Tuesday, July 05, 2011

சமச்சீர் கல்விதான் எங்களுக்கு வேண்டும்!

சமச்சீர் கல்வி - தமிழ்நாட்டின் பெரும் குழப்பம்! உச்ச நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைக்கச் சொன்னால் அதில் கல்விநிறுவனங்களை நடத்தும் முதலாளிகளையெல்லாம் கல்வியாளர்கள் என்கிற பெயரில் உறுப்பினர்களாக போட்டு தமிழக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவையே கேலிக்கூத்தாக்கியது. மூன்று வாரம் கழித்து இறுதித் தீர்ப்பு...அது வரை பிள்ளைகள் பள்ளியில் என்னதான் செய்கிறார்கள்?

மாணவர்களுக்கு என்னென்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அரசு இந்த மூன்று வாரத்திற்கு மட்டும் பாடத்திட்டம் அனுப்பியிருக்கிறது. செயல்வழிகற்றல் மூலம் பொதுவான பாடங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.  சில பள்ளிகளுக்குச் சென்று பார்த்தபோது ஆசிரியர்கள் நாட்களை வீணாக்காமல் மாணவர்களுக்கு பொதுவான பாடங்களை நடத்திக்கொண்டிருந்தனர். தமிழ் மற்றும் ஆங்கிலப்பாடங்களில் பொது இலக்கணம், அடிப்படைக் கணக்கு, சமூக அறிவியலில் வரைபடங்களை வைத்து பாடங்கள், அறிவியலில் சில சின்னச் சின்ன பரிசோதனைகள் என்று சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தனர். 

பத்தாம் வகுப்பில் என்ன நடக்கிறதென்று எட்டிப் பார்த்தபோது, “ஹேப்பி பர்த்டே டூ யூ” பாடிக்கொண்டிருந்தார்கள். மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அந்தத் தீயில் ஒரு காகிதத்தைக் காட்டி அது கரிய நிறமாக மாறி எரிவதைக் காட்டிவிட்டு, கார்பன் உள்ள பொருட்களெல்லாம் எரியும் போது கரிய நிறத்தில் மாறும் என்கிற சின்ன பரிசோதனையை செய்துகாட்டிவிட்டு மெழுகுவர்த்தியை அணைத்தபோதுதான் இந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாட்டு. ஆசிரியை முகம் கொள்ளா சிரிப்போடு அதே பரிசோதனையை மாணவர்களையும் செய்யச் சொன்னார். ஆர்வத்தோடு வந்து ஒவ்வொருவராக செய்து பார்த்தார்கள். 

அடுத்த பரிசோதனையாக மாணவர்கள் வளைவாக ஒரு கோடு வரைய வேண்டும். அதன்பின் ஆளுக்கு ஒரு நூல் கொடுக்கப்பட்டது. அந்த நூலை வைத்து அந்த வளவை அளந்து அதன்பின் ஸ்கேலில் நூலை அளந்து வளைவின் நீளத்தைச் சொல்லவேண்டும். இப்படி சின்னச் சின்னதாக நிறைய பரிசோதனைகள், விளையாட்டுக்கள் என்று நேரம் செல்கிறது. ”என்ன செய்ய வேண்டுமென்பதற்கான சிலபஸ் மட்டும்தான் அரசு தந்தது. இந்த நூல், மெழுகுவர்த்தி வகையறாக்களையெல்லாம் நாங்களே வாங்கிக்கொள்ள வேண்டும்.” என்றனர் ஆசிரியர்கள். 

மாணவர்களிடம் “உங்களுக்கு சமச்சீர் கல்வி வேண்டுமா? வேண்டாமா?” என்று கேட்டபோது கோரஸாக “சமச்சீர் கல்விதான் வேண்டும்” என்று பதில் வந்தது. காரணம்? 
“அதுதான் ஈஸியா இருக்கும்!”  
“ஏழைங்க, பணக்காரங்க எல்லாரும் ஒரே மாதிரி படிப்போமில்லையா?”
“எங்க வீட்ல அதுதான் நல்லதுன்னு சொன்னாங்க”
“எங்க சார் அதுதான் நல்ல சிலபஸ்னு சொன்னார்”
“ஒண்ணாவது ஆறாவது புத்தகமெல்லாம் நல்லாருக்கு. ஈஸியா..! அதுமாதிரிதான் எங்களுக்கும் இருக்கும்னு நினைக்கிறேன். அதனால் சமச்சீர் கல்விதான் வேணும்”

- இப்படி விதவிதமான பதில்கள் கிடைத்தன. சரி. ஒருவேளை சமச்சீர் கல்வி கிடையாது என்ற நிலை வந்து விட்டால் இந்தப் பிள்ளைகளின் கதி? 

”நான் ஸ்கூலுக்கே வரமாட்டேன். பழைய சிலபஸ் கஷ்டம்” என்றாள் ஒரு மாணவி.
“அதெல்லாம் ஒத்துக்க மாட்டோம். சமச்சீர் கல்விதான் வேணும்னு கேட்போம்” என்று ஒரு மாணவன் சொல்ல, “அடேய்! நீ கேக்குறதுக்குள்ள முழுபரீட்சை வந்துடும்டா” என்று இன்னொருவன் சொல்ல “ஆமாம்ல?” என்று யோசிக்கிறான் மாணவன். “வேற வழியில்ல! படிச்சுத்தான் ஆகணும். பப்ளிக் எக்ஸாம் ஆச்சே?” என்கிறார்கள் சோகத்தோடு. கண்களில் பயமும் கலக்கமும் தெரிகிறது. இந்த மூன்று வாரம் பாடமில்லாமல் நிறைய செயல்முறை விளக்கங்கள் மூலம் கற்றுக்கொளவது மகிழ்ச்சியாக இருந்தாலும், மாணவர்களுக்கு மூன்று வாரத்துக்குப் பின் பாடத்திட்டத்தை விரைந்து முடிக்கவேண்டி வார இறுதி நாட்களிலும் பள்ளிக்கூடம் வைத்து தங்களை கொல்வார்களோ என்கிற பீதி நிலவுவது நன்றாகவே தெரிந்தது.  அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்படுவது பிஞ்சுக் குழந்தைகளாக இருப்பதைப் பார்க்க வேதனையும் கோபமுமே மிஞ்சுகிறது. இப்படி ஒரு பயத்தையும் பீதியையும் மாணவர்களிடையே உருவாக்கி அவர்களது மனநிம்மதியைக் கெடுத்ததற்கு எதைச் சொல்லி மன்னிப்பு கேட்கப்போகிறது தமிழக அரசு?

சில பெற்றோர், எப்படியும் சமச்சீர் கல்வி வராது என்கிற நம்பிக்கையில் பிள்ளைகளுக்கு பழைய பாடத்திட்டத்தின் பாடநூல்களை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். பிள்ளைகளை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்கும் சில ஆசிரியர்களும் கூட சமச்சீர் கல்வியை எதிர்ப்பதை ஆசிரியர்கள் வேதனையோடு சுட்டிக்காட்டுகின்றனர். 

கருப்பு மார்க்கர் பேனா, பிளேடு சகிதம் பள்ளிகளுக்கு வந்து பாடப்புத்தகத்தில் உள்ள சில பக்கங்களை கிழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது நிறைய ஆசிரியர்களை கொதிப்படைய செய்திருக்கிறது. அய்யன் திருவள்ளுவரின் படத்தின் மேல் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதை ஆசிரியர்கள் வேதனையோடு தெரிவித்தனர். ஆட்சியாளர்களின் விருப்பப்படியெல்லாம் ஆசிரியர்கள் தங்கள் பணிக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு வேலையில் ஈடுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்? பாடம் கற்றுக்கொடுப்பது தானே ஆசிரியர்களின் பணி? அ.தி.மு.க. அரசு விரும்பாததால், குறிப்பாகச் சொல்லப்போனால் முதல்வர் ஜெயலலிதா விரும்பாததால், கிழிப்பதற்கும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய நேரத்தையும் உழைப்பையும் வீண் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்பது பல ஆசிரியர்களின் கேள்வியாக இருக்கிறது. என்ன பதில் வைத்திருக்கிறது அரசு?

இதற்கிடையில் பழைய பாடத்திட்டத்தின் பாடங்களை அச்சடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் பார்க்கையில் சமச்சீர் கல்விக்கு முழுக்கு போடும் வகையிலேயே காரியங்கள் நடபப்தை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. கல்வியாளர்கள் இல்லாத ஒரு சமச்சீர் கல்விக்குழுவை உருவாக்கியிருக்கிறது அரசு. ம.தி.மு.க., பா.ம.க, சி.பி.ஐ(எம்), தமிழ்தேசப் பொதுவுடமைக் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் போன்றவை இந்த குழுவில் நியமிக்கப்பட்ட ‘கல்வியாளர்கள்’ குறித்த தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்திய மாணவர் சங்கத்தினர் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கைதானார்கள். இப்படி பலரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள இந்த சமச்சீர் கல்விக்குழுதான் ‘ஆராய்ந்து’ ஒரு அறிக்கையை தயார் செய்து கொடுக்கப் போகிறது. அதன்பின்னர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும். இந்த அறிக்கை எப்படி இருக்கப்போகிறது என்பதை குழுவில் உள்ளவர்களை வைத்தே முடிவு செய்து விடலாம். உண்மையான கல்வியாளர்கள் உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதை அவர்களுடன் உரையாடியபோது உணரமுடிந்தது. “பள்ளி முதலாளிகளெல்லாம் கல்வியாளர்கள் என்றால் இனி கல்வியாளர்கள் எல்லாம் தங்களை கல்வியாளர்கள் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும்.” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு. 

பொதுவாக ஒரு வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு வந்தபின் தான் குற்றவாளி யார் என்பதும் என்ன தண்டனை என்பதும் தெரிய வரும். ஆனால் இந்த சமச்சீர் கல்வி வழக்கு விசித்திரமானது. தீர்ப்புக்கு முன்னரே குற்றவாளியாய் நிற்கிறது தமிழக அரசு. 

ஆனால் தண்டனை மட்டும் மாணவர்களுக்கு! 

(நன்றி : ஆனந்த விகடன்)

2 comments:

  1. /தீர்ப்புக்கு முன்னரே குற்றவாளியாய் நிற்கிறது தமிழக அரசு.

    ஆனால் தண்டனை மட்டும் மாணவர்களுக்கு! //

    இந்த வரிகளை விகடனில் படித்த பொழுதே மனசு என்னவோ செய்தது.

    ReplyDelete
  2. thandanai maanavarkalukku enra varikalai aasiriyarkalaana nangkal maarri viduvom kavlaiyai vidungkal... sila unmaikal ulvaangki kolla arasiyal vaathikal marukkiraarkal..

    ReplyDelete