Sunday, January 30, 2011

தலித் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?


தேர்தல் நெருக்கத்தில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த வேளையில் புதிதாய் எழுந்துள்ள ஒரு சர்ச்சை கவனத்திற்குள்ளாகி இருக்கிறது. தலித் மக்களின் திட்டங்களுக்கான நிதியை வேறு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு திருப்பி விட்ட்து என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த அக்டோபர் நவம்பர் மாதங்களில் சென்னை நகரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வாழும் 31 பகுதிகளில் கள ஆய்வு நடத்தியது. “சென்னை நகரின் விரிவாக்கங்கள் எந்த வகையிலும் தலித் மக்களை எட்டவில்லை. தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 19 சதவீதம் தலித் மக்கள் ஆனால், சென்னையில் தலித்மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மக்கள்த்தொகை கணக்கெடுப்பிலும் குறைந்துகொண்டேயிருக்கிறது. சென்னைநகரின் உள்கட்டமைப்பு பணிகளுக்காக சென்னையிலிருந்து தலித் மக்கள் வெளியேற்றப்படுவதைத்தான் இப்புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மீதமுள்ளவர்கள் கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு போன்றவற்றின் கரைகளில்தான் பெரும்பாலான தலித் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கென்று குடிநீர், கழிப்பறை, சாக்க்டை போன்ற அடிப்படை வசதிகள் கிடையாது. தலித் மக்களுக்கென்று கடந்த 38 ஆண்டுகளில் 72000 வீடுகள் மட்டுமே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டித்தரப்பட்டுள்ளன. 2003ல் “குடிசையில்லா சென்னை” என்கிற இலக்கை தமிழ்நாடு அரசு அறிவித்த்து. ஆனால் தலித் மக்களுக்கு வீடுகள் கட்டித்தராமல் அவர்களை மாநகர எல்லையிலிருந்து வெளியேற்றுவதே நோக்கமாக இருக்கிறது. இவர்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தில் ரூ.3,821 கோடி நிதி செலவிடப்பட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். அந்த நிதியிலிருந்து இவர்களது வீடுகள் ஏன் புதுப்பிக்கப்படவில்லை?  அந்த நிதி வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.” என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றம்சாட்டுகிறது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின்படி ஒவ்வொரு நூறு ரூபாயிலும் 19 ரூபாய் தலித் மக்களுக்கென செலவிடப்படுவதாக கணக்கிருக்கிறது. இதுவும் கூட 31 ஆண்டு கால தலித் மக்களின் போராட்டத்திற்குப் பிறகே சாத்தியமானது.  ஆனால் நடைமுறையில் இவை இல்லை.
நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்ப்டும் நிதி தலித் மக்களுக்குச் சென்று சேர்வதை உத்தரவாதம் செய்யும் வகையில் 1979ல் ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் மத்திய அரசின் சிறப்புக்கூறு திட்டம் (ஸ்பெஷல் காம்பொன்ண்ட் ப்ளான்) உருவாக்கப்பட்டது. பின்னர் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதன் பெயர் ஷெடியூல்டு சாதியினருக்கான சப்-பிளான் (Scheduled Caste Sub-plan) என்று மாற்றப்பட்டது. இத்திட்டம் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கமே, ஒரு நூறு பேர் கொண்ட கிராமத்தில் இருபது தலித் மக்கள் இருந்தால் அக்கிராமத்திற்கு செலவிடப்படும் தொகையில் ஒவ்வொரு நூறு ரூபாயிலும் இருபது ரூபாய் தலித் மக்களுக்குச் சென்று சேரவேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்துவதே. ஆகவே தமிழ்நாட்டில் 19% சதவிகித தலித் மக்கள் இருப்பதால் செலவு செய்யப்படும் ஒவ்வொரு நூறு ரூபாயிலும் பத்தொன்பது ரூபாய் தலித் மக்களுக்குச் சென்று சேர வேண்டும்.

மத்திய அரசில் 55 செக்டார்களும், 105 துறைகளும் உள்ளன. அதுபோலவே தமிழ்நாடு அரசின்கீழ் 18 செக்டார்களும், 48 துறைகளும் உள்ளன. ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கையில் மத்திய மனித வள மேம்பாட்டு, மின்சாரம், போக்குவரத்து, பெட்ரோலியம், கிராமப்புற மேம்பாடு போன்ற துறைகள் பாதிக்கும் மேற்பட்ட நிதியை எடுத்துக்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, 2010-11 பட்ஜெட்டின் மொத்த்த் தொகை 5.25 லட்சம் கோடி ரூபாய் இதில் 2.75 லட்சம் கோடி ரூபாயை மேற்சொன்ன துறைகளே எடுத்துக்கொண்டன.

தமிழ்நாட்டிலும் மின்சாரம், குடிநீர், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை ஆகிய ஐந்து அமைச்சகங்களே ஐம்பது சதவிகித நிதியைப் பெறுகின்றன. இருபதாயிரம் கோடி ரூபாய் தமிழக பட்ஜெட்டில் 11000 கோடி ரூபாயை இத்துறைகளே எடுத்துக்கொண்டன. மத்தியிலும், தமிழ்நாட்டிலும் இந்த்த் துறைகளே தலித் மக்கள் வாழும் பகுதிகளுக்கான வளர்ச்சித்திட்டங்களுக்குப் பொறுப்பேற்பவை.  தலித் மக்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்படும் தொகை (divisible expenditure), பொது நிதியிலிருந்தும் பயன் பெறும் தலித்மக்களுக்கான தொகை (Indivisible expenditure) என்று தொகையை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்.

தமிழ்நாட்டிலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறையே தலித் மக்களுக்கான நலத்திட்டஙக்ளை செயல்படுத்தும் பொறுப்பிலிருக்கிறது. ஆகவே மற்ற துறைகள் எடுத்துக்கொள்ளும் நிதி தலித் மக்கள் பகுதிகளுக்கும் சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு இத்துறைக்கு உண்டு. ஆனால் அப்படிப்பட்ட கண்காணிப்பு எதுவும் நடைபெறுவதில்லை.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீட்டு வசதித்திட்டம் ஆகியவை பொது நிதியிலிருந்துதான் நடைமுறைப்ப்டுத்தப்படுகின்றன. இதுபோன்ற பொதுநிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்களையெல்லம் தலித் மக்களுக்கான நிதியான ஷெடியூல்டு சாதியினருக்கான சப்-பிளானின் கீழ் வருவதாக்க் காட்டப்படவிருக்கின்றன. ஆனால் இந்த்த் திட்ட்த்தால் பயன்பெறுவது தலித் மக்கள் மட்டுமல்ல. எனவே தலித் மக்களுக்கான நிதியை மற்றவர் பயன்படுத்த அனுமதிப்பது சரியல்ல. விதவை பென்ஷன், வேலையற்றோருக்கான உதவித்தொகை,மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் திருமண உதவித்திட்டம் போன்றவையும்  ஷெடியூல்டு சாதியினருக்கான சப்-பிளானின் கீழ் கணக்கு காட்டப்ப்டுகின்றது. இத்திட்டங்களின் கீழ் பயன்பெறுபவர் அனைவரும் தலித் மக்கள் அல்ல. தலித் அல்லாதோரும் இத்திட்டங்களினால் பயன்பெறும்போது இப்படி செய்வது சரியா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.

தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசியோ  ”மற்ற அரசாங்கங்களை விட தி.மு.க. அரசு தலித் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துகிறது. அவர்களுடைய நிதி வேறெதற்கும் பயன்படுத்தப்படவில்லை” என்று நாளிதழ்களுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
கரகாட்டக்காரன் பட்த்தில் வரும் வாழைப்பழ காமெடி போல, தலித் மக்களுக்கான திட்டங்கள் எங்கே என்று கேட்டாலும் இவைதான் என்றும், பொதுத்திட்டங்களும் இவைதானென்று தமிழ்நாடு அரசு சொல்கிறது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி. சம்பத் தலித்துகளுக்கான நிதியை பயன்படுத்த அரசுக்கு சில ஆலோசனைகளை சொல்கிறார்:

"அரசு கட்டிக்கொடுத்த ஆதிதிராவிடர் குடியிருப்புகளெல்லாம் மிக மிகப் பழசாகி எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பழுது பார்க்கலாம் அரசு. அல்லது புது வீடுகள் கட்டிக்கொடுக்கலாம். புதுச்சேரியில் தலித் மாணவர்க்ளின் மேற்படிப்பிற்கான செலவுகளை அம்மாநில அரசே ஏற்றுக்கொள்கிறது. அத்திட்டத்தை இங்கும் நடைமுறைப்படுத்தலாம். இதன்மூலம் முதல் தலைமுறை மாணவர்க்ளுக்கு பயன்பெறும் வித்த்தில் அத்தொகையை செலவு செய்யலாம்.

ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதிகள் எல்லாம் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. சென்னையில் உள்ள எம்.சி.ராஜா விடுதிக்குச் சென்று பார்த்தபோது அங்கு கண்ட காட்சிகள் மிக்க்கொடுமையானதாக இருந்த்து. ஒரு அரசு மருத்துவமனையின் பிணக்கிடங்கு போலிருக்கிறது. இதை நான் மிகையாகச் சொல்லவில்லை. யார் வேண்டுமானாலும் போய்ப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். மாணவர்களுக்கு குளியலறை கூட இல்லை. வெளியே பொதுஇட்த்தில் ஆளுக்கொரு புறத்தில் நின்று குளிக்கிறார்கள். 8 பேர் மட்டுமே தங்க முடிந்த அறையில் பதினெட்டு பேர் இருபது பேர் என்று தங்குகிறார்கள். இந்த அடிப்படை வசதிகளை எல்லாம் உருவாக்கலாம்.

தலித் குடியிருப்புகளுக்கு வேண்டிய சாக்கடைக் குழாய்கள் அமைத்தல், சாலைகள் அமைத்தல் என்று அடிப்படை வ்சதிகளை அமைக்கலாம். தலித் பகுதிகளில் இரவு பாடசாலைகள் அமைக்கலாம்.
மலம் அள்ளும் தொழிலில் இன்னும் மனிதர்கள் ஈடுப்ட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள். ஒரு தொண்டு நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிவரத்தின்படி ஐம்பதாயிரம் பேர் தமிழ்நாட்டில் இன்னும் இந்த பணியைச் செய்கின்றனர். ரயில்வே டிராக்குகளில், பொதுக்கழிப்பிடங்களில், நிறைய மக்கள் கூடும் ஊர்த்திருவிழாக்களில்  என்று எத்தனையோ இடங்களில் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம் தொடர்கிறது. இதனை ஒழிப்பதற்கு திட்டங்கள் தீட்டலாம். அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கலாம். கைரிக்‌ஷா ஒழிக்கப்பட்ட்து போல இதையும் ஒழிக்கலாம்.

அரசு வேலையில் துப்புரவு பணியாளர்களாக தலித்தல்லாதவர்களும் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இந்த வேலை செய்வதில்லை. அதிகாரிகளும் இவர்களுக்கு ஆபீஸ் அட்டெண்டர், எல்க்ட்ரிஷியன், ஓட்டுனர் என்று அவர்களுக்குத் தெரிந்த வேறு வேலைகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவுட் சோர்ஸிங் செய்வது போல இவர்களிடத்தில் ஒரு தலித்தை அழைத்து வந்து கொஞ்சம் பணம் கொடுத்து துப்புரவு பணியை செய்ய வைத்து ஊதியத்தை மட்டும் இவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். இப்படியான அநியாயங்களை களைய நடவடிக்கை எடுக்கலாம்." என்றார் பி.சம்பத்

 சமூக சமத்துவ மக்கள் படையின் நிறுவன தலைவர் சிவகாமியிடம் பேசியபோது
”அரசு 3800 கோடி ரூபாய் தலித் மக்களுக்கென்று செலவிட்டிருப்பதாக்க் கூறுகிறது. ஆனால் எந்தெந்த வகையில் அவற்றை செலவு செய்தது என்கிற விவரம் தெரிவிக்கப்படவில்லை. மின்சார இணைப்புகள், சாலைகள் அமைப்பது போன்ற உள்கட்டுமானப் பணிகள் தலித் மக்களின் நலனையும் உள்ளிட்டவைதான் என்றால் மின்சாரத்தை பயன்படுத்தும்படியான வீடுகள் முதலில் தலித்துகளுக்கு இருக்கிறதா என்பது ஒரு கேள்வி. அடுத்து இவர்கள் போடும் நால்வழிச்சாலை போன்றவற்றால் தலித் மக்கள பயன்படுத்தும் நிலையில் இருக்கிறார்களா என்பது இன்னொரு கேள்வி. விவசாயத்திற்கு தேவைப்படும் நீர்ப்பாசனத்திற்கு செலவு செய்த்தாக எடுத்துக்கொண்டால், எத்தனை தலித்துகள் விவசாய நிலம் வைத்திருக்கிறார்கள்? அதற்காக செலவிடப்படும் நிதி எப்படி தலித் மக்களை சென்றடைந்த்தாகச் சொல்ல முடியும்? அப்படியிருக்கையில் அரசின் இந்த அறிவிப்பு ஒரு மோசடி என்றே கருதவேண்டியிருக்கிறது. எந்தெந்த திட்டங்களுக்கு நிதி போனது, அந்த்த் திட்டங்கள் தலித்துகளுக்கு எந்த வகையில் நன்மை செய்த்து, இந்த விஷயங்கள் ஒழுங்காக நடக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க என்ன வழிமுறை – இந்த மூன்று கேள்விகளுக்கும் விடையில்லாதபோது தலித் மக்களின் நிதி மடைமாற்றப்பட்டதாகவே அர்த்தம்” என்றார்.

இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தலித் மக்களுக்கான நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே அதிகமிருக்கின்றன. இந்தப் பெருமையைப் பெற்றிருக்கும் தமிழ்நாடு அரசு இந்தக் களங்கத்தைப் போக்கி தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுக்க வேண்டும் என்பதே இப்போதைய கோரிக்கையாக இருக்கிறது.

நன்றி: புதிய தலைமுறை

1 comment:

  1. மிக முக்கியமான பதிவு. நன்றி கவின்மலர்

    ReplyDelete