்த்தது. சட்டென்று சீனு காணாமல் போய்... அம்மாவும் அப்பாவும! இவளைக் கண்டதும் வழக்கம் போல அழுகிறார்கள். 

கனவு நீண்டு கொண்டிருக்கிறது!

Friday, October 14, 2011

முகவரியற்றவள்

எங்குமிருப்பேன்
நேற்று அங்கே
இன்று இங்கே
நாளை எங்காவது
நான்கு சுவர்களும் மேற்கூரையும்
எனக்கானதல்ல

அணை கட்ட முயல்கிறாய்
பாதாளத்தில் தள்ளுகிறாய்
மணலைத் தின்று செரிக்கும் சமுத்திரமும்
புதையல்களோடு வருபவளும் நான்

கருமையைப் பூசுகிறாய்
கடுங்குளிர் காற்றைத் திருப்புகிறாய்
இருள்
துருவப் பறவை
இரண்டும் நான்

புனைவுகளைத் தின்கிறாய்
புதைகுழிக்குள் தள்ளுகிறாய்
கனவுகளின் தொழிற்சாலை
ஈர்ப்பு விசைத் தத்துவத்திற்கு சவாலும் நான்



சுவாசத்தைத் திருடுகிறாய்
இடுகாட்டில் தள்ளுகிறாய்
சகல உயிர்களுக்குமான மூச்சுக் காற்றும்
எகிப்தியப் பிரமிடுகளில் வாழ்பவளும் நான்

அனலைக் கக்குகிறாய்
கிழிந்த என் உடுப்புகளை எள்ளி நகையாடுகிறாய்
அணைக்க முடியா நெருப்பும்
நிர்வாணசாந்தி அடைந்தவளும் நான்

எனக்கு முகவரியளிக்க முயல்கிறாய்
புவிக் கோளத்தின் கானகங்களில் வேட்டையாடி
இறைச்சியையும் காய்கனிகளையும் கொணர்ந்து
கார்முகிலில் நீரெடுத்து
சூரியனின் தகிப்பில் உணவு சமைத்து
சந்திரனின் முதுகிலமர்ந்து உண்டு களித்து
வெண் பஞ்சு மேகப் பொதிகளில் உறங்கியெழுந்து
நட்சத்திரங்களுக்கிடையே அண்டவெளியில் தாவி விளையாடி
கோள்களுக்கிடையே ஊஞ்சல் கட்டியாடுகையில்
மின்னல் விழுதைப் பிடித்து மீண்டும் பூமிக்கு வந்து
இப்பிரபஞ்சத்தை இணைப்பவள் நான்
பிரபஞ்சம் முழுவதும் என் வாழிடம்

என் காலத்தைப் பறிக்காதே
நானொரு சகாப்தம்.

Friday, October 07, 2011

வாச்சாத்தி வலி!

நின்று வென்ற நீதி!

ர்மபுரி மாவட்ட நீதிமன்ற வளாகம். அந்தத் தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் கூடியிருந்த வாச்சாத்தி கிராம மக்களின் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. காலம் கடந்து தீர்ப்பு வந்திருந்தாலும், 19 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைத்ததாகவே அவர்கள் எண்ணினர்.

 ''அந்தக் கண்ணீர் ஆனந்தக் கண்ணீரா, துயர நினைவுகளால் உருவான கண்ணீரா என்றெல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடு இருந்தோம்'' என்கிறார் 19 ஆண்டுகளாகப் பல வகைகளிலும் போராடி இந்தத் தீர்ப்பைப் பெற்றுத் தந்திருக்கும் மலைவாழ் மக்கள் சங்கத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான பெ.சண்முகம்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 269 பேர். இவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். எஞ்சிய 215 பேரையும் குற்றவாளிகள் என்று அறிவித்து, அவரவர் செய்த குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே இருக்கிறது வாச்சாத்தி. சந்தனக் கட்டைகளைத் தேடப் போன வனத் துறையினரும் காவல் துறையினரும் வருவாய்த் துறையினரோடு கூட்டணி அமைத்துக்கொண்டு, 1992-ம் ஆண்டு ஜூன் 21, 22, 23 தேதிகளில் இங்கு நடத்திய கொடூரத் தாக்குதல்களும் பாலியல் வன்முறைகளும் அச்சில் ஏற்ற முடியாதவை. சாட்சியம் கூறிய பெண்களின் வாக்குமூலங்களை வாசிக்கக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு வக்கிரத்தை அரங்கேற்றியது அரச அதிகாரம்.

''இந்திய நீதித் துறை வரலாற்றிலேயே இப்படி ஒரு தீர்ப்பு வந்தது இல்லை. இதில் புலனாய்வு செய்த சி.பி.ஐ-யின் பங்கு மிக முக்கியம். அதனாலேயே சி.பி.ஐ-க்கு சிறப்புத் தொகையாக ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டது. இதுவும் நீதித் துறைக்குப் புதியதுதான். ஒரே ஒரு ஏமாற்றம், பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களைத் தவிர, பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கவில்லை'' என்று மகிழ்ச்சிக்கு இடையே சின்ன ஆதங்கம் தெரிவிக்கிறார் சண்முகம்.


''1992-ல் அந்தக் கொடூரம் அரங்கேறி 25 நாட்களுக்குப் பிறகுதான் நாங்கள் கிராமத்துக்குள் சென்றோம். மயானம்போல் இருந்தது கிராமம். ஒருவர்கூட ஊரில் இல்லை. எல்லா வீடுகளும் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. ஊரே இருக்கக் கூடாது என்கிற வெறியோடு அங்கே ஒரு கொடூர தாண்டவம் நடந்திருப்பதை உணர முடிந்தது. ஒரு சந்தில், ஒரே ஒரு பெண் மட்டும் ஒளிந்து இருந்தார். எங்களைப் பார்த்ததும், நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று உணர்ந்ததும் எங்கள் அருகில் வந்தார். அவர் சத்துணவு ஆயா என்பதால், அவரைச் சிறையில் அடைத்தால் பிரச்னையாகிவிடும் என்று அவரை மட்டும் வெளியே விட்டு வைத்திருந்தது காவல் துறை. அவர் தான் காட்டுக்குள் 25 நாட்களாக ஒளிந்திருந்த ஊர் மக்களில் 40 பேரை அழைத்து வந்து எங்களிடம் உண்மை நிலையைச் சொல்ல வைத்தார்.

தேடுதல் வேட்டைக்கு வந்த காவலர்கள் ஒரு மரத்தடிக்கு இழுத்து வந்து எல்லோ ரையும் அடித்து உதைத்து இருக்கின்றனர். அவர்களில் சில பெண்களை மட்டும் வண்டியில் ஏற்றி ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று சிதைத்து இருக்கிறார்கள். அவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக மீண்டும் ஊருக்குள் வந்தபோது, உறவினர்களிடம் ஒப்படைக்காமல் வனத் துறை அலுவலகத்தில் அடைத்துவிட்டனர். அதனால், அவர்களுக்கு நேர்ந்த கொடுமை ஊருக்குள் எவருக்கும் தெரியாமலேயே போய் விட்டது.

அங்கும் அவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும் வக்கிரக் கொடுமைகளும் தொடர்ந்தபடியே இருந்திருக்கின்றன. காவலர்கள் முன்னிலையிலேயே பெண்களைச் சிறுநீர் கழிக்கச் சொல்வது, சாப்பிட்டு முடித்த எச்சங்களைக் கொடுத்து உண்ணச் செய்வது என்று இயல்பான மனித மனம் யோசிக்க முடியாத வன்முறைகள் அவை!

அப்படியே சத்தம் காட்டாமல் அவர் களை சேலம் சிறையில் அடைத்துவிட்டார்கள். அந்தப் பெண்களைப் பார்க்க நாங்கள் சிறைக்குச் சென்றபோது, அங்கிருந்த பெண் வார்டன் ஒருவர் மனம் பொறுக்காமல் நடந்த கொடுமைகளை எங்களிடம் விவரித்தபோதுதான், சம்பவங்களின் தீவிரம் எங்களுக்கு உறைத்தது!

அந்த 18 பெண்களில் ஒரு பெண் நிறைமாதக் கர்ப்பிணி. அவருக்கு சிறையிலேயே பிறந்த குழந்தைக்கு 'ஜெயில் ராணி’ என்று பெயர்வைத்தார். முதிய பெண் ஒருவர், உடல் ஊனமுற்ற பெண் எனப் பலவீனமான பலர் அந்தக் கும்பலில் அடக்கம். அதில் எட்டாம் வகுப்பு மாணவியான 13 வயதே ஆன செல்வி என்கிற சிறுமி, 'அன்னிக்கு எனக்கு ஸ்கூல் லீவு சார். அன்னிக்கு மட்டும் எனக்கு ஸ்கூல் இருந்து இருந்தா, எனக்கு இப்படி ஆகியிருக்காது’ என்று கேவிக் கேவி அழுதபோது, அதிர்ச்சி யில் உறைந்துவிட்டோம் நாங்கள்.  எல்லாக் குழந்தைகளுக்கும் விடுமுறை என்பது சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆனால் அவளுக்கு மட்டும்...'' என்று நிறுத்தியவர், அதற்கு மேல் பேச முடியாமல் குரல் உடைந்து கண்ணீர்விட்டார்.

''வழக்குத் தொடுத்தோம். உயர் நீதிமன்றமோ 'அரசு அதிகாரிகள் இப்படி எல்லாம் நடந்துகொண்டு இருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை’ என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. கீழ்வெண்மணி வழக்கில் 'கோபாலகிருஷ்ண நாயுடு காரில் போகிறவர். சமூக அந்தஸ்து உள்ளவர். அவர் கொலை செய்திருக்க மாட்டார்’ என்று சொன்ன நீதித் துறைதானே? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலா ளராக இருந்த தோழர் ஏ.நல்லசிவன் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்குத் தொடந்தார்.

எங்குமே இல்லாத அதிசயமாக இந்த வழக்கில்தான் இன்று வரை காவல் துறை எஃப்.ஐ.ஆர். என்ற ஒன்றைப் போடவே இல்லை. 1,345 பேரை நிறுத்தி 1995-ல் நடந்த பிரமாண்ட அடையாள அணிவகுப்பில் ரகளை செய்தார்கள். நீதிபதியின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் அடையாள அணிவகுப்பு ரத்தானது. அதன் பின் உயர் நீதிமன்றம் தலையிட்டு, அடையாள அணிவகுப்பு நடத்தியாக வேண்டும் என்று கண்டிப்பாகச் சொன்னது. வேறு வழி இன்றி, 50... 50 பேராக அணிவகுப்பு நடத்தப் பட்டு, அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்டினார்கள்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கைக் கையாண்ட வழக்கறிஞர்கள் வைகை, சம்கிராஜ், இளங்கோ ஆகியோரின் பங்கு மகத்தானது. இந்த வழக்கை நடத்தக் கூடாது என்று பலப் பல கொலை மிரட்டல் கள், கொலை முயற்சிகள், தாக்குதல்களுக்கு இடையில் நாங்கள் கரை சேர்ந்திருக்கிறோம்.

அன்றைய அ.தி.மு.க. அரசில் வனத் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் இந்தக் கொடூரங்களை மூடி மறைத் தார். தமிழகமே கொதித்து எழுந்தபோதும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அது குறித்துச் சலனமே இல்லாமல் இருந்தார். இப்போதும் தீர்ப்பு வந்த பின்னர் அது குறித்துப் பெரிதாக அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை!'' என்று முடித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது எப்படி இருக்கிறார் கள்?

''வாச்சாத்திக் கொடூரங்களைப் பொது மேடைக்குக் கொண்டுவந்தால், அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்கிற உறுத்தல் இருந்தது. ஆனால், அவர்கள் அனைவரும் இன்று திருமணமாகி நல்ல நிலையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது'' என்கிறார் சண்முகம்.

அவர்களில் ஒருவரான பரந்தாயியிடம் பேசியபோது, ''தீர்ப்பு கிடைச்சப்போ எல்லாரும் கண்ணீர்விட்டோம். தண்டனை குறைவா இருக்குறதாத்தான் நாங்க நினைக்கிறோம். ஏன்னா, நாங்க அத்தனை கொடுமைகளை அனுபவிச்சு இருக்கோம். அவங்கள்லாம் ஜாமீன்ல வெளில வந்துட் டதாச் சொல்றாங்க. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 15,000 ரூபாய் தர்றதா சொல்லி இருக்காங்க. எங்க 20 வருஷக் கஷ்டத்தை இந்தக் காசு சரிபண்ணிடுமா?'' என்று கேட்கிறார்.

பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணான அமரக்கா, ''இந்தத் தண்டனை பத்தாது. எங்க ஊர் அத்தனை பாடுபட்டு இருக்கு. நான் இப்போ உள்ளாட்சித் தேர்தல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பா நிக்கிறேன். எதிர்த் தரப்புல ஓட்டுக்குக் காசு கொடுக்குறதா பேச்சு இருக்கு. மக்கள் காசுக்கு ஆசைப்படாம இருந்தா நான்தான் ஜெயிப்பேன்'' என்கிறார் உறுதியுடன்.

பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஊர் மக்களில் ஒருவராக இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் ஒரு பதவியைப் பெறுவதற்கு அமரக்காவுக்கு எத்தனை இடர்பாடுகள்? ஆனால், வாச்சாத்தி விவ காரத்தையே மூடி மறைத்த அப்போதைய அமைச்சர் செங்கோட்டையன் இப்போதும் அமைச்சர் என்பது எத்தனை முரண்!

பரமக்கா ஜெயிக்கிறாரோ இல்லையோ, போராடி அநீதியை வென்ற வாச்சாத்தி மக்களுக்கு ஒரு சல்யூட்!

நன்றி : ஆனந்த விகடன்

Monday, October 03, 2011

பதற வைக்கும் பரமக்குடி காட்சிகள்


வேனுக்குள் துடித்த முத்துக்குமாரின் உயிர்..
 
மிழகத்தையே உலுக்கி எடுத்துவிட்டது பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம். அதில் நிகழ்ந்த மரணங்கள், கேள்விப்படுகிறவரின் கண்களில் ரத்தம் கசிய வைப்பவை. இறந்துபோன சிலரது உறவுகளையும் சுற்றத் தாரையும் சந்தித்தோம். 

அந்தப் பெண் நிலை குத்திய பார்வையோடு உட்கார்ந்து இருக்க... கையில் வளைகாப்பு நடந்த அடையாளமாகக் கண்ணாடி வளையல்கள். இன்னோர் உயிரையும் சுமந்துகொண்டு இருக்கிறாள். ஆனால், அந்த உயிரைத் தந்த ஜெயபால் உயிரைக் காவல் துறை பறித்துவிட்டது. அவள் பெயர் காயத்ரி. திருமணமாகி ஓர் ஆண்டுதான் ஆகிறது. கலப்பு மணம் புரிந்த தம்பதி. பரமக்குடி - ராமநாதபுரம் சாலையில் உள்ள மஞ்ஞூரில் உள்ளது அவர்கள் வீடு. நிறைமாதக் கர்ப்பிணியாதலால் பரமக் குடியில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்ட மனைவியைப் பார்க்க பரமக்குடிக்கு வந்த ஜெயபாலுக்குதான் பரிசாகக் கிடைத்தது, துப்பாக்கிக் குண்டு!

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர் கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய உணமை அறியும் குழுவில் ஒருவராக, ஜெயபாலின் உறவினர்களை  சந்தித்தோம்.

''எம் புள்ள அந்த போஸ்ட் மரத்துல பாதி இருப்பான். ஆயுதம் இல்லாம வந்தா, பத்து கான்ஸ்டபிள்னாலும் சமாளிப்பான். பாவிக, அவனைத் துப்பாக்கியால சுட்டு... அப்படியும் சாகலைன்னு, மிதிச்சுக் கொன்னுருக்காங்க. என் புள்ளய சாக் கடையில தூக்கிப் போடப்போனப்பத்தான் 'ஏன்டா இப்புடி பண்றீங்க?’ன்னு ஒருத்தர் கேட்டிருக்கார். அந்த வயசானவரையும் கொன்னுட்டாங்க...'' என்று அரற்றுகிறார் ஜெயபாலின் அப்பா பாண்டி.

''நான் ஒரு பழ வியாபாரிங்க. என் பொண்ணை ஸ்கூலுக்குப் போகையில பார்த்துட்டு, என்கிட்ட வந்து 'கல்யாணம் பண்ணிக்கிறேன்’னு கேட்டுச்சு. மொதல்ல முடியாதுன்னேன். அந்தப் புள்ள என் பொண்ணு மேல ரொம்ப ஈர்ப்பா இருந்ததைப் பார்த்துட்டு, 'வேற சாதின்னாலும் பரவால்ல’ன்னு ஒப்புக்கிட்டுக் கல்யாணம் பண்ணிவெச்சேன். என் பொண்ண நல்லா வெச்சுக்குச்சு. ஆனா, இப்படி அல்பாயுசுல அநியாயமாப் போகும்னு யாரு நெனச்சா!'' என்று கலங்கினார் காயத்ரியின் தாய்.

இத்தனை பேர் பேசினாலும், காயத்ரி மட்டும் எதுவும் பேசவில்லை. பள்ளியில் படிக்கும்போது தடகள விளையாட்டு வீராங்கனை! ''அரசு கொடுத்த ஒரு லட்சம் ரூபாயைவைத்துக்கொண்டு இந்தப் பெண் எத்தனை நாளைக்குக் காலம் தள்ள முடியும்? அரசு வேலை ஏதாவது கிடைக்காதா..?'' என்பது ஜெயபால் தரப்பின் கோரிக்கையாக இருக்கிறது.

ஜெயபால், புதிய தமிழகம் கட்சியின் உறுப்பின ராக இருந்தாலும், தீவிரமாக அரசியலில் ஈடுபடு பவர் கிடையாது. 'பரமக்குடி சென்றவரைக் காணவில்லை’ என்று அவரது செல்போனுக்குத் தொடர்புகொண்டபோது, ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந் தது. குடும்பமே தவித்து நின்றிருக்கிறது. காலையில் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்து, விஷயத்தைத் தெரிந்துகொண்டவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ஓட, மாலை 5.30 மணி வரை முகத்தைப் பார்க்கவிடாமல் காவல் துறை அலைக்கழித்திருக்கிறது.

ஒரே பிள்ளையைப் பறிகொடுத்த ஜெயபாலின் தாய், எதுவுமே பேசாமல் வெறித்தபடி இருந்தார். இது மஞ்ஞூரில் நடந்த கதை. கனத்த மனதோடு, அடுத்த கிராமமான காக்கனேந்தல் போனோம்.
அங்கே இருந்து ஒரு திருமணத்துக்குச் சென்றவர், பிணமாய்த் திரும்பி வந்த சோகத்தை சுமந்துகொண்டு இருந்தது அந்த கிராமம்.

நண்பர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்ற வெள்ளைச்சாமியும் சின்னாளும் பரமக்குடிக்கு வரும்போது துப்பாக்கி சூடு நடக்கிறது. மறுநாள் காலை வரை இவர்கள் இருவரும் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. வெள்ளைச்சாமியின் பெயர் மட்டும் தொலைக்காட்சியில் இறந்தவர்கள் பட்டியலில் அறிவிக்கப்பட, சின்னாளின் கதி என்ன என்று கிராமமே தேடுகிறது. அவரும் இறந்துவிட்டதாக முடிவு செய்து குடும்பத்தினர் அழுதுகொண்டு இருந்த போது... பரமக்குடியில் இருந்து 25 கி.மீ. தூரம் நடந்தே தனது கிராமத்துக்கு வந்த 65 வயது சின்னாளைக் கண்டதும், கிராமமே சூழ்ந்துகொள்கிறது.


என்ன நடந்தது என்று சின்னாளிடம் கேட்டோம். ''ரெண்டு பேரும் பரமக்குடி வந்தப்போ, சாலை மறியல் நடந்துது. நாங்க அங்கே என்னன்னு புரியாமப் பார்த் துட்டே போனோம். எனக்கு பத்தடி முன்னால வெள்ளைச்சாமி போக... நான் பின்னால போனேன். திடீர்னு நான் பார்த்துக்கிட்டு இருக்குறப்பவே பெரிய கம்பால போலீஸ் அவரை அடிச்சுது. உடம்புல ஒரு இடம் விடலை. அத்தனை அடி..! நான் பயந்து போய் வாயடைச்சு நிக்க... என் காலிலும் போலீஸ் அடிச்சுது. நான் உடனே தலைதெறிக்க ஓடி, பக்கத்துல உள்ள கோயில் பக்கம் ஒளிஞ்சு நின்னு பார்த்தேன்.

வெள்ளைச்சாமியை ஆத்திரம் தீர்ற வரைக்கும் அடிச்சாங்க. வெள்ளைச்சாமியைத் துப்பாக்கியால சுடலை. அடிச்சேதான் கொன்னாங்க. என் கண்ணாலயே பார்த்தேன். அப்புறம் போலீஸே தூக்கிட்டுப் போய் ஒரு வண்டியில ஏத்துச்சு. நான் வெளிய வரப் போனேன். அப்போ அங்கே பக்கத்து வீட்டுல இருந்த ஒரு பொம்பளைப் புள்ள, 'அங்கே போகாதீங்க. உங்களையும் அடிச்சே கொன்னுடுவாங்க’ன்னு அவுங்க வீட்டுக்குள்ள கூப்பிட்டு வெச்சுருந்துச்சி. அந்தப் புள்ள இல்லேன்னா, நானும் அப்பவே செத்திருப்பேன். பஸ் ஓடலைங்கறதால மறுநாள் நடந்தே ஊருக்கு வந்தேன்...'' என்றார் திகிலாக.

அடுத்து இன்னொரு கிராமத்தின் துயரம் இது. காக்கனேந்தலில் இருந்து நயினார் கோவில் போகும் வழியில் இடதுபுறச் சாலையில் இருக்கிறது பல்லவராயனேந்தல். அங்கிருந்து தன் மகன் திருமணத்துக்கு, 11-ம் தேதி பரமக்குடியில் உள்ளவர்களுக்குப் பத்திரிகை வைக்கச் சென்றார் கணேசன். போன இடத்தில் துப்பாக்கி சூட்டுக்குப் பயந்து ஓடிய அவரது நெஞ்சுப் பகுதிக்குக் கீழே குண்டு பாய்ந்து இறந்துபோனார்.

அவர் குடும்பத்தார் நம்மிடம், ''அவர் இறந் தாலும் அந்த சோகத்தி லும், கல்யாணத்தை முடிச் சிட்டோம். நின்னுருச்சின்னா அந்தப் பொண்ணுக்கு மறுபடியும் கல்யாணங்கிறது கனவாப் போயிருமே... அவர் இருந்து நடத்திவெச்சிருக்க வேண்டிய கல்யாணம் இது. ஆனா...'' என்று மேற்கொண்டும் பேச முடியாமல் அழுதனர்.

அடுத்த உயிர்ப் பலி... வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர். தன் மகளைப் பார்ப்பதற்காக பரமக்குடி வந்த பன்னீர், செப்டம்பர் 11-ம் தேதி காலை 11.30 மணிக்கு தன் மகள் ரெபெய்க்காளிடம், ''இங்க பதற்றமா இருக்கு. கவலைப்படாதே! வந்துடுறேன்...'' என்றிருக்கிறார். ஆனால், அதன் பின் கொஞ்சநேரத்தில் செல்போன் அணைந்து போக... தந்தையைக் காணாமல் இவர் தேட... இரவு 7.30 மணிவாக்கில் மீண்டும் செல்போன் ஆன் செய்யப்பட்டு... போலீஸ்காரர் ஒருவர்தான் பன்னீரின் பெயர், ஊர் என்று எல்லா விவரங்களையும் அவரது மகளிடம் கேட்டிருக்கிறார்.

ரெபெய்க்காள் நம்மிடம், ''எல்லா விவரத்தையும் கேட்டுட்டு, அப்பா இறந்த சேதியைக்கூட போலீஸ் சொல்லலை. அப்பாவின் நெற்றியில் குண்டு பாய்ந்த காயம் இருந்தது.. உடல் பூராவும் லத்தியால் அடிச்ச காயங்களும் இருந்துச்சு...'' என்று கேவினார்.

சடையனேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமாரும் இந்த சம்பவத்தில் உயிர்விட்டவர். இவரது உடலைக் காட்டுகிறேன் என்று சிவகங்கை, இளையான்குடி, ராமநாதபுரம், மதுரை என்று குடும்பத்தினரை இழுத்தடித்திருக்கிறது போலீஸ். 11-ம் தேதி இம்மானுவேல் குருபூஜையில் கலந்துகொள்ள பரமக்குடி சென்றார் முத்துக்குமார்.  இவருடைய வலது பக்க விலாவில் குண்டு பாய்ந்து... போலீஸ் அவரை இளையான்குடி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. அப்போதும் அவருக்கு உயிர் இருந்திருக்கிறது. முதலுதவி செய்யப்பட்டு மதுரைக்கு மாற்றப்பட்டார். அங்கே இரவு 9.30 மணி வரை உயிருடன் இருந்தவர், அதன் பின்தான் இறந்திருக்கிறார்.
அடுத்ததாக இறந்துபோன தீர்ப்புகனி, கீழக்கொடும்பளூரைச் சேர்ந்தவர். பரமக்குடிக்கு காலையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர், துப்பாக்கிச் சூடு நடப்பதைப் பார்த்தவுடன் அப்படியே தனது வாகனத்தை அங்கேயே ஓர் இடத்தில் விட்டுவிட்டுக் கிளம்பி இருக்கிறார். நிலைமை ஓரளவு சரியானது போல் தெரிந்து, மாலை 4 மணிக்கு தன் வாகனத்தை எடுக்க வந்தவரைப் பிடித்துக்கொண்டது போலீஸ். அவரை அடித்து இழுத்துப் போனதைப் பார்த்ததாக அவருடைய பெரியப்பா எஸ்.பி.முனியாண்டி நம்மிடம் சொன்னார்.

''கை ரெண்டையும் பின்னாடி கட்டிவெச் சுட்டு, லத்தியால அடிச்சுக்கிட்டே போலீஸ் வண்டியில அவனை ஏத்துனதை நான் பார்த்தேன். அப்புறம் ஒரு தகவலும் இல்ல. மதுரையில் தீர்ப்புகனி உடல் இருப்பதாத் தகவல் தெரிஞ்சு போய்ப் பார்த்தப்போ, அவன் உடம்புல இருந்த துணி எல்லாம் காணோம். அவனோட பனியனை மட்டும் இடுப்பில் சுத்தியிருந்தாங்க. மண்டையில் அடிச்சு, பின்னந்தலையே பிளந்து இருந்துச்சு. குதிகாலில் சின்னதா ஒரு ரத்தக் காயம். குண்டு பாய்ஞ்ச அடையாளமே இல்லை!'' என்றார் சோகமாக.

''இந்தத் திட்டமிட்ட தாக்குதல் தேவைதானா?'' என்ற கேள்வியுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராயை சந்தித்தோம்.
''துப்பாக்கி சூடு நடந்தது எனக்குத் தெரியாது. நடந்து முடிந்தவுடன் தாசில்தார் எனக்குத் தகவல் சொன் னார். நான் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடவில்லை. இந்த நிலைமையை வேறு மாதிரி கையாண்டிருக்கலாம் என்பதை விவாதரீதியாக ஒப்புக் கொள்கிறேன். ஆனால், துப்பாக்கிச் சூட்டின் பின்னால் சதி இருக் கிறது என்கிற சந்தேகம் தேவையற்றது. பரமக்குடி நகரின் பாதுகாப்புக்காகவே போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது!'' என்று மட்டும் சொன்னார்.

நடந்து முடிந்த துப்பாக்கி சூட்டின் முதல் தகவல் அறிக்கையில், தானே முதலில் சுட்டதாக ஒப்புக்கொண்டு இருக்கும் பரமக்குடி இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை சந்தித்தோம். ''விசாரணை கமிஷன் அமைத்த பின்னால், நான் எதுவும் பேசக் கூடாது!'' என்றார். ''மாவட்ட ஆட்சியர் இது குறித்துப் பேசுகிறார். நீங்கள் பேச மறுக்கிறீர்களே?'' என்று கேட்டபோது, ''அவர் சம்பவத்தோடு சம்பந்தப்படவில்லை. நான் நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பதால் பேச முடியாது!'' என்றார் திட்டவட்டமாக. தனது முதல் தகவல் அறிக்கையில், 'சாலை மறியல் செய்தவர்கள் தாக்கியதில் தனக்குப் பலத்த காயம் பட்டதாகவும், அதன் காரணமாகவே துப்பாக்கி சூடு நடத்த வேண்டி வந்தது’ என்றும் தெரிவித்திருக்கிறார் சிவக்குமார்.

அரசாங்கம் அமைத்துள்ள விசாரணை அறிக்கை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்!

கவின் மலர்
நன்றி : ஜூனியர் விகடன்