Monday, May 27, 2013

மறைக்கப்படுகிறதா தலித் மாணவர்களுக்கான அரசாணை?


மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 2012 ஜனவரி 9 அன்று ஒர் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின்படி தமிழகத்தில் அனைத்து விதமான படிப்புகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 100% கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. தமிழக அரசு இந்தச் செய்தியை சரியான முறையில் பிரசாரம் செய்யாத காரணத்தால், விஷயம் தெரியாத பல மாணவர்கள் சென்ற கல்வியாண்டில் பணத்தைக் கட்டினார்கள். பலர் பணம் கட்ட முடியாமல் உயர்கல்வியை கைவிட்டனர். தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை வெளியிட்ட அந்த அரசாணைப்படி சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அனைத்து படிப்புகளுக்கும், அரசு ஒதுக்கீடு செய்த இடங்களில் பயிலும் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களிடம் பெறப்பட்ட தொகை முழுவதையும் 2011-~12 கல்வி ஆண்டில் இருந்து திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

அரசு இந்த அரசாணை குறித்து போதிய அளவில் விளம்பரம் செய்யவில்லை. கல்விக்கட்டணம், டியூஷன்கட்டணம், விளையாட்டு, மாணவர் சங்கம், நூலகம், பத்திரிகைகள், மருத்துவப் பரிசோதனை போன்ற கட்டணங்களும் இதில் அடங்கும். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் இவை பொருந்தும். இரண்டு லட்ச ரூபாய் வரை வருமான வரம்புள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டிய தலித் மாணவர்களில் பலருக்கு இந்த அரசாணை குறித்து தெரியவில்லை. ஏனெனில் செய்தித் தாள்கள் மூலமாகவோ, பிற ஊடகங்கள் மூலமாகவோ தமிழக உயர்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என்று எந்தத் துறையுமே பொதுமக்களிடம் இந்த விஷயத்தைக் கொண்டு சேர்க்கவில்லை.

2011-12 கல்வி ஆண்டில் இருந்து இது நடைமுறைப்படுத்தப்படும் என்று ஆணையில் இருக்கிறது. அப்படியென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறியியல், மரு த்துவம், தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் துறையில் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் இந்த ஆணை பொருந்துகிறது. ஆனால் கல்வி நிறுவனங்களில் அரசு ஆணை விஷயம் தெரியாததால், மாணவர்கள் கட்டணம் செலுத்த சென்ற ஆண்டு நிர்பந்திக்கப்பட்டார்கள். பொறி யியல் மற்றும் மருத்துவம் போன்ற தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் கட்ட ணம் கட்ட இயலாத நிலையில், இடை நீக்கம் செய்யப்படும் சூழலும் உருவானது. 

“2012 ஜூலை மாதத்தில் நாங்கள் இது குறித்து   கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன்பிறகு ஊடகங்களில் ஓரளவுக்கு செய்தி வெளியானது. ஆனாலும் முழுமையான பலன் கிடைக்கவில்லை. மதுரையைச் சுற்றியுள்ள 30 கல்லூரிகள் அரசாணை தங்களுக்கு வரவில்லை  என்கின்றன. அந்த கல்லூரிகளை அழைத்து மே 22 அன்று விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தினோம்” என்கிறார் துடி இயக்கத்தைச் சேர்ந்த பாரதிபிரபு.

அரசாணை 6  மேம்படுத்தப்பட்டு  1.9. 2012 அன்று சில திருத்தங்களுடன் அரசாணை 92 வெளியிடப்பட்டது. இதன்படி  அரசாணை 92 நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நியமிக்கப்படவில்லை.  கல்வியாளர் பேராசியர் பிரபா கல்விமணி ’’மக்கள் கல்வி கூட்டமைப்பு சார்பாக மே 16 அன்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் இந்த அரசாணையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை எதிர்க்க ஊர் ஊராகச் சென்று கூட்டம் நடத்தவிருக்கிறோம். அப்போது இந்த அரசாணை குறித்தும் பேசி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் திட்டம் இருக்கிறது.கடந்த ஆண்டு போல் ஆகிவிடாமல், இந்த ஆண்டாவது முழுமையாக விஷயம் மாணவர்களையும் பெற்றோரையும் சென்றடைய வேண்டும்” என்கிறார். எது எதற்கோ அரசுப் பணத்தை செலவிடுகிறது அரசு. ஈராண்டு சாதனைகளைப் பட்டியல் இடும் விளம்பரச் செலவில் கொஞ்சம் இதற்கும் செலவிட்டு இந்த அரசாணை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.  

நன்றி : இந்தியா டுடே         

No comments:

Post a Comment