Thursday, September 29, 2011

அண்ணன்

அண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இருக்காது. அண்ணன் என்று தான் நினைக்கத்தோன்றும் எப்போதும். ‘அண்ணன் இப்ப என்ன பண்ணிக்கிட்டுருப்பான்?’, ‘சாப்பிட்டிருப்பானா?’, ‘நான் தினமும் நினைச்சுப் பார்க்குற மாதிரி அண்ணனும் நினைச்சுப் பார்ப்பானா?’ இப்படி பல எண்ணஙக்ள் ஓடும் உள்ளுக்குள். 

அவன் தான் எனக்கு ஒரே ஆறுதல். என்ன கஷ்டம் வந்தாலும் சொல்லி அழ, ஆறுதல் தர அவன் ஒருவன் தான் இருந்தான் எனக்கு. தோழிகளோடு சண்டை, ஆசிரியர் திட்டுகிறார், அம்மாவோடு பிரச்சனை, அப்பா பேசுவதில்லை என்று எல்லா கஷ்டங்களுக்கும் உடனுக்குடன் தீர்வு சொல்கிறானோ இல்லையோ, எனக்கு ஆறுதலாவது சொல்வான் அண்ணன். என்  தோழிகளுக்கும் அவன் அண்ணனாகிப் போனான். அவர்களும் அவனை முத்து அண்ணன் முத்து அண்ணன் என்று சுற்றி வருவது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனாலும் பொறுத்துக் கொள்வேன்..

ஊருக்கே தெரிந்திருந்த்து எங்கள் நட்பு. இல்லை...இதை நட்பு என்று சொன்னால் அதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இது நட்பு இல்லை. அண்ணன் மேல் வைத்திருக்கும் அன்பு ரொம்பவே புனிதமானது.. என்னுடன் கூடப் படிக்கும் கார்த்திக்கின் மீது உள்ளது நட்பு என்பதையும், அது போன்றதல்ல அண்ணனின் மீதான அன்பு என்பதையும் நான் உணர்ந்தே வந்திருக்கிறேன்.

”என் மேல் ஏன் உனக்கு இத்தனை பாசம்?” – இது அடிக்கடி அண்ணன் கேட்கும் கேள்வி. நான் சிரித்துக்கொள்வேன். சும்மா வந்துவிடுமா இந்தப் பாசம்? சின்ன வயதிலிருந்தே அண்ணன் இல்லையே என்கிற என்னுடைய ஏக்கம் என்னை விட வேகமாக வளர்ந்த்து. அண்ணன் உள்ள தங்கைமார்களைப் பார்க்கும்போதெல்லாம் பொறாமையா ஏக்கமா என்று புரியாத ஒரு உணர்வு என்னை ஆட்கொள்ளும். பள்ளிக்கு ஒன்றாக வரும் அண்ணன் – தங்கையைப் பார்க்கும்போதும், சைக்கிளில், வண்டியில் வைத்து ஊரில் ஏதோ ஒரு அண்ணன் தன் தஙகையைக் கூட்டிச் செல்லும்போதும் எனக்கு மனதைப் பிசையும். எனக்கு ஒரு அண்ணன் இல்லாமல் போயிட்டானே? சின்ன வயதில் அம்மாவிடம் போய் ஒரு நாள் கேட்டிருக்கிறேன் “எனக்கு ஒரு அண்ணன் பெத்துக் குடும்மா”  அம்மா சிரிக்கத் தொடங்கி விட்டது. நான் கோபித்துக்கொண்டு சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்தேன். “அண்ணனையெல்லாம் பெத்துத்தர முடியாது. உனக்கு முன்னாடியே பிறந்தாத்தான் அண்ணன். உனக்கு அப்புறம் பிறந்தா தம்பி தங்கச்சி தான் பொறக்கும்” என்று அம்மா விளக்க ஏமாற்றத்தில் முகம் சுண்டிப் போக சாப்பிட மாட்டேன் என்று அன்றைக்கு அழுது அடம் பிடித்தது இன்னமும் நினைவிருக்கிறது.

சினிமாவில் அண்ணன் – தங்கை பாசம் தொடர்பான பாச மலர், பாசப்பறவைகள் என்று படங்களையெல்லாம் பார்த்துவிட்டு அண்ணன் இல்லாத ஏக்கத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தனிமையில் நான் அழுததுண்டு. எனக்கு ஒரு அண்ணன் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பதுண்டு. அவனோடு விளையாடி, சண்டை போட்டு, சினிமாவுக்குப் போய், அவன் பாடம் சொல்லிக் கொடுத்து படித்து, ஒன்றாகவே திரிந்து, பாட்டு கேட்டு – இப்படி என்னவெல்லாம் செய்திருக்க முடியும்? ஏக்கத்தில் எத்தனையோ நாட்கள் பெருமூச்சு விட்டிருக்கிறேன். இந்த ஏக்கத்தையெல்லாம் தீர்க்க வந்தவனாகவே முத்து தெரிந்தான் எனக்கு. கார்த்திக்கின் நண்பனாய் வந்தான் முத்து. ஆனால் கார்த்திக்கை விட வயதில் பெரியவன். முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்த நான் என்னைப் போலவே அவனுக்கும் கவிதை பிடிக்கும் என்று அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன். அதன் பிறகு கவிதை நூல்கள் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினோம். எங்கள் புத்தகங்களை ஒருவர் மாற்றி ஒருவருக்குக் கொடுப்பதில் கார்த்திக் தான் தூது. அவன் மூலமாகவே புத்தகஙக்ள் போய்ச் சேர்ந்தன. இடையில் கார்த்திக் சில நாட்கள் புத்தகத்தை வைத்து அவன் படித்துவிட்டு அப்புறம் மெதுவாக்க் கொண்டுச் சேர்ப்பான்.


“எனக்கு வேற வேலையில்லைன்னு நெனைச்சீங்களா ரெண்டு பேரும்?” என்று அவ்வபோது அலுத்துக்கொண்டாலும் தொடர்ந்து புத்தகத்தூது அவன் மூலமாகவே நடந்தது. நானும் அண்ணனும் வாரத்தில் ஒரு நாள் தான் சந்தித்துக்கொள்ள முடிந்தது. ஏனெனில் ஊரின் அந்தக் கடைசியில் என் வீடும், இந்தக் கடைசியில் அண்ணனின் வீடும் இருந்தது.

ஒரு நாள் கார்த்திக் என்னை அண்ணனின் வீட்டுக்கு அழைத்துப் போனான். அண்ணன் அப்படியொன்றும் வசதியானவன் இல்லை. என் அப்பா அரசாங்க வேலையில் இருக்கிறார். அவனுக்கு அப்படியில்லை. வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு அவனுக்கிருந்த்து. அவன் வீட்டில் பெரும்பாலும் புத்தகங்கள் நிறைய வைத்திருந்தான். அத்தனையையும் அள்ளிக்கொண்டு வந்து விடலாமா என்று வெறி வந்தது எனக்கு. அத்தனையும் கவிதைத் தொகுப்புகள். ஒருசிலவற்றை எடுத்து வாசித்தபோது எனக்குச் சற்றுப் புரியாத மாதிரி இருந்த்து. என்ன இருந்தாலும் அண்ணன் என்னை விட புத்திசாலி என்பது என்னுடைய திடமான எண்ணமாக இருந்தது. அண்ணனின் கையெழுத்து முத்து முத்தாக மிக அழகாக இருக்கும். எந்த அடித்தல் திருத்தல் இல்லாமல் அண்ணன் எழுதுவதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கும். 


எல்லா வயசுப்பசங்களுக்கும் போல அண்ணனுக்கு ஒரு காதலி இருந்தாள்.  இருவருக்கும் தீவிரமான காதல். நானும் கூட அவ்வபோது அவர்கள் இருவருக்கும் இடையே தூது போயிருக்கிறேன். நல்ல எலுமிச்சை நிறத்தில் இருக்கும் அந்தப் பெண். அண்ணனோ கருப்பு. சேர்ந்து நடந்தால் தி.மு.க. கொடி போலிருக்கும் என்று நான் கிண்டல் செய்வேன்.

‘’ரொம்ப கிண்டல் பண்ணாதே! உனக்கு எவன் வர்றான்னு நான் பார்க்கத்தானே போறேன்’’ என்று அண்ணன் கிண்டல் பண்ணினான். ஏனோ எனக்கு கார்த்திக்கின் முகம் மனக்கண்ணில் வந்து போனது. அண்ணனிடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்ல்வேயில்லை. கொஞ்ச நாளாக கார்த்திக்கைப் நினைத்தால் வித்தியாசமான ஏதோ ஒன்று தோன்றுகிறது. ஒருவேளை இதுதான் காதலோ? அண்ணனிடம் கேட்டாலென்ன? ஒரு டாக்டர் போல, எனக்கு என்ன செய்கிறது என்று பொறுமையாக்க் கேட்டுவிட்டு இது காதல் தான் என்று அடித்து சொன்னான்.

எனக்கு கார்த்திக் என்கிற பெயர் கொடுக்கும் இன்பம் வேறெதுவும் தரவில்லை. அவன் தூரத்தில் வந்தாலே படபடப்பாகி விடும். கிட்ட நெருங்கிப் பேசுகையில் வியர்த்தது. அவன் எப்போதும் போல தோளில் தட்டிச் சிரிக்கும்போது நரம்புகளுக்குள் ஏதோ ஒன்று பாய்ந்து பரவி ஓடி சிலிர்த்தது உடல். ஆனால் கார்த்திக் வெகு சீக்கிரமே என்னுள் நடந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டு விட்டது போல் தெரிந்தது. என் கண்களை ஒரு நாள் உற்றுப் பார்த்தான். எந்த வார்த்தையும் பேசாமலேயே என் விழிகளின் ஓரத்தில் மின்னிய காதலை அவன் கண்டுகொண்டு விட்டான். ஒரே ஒரு நொடி அவன் கண்களும் ஒளிர்ந்ததைப் பார்த்தேன். இது போதும்! அவனும் என்னைக் காதலிக்கிறான். அண்ணனிடம் சொல்லவேண்டும்.

உடனே ஓடினேன். சொன்னேன். ‘நான் பேசட்டுமா?’ என்றான். வேண்டாம் என்றேன். அன்றைக்கு அண்ணன் என் கையை எடுத்து தன் கைகளில் பொத்திக்கொண்டான். ‘கார்த்திக் நல்ல பையன். நல்ல சாய்ஸ்’ என்றவாறே என் கைகளில் மென்மையாக முத்தமிட்டு ‘எது வந்தாலும் பார்த்துக்கலாம். கவலைப்படாதே!’ என்றான்.

அன்றைக்கு பூராவும் மிதந்து கொண்டேயிருந்தேன். ஒரு வனாந்திரத்தில் இரண்டு பற்வைகள் பறந்துகொண்டிருக்கின்றன. ஒன்று நான். இன்னொன்று கார்த்திக். இப்படியெல்லாம் கனவு வந்த்து. மறுநாள் அவனைப் பார்க்கப் போனபோது இனம் புரியாத பயமும், கலக்கமும் எனக்குள் தளும்பிக்கொண்டிருந்தன. அதையும்மீறி ஒரு குறுகுறுப்பும், சந்தோஷமும் எட்டிப்பார்த்தன. என்னைப் பார்த்ததும் அவன் கண்கள் மீண்டும் ஒளிர்ந்தன. விழிகள் மின்னினாலும் அவன் இதழ்கள் என்னிடம் சரியாகப் பேசவில்லை. எனக்குக் குழப்பமாக இருந்தது. ஏன் என்பது புரியவில்லை. என்னாலும் முன்பு போல அவனிடம் இயல்பாக இருக்க முடியவில்லை. அவனுடன் இருக்க வேண்டும் போலிருந்தாலும் உடனே கிளம்பினேன். வழக்கமாக தோளில் தட்டி விடைகொடுக்கும் கார்த்திக் அன்று பேசாமல் இருந்தான். நான் இரண்டே இரண்டு நொடிகள் அவன் கைகள் என் தோளில் படுவதற்காய்க் காத்திருந்தேன். ஆனால் அது நிகழவில்லை. விருட்டென்று கிளம்பினேன். ஒருவேளை தப்பு செய்கிறேனா நான்? இது என்ன கொடுமை?  கார்த்திக் என் நண்பன். அவன் எனக்குக் கடைசி வரை வேண்டும். இந்த சனியன் பிடித்த காதலால் ஒருவேளை அவன் என்னுடன் பேசாமலிருந்து விடுவானா? இல்லை.. அவனுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. அவன் கண்களின் அந்த விருப்பத்தை நான் பார்த்தேன். ஆனால் அவன் இயல்பாக இல்லை. என்ன செய்யலாம்?

அண்ணனிடம் போய் நின்றேன். புலம்பினேன். ‘விடு! சொல்லிட்டே இல்ல. நான் பார்த்துக்குறேன்’ என்றான். மறுநாள் கார்த்திக் என்னைத் தேடி வந்தான். ’வா கார்த்திக்’ என்று நான் சொன்னது எனக்கே கேட்கவில்லை. அவன் முகத்தைப்பார்த்தேன். எனக்கு பெரும் ஏமாற்றமாய் இருந்த்து. அவன் கண்கள் ஒளிரவில்லை. எங்கே? கண்களைச் சுற்றிலும் வெள்ளி இழை போல மின்னும் அவன் காதல் எங்கே? தேடினேன். கருமை படர்ந்திருந்தன அவன் கண்கள். இரவு வெகுநேரம் தூங்காததன் அறிகுறியாய் இருந்தது அந்தக் கருமை. ‘உன்கிட்ட பேசணும்’ என்றான். ‘சொல்லு’ என்றேன். இதயம் நின்று பின் துடித்தது. ‘பாவி! என்ன சொல்லப் போகிறாய்!’ 


‘நான் கொஞ்ச நாளா வித்தியாசமா உணர்றேன். நீயும் தான் இல்லையா?’ என்றான்.

நான் பதிலேதும் சொல்லவில்லை.’இல்லை’ என்பதா?’ஆமாம்’ என்பதா?
‘இல்லைன்னு சொல்லாதே! நான் பாத்தேன். உன் கண்ல பாத்தேன்.’ என்றான். ஒரு வார்த்தை பேசாமல் கண்கள் பார்த்து காதல் உணர்வது சாத்தியம்தானா? 
அடுத்து சொன்னான்...’இது வேணாம்னு தோணுது. நாம் ஃபிரண்ட்ஸா இருக்கலாம்’  ஆயிரம் ஈட்டிகள் பாய்ந்தன எனக்குள். ‘உன் சாதிக்காரங்களப் பத்தித் தெரியுமில்ல..! வெட்டிக்கொன்னுடுவாங்க...அதனால் படிக்கிற வழியப் பாரு. இது நடக்காது. வீணா ஆசைய வளர்த்துக்கிட்டு கஷ்டப்படவேணாம்’ என்றான்.

நான் அழுதேன். அவன் பிடிவாதம் பிடித்தான். எத்தனை தடை வந்தாலும் நான் அவனோடு சேரத் தயாராய் இருந்தேன். அவனோ முரண்டுபிடித்தான் ‘லூஸா நீ? தைரியம் இல்லையா உனக்கு?. நான் வந்துடறேன்’ என்று கத்தினேன். என்னைப் பார்த்துச் சொன்னான்..


 ‘உன்கிட்ட இனி பேசமாட்டேன்’ 


நான் அதிர்ந்து நிற்க, அவன் போய்விட்டான்.

நான் கண்ணீர் வற்றிய ஜீவனாய் பித்துப் பிடித்துத் திரிந்தேன். வீட்டில் என்னை விநோதமாய்ப் பார்த்தார்கள். கார்த்திக் என்னைப் பார்க்கவேயில்லை. அடுத்து வந்த ஒருவாரம் வெறுமையாய்க் கழிந்தது. அண்ணன் தான் என் ஒரே ஆறுதல். அண்ணன் வருத்தப்பட்டான். ஆனால் மறுநாளே அண்ணனுக்காய் நான் வருத்தப்படும்படியானது. அண்ணனின் காதலிக்கு அவசரம் அவசரமாய் நிச்சயம் செய்து விட்டார்கள். அண்ணன் இடிந்து போனான். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அதன்பின் அண்ணனின் காதலியும், கார்த்திக்கும் எங்கள் கண்களுக்குப் படவே இல்லை. அண்ணனின் நிலையைக் கண்டு அண்ணனின் அம்மா ஒரு  பெண்ணைப்பார்த்து கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னது. அண்ணன் அன்று என்னைத் தேடி வந்தான். ‘என்ன செய்ய நான்?’ என்றான். ‘கட்டிக்கோ!’ என்றேன். மறுவார்த்தை பேசாமல் எழுந்து சென்றான். அடுத்தநாள் அண்ணனின் அம்மா என்னிடம் வந்து ‘உன்னாலதான் இந்தக் கல்யாணமே நடக்குது. ராசாத்தி’ என்று கொஞ்சியது.

எல்லாம் நன்றாகவே போனாலும் கார்த்திக்கை மட்டும் என் மனதிலிருந்து தூக்கியெறிய முடியவில்லை. தூரத்தில் என்னை எங்காவது பார்க்க நேர்ந்தாலும் அவன் என் பார்வை படாத தொலைவிற்குப் போய்விடுகிறான். அவனை அண்ணன் கல்யாணத்திற்கு வரும்போது கிட்டேயாவது பார்த்துவிடவேண்டும் என்பதில் குறியாயிருநதேன். கார்த்திக் என் உயிருக்குள் ஊடுருவி இருந்தான். விழிகளை மூடினாலே அவன் கண்களைச் சுற்றி படர்ந்து மின்னிய காதல் தான் பிம்பமாய்த் தெரிந்தது. விழிகளைத் திறக்கையில் அவன் இல்லாத வெறுமை வந்து தாக்கியது. ‘நான் வரேன்னு சொல்றேன். அவனுக்கு தைரியமில்லயே! படுபாவி’ – மனசு அரற்றியது. கண்ணீர் வழிந்தது எனக்கு. துடைத்துக்கொண்டேன். தினமும் இதுவே வாடிக்கையாகிப் போனது. இரவு மணி பன்னிரண்டு. நான் விறுவிறுவென்று அண்ணனுக்கு கடிதம் எழுதத் தொடங்கினேன். என் கண்ணீர் முழுவதையும் காகிதத்தில் இறக்கி வைத்தேன். உறங்கிப் போனேன். மறுநாள் அண்ணனிடம் காகிதத்தை நீட்டினேன். வாங்கி வாசித்தான். ‘நீ இவ்வளவு நேசிக்கிறியா அவனை?’ என்றான். நான் தலையாட்டினேன். ’அவன் தான் வேணாம்னு சொல்றான்ல..ஏன் இப்படி உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிறே’ என்றான். நான் விசும்பினேன்.


அண்ணனின கல்யாணம் நெருங்கிக் கொண்டிருந்தது. நான் எழுத நினைத்த டி.என்.பி.எஸ்.சி தேர்வும் அண்ணனின் கல்யாணமும் ஒரே நேரத்தில்  நடக்கவிருக்கின்றன. அம்மா என்னிடம் “என்ன செய்யப் போறே?” என்றது. “அண்ணன் கல்யாணம் இருக்கையில் பரிட்சை என்ன பெரிய பரிட்சை. போ... நான் கல்யாணத்துக்கு வருவேன். பரிட்சை எழுதலை” என்றேன். அம்மா திட்ட த் தொடங்கியது. “அண்ணன் கல்யாணம் தான் எனக்கு முக்கியம்” என்றேன். அம்மா முகத்தைச் சுளித்துக்கொண்டே போனது.

அண்ணன் கல்யாணத்துக்கு முதல்நாள் அவன் வீட்டுக்குப் போனேன். அவன் முகம் வாடி இருந்தது. நான் காரணம் கேட்டேன். ‘தெரியலை’ என்று உதட்டைப் பிதுக்கினான். அருகில் அழைத்து என் கைகளைப் பற்றிக்கொண்டான். அவன் கைகள் கொதித்தன. ‘என்னாச்சு? காய்ச்சலா?’ என்றேன் பதறியபடி. அவன் இல்லையென்று தலையாட்டினான். வெறித்த பார்வை பார்த்தபடி நின்றிருந்தான். நான் சமையலறைக்குச் சென்று அவனுக்கு தேநீர் தயாரித்து வந்து கொடுத்தேன். தேநீர் குவளையை வாங்கி அருகில் வைத்தவன் “எனக்கு உன் ஆறுதல் வேணும்!” என்றான். நான் அவனை நெருங்கினேன். அண்ணனின் கைகளைப் பற்றிக்கொண்டேன்.  ‘என்ன கஷ்டம்னாலும் சரியாயிடும்..நாளைக்குக் கல்யாணம். சந்தோஷமா இருங்க.சரியா?’ என்றேன். அவனைப் பார்க்கவே பாவமாய் இருந்தது எனக்கு.

அவன் தன் கைகளை என் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டான். மெல்ல என்னை நெருங்கினான். அவன் விழிகள் என்னை உற்றுப் பார்த்தன. மெதுவாய் என் தோளில் கை வைத்தான். எனக்கு கார்த்திக் நினைவு வந்தது. இப்படித்தான் அவனும் கை வைத்து விடைபெறுவான். அண்ணன் தொட்டால் எனக்கு சாதாரணமாகவும் கார்த்திக் தொட்டால் மட்டும் ஏன் நான் இப்படி செத்துப் பிழைக்கிறேன்?  யோசித்துக் கொண்டிருந்தபோதே சடாரென்று என்னை அண்ணன் அணைத்துக் கொண்டான். மெதுமெதுவாக அவன் பிடி இறுகியது. என்ன இது..? வழக்கமாய் இப்படிச் செய்ய மாட்டானே? எனக்குப் புரியவில்லை. குழப்பமாய் நின்றேன். இரண்டே நொடிகளில் எனக்கும் அவனுக்குமிடையே காற்று கூட புக முடியாத இடைவெளி மட்டுமே மிச்சமிருந்த்து. அவன் கரங்கள் என் முதுகைச் சுற்றியும் கழுத்தைச் சுற்றியுமிருந்த்து. நான் செய்வதறியாது திகைத்தேன். ‘விடுங்க. என்னாச்சு உங்களுக்கு?’ என்றேன். சடாரென்று கழுத்தில் முத்தமிட்டான். அதிர்ச்சியில் உறைந்து போய் நிலைகுத்தி நின்றன என் கண்கள். உலகம் தலைகீழாய்ச் சுற்றுவது போலிருந்தது. இதற்கு முன் அண்ணனின் ஸ்பரிசத்தில் இல்லாத ஏதோ ஒன்றை உணர்ந்தேன். பாதாளத்திற்குள் பாய்ந்து நான் கீழே கீழே செல்லத் தொடங்கி இருந்தேன். மயக்கம் வரும்போலிருந்தது. கை கால்களை அசைக்க முடியாத அளவிற்கு அவன் பிடிக்குள் நான் திமிறினேன். கத்த நினைத்து வாய் திறந்தேன். வார்த்தை வரவில்லை. பிளிறலாய் ஒரு சத்தம் எனக்குள்ளிருந்து வெளிப்பட்டது. அடுத்த நொடி...என் இதழ்களை அவன் இதழ்கள் மூடிவிட்டன. நான் அவன் கரங்களில் சிறைபட்ட பறவையானேன். அவன் வலிமைக்கும் பலத்துக்கும் முன்னால் வலுவிழந்து நான் திமிறிக்கொண்டிருந்தேன். என் இதழ்களை அவன் விடுவித்தபோது நான் நிலைகுலைந்து போயிருந்தேன். அவன் கைகள் மெதுவாக என் உடலில் இருந்து எடுத்து என்னை விடுவிக்க, நான் நிற்க முடியாமல் தள்ளாடினேன். கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. அருகில் இருந்த சுவற்றைப் பிடித்துக்கொண்டேன். என்ன நடந்தது? ஒரு சில விநாடிகளில் என்ன நடந்தது? மனசுக்குள் பெரிதான ஓலம். அவன் இருந்த திசையைப் பார்க்கவே திகிலாக இருந்தது. சன்னமாய் அவன் குரல் எனக்குப் பின்னாலிருந்து கேட்டது. “என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. ப்ளீஸ்..போகாதே!”. நான் கீழே விழுந்து விடாமலிருக்க சிரமப்பட்டேன். திரும்பிப் பார்க்காமல் தட்டுத்தடுமாறி வெளியேறினேன்.

எப்போது வீடு வந்தேன் எப்படி வந்தேன் எதுவும் நினைவில் இல்லை. அம்மா வந்து என்னை எழுப்பும்போது விழித்தேன். ’இந்த நேரத்துல தூங்குற...என்ன மூஞ்சி பேயறஞ்ச மாதிரி இருக்கு. என்னாச்சு?’ என்றது. ‘தலைவலி’ என்று சன்னமாய் முனகினேன். அம்மா அறைக் கதவை சாத்திவிட்டு வெளியே சென்றது.

நான் கதறத் தொடங்கினேன். என் கண்ணீருக்கு அளவில்லாமல் இருந்தது. இரவு எனக்கு கொடுமையாதாகக் கழிந்தது. ஒரு நொடியும் உறக்கம் வராமல் அண்ணனின் முகம் வாட்டியது, இன்றைக்கு பார்த்த அவனுடைய வித்தியாசமான பாவத்தையும் மறக்க முடியவில்லை. அந்த நொடிகளை நினைத்தாலே கைகால்கள் நடுங்கின. நான் என்ன செய்யப் போகிறேன்? என்ன ஆனது அவனுக்கு? நன்றாகத்தானே  இருந்தான்? பொங்கிப்பொங்கி அழுதேன். வாய்க்குள் துணியை வைத்துக்கொண்டு சத்தம் வராமல் அழுதேன். “என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. ப்ளீஸ்..போகாதே!” என்கிற அவனுடைய குரல் எனக்கு பூதாகரமாய்க் கேட்டது. அறையின் சுவர்கள் நான்கும் பெரிதாகிப் பெரிதாகி என்னை நோக்கி வந்தன. நான் கத்த நினைத்து வார்த்தைகள் வராமல் மூர்ச்சையானேன். விடியற்காலையில் யாரோ என்னை அழுத்துவது போல கனவு கண்டு அலறினேன். கனவில் அண்ணனின் கைகள் என் கழுத்தைச் சுற்றின. அவை பாம்பாக மாறி என் உடலெங்கும் கொத்துகின்றன. அப்போது கார்த்திக் வருகிறான். வந்து பாம்பை எடுத்து தரையில் வீசியடிக்கிறான். என் தோளில் தட்டி சிரித்து விடைபெற்றுச் செல்கிறான். நான் விழித்துக்கொண்டேன்.

அண்ணனுக்கு இன்றைக்குக் கல்யாணம்! நான் போகவில்லையென்றால் ஊரே ஏனென்று கேள்வி கேட்கும். போனால் அவன் முகத்தைப்பார்க்க வேண்டும். என்ன செய்யலாம்? எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.


போகணுமா? இனி எப்படி அவன் என் முகத்தில் விழிப்பான்? நான் எப்படி அவன் முன்னால் நிற்பேன்? யோசித்துக்கொண்டே வாசலுக்கு வந்தேன். சரேலென வாகனத்தில் என்னைக் கடந்து செல்வது யார்? அவன் தான். இன்னும் இரண்டு மணி நேரத்தில் கல்யாணம். இங்கே என்ன செய்கிறான்? என் இதயம் நின்று மீண்டும் இயங்கியது. வியர்த்துக்கொட்டியது. போகும்போது ஏதோ போட்டு விட்டுப் போனது போலிருந்த்து. குனிந்து பார்த்தேன். முத்து முத்தான அவன் கையெழுத்து தான். நடுங்கும் விரல்களால் பிரித்தேன்.
நான்கு வரிகள் மட்டுமே எழுதப்பட்டிருந்த்து.

“வேறு எந்தப் பெண்ணிடமும் நான் இத்தனை சுகத்தை உணர்ந்ததில்லை. நான் என் வசமில்லை. இது எனக்குத் திருமணமானாலும் தொடரவேண்டும். இது எனக்காக அல்ல..உனக்காக..கார்த்திக்கைத் தவிர வேறு யாரையும் மனதால் நினைக்க மாட்டேன் என்று அடம்பிடித்த உனக்கு வாழ்க்கையில் இப்படியுமொரு சுகம் இருக்கிறது என்று காட்ட நினைத்தேன். அதனால் தான் நேற்றைக்கு அப்படியானது. அது உனக்காக! நீ அவனை மறந்துவிட வேண்டும் என்பதற்காக! ஒரு வேண்டுகோள். இனி நீ என்னை அண்ணா என்றழைக்க்க்கூடாது. “

படித்த வேகத்தில் அதனைக் சுக்குநூறாகக் கிழித்து எறிந்தேன். விழிகளில் நீர்முட்டிக்கொண்டு நின்றது. குளியலறைக்குச் சென்று தண்ணீர்க்குழாயைத் திறந்து வைத்துவிட்டு அழுதேன்.வெளியேவந்து அம்மாவிடம் சொன்னேன்
“அம்மா! கல்யாணத்துக்கு நான் வரலை. பஸ்ஸுக்கு பணம் தா. நான் டி.என்.பி.எஸ்.சி எக்ஸாம் எழுதப் போறேன்..” என்றேன்.


அம்மா என்னை விநோதமாய்ப் பார்த்துக்கொண்டே பணத்தைத் தந்தது. அதைப் பெற்றுக்கொண்டு சாலையில் இறங்கி நிதானமாய் நடந்து, எதிர்ப்புறம் வந்த பேருந்தைக் கைகாட்டி ஏறி “காலேஜ் ஸ்டாப் ஒண்ணு” என்று டிக்கெட் எடுத்து அமர்ந்தேன்.

பேருந்து என்னை சுமந்தவாறு விரைந்து கொண்டிருந்தத்து. பேருந்தில் இருவர் அமரும் இருக்கை ஒன்றில் ஒரு இளைஞன் மட்டும் உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்துச் சொன்னான் “அட சும்மா உட்காரும்மா! அண்ணனா நினைச்சு உட்காரு’’ என்றான். அவனருகில் சென்று அமர்ந்தவாறே சொன்னேன்.. ”நன்றிங்க! அண்ணனா ஏன் நினைக்கணும்? ஃபிரண்டா நினைச்சு உட்காந்துக்குறேன்’’ என்றவாறே ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். மரங்களும், வீடுகளுமாக பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன.

Friday, September 09, 2011

செங்கொடிக்கு ஒரு கடிதம்


தோழி செங்கொடிக்கு!

எப்படி இருக்கிறாய் என்று நான் இனி உன்னைக் கேட்க முடியாது. எங்கே இருக்கிறாய் என்பது மட்டுமே தெரியும். காஞ்சி மக்கள் மன்றத்தில், நீ வளர்ந்த கம்யூனில் இருக்கிறாய். மண்ணில் புதைக்கப்பட்டு இருக்கிறாய் நீ. இன்னும் சில நாட்களில் உன் உடல் புழுக்களுக்கு இரையாகக் கூடும். புன்னகை தவழ்ந்த உன் முகம் செல்லரித்துப் போகக் கூடும். பறையெடுத்து ஆடிய உன் கைகள் இற்றுப்போய் வெறும் எலும்புகளாக மட்டுமே மிஞ்சக் கூடும். ஆனாலும் நீ வாழ்கிறாய்!

அன்புத் தோழி செங்கொடி! நான் உன்னை அறிந்தவளில்லை. நமக்குள் அறிமுகம் இல்லை. ஆனால் எனக்குத் தெரியும். நீ சாதாரணமானவள் அல்ல. அதை உன் பெயரே பறைசாற்றும். செங்கொடி...பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். ஆனால் எம்மை விட்டுப் பிரிந்து பறந்து சென்றுவிட்டது நியாயமா தோழி?

மூன்று உயிர்கள் மரித்துப் போய்விடக்கூடாது என்று தமிழகமே திரண்டு போராடுகையில், நீயும் போராடி இருக்கிறாய். போராட்டத்தில் உன்னை இணைத்துக் கொண்டிருக்கிறாய். .

உன் மரணத்தை கோழைத்தனம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் வீரமரணம் என்றும் நான் சொல்ல மாட்டேன். வெறும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் நீ முடிவெடுக்கவில்லை. உன் முடிவை முட்டாள்த்தனம் என்றும் என்னால் போகிறபோக்கில் சொல்லிவிட முடியவில்லை. முதல் நாள் முத்துக்குமாரின் கடிதத்தை நீ வாசித்திருக்கிறாய். ‘முத்துக்குமார் போல இன்னொருவர் இன்றைய சூழலில் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டால் அன்று எழுந்த எழுச்சி போல இன்றைக்கு ஏற்படுமா?’ என்று நீ உன் தோழிகளிடம் கேட்டிருக்கிறாய் என்று அவர்கள் இப்போது சொல்கிறார்கள்.


நீ நினைத்ததை செய்து முடித்த திருப்தியோடு இப்போது உறங்கிக்கொண்டிருக்கிறாய். ஆனால் உன்னைப் பிரிந்து வாடும் நெஞ்சங்கள்?

உன் உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த அந்த இரவு, வெளியே கூட்டம் அலைமோதியது. அனைவர் கரங்களிலும் நீ எழுதிய கடித்த்தின் நகல் உன் கையெழுத்தில்! சுதந்திரத்திற்குப் பின்னான இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் காரணத்துக்காக உயிர் நீத்த முதல் பெண் நீ தான் என்பதை திருமாவளவன் ஊடகங்களுக்கு எடுத்துரைத்தார். அப்போது என் உடல் சிலிர்த்தது. ஆனால் அதையும் மீறி உன் மரணம் எத்தகைய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது, அதிர்ச்சியளித்தது என்பதை நீ அறிய மாட்டாய். உனக்குத் தெரிந்திருக்கும் செங்கொடி! சிவகங்கைச் சீமை வெள்ளையனிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, உடலெங்கும் வெடிமருந்தைக் கட்டிக்கொண்டு வெள்ளையர்களின் ராணுவக்கிடங்கில் குதித்து ஆயுதங்களை அழித்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குயிலியின் கதையை நீ அறிந்திருப்பாய்.  உன் மரணத்தை நீயே தேடிக்கொண்டது பற்றிய விமர்சனங்கள் ஆயிரம் இருந்தாலும், நீ நம்பிய உன் கொள்கைக்கு நீ உண்மையாய் இருந்திருக்கிறாய். அந்த உண்மைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உன் உடலைக் காண நான் உள்ளே செல்லவில்லை. என்னைப் போலவே பலரும் உன்னை அப்படியொரு கோலத்தில் பார்க்க மனது வராமல் நின்றிருந்தனர். அந்த இரவு பூராவும் காஞ்சி அரசு மருத்துவமனை வளாகம் மனிதத்தால் நிரம்பியது.

மறுநாள் மதியம் உன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு காஞ்சி மக்கள் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நீ வாழ்ந்த இடத்திற்குப் பயணமானது உன் உடல். பத்து கிலோமீட்டர் தொலைவை உன் உடலைச் சுமந்த வாகனம் கடந்து சென்றது. பல்வேறு இயக்கத்தினர் கலந்து கொண்ட அந்த ஊர்வலம் காஞ்சி நகரத்தின் வீதிகளில் சென்றபோது காஞ்சி நகர மக்கள் வீதியின் இருமருங்கிலும் நின்றனர். நகர எல்லையைக் கடந்து ஒரு வயல்பகுதியில் உன் உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது, தொலைவில் ஒரு பெண் வயற்காட்டினிடையே உன்னைப் பார்க்க ஓட்டமாய் ஓடிவந்தார். கூட்டமாய் ஓரிடத்தில் பெண்கள் திரண்டு உன் அழகோவியமான உருவத்தை வரைந்த பதாகையை உயர்த்திப் பிடித்து வந்த தோழர்களிடம் சொல்லி அந்த பதாகையை கையில் வாங்கித் தொட்டுப் பார்த்து கண்ணீர் விட்டு கதறியதை எப்படி நாங்கள் மறப்பது?

வழியெங்கும் மக்கள் எழுப்பிய உணர்ச்சிமிகு முழக்கங்கள் விண்ணைப்பிளந்தன. ஆனால் கேட்பதற்கு உன் செவிகள் செயலிழந்திருந்தன. பத்து கிலோமீட்டர் தொலைவைக் கடந்து நீ வாழ்ந்த ஊரான மங்ககலப்பாடிக்கு உயிரற்ற உடலாய் சென்று சேர்ந்தாய. உன்னோடு வாழ்ந்த மக்களின் கதறலுக்கிடையே உன் உடல் இறக்கப்பட்டது.

அந்த இடத்தில் தானே நீ நடமாடியிருப்பாய்? அந்த இடத்தில் தானே நீ உன் ஆட்டக்கலைப் பயிற்சிகளையும் ஒத்திகைகளையும் மேற்கொண்டிருப்பாய்? அந்த இடத்தில்தானே உன் அரசியல் அறிவை நீ வளர்த்துக் கொண்டிருப்பாய்? அந்த இடத்தில் தானே உன் கனவுகள் அலைந்து கொண்டிருக்கும்? நீ வாழ்ந்த வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்காது. கம்யூன் வாழ்க்கை என்றால் நம்மில் பலருக்குத் தெரியாது. குடும்பத்தை விட்டு நீங்கி ஒரு பொதுவான இடத்தில் பொதுவான செயல்பாட்டுத் திட்டத்தோடு இணைந்து கூட்டாக வாழும் வாழ்க்கை உனக்கு வாய்த்திருந்தது. பாலின பேதமின்றி வாழும் அந்த வாழ்க்கை வாழ்ந்த நீ கொடுத்து வைத்தவள். ஆனால் அந்த வாழ்க்கையை நீ முழுதுவதுமாக வாழாமல் போய்விட்டதில் தான் எங்களுக்கு வருத்தம்!

உன் உடல் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டு உன்னை உன் தோழர்கள் வந்துப் பார்த்து உனக்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் இருக்க, நீ அமைதியாய் கண்ணாடிப் பேழைக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாய். மேல்தளத்தில் உன் உடலை என்ன செய்வது என்கிற விவாதம் நடந்துகொண்டிருந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்காக உன் உடல் சென்னையில் வைக்கப்படவேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருந்தது. உன்னோடிருந்த காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷும், ஜெஸ்ஸியும், காவல்துறை அனுமதியளித்தால் எடுத்துச்செல்லுங்கள் என்றனர். ஆனால் காவல்துறை அனுமதியளிக்குமா? பல இயக்கங்களின் பிரதிநிதிகள், தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கூடியிருந்தனர் செங்கொடி!. அரசியல் கட்சித்தலைவர்கள், தலித் தலைவர்கள், இடதுசாரித் தலைவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று ஒரு முப்பது பேர் வரை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோம் தோழி!



உன் உடலை எங்கே புதைப்பது? என்ன செய்வது? என்று முடிவு செய்வதற்காக கூட்டப்பட்டக் கூட்டம் கிட்டத்தட்ட  இரண்டு மணிநேரம் நடந்தது. வெளியே வந்திருந்த கூட்டம் பதைபதைப்பாகக் காத்திருக்க, அவரவர் கருத்தை அவரவர் முன்வைக்க சூடான விவாதங்கள் தொடங்கின. இளைஞர்கள் ஒருபுறம் உன் உடலை சென்னைக்கு எடுத்துச் சென்று பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும் என்று கடுமையாக வாதிட்டனர். ஒரு கட்டத்தில் கடும் வாக்குவாதம் நடக்க, சென்னைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எடுத்துச் சொன்னார்கள் தலைவர்கள். எத்தனை சிக்கல்கள் வந்தாலும், குண்டடிப்பட்டாலும் அதைத் தாங்கத்தயாராக இருப்பதாக இவர்கள் சொன்னார்கள். ஆனால் தலைவர்களோ அதனை வேண்டாமென்றனர். “எங்களுக்கு வழிகாட்டுங்கள். உங்கள் வழிகாட்டுதல் படி நாங்கள் செயல்படுகிறோம். நீங்கள் மனது வைத்தால் காவல்துறையிடம் பேசி அனுமதி வாங்க முடியும்” என்று அரசியல் கட்சித் தலைவர்களிடம் கேட்டனர் பல்வேறு அமைப்பினர். ஆனால் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தனர் தலைவர்கள். ஒரு கட்டத்தில் இளைஞர்கள் உணர்ச்சி வேகத்தில் பேசுவதாக தலைவர்கள் கூறினார்கள். நீ எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி “செங்கொடியின் கடிதத்துக்கு என்ன பொருள்? அவள் கூறிய போராட்டத்தை நாம் முன்னெடுக்கப் போவதில்லையா?” என்று கேட்டனர் சிலர். இறுதியில் முடிவு நீ சார்ந்த காஞ்சி மக்கள் மன்றத்தின் கைகளில் விடப்பட்டது.  நீ வாழ்ந்த அந்த வீட்டில்தான் உன்னைப் புதைக்க வேண்டுமென்று ஏற்கனவே நீ கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய மகேஷ் உன் உடலை எடுத்துப் போவது குறித்து எந்த ஆட்சேபணையும் இல்லையென்றும், ஆனால் எந்த சிக்கலும் இல்லாமல், காவல்துறையின் அனுமதியோடுதான் எடுத்துப் போக வேண்டும். எங்கு எடுத்துச் சென்றாலும் மீண்டும் இங்கே, இதே வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்து ஒப்படைத்துவிட வேண்டும் என்று கூறிவிட, அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன. இறுதியில் காவல்துறையின் அனுமதி பெறும் அளவுக்கு இன்னமும் சக்தி பெறாத சிறிய இயக்கத்தினரும், தனிநபர்களும் தங்கள் கோரிக்கையை ஏமாற்றத்தோடு கைவிட்டனர். உன் உடலை அங்கேயே அடுத்த நாள் முழுதும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பதென்றும், அதற்கடுத்த நாள் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் முடிவானது. இத்தனையும் மேலே மாடியில் நடக்கையில் நீ கீழே உன் சுற்றத்தார் புடைசூழக் கிடந்தாய்.

அன்றைக்கு மங்கலப்பாடி கிராமத்தை விட்டுக் கிளம்புகையில் மனம் கனத்துக் கிடந்தது. அதற்கடுத்த முழு நாளும் நீ அங்கேயே நீ வாழ்ந்த வீட்டிலேயே இருந்தாய். உன் சிரிப்பொலி அலங்கரித்த அந்த வீட்டில் உன் கனத்த மௌனம் காற்றில் பரவியிருந்த்து. உன் இறுதி நிகழ்வுக்காகக் காத்திருந்தாய். 31 ஆகஸ்ட் அன்று காலை, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனைக்கு நீதிமன்றம் எட்டுவார காலத்தடை விதித்தது. மகிழ்ச்சியில் துள்ளிய பலரும் “செங்கொடி ஒரு நாள் பொறுத்திருந்து பார்த்திருக்கலாமே” என்று ஆதங்கப்பட்டதைக் காண முடிந்தது. உன் இறுதிச்சடங்கிற்கு பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் திரளுக்கு நடுவே உன் உடல் புதைக்கப்பட்டதாக செய்தி வந்தது..

உன் உடலை என்ன செய்வது என்று முடிவெடுக்கும் கூட்டத்தில் நான் கேட்ட ஒரு குரல் இப்படிச் சொன்னது “சரியான வழிகாட்டுதல் இல்லாத, சரியான தலைமை இல்லாத ஒரு சமூகத்தில் தற்கொலைகளை தவிர்க்கமுடியாது. ஆனால் அது தற்கொலை அல்ல. கொலைதான். செங்கொடியின் மரணம் தற்கொலை அல்ல. அது கொலைதான்” என்றது அந்தக் குரல்.
ஆமாம் செங்கொடி! கையறு நிலையில் ஒரு சமூகமே நின்றுகொண்டிருக்கையில் வேறு வழியின்றிதான் இந்த நிலைக்கு நீ வந்திருப்பாய்.  உன் மரணம் தமிழக அரசிற்கு விடப்பட்ட எச்சரிக்கை மணியென்பதை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சொல்கிறது. முதல்நாள் குடியரசுத்தலைவரின் ஆணையை மாற்ற முதல்வருக்கு அதிகாரமில்லை என்றவர் மறுநாளே இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியதில் உன் மரணத்திற்கும், உன் உடலைச் சுமந்து காஞ்சி நகர் வீதிகளில் வந்த அந்த ஊர்வலத்திற்கும் பங்கிருக்கிறது. ஒரு வகையில் நீ நினைத்ததை சாதித்துவிட்டாய். ஆனால் நீ எங்களுக்குத் திரும்பக் கிடைப்பாயா? தலித்-பழங்குடி சமூகமான இருளர் சமூகத்திலிருந்து  சமூகத்திற்காகப் போராட வந்த, போராட்ட குணம் கொண்ட,  உன்னை நாங்கள் இழந்து விட்டோமே! இந்த இழப்பை ஈடுசெய்ய முடியுமா? உன் மரணத்திற்குப் பின் உன் பாதையை பலர் தேர்ந்தெடுத்துவிடக்கூடாதே என்கிற பதைபதைப்பு தந்த பலரின் மரண அவஸ்தையை வார்த்தைகளில் விவரிக்க இயலாது செங்கொடி! நீ போய்விட்டாய். ஆனால் உன்னை யாரும் பின் தொடர்ந்து விடக்கூடாது என்பதே எங்கள் கவலை. உயிரின் மதிப்பு உன்னை இழந்த பின் அதிகம் தெரிகிறது செங்கொடி! மூவர் உயிர்காக்க நடந்த போராட்டத்தில் உன் உயிரை நீ மாய்த்துக் கொளவதை எப்படிச் சகிப்பது? பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் உன் மரணச்செய்தி கேட்டபோது துடித்துக் கதறினார். “வேண்டாம் பிள்ளைகளா! நான் என் மகனின் உயிரைக் காப்பாற்றத்தானே 21 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். இன்னொரு உயிரைக் கொடுத்தா என் மகன் உயிரைக் காக்க வேண்டும். ஏன் இப்படிச் செய்தாய் செங்கொடி?” என்று கதறினார். தீராத துன்பத்தை உன் மரணம் அவருக்குத் தந்து விட்டதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

செங்கொடி! இப்படி போராட்டக்களத்தில் ஒவ்வொருவரும் உயிர் நீக்க நினைத்தால்...போராடயாரிருப்பார்? உன்னோடு போகட்டும் இந்த உயிர் நீக்கும் போராட்டம். வேறொருவர் இப்படி உயிர்நீத்து “ஆமாம்! எங்கள் சமூகம் வழிகாட்டுதலின்றித்தான் இருக்கிறது.” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டாம்! இது எங்கள் கனவு. ஆனால் கனவுகள் அனைத்தும் உண்மையாகி விடுவதில்லை.

போராட்டத்தன்மை மற்றும் போராட்டக் களத்தின் மீதான விமர்சனமாய் உன் மரணத்தை நீ அளிக்க, அதைக் கொச்சைப்படுத்தி ஆதாயம் தேடும் ஊடகங்களின் பார்ப்பன ஆணாதிக்கத் திமிரை அடக்க பல கோடி செங்கொடிகள் உருவாகி, உயிர் நீக்காமல் போராட வேண்டும்!

செங்கொடி! உனக்குப் பிரியாவிடை கொடுத்தனுப்பினோம். நீ வாழ்கிறாய் எங்கள் நெஞ்சங்களில்! ஆனால், எங்கள் நெஞ்சங்களில் வாழ்வதை விட, எங்களோடு நீ வாழ்ந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்போம். இந்த மகிழ்ச்சியை தமிழ்ச்சமூகம் எங்களுக்கு விட்டு வைக்குமா? இனியாவது?
இந்தக் கேள்விக்கு விடை உன்னைப்போன்ற, என்னைப்போன்ற யார் கையிலும் இல்லை. ஒரு தலைமையோ, வழிகாட்டுதலோ இல்லாத இச்சமூகம் என்ன செய்யப் போகிறது?  தற்கொலைகளால் போராட்டக்களத்தை நிரப்பப் போகிறதா? நம் வரலாறு தற்கொலைத் தேதிகளால் எழுதப்படுமா?

சாதியை கணக்கிலெடுக்காத தமிழ்த்தேசியமும்,  மக்களின் விருப்பத்தை அல்ல இயக்கத் தொண்டர்களின் விருப்பத்தைக்கூட அறியாத இடது அரசியலும்,  தங்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியமல் தொடர்ந்து தங்களின் இருப்புக்காய் போராடும் தலித் அரசியலும்,  தொடங்கிய பாதையை விட்டு வெகுதூரம் போய்விட்ட திராவிட அரசியலும், எங்கனம் எங்களுக்குத் வழிகாட்டக் கூடும்? இந்த உண்மையை உரக்கச் சொல்வதற்காக நீ மாய்த்துக்கொண்டாயோ?

செங்கொடி! உன்னை யாரும் பின் தொடர்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக்கொண்டே உன் பாதையில் செல்! பின் தொடர்ந்தால் கொலைகள் தொடர்கின்றன என்று பொருள். அது தனிமனிதக் கொலை அல்ல. ஒரு சமூகக் கொலை. சித்தாந்தங்களை கற்பித்தவர்களின் தோல்வி. கற்றுக்கொண்டவர்களின் தோல்வி. கையறு நிலையின் வெற்றி.

ஏதாவது செய்யச் சொல்கிறது உணர்வு. என்னவென்று கேட்கிறது அறிவு. உணர்வுக்கும், அறிவுக்குமான ஊடாட்டத்தில் மெல்ல விலகுகிறது பனித்திரை. எதிரே பிரம்மாண்டமாய் நிற்கிறது என் கையறு நிலை. கிழித்துச்செல்ல எத்தனிக்கிறேன். கிழிபட்டுப் போகிறேன். கிழிசல் ஓட்டைகளுக்கு இடையே நம்பிக்கை கண் சிமிட்டுகிறது நட்சத்திரங்களின் வடிவில்! – இப்படித்தான் முடிக்க நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை தோழி! கிழிபட்டுப் போவதுதான் தற்போதைய அரசியல் சூழலில் சாத்தியம். உனக்கு நேர்ந்ததும் இதுவே.

அனைத்துக் கதவுகளும் இறுக மூடிக்கொண்ட ஒரு வீட்டினுள், வெளியேற இயலாமல், மீட்பருக்காகக் காத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப் போல இன்னும் எத்தனை காலம் கழியப்போகிறது? விடைகாண இயலாத இப்படியான பல கேள்விகளால் நிறைந்திருக்கிறது மனம். கேள்விகளின் கனம் போலவே துயரத்தின் கனமும்,  இப்பூமியில் காற்று நிரம்பியிருப்பது போல மனமெங்கும் நிரம்பியிருக்கின்றது தோழி!

இப்படிக்கு,
உன் தோழி