Tuesday, June 25, 2013

திருமணம், பாலியல் உறவு, சடங்குகள் - உயர் நீதிமன்றத் தீர்ப்பு

1967, அண்ணா முதல்வராக இருந்தபோது, சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் மசோதாவை தந்தை பெரியாரிடம் காண்பித்தபோது, ‘மாலை மாற்றி தாலி கட்டவேண்டும் ‘’ என்றிருந்த பகுதியைப் பார்த்து ’’தாலி கட்டுவதை அவசியமாக்கத் தேவையில்லை’’ என்று திருத்தம் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட அண்ணாவும் அந்தப் பகுதியை நீக்கினார். அதன்பின்னரே இந்தியாவிலேயே முதன்முதலாக சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்டன.

அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் நீதிபதி கர்ணன் வழங்கிய தீர்ப்பு சமூகத்த்திலும் ஊடகங்களிலும் ஒரு சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. கோவையைச் சேர்ந்த ஆயிஷா என்கிற இஸ்லாமிய பெண் ஓஸிர் ஹசன் என்கிற இஸ்லாமியரை இஸ்லாமிய சடங்குகளின்படி திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தபின்னர், ஹசன் ஆயிஷாவைப் பிரிந்துவிட்டார். ஆயிஷா குழநதைகளைப் பேணுவதற்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஹசன் தரவேண்டும் என்று கோரி கோவை குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மருத்துவமனை ஆவணங்களில் பிரசவ சமயத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தபோதும் கணவன் என்கிற இடத்தில் ஹசன் தான் கையெழுத்திட்டிருக்கிறார். ஆகவே குழந்தைகள் சட்டரீதியாக இவர்களுக்குப் பிறந்தவர்களே என்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், ஆயிஷாவை ஹசனின் சட்டபூர்வ மனைவி என்று கூற முடியாது என்று தீர்ப்பளித்தது. இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் ஆயிஷா. இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில்தான் நீதிபதி ‘’மாலைமாற்றிக்கொள்வதோ, தாலி கட்டிக்கொள்வதோ, மோதிரம் மாற்றுவதோ, அக்னி குண்டத்தைச் சுற்றி வருவதோ, பதிவு அலுவலகத்தில் சென்று பதிந்துகொள்வதோ திருமணம் அல்ல. இந்த மதச் சடங்குகள் எல்லாமே சமூகத்தை திருப்திப்படுத்தத்தான். சட்டபூர்வமான அங்கீகாரத்துக்கு அவர்களுக்கிடையே பாலியல் உறவு இருந்தால் போதும்’’ என்கிறார். அதாவது இருவ்ருக்கும் பாலியல் உறவிருந்தாலே அவரக்ள் கணவன் - மனைவி என்று அறியப்படுவர் என்கிறது தீர்ப்பு.

ஆனால் பாலியல் உறவுக்கான ஆவணங்களையும் ஆதாரங்களையும் கொடுக்க முடியாமல் போகும்போது, அந்த உறவை சட்டபூர்வம்தான் என்று வாதாட முடியாத நிலையும் உள்ளது. ஆயிஷாவைப் பொருத்தவரை அவர்களுடைய குழந்தைகள் உறவுக்கு சாட்சியாக உள்ளன. , ஒருவேளை குழந்தைகள் இல்லையெனில் பாலியல் உறவு இருந்ததற்கான என்ன ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்? இந்தத் தீர்ப்புக்கு சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் எதிர்வினைகள் அதிகமாக இருந்தனர். ஆனால் பெரும்பாலானவை பொழுதுபோக்காக சிரிப்பதற்கானவை. உண்மையான சமூக அக்க்றையுடன் எழுதியவர்கள் வெகு சிலரே. இந்தத் தீர்ப்பு சம அளவில் வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இருபுறம் கூர்தீட்டிய வாளைப் போன்றது இந்தச் சட்டம். ஒருபுறம் லிவிங்க் டூகெதர் முறையில் மணம் புரியாமல் வாழ்பவர்களுக்கு இத்தீர்ப்பு சட்டபூர்வ அந்தஸ்தை வழங்குகிறது.

லிவிங் டூகெதர் முறையில் வாழ்பவர்களுக்கிடையேயும் மணமான தம்பதிகளுக்கிடையே இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் உண்டு. சென்னையில் தன் துணையுடன் வாழும் பெண் கூறுகையில் ‘’கடந்த 5 ஆண்டுகளாக நான் அவருடன் வாழ்கிறேன். முறைப்படி திருமணம் செய்துகொண்ட ஒரு மனைவி போலவேதான் சமைப்பது, துவைப்பது என்று எல்லாமே செய்கிறேன். அவரை நன்றாக பார்த்துக்கொள்கிறேன். அவரும் என்மீது அன்பாகவே இருக்கிறார். ஆனால் சண்டை போடும்போது மட்டும், ‘’நீ என்ன என் மனைவியா? உனக்கு என்ன உரிமை இருக்கிறது? போ’ என்று கத்துவார். தீர்ப்புதான் வந்துவிட்டதே. இன்னொரு முறை அப்படிச் சொல்லட்டும். ஒரு கை பார்த்துவிடுவேன்’’ என்று சிரிக்கிறார்.

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி இந்தியா டுடேவிடம் ‘’தமிழர்களிடையே சங்ககாலம்தொட்டு இருந்த களவு மணம் தான் இது. இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். தேவையற்ர மதச்சடங்குகள் திருமணத்துக்கு தேவையில்லை என்கிற தீர்ப்பு முற்போக்கானது’’ என்கிறார்.

நம் சமூகத்தில் பெரும்பாலும் பெண்களே பாலியல்ரீதியான சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். ஆகவே இயல்பாகவே இந்தத் தீர்ப்பு ஆண்களுக்கு ஒருவித பயத்தை அளித்திருக்கிறது. பாலியல்ரீதியான சுரண்டலை ஒரு பெண் ஆணுக்கு செய்தாலும் இது பொருந்தும். ஆனால் இங்கே ஒரு கேள்வி எழுகிறது. வெறும் பாலியல் உறவை மட்டும் திருமணம் என்று கூறிவிட முடியுமா? ‘’ஆயிஷாவுக்கு இந்தத் தீர்ப்பு நியாயம் வழங்கியுள்ளது என்கிற அளவில் இந்தத் தீர்ப்பு முற்போக்கானது என்று கூறலாம். சில சமயங்களில் காதலிக்கும் ஜோடிகள் பெற்றோர் எதிர்ப்பதால், அவர்களாகவே எந்த ஆவணமும் இல்லாமல் திருமணம் செய்துகொள்கின்றனர். இப்படிப்பட்ட சமயங்களில் இந்தத் தீர்ப்பு உதவலாம். ஆனால் ஒரு திருமணத்துக்கு பாலியல் உறவை மட்டுமே அளவுகோலாகக் கொள்ள முடியுமா? அப்படியெனில், கல்லூரி மாணவர்கள் இப்போதெல்லாம் டேட்டிங் செல்கிறார்கள். பாலியல் உறவுக்கான சாத்தியங்களும் உள்ளன. அப்படியிருக்கையில் அதையும் திருமணம் என்று நாம் கணக்கிலெடுக்க முடியுமா?’’ என்கிறார் பெண்னிய செய்ற்பாட்டாளரும் வழக்கறிஞருமான கீதா ராமசேஷன். ‘’ இந்த வழக்கில் குறிப்பிட்ட இருவரின் பெயர்களும் ரேஷன் அட்டையில் உள்ளன. வேறு பல ஆவணங்களும் உள்ளன. ஆனால் இப்படி ஒரு சூழலை யோசியுங்களேன்..அதாவது பாலியல் உறவுக்கான எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால்? எனக்குத் தெரிந்து பெண் தங்களுடன் இருந்ததாக ஜோடிக்கபப்ட்ட புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் போட்டு ‘இவள் என் மனைவி’ என்று அபாண்டமாகக் கூறிய ஆண்களும் உண்டு. இப்படியான வழக்குகளை நான் நடத்தியிருக்கிறேன். அத்துடன் புகைப்படங்களையும் ஆவணங்களையும் வைத்து ஒரு பாலியல் உறவை நிரூபிக்கச் சொல்வது சிக்கலானது’’ என்கிறார்

பெண்ணுக்கு 18 வயதாகவும் ஆணுக்கு 21 வயதாகவும் இருக்கவேண்டும் என்கிறது இந்தத் தீர்பு. ஆனால் தேசிய அளவில் பாலியல் உறவுக்கான குறைந்தபட்ச வயதை 16 ஆகக் குறைப்பது குறித்த தீவிரமான விவாதங்கள் நடந்துவருகின்றன. ஒரு நீடித்த உறவுக்கான விருப்பத்தில், ஆணும் பெண்ணும் திருமணம் என்கிற பெயரில் எந்த மதச் சடங்குகளும் இல்லாமல் சேர்ந்திருப்பார்களேயானால், இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு ஒரு பரிசு. ஆனால், அவர்களே பிரிந்துவிட எண்ணினால், சட்டப்படி அவர்கள் விவாகரத்து கோரித்தான் பெறவேண்டும். ஒருவேளை அவர்கள்க்கு நீடித்த உறவுக்கான விழைவு இல்லாமல் இருந்தால் அங்கேதான் சிக்கல். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பாலியல் துணை இருக்க சாத்தியமுண்டு. எத்தனை துணைகளோ அத்தனை முறை திருமணம் செய்துகொண்டார்கள் என்று கூறமுடியுமா?

கிராமங்களில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு பெண்ணை ஓர் ஆண் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டால், அந்தப் பெண் அந்த ஆணையே திருமணம் செய்துகொள்ள நிர்பந்திக்கப்படுவது சகஜம். இந்த பார்வையே கலாசார காவலர்களின் பார்வை. அதாவது ஒரு பெண்ணின் உடல் கணவனால் மட்டுமே தீண்டப்படவேண்டுமென்கிற பொதுப்புத்தியில் உறைந்த கலாசாரம் என்கிற போர்வையிலான பழமைத்தனம்தான் இது. ‘’இந்த தீர்ப்பும் இத்தகைய பழமைத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாக நான் உணர்கிறேன். இருவர் பாலியல்ரீதியாக உறவுகொண்டால் அவர்கள் நிச்சயம் கணவன் - மனைவியாகத்தான் இருக்கவேண்டும் என்கிற பார்வை முற்போக்கானதா?’’ எனக் கேட்கிறார் ஒரு சமூக ஆர்வலர்.

‘’மதரீதியாக மணம் செய்துகொண்ட இருவருக்குள் உடல்ரீதியான உறவு இல்லையென்றால், அந்தத் திருமணமே செல்லாது’’ என்கிறது தீர்ப்பு. ‘’தீர்ப்பின் இந்தப் பகுதி சிக்கலானது’’ என்கிறார் கீதா ராமசேஷன். ‘’ஆண்மையற்றவராக ஆண் இருந்தால், அந்தத் திருமணம் செல்லாது என்கிறது இந்து சட்டம். ஆனால் உறவுக்கு மறுத்தல் என்பது வேறு’’ என்கிறார். பாலியல்ரீதியான உறவில் இல்லாத தம்பதியிரிடையே பிரச்சனை வந்து ஒருவேளை கணவன் மனைவியை அடித்தால்? குடுமப் வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி கணவன் மனைவியின் விருப்பமில்லாமல் அவளைத் தொடுவது குற்றமாகிறது. தொட்டால் குற்றம். தொடாவிட்டால் கணவன் இல்லை என்கிற நிலை சிக்கல்தான். இப்படியான உறவில் பிரச்சனைவ் வந்து ஒருவேளை கணவன் மனைவியை அடித்தால் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின்படி புகார் அளித்தால், அந்தப் புகார் செல்லுமா? திருமணமே செல்லாது என்றானபின் அது குடும்ப வன்முறைக்குள் வருமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

இந்தத் தீர்ப்பு மணமாகாத ஜோடிகளுக்கும் மணமான தம்பதியருக்கு உண்டான உரிமைகளை வழங்குகிறதா? அல்லது சட்டத்தின் முன் நிற்க விரும்பாதவர்களையும் சட்டத்தின் பெயர் சொல்லி சிறைபடுத்துகிறதா? எப்படி இருந்தாலும் திருமணத்துக்கு முந்தைய உறவு என்கிற விஷயம் பொதுத்தளத்தில் ஒருபோதும் விவாதப் பொருளாகவில்லை. இந்தத் தீர்ப்பு அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. ஆரோக்கியமான விவாதங்கள், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களுலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இது மாறிவரும் மக்கள் மனநிலையைக் குறிக்கிறது. கலாசாரப் போர்வையின் கீழ் தங்களை முடக்கிக்கொண்டுவிட்ட ஒரு சமூகத்தை இது குறித்துப் பேச வைத்ததே இந்தத் தீர்ப்பின் வெற்றி. சமபாலின ஈர்ப்பை சட்டபூர்வமாக்கியதன் மூலம் இந்தியாவின் முகம் சற்றே மாறியது. இப்போது நீதிமன்றம் திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு தவறில்லை என்று கூறியிருக்கிறது. பழம்பெருமை பேசும் இந்தியாவில் இது நிச்சயமாக ஒரு முற்போக்கான திருப்புமுனைதான். மக்களின் மனங்களை அசைத்துப் பார்த்ததன் மூலம் இந்தத் தீர்ப்பு எல்லா கேள்விகள், விமர்சனங்களையும் மீறி முற்போக்கானதாகவே இருக்கிறது.

(இந்தியா டுடே இதழில் எழுதிய கட்டுரை)

No comments:

Post a Comment