Friday, July 22, 2011

மீண்டும் தேர்தல் வரும்!


மிழ்நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த சமச்சீர்க் கல்வி வழக்குத் தீர்ப்பு ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் வந்தது. ஜூலை 18 அன்று காலையில் இருந்தே தீர்ப்பு அளிக்கப்படவிருந்த உயர் நீதிமன்ற அறையில் நிற்க இடம் இல்லாத அளவுக்குக் கூட்டம். வழக்கறிஞர்களும், பொதுமக்களும், பத்திரிகையாளர்களுமாக நிரம்பியது ஹால். நீதிபதிகள் இக்பால், சிவஞானம் அடங்கிய பெஞ்ச்சின் தீர்ப்பு விவரம்...  

 

 தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சமச்சீர்க் கல்வி சட்டத் திருத்தம் செல்லாது!
 உடனடியாக இந்த ஆண்டே 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமச்சீர்க் கல்விக்கான பொதுப் பாடத் திட்டம் நடைமுறைக்கு வர வேண்டும்!
 ஜூலை 22-க்குள் பொதுப் பாட நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்!
 பழைய பாடத்திட்ட நூல்களை மாணவர்களுக்கு வழங்கத் தடை!
 வேறு ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டும் எனில், ஒரு குழுவை அமைத்து மூன்று மாதங்களுக்குள் அந்தத் திருத்தங்களைத் துணைப் பாடத்திட்டமாக பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
 அரசு நியமித்த குழுவின் அறிக்கை நிராகரிக்கப்படுகிறது.

ஒரு கோடியே 38 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். 22-ம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை வழங்குவது சாத்தியம் இல்லை என்றும், 28-ம் தேதி வரை கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். தமிழக அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது.

தீர்ப்புக்கு முதல் நாள் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்வில், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்வதாக இருந்தது.  தி.மு.க. வழக்கறிஞர்கள் சிலர் அவரது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால், முதல்வர் வரவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், சமச்சீர் வழக்கு தீர்ப்பின் திசை எப்படி இருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையிலேயே அவர் தனது வருகையைத் தவிர்த்தார் என்று ஒரு தகவல்.

சமச்சீர்க் கல்விக்கான பொது மேடை என்கிற அமைப்பை ஏற்படுத்தி, பல ஆண்டுகளாகப் போராடி வரும் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ''இது மிகத் தெளிவான தீர்ப்பு. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டியே சமச்சீர்க் கல்வி வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எந்தத் தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல், எல்லா மாணவர்களும் படிக்க இந்தத் தீர்ப்பு வழிவகை செய்யும்!'' என்றார்.

தீர்ப்பு வெளியானதும், 'அப்பாடா... ஒரு வழியாக நமக்கு ஒரு விடிவுகாலம் பிறந்ததே!’ என்ற மகிழ்ச்சி  ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும். கூடவே, 'மறுபடியும் அப்பீல் பண்ணாம இருக்கணுமே அரசாங்கம்!’ என்று கவலை. அதற்கேற்றாற்போல சிறிது நேரத்திலேயே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது என்ற தகவல் வந்து, மீண்டும் பதற்றப் பரபரப்பை உண்டாக்கியது.

கல்வியாளர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள்?

பேராசிரியர் வசந்திதேவி, ''அரசு நல்லெண்ணத்தோடு இந்த விஷயத்தை இதோடு விட்டுவிட்டால் பரவாயில்லை. ஏற்கெனவே, மாணவர்களுக்கு இரண்டு மாதங்கள் வரை கால விரயம் ஏற்பட்டு இருப்பதை உணர்ந்து, அரசு செயல்பட வேண்டும்.
அரசுக்கு மூன்று மாத காலம் அவகாசம் அளித்து இருக்கிறது உயர் நீதிமன்றம். எவை எல்லாம் வேண்டாமோ அவற்றை நீக்கிவிட வேண்டியதுதானே?'' என்கிறார்.

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால், ''இது குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு உண்மையான அக்கறையோடு வழங்கப்பட்ட தீர்ப்பு. இந்தத் தீர்ப்புக்குப் பின்னால் 40 ஆண்டு காலப் போராட்ட வரலாறு இருக்கிறது. இது ஏதோ இன்று நேற்று எழுந்த கோரிக்கை அல்ல. இது மக்களின் கோரிக்கை. இதை எந்தத் தனி மனிதருக்குமானது என்று கருதுவது தவறு. இது மக்களுடைய திட்டம். மக்களுக்குக் கிடைத்த வெற்றி. அரசு இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதுதான் நல்ல மரபாக இருக்கும்!'' என்கிறார்.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுமானால், தங்களைக் கேட்காமல் தீர்ப்பு வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யவிருப்பதாக சமச்சீர்க் கல்வி வழக்கைத் தொடர்ந்த மனுதாரர்கள் கூறி இருக்கின்றனர்.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், மாணவர்கள் கதி அதோகதிதான்! மீண்டும் வழக்கு, மீண்டும் தடை, மீண்டும் பிரச்னை, மீண்டும்... மீண்டும் என்று தொடர்ந்தால்...
ஐந்து ஆண்டுகளில் மீண்டும் தேர்தல் வரும்!

No comments:

Post a Comment