Monday, September 10, 2012

அற்புதங்கள் நிகழட்டும்

முன்னெப்போதுமில்லாதபடி
கடல் அலைகள் தாலாட்டட்டும்
குளிர் இதமாய் வீசட்டும்.
உறக்கம் உங்களைத் தழுவட்டும்
விளையாட்டையும் படிப்பையும்
போராட்டத்துக்குத் தின்னக்கொடுத்த
எங்கள் குழந்தைகளே
தென்றலில் மிதந்து வரும்
தேனமுத கானம்
உங்கள் செவிகளை எட்டட்டும்.

இடிந்தகரையிலிருந்து புயலாகிப் புறப்பட்டு
கடற்கரையில் மையம் கொண்டிருக்கும்
சீற்றங்கொண்ட தோழர்களே.
இன்றிரவு மட்டும் தென்றலாகி
சற்றே கண்ணயருங்கள்
மழைத்துளிகள் இன்றிரவு மட்டும்
மீண்டும் மேகமாகி விடட்டும்
கனவுகளில் அற்புதங்கள் நிகழ்ந்து
உலைக்களம் காணாமல் போகட்டும்

நாளை விடிகையில்
காக்கிச் சட்டைகளின் முகத்தில்
நீங்கள் விழிக்க நேரிடலாம்
ஆனாலும் என்ன..
குடிநீரும் உணவும்தந்து
உங்களால் அவர்களின் பசியாற்றமுடியும்
அதற்கு அவர்களின் கைம்மாறு
கண்ணீர்ப்புகையாகவோ தடியடியாகவோ
இருக்கக்கூடும்

ஆனாலும் தோழர்களே
எழுதியதிலேயே எப்படி முடிக்க என்று
குழ்ம்பித் தவிப்பது இப்போதுதான்.
அற்புதங்கள் கனவில் மட்டுமல்ல
நிஜத்திலும் நிகழும் சாத்தியங்கள் உண்டு
என்றுதான் நிறைவாய்
சொல்லத் தோன்றுகிறது.

5 comments:

  1. anbana thozheyee azhagu...

    ReplyDelete
  2. 10/Sep/2012
    நேற்றுக்காலையில் இருந்தே படபடப்பு என்னைத் தொற்றிக்கொண்டது... இன்று ஒவ்வொரு செய்தி வரும்போதும் பதட்டம்...

    அடுத்து என்ன செய்யலாம்? எப்படி இந்த அரச வன்முறையை நிறுத்தி அரசின் 'காவல்' படையை (மக்களிற்கு அல்ல) வெளியில் கொண்டு வருவது? கண்முன்னே நடக்கும் முள்ளிவாய்க்கால் போர்க்களத்தில் இருந்து எம் மக்களை காப்பது? என்று தாயகத்தில் (தமிழ் சமூகத்தின் அத்தனை உரிமை போராட்டங்களுக்கும் இன்று அதுதான் ஒரே குடிலாக இருக்கிறது) கூடி பேசலாம் என்று நண்பர்களிடம் இருந்து அழைப்பு வந்தது... ஐம்பதற்கும் மேலான உணர்வுள்ள தமிழர்கள் கூடினோம்... இன்றே போராடுவோம் என்று பலரும் சொன்னோம்... மாலை, மழை தடுத்தது... இன்னும் அதிகமாய் மக்களைக் கூட்டி நாளை(11/Sep/2012) காலை ஒன்பது மணிக்கு அண்ணா சிலை முன்பு போராட்டம் செய்து அரசிற்கு கண்டனங்களையும் காவல்படையை வெளியேற்றும் கோரிக்கையும் வைத்து எம்மக்களை காக்க முடிவு செய்தோம்.... சென்னையைப்போன்று தமிழ்நாட்டில் தலைநகரங்கள் எங்கும் போராட்டத்தை எடுத்துச் செல்வதாக வந்த இயக்க, கட்சித் தோழர்கள் சொன்னார்கள்...

    அங்கே இரவில் என்ன நடக்குமோ என்ற அச்சம் எங்கள் மனதில் இருந்து கொண்டே இருந்தது... இப்போதும் இருக்கிறது...

    நீண்ட கனத்த நாள் இந்த திங்கள் கிழமை... நாளை செவ்வாய் எப்படியாவது எம் சொந்தங்களைக் காப்போம் என்று ஒரு கனத்த இயத்தொடே படுக்கைக்கு செல்கிறேன்....

    ஈழத்தில் நமது சொந்தத்தைக் காக்க நெருப்பில் உயிர்விட்டு நமது நெஞ்சத்தில் போராட்டத் தீயை விதைத்தானே முத்துக்குமார். அவனின் வார்த்தைகள் தான் மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது....

    "விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை..!"

    ReplyDelete
  3. //அற்புதங்கள் கனவில் மட்டுமல்ல
    நிஜத்திலும் நிகழும் சாத்தியங்கள் உண்டு
    என்றுதான் நிறைவாய்
    சொல்லத் தோன்றுகிறது//

    நிச்சயமாக அற்புதங்கள் நிகழும்!

    ReplyDelete
  4. உண்மையின் சூடு.

    ReplyDelete
  5. குடிநீரும் உணவும்தந்து
    உங்களால் அவர்களின் பசியாற்றமுடியும்
    அதற்கு அவர்களின் கைம்மாறு
    கண்ணீர்ப்புகையாகவோ தடியடியாகவோ
    இருக்கக்கூடும் //

    கடைசியில் நடந்தே விட்டது :-((((

    ReplyDelete