Friday, May 30, 2014

கோச்சடையான்

இந்தியாவின் முதல்  பெர்ஃபார்மன்ஸ் கேப்சர் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட அனிமேஷன் படம் என்கிற பெருமையுடன் வெளிவந்திருக்கிறது கோச்சடையான்.  இந்தியாவுக்கும் தமிழுக்கும் புதிய விஷயம் என்கிற வகையில் அதன் இயக்குநர் சௌந்தர்யாவுக்கு வாழ்த்துகளை முதலில் சொல்லலாம். 

கோச்சடையானின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரஜினியே கோலோச்சுகிறார். முதலில் பாத்திரங்களின் விழிகளில் உயிர்ப்பு இல்லாமல் இருப்பதால் சிறிதுநேரத்துக்கு படத்தின் உருவங்களை நெருக்கமாக உணரமுடியாமல் அந்நியப்பட்டு, பின் மெதுவாக அனிமேஷன் உருவங்கள் மறைந்துபோய் நிஜமான ரஜினி, நாசர் என்று நம்பத் தொடங்குகிறோம். இந்த நம்பிக்கையைக் கொண்டுவருவதில் பெரும்பங்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய கே.எஸ்.ரவிக்குமாரையே சாரும். ஆனால் உருவங்களின் ஒற்றுமை எனப்பார்த்தால் ரஜினிக்கும் நாசருக்கும் பொருந்துவதுபோல  தீபிகா படுகோனே, சண்முகராஜா, ஜாக்கி ஷெராஃப், சரத்குமார் போன்றோரின் உருவங்களும்கூட சரியாக திரையில் வரவில்லை என்கிற எண்ணமே எழுகிறது.  தொண்ணூறுகளின் சரத்குமாரை வார்த்தெடுத்தார்களோ என்கிற சந்தேகம் வருகிறது. 

ஒரு படத்தின் திகிலைக் கூட்டும் வகையிலும் மர்மங்கள் அவிழாமலும் பார்த்துக்கொள்ளவேண்டிய திரைக்கதை அதில் சறுக்கியிருக்கிறது. படத்தின் தொடக்கத்திலேயே சிறுவயது ரஜினியான ராணா கோட்டைப்பட்டினத்திலிருந்து கலிங்கபுரிக்கு வந்துசேர்வதாகக் காண்பிப்பதாலேயே வரப்போகும் காட்சிகளில் ரஜினி என்ன செய்யப்போகிறார் என்பதை யூகிக்க முடிகிறது. கோட்ட்டைப்பட்டினம் வீரர்களை அவர்கள் நாட்டின்மீதே படையெடுக்க பயன்படுத்தும் திட்டம்போடும்போதே அதில் ஏதோ இருக்கிறது என்று தெரிகிறது. அப்புறம் ‘மீண்டும் ஒரு கோச்சடையானா?’ என நாசர் கேட்கும் காட்சியும், ‘நான் இருக்கும்வரை மன்னரை யாரும் கொல்ல முடியாது’ என ரஜினி சொல்லும் வசனமும் அப்படியே பின் நிகழ்வதை கட்டியம் கூறுகின்றன. மன்னரைக் கொல்லும் ரஜினியின் முயற்சிகளும் எளிதில் யூகிக்கக்கூடியவையாக இருப்பதே சுவாரஸ்யத்தைக் குறைக்கின்றன. ஆங்காங்கே பல ஓட்டைகள் உண்டு. சிறுவயதிலிருந்தே ரஜினிக்கும் தீபிகாவுக்கும் பழக்கம் உண்டு எனும்போது ராணா ரஜினியின் தந்தை கோச்சடையானுக்கு அளித்த மரண தண்டனையை ஊரே பார்த்தபோது தீபிகாவுக்குத் தெரியாதா என்ன? ரஜினி புதிதாக சொல்வதுபோல் ஃபிளாஷ் பேக்கை தீபிகாவுக்குச் சொல்கிறார். இதில் தீபிகா பால்யத்தில் நிகழ்ந்ததைக்கூட நன்றாக நினைவில் வைத்திருப்பவர் என்று வசனம் வேறு வருகிறது. அப்புறம் கோச்சடையானின் மகன் என்று தெரிந்தும் தளபதியாக ராணா ரஜினியை .நாசர் வைத்துக்கொள்வது, கோச்சடையான் கலிங்கபுரிக்கு விஷமுறிவு மருந்து நாடி வருகையில் வீரர்களின் உடல்மொழியில் தெரியும் நாடகத்தனம் என சில பிரச்சனைகள் உண்டு. ஆனாலும் ரஜினியின் ஆளுமையான குரலும், அவர் உச்சரிக்கும் வசனங்களும், பிரமாதமான நாசரின் பின்னணிக் குரலும், நாகேஷை மீண்டும் திரையில் கொண்டுவந்திருப்பதும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.

காட்சியமைப்பில் உள்ள கோளாறுகளை ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சரிசெய்கிறது. பாடல்களாகட்டும் பின்னணி இசையாகட்டும் ரஹ்மான் மிக நிறைவாகவே தன் பங்கை ஆற்றியிருக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் ஒலிக்கிறது. ஷோபனாவும் ரஜினியும் ஆடுவதாக வரும் அந்த ருத்ரதாண்டவம் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக சில வசனங்கள் ஈர்க்கின்றன ‘கோச்சடையான் தனிமனிதன் அல்ல; அவன் ஒரு நாடு”, ”மண்ணை ஆள்பவன் மன்னன் அல்ல; மக்களின் மனங்களை ஆள்பவனே மன்னன்” என்பது போன்ற வசனங்களில் கே.எஸ்.ரவிக்குமார் தனித்துத் தெரிகிறார். திடீரென்று காரல் மார்க்ஸின் ‘மாற்றம் ஒன்றே மாறாதது” போன்ற வசனங்களும் வருகின்றன.   ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் இன் ஜினியரிங் படத்தின் இன்னொரு சிறப்பம்சம். அதுபோலவே ராஜீவ் மேனனில் ஒளிப்பதிவும். படத்தொகுப்பு செய்த ஆண்டனி இரண்டாம் பாதியில் போர்க்காட்சிகளை கொஞ்சம் வெட்டியிருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். 

ஒரு மாயாஜாலக் கதையாகவும் இல்லாமல், வரலாற்றுக் கதையாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடையே பயணிக்கிறது கதை. குழந்தைகளுக்கு பிடிக்கக்கூடும். பெரும்பொருட்செலவில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களின் தரத்துடன் கோச்சடையானை ஒருபோதும் ஒப்பிட முடியாது என்றாலும், இனி இந்தியாவில் இதுபோன்ற முயற்சிகளுக்கு முன்னோடியாக கோச்சடையான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Thursday, May 29, 2014

ஆதாமின் மகன் அபு - ஒரு பார்வை


ஆதாமிண்டே மகன் அபு - மலையாளத் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பு இது. ஹஜ் பயணம் செல்ல விரும்பும் அபுவும் அவரது மனைவி ஆயிஷாவும் அதற்காக படும் பாடுகள்தான் கதை என்று ஒற்றைவரியில் சொல்லிவிட முடியாத படம் இது. ஏனெனில் படம் இறுதியில் சொல்லும் சேதி சக உயிர்கள்மீதான நேசம் எல்லாவற்றையும்விட முக்கியம் என்பதே.

மலையாளத்தில் வெளியான ’ஆதாமிண்டே மகன் அபு’ தமிழ்நாட்டில் இப்போது தமிழ் பேசுகிறார். ஓர் இஸ்லாமியக் குடும்பத்தின் பின்னணியில் நகரும் படத்தின் மிகச் சிறப்பான அம்சம் பாத்திரங்களுக்கேற்ற நடிகர்களின் தேர்வுதான். அபுவாக வரும் சலீம் குமாரின் நடிப்பு மனதைக் கரைத்து நெகிழ்த்துகிறது. பள்ளிவாசலின் தொழுகை ஒலியுடன் தொடங்கும் படத்தில் இஸ்லாத்தின் கூறுகள் படம் நெடுக விரவியிருக்கின்றன. அதிகம் அறியப்படாத கேரள இஸ்லாமியர்களின் பண்பாடு படத்தை நகர்த்திச் செல்கிறது. 

ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்வையாளர்கள் மனதில் பதிய வைப்பதற்காக முதல்பாதி முழுவதையும் எடுத்துக்கொள்கிறார் இயக்குநர். ஆகவே முதல்பாதி மிக மெதுவாகவே நகர்கிறது. இரண்டாம் பாதியில் படம் நம்மை கட்டிப்போடுகிறது. கோவிந்தன் வாத்தியாரைப் பார்க்கப் போகும் அபுவிடம் ‘இறைவன் முன்னால் மனிதன் சுயநலவாதியாகத்தான் இருந்துவிடுகிறான். ஆனாலும் மெக்காவில் எங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று கேட்கும் இடத்தில் நெகிழ்ந்துதான் போகிறது மனம். அதுபோலவே மரவேலைகள் செய்யும் ஜான்சன் உளுத்த மரமாகி விட்டது பலாமரம் என்றாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சொன்னபடி முழு பணத்தையும் தருவதும், நாணயம் முக்கியம் என்று அதை வாங்க மறுத்து ஹஜ் பயணத்தையே கைவிடும் அபுவையும் போன்ற மனிதர்களைக் காண்பது அபூர்வமாகத்தான் இருக்கிறது. தன் கையிலிருந்து ஐம்பதாயிரம் எடுத்துவந்து பயணத்துக்காகத் தரும் கோவிந்தன், ஹஜ் செல்வை ஏற்றுக்கொள்ள முன்வரும் அக்பர் டிராவல்ஸ் உரிமையாளர் போன்ற மனிதர்களை திரையில்தான் பார்க்கமுடியுமோ என்கிற ஏக்கம் தோன்றுவதைத் தடுப்பதற்கில்லை. 

தமிழ்ப் பதிப்பில் சவுண்ட் இன்ஜினியரிங்கில் குறைபாடுகள் தெரிகின்றன. தொலைவில் பேசுபவர்களும் அருகில் பேசுபவர்களும் ஒரே ஒலியளவில் பேசுகின்றனர். அத்துடன் மொழிமாற்றப் படங்களுக்கு வழக்கமாக குரல் கொடுப்பவர்களின் அதே குரல்களை பயன்படுத்தாமல் புதிய குரல்களைப் பேசவைத்திருந்தால் படத்தின் பலம் இன்னும் கூடியிருக்கும். ஐசக்கின் பின்னணி இசை பேச வேண்டிய இடத்தில் பேசி, மௌனிக்கவேண்டிய தருணங்களில் மௌனிக்கிறது. மது அம்பாட்டின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு பாத்திரமாகவே வருகிறது.

அத்தர் விற்பவர், தேநீர்க் கடை நடத்துபவர், குடை வியாபாரி, டிராவல்ஸ் உரிமையாளர், ஆசிரியர், மரக்கடை வியாபாரி, வீட்டிலேயே பால்வியாபாரம் செய்யும் பெண், ஹஜ்ரத், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர், சைக்கிளில் பால் விற்பவர் என்று பலவிதமான தொழில்கள் செய்யும் சாமான்ய மனிதர்கள் படம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். “நான் இறந்தபிறகு நீ வந்திருந்தால் என் மன்னிப்பு கிடைக்காமல் நீ திரும்பியிருப்பாய் அல்லவா?’ என்று சுலைமான் கேட்கும் இடமும், ‘அவர்களுக்கு டீ வாங்கித்தரும் வாய்ப்பு இனியொரு முறை எனக்குக் கிடைக்காமல் போகலாம்” என்று அபு தேநீருக்குக் காசு தரும் இடமும், ‘அத்தர் விற்கப் போகும் நான் நீ தனியா இருப்பாய் என்றுதானே மூணே நாளில் திரும்பி வருவேன்’ என்று அபு ஆயிஷாவிடம் உரைக்கும்போதும் தெரியும் அந்த வயோதிகத் தம்பதிகளுக்கிடையிலான அன்பும் நமக்குச் சொல்லும் சேதி ஏராளம். 

படம் முழுவதும் பொங்கும் மனித நேயமும், வேறுபாடுகள் கடந்த சக மனிதர்கள்மீதான பேரன்பும் நிஜ வாழ்க்கையில் நாம் பார்க்கும் அனுபவிக்கும், கேள்விப்படும் அத்தனை பாகுபாடுகளையும் ஒருகணம் மறந்து கனவுலகில் சஞ்சரிக்க வைத்து நெகிழ்த்துவது படத்தின் வெற்றி. 

*********

ஆதாமிண்டே மகன் அபு மலையாளப்படத்தின் தமிழ்ப்பதிப்பான ஆதாமின் மகன் அபு படத்தின் பிரத்யேகக் காட்சி முடிந்து வெளியே வருகிறார் அதன் இயக்குநர் சலீம் அகமது. ஒலிபெருக்கி முன் நின்று பேசும் டி.ராஜேந்தர் கண்களில் கண்ணீர். திடீரென்று ‘அல்லா’ என்று குரலெடுத்துப் பாடுகிறார். அப்படியொரு பாதிப்பை பார்வையாளர் மத்தியில் ஏற்படுத்திய படத்தின் கதைக்களம் உட்பட பல விஷயங்களை எப்படி தேர்வு செய்தார் சலீம்?

“டிராவல்ஸ் அண்ட் டூரிசம் படிப்பில் டிப்ளமோ பெற்றவன் என்பதால் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினேன். அப்போது ஏராளமான மனிதர்களை சந்தித்திருக்கிறேன். ஒரு முறை விமானத்தில் ஒரு தம்பதியிடம் பேசியபோது மாடுகளை விற்று அவர்கள் ஹஜ் பயணத்துக்கு வந்திருப்பதைச் சொன்னார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். இப்படத்தில் காணப்படும் எல்லாமே நிஜத்தில் மனிதர்களுக்கு நிகழ்ந்தவைதான். அந்த அனுபவத்தில்தான் இந்தப் படத்தை எடுத்தேன்’ என்கிறார் சலீம்

சலீமுக்கு கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாத்தனூர் தான் சொந்த ஊர். பள்ளிப்படிப்பு அங்கேயே முடித்தார். பி.காம். பட்டதாரி. சிறுவயதிலிருந்தே நாடகங்கள் போடுவது , மிமிக்ரி செய்வது என்று கலைஞராகவேதான் தன் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் சலீம். “ஆயிரம் மேடைகள் ஏறியிருப்பேன்’ என்கிறார்.  திருச்சூர் நாடகப் பள்ளியில் மாஸ்டர் ஆஃப் தியேட்டர் ஆர்ட்ஸ் பட்டம் பெற்றவர். பின் சூர்யா தொலைக்காட்சி சேனலில் பணியாற்றினார்.

2011ல் வெளியான ஆதாமிண்டே மகன் அபு படம் பல தரப்பிலும் விருதுகளைக் குவித்தது. அந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பின்னணி இசை ஆகியவற்றுக்கான விருதுகளைப் பெற்றது. அந்த ஆண்டு ஆஸ்கருக்காக இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஒரே படமும் இதுவே. அரபு மற்றும் துருக்கி மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் மலையாளப்படமும் இதுவே. 

இப்படத்தில் ஹஜ் செல்லும் பயணிகளுக்கான வகுப்பு ஒரு காட்சியில் வரும். கேரளாவில் பல இடங்களில் ஹஜ் வகுப்புகளில் இத்திரைப்படம் போட்டுக் காண்பிக்கப்படுகிறது என்கிறார் சலீம். இஸ்லாம் சமூகத்தில் சிலர் சினிமாவை ஹராம் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுண்டு. ஆனால் சலீமுக்கு அப்படியான எதிர்ப்பு எதுவும் இல்லை. “ஹராம் என்று சினிமாவை ஏன் சொல்கிறார்கள். அதிலுள்ள தவறான அம்சங்களால்தான். ஆனால் நான் அப்படியான ஒரு காட்சியையும் வைக்கவில்லையே” என்கிறார் சலீம். 

சலீமுடன் பணியாற்றிய மது அம்பாட் இந்தியா டுடேயிடம் “  இது ஒரு பட்ஜெட் படம்.  நான் படங்கள் அதிகம் ஒப்புக்கொள்வதில்லை. அவர் எனக்கு கதைசொன்ன விதத்திலேயே நான் மிகவும் கவரப்பட்டேன். தரமான ஒளிப்பதிவுக்கான எல்லா சாத்தியங்களும் நிறைந்த படமாக இப்படம் இருக்குமெனவும் நான் நம்பினேன். அதன்படியே இப்படம் விருது பெற்றுத் தந்துவிட்டது. நானும் சலீமும் ஈருடல் ஓருயிர் போலாகிவிட்டோம் ” என்கிறார்.

ஆதாமின் மகன் அபு படத்தின் பின்னணி இசை அமைத்த ஐசக் தாமஸ் சலீமுடன் பணியாற்றிய அனுபவத்தை சிலாகிக்கிறார். “எனக்கு அவர் முழு சுதந்திரம் தந்தார். எங்கே இசை தேவை, எங்கே வேண்டாம் என நானே முடிவு செய்ய அனுமதித்தார். ஒரு படத்தில் இயக்குநர்தான் தெரியவேண்டும். துருத்திக்கொண்டு இசையமைப்பாளரோ அல்லது வேறு ஒரு தொழில்நுட்பக் கலைஞரோ தெரியக்கூடாது என்று நினைப்பேன். அப்படித்தான் இந்தப் படத்தில் பணியாற்றினேன். எந்த பின்னணி இசை, சத்தம், பாடல்கள் என்று எதுவுமே இல்லாமல் படத்தைப் பார்த்தபோதே இப்படம் பல்வேறு விருதுகளைக் குவிக்கப்போகிறது என்று சொன்னேன். அது உண்மையாகிவிட்டது” என்கிறார்.

சலீமின் இரண்டாவது படம் குஞ்சனத்திண்டே கடா. மம்முட்டி நடித்த அப்படம் ஆகஸ்ட் 2013ல் வெளியானது. இவருடைய அடுத்த படத்திற்கான திட்டமிடுதலில் ஈடுபட்டிருக்கிறார். துபாய் சென்று வாழும் ஏராளமான கேரளாக்காரர்களின் பாடுகள் இங்கு பதிவு செய்யப்படாதது. துபாய் வாழ்க்கையை மையமாகக் கொண்டுதான் அடுத்தப் படத்தின் கதை அமையும் என்கிறார் சலீம். “நானும் சலீமும் 1967ல் முதன்முதலில் கேரளாவிலிருந்து துபாய்க்கு படகு மூலம் சென்ற ஒருவரை சந்தித்துப் பேசினோம். அன்றிலிருந்து இன்றுவரை துபாயிலிருந்து வரும் பணம்தான் ஏராளமான கேரளாக்காரர்களை வாழவைக்கிறது. அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட சலீமின் அடுத்தப் படம் ‘பத்தே மாரி’ அடுத்த ஆண்டு வெளியாகும். அதிலும் நான் தான் ஒளிப்பதிவாளர்” என்கிறார் மது அம்பாட்.

Wednesday, May 14, 2014

காஞ்சி சங்கர மடத்தில் முறைகேடுகள்

சங்கர மடத்துக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. இந்த முறை சங்கரமடம் சிக்கியிருப்பது ஊழல் முறைகேடு குற்றச்சாட்டில். சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு இம்முறைகேடுகள் விசாரிக்கப்படவேண்டும் என்கிறது. 

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் தொடர்ந்த பொதுநல வழக்கில்தான் இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கிறது. பொதுவாக பொதுமக்களுக்கு சேவை செய்யும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக பணம் பெறும்போது, அந்தப் பணத்தை அளிக்கு நன்கொடையாளர்களின் அந்தப் பணத்துக்கு வரிவிலக்கு உண்டு.  வருமான வரிச்சட்டத்தின்  80ஜி பிரிவின்படி வரிவிலக்கு அளிக்கப்படும். ஆனால் சட்டம் மிகத் தெளிவாகவே மதம் தொடர்புடைய எந்த அறக்கட்டளைக்கோ, மதம் பரப்பும் அறக்கட்டளைக்கோ அளிக்கப்படும் நிதிக்கு அப்படியான வரிவிலக்கு கூடாது என்கிறது. ஆனால் சங்கர மடத்தின் ஆளுகைக்குட்பட்ட சில அறக்கட்டளைகள் மதத்தைப் பரப்புவதற்கும் வேதங்களை பரப்புவதற்கும், பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த அர்ச்சகர்களுக்கான நலத்திட்டங்களுக்கும், கோயில் கட்டுவதற்கும், சிலைகளை நிறுவதற்கும் என முற்றிலும் மதம் தொடர்பான விஷயங்களுக்காக மட்டுமே நிதியைச் செலவிடும் இந்த அறக்கட்டளைகள் பொதுமக்களிடமிருந்து நிதியைப் பெறுகின்றன. அந்த நிதி மதம் தொடர்பான விஷயங்களுக்கு பயன்படுத்தபப்டுகின்றது. ஆகவே அரசுக்கு கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் இழப்பு ஏற்படுகிறது. எனவே சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் பெறப்படும் இந்தப் பணத்துக்கு வரிவிலக்கு அளிக்கக் கூடாது என்றும் இந்த அறக்கட்டளைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதற்குத் துணைபோன வருமான வரித்துறை மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரியும் சரவணன் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் அளித்த தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் வருமான வரித்துறை (வரிவிலக்கு) இயக்குனர் ஜெனரலை 80ஜி கீழ் அளிக்கப்பட்ட வரிவிலக்குகளை சரிபார்க்குமாறும், தவறாக பயன்படுத்தப்பட்டிருக்குமாயின் , மக்கள் சேவை தவிர பிற விஷயங்களுக்கு நிதி செலவிடப்பட்டிருக்குமானால், அந்த அறக்கட்டளைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் தீர்ப்பளித்தது. 

ஒவ்வொரு அறக்கட்டளையாகவே பார்க்கலாம். 

சென்னை அபிராமபுரத்திலுள்ள ஸ்ரீ சங்கர பக்த ஜன சபா அறக்கட்டளை 2012 பிப்ரவரி 28 அன்று தேசிய நாளிதழ்களில் ஒரு விளம்பரம் வெளியிட்டது. அதில் வெளிப்படையாகவே ஒரு சிலையை நிறுவுகையில் அதற்கு தங்கத்தில் உள்ளும் புறமும் அலங்கரிக்கவேண்டும் என்பதற்காக நன்கொடைகள் கேட்கப்பட்ட்ருந்தது அறக்கட்டளையின் கணக்குப்படியே அதற்கு ஆகும் செலவு 225 லட்சம்.  அத்துடன் பொதுமக்களுக்கான அந்த விளம்பரத்தில் இதற்கு பொதுமக்கள் நிதி அளித்தால் அந்தத்தொகைக்க்க் 1961 வருமான வரிச் சட்டத்தின் 80ஜி பிரிவின் கீழ வரிவிலக்கு உண்டு என்றும் அறிவித்திருந்தது. இன்னும் ஒரு படி மேலே போய் தங்கமாகப் பெறப்படும் நன்கொடைகளுக்கும் 80ஜி வரிவிலக்கு உண்டு என்றது அந்த விளம்பரம். 

80ஜியின் விளக்கம் 3 இவ்வாறு சொல்கிறது: “மக்களின் சேவையைத் தவிர வேறெதற்காகவும், அது முழுமையாகவோ அல்லது குறைந்த அளவோ கூட மத இயல்புகொண்டதாக அச்சேவை இருக்குமாயின் வரிவிலக்கு கிடையாது”

இதன்படி பார்த்தால், இந்த அறக்கட்டளை மதம் தொடர்புடைய ஒரு சிலையை நிறுவி அலங்கரிப்பதில் பொதுமக்கள் சேவை துளியும் இல்லை. அத்துடன் இது மதத்துடன் தொடர்புடையது. எனவே இது முற்றிலும் தவறு என்கிறார் சரவணன்

அத்துடன் 80ஜியின் 5வது பிரிவு சொல்வது இது: ”பணமாகப் பெறப்படும் தொகைக்கு மட்டுமே வரிவிலக்கு. பொருளாகப் பெறப்பட்டால் வரிவிலக்கு கிடையாது”

ஆனால் விளம்பரமோ தங்கமாகப் பெற்றாலும் வரிவிலக்கு உண்டு என்று சொல்கிறது.

சென்னை கோட்டூர் கார்டன் பகுதியிலுள்ள காஞ்சி மூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சகர்களுக்கென உருவாக்கப்பட்ட ஒன்று. கிராமப்புறங்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு நிதியுதவி அளிப்பது இதன் முதல் இலக்கு. ஒரு குறிப்பிட்ட மதத்தின், அதிலும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அர்ச்சகர்களுக்கென்று இந்த நிதி செலவிடப்படுகிறது. இதுவும் சட்டவிரோதமே. 

”இப்படியொரு வாதம் முன்வைக்கப்பட்டது. தலித் மக்களுக்கு செலவு செய்யப்படும் தொகைக்கு எப்படி வரிவிலக்கு அளிக்கப்படுகிறதோ அதன்படிதான் இதுவும். அது சாதி அடிப்படையில்தானே? அதுபோல அர்ச்சர்கர்களுக்கான நலத்திட்டங்களும் சாதி அடிப்படையில்தான் என ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. எஸ்.சி./எஸ்.டி.யினர் மத்தியில் செயல்படும் அறக்கட்டளைகளுக்கு இது பொருந்தாது. 80ஜி பிரிவு மிகத் தெளிவாகவே சொல்கிறது. ஒடுக்கப்பட்டுள்ள எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை சாதி அடிப்படையிலானது என்று பார்க்கக் கூடாது என்று கூறி அதற்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறது.” என்கிறார் வழக்கறிஞர் சரவணன்.

சென்னை கோபாலபுரத்திலிருந்து இயங்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாலஷ்மி மாத்ருபூதேர்வரர் அறக்கட்டளை 80ஜி தவறாக பயன்படுத்தப்படுவதற்கு மிகச் சிறந்த உதாரணம்.  இந்த அறக்கட்டளை உருவாக்கபப்ட்டதே ஒரு சாதியைச் சேர்ந்த மதத்தலைவர் ஒருவருக்கு கோயில் கட்டுவதற்காக மட்டுமே. அதுபோலவே கோவையில் இயங்கும் ஸ்ரீ ஜகத்குரு அறக்கட்டளையும் கேரளாவின் பாலக்காட்டில் இயங்கும் வேத ரக்‌ஷ்ன சமிதியும் இந்து மத வேதங்களைப் பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதால் இவை முற்றிலுமாக மதம் தொடர்பானவை.

மேற்கூறிய அத்தனை அறக்கட்டளைகளுமே காஞ்சி சங்கரமடத்துடையவை. இவை அனைத்துக்கும் அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு 80ஜி வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அத்தனை அறக்கட்டளைகளுக்குமான இணையதளங்களில் நோக்கம் மிகத்தெளிவாகவே மதச்சார்புடையதாகவே வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

“அப்பர் கேஞ்சஸ் சுகர் மில்ஸ் லிமிடெட் எதிர் வருமான வரி இயக்குநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பில்  சேவை என்பதில் மத நோக்கம் அறவே வராது என்றும் பெறப்படும் நிதி பணமாக மட்டுமே இருக்கவேண்டுமென்றும் கூறியிருக்கிறது.  மெலும் ஈஸ்ட் இந்தியா இண்டஸ்ட்ரீஸ் (மெட்ராஸ்) பிரைவேட் லிமிடெட் வழக்கில் ‘ஓர் அறக்கட்டளையின் அனைத்து நோக்கங்களும் மக்கள் சேவையாக இருக்கவேண்டும். ஒரே ஒரு நோக்கம் வேறாக இருந்தாலும் வரிவிலக்குக்கு தகுதியில்லை’ என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருப்பதை என் மனுவில் சுட்டிக்காட்டினேன்.” என்கிறார் சரவணன்

இதில் அதிர்ச்சி என்னவெனில் இந்த வருமான வரிவிலக்குகளை வருமான வரித்துறை எப்படி வழங்கியது என்பதுதான். இந்த முறைகேட்டுக்கு துறையிலுள்ள அதிகாரிகளும் துணைபோயிருக்கிறார்கள் என்று நீதிமன்ற வாதங்களில் முன்வைக்கப்பட்டதையடுத்தே இப்படியொரு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. “இத்தீர்ப்பு தவறு நடந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறது என்கிற வகையில் வரவேற்கப்படவேண்டிய தீர்ப்புதான். ஆனால் குறிப்பாக இந்த ஐந்து அறக்கட்டளைகளை சுட்டிக்காட்டி நான் வழக்கு தொடர்ந்திருந்தாலும் தீர்ப்பில் பொதுவாக இப்படி முறைகேடுகளில் ஈடுபடும் அனைத்து அறக்கட்டளைகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. ஆகவே எங்களை குறிப்பாகச் சொல்லவில்லை என்று அவர்கள் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. ” என்கிறார் சரவணன்.

மக்களிடமிருந்து?வரிவிலக்கு பெறலாம் என்கிற முன்னறிவிப்புடன் பெறப்படும் திட்டங்கள் பெரும்பாலும் நிதியை அள்ளித்தர வல்லவை. ஏனெனில் நம் மக்களும் நிதியாண்டு இறுதியான மார் மாதத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை எப்பாடுபட்டாவது குறைக்கவேண்டும் என்ற உந்துதலுடன் ஊதியத்தின் ஒரு பகுதிக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்பதால் உற்சாகமாக நன்கொடை  அளிக்க முன்வருகிறார்கள்.

இப்பிரச்சனையில் விளக்கம் கேட்க சங்கர மடத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டும் விளக்கம் பெற முடியவில்லை. முறைகேடுகளில் ஈடுபடும் எல்லா அறக்கட்டளைகள் மிதும் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதே சமூக அக்கறை கொண்டவர்களின் எதிர்ப்பார்ப்பு.

(நன்றி: இந்தியா டுடே)