Sunday, November 10, 2013

ஒரு காட்சி, ஒரு நடனம், ஒரு காதல்

ஒரு படத்தின் காட்சி இத்தனை உயிரோட்டமாய மனதைக் கவர்கிறது என்றால் அந்தக் காட்சி உணர்வுபூர்வமாய் இருக்கிறது எனலாம். ‘தில் தோ பாகல் ஹை’ இந்திப் படம் வந்த புதிதில் அதை நான் பார்த்திருக்கிறேன். ஒரே ஒரு முறை பார்த்த மாதுரி தீக்‌ஷித்தின் அந்த கதக் நடனம் மனதிலேயே நின்றது. இப்போது யூ டியூபில் அவ்வபோது அதை எடுத்துப் பார்ப்பதுண்டு. எத்தனை அழகான காட்சி. ஷாருக்கானும் மாதுரியும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். மாதுரியின் கைகளின் அந்த அபிநயமும், முகபாவமும், நளினமும் அந்த நடனத்தை அற்புதமாக்குகின்றன. சற்றும் சளைக்காமல் கைகளால் தாளமிசைக்கும் ஷாருக்கின் துள்ளல் இந்தக் காட்சிக்கு அழகு சேர்ப்பது. மேலிருந்து பாயும் ஒளிவெள்ளத்தில் ஒரு வெள்ளை தேவதையாய் மாதுரி..இத்தனை அழகாய், நளினமாய், புன்னகைக்கும் ஒரு நடிகை...உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நடன அசைவுகள்...மாதுரியின் திறமைக்கு எல்லை இல்லை. ஒரு முறை ஓவியர் எம்.எஃப்.உசேன் கூறினார். ‘நான் என் கை விரலை எவ்வள்வு எளிதாக அசைக்கின்றேனோ அது போல மாதுரி தன் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நடனத்தின்போது எளிதாக அசைக்கும் திறன் பெற்றிருக்கிறார். இது எல்லோருக்கும் வராது” என்றார். உண்மைதான். அதனாலேயே எம்.எஃப். உசேன் மாதுரியின் தீவிரமான விசிறியானார்.

நடன இயக்குநர் என்று ஒருவர் இருக்கிறாரா அல்லது இவரே தானாக ஆடுகிறாரா என்கிற சந்தேகம் வரும்படி ஒரு நடனத்தை இப்படி அனுபவித்து ஆடுவது என்பது எல்லோருக்கும் வந்துவிடாது. ஒரு சிலர் நடன அசைவு ஒரு மாதிரியும் முகபாவம் வேறாகவும் இருந்து நடனத்தைக் கெடுக்கும். அல்லது முகபாவமே இல்லாமல் ஆடுவதும் உண்டு. ஆனால் இந்தப் பாடலுக்கான பாவமும் உணர்ச்சியும் இப்படித்தான் இருக்கமுடியும் என்பது போல முகத்தில் எத்தனை விதமான வெளிப்பாடுகள் மாதுரிக்கு. இந்த நடனம் மட்டுமல்ல. ‘ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்’ படத்தின் பாடல்களை கவனியுங்கள். அதில் ஒரு பாடலில் சல்மான்கானைப் பார்த்து தன் தாயின் தலைக்குப் பின்னால் மறைந்துகொண்டு பார்ப்பார். அந்தக் கண்களில் ஒளிரும் காதல்..மாதுரி ஒரு மிகச் சிறந்த நடிகை என்பதைச் சொல்லும்.

தில் தோ பாஹல் ஹை படம் முழுவதும் எல்லா பாடல்களிலுமே மாதுரியின் நடனம் கொடிகட்டிப்பறக்கும் என்றாலும் இந்த கதக் மிகவும் விசேஷம். ஏனெனில் இந்தக்காட்சியின் பின்னாலுள்ள காதல். தன்னை மறந்து இசைக்கு நடனமாடி சட்டென்று உணர்ந்து நின்று உயர்த்திய தன் கரங்களை இறக்கிக்கொண்டு கூந்தலை அவிழ்த்து..தன் பையை எடுத்துக்கொண்டு சலங்கை சத்தத்துடன் வெளியேறும் அந்தக் காட்சி..என்ன சொல்வது? அந்த வெள்ளை தேவதை சென்றபின் அந்த ஒளிவெள்ளத்தின் வெற்றிடத்தை நோக்கிய ஷாருக் ‘மாயா’ என்று பெயர் சொல்லிவிட்டு அந்த இடத்தை நோக்கிச் சென்று கைகளை நீட்டிக்கொண்டு நிற்கும் காட்சியில் மறைந்துள்ள காதல் வெளிப்படும் இடம். இந்தக் காட்சியின் இயக்குநருக்கு, நடன இயக்குநருக்கு, இசையமைப்பாளருக்கு எல்லோருக்குமாய் நன்றி சொல்லத் தோன்றுகிறது.


No comments:

Post a Comment