Thursday, September 27, 2012

இடிந்தகரையில் இப்போது என்ன நடக்கிறது?


ரு கால்களையும் இழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் லவீனாவுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி காவல் துறையினர் இடிந்தகரை கடற்கரை யில் நடத்திய தடியடிக்குப் பின், காணாமல்போன தன் குழந்தையைத் தேடிச் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் லவீனாவின் உடலைத் தீண்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். ஓட முடியாத லவீனா அதிர்ந்துபோய், 'நான் குழந்தையைத் தேடித்தான் வந்தேன். என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!’ என்று கெஞ்ச, அதற்கு அந்தக் காவலர் கேட்ட குரூரத்தின் உச்சம், ''உதயகுமார் கூப்பிட்டாத்தான் போவியா? நாங்க கூப்பிட்டா வர மாட்டியா?''

 இன்று வரை லவீனாவால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. பெண்கள் முன்னணி யில் நிற்கும் இடிந்தகரைப் போராட்டத்தில், அவர்களைப் பின்வாங்கச் செய்ய, காவல் துறை எதேச்சதிகாரத்தின் அனைத்து உத்திகளையும் கையாள்கிறது. ஆனால், அதையும் தாண்டி போராட்டத்தில் தன்னார்வத்துடன் பங்கெடுக் கிறார்கள் பெண்கள். தடியடி நடந்த அன்று கைதுசெய்யப்பட்ட 65 பேரில் 7 பேர் பெண்கள். அவர்கள் யாரும் 
எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படாமலேயே, 36 மணி நேரச் சட்ட விரோதக் காவலுக்குப் பிறகு, ரிமாண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த 36 மணி நேரத்தில் அவர்களை இயற்கை உபாதையைக் கழிக்கக்கூட அனுமதிக்கவில்லை காவலர்கள். அந்தப் பெண்களிடமும் லவீனாவிடம் கேட்டது போலவே உதயகுமாருடன் தொடர்பு படுத்திப் பேசி வசைச் சொற்களால் அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

''கைதான ஏழு பெண்களின் உடைகளை முழுக்கக் களைந்து சோதனை என்ற பெயரில் திருச்சி சிறையில் அப்பட்டமான மனித உரிமை மீறலில் இறங்கியிருக்கிறது காவல் துறை!'' என்றார் போராட்டக் குழு உறுப்பினர்களில் ஒருவரான முகிலன்.

நியாயத்தை மட்டுமே துணையாகக்கொண்டு அற வழியில் போராடுபவர்களை எப்படி எல்லாம் ஒடுக்க முடியுமோ, அப்படி எல்லாம் ஒடுக்க முயல்கிறது காவல் துறை.

பெண்களின் நிலையைக் காட்டிலும் மிகவும் பரிதாபமாக இருக்கிறது அங்கே இருக்கும் குழந்தைகளின் நிலைமை. மனரீதியாகக் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தைகள் இரவுகளில் திடீர் திடீரெனத் தூக்கம் தொலைத்து எழுந்துவிடுவதாகவும், 'போலீஸ் வருமா’ என்று அச்சத்துடன் கேட்டுக்கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார் இடிந்தகரை வெண்ணிலா. இங்கு உள்ள குழந்தைகளுக்கு முறையான, முழுமையான கவுன்சிலிங் உடனடித் தேவை.

தேசத் துரோகக் குற்றச்சாட்டுடன் பாளையங்கோட்டை சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று பெயிலில் வெளியே வந்திருக்கும் கிஷனிடம் பேசினேன். மிரண்ட குரலில் மருண்ட கண்களுடன் பேசத் தொடங்கினான். ''நான் வீட்டுக்குள் இருந்தப்போ போலீஸ் வந்துச்சு. பயந்துபோய் இன்னொரு வீட்ல ஒளிஞ்சுக்கிட்டேன். அங்கேயும் வந்து என்னைப் பிடிச்சுட்டுப் போனாங்க. வழியில வண்டியிலவெச்சு அடிச்சாங்க. கூடங் குளம் போலீஸ் ஸ்டேஷன்லயும் அடிச்சாங்க'' என்றவனிடம் ''தேசத் துரோகம் என்றால், என்னவென்று தெரியுமா?'' என்று கேட்டேன். ''அப்படின்னா..?'' என்று உதட்டைப் பிதுக்கினான். கிஷனைப் போல 16 வயதுகூட நிரம்பாத நான்கு சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று திரும்பி இருக்கிறார்கள். காசா காலனி என்று அழைக்கப்படும் சுனாமி குடியிருப்பில், வீடுகளுக்குள் புகுந்து காவல் துறையினர் நடத்திய தாக்குதல்களுக்குச் சாட்சியாக ஜன்னல்கள், டி.வி, ஃபிரிஜ், பாத்திரங்கள்... எல்லாம் உடைந்து கிடந்தன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன. பந்தலில் இருந்த மூன்று ஜெனரேட்டர்களில் இரண்டைக் 'கொள்ளை’ அடித்துச் சென்ற போலீஸ், மூன்றாவதை உடைத்து மணலை அள்ளிக் கொட்டிவிட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் வைத்துவிட்டுச் சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள் மக்கள்.

சுனாமி நகரில் நடந்தவற்றைப் பற்றி கண்ணீருடன் விவரித்தார் அனிதா.
''சுனாமி நகர்ல போலீஸ்காரங்க செஞ்ச அட்டூழியங்களை நேருக்கு நேர் பார்த்தேன். எப்ப போலீஸ் வந்து அடிச்சு விரட்டிருமோங்கிற பயத்துல வீட்ல தங்காம மாதா கோயிலுக்கு வந்தோம். இங்கே நாங்க அசந்த சமயத்துல உள்ள புகுந்த போலீஸ் மாதா சிலையை உடைச்சு, சிலைக்குக் கட்டியிருந்த சேலையைக் கழட்டிப்போட்டு, பீடத்து மேல அசிங்கம் பண்ணிவெச்சுட்டுப் போயிருக்காங்க. எங்க கோயில் அவங்களுக்கு கக்கூஸா என்ன? மாதாவை நாங்க நம்புறோம்னு மாதாவை அவமானப்படுத்தினாங்க. உதயகுமார் சாரை நம்புறோம்னுதான் நடக்க முடியாத பொண்ணுகிட்டகூட, அவரை வெச்சு தப்புத் தப்பா பேசுறாங்க. இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம். கடற்கரைக்கார மனுஷங்களைப் பத்தி இன்னும் அவங்களுக்குத் தெரியலை. உதயகுமார் சார் சொன்ன வார்த்தைக் குக் கட்டுப்பட்டுத்தான் நாங்க அமைதியா இருக்கோம். இல்லேன்னா, நடக்குறதே வேற'' என்று ஆவேசமும் அழுகையுமாக முடித்தார்.
இடிந்தகரையில் மக்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்திய நாளன்று, விமானம் தாழப் பறந்ததால் அந்த அதிர்ச்சியிலேயே உயிர் இழந்த சகாயத்துக்கு மூன்று பெண்கள் உட்பட நான்கு குழந்தைகள். மனைவி சபீனா இன்னும் கணவனை இழந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறார். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மீனவர் அந்தோணியின் குடும்பத்துக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கிய   தமிழக அரசு, சகாயத்தின் மரணத்தைக் கண்டுகொள்ளவில்லை. இதுவரை சகாயம் மரணம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைகூட பதியப்படவில்லை.

பொதுச் சமையல் செய்து உண்டு ஆண்களும் பெண்களும் பேதமற்று வாழும் கொம்யூன் வாழ்க்கை போன்றே இடிந்தகரை மக்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கிறது. வீடுகளில் சமைப்பது இல்லை. லூர்து மாதா ஆலய வளாகத்தில்தான் சாப்பாடு தயாராகிறது. அதைத்தான் சாப்பிடுகிறார்கள். பால், தண்ணீர் விநியோகம் இல்லை. இடிந்தகரையில் இருந்து வெளியே சென்று தண்ணீர் லாரி ஒன்றில் மக்கள் தண்ணீர் சுமந்து வருகிறார்கள். ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய். பகல் முழுக்க மின் தடை. இரவில் மட்டுமே மின்சாரம். மருந்துப் பொருட்கள் இல்லை. பேருந்து வசதியை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டது அரசு.

மளிகைப் பொருட்கள், காய்கறி என்று எதுவும் ஊருக்குள் வருவது இல்லை. கடல் வழியாகப் படகுகளில் வரும் உணவுப் பொருட் களை வைத்தே பொதுச் சமையல் நடக்கிறது. நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்ட போர்ப் பிரதேசம்போல இருக்கிறது இடிந்தகரை. பிரசவ வலியில் துடித்த ஒரு பெண்ணைப் பத்திரிகை யாளர்கள் வந்த வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்று பிரசவம் பார்த்திருக்கிறார்கள்.

யாரிடம் பேசினாலும் ஒரு கட்டத்துக்குப் பின் அழுகிறார்கள். அந்தக் கண்ணீர் கழிவிரக் கத்திலோ, சுய பச்சாதாபத்திலோ வந்த கண்ணீர் அல்ல. ஒருங்கிணைந்த போராட்டம் என்றால் என்ன என்று உலகுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் ஒரு போராட்டத்தில் விளைந்த நெகிழ்ச்சி, ஆவேசம் எல்லாம் கலந்த உணர்ச்சிப் பிரவாகம். அந்தக் கண்ணீர் வரலாற்றில் இடம்பெறும்!

''தனிநபர் வழிபாடு எனக்குப் பிடிக்காது!''
பொது மக்களின் பல அடுக்குப் பாதுகாப்பைத் தாண்டிச் சென்று சுப.உதயகுமாரனையும் போராட்டக் குழுவினரையும் சந்தித்தேன். தன்னை இடிந்தகரை பெண்களுடன் இணைத்துப் பேசும் காவல் துறையினரின் போக்கைக் கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கும் உதயகுமார், ''கைதுசெய்யப்பட்ட பெண்களிடம் ராதாபுரம் காவல் நிலையத்தில் மிகவும் தரக்குறைவான முறையில் நடந்திருக்கிறார் ஓர் அதிகாரி. மற்றோர் அதிகாரி, 'உதயகுமார், லூர்து மாதா கோயிலின் உள்ளே பெண்களுடன் நேரம் செலவழிக்கிறார்’ என்று முன்னரே கொச்சையாகப் பேசி இருக்கிறார். மக்களின் ஆவேசத்தை எதிர்கொள்ள முடியாமல், மிகத் தரக் குறைவாக நடந்துகொள்கிறது காவல் துறை'' என்கிறார்.


''லூர்து மாதாவுக்கு அடுத்து உதயகுமாரன்தான் எங்கள் தெய்வம் என்கிறார்களே இடிந்தகரை மக்கள்?''
''அவர்களுடைய அன்புக்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால், போராட்டக் குழுவினர் வழிகாட்டும் வழியில்தான் நான் செயல்படுகிறேன். தனிநபர் வழிபாடு எனக்குப் பிடிக்காத ஒன்று. போராடும் மக்களிடையே இப்படியான உணர்வு இருப்பதை மாற்றுவோம். இது ஒரு கூட்டுப் போராட்டம். என்னை மட்டும் இதில் முன்னிறுத்து வதை நான் விரும்பவில்லை. இந்த எண்ணத்தை யும் நாளடைவில் சரிசெய்வோம்!'' என்கிறார் தீர்க்கமாக.

Monday, September 10, 2012

அற்புதங்கள் நிகழட்டும்

முன்னெப்போதுமில்லாதபடி
கடல் அலைகள் தாலாட்டட்டும்
குளிர் இதமாய் வீசட்டும்.
உறக்கம் உங்களைத் தழுவட்டும்
விளையாட்டையும் படிப்பையும்
போராட்டத்துக்குத் தின்னக்கொடுத்த
எங்கள் குழந்தைகளே
தென்றலில் மிதந்து வரும்
தேனமுத கானம்
உங்கள் செவிகளை எட்டட்டும்.

இடிந்தகரையிலிருந்து புயலாகிப் புறப்பட்டு
கடற்கரையில் மையம் கொண்டிருக்கும்
சீற்றங்கொண்ட தோழர்களே.
இன்றிரவு மட்டும் தென்றலாகி
சற்றே கண்ணயருங்கள்
மழைத்துளிகள் இன்றிரவு மட்டும்
மீண்டும் மேகமாகி விடட்டும்
கனவுகளில் அற்புதங்கள் நிகழ்ந்து
உலைக்களம் காணாமல் போகட்டும்

நாளை விடிகையில்
காக்கிச் சட்டைகளின் முகத்தில்
நீங்கள் விழிக்க நேரிடலாம்
ஆனாலும் என்ன..
குடிநீரும் உணவும்தந்து
உங்களால் அவர்களின் பசியாற்றமுடியும்
அதற்கு அவர்களின் கைம்மாறு
கண்ணீர்ப்புகையாகவோ தடியடியாகவோ
இருக்கக்கூடும்

ஆனாலும் தோழர்களே
எழுதியதிலேயே எப்படி முடிக்க என்று
குழ்ம்பித் தவிப்பது இப்போதுதான்.
அற்புதங்கள் கனவில் மட்டுமல்ல
நிஜத்திலும் நிகழும் சாத்தியங்கள் உண்டு
என்றுதான் நிறைவாய்
சொல்லத் தோன்றுகிறது.

Sunday, September 09, 2012

கூடங்குளம் பெண்கள் குழந்தைகளின் சென்னை வருகை

துவரை, இடிந்தகரையில் இருந்து போராடிய மக்கள், திடீரென்று சென்னையைத் தொட்டார்கள்! 

இடிந்தகரை மக்களை குற்றவாளிகளாகத்தான் கருதுகிறது காவல் துறை. இடிந்தகரையில் இருந்து குழந்தைக ளோடு சென்னைக்கு வந்த பெண்கள் சொன்ன தகவல்கள், அப்படித்தான் நினைக்க வைக்கின்றன.

சென்னைக்கு வந்த 20 பேர் குழுவில் இருந்த சேவியரம்மா, ''நாங்க தனியார் பஸ்ல பயணிகளோடு பயணிகளா வந்தோம். திசையன்விளை வரும்போதே ஒரு போலீஸ்காரர் பஸ்ல ஏறி, எங்களை யார் என்னன்னு விசாரிச்சார். 'நாங்க கிறிஸ்துவ அமைப்பு சார்பா குழந்தைகளை சாந்தோம் சர்ச், கோல்டன் பீச் சுத்திக் காண்பிக்க டூர் கூட்டிட்டுப் போறோம்’னு சொன்னோம். வேற வழியில்லாம பொய் சொல்ல வேண்டி இருந்துச்சு. 'நீங்க எல்லாரும் ஒரு பஸ்லதான் வர்றீங்களா, வேற ஆட்கள் வேற பஸ் எதுலயாவது வர்றாங்களா?’ன்னு துருவித் துருவிக் கேட்டார். 'இந்த பஸ்ல மட்டும்தான் வர்றோம்’னு சொன்னோம். அப்புறம் மதுரையில் ரெண்டு போலீஸார், பஸ்ஸை நிப்பாட்டி ஏறினாங்க. 'நாங்க இடிந்தகரையில இருந்து வர்றோம்’னு சொன்னவுடனேயே, 'சென்னையில குண்டு வீசத்தான் வர்றீங்களா? யார் கழுத்தை நெரிக்கப் போறீங்க?’னு கேட்டு மிரட்டினாங்க.
அப்புறம் அதிகாலை 4 மணிக்கு பஸ்ஸை பெருங்களத்தூரில் நிறுத்தினாங்க. அங்கேயும் போலீஸ் வந்து எங்களை இறங்கச் சொல்லி மிரட்டுச்சு. குழந்தைங்க பயத்துல அழ ஆரம்பிச்சுட்டாங்க. 6.30 மணி வரைக்கும் பஸ் அங்கேயே நின்னுச்சு. பஸ்ல இருந்த மத்த பயணிகள் சத்தம் போடவும், அவங்களுக்கு மட்டும் வேற பஸ் ஏற்பாடு பண்ணி அனுப்பிட்டாங்க. 'நாங்க கோயம்பேட்டுக்குப் போகணும். எங்க சொந்தக்காரங்க எங்களைக் கூட்டிட்டுப் போகக் காத்திருப் பாங்க’ன்னு பிடிவாதமா நாங்க பஸ்ஸை விட்டு இறங்கலை. அப்புறம் முன்னாடி பின்னாடி போலீஸ் ஜீப் வர, எங்களை ஏதோ குற்றவாளிங்க மாதிரி கோயம்பேடு வரை கூட்டிட்டு வந்தாங்க. நாங்க தங்குற இடத்திலும் போலீஸ் வெளியே நின்னுக் கிட்டே இருந்தது. இப்போ இங்கேயும் நிக்கிறாங்க.

இடிந்தகரையில் இருந்து வர்றோம்னு சொன்னவுடனேயே போலீஸ்காரங்க பார்த்த பார்வையே வேற. அந்த ஊர்ல பிறந்தது எங்க குற்றமா? நாங்க என்ன பாவம் பண்ணினோம்? ஒரு வருஷமா எந்த வன்முறையிலும் இறங்காம அகிம்சை வழியிலதானே போராடுறோம். எங்களை இவ்வளவு அவமரியாதையா நடத்தணுமா போலீஸ்? இந்தப் பச்சை மண்ணுங்கதான்  குண்டு வீசப் போகுதுங்களா?'' என்றார் குமுறலுடன்.
''எங்களை யாரும் தூண்டிவிடவில்லை. தன்னெழுச்சியாக நடக்கும் போராட்டத்தை மத்திய அமைச்சர் நாராயணசாமி திரும்பத் திரும்ப வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகச் சொல்லி கொச்சைப்படுத்துகிறார். உண்ணாவிரதப் போராட் டத்துக்கு எதுக்குப் பணம்? ஒரு கொட்டகையைப் போட்டு அதுக்குக் கீழே உட்கார்ந்திருக்கோம். எங்களைப் பார்க்க பல அரசியல் கட்சிகள், இயக்கங்களில் இருந்து வர்றாங்க. எங்களோட அதிகபட்சச் செலவு அவங்களுக்கு ஒரு தண்ணீர் பாக்கெட் கொடுக்கிறதுதான். இதுக்கு என்ன செலவாகிடும்? விவசாயிகளும், மீனவர்களும் 100 ரூபா கிடைச்சா அதுல 10 ரூபாயைப் போராட்டத்துக்குக் கொடுக்கிறாங்க. அதனால் எங்க போராட்டத்தைத் தயவு செஞ்சு கொச்சைப்படுத்தாதீங்க'' என்று அந்தப் பெண்கள் கேட்டுக்கொண்டனர்.

''குழந்தைகளிடம், கனவு காணுங்கள் என்றார். அப்துல் கலாம். ஆனால் எங்கள் பிள்ளைகளோ இரவில் கனவு கண்டு உளறும்போதுகூட, 'அணு உலை வேண்டாம்’ என்றுதான் சொல்கிறார்கள். ஓட்டுக்கு மட்டும் இடிந்தகரை மக்கள் வேண்டும். ஆனால், எங்க கோரிக்கையை மட்டும் கண்டுக்க மாட்டாங்களா? காற்றாலை, அனல் மின்சாரம்னு எப்படி வேணும்னாலும் மின்சாரத்தைத் தயாரிக்கலாம். மக்களைக் கொன்னுதான் மின்சாரம் உற்பத்தி பண்ணணுமா? நெய்வேலி மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்கு மட்டும் பயன்படுத்தினாலே போதும். அதை வேற மாநிலங்களுக்கு அனுப்பிட்டு, தமிழர்களுக்குன்னு சொல்லி எங்க ஊரை நாசமாக்குறாங்க. பொய்யா மின்வெட்டுன்னு ஜோடிச்சு, கூடங்குளம் செயல்பட ஆரம்பிச்சா மின்வெட்டு போயிடும்னு தமிழ்நாட்டு மக்களை நம்ப வைக்கிறாங்க.

நாங்க எல்லாருமே இரட்டை இலைக்குத்தான் ஓட்டுப் போட்டோம். முதல்வரும் ஒரு பெண்தான். அதனால் எங்களைப் புரிஞ்சுப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு. எங்களுக்கு ஆஸ்பத்திரி கட்டித் தர்றாங்களாம். எங்களுக்கு ஆஸ்பத்திரி வேண்டாம். ரோடு வேண்டாம். அணு உலையும் வேண்டாம். அதுக்குப் பதிலா ஒரு தொழிற்சாலை கட்டுங்க போதும்'' என்று கண்ணீர் விட்டு அழுதனர்.  

இடிந்தகரை மக்கள் மேல் போட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் குழந்தைகள். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் குழந்தைகளான மலியாவுக்கும் சாஷாவுக்கும் அணு உலையின் ஆபத்துக்களை விளக்கிக் கடிதம் எழுதி, அதை அமெரிக்கத் தூதரகத் தில் ஒப்படைத்துள்ளனர். ஆஸ்திரேலிய மக்களுக்கும், ரஷ்ய மக்களுக்கும் எழுதப்பட்ட கடிதங்களையும் அந்தந்தத் தூதரகங்களில் ஒப்படைத்துள்ளனர். முதல்வரைச் சந்திக்க முடியாமல் முதல்வரின் தனிப்பிரிவில் அவருக்கான மனுவைச் சேர்த்துள்ளனர் குழந்தைகள்.  எல்லைகளைக் கடந்தும் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டம் தொடர்கிறது!


படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

Wednesday, September 05, 2012

மேரிகோம் - இந்தியாவின் இரும்பு மனுஷி


'மணிப்பூரின் இளவரசி’ மேரிகோம்... இப்போது இந்தியாவின் 'இரும்பு மனுஷி’! புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இருந்து வந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கும் பெண். லண்டன் ஒலிம்பிக்ஸில் குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலம் வென்ற தன்னம்பிக்கை நட்சத்திரம்.
 ''எனது பாக்ஸிங் வாழ்க்கை அத்தனை எளிமையானதாக இல்லை. பாக்ஸிங் விளையாட்டில் ஈடுபட ஒரு பெண்ணுக்கு ஆண்களைவிட அசாதாரண முயற்சியும் கடின உழைப்பும் மனதளவில் அபார தெம்பும் இருக்க வேண்டும். எப்போதோ எங்கேயோ கிடைத்த ஒவ்வொரு சின்ன ஆதரவும் எனக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக இருந்தது. அதற்காக நான் நிறைய விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. பாக்ஸிங் இஸ் மை லைஃப். அதனால் நான் விட்டுக்கொடுத்தேன்!''- சிநேகமாக எதிரொலிக்கிறது மேரிகோமின் குரல். ஒலிம்பிக்ஸின் வெண்கல வெற்றிக்கு இன்னமும் பாராட்டு மழையில் நனைந்துகொண்டு இருந்தவரைத் தொட்டுத் தொடர்ந்து எடுத்த பேட்டியில் இருந்து...  

''ஓய்வு எடுக்கக்கூட நேரம் இல்லை இப்போது. நான் பிறந்த மணிப்பூர் மண்ணின் மக்கள் என் மீது பொழியும் அன்பில் நெகிழ்ந்துகொண்டு இருக்கிறேன். நான் இந்தத் துறைக்கு வந்தபோது 'இது பெண்களுக்கான துறை இல்லை. ஆகவே, உன்னால் சாதிக்க முடியாது’ என்றனர். நான் திருமணம் செய்துகொண்டபோது, 'இனி இவள் அவ்வளவுதான்’ என்றனர். நான் இரட்டைக் குழந்தைகள் பெற்ற பின்னர், 'இனி உடல்நிலை அனுமதிக்காது’ என்றனர். ஆனால், நான் என்னை நிரூபிக்க விரும்பினேன். இந்தியாவில் ஒரு வரலாற்றை உருவாக்க விரும்பினேன். இதோ தமிழ்நாட்டில் இருந்து என்னைப் பேட்டி எடுக்கிறீர்கள். நினைத்ததைச் சாதித்த திருப்தி!''
''அது என்ன... வெண்கலப் பதக்கம் வென்ற பிறகும் தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல்போனதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறீர்கள்?''
''பழங்குடி விவசாயக் கூலிக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். கடமை உணர்வு எங்கள் வளர்ப்பில் ஊட்டப்பட்டது. 'தங்கம் வென்று வா’ என்றுதான் இந்த தேசம் என்னை ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அனுப்பியது. ஆனால், என்னால் வெண்கலம்தானே வெல்ல முடிந்தது. அதனால், அந்த மன்னிப்பு.''  
''ஒரு பெண்ணாக இந்த உயரத்தை எட்ட உங்கள் போராட்டம் எங்கு தொடங்கியது?''  
''என் வீட்டில் இருந்து. நான் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்க என் தந்தையின் எதிர்ப்பு ஆரம்பத்தில் தீவிரமாக இருந்தது.  ஆனால், என் அம்மா எனக்கு தொடக்கத்தில் இருந்தே உறுதுணையாக இருந்து ஊக்கம் அளித்தார். குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறவே ஒரு ஒலிம்பிக்ஸ் அளவுக்குப் போராடி னேன். 14,000 ரூபாய்க்கு வீட்டில் இருந்த பசுவை விற்றும் கடன் வாங்கியும் பயிற்சி பெற்றேன்.
2005-ம் வருடம் திருமணம். 'இனி, குடும்பத்தைக் கவனித்துக்கொண்டால் போதும். விளையாட்டு வேண்டாம்’ என்று முன்னைக் காட்டிலும் அதிக நெருக்கடி கொடுத்தார்கள். அப்போது என் மாமனார் கொடுத்த ஊக்கம்தான் என்னைத் தொடர்ந்து பயணிக்கச் செய்தது. ஆனால், அடையாளம் தெரியாத சிலரால் அவர் கொல்லப்பட்டார். நான் தொடர்ந்து போட்டிகளில் பங்கெடுத்துப் பட்டம் வெல்வதைத் தடுக்க முடியாததாலேயே அவரைக் கொன்றார்கள் என்று அறிந்தபோது, நான் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றேன். அந்தச் சமயம் நான் கர்ப்பமாக இருந்தேன். இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானேன். என் மாமனார் கொலையானதால் இனி விளையாடப்போவது இல்லை என்று முடிவுஎடுத்து இருந்தேன். ஆனால், என் கணவரின் ஆறுதலும் ஆதரவும் என்னை மீண்டும் மனம் மாற்றி குத்துச்சண்டை மேடை ஏற்றியது. 15 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயிற்சியில் ஈடு பட்டேன். பல சமயங்களில் குழந்தைகளைக்கூட கவனிக்க முடியவில்லை. இத்தனை சிரமங்களுக்குப் பிறகு 2008-ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டம் வென்றேன். நான்காவது உலக சாம்பியன் பட்டம் அது. 'இது ஒரு ஆரம்பம்தான்’ என்று அப்போது முடிவெடுத்தேன். நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.''  
''முதல்முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பின் மணிப்பூர் அரசு உங்களுக்குக் காவல் துறையில் கான்ஸ்டபிள் பணி வழங்கியது. அதை ஏற்க மறுத்தீர்கள். பின்னர் 8,500 ரூபாய் சம்பளத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணி அளித்தது. இப்போது என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்? அந்தச் சம்பளம் உங்கள் பயிற்சிகளுக்குப் போதுமானதாக இருக்கிறதா?''
''இரண்டு பதவி உயர்வுகளுக்குப் பிறகு, இப்போது 31,000 ரூபாய் சம்பளம். ஒரு வாரப் பயிற்சிக்குக்கூட இது போதாது!''
''ஆனால், கிரிக்கெட் விளையாட்டுக்கு கோடிகளைக் கொட்டுகிறார்களே?''
''கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதுவும் ஒரு விளையாட்டுதானே? ஆனால், மற்ற போட்டிகளுக்கும் அதே அளவு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்!''
''உங்கள் ரோல் மாடல் யார்?''  
''ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி. அதோடு அபிநவ் பிந்த்ரா, சாய்னா, யோகேஸ்வர் தத், சுஷில் குமார், விஜய்குமார், ககன் நரங் என்று ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற ஒவ்வொருவருமே எனக்கு ரோல் மாடல்கள்தான். இவர்கள் ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது!''
''மேரிகோமுக்கு வேறு என்னவெல்லாம் பிடிக்கும்?''
''என் குழந்தைகள் ரெங்பா, நைன்நாவை ரொம்பவும் பிடிக்கும். கடவுள் நம்பிக்கை அதிகம். மணிப்பூர் மாநில உணவுகள் அனைத்தும் பிடிக்கும். சாம்பியாங் என்று ஒரு உணவு. இஞ்சி, பச்சை மிளகாய், பட்டாணி எல்லாம் போட்டு... நினைத்தாலே நாவூறும்! அப்புறம் மணிப்பூர் மக்களுக்காகப் போராடும் இரோம் ஷர்மிளாவை மிகவும் பிடிக்கும். அவரது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்!''
''இந்த வெற்றிகளுக்கு நீங்கள் யாருக்கு நன்றி கூற விரும்புகிறீர்கள்?''
''என் கணவருக்கு! அவருடைய ஆதரவு இல்லாமல் என்னால் இதைச் சாதித்திருக்க முடியாது. அவர் மட்டும் 'எதற்கு இதெல்லாம்? குடும்பத்தைப் பார்’ என்று சொல்லியிருந்தால், நான் என்னவாகி இருப்பேன் என்று என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி!''

Tuesday, September 04, 2012

மற்றுமொரு இனப்படுகொலை - மியான்மர்


ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மனித உயிர்களின் ஓலம் அடங்கும் முன்பாகவே, இதோ அதற்கு நிகரான இன்னொரு இனப்படுகொலை நிகழ்ந்து வருகிறது மியான்மரில். முன்பு பர்மா என்றழைக்கப்பட்ட இப்போதைய மியான்மரில் பௌத்தம்தான் பிரதான மதம். அங்கு வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிறுபான்மையினர். இதுவரை கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 20,000 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஊடகங்களில் பெரிதாக இதுகுறித்த செய்திகள் வரவில்லை. இவ்வளவு பெரிய இனப்படுகொலை நடந்தபின்னும் உலகின் கவனம் மியான்மர் பக்கம் திரும்பவில்லை. இவை எல்லாமே ஈழத்தை நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஈழத்துக்காக ஒலித்த குரல்கள் எப்படி இலங்கைக்குள்ளும், தமிழ்நாட்டுக்குள்ளும் மட்டுமாக ஒலித்ததோ, அப்படியே ரோஹிங்கியா முஸ்லிம்களின் குரல்களும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. 

அகதிகளுக்கும் கூட ‘இது எங்கள் நாடு’ என்கிற உணர்வும் அங்கே திரும்பவும் சென்று வாழ முடியவில்லையே என்கிற ஏக்கமும் புலம் பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு இருக்கும். ஆனால் எந்த நாடென்றே தெரியாமல், எந்த நாட்டிலும் குடியுரிமை பெறாமல், ஒரு தேசிய இனமாகவும் ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்படாமல் அநாதைகள் போல வாழிடத்திலேயே அலைய நேர்ந்ததுண்டா நீங்கள்? கண்ணெதிரே பெற்ற பிள்ளைகளையும், பெற்றோரையும் கொன்று, உடன்பிறந்த சகோதரியை ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்கையில் காப்பாற்ற வழிதெரியாமல் கதறியதுண்டா? நீங்களும் நானும் ஒரு பாதுகாப்பான சமூகத்தில் வாழ்கிறோம். ஆனால் மியான்மரில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை இதுதான்.

எதற்காக இந்த படுகொலைகள்? மியான்மரின் ராகின் மாகாணத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைச் செய்தது என்று கூறி மூன்று முஸ்லிம்களை கைது செய்தது மியான்மர் அரசு. ஆனால் இளம்பெண்ணின் படுகொலைக்கு ரோஹிங்கியா முஸ்லிம்களை பழிவாங்கவேண்டும் என்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மிகத் தீவிரமான இன எதிர்ப்புப் பிரசாரம் முடுக்கி விடப்பட்டது. முஸ்லிம்கள் மீதான வன்முறை தொடங்கியது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.  தொடக்கத்தில் இருதரப்பிலும் உயிர்ச் சேதங்கள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் ராகின் பௌத்தர்களின் கை ஓங்கியது. கடைகள், கல்வி நிலையங்கள், வங்கிகள் என்று அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்குச் சட்டம் முஸ்லிம்களை வீட்டுக்குள் முடக்கிப் போட்டதால், அவர்களை வேட்டையாடிய பௌத்த ராகின்களுக்கு மிக வசதியாகப் போய்விட்டது. அவர்களின் வீடுகளுக்குள்ளேயே சென்று அவர்களைக் கொன்றனர். ஊரடங்கு உத்தரவுக்கு ராகின் வன்முறையாளர்கள் செவிசாய்க்கவில்லை. காவல்துறையும் ராணுவமும் இவர்களுக்கு உதவின. உள்நாட்டில் வாழ வழியில்லாத முஸ்லிம்கள், உயிரைக் காத்துக்கொள்ள படகுகளில் வங்கதேசத்துக்கு அகதிகளாகச் சென்றனர். ஆனால் வங்கதேசமோ ஏற்கனவே 3 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் தங்கள் நாட்டில் இருப்பதால் மேற்கொண்டு அகதிகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறி திருப்பி அனுப்பியது. நடுக்கடலில் போவதற்கு திக்கற்று அலைந்து திரிந்தே பசியிலும் பட்டினியிலும் நோயுற்றும் பலர் இறந்துபோயுள்ளனர். இது ஒருபுறம் என்றால் படகுகளில் தப்பித்துச் செல்லும் அகதிகளை குறிவைத்து ஹெலகாப்டர் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். அகதிகளாகத் தப்பித்தவர்கள் கதி இதுவென்றால், உள்ளேயே இருந்தவர்கள் பேரினவாத குழுக்களிடம் சிக்கி தங்கள் உயிரை இழக்கின்றனர். படுகொலை செய்யப்பட்டு இறந்த முஸ்லிம்களின் தலைமுடியை அகற்றி மொட்டையடித்து, அவர்களுக்கு பௌத்த்த் துறவிகள் போன்று உடை அணிவிக்கப்பட்டு, புகைப்படங்கள் எடுக்கப்பட்டு முஸ்லிம்களால் கொல்லப்பட்ட்து போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு கலவரங்கள் தூண்டப்படுவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை உண்மை என்று நம்பும் மியான்மர் நாட்டினர் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். ரோஹிங்கியா மக்கள் மத்தியில் வேலை செய்துகொண்டிருந்த தொண்டு நிறுவனமான கிலிஜிஷிணிகிழி ''இது போன்ற மோசமான நிலைமையை, நாம் இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் சர்வதேச சட்டத்தினால் வரையறுக்கப் படக் கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரோஹிங்கியா வங்காளிகள் என்ற இனம், மியான்மரில் அழிந்து கொண்டிருக்கிறது." என்கிறது.

இந்த கோரத்தாக்குதல்களைக் கண்டித்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட போராட்டம் நடைபெற்றது. ஜெர்மன் தலைநகர் பெர்லினிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாகிஸ்தான் அரசு இந்தப் படுகொலைகள் நிறுத்த மியான்மர் அரசை நிர்பந்திக்கவேண்டும் என்றும் அந்த நாட்டுடன் உள்ள ராஜிய உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படிச் செய்யாவிட்டால், பாகிஸ்தானில் உள்ள மியான்மர் நாட்டினரைத் தாக்குவோம் என்றும் தாலிபான்கள் எச்சரித்துள்ளனர். மியான்மரில் உள்ள தனது பணியாளர்களை ஐ.நா.சபை திரும்ப அழைத்துக்கொண்ட்து. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தனது பார்வையாளர்களை மியான்மருக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மியான்மர் அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. துருக்கி நாட்டு அரசு நிலைமையை நேரில் ஆய்வு செய்ய மியான்மருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவூத் ஓக்லுவை அனுப்பியது. ‘மேற்கு மியான்மரில் இனச் சுத்திகரிப்பு நடக்கிறது’ என்கிறது சவுதி அரேபியா பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி மியான்மர் அதிபர் தைன் சென்னுக்கு தாக்குதல்களை நிறுத்தக்கோரி கடிதம் எழுதினார். ஆனாலும் தாக்குதல்கள் நிற்கவில்லை. சீனாவும் இந்தியாவும் இதுகுறித்து கனத்த மௌனம் சாதிக்கின்றன. நோபல் பரிசு வென்ற மியான்மரின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்-சாங்-சூ-கீயும் இது குறித்து மௌனம் சாதிக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இன்னொருவரான தலாய் லாமாவும் இது குறித்து மௌனம் சாதிக்கின்றார். ஒருவேளை அமைதிக்கான நோபல் பரிசை, இதுபோன்ற சமயங்களில் அமைதியாய் இருப்பதற்காக வழங்கப்பட்டது என்று புரிந்துகொண்டார்களோ என்னவோ?

ரோஹிங்கியா முஸ்லிம்கள் 8 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கவில்லை மியான்மர் அரசு. திருமணம் செய்துகொள்ள ராணுவ உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.  எல்லைக் காவல்படை உட்பட 4 இடங்களில் அனுமதிப் பத்திரம் பெறப்பட வேண்டும்.. திருமணம் செய்யாமல் ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது அங்கு குற்றம். அப்படி வாழ்ந்து கருவுற்ற ஓர் இளம்பெண்ணின் கால்நடைகளையும் உடைமைகளையும் ராணுவத்தினர் அபகரித்துச் சென்ற சம்பவமும் நடந்தது. 2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது. மிகக் குறைவான ஊதியமே அவர்களுக்கு வழங்கப்படும். அவர்களுடைய நிலங்கள் பிடுங்கிக்கொள்ளப்படுகின்றன.  ஓரிடத்தில் இருந்து இன்னொரு இட்த்திற்கு நாட்டுக்குள்ளேயே இடம்பெயர அரசின் அனுமதியை அவர்கள் பெறவேண்டும். உயர்கல்வி வழங்கப்படுவதில்லை. பாஸ்போர்ட் கிடையாது. 7 வயது முதலே குழந்தைகள் தொழிலாளிகளாக்கப்படுகிறார்கள். நாட்டின் மிக அபாயகரமான, மோசமான தொழில்கள் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பாலம் கட்டுவது, பாதைகளை சீரமைப்பது போன்ற பல கட்டுமானப் பணிகளிலும் இவர்களே குறைந்த கூலிகளில் அடிமைகள் போல வேலை வாங்கப்படுகிறார்கள். இவர்களின் வீடுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் காவல்துறை நுழைந்து சோதனை செய்கிறது. அவர்கள் கூடும் இடங்களில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்படுகின்றன. ராணுவம் முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லாங்கு செய்வது வாடிக்கையாகிப் போனது. இத்தனை அடக்குமுறைகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூகம் இந்நேரம் பொங்கியெழுந்திருக்க வேண்டும். ஆனால், குர்துக்கள், பாலஸ்தீனியர்கள் போல அவர்களை வழிநடத்த ஒரு தலைவர் அவர்களுக்கு இல்லை என்பதால் அது நடக்கவில்லை.. ஆங்-சாங்-சூ-கீ போல ரோஹிங்கியாக்களுக்கு மக்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய தலைவர்கள் இல்லை. ’விஷீst யீக்ஷீவீமீஸீபீறீமீss ஜீமீஷீஜீறீமீ வீஸீ tலீமீ ஷ்ஷீக்ஷீறீபீ” என்று அகதிகளுக்கான ஐ.நா ஹைகமிஷனர் கிட்டி மெக்கின்ஸி இவர்களைக் கூறுகிறார்.

படகுகளில் தப்பித்து, கடலில் தத்தளித்து தடுமாறியவர்களைக் காப்பாற்றிக் கரைசேர்த்த்து இந்தோனேஷிய கடற்படை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முகமது ஷஃபிருல்லாஹ் என்கிற சிறுவன ஊடகங்களிடம் கூறியது இது. ‘’நாங்கள் 200 பேர் தப்பித்து வந்தோம். எங்கள் மக்கள் பலர் சிறையில் வாடுகிறார்கள். எங்கள் குடும்பத்தின் நிலம் அபகரிக்கப்பட்டது. என் சகோதரன் காட்டுக்குள் இழுத்துச்செல்லப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துவிட்டான். அங்கேயுள்ள மக்களுக்கு மருத்துவ வசதிகளோ, உணவோ இல்லை” 

மியான்மரில் நடப்பவை தொடர்பான விடியோ பதிவுகள் இணையத்தில் செய்தித்தொகுப்புகளாக்க் கிடைக்கின்றன. அவற்றை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அத்தனை சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள், படுகொலைகள். வங்கதேசத்தில் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படும் அகதிகள் நடுக்கடலில் படகுகளில் அமர்ந்து கதறியபடியே விண்ணை நோக்கி இரு கைகளையும் நீட்டி ‘அல்லாஹ்! இந்த வேதனை வேண்டாம். நாங்கள் எங்கு செல்வோம். எங்களை அழைத்துக்கொள்.’ என்று பிரார்த்திப்பதைப் பார்ப்பவர்களின் கல் மனமும் கரைந்துவிடும். இப்படி வங்கதேசத்தால் திருப்பி அனுப்பப்படும் படகுகளின் கதி என்னவென்பதே தெரியவில்லை.

இத்தனை பேரை பலிகொண்டிருக்கும் இந்த இனப்படுகொலை குறித்து இந்திய ஊடகங்களில் பெரும்பகுதி, அரசைப் போலவே மௌனம் சாதிக்கின்றன. சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இந்த இனப்படுகொலைகளை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத் தவிர பெரிய எதிர்வினைகளோ, ஊடகப்பதிவுகளோ தமிழகத்தில் இல்லை. இந்திய அளவிலும் இல்லை. மியான்மர் குறித்து தெரிந்துகொள்ள இணையம் மட்டுமே ஒரே ஒரு வழியாக இருக்கிறது . ஆனால் அதே இணையம்தான் மியான்மரில் முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தைப் பரப்பவும் காரணமாக இருந்தது. 

அண்டை நாடு என்கிற முறையில் இந்தப் படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கப்போகிறதா இந்தியா? அல்லது ஒரு கண்டன அறிக்கையாவது இந்திய அரசு வெளியிடுமா என்கிற எதிர்ப்பார்ப்பு இந்திய முஸ்லிம்களிடையே உள்ளது. அதையாவது நிறைவேற்றுமா அரசு?