Tuesday, May 24, 2011

மொழியின் மௌனம்


அவள் விழிகள் சொல்லின..ஒருபோதும் அவள் கனவுகள் மகிழத்தக்கதல்ல என்று!

எப்போதும் நிலைகுத்திய பார்வை. விட்டத்தை வெறிக்கும் முகம். அவ்வபோது மிரண்டுருளும் கருவிழிகள் மட்டும் அவள் உயிரோடிருப்பதை பறைசாற்றின!

எழுந்தமர்ந்தால் சாளரத்துக்கு வெளியே தொலைவில் யாரையோ தேடும் பாவனையில் அவ்விழிகள்!

மௌனத்தை தன உதடுகளில் பூசியிருந்தாள் அவள்! அவள் மனதின் கூக்குரலோ அவள் விழிகளின்வழி நீராய் பெருக்கெடுத்து மௌனமாய் சிந்தியது. தரையில் பட்டு தெறித்த கண்ணீர்த்துளிகள் அவள் ஆன்மாவை பிரதிபலித்தன..அவளின் கண்ணீர்த்துளி எங்கோ இருந்த அவனோடு பேசியது..உடைப்பெடுத்த அணையின் பேரிரைச்சலைப் போன்ற பெருஞ்சத்தத்தோடு அவள் மனதின் பிரதிநிதியாய் அவனோடு உரையாடியது.

அவனைப் பிரிந்த அந்த துயர நாளில் மொழி மறந்தாள் அவள். மீண்டும் காணும் நொடியில் ஆழிப்பேரலையாய்  பாயத் தயாராய் மனமெனும் நிலவறைக்குள் மௌனங்களை உடைக்கும் அவளது மொழி மௌனமாய்..ஓர் அற்புதப் புதையலாய்க் கிடக்கிறது .

காய்ச்சலில் விழுந்தபோது அவள் சன்னமாய் முணுமுணுத்தாள் அவன் பெயரை மட்டும்..

நித்திரையில் அவள் உதிர்க்கும் சொற்களின் பொருள் விளங்குவதேயில்லை! நினைவுகளின் அலைக்கழிப்பில் உச்சகட்டம் தொடும் வேளை..நரம்புகள் தளர்ந்து..இதயம் படபடக்க..கரங்களோடு  உதடுகளும் ஒருபக்கமாய் கோண..தாயன்புக்கு எங்கும் பிள்ளையாய் அவன் அன்பிற்கு ஏங்கியவளின் குழந்தைமை அவள் உமிழ்நீர்வழி வெளிப்பட்டு படுக்கையை நனைக்கிறது!

அவளின்  மௌனத்தையுடைக்க மருத்துவரின் எத்தனிப்புகள் பயன் தரவில்லை.அவளோ தன் மொழியை தேக்கியபடி காத்திருந்தாள் அவனுக்காக! 

ஒரு நாள் அவன் அங்கே வந்திறங்கினான்.

அவள் விழிகளை உயர்த்தி அவன் முகத்தை கண்ணுற்ற வேளையில் கோடானுகோடி ஒளிக்கற்றைகளை உள்வாங்கி பிரதிபலித்த அவள் கண்களின் பிரகாசம்  அவன் விழிகளைக் கூசச் செய்தது !

இத்தனை காலம் நிலவறையில் சேமித்துவைத்த அவள் மொழி...அவனுக்காக வெளிப்படக்  காத்திருந்த  அவளுடைய  மொழி..அவள் நரம்புகளின் வழியே மெல்ல மெல்ல மேலேறி வந்து தொண்டைக்குழி வழியே பயணித்து  நாவில் இறங்கி  உதடுகளை பிரிக்க முயற்சிக்கையில்..

அவளைப்போலவே மூர்ச்சையாகி அவளோடு மடிந்து போனது!

1 comment:

  1. Anonymous10:55 am

    செத்துட்டேன் தோழர். எப்பிடி இப்புடி.

    ReplyDelete