Sunday, October 10, 2010

பெண்ணின் வாழ்க்கையை குழந்தைப்பேறு புரட்டிப் போடுகிறது” - கிரண்பேடி நேர்காணல்

மயம் முதம் குமரி வரை, சராசரியாய் இல்லாமல், வித்தியாசமாக துணிச்சலாக ஒரு பெண் குழந்தையை வளர்க்க நினைப்பவர்கள் ரோல் மாடலாக தங்கள் குழந்தைக்கு கைநீட்டிக் காண்பிக்கும் பெண் - கிரண்பேடி. 1972ல் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியானவர். திகார் சிறையின் கைதிகள் இப்போதெல்லாம் கம்பிகளை எண்ணுவதில்லை. கிரண்பேடி அங்கு செய்த சீர்திருத்தங்களைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். டென்னிஸ் போட்டியில் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றவர். அழகான அளவான பாய்கட். சுறுசுறுப்பான நடை. மடைதிறந்த வெள்ளம் போல் பேச்சு. ஒரு காவல்துறை அதிகாரிக்கேயுரிய கம்பீரமான குரல். 61 வயதா என்று மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கான மிடுக்கான தோற்றம். சமீபத்தில் சென்னை வந்திருந்த கிரண்பேடி ‘புதிய தலைமுறைக்காக அளித்த நேர்காணல்: 


உங்களுக்குப் பிறகு நிறைய எண்ணிக்கையில் பெண்கள் உங்கள் துறைக்கு வந்துவிட்டார்கள். பெண்கள் முன்னேற்றத்திற்கு இந்த எண்ணிக்கை உதவியாய் இருக்கிறதா? 

”நிச்சயமாக! ஆண்களை காவல்துறை சீருடையில் பார்த்தால் பெண்களுக்கு பயம் வரும். அதே சீருடையில் பெண்களைப் பார்த்தால் பாதுகாப்புணர்வு வரும். சீருடையில் எதுவுமில்லை. அதை அணியும் உடல்களில் இருக்கிறது எல்லாம். தங்களால் முடியாத ஏதோ ஒன்றை எவளோ ஒருத்தி செய்கிறாள் என்கிற உணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படுகிறது. தன்னுடைய பிரதிநிதியாக ஒரு பெண் காவல்துறையில் இருக்கிறாள் என்பதே பாதுகாப்புணர்வை அதிகப்படுத்தும். அவளுக்கு ஒரு சிக்கலென்றால் எளிதில் அணுக முடியும். எந்த சீருடையை பார்த்து பெண்கள் பயந்தார்களோ அதே சீருடையை பெண்களே அணிய ஆரம்பிப்பது பெண்கள் முன்னேற்றத்தில் முக்கியமானது இல்லையா?”

பெண்கள் முன்னேற்றத்திற்கு ஒரு பெண் ஆற்றக்கூடிய பங்கு என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? 

”மூன்று விஷயங்களை வலியுறுத்துவேன் நான். முதலில் கல்வி கற்க வேண்டும். அதிலும் தொழிற்கல்வி கற்றல் மிக மிக அவசியம். அடுத்து திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கடுத்த நிலை தன் சொந்தக்காலில் நிற்கும் அளவிற்கு பொருளாதார சுதந்திரத்தோடு இருத்தல் அவசியம். இம்மூன்று விஷயங்களையும் விட முக்கியமான விஷயம் தனக்கு எப்போது வேண்டுமென்று தோன்றுகிறதோ அப்போதுதான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் குழந்தைப்பேறு ஒரு பெண்ணின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. பிறரது வற்புறுத்தலுக்காக குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். ஒரு குழந்தையை வளர்க்கும் பக்குவம் தனக்கு வந்திருக்கிறது என்ற நம்பிக்கை வந்தபின் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை ஒவ்வொரு பெண்ணும் செய்தாலே பெண்விடுதலையில் தனக்கான பங்கை ஒவ்வொரு பெண்ணும் சிறப்பாக ஆற்றியதாகக் கொள்ளலாம்.”

ஆசிய டென்னிஸ் சாம்பியனான நீங்கள் விளையாட்டை விட்டு விட்டு காவல்துறை பணியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? 

”டென்னிஸ் விளையாட்டில் வயதானால் சர்வீஸ் போட முடியாது. ஆனால் நான் தேர்ந்தெடுத்த துறையின் மூலம் வயதானாலும் மக்களுக்கு சர்வீஸ் செய்ய முடியுமே? நான் விளையாட்டை என்னுடைய கேரியராக என்றைக்கும் நினைத்ததில்லை. என்னை செழுமைப்படுத்திக்கொள்ள, இன்னும் வலிமையாக்கிக்கொள்ள, நான் கற்றுக்கொள்ளக்கூடிய வகுப்பறையாக விளையாட்டுத்துறையைப் பார்த்தேன். ஒருபோதும் அதை என் வாழ்க்கையாக ஆக்கிக்கொள்ள நினைக்கவில்லை. வாழ்க்கையில் தவறு செய்யக்கூடாது என விளையாட்டு கற்றுக்கொடுத்தது. என் உடல் வலிமையையும் மன வலிமையையும் அதிகப்படுத்தியது.”

ஐ.நா.சபையில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பணியாற்றியபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்? 

”என்னை மேலும் திறந்த மனதோடு செயல்பட பயிற்சியளித்தது அந்த அனுபவம். இந்தியாவிலேயே நாம் Unity in Diversity என்று சொல்வோம். ஆனால் அங்கு சென்றபின் தான் இதைவிட பெரிய வேறுபாடுகளும், பல்வேறு பண்பாடுகளையும் கொண்ட  உலக நாடுகளுடன் நல்லுறவு பேண கற்றுக்கொண்டேன். அது ஒரு அருமையான அனுபவம்.”

சிறைத்துறையில் பணியாற்றியபோது உங்கள் முயற்சிகளால் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான பொறி உங்களுக்கு எப்படி தோன்றியது? 

”நிச்சயமாக அது ஏதோ ஓவர்நைட்டில் தோன்றியது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் யோசித்து நடைமுறைப்படுத்தினேன். காவல்துறையில் நான் ஒரு காந்திய முன்மாதிரியை கொண்டு வந்தேன். திகார் சிறையில் 3C  மாடலைக் கொண்டு வந்தேன். C-Collective, C-corrective, C-Communicative என்று பொருள் கொள்ளலாம். உண்மையான, அமைதியான வழியில் கைதிகளின் மன்ங்களைத் திருப்புவது இச்சீர்திருத்தத்தில் முக்கியமானது. கைதிகளுக்கு சிறைக்குள்ளேயே வகுப்புகள் நடந்தன. ”

வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை விடுவது குறித்து நீங்கள் கடுமையாய் விமர்சனம் செய்திருந்தீர்களே? 

”ஆமாம். எதற்காக விடுமுறை விடவேண்டும்? ஓட்டு போட வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு அலுவலகத்திலும், அது அரசு அலுவலகமாயிருந்தாலும் சரி, தனியார் அலுவலகமாயிருந்தாலும் சரி, வாக்குப்பதிவு தினத்தன்று கையில் மை இல்லாமல் பணிக்கு வருபவர்களை உள்ளே அனுமதிக்க்க்கூடாது. “First vote!, then come to office” என்பது கொள்கையாய் இருக்க வேண்டும். இப்படி செய்தால் வாக்குப்பதிவு சதவீதமும் அதிகமாகும்.  கிராமப்புறங்களைப் பற்றி பிரச்சனை இல்லை. இயல்பாகவே அவர்கள் விருப்பத்தோடு வந்து வாக்களிப்பார்கள். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் வார இறுதி நாளிலோ, அல்லது வெள்ளி அல்லது திங்கட்கிழமையோ தேர்தலை வைத்தால், வார இறுதி நாட்களோடு சேர்த்துக்கொண்டு வெளியூர் போய்விடுவது நம்மவர்களின் வழக்கமாக இருக்கிறது. ஆக்வே வாரத்தின் மத்தியில் அதாவது புதன்கிழமையில் தேர்தல் நடத்த வேண்டும்.”

உங்களைப் பற்றிய ஆவணப்படம் “யெஸ், மேடம் சார்”  எப்போது எங்கள் பார்வைக்கு வரும்?

”இந்தியாவில் இப்போது டிரைலர் மட்டும்தான் நீஙக்ள் பார்த்திருப்பீர்கள். ஆஸ்திரேலியாவின் மேகன் டோன்மேன் உருவாக்கியிருக்கிறார் இந்தப் படத்தை இந்தியர்களின் பார்வைக்கு அனுப்புவது அவருடைய கையில் இருக்கிறது. விரைவில் வரும். இப்போதைக்கு டிரையிலர் மட்டும் பாருங்கள்”

என்று சிரித்தவாறே பவன் சௌத்ரியும் அவரும் இணைந்து எழுதிய“Broom Groom” நூலை கையில் வைத்துக்கொண்டு அவருடைய கையெழுத்துக்காய் வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் தனது வாசகர்களுக்கு ஆட்டோகிராப் போடுவதற்கு விரைந்தார்.

- கவின் மலர்

நன்றி: புதிய தலைமுறை

No comments:

Post a Comment