Thursday, July 26, 2012

அழிபடும் தடயங்கள்


நீயற்ற பொழுதுகள்
வெறுமையாய் கழிகின்றன
என் ஏக்கத்தின்
தீராத பெருமூச்சு
புயலாகிச் சீறுகிறது கடற்பரப்பில்
பெருமூச்சோ சிறுமூச்சோ
என் சுவாசக் காற்றல்லவா அது
ஆனந்தமாய் உள்ளிழுத்துக்கொள்
தெறிக்கும் நீர்த்திவலைகளில்
என் தொடுகையை உணர்வாயா அன்பே
என் கண்ணீர் கரிக்கும உப்புநீரை
சுவைத்துப் பார்
பாதம் தொடும் அலைகளில்
முத்தங்களை அனுப்புகிறேன்
பெற்றுக்கொண்டதுபோக
மிச்சமிருக்கும் முத்தங்களால்
காதலர்களின் கரையோர காலடித்தடங்களை அழிக்கிறேன்
நாம் கைகோர்த்து நடக்கும் நாள்வரை
காதலரின் தடயங்களை அழித்துக்கொண்டேயிருப்பேன்
அவர்களிடத்தில் இரக்கம் கொள்ளாதே
கவனம் அன்பே 
என்றேனும்
காதலர்கள் வந்துபோனதன்
அடையாளமாய் 
அழிபடாத காலடித்தடங்கள்
தென்படக்கூடும்
அன்றைக்கு
நான் மட்டும் எங்கோ
கரை ஒதுங்கி இருப்பேன்



1 comment:

  1. கடலை தூதனுப்புகிற உங்கள் வார்த்தைகளில் அலைகளின் பேரிரைச்சலை தாண்டிக்கொண்டு கேட்கிறது பிரிவின் மௌனச் சத்தம்.

    "காதலர்களின் கரையோர காலடித்தடங்களை அழிக்கிறேன்
    நாம் கைகோர்த்து நடக்கும் நாள்வரை
    காதலரின் தடயங்களை அழித்துக்கொண்டேயிருப்பேன்"

    இந்த வரிகளில் இருக்கிற நியாயத்தை புரிந்துகொள்ள முடியாமலிருப்பினும் அதிலிருக்கும் வலியையும்..பிரிவு தரும் விரக்தியையும்..புரிந்து கொள்ள முடிகிறது.


    "அன்றைக்கு
    நான் மட்டும் எங்கோ
    கரை ஒதுங்கி இருப்பேன்”
    இந்த வரிகள் தருகிற அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. வேண்டா.......ம்.

    "அன்றைக்கு
    நாம் ஏதோவோர் கடற்கரையில்
    கைகோர்த்து நடந்துகொண்டிருப்போம்”
    என்று எழுதவேண்டும் உங்கள் விரல்கள்.

    நன்றி

    ReplyDelete