Wednesday, February 22, 2012

மின்மினி வெளிச்சம்

ராசுவுக்கு அன்றைக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. பையை எடுத்துக் கொண்டு, போகலாமா... வேண்டாமா என்கிற யோசனையோடு ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்தான். ஒரு குச்சி ஐஸ் வண்டி போனது. நிறுத்தி ஐஸ் வாங்கித் தின்றான். சப்பிச் சப்பி வெறும் குச்சியை நக்கிக்கொண்டே பள்ளிக்கூடத்தைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டான். காம்பவுண்ட் சுவர் அருகே வந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தவாறே உள்ளே நுழைந்தான்.

 வகுப்பில் வாத்தியார் பாடத்தைத் தொடங்கி இருந்தார். வாசல் அருகே நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தார்.

''வாங்க சார்... நீங்க மட்டும் ஏன் லேட்டு?' - அவர் குரலில் கேலி தொனித்தது.

இவன் மௌனமாக நின்றான். 'கேக்குறேன்ல... சொல்லு!' என்று அதட்டினார். பள்ளிக்கூடம் போகப் பிடிக்காமல் அன்ன நடை போட்டு, யோசித்து நின்று நின்று வந்ததை எப்படி அவரிடம் சொல்ல முடியும்? விழித்தான் ராசு.

''என்ன திருட்டு முழி முழிக்குற? பதில் சொல்லு... படிக்கிறதைத் தவிர, மத்தது எல்லாம் செய்யப் புடிக்கும் உனக்கு. பாட்டுப் பாடுறது, ஆட்டம் போடுறதுன்னா போதும்... மொதப் பரிசு. படிக்க மட்டும் வலிக்குதோ? பள்ளிக்கூடத்துக்கு நேரத்துக்கு வரணும்னு தெரியாதா?'' - வாத்தியார் அதட்ட, தன் சின்னக் கண்களை உருட்டி உருட்டி அவரையே பார்த்தான் ராசு.

கையில் இருந்த பிரம்பால் அவனை முழங்காலுக்குக் கீழே ஒரு அடி அடிக்க... சுளீரென்று வலித்தது. இரண்டு கால்களையும் தரையில் பதிக்காமல் வெயிலின் சூடு தாங்காமல் தார் சாலையில் நடப்பவன்போலத் துடித்துக் குதித்தான். பிரம்பு பட்ட இடத்தில் எல்லாம் சிவந்து தடித்துவிட்டது. வலியில் துடித்தவனுக்கு வாத்தியார் மேல் கோபம் வந்தது.

கூடப் படிக்கும் அத்தனை பேரையும் பார்த்தான் ராசு. எல்லோரும் பேன்ட் அணிந்து இருந்தார்கள். இவன் மட்டும்தான் அரை டவுசர். அவர்களைப் போல பேன்ட் சட்டை போட்டு இருந்தாலாவது பரவாயில்லை. நேரடியாகக் காலில் அடிபடாது. இவனும் அப்பனிடம் பல முறை பேன்ட் போட வேண்டும் என்று கேட்டுவிட்டான்.

'ஒன் ஒசரத்துக்கு இப்ப அந்த பேன்ட்டை மாட்டிக்கிட்டுத் திரியணுமாக்கும்? எல்லாம் வளந்த பின்னாடி பார்த்துக்கலாம்'' என்று அவன் கேட்கும்போது எல்லாம் தட்டிக் கழித்துவிடுவான் அப்பன். காசு பணத்துக்குப் பயந்துதான் அவ்வாறு பொய் சொல்கிறான் என்பது ராசுவுக்குத் தெரியாது. நிஜமாகவே தான் வளராததால்தான் அப்பன் பேன்ட் எடுத்துக்கொடுக்கவில்லை என்று நம்பினான். வளராத தன் கால்களின் மீது அவனுக்குக் கடுமையான அதிருப்தி இருந்தது. வளராததற்கு முழு உடம்பின் மீதுகூட அவனுக்குக் கோபம் இல்லை. தன் கால்களின் மீதுதான் முழுக் கோபமும். அது மட்டும்தான் மனிதர்களை உயரமாகக் காண்பிக்கிறது என்பது அவனுடைய திடமான எண்ணம். இடுப்புக்கு மேலே இருக்கும் உடல் பகுதிக்கும் உயரத்துக்கும் சம்பந்தம் இருக்கும் என்று அவன் கற்பனை கூடச் செய்யவில்லை.

ஒருமுறை ஊரில் கூத்துக் கட்டுவதற்குப் பக்கத்து ஊரில் இருந்து வந்திருந்த மாரியின் கட்டைக் காலை எடுத்து ஒளித்துவைத்து விட்டான். அதைக் கட்டிக்கொண்டு நடந்தால் தான் உயரமாகிவிடலாம் என்பது ராசுவின் எண்ணம். ஆனால், இவன் கெட்ட நேரம், கட்டைக் காலை எடுத்துக்கொண்டு வரும்போது மாரியின் ஆட்டக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண் பார்த்துவிட்டாள். அவள் மாரியிடம் சொல்லிவிட, அவன் தேடி வந்தபோது, இவன் மட்டும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அதைக் கட்டிக்கொண்டு நடந்து பார்த்து, தடுக்கித் தடுக்கி விழுந்துகொண்டு இருந்தான். மாரியைப் பார்த்ததும் ராசுவுக்குக் கட்டைக் காலை நிஜக் காலோடு வைத்து கயிறுகொண்டு கட்டி, அந்த நொடி வரை ஆதரவு தந்த சின்னத்தம்பி ஓடிவிட்டான். இவன் தனியே ஓட முடியா மல், காலும் களவுமாகப் பிடிபட்டான். சின்னப் பையன் என்பதால், எதுவும் பிரச்னை பண்ணாமல் அவனை அனுப்பி வைத்தான் மாரி. ஆனால், ராசுவுக்கு எண்ணம் நிறைவேறாமல் போனதில் ஏமாற்றமாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் கழித்து மாரி வந்திருந்தால், கட்டைக் காலோடு குளத்துக்கு அருகில் நின்று தெளிந்த நீர்ப்பரப்பில் தன் உயரமான உருவத்தைப் பார்த்து மகிழத் திட்டம் போட்டு இருந்தான் ராசு. எல்லாம் கெட்டுப்போனது.

அன்று இரவு தூக்கம் வரவில்லை. உயரமாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே அவனுடைய யோசனையாக இருந்தது. வேறு எதுவும் மண்டைக்குள் ஏறவில்லை. அதையே முப்பொழுதும் யோசித்தவண்ணம் இருந்தான். உயரமான வர்களைப் பார்த்தால் கோபம் வந்தது. பொறாமையாகவும் இருந்தது. வகுப்பில் பெண் பிள்ளைகள் ஏதாவது பேசிச் சிரிக்கும்போது தன் உயரத்தைத்தான் கிண்டல் செய்கிறார்களோ என்று பதற்றப்பட்டான். என்றைக்காவது சினிமாவுக்குப் போனால், தனக்கு முன்னால் உயரமாக யாராவது அமர்ந்து திரையை மறைப்பார் கள். இரண்டு தலைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில்தான் இவன் பார்த்த அத்தனை சினிமாக்களும் இருந்தன. படத்தை நினைக்கும்போதே இரண்டு தலைகளுக்கு இடையேதான் காட்சியே மனக்கண்ணில் தோன்றும்.

உயரம் குறைவாக இருப்பதால், வகுப்பில் இவன்தான் முதல் வரிசையில் இருப்பான். வாத்தியார் பாடம் நடத்தும்போது, தூக்கம் வந்தால் கொட்டாவிகூட விட முடியாது. பிரம்பால் விளாசுவார் வாத்தியார். ஆனால், உயரம் காரணமாகவே மாப்பிள்ளை பெஞ்சுக் குப் போய், பின்னால் அமர்ந்திருக்கும் இவன் நண்பர்கள் பண்ணும் லூட்டிகளுக்கு அளவே இல்லாமல் இருந்தது. அடுத்தவர் டிபன் பாக்ஸில் இருந்து சாப்பாடு எடுத்துத் தின்னும் அளவுக்கு அவர்களுக்குச் சுதந்திரம் இருந்தது. இவனுக்கோ கண்களைச் சிமிட்டக்கூட முடியாது. அதோடு, வாத்தியார் இவனைப் பார்த்தேதான் பாடம் நடத்துவார். ச்சே! இந்த உயரம் இப்படியா பழிவாங்கும்?

கூடப் படிக்கும் பெண்கள் இவன் உயரம் காரணமாகவே இவனைத் தம்பிபோலப் பாவித்துப் பேசும்போது, உச்சக்கட்ட எரிச்சலில் பொங்குவான். ஆனாலும், எதையும் வெளிக்காட்டாமல் பேசுவான். பள்ளியில் சுற்றுச்சுவர் ஓரத்தில் உள்ள மாமரத்தில் மாங்காய் பறித்துக் கொடுத்தே பெண் பிள்ளைகளின் நட்பைப் பெற்று இருந்தனர் பல மாணவர்கள். இவன் உயரம் குறைவு என்பதால், அந்த வாய்ப்பும் பறிபோனது.

பள்ளியில் ஆண்டு விழா நாடகத்தில் எப்போதும் வேலைக்காரன் பாத்திரம்தான் கொடுத்தார்கள். ''ஏண்டா, வேலைக்காரங்க உயரமா இருக்க மாட்டாங்களா?' என்று இவன் புலம்புவது ஒவ்வோர் ஆண்டும் வாடிக்கை. நாடகத்தில் வேலைக்காரன் வேடம் இல்லை என்றால், அவனுக்கு அந்த ஆண்டு நடிக்கும் வாய்ப்பு பறிபோகும்.

வாத்தியாரிடம் அடிவாங்கும்போது, உடம்பில் படாமல் இருப்பதற்காகவாவது பேன்ட் போடும் அளவு வளர ஏதாவது செய்தாக வேண்டும். இவன் உயரம் காரணமாக வகுப்பறை வன் முறைகள் எல்லாம் இவனுக்கே நடப்பது போன்றதொரு உணர்வில் நொந்துபோனான்.

கனவுகள்கூட இவன் உயரமாகி பேன்ட் போடுவதுபோலவே வந்தன. விழித்துப் பார்த்து ஏமாற்றத்தில் முகம் சுண்டிப்போகும் ராசுவுக்கு. பத்தாததுக்கு தெருப் பையன்கள் இவனை அவ்வபோது 'கட்டையா’ என்று அழைத்துக் கடுப்பேற்றினார்கள்.

இவனுக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்கப் பிடிக்கும். சுருளி வீட்டுக்குப் போய்ப் பார்ப்பான். ஒரு நாள் சுருளி வீட்டுக்குப் போனபோது, ஏதோ ஒரு சேனலில் 'அபூர்வ சகோதரர்கள்’ படம் ஓடிக்கொண்டு இருந்தது. குள்ள அப்புவைப் பார்க்க இவனுக்குப் பிடித்து இருந்தது. ''கமல் குள்ளமா... அழகா... சூப்பரால்ல?'' என்றான்.

சுருளியோ, ''டேய்... அப்புவைவிட ராஜாவைப் பாருடா அழகு... ராஜா கைய வச்சா... அது ராங்காப் போனதில்ல'' என்று சீட்டியடித்தான். ராசுவுக்கு முகம் தொங்கிப்போனது. இடையிடையே வரும் விளம்பரங்களை ரசித்துப் பார்த்தான். காம்ப்ளான் விளம்பரம் வந்தது. இந்த காம்ப்ளான் விளம்பரத்தை மட்டும் எப்போதும் ஆசையாகப் பார்ப்பான். ஒரு மரத்தைப் பிடித்து ஒரு பையன் தொங்கிக்கொண்டு இருப்பான். இப்படி எல்லாம் தொங்கினால் உயரமாக முடியாது என்று சொல்லி, ஒரு பணக்கார அம்மா பிள்ளைகளுக்கு காம்ப்ளானைப் பாலில் கலக்கிக் கொடுப்பாள். பிள்ளைகள் அதனால் கிடுகிடுவென்று வளருவதாக வரும் விளம்பரம் அது.

ஒருவேளை மரத்தைப் பிடித்துத் தொங்கினால் உயரமாகலாமோ? ராசு சிந்தித்து இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக யாரும் பார்க்காத நேரத்தில் மரத்தில் கிளையைப் பிடித்துத் தொங்கினான். மூன்றாவது நாள் தொங்கும்போது, கூடப் படிக்கும் பையன்கள் பார்த்துவிட்டுச் சிரிக்க, ''விளம்பரத்துல போட்டாங்க... அதான்' என்றான்.

''என்ன விளம்பரம்?''

''காம்ப்ளான் விளம்பரம்.''

''அதான்... விளம்பரத்துலயே வருதே... தொங்கினா ஒயரமாக முடியாது. அதனால காம்ப்ளான் குடிங்கனு. அப்புறமும் தொங்கிக்கிட்டு இருக்கே. லூஸாடா நீ' - மற்றவர்கள் சிரிக்க... ராசுவின் முகம் சுண்டிப்போனது.

''பள்ளிக்கூடத்துக்குப் போனவுடன் பெரிய கிளாஸ் அண்ணனுங்ககிட்ட கேக்கணும்.'

மறு நாள் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தவுடன் பன்னிரண்டாம் வகுப்புக்கு ஓடினான்.

''அண்ணே! காம்ப்ளான் குடிச்சா ஒயரமாகலாமா? விளம்பரத்துல காட்டுறாங்க.''

''அடேய்... விளம்பரத்துக்காக ஏதாச்சும் போடுவான். அதைப் பார்த்து ஏமாந்துடாதே!'- அண்ணன்கள் எச்சரித்தார்கள். இவனுக்கு என்னவோ உலகமே இவன் உயரமாகிவிடக் கூடாது என்று சதி செய்வதாகத் தோன்றியது. 'சும்மாவா டி.வி-ல காட்டுவான்? ஏன் இந்த அண்ணனுங்க இப்படிச் சொல்றாங்க? யாருக்கும் நான் வளர்றது புடிக்கலையா?’- மனதுக்குள் கேள்விகளைத் தேக்கியவாறே குழம்பினான்.

எப்படியாவது உயரமாகிவிட வேண்டும் என்பது அவன் லட்சியமாக இருந்தது. சினிமாவில் வரும் பெண்கள் போடுவது போல் ஹைஹீல்ஸ் செருப்புகள் வாங்கிக்கொள்ளலாமா? வேண்டாம். ஹவாய் செருப்புக்கே இங்கே கஷ்டம்தான். மனதை மாற்றிக்கொண்டான். இவன் போடும் செருப்பை இவன் வகுப்பில் படிக்கும் ரமேஷ், ''என்னடா... பாத்ரூம் செப்பலைப் போட்டுட்டு வந்திருக்கே?'' என்று கேட்டான். வீட்டில் பாத்ரூமோ, பாத் ரூமுக்கு என்று தனியாகச் செருப்போ இல்லாத ராசுவுக்கு அவன் கேள்வி ஒன்றும் புரியவில்லை.

அம்மாவிடம் ஒரு நாள் கேட்டான், 'நான் ஏன் குள்ளமா இருக்கேன்?'

அம்மா இவனைப் பார்த்துச் சொன்னாள் 'யார்றா சொன்னது? நீ ஒசரம்தான்'' என்றாள். அம்மா தன்னைச் சமாதானப்படுத்தத்தான் இப்படிச் சொல்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டான். அரை மணி நேரத்தில் மேலே உள்ள அடுக்கில் இருந்து எதையோ எடுப்பதற்கு அம்மா இவனைவிட உயரமான இவன் தங்கையைக் கூப்பிடும்போது இவன் கேட்டான்.

'நான் ஒசரம்னா என்னைக் கூப்பிட வேண்டியதுதானே? ஏன் அவளக் கூப்பிடுறே? சும்மா பேச்சுக்கு எதையாவது சொல்றதே ஒனக்கு வேலையாப்போச்சு!' - இவன் கோபத்தில் கூவினான். அம்மா எதுவும் பேசாமல் வெளியே சென்றாள்.

எரிச்சல் வந்தது. சுருளி வீட்டுக்குப் போனான். அங்கே தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. போன இரண்டாவது நிமிடத்தில் அந்த மரத்தைப் பிடித்துத் தொங்கும் விளம்பரம் வந்தது. முகத்தைத் திருப்பிக்கொண்டான். இரண்டு பாடல்கள் போன பின்னால், குள்ள அப்பு வந்து 'ஒன்ன நெனச்சே பாட்டுப் படிச்சேன்' என்று சோகமாகப் பாட, இவன் கிளம்பி வந்துவிட்டான். ஓவென்று அழ வேண்டும் போல் இருந்தது. கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டு வீட்டுக்கு வந்து படுத்துவிட்டான்.

காலையில் பள்ளி அசெம்ப்ளியில் வந்து நின்றான். வழக்கமாக வாசிக்கப்படும் திருக்குறள் எல்லாம் வாசித்து முடித்த பின் தலைமையாசிரியர் ஒரு அட்டையோடு வந்து மைக் முன்னால் நின்றார். ஒரு மாதத்துக்கு முன் ஒரு அமைப்பு நடத்திய கட்டுரைப் போட்டிக்கான முடிவை இன்றைக்கு அசெம்ப்ளியில் அறிவிப்பார்கள் என்பது அப்போதுதான் அவன் நினைவுக்கு வந்தது. தலைமை ஆசிரியர் முதல் பரிசுக்கு இவன் பெயரை வாசித்தபோது இவனுக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. மேடை ஏறி தலைமை ஆசிரியருக்கு அருகில் சென்றான். துணி போட்டுச் சுற்றி வைத்திருந்த கோப்பையை எடுத்து அவனிடம் அளித்தார். வாங்கிக்கொண்டு திரும்பிக் கீழே இறங்க எத்தனித்தவனை நிறுத்திய தலைமை ஆசிரியர், ஓர் உறையை எடுத்துப் பிரித்து அவனிடம் நீட்டினார். அவர் கைகளில் இரண்டு 500 ரூபாய்த் தாள்கள். இவனுக்கு நம்ப முடியவில்லை. வெறும் சான்றிதழ், கோப்பை, தட்டு, டம்ளர் என்று மட்டுமே பரிசுகள் பெற்றிருக்கும் அவனுக்கு, இந்த 1,000 ரூபாயை நம்ப முடியவில்லை.

'எனக்கா சார்?' என்றான்.

'உனக்குத்தான். நீதானே கட்டுரை எழுதினே. இல்ல... மண்டபத்துல யாராச்சும் எழுதிக்குடுத்ததை எடுத்துட்டு வந்து குடுத்தியா?' என்றார் சிரிப்புடன்.

'இல்ல சார்... நான்தான் எழுதினேன்' என அவசரமாகக் கை நீட்டினான். கூட்டம் சிரித்தது. அவனது முதுகில் தட்டிக்கொடுத்தவாறே அவனை லேசாக அணைத்துக் கொண்டார் அவர். இவனுக்குப் பெருமை தாளவில்லை. அந்த இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களையும் பத்திரமாக சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான். மேடையை விட்டு இறங்கப்போனவனை மீண்டும் அழைத்து, தலைமை ஆசிரியர் கோப்பையை நான்கு புறமும் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும்படி உயர்த்திக் காட்டச் சொன்னார். இவன் தன் தலைக்கு மேலே கோப்பையைத் தூக்கிக் காட்டினான். நிறைய மாணவர்கள் சரியாகத் தெரியா மல் எக்கி எக்கிப் பார்த்தனர். இவனை நெருங்கி வந்த தலைமை ஆசிரியர் கோப்பையை வாங்கித் தனது தலைக்கு மேல் தூக்கிக் காண்பித்தார். இவனுக்கு முகம் சுண்டிப்போனது. பரிசு வாங்கிய சந்தோஷத்தைவிட, தனது உயரக் குறைவு அத்தனை பேர் முன்னிலையில் வெளிப்பட்டதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வகுப்பில் அனைவரும் வந்து இவனைப் பாராட்டிக் கை குலுக்கினாலும், இவன் முகம் மட்டும் வாடியே இருந்தது.

அன்று மாலை அவன் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அம்மாவிடம் சென்று புத்தகப் பைக்குள் இருந்து அதை எடுத்து அம்மாவிடம் கொடுத்தான்.

'இதை என்னடா ராசு பண்ணணும்?' என்றாள் அம்மா, கையில் வாங்கிய அந்தப் புத்தம் புதிய காம்ப்ளான் பாட்டிலைப் புரியாமல் பார்த்தவாறே!

Saturday, February 11, 2012

தோழர் உ.ரா.வரதராஜன்

ஆயிற்று! இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. WR என்று நாங்கள் அன்போடு அழைக்கும் தோழர்.உ.ரா.வ்ரதராஜன் மறைந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

தோழர் WR அவர்கள் 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது நான் பள்ளி மாணவி. அப்பா நாளிதழில் வெளியான அவருடைய பெயரைப்பார்த்து விட்டு ‘இவர் என்னுடைய நண்பர்’ என்று கூறி அப்பா இளவட்டமாய்த் திரிந்த காலத்தில் WR கையெழுத்திட்டு அளித்த புத்தகம் ஒன்றையும் காண்பித்தார். தேர்தல் முடிவுகள் வந்தபின் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் WR. அப்போது கல்கியில் அவருடைய புகைப்படம் அட்டையில் வெளியாகி இருந்தது. அப்பா மிகவும் சந்தோஷப்பட்டார். அதன்பின் சட்டமன்ற்த்தில் அவர் பேசியது குறித்தெல்லாம் நாளிதழ்களில் பார்க்கும்போது தூரத்தில் இருந்து சந்தோஷப்படும் நண்பராக அப்பா இருந்தார்.

WR ஒரு கம்யூனிஸ்ட், தொழிற்சங்கவாதி, மொழிவளம் உள்ளவர் என்பதைத் தவிர்த்து அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பது அப்பா சொல்லித்தான் எனக்குத் தெரியும். அவர் இலக்கிய ஆர்வம் மிக்கவர். ‘அருவி’, 'ஆதவன்’ ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராய் இருந்து அப்போது எழுத வந்த இளைஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். தேனருவி, மலர் வண்ணன், பூதலூர் முத்து என்று அப்பாவின் நண்பர்கள் பலருடன் எழுத்து மூலமே அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. ஒரத்தநாட்டில் மட்டும் 300 சந்தாக்களை அப்பாவும் அவருடைய நண்பர்களும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். ‘சர்வோதய இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட WR கதர் ஆடையையே அணிந்து வந்தார். அவர் மாநிலம் முழுவதும் சென்று காந்தீயக் கொள்கைகளை பிரசாரம் செய்து வந்தார். ம.பொ.சி.யின் இயக்கத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அவர் பி.காம்.பட்டதாரி. வேலை கிடைக்காமல் இருந்தார். சென்னையில் ரிசர்வ் வங்கியில் வேலை கிடைத்தது. அதன்பின் தொழிற்சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தொழிற்சங்கத் தொடர்புகள் அவருடைய கொள்கைகளையும் வாழ்க்கைப் பாதையையும் மாற்றின. தொழிற்சங்கம் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டு, கட்சியின் முழுநேர ஊழியரானார். அதன்பின் அவருடைய பணிப்பளு அதிகமானதால் பழைய நண்பர்களுடன் ஓர் இடைவெளி ஏற்பட்டு தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இப்போது மாதிரி கைபேசி, மின்னஞ்சல் எல்லாம் உண்டா என்ன? கடிதப் பரிமாற்றம் ஒரு கட்டத்தில் நின்றுபோக தொடர்பறுந்து போனது. இவையெல்லாம் அப்பா எனக்கு சொன்ன தகவல்கள்.

காலச்சுழற்சியில் WR டெல்லியிலிருந்து கட்சிப்பணி செய்துவிட்டு, மீண்டும் தமிழகம் வந்தார். அப்போது நான் கட்சியில் இருந்தேன். ’தீக்கதிர்’ நாளிதழின் அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அவர் தீக்கதிரின் முதன்மை ஆசிரியர். மிகச் சாதாரணமாக ஒரு கட்சி உறுப்பினராக நான் அறிமுகம் ஆனேன் அவருக்கு. மிகுந்த தோழமையுடன் பேசுவார். அவர் டெல்லியில் இருந்த காலத்தில் தீக்கதிருக்கு முதன்முதலாக ஓர் இணையதளத்தை உருவாக்கினேன். ஒருநாள் தோழர் ஒருவர் அவரிடம் இந்தத் தகவலைச் சொல்ல ‘‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை?’’ என்று வருத்தப்பட்டாலும், வருத்தத்தைவிட அதில் மகிழ்ச்சி அதிகம் இருந்தது. அதன்பின் அவர் என்னிடம் பேசியவிதத்தில் ஒருவித கூடுதல் உரிமையும் அன்பும் வெளிப்பட்டன. நான் எப்போதாவது எழுதுவதை வாசித்து வந்தார் என்பது அவ்வபோது அவருடைய பேச்சில் வெளிப்படும். அதன்பின் ஒரு நாள் ‘காவியனின் மகள் நான்’ என்றேன். அவர் பார்த்த பார்வையை இன்றைக்கும் மறக்க் முடியாது. நாற்காலியில் அமர்ந்திருந்தவர் துள்ளி எழுந்து வந்து என் கரஙகளைப் பற்றிகொண்டார். ‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை?’ என்றார் இப்போதும். தன் நண்பரின் மகள் என்கிற பாசம் அவர் ஸ்பரிசத்தில் தெரிந்தது. அதன்பின் அவர் என்னிடம் பேசிய விதத்தில் தந்தைமையை உணர்ந்தேன்.

அப்பா தமிழாசிரியராய் இருந்து ஓய்வு பெற்றார், WR முதன்மை ஆசியராய் இருக்கும் அதே தீக்கதிர் நாளிதழுக்கு, நாகப்பட்டினம் நிருபராய் ஆனார். பழைய காலம் போலவே இப்போதும் WR ஆசிரியர். அப்பா அதில் எழுதுபவர். அவர்கள் நிறைய கூட்டங்களில் சந்தித்துக்கொண்டார்கள். அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் என்னையும், என்னைப் பார்க்கும்போதெல்லாம அப்பவையும் அன்போடு விசாரிப்பார். ஒரு கட்டத்தில் வேலைப்பளுவால் நான் ‘தீக்கதிர்-வண்ணக்கதிர்’ பகுதிக்கு எதுவும் எழுதாமல் இருந்தபோது அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. ‘உன் பங்களிப்பு எதையும் நான் கொஞ்ச நாட்களாக வண்ணக்கதிரில் பார்க்கவில்லை. ஏன் எழுதுவதில்லை?’ என்று உரிமையோடு கேட்டு எழுதச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பேஸ்புக்கில் எனக்கு நண்பரானார்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். நான் ‘செங்கடல்’ படப்பிடிப்புக்காக ரயிலில் ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தபோது வந்தது அந்த அழைப்பு. ஒரு பத்திரிகையாளர் அழைத்தார்.’WR எங்கே?’ என்றார். ‘ஏன்?’ என்றேன். நாளைக்கு வெளியாகவிருக்கும் நக்கீரனில் ‘அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாவதாக தகவல். உறுதிப்படுத்த முடியுமா?’ என்றார். நாடி நரம்பெல்லாம் அதிர்ந்து ரயிலை விட வேகமாக தடதடத்தன. பேச்சு வரவில்லை. என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. ‘நிச்சய்ம்..இந்தச் செய்தி பொய்யாக இருக்கவேண்டும்’ என்கிற பதைபதைப்போடு கைபேசியில் இரவு முழுக்க ஒவ்வொருவராக அழைத்து அவர் குறித்து விசாரித்தபோது, யாருக்கும் தெரியவில்லை. அவர் ஒரு வாரமாகக் காணவில்லை என்பதைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரியவில்லை. பேசிய நண்பர்கள் எல்லோரும் நான் சொல்வது தவறான தகவலாக இருக்கக்கூடும் என்றார்கள். அவர் அப்படி தற்கொலை செய்து கொள்ளக்கூடியவர் அல்ல என்றார்கள். நானும் அப்படியே நம்பினேன். மறுநாள் ராமேஸ்வரம் சென்றவுடன் நக்கீரன் வாங்கிப்பார்த்தேன்...அந்தக் கடிதம்...அந்த வரிகள்..மனம் கலங்கிப்போனது. எங்கிருந்தாவது திடீரென வந்து ‘இதோ! நான் இருக்கிறேன்’ என்று சொல்ல மாட்டாரா என்று மனம் ஏங்கத் தொடங்கியது. அதன்பின் நடந்ததெல்லாம் எல்லோருக்கும் தெரியும்.

அவருடைய உடல் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்துக்கு வந்தடைந்தபோது, கண்ணீரோடு அவரின் இறுதி நிகழ்வுகளை கேமிராவில் சேமித்தேன். ஊர்வலம் கிளம்பி, மின்மயானத்தை அடைந்து அவருடைய உடலை மின்சாரத்திற்குத் தின்னக் கொடுத்து அவர் புகையாய் மாறி புகைபோக்கியின் வழியாக மேலே காற்றோடு கலந்தது வரை ஒவ்வொரு கணத்தையும் படம்பிடித்தேன். வீட்டுக்கு வந்து கணினியில் இணைத்து அந்தப்படஙக்ளைப் பார்க்க முயன்றபோது முதல் இரண்டு படங்களுக்கு மேல் பார்க்க முடியாதபடி என்னை ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டது. கண்களை இருட்டிக்கொண்டு மயக்கம் வருவது போன்றிருந்தது. அதன்பின் பலமுறை அந்தப் படஙக்ளைப் பார்க்க நான் முயன்றபோது இதே போன்றதொரு உணர்வு மேலோங்கி இன்று வரை பார்க்கப்படாத படங்களாகவே அவை இருக்கின்றன. ஒருவேளை அழகும், கம்பீரமும் நிறைந்த தோழர் WR-ன் உருவத்தை அப்படி சிதைந்து, அடையாளம் தெரியாமல் கருத்துப் போய் இருப்பதை பார்க்க முடியவில்லையோ என்னால் என்று தோன்றுகிறது. ஆனால் உடலை அருகில் இருந்து பார்த்த எனக்கு படங்களைப் பார்க்க வலுவில்லாமல் போனது ஏன் என்று புரியவில்லை.
இன்றுவரை ஜீரணிக்க முடியாத மரணமாக அவருடைய மரணம் இருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல. ஒரு துயரை இன்னொரு துயர் வந்து மறக்கச் செய்யும். அப்படித்தான் இவருடைய மரணம் வந்து, என்னால் மறக்க முடியாமல் அனுபவித்து வந்த ஒரு துயரைக் கடக்க வைத்தது. இவருடைய மரணத்தோடு ஒப்பிடுகையில் எவ்வித துயரமும் தூசியாய்த் தெரிந்தது எனக்கு. கனத்த மனத்துடன் இருந்த எங்கள் தோழர் WR-ன் உடலைச் சுமந்து மிதந்த போரூர் ஏரியை கடக்கும்போதெல்லாம் இன்றைக்கும் கண்ணீர் விடுவது வாடிக்கையாகி விட்டது. அவருடைய பேஸ்புக் பக்கத்துக்கு தினமும் சென்று பார்ப்பேன். அவர் உயிருடன் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் செய்திகளும் அலைக்கழித்தன. கொஞ்ச நாள் கழித்து அவருடைய பாஸ்வோர்ட் தெரிந்த யாரோ அவருடைய கணக்கை டீ-ஆக்டிவேட் செய்தனர். அன்றைக்குத் தான் அந்தப் பக்கத்துக்குச் செல்வதை நிறுத்தினேன். திடீரென்று ஒரு நாள் முன்னால் வந்து ’நான் உயிரோடுதான் இருக்கிறேன்’ என்று அவர் சொல்ல ‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை?’ என்று அவர் பாணியில் நான் கேட்கவேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறது. ஆசைப்படுவதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன?

Friday, February 03, 2012

இந்தியாவின் முதல் பெண் போட்டோ-ஜர்னலிஸ்ட் - ஹோமாய்

குடியரசுத்தலைவர் மாளிகையில் அரசு நிகழ்வு ஒன்றில்..பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் குழுமியிருந்த அந்த அரங்கில் அந்தப் பெண், நிகழ்ச்சியின்  ஒவ்வொரு கணத்தையும் தன் கேமிராவுக்குள்  அடக்கிக்கொண்டிருந்தார். கையினால் தைக்கப்பட்ட அவரது ப்ளவுஸின் கைப்பகுதி அவருக்குத் தொல்லை தந்தது. அவர் நினைத்தபடி சரியான கோணத்தில் படமெடுக்க கையை உயர்த்திய வேளையில் அவரது கைப்பகுதியில் ப்ளவுஸ் துணி கிழிந்தது. அங்கிருந்த ஒரு சில பெண்களின் முணுமுணுப்பைப் பொருட்படுத்தாமல், சட்டென்று தனது இரண்டு கைப்பகுதி துணிகளையும் வெட்டி எடுத்து ஹேண்ட்பேக்கில் வைத்துக்கொண்டு, படமெடுக்கும் வேலையைத் தொடர்ந்தார். இந்த நிகழ்வுக்குப் பின் அவர் சல்வார் கமீஸ் அணியத் தொடங்கினார். அவர் ஹோமாய் வியாரவல்லா. இந்தியாவின் முதல் பெண் போட்டோ ஜர்னலிஸ்ட்.

இன்று அவர் நம்மிடையே இல்லை. வீட்டுப் படுக்கையிலிருந்து தவறி விழுந்த அவரை நெடுநேரம் கழித்துப் பார்த்து அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்க்க, அங்கே அவருக்கு மூச்சுக் கோளாறு ஏற்பட்டு காலமானார். 98 வயதில் ஒரு பெண் தனியாக வாழ்ந்து வந்தார் என்றால் அவரது தன்னம்பிக்கை எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்! 1969ல் அவரது கணவர் இறந்துவிட, அதன்பின் தன் மகனுடன் குஜராத் மாநிலம் வடோதராவில் வசித்துவந்தார். அவரது மகனும் புற்றுநோய் தாக்கி 1989ல் இறந்துவிட, தனிமரமானார் ஹோமாய். இறுதி வரை வேலைக்குக் கூட ஆள்  வைத்துக்கொள்ளாமல் ஹோமாய் தன் வேலைகளைத் தானே செய்து வந்தார். ‘’என் சமையலறைதான் என்னுடைய மருத்துவமனை.  எந்த நோயும் அண்டாத அளவுக்கு என் உணவுப் பழக்கத்தை வைத்துள்ளேன்” என்று ஒரு பேட்டியில் ஹோமாய் கூறினார்.

1938ல் தனது முதல் புகைப்படம், ‘பாம்பே கிரானிக்கிள்” பத்திரிகையில் வெளியானதையொட்டி துறையில் காலடி எடுத்து வைத்த ஹோமாய்க்கு அதன்பின் வரிசையாய் வெற்றிகள்தான். அமர்நாத்துக்கு சுற்றுலா சென்றபோது தன்னுடன் வந்த சக பெண்களை அவர் எடுத்த படம்தான் முதன்முதலில் வெளியான படம். சுதந்திர இந்தியாவில், செங்கோட்டையில் நடந்த முதல்  கொடியேற்றத்தைப் படம் பிடித்தவர் ஹோமாய். இந்திரா காந்தி தன் தந்தை நேருவுடன் இருந்த தருணங்கள், நேரு மற்றும் லால்பகதூர் சாஸ்திரியின் இறுதி நிகழ்வுகள், இரண்டாம் உலகப் போருக்கான தயாரிப்புகள், ஜாக்குலின் கென்னடியின் இந்திய வருகை, 1956ல் தலாய் லாமாவின் முதல் இந்திய வருகை, பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒப்புதல் அளித்த காங்கிரஸ் கூட்டம், மவுண்ட் பேட்டன் கவர்னர் ஜெனரலாக பதவியேற்ற தருணம், பிரதமர் பதவியேற்றபின் நேரு நிகழ்த்திய உரை, வெளிநாட்டுத் தலைவர்களின் இந்திய வருகை என்று இவர் பல வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியாய் இருந்து தனது ரோலிஃப்ளெக்ஸ் கேமிராவில் படம்பிடித்திருக்கிறார். இவரது புகைப்படங்களின் நேர்த்தி பிரமிக்க வைப்பவை. இவருடைய கறுப்பு-வெள்ளை படங்களில் நேருவே பிரதான கதாநாயகனாக இருந்தார். நேருவை படமெடுப்பது என்றால் ஹோமாய்க்கு மிகவும் இஷ்டம். பிரிட்டிஷ் ஹைகமிஷனரின் மனைவிக்கு சிகரெட் பற்றவைக்க உதவும் நேருவின் புகைப்படம் ஹோமாயின் பிரபலமான படங்களில் ஒன்று. தரையில் படுத்துக்கொண்டு படம் எடுத்தது போன்ற புகைப்படக் கோணம் ஹோமாயின் படங்களின் சிறப்பியல்பாக இருந்தது. ”நேருவும் பாகிஸ்தான் அதிபர் அய்யூப்கானும்p ஒன்றாக இருந்த நிகழ்வு ஒன்றில் தரையில் படுத்துக்கொண்டு நான் படம் எடுத்தேன். அங்கிருந்த புகைப்படக்காரர்களின் கால்களுக்குப் பின்னாலிருந்து இருவரின் கால்களுக்கு இடையேயான இடைவெளியில் நான் படமெடுக்க முயல, அய்யூப்கான்  நேருவிடம் இதைச் சுட்டிக்காட்டி, ’இந்த ஆண்கள் இந்தப்பெண்ணை படமெடுக்க அனுமதிக்கவில்லை போலிருக்கிறது. அவருக்கு வழிவிடச் சொல்லுங்கள்’ என்று கோபப்பட...இப்படிப் படமெடுப்பது ஹோமாயின் ஸ்டைல் என்று அவருக்கு விஷயத்தை விளக்கினார் நேரு” என்று தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார் ஹோமாய்

பெண்களைப் பள்ளிக்குக் கூட அனுப்பாத அந்தக் காலத்திலேயே ஹோமாய், மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஜே.ஜே.காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் பெயிண்டிங்கில் பட்டயப்படிப்பை முடித்தார். தனது படிப்பை முடிக்கும்வரை அவருக்கு தனக்கு புகைப்படம் எடுக்க வரும் என்பது கூடத் தெரியாது.

ஹோமாய் காதலித்து மணந்த மானெக்‌ஷா ஒரு புகைப்படக் கலைஞர். ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் பணியாற்றி வந்தார். இந்தியாவில் முதன்முதலில் படங்களால் நிகழ்வுகளைச் சொல்லும் முறையை பத்திரிகைகளில் அறிமுகப்படுத்தியவர். ஒரு நிகழ்வில் இவர் எடுத்த படங்கள், இவர் எழுதிய குறிப்புகளுடன் வெளியாகும். இவை நாளிதழில் ஒரு பக்கம் முழுவதும் கூட வெளியிடப்பட்டன. ஹோமாய் எடுத்த படங்களை மானெக்‌ஷாதான் முதலில் பார்த்து வியப்பவர். இருவரும் ஒரே கேமிராவை பயன்படுத்தினர். அவர்தான் பத்திரிகைக்கு அனுப்பச் சொல்லி ஹோமாயை ஊக்கப்படுத்தியவர். அதன் பின் ஹோமாய் பிரிட்டிஷ் இன்ஃபர்மேஷன் சர்வீஸஸ் நிறுவனத்துக்கு புகைப்படக்காரராய் பணியாற்றினார். ‘இல்லஸ்ட்ரேட்ட் வீக்லி ஆஃப் இந்தியா’வில் அவரது படங்கள் தொடர்ந்து வெளிவந்தன. “மானெக்‌ஷா எனக்கு கணவர் மட்டுமல்ல. புகைப்படமெடுக்கும் கலையில் அவர்தான் எனக்கு குரு” என்று ஹோமாய் தனது பல பேட்டிகளில் சிலாகித்திருக்கிறார்.

காந்தியின் இறுதிநொடிகளை படம் பிடிக்க இயலாமல் போனது ஹோமாய்க்கு வாழ்நாள் வருத்தமாக மாறிப்போனது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30, 1948 அன்று காலை அவரது ஆசிரமக் கூட்டத்தை பதிவு செய்யும்பொருட்டு கிளம்பி பாதி தூரம் வந்துவிட்ட அவரை, தூதுவரை அனுப்பி திரும்பி வரச்செய்த மானெக்‌ஷா, மறுநாள் இருவரும் சேர்ந்துபோய் ஒருவர் வீடியோவும், ஒருவர் நிழற்படமும் எடுக்கலாம் என்று யோசனை சொல்ல இவரும் ஒப்புக்கொண்டு இருந்துவிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் காந்தியின் மரணச் செய்தி வெளியானது. ‘’என் குருவைப் போலிருந்த கணவரை மீறி அன்றைக்கு நான் போகவில்லை. நாளை போய்க்கொள்ளலாம் என்றிருந்த நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். அன்றைக்கு உள்நாட்டு – வெளிநாட்டுப் புகைப்படக்காரர் என்று ஒருவர் கூட காந்தியின் இறுதி நொடிகளை படம் எடுக்க அவர் அருகில் இல்லை. நான் அங்கே இருந்திருக்க வேண்டியவள். அந்த வாய்ப்பைத் தவறவிட்டேன்” என்கிறார் தனது வாழ்க்கை வரலாற்று நூலில். ஹோமாய் அங்கே இல்லாதது வரலாற்றின் இழப்பாகி விட்டது.

ஆனால் அதை ஈடுசெய்யும் வண்ணம், காந்தியின் அஸ்தியை கரைப்பதற்காக ரயிலில் கொண்டு சென்றபோது அவர் எடுத்த படங்கள் சாகாவரம் பெற்றவை. ரயிலில் மற்றப் புகைப்படக்காரர்கள் எல்லாம் ஏ.சி. கோச்சில் வெளியில் நடப்பது தெரியாமல் பயணப்பட்டபோது இவர் மட்டும் மூன்றாம் வகுப்பில் பயணித்து, மக்களின் உணர்வுகளை படம்பிடித்தார். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காந்தியின் அஸ்தியைக் காணக் குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தைப் படமெடுத்தார். அந்தப் படங்கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன; பேசுகின்றன!

ஹோமாயின் தந்தை பார்ஸி - உருது நாடகங்களில் பங்கெடுக்கும் அரங்கக் கலைஞர். ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து நாடகங்கள் போடும் ஒரு நாடகக்காரராக இருந்ததால் ஹோமாய் ஆறாவது வயது வரை தன் தந்தை சென்ற இடத்துக்கெல்லாம் சென்றவண்ணம் இருந்தார். ஹோமாயின் படிப்புக்காக மும்பையில் வீடு பார்த்து குடிவைத்துவிட்டு, தந்தை மட்டும் பயணத்தைத் தொடர்ந்தார். பகத் சிங்கையும் அவரது தோழர்களையும் பிரிட்டிஷ் அரசாங்கம் தேடியபோது கொஞ்ச காலம் தலைமறைவாய் அடைக்கலம் புகுந்து இருந்தது இவரது வீட்டில்தான். அப்போது ஹோமாய் சிறுமியாய் இருந்தார்.

ஹோமாயின் தாய் அவரை பிற பெண்களைப் போல திருமணம் செய்து கொடுத்துவிடாமல் படிக்க வைக்கவேண்டும் என்பதில் குறியாய் இருந்து தன் பெண்ணை படிக்க வைத்தார். சிறுவயதிலிருந்தே இருபாலார் பயிலும் பள்ளியில் படித்ததாலோ என்னவோ ஆண்களிடம் பேசுவதிலும், பழகுவதிலும் ஹோமாய்க்கு ஒருபோதும் சிக்கல் இருந்ததில்லை. தனது தொழிலில் பல ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாக அவர் வேலை செய்தார். ஆண்களின் ஆதிக்கம் மிகுந்த துறையில் ஒரு பெண்ணாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் பல சிக்கல்கள் உண்டு. சில சமயங்களில் பெண் எடுத்த படம் என்றால் வெளியிட முடியாது என்று பத்திரிகைகள் மறுத்த சந்தர்ப்பங்களில் தன் கணவர் மானெக்‌ஷா பெயரில் தன்னுடைய படங்களை பத்திரிகைகளில் வரவைத்தவர் ஹோமாய. ‘’வீட்டில் என் கணவரும் நானும் சரிபாதியாக வேலைகளைப் பகிர்ந்து கொள்வோம். என் தொழிலைப் பொறுத்தவரை, நான் ஓர் ஆணாதிக்கமான பழமைவாத சமூகத்தில் வாழ்கிறேன் என்பதை நான் மறக்கவில்லை. அதனால் நான் உண்டு என் வேலையுண்டு என்றிருப்பேன். சில சமயம் நான் படமெடுப்பவர்களிடம் ஒரு வாழ்த்து கூட சொல்ல மாட்டேன். அது ஒருவேளை தவறாக யாராவது புரிந்துகொள்ள வழி ஏற்படுத்திவிடுமோ என்று தவிர்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை பெரும்பாலும் மறக்காமல் அடுத்த முறை பார்க்கும்போது அடையாளம் கண்டு பேசுவார்கள். என்னை சக புகைப்படக்காரர்கள் ஒரு பெண்ணாகப் பார்த்ததில்லை. நானும் அவர்கள் மத்தியில் ஒரு பெண்ணாக உணர்ந்ததில்லை. அந்தளவுக்கு இயல்பாகப் பழகுவோம். ஆனால் ஒரு சிலர் மட்டும் நான் சைக்கிளில் டில்லியில் வலம் வருவது, கண்ட நேரத்திலும் படம் எடுக்கச் செல்வது என்றிருப்பதை எச்சரிப்பார்கள். எப்போதும் என்னிடம் இரண்டு பைகள் இருக்கும். அவற்றில் என் கேமிராவையும், அதற்கான உபகரணங்களை வைத்திருப்பேன். இரண்டு பெட்டிகள் என்னோடு எப்போதும் இருக்கும். ஃபிளாஷ் பல்புகள் ஒன்றிலும், இன்னொரு பெட்டியில் பியூஸ் போன பல்புகளையும் வைத்திருப்பேன். என்னை எல்லோரும் விநோதமாகப் பார்ப்பார்கள்” - இவை ஹோமாயின் வார்த்தைகள்.

இந்தியாவின் முதல் பெண் ஃபோட்டோ ஜர்னலிஸ்ட் என்னும் ஒளிவட்டத்தோடு அவர் வாழவில்லை. மிக எளிமையாகவே வாழ்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது வாழ்க்கை வரலாற்று நூல் ‘’India in Focus: Camera Chronicles of Homai Vyarawalla” என்கிற தலைப்பில் வெளியானபோதுதான் அவர் மீது ஊடக வெளிச்சம் விழுந்தது. அதன்பின்தான் சென்ற ஆண்டு மத்திய அரசு அவருக்கு ‘பத்ம விபூஷன்’  விருது கொடுத்து கௌரவித்தது. பெரும்பாலும் தனியாகவே பொழுதைக் கழித்த அவர் வாழ்ந்த வடோதரா நகரில் ஒன்றிரண்டு பக்கத்து வீட்டாரைத் தவிர, அவரை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. நண்பர்கள் அற்றுப் போன ஒரு வாழ்க்கையில், யாருக்காக, எதற்காக இவற்றையெல்லாம் சேர்த்துவைக்க வேண்டும் என்றெண்ணி  தனது மூவி கேமிராக்களால் எடுத்த பல நிகழ்வுகள் குறித்த படங்களையெல்லாம் வீசியெறிந்து விட்டார். தனது இறுதிக்காலத்தில் அதுகுறித்து மிகவும் வருந்தினார் ஹோமாய்.

நியூஸ் கேமிராமேன் அசோசியோஷனை உருவாக்கியவர்களில் ஒருவர் ஹோமாய். 1973க்குப் பிறகு தன் தொழிலைக் கைவிட்டார்  ”எங்கள் காலத்தில் இருந்தது போல தொழில்நேர்மை இல்லாததால், அவர்களோடு சேர்ந்து நானும் வேலை செய்வது மனதுக்கு ஒப்பவில்லை. அதனால் தொழிலை கைவிட்டேன்.  அய்யூப்கானும் நேருவும் ஒருவர் மீது ஒருவர் தோளில் கைபோட்டுக்கொண்டு கைகளை விலக்கிய வேளையில் ஒரு படம் பிடித்தேன். அந்தப் படம் பார்க்க வேடிக்கையாக இருக்கும். நேரு அய்யூப்கானின் தாடியைப் பிடித்து இழுப்பது போல் தெரியும். ஆனால் நான் அந்தப் படத்தை ஒருவரிடம் கூட காண்பித்ததில்லை. 50 ஆண்டுகள் கழித்துத்தான் அந்தப் படத்தை என்னுடைய கண்காட்சியில் வைத்தேன். யாரைப் படமெடுக்கிறோமோ அவர்கள் மனம் புண்படும்படியோ அவர்களது பிம்பத்துக்கு பங்கம் வரும் வகையிலோ நாம் படங்களை வெளியிடக்கூடாது என்பதை என் கொள்கையாக வைத்திருந்தேன். இது போன்ற என் கொள்கைகளுக்கு பங்கம் வரும் என்கிற நிலைமை வந்தபோது எனக்கு வேலை செய்யவிருப்பமில்லை. அதனால் வெளியேறி விட்டேன்” என்று கம்பீரமாய்ச் சொன்ன ஹோமாய் வியாரவல்லா இப்போது நம்மிடையே இல்லை.

பலருக்கு முன்னோடியாய் வாழ்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை சரியான முறையில் பதிவு செய்யாமல் விட்டுவிட்ட குற்றவுணர்வு நம் ஒவ்வொருவருக்கும் இருந்தால்தான், மகத்தான பணிகளைச் செய்த மனிதர்களை அனாதையாய்ச் சாகவிட்டு, யார் யாரையோ கொண்டாடும் நம் சமூகத்தை நாம் கேள்வி கேட்க முடியும். ”தனியாக வாழ நான் பழகிக்கொண்டேன். எவரையும் சார்ந்திருக்காமல் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. நான் இப்போதெல்லாம் பேசுவதில்லை. பெரும்பாலும் மௌனம்தான். சில சமயம் 3 வாரங்கள் வரை கூட ஒருவரிடமும் பேசாமல் இருந்திருக்கிறேன். பேசக்கூடாது என்றில்லை. பேசுவதற்கு ஆட்களோ, அதற்கான தேவையோ இல்லாமல் அப்படி இருந்திருக்கிறேன்” என்று தனது நூலில் கூறியிருக்கிறார் ஹோமாய். நிரந்தரமானதொரு மௌனத்தை தனதாக்கிக்கொண்ட ஹோமாய் இனி ஒருபோதும் பேசப்போவதில்லை!!