Thursday, August 09, 2012

தேவை..கருணை அல்லது கருணைக் கொலை..!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோனாலி முகர்ஜிக்கு 26 வயது. அண்மையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் கிருஷ்ணா டிரத்தைச் சந்தித்த அவர், ''எனக்கு அரசு உதவ வேண்டும்... அல்லது என்னைக் கருணைக் கொலை செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஏன்?

2006 ஏப்ரல் 22,  நள்ளிரவு 2 மணி. மொட்டைமாடியில் தன் குடும்பத்தாருடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் சோனாலி முகர்ஜி. தூக்கத்தில் இருந்த சோனாலி, முகத்தில் ஏற்பட்ட திடீர் எரிச்சல் காரணமாகச் சட்டென்று விழித்துக்கொள்கிறார். அவர் முன் நின்றுகொண்டு இருந்த மூன்று இளைஞர்கள் ஓடி மறைகிறார்கள். அவர்கள் சோனாலியின் பொலிவான முகத்தில் அமிலத்தை ஊற்றிஇருக்கிறார்கள். வலியிலும் எரிச்சலிலும் துடிக்கிறார் சோனாலி. என்ன நடந்தது என்றே அவருக் குத் தெரியவில்லை.
ஆயிற்று ஒன்பது ஆண்டுகள்... இன்றைக்கு சோனாலியின் முகத்தைப் பார்ப்பவர்கள் அதிர்ந்துபோகிறார்கள். முகம் உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. இரு விழிகளிலும் பார்வை இல்லை. நரம்புகள் சிதைந்ததால், வலது காதின் செவித் திறனையும் இழந்துவிட்டார் சோனாலி. இவை அல்லாமல் மூச்சுத் திணறலும் குறைந்த ரத்த அழுத்தமும் அடிக்கடி வருவது உண்டு. இத்தனை கொடுமைகளையும் அவர் அனுபவிப்பது எதனால்? தன் பின்னால் சுற்றிய, தன்னை நோக்கித் தகாத வார்த்தைகளால் பேசிய, தன்னைப் பாலியல் சீண்டல் செய்த மூன்று இளைஞர்களைத் துணிவாக எதிர்த்ததுதான் காரணம்.


அப்போது கல்லூரி மாணவியான சோனாலி, தேசிய மாணவர் படையிலும் ஆர்வமுடன் செயல்பட்டுவந்தார். துணிச்சல்மிக்கவர். சோனாலி கல்லூரிக்குச் செல்லும்போதும் வரும்போதும் அந்த மூவரும் அவரைப் பின்தொடர்ந்து சீண்டியபடி இருந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களுடைய தொல்லை பொறுக்க முடியாத சோனாலி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக அவர்களிடம் கடுமையான தொனியில் சொல்லியிருக்கிறார். இதனால் கோபமுற்ற அவர்கள், ''அழகான முகம் இருக்கிறது என்பதால்தானே இப்படிப் பேசுகிறாய்... உனக்குத் தக்க பாடம் புகட்டுகிறோம்'' என்று கூறி, சொன்னதை அந்த இரவில் செய்தும் காட்டியிருக்கிறார்கள். அந்த ஓர் இரவு சோனாலியின் அத்தனை பகல்களையும் இருளாக்கிவிட்டது!

சோனாலிக்கு இதுவரை 22 அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. அவருடைய தொடைப் பகுதியில் இருந்து சதையையும் தோலையும் எடுத்து முகத்தில் வைத்து ஓரளவு முகத்தை வடிவத் துக்குக் கொண்டுவந்திருக்கின்றனர் மருத்துவர்கள். ஆனாலும், பார்வை கிடைக்கவில்லை. அவருடைய சிகிச்சைக்காகவே ஆலைத் தொழிலா ளியான அவருடைய தந்தை தன் நிலத்தை விற்று, சொத்துகளை இழந்து கடனாளி ஆகி இருக்கிறார். சோனாலியின் நிலையைக் கண்ட அவருடைய தாய் மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார். ஒரு கட்டத்தில் உறவினர்களும் நண்பர் களும் கைவிட்ட நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மாநிலத்தின் மூன்று முதல்வர்களைச் சந்தித்து விட்டார் சோனாலி. ஆனால், ஒரு பயனும் இல்லை. ஒரு சாதாரண சாலை விபத்தில்கூட காயம்பட் டால் அரசாங்கம் நஷ்டஈடு அளிக் கிறது. ஆனால், சோனாலிக்கு அரசாங்கமோ, குற்றவாளிகள் தரப்போ நஷ்டஈடு என்று ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை.

சோனாலியின் மீது அமிலத்தை ஊற்றிய  மூவரில் பிரம்மதர்  ஹர்ஜாவை இளங்குற்றவாளி என்று கூறி விடுதலை செய்துவிட்டது ஜார்கண்ட் உயர் நீதிமன்றம். தபஸ் மித்ரா, சஞ்சய் பஸ்வான் ஆகிய மற்ற இருவரும் பெயிலில் வெளிவந்துவிட்டனர். குற்றம் இழைத்துவிட்டு குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றனர் ஆனால், எந்தத் தவறும் செய்யாத சோனாலி, தன் வாழ்க்கையை இழந்து இன்று அரசின் கருணையை அல்லது கருணைக் கொலையை நாடி நிற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். அமிலம் வீசுவதால் பெண்ணின் வாழ்க்கையே பாழாகிறது என்பதை மனதில்கொண்டு, பாலியல் குற்றத்துக்கு இணையாக இந்தக் குற்றத்தையும் பார்க்கவேண்டும்; அல்லது இதற்கென்று தனி சட்டப்பிரிவு உண்டாக்க வேண்டும். சோனாலியை நோக்கி வீசப்பட்டது அமிலம் அல்ல; ஆணாதிக்கச் சமூகத்தின் வன்ம ஊற்றில் இருந்து பீறிட்டுப் புறப்பட்ட விஷம்.
சோனாலி முகர்ஜியுடன் அலைபேசியில் பேசினேன். குரலில் விரக்தி தொனித்தாலும், தனக்கு நேர்ந்த அநீதி குறித்த நினைவுகளின்போது ஆவேசப் படுகிறார். எப்படியாவது உதவி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையும் அவரது பேச்சில் தெறித்தது.
''தைரியமான பெண்ணான நீங்கள் ஏன் கருணைக் கொலை கோரிக்கையை வைத்தீர்கள்?''
''வாழ வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், வெறும் வாக்குறுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு யாராலும் வாழ்ந்துவிட முடியாது. ஒன்பது ஆண்டுகளாக உறுதி மொழிகளால் மட்டுமே வாழ்ந்துவருகி றேன். எல்லா வாசல்களும் மூடப்பட்டு விட்ட நிலையில்தான் இப்படி ஒரு முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. இப்போதும் யாருடைய உதவியாவது கிடைத்தால் வாழவே விரும்புகிறேன்.''
''அரசுத் தரப்பில் யாருமே உதவவில்லையா?''
''இல்லை. நாங்கள் அலைந்ததுதான் மிச்சம். இதை ஒரு சீரியஸான விஷயமாகக்கூட யாரும் பார்க்கவில்லை. இது எனக்கு மட்டுமான பிரச்னை இல்லை. அனைத்துப் பெண்களுக்குமான பிரச்னை. ஆனாலும், இதை யாருமே பொதுவான விஷயமாகப் பார்க்காதது வருத்தமாக இருக்கிறது.''
''குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட பெயிலை எதிர்த்து மேல்முறையீடு செய்வீர்களா?''
''குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட நானோ, அவர்களுடைய மிரட்டலாலேயே  அங்குஇருந்து வேறு ஊருக்குக் குடிபெயர வேண்டி இருந்தது. இதைத்தான் இந்தச் சமூகமும் அரசும் விரும்புகிறதா? சட்டம் அவர்களுடைய பாக்கெட்டில் இருப்பது எப்படி என்பதும் எனக்குப் புரியவில்லை. ஆனால், அவர்கள் தண்டிக்கப்படும் வரை நீதிக்காக நான் போராடுவேன்.''
''பெண்கள் அமைப்புகள் உங்களுக்குத் துணையாக வந்தனவா?''
''சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகளில் யாரும் எனக்குத் துணையாக இல்லை. இப்போது ஊடகங்களில் என் பேட்டிகளையும் என்னைப் பற்றிய செய்திகளையும் பார்த்த பிறகு, ஓரளவுக்குப் பெண்கள் அமைப்புகள் என்னைத் தொடர்புகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தன. ஆனாலும் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை.''
''சிகிச்சைக்காக சென்னை வந்தீர்களே... என்னஆயிற்று?''
''ஆமாம் வந்தேன். கண் சிகிச்சைக்காக 'சங்கர நேத்ராலயா’ மருத்துவமனைக்கு வந்தேன். கண்ணின் உட்பகுதியான கார்னியாவை மாற்ற வேண்டும் என்றனர். அதற்காகப் பெருந்தொகை செலவாகுமாம். அதனால், வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டேன். கண் சிகிச்சை மட்டுமல்லாது மற்ற சிகிச்சைகளுக்கும் சேர்த்து ஏறத்தாழ 17 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அத்தனை பணத்துக்கு எங்கே போவது?''
''முன்பு உங்களுடைய லட்சியம் என்னவாக இருந்தது?''
''நிறையக் கனவுகள் இருந்தன. நிறையப் படிக்க வேண்டும். பி.ஹெச்டி. முடிக்க வேண்டும். படிக்க முடியாத நிலையில் உள்ளவர்களையும் படிக்கவைக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாக இருந்தது. ஆனால், இப்போது உயிரோடு வாழ வேண்டும் என்பதே ஒரு குறிக்கோளாக இருக்கையில், வேறு லட்சியங்கள்குறித்து யோசிக்க முடியவில்லை.
அமில வீச்சுக்கு முன், பின் என்று என் வாழ்வை இரண்டாகப் பிரிக்கலாம். அந்தக் கொடூர சம்பவத்துக்குப் பின் எனக்கு எதிலுமே ஆர்வம் இல்லை. இப்போதைக்கு வாழ வேண்டும். அதற்கான வழியைத் தேட வேண்டும். அவ்வளவுதான்.''
''தன்னை நிராகரிக்கும் பெண்களின் மீது ஆண்கள் தாக்குதல் தொடுப்பது என்ன மனநிலை?''
''ஆண்களின் ஈகோதான் காரணம். தங்கள் மீது அவர்களுக்குத் தன்னம்பிக்கை இல்லாதபோது இப்படி நடந்துகொள் கிறார்கள். ஒரு பெண் தன்னை ஒதுக்கிவிட்டாலோ, விருப்பத்துக்கு அடிபணிய மறுத்தாலோ, ஆண்கள் இந்த அளவுக்குச் செல்வதை ஆளுமைச் சிதைவு (பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்) என்றே சொல்வேன். அது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையையே சிதைக்கும் கோரத்தை அவர்கள் உணர வேண்டும்.''

Wednesday, August 08, 2012

ஸ்ருதி இல்லாத வீடு

மாலை 4.15 மணி. வழக்கம்போல பள்ளிக் குழந்தைகளைச் சுமந்துகொண்டு செல்கிறது அந்த வேன். ஒட்டுநர் தன் இருக்கையில் அமர்ந்து வாகனத்தைச் செலுத்திக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு குழந்தையாக இறக்கிவிட்ட பின், இன்னும் எட்டு குழந்தை கள் வேனில் இருக்கிறார்கள். அப்போது அலைபேசி ஒலிக்கிறது. சென்னை சேலையூர் சீயோன் பள்ளியில் படிக்கும் குழந்தை ஸ்ருதி, பேருந்து ஓட்டை வழியாகக் கீழே விழுந்த செய்தி அந்த ஓட்டுநருக்கு வருகிறது. அவர் ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன்!

 தன் குழந்தை பள்ளிப் பேருந்து விபத்தில் உயிரிழந்த அதே நொடி, அவர் இன்னொரு பள்ளியின் குழந்தைகளைச் சுமந்துகொண்டு சென்ற வேனை ஓட்டிச் சென்றிருக்கிறார். செய்தியைக் கேட்ட பின்னும் பிஞ்சுக் குழந்தைகளைப் பொறுப்புடன் அவரவர் வீட்டுக்குச் சென்று சேர்த்துவிட்டுத்தான் விபத்து நடந்த இடத்துக்கு வந்திருக்கிறார்.

''நம்மளை நம்பி குழந்தைகளை ஒப்படைச்சிருக்காங்க. அவங்களை அப்படியே விட்டுட்டு வர முடியுமா? அதனால், பத்திரமாகக் கொண்டுபோய் விட்டுட்டு வந்தேன். எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. எப்படி யும் பிள்ளை பொழைச்சுருவானு நினைச் சேன். நான் மனுஷங்களை நம்புறவன். நூறு பேர் வேடிக்கை பார்த்தாலும், அதுல மூணு பேரு பிள்ளையை ஆஸ்பத்திரியில சேர்த்துருவாங்க. எப்படியும் அவ பொழைச்சுருவானு நினைச்சேன்.

எல்லாப் பிள்ளைகளையும் விட்டுட்டு நான் திரும்பி வரும்போதே வழியில டிராஃபிக் ஜாம். வேனை நிறுத்திட்டு ஜனங்களோட ஒருத்தனா ஸ்பாட்டுக்கு நடந்துதான் போக முடிஞ்சது. 'ஒரு குழந்தைக்கு இப்படியாகி ஸ்பாட்லயே உயிர் போயிடுச்சு’னு என் காதுபட மக்கள் பேசிக்கிறாங்க. ஆவேசமா ஸ்கூல் நிர்வாகத்தைத் திட்டுறாங்க. நான்தான் குழந்தைக்கு அப்பானு யார்கிட்டயும் சொல்லிக்கலை. ஸ்பாட்டுக்கு வந்து பார்த் தப்போ, பஸ் எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. ஸ்ருதி, என் மனைவி, நண்பர்கள் யாரையுமே காணோம். ஆஸ்பத்திரிக்கு குழந்தையின் உடலைத் தூக்கிட்டுப் போயிட்டதா சொன்னாங்க'' - அதற்கு மேல் பேச முடியாமல் கண்ணீர்விடுகிறார் ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன்.

சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார். ''நான் ஆட்டோ டிரைவரா இருந்தேன். இப்போதான் ஸ்கூல் வேன் ஓட்டுறேன். எத்தனையோ பேரு என் வண்டியில தவறவிட்ட பொருளை எல்லாம் பத்திரமாத் தேடிப்போய்த் திருப்பிக் குடுத்திருக்கேன். டிரைவருங்களை எப்படி மதிப்பாங்கனு உங்களுக்குத் தெரியாததா? என்னதான் உழைச்சாலும் எவ்வளவுதான் நேர்மையா  இருந்தாலும் 'இங்கே வாடா’ன்னுதான் கூப்பிடுவாங்க. அவ்வளவுதான் எங்க ளுக்கு மரியாதை... நானெல்லாம் செத்தா யாருங்க வரப்போறா? என் பொண்ணுக்குப் பாருங்க... எவ்வளவு கூட்டம். 20,000 பேர் இருக்கும்னு சொல்றாங்க. பொதுமக்களோட ஆதரவை என்னைக்கும் என்னால மறக்க முடியாது. மீடியாக்காரங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கேன். இத்தனை கூட்டம் எங்கே இருந்து வந்துச்சு? என் மகளை இதுக்கு முன்னால யாருக்குத் தெரியும்? விஷயம் தெரிஞ்சவுடன் ஓடோடி வந்த பல பேரை எனக்கு யாருன்னே தெரியாது. ஒரு கஷ்டம்னா யாருன்னே தெரியாம வந்த ஜனங்களைப் பார்க்கும்போது...'' என்று முடிக்க முடியாமல் மீண்டும் கண்ணீரின் பிடிக்குள் செல்லும் சேதுமாத வனைப் பார்க்கையில் துயரும் நெகிழ்ச்சியு மாகக் கண்கள் குளமாகின்றன.

'நடுரோட்டில் மயக்கம் போட்டு விழுந் தாலும்கூடக் கண்டுகொள் ளாத நகரத்து மக்கள்’ என்று சென்னைக்கு இருக் கும் பிம்பத்தை உடைத்து எறிந்திருக்கிறது சுருதியின் மரணம்.

பகலிலும் துயரத்தின் இருள் படிந்துகிடக்கிறது ஸ்ருதியின் வீடு. அவள் துள்ளி விளையாடிய அந்த வீட்டில் கனத்த மௌனம். அவளுடைய அண்ணன் பிரணவும் ஸ்ருதியும் எப்போதும் எல்லாவற்றுக்கும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள். இப்போது பிரணவுக்குச் சண்டை போடத் தங்கை இல்லை. அவன் உள்ளம் ஸ்ருதிக்கு நேர்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதை அவன் கண்கள் பிரதிபலிக்கின்றன. ''எப்ப வும் சண்டை போட்டாலும் வெளியில பிரணவை யாராவது அடிச்சுட்டா 'எங்க அண்ணனை நீ எப்படி அடிக்கலாம்’னு சண்டைக்குப் போவா ஸ்ருதி'' என்கிறார் ஸ்ருதியின் தாய் ப்ரியா.


வீட்டில் உள்ள புகைப்பட ஆல்பம் பூராவும் ஸ்ருதியே நிறைந்திருக்கிறாள். நடனம், பாட்டு, ஓவியம் என்று எல்லாவற் றிலும் பரிசு வாங்கும் ஸ்ருதியின் படங்களில் தெரியும் மின்னல் போன்ற முகமும் பளீர் கண்களுமாக ஓர் ஓவியம்போல் இருக்கிறாள். ''பாட்டுன்னா ஸ்ருதிக்கு ரொம்ப இஷ்டம். டி.வி-யில் அவளுக்குப் பிடிச்ச பாட்டு வந்தா பாடிக்கிட்டே டான்ஸ் ஆடுவா. அவளுக்குப் பிடிச்ச விஷயம் பாட்டும் டான்ஸும். பரதமும்

கர்னாடக சங்கீதமும் கத்துக்கிட்டா. திடீர்னு ஸ்ருதி சத்தமா 'ஸரிகமபதநிஸ’னு பாடி பிராக்டீஸ் பண்ணுவா. எல்லாப் போட்டிகள்லேயும் கலந்துப்பா. அவளுக்குச் சமைச்ச காய்கறி பிடிக்காது. பச்சைக் காய்கறியா சாப்பிடுவா. சாயங்காலம் ஸ்கூல் முடிச்சு வந்தவுடன் பையை வெச்சுட்டுக் கிளம்புவா. அப்புறம் அவ எந்த வீட்டுல இருக்கான்னே தெரியாது. இந்த ஏரியாவுக்கே அவ செல்லப் பிள்ளை. எல்லாருக்கும் அவளைப் பிடிக்கும். அவ பேச்சும் சிரிப்பும் எல்லாரையும் கவர்ந்துரும். 'எங்க வீட்டுக்கு வா... உங்க வீட்டுக்கு வா’னு அக்கம்பக்கத்தில் உள்ளவங்க அவளைக் கூப்பிட்டுக் கொஞ்சுவாங்க. அவ எங்க பிள்ளைனு சொல்றதைவிட, இந்த குவார்ட்டர் ஸுக்கே பிள்ளையா இருந்தா'' என்ற ப்ரியாவை அக்கம்பக்கத்து வீட்டினர் ஆமோதித்தனர்.

''ஸ்ருதி படிச்ச சீயோன் ஸ்கூல் தாளாளருடைய மகன் கல்லூரியில படிச்சப்ப டூர் போனார். போன இடத்துல புதைகுழில விழுந்து இறந்துட்டார். அப்போ இதே தாளாளர் பத்திரிகையில கொடுத்த பேட்டியை நான் படிச்சேன். 'கல்லூரி நிர்வாகம் அலட்சியமா இருந்ததாலதான் என் பிள்ளை இறந்தான்’னு அன்னைக்குக் குத்தம் சொன்னார்.

ஆனா, ஏழாயிரம் பிள்ளைகளைக் காப்பாத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிற இவரே இன்னைக்கு அலட்சியமா இருந்துட்டாரே! அவருக்கு ஒரு நியாயம்; எனக்கு ஒரு நியாயமா? நீங்களே சொல்லுங்க'' என்று கேள்வி எழுப்பிய சேதுமாதவனைத் தொடர்ந்த ப்ரியா, ''எப்பவும் பிள்ளைகளோட ஷூ, டிபன்பாக்ஸுன்னு காணாமப் போயிடும். நாங்கள்லாம் பிள்ளைங்கதான் காணடிச்சுடறாங்கனு நினைச்சுட்டு இருந்தோம். பிள்ளையே விழுந்ததுக்கு அப்புறம்தான் தெரியுது, அதெல்லாம் அந்த ஓட்டை வழியா விழுந்துருக்குனு. ஷூ, டிபன் பாக்ஸ் போனா வாங்கிக்கலாம். எங்க ஸ்ருதியை எங்களுக்கு யார் திருப்பித் தருவாங்க?'' என்று தேம்பியபடியே தொடர்ந்தார் ப்ரியா.

''மெயின் ரோட்டுல பஸ் வந்து பிள்ளைகளை இறக்கிவிடும். அங்கேர்ந்து அவளைக் கூட்டிட்டு வீட்டுக்கு வர்றதுக்கு வழக்கம்போலக் காத்திருந்தேன். பஸ் எங்களைக் கடந்து 200 அடி போய் யூ-டர்ன் எடுத்துத் திரும்பி வந்து நிற்கும். அப்படிக் கடக்கும்போது பிள்ளைகள் எங்களுக்குக் கை ஆட்டுவாங்க. அப்படி அன்னைக்கும் என்னைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே கையாட்டினா ஸ்ருதி. அதுதாங்க அவளைக் கடைசியா உயிரோட பார்த்தது. யூ-டர்ன் எடுத்துத் திரும்பி வர்றதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. யாருக்கும் வரக் கூடாது இந்த மாதிரி சாவு... நாங்க இத்தனை துக்கத்துல இருக்கும்போது, வீட்டுக்கு யாரோ மூணு பேர் வந்து ஸ்கூல் பேரை பத்திரிகைகாரங்ககிட்ட சொல்லாதீங்க’னு மிரட்டினாங்க. கூடியிருந்த கூட்டமே அவங்களைத் துரத்தி அனுப்பிடுச்சு'' என்றார்.

''எங்களுக்கு நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்கக் கூடாதுங்க. செத்தும் கொடுத்த சீதக்காதி மாதிரி என் பொண்ணு தன் உயிரைக் குடுத்து இந்த நாட்டுக்கே ஒரு பாடம் சொல்லிக்குடுத்துட்டுப் போயிருக்கா. இப்பப் பாருங்க அங்கங்க ஸ்கூல் பஸ்ஸை எல்லாம் செக் பண்றாங்களாம். பல புள்ளைங்களோட உயிரைக் காப்பாத்த என் பொண்ணு உயிர் குடுத்துருக்கா. இனி, ஒரு புள்ளைக்கு இந்த நிலைமை வரக் கூடாதுங்க'' என்கிறார் சேதுமாதவன்.

ஸ்ருதியின் வீட்டைவிட்டு வெளியே வந்தபோது வீட்டுக்குள் பரவி இருந்த துக்கத்தின் இருள் வெளியேயும் பரவி இருந்தது.

Saturday, August 04, 2012

டீச்சர்களுக்கும் டிரஸ்கோட்


மீபத்தில் கல்வித் துறையின் அறிக்கை ஒன்று கவனம் ஈர்த்தது. அதில் 'ஆசிரியர்கள் - ஆசிரியைகள் கண்ணியக் குறைவாகவும், மாணவ-மாணவிகள் இடையே ஏற்றத்தாழ்வையும், மனச் சலனத்தையும், தாழ்வுமனப்பான்மையையும், மரியாதைக் குறைவையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் உடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், குருவன்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கணித ஆசிரியை முத்துச்செல்விக்கு ஒரு மெமோ அளிக்கப்பட்டு இருக்கிறது. மெமோவுக்குக் காரணம்? பள்ளிக்கு அவர் சுடிதார் அணிந்துவந்தது. என்ன தொடர்பு இவை இரண்டுக்கும்? 

 மெமோ பெற்ற பிறகும் விடாமல் சுடிதார் அணிந்து பள்ளிக்குச் செல்லும் முத்துச்செல்வியைச் சந்தித்தேன். ''எங்கள் பள்ளிக்குக் கூடுதல் உதவிக் கல்வி அதிகாரி வந்தபோது சுடிதார் அணிந்திருந்தஎன்னிடம், 'இது என்ன கோலம்? இனிமேல் சேலையில்தான் வர வேண்டும்’ என்றார். அப்படியான அரசு ஆணை எதுவும் இல்லை என்பதால், நான் அவர் ஆணையின்படி செயல்படவில்லை. ஆனால், இதை மையமாகவைத்து என்னைப் பழிவாங்குகிறார்கள். அந்த மெமோவில், '5, 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுத்தல் தெரியவில்லை என்பதாலும், நீங்கள் சுடிதார் அணிந்து வருவதாலும் உங்கள் மேல் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று கேட்டிருக்கிறார்கள். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுத்தல் தெரியவில்லை. ஆனால், எட்டாம் வகுப்புக் கணித ஆசிரியருக்கு எந்த மெமோவும் அளிக்கப்படவில்லை. நான் இந்தப் பள்ளியில் சேர்ந்தே ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்கு முன் மாணவர்களுக்கு கணிதம் கற்பித்த ஆசிரியர்களும் அதே பள்ளியில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கும் மெமோ தரப்படவில்லை. என்னிடம் மட்டுமே விளக்கம் கேட்டிருப்பது, நான் சுடிதார் அணிந்து வருவதற்காகப் பழிவாங்கும் செயல்தானே? மெமோவில் முக்கால்வாசி உடைபற்றியும் இரண்டே இரண்டு வரிகள் மாணவர்களுக்கு வகுத்தல் தெரியாததுகுறித்தும் வருகின்றன. ஆண் ஆசிரியர்கள் முன்பெல்லாம் வேட்டிதான் அணிந்து வந்தார்கள். காலப்போக்கில் அவர்கள் பேன்ட்-ஷர்ட்டுக்கு மாறிவிடவில்லையா? எங்களை மட்டும் இன்னமும் சேலை கட்டச் சொல்லி நிர்பந்திப்பது என்ன நியாயம்? மேல்நிலை வகுப்பு மாணவிகளுக்குச் சீருடையாக முன்பு பாவாடை- தாவணி இருந்தது. ஆனால், கண்ணியமான உடை என்பதாலேயே இப்போது சுடிதாரைச் சீருடையாக்கி இருக்கிறது அரசு. மாணவிகளுக்குக் கண்ணியமாக இருக்கும் ஆடை, ஆசிரியைகளுக்குப் பொருந்தாதா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சுடிதார்தானே அணிகிறார்கள். என்னிடம் கேள்வி எழுப்பும் அதிகாரிகள் அவர்களிடம் கேள்வி எழுப்ப முடியுமா?'' என்று கேட்கிறார் முத்துச்செல்வி.

கல்வித் துறையின் கட்டாயத்தை விடுவோம். சேலை உடுத்துவது ஆசிரியைகளுக்கு ஏன் அவஸ்தையாக இருக்கிறது? இது தொடர்பாக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சிலர் நம்மிடம் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

''அரசின் அறிக்கையில் 'மனச் சலனம்’ என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. எந்த ஆடை மனச் சலனத்தை ஏற்படுத்தும் என்பது வகுப்புகளுக்குச் செல்லும் எங்களுக்குத்தானே தெரியும்? இதைச் சொல்லவே சங்கடமாக இருக்கிறது... ஆனால், சொல்லியாக வேண்டிய அவசியமும் இருக்கிறது. சேலை கட்டி நிற்பதால் வகுப்பறையில் நாங்கள் படும் அவஸ்தையை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. என் சக ஆசிரியை ஒருவர் திரும்பி நின்று போர்டில் எழுதிக்கொண்டு இருந்தபோது, மாணவன் ஒருவன் செல்போனில் அவரைப் படம் பிடித்துவிட்டான். அந்தப் படம் இணையத்திலும் பரவிவிட்டது. மன உளைச்சலில் அவர் அந்தப் பள்ளியைவிட்டே விலகிவிட்டார். நானும் பல சமயங்களில் அந்த அவஸ்தையை எதிர்கொள்ள நேர்கிறது. இதனாலேயே பாடம் நடத்துவதில் இருந்து கவனம் விலகி, ஆடை கண்ணியத்தைக் காப்பதிலேயே கவனமாக இருக்க வேண்டியதாக இருக்கிறது!'' என்கிறார் ஓர் ஆசிரியை.

கவிஞர் செல்மா பிரியதர்ஷனும் ஆசிரியைகளின் ஆதங்கத்துக்கு ஆதரவாக, ''நான் பத்து ஆண்டுகளாகக் கிராமப்புற அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன். என் மனைவி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். வகுப்பறை யில் பதின்பருவ மாணவர்கள் முன்னால், சேலை அணிந்து கரும்பலகையைப் பயன்படுத்துவதில் உள்ள அசௌகரியங்களை அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். சேலையைவிட சுடிதார்தான் பாதுகாப்பானது என்று கருதும் ஆசிரியைகள் பலர் உடைக் கட்டுப்பாடு காரணமாகவே சேலை அணிந்துவருகின்றனர். ஆசிரியர்கள் எளிமையாக, கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்கிற ஆலோசனை வரவேற்கத்தக்கதே. ஆனால், எந்தப் பணியிலும் தங்கள் பணிச்சூழலுக்கு ஏற்றவாறு உடையைத் தேர்ந்தெடுத்து அணியும் ஜனநாயக உரிமை இருக்கிறதுதானே!'' என்று கருத்துத் தெரிவிக்கிறார்.

பெண்களுக்கு இந்தப் பிரச்னை என்றால், ஆண்களுக்கோ விநோதமான சிக்கல். ''நான் ஒரு முறை வேட்டி அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்றேன். அப்போது என்னை அழைத்து, 'தமிழாசிரியர்தான் வேட்டி அணிந்து வர வேண்டும். நீங்கள் இனிமேல் இப்படி வரக் கூடாது’ என்றார் தலைமை ஆசிரியர். இதை நான் எங்கு சென்று புகாராகப் பதிவது?'' என்கிறார் அந்த ஆசிரியர்.

சமூகச் செயற்பாட்டாளராகவும் இருக்கும் ஆசிரியை ஒருவர், ''அரசுக்கு எதிராக ஏதாவது பேசினால் வேலைக்கு ஆபத்து என்ற அச்சத்தினாலேயே பலர் வாய் மூடி இருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரத்துக்குக் கொஞ்சமும் இடம் இல்லை. அடிமைகள்போல் இருக்கும் எங்களை மேலும் நசுக்கும் இந்த அறிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாங்கள் அணியும் உடைகளை அரசு தீர்மானிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நவீன வன்முறையின் மூலம் நினைத்ததைச் சாதிக்க நினைக்கிறது அரசு. ஆசிரியர்களுக்கும் சமூகப் பொறுப்பு உணர்வு இருக்கிறது. மாணவர்கள் மத்தியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எதை உடுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தும் அளவுக்கு நாங்கள் அறிவு மழுங்கிக்கிடப்பவர்கள் அல்ல. பொதுவான அறிக்கையாக இருந்தாலும், மறைமுகமாகப் பெண்களை அச்சுறுத்தும் இந்த ஆணாதிக்க அறிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.

கரும்பலகையில் எழுதும்போது கவனம் முழுவதும் முதுகு தெரிகிறதா... இடுப்புப் பகுதி வெளியே தெரியாமல் இருக்கிறதா என்பதிலேயே இருந்தால், பாடம் எப்படி ஒழுங்காக எடுக்க முடியும்? ஒரு சாக்பீஸ் கீழே விழுந்தால்கூட உடனே குனிந்து எடுக்கத் தயக்கமாக இருக்கும். இப்படிப்பட்ட சேலை தேவைதானா என்பது ஆசிரியைகளின் கேள்வி. இரு சக்கர வாகனத்தை ஓட்ட, பேருந்து பிடிக்க என்று எல்லாவற்றுக்கும் பொருத்தமான உடை சுடிதார்தான். இதே தமிழ்நாட்டில்தான் கல்லூரிகளில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பணிக்கு வருகிறார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் மட்டும் சுடிதார் அணிய ஏன் தடை?  ஆசிரியர் களின் உடைகுறித்துக் கவலைப்பட்டு கலாசாரக் காவலர் அவதாரம் எடுக்கும் அரசுக்கு, பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிவறைகள்கூட இல்லாமல் பெண்கள் படும் அவஸ்தைகள் கண் ணுக்குத் தெரியவில்லையா? சிறுநீர் கழிக்கக்கூட புதர் மறைவையும் திறந்தவெளிக் கழிப்பிடங்களையும் பெண்கள் நாடும் அவல நிலைகுறித்து என்றேனும் இதுபோலக் கவலைப்பட்டு இருக்கிறதா?

''ஆசிரியர்கள் டிப்-டாப்பாக இருக்கக் கூடாது!''
ந்த விவகாரம் தொடர்பாக அரசுத் தரப்பின் விளக்கத்தை அறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவபதியைத் தொடர்புகொண்டபோது, ''அந்த அறிக்கை குழந்தைகளுக்கு... மாணவர்களுக்குத்தான். நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டு கேள்வி கேட்குறீங்க!'' என்று பதில் அளித்து அதிரவைத்தார். உடனே, அருகில் இருந்த கல்வித் துறை இயக்குநர் மணியிடம் முழு விவரம் கேட்டுத் தெரிந்துகொண்டவர், மணியிடமே அலைபேசியைத் தந்தார். ''அது ஒரு பொதுவான அறிக்கை. ஒரு நாளிதழில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஓர் ஆசிரியரின் படம் வந்தது. அந்தப் படத்தில் அவர் சினிமா ஹீரோபோல டிப்-டாப்பாக இருந்தார். ஓர் ஆசிரியர் அப்படி எல்லாம் இருக்கக் கூடாது. அதனால்தான் இப்படி ஓர் அறிக்கை வெளியிட நேர்ந்தது'' என்றவர், மீண்டும் அமைச்சரிடம் அலைபேசியைத் தந்தார். ''நாகரிகமான முறையில் டிரெஸ் பண்றவங்களுக்கு எதுக்குக் கோபம் வரணும்? அந்த அறிக்கை அதிருப்தியை உண்டாக்கி இருக்குனு சொன்னவங்கள்லாம் நாகரிகமா டிரெஸ் பண்றவங்க கிடையாதுபோல இருக்கு!'' என்றவர், பதில் கேள்வியன்று கேட்டார். ''ஒரு டீச்சர் மாணவனைக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங் களே? இது மாதிரியெல்லாம் நடக்குதா இல்லையா? இப்படி ஒழுக்கம் இல்லாதவங்களா இல்லாம, ஒரு ரோல் மாடலா இருக்கணும்னுதான் இப்படி ஓர் அறிக்கை. இதுல கோபப்பட எதுவும் இல்லை!'' என்று முடித்துக்கொண்டார்.