Tuesday, December 24, 2013

விதிகளுள் அடங்குமா காதல்?

"எல்லோரும் நினைப்பதுபோல என் உடல் பெண் தன்மையுடன் இல்லை. ஆண் உடல்தான். ஆனால் பெண்கள்பால் ஈர்ப்பில்லை. ஆண்களின்பால் ஈர்க்கப்படுகிறேன். அவ்வளவுதான்” என்கிறார் 38 வயதாகும் விநோத் பிலிப். 

”கல்லூரி காலத்தில் என் தோழி ஒருத்தி தன் சமபாலின ஈர்ப்பு குறித்து வெளியே சொல்ல முடியாமல் தன் கேர்ள் பிரண்ட்டுடன் தான் வெளியே சென்றதை பாய் பிரண்டுடன் சென்றதாக மாற்றி எங்களிடம் சொல்வாள்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த லெஸ்பியன் ஒருவர். இப்படித்தான் அவர்களை வைத்திருக்கிறது சமூகம். ஏற்கனவே அவர்களை வித்தியாசமானவர்களாக பார்க்கும் போக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் நிலைமையை மோசமாக்கியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை 7,000 பேருக்கு மேல் சமபாலின ஈர்ப்பு கொண்டவர்கள் உள்ளதாக அவர்கள் டிசம்பர் 15 அன்று சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பு அவர்களை வெகுண்டெழச் செய்திருக்கிறது. சமபாலின ஈர்ப்பு என்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

இவை ஒரு பக்கமிருந்தாலும் இத்தீர்ப்பு சென்னை மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளில் வாழும் சமபாலின ஈர்ப்பு கொண்டவர்களை அச்சம்கொள்ள வைத்திருக்கிறது. “முன்பெல்லாம் வாரத்துக்கு ஐம்பது அழைப்புகள்வரை கவுன்சிலிங் மையத்துக்கு வரும். தீர்ப்புக்குப் பின் இரண்டு மூன்று அழைப்புகளாக குறைந்திருக்கின்றன. நிலவும் அச்சத்தையே இது காட்டுகிறது” என்கிறார் சமபாலின ஈர்ப்புடைய ஆண்களுக்கான சென்னை தோஸ்த் அமைப்பைச் சேர்ந்த விக்ராந்த் பிரசன்னா. சென்ற ஆண்டு சமூக ஊடகங்களில் பலரை தொடர்புகொண்டு அவர்களை தனியே வரச்செய்து படங்கள் எடுத்து அதை வைத்து அவர்களை மிரட்டுவது தொடர்பான புகார்கள் பல வந்ததாகவும் இப்படிப்பட்ட பிளாக் மெயில்கள் இனி அதிகரிக்கும் என்கிறார் விக்ராந்த். கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தங்களின் பாலியல் ஈர்ப்பை அறிந்துகொண்ட சக மாணவர்கள் தங்களை தவறாக பயன்படுத்துவதை புகாராக சொல்பவர்கள் உண்டு. இனி அப்படிப்பட்ட புகார்களை வெளிப்படையாக தர யாரும் முன்வரமாட்டார்கள்என்று பல விளைவுகளை அடுக்குகிறார் விக்ராந்த்.

இத்தீர்ப்பு மூலம் விவாகரத்துகள் பெருக வாய்ப்புண்டு. ஏனெனில் தண்டனைக்குரிய குற்றத்தில் ஈடுபட விரும்பாமல் தங்கள் இயற்கைக்கு மாறாக ஒருவரை மணந்துகொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக விவாகரத்துகள் அதிகமாகக்கூடும். அத்துடன் தங்கள் பிள்ளை சமபாலின ஈர்ப்புடைய பிள்ளை தனக்கிருக்கிறது என்பதையே அவமானமான நினைக்கும் பெற்றோர் இப்போது அவர்களை சட்டப்படியான குற்றவாளியாகப் பார்க்கத் தொடங்குவதால் அவர்கள் மீதான வன்முறை அதிகரிக்கும். குறிப்பாக லெஸ்பியன் பெண்களுக்கு இதில் பிரச்சனைகள் அதிகம். “திருமண வாழ்வில் பெண்மீது வன்முறை செலுத்தும் ஆணுக்கு எதிராக குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் புகார் அளித்தால், கணவன் மிக எளிதாக அவளை லெஸ்பியன் என்று சொல்லி குற்றவாளியாக்கி தான் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இது பெற்றோருக்கும் பொருந்தும். எஸ்.சி/எஸ்.டி. சட்டம், சிறுபான்மையினருக்கான சட்டங்கள் இப்படி எல்லா சட்டத்தின்படியும் புகார் தந்தால் எளிதாக இப்படியொரு குற்றச்சாட்டைச் சொல்லி எதிர்புகார் தரலாம். மேலும் காவல்துறை இதைவைத்து எப்படிவேண்டுமானாலும் பணம் பார்க்கும்” என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளரான அனுஷா. 

சென்னையில் இச்சமூகத்தின் நிகழ்வுகளுக்கு பெரிதாக கார்ப்பரேட் நிறுவனங்கள் விளம்பரதாரராக இருப்பதில்லை. ஏனெனில் இங்குள்ள இச்சமூகத்தினர் அதை விரும்பவில்லை என்கிறார் அனுஷா. ஆனால் பல பன்னாட்டு நிறுவனங்களில் ஏராளமான சமபாலீர்ப்பு கொண்டவர்கள் பணியாற்றுகிறார்கள். அத்தகைய நிறுவனங்களுக்கு உலகளாவிய கொள்கைகள் இருப்பதால், அவர்களுடைய வேலைக்கு நிறுவனத்தால் ஆபத்து ஏதும் ஏற்படாது. ஆனால், சக பணியாளர்கள் இந்தியர்களே எனும்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் இவர்களை அசூயையாக பார்க்ககூடும். இது அவர்களுக்கு பணியாற்றும் இடத்தில் பெரும் உளவியல் நெருக்கடியைத் தரக்கூடும். ”இந்த நெருக்கடி தற்கொலைகளுக்கும் கூட இட்டுச்செல்லும் ஆபத்துள்ளது” என்கிறார் அனுஷா. அத்துடன் வருங்கால வைப்பு நிதிக்கான நியமனதாரராக சமபாலின துணை ஒருவரை ரத்த சம்பந்தம் இல்லாத உறவாக இருந்தாலும் கொடுக்க முடிந்தது. ஆனால் இத்தீர்ப்புக்குப் பின் நிறுவனங்கள் அதையும் ஏற்காது.

தமிழகம் முழுவதுமிருந்து வீடுகளைவிட்டு வெளியேறி வருபவர்கள் தங்க என்று பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை. நண்பர்களின் வீடுகளில்தான் இவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். இனி அப்படித் தங்கவைக்கவும் பலர் யோசிக்கக்கூடும். சட்டப்படி இவர்களுக்கான ஒரு தங்குமிடத்தை ஏற்படுத்துவதும் முடியாது எனும்போது அவர்கள் போக்கிடம் இன்றி தவிக்க நேரிடும் என்று இச்சமூகத்தினர் அச்சப்படுகின்றனர். இந்தத் தீர்ப்புக்கு முன்னர், சட்டத்தில் கூட ஆண்களைப் பற்றிய குறிப்புகள் இருக்குமே தவிர லெஸ்பியன் பெண்கள் பற்றிய குறிப்புகள் இல்லாமலிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் பெண்களையும் இணைத்தே சொல்லப்பட்டிருக்கிறது என்பதால் லெஸ்பியன் பெண்களுக்கான கட்டாயத் திருமணங்கள் அதிகரிக்கும். அவர்களின் மணவாழ்க்கையும் பாழாகும் என்பது இவர்களின் வாதம். பல ஜோடிகள் பிரிந்துவிடும் அபாயமும் உண்டு. குறிப்பாக தன் ஈர்ப்பைச் சொல்லவும் அஞ்சும் தன்மை இனி வந்துவிடும். இருபாலின ஈர்ப்பாளர்களுக்கும் (Bi-sexual) சமபாலின ஈர்ப்ப்பாளர்களுக்குமான உறவு முற்றிலும் உடைந்துபோகும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் இருபாலின ஈர்ப்பாளர்களுக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. வசதியுடையவர்கள் சமபாலின ஈர்ப்பு அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் சென்று குடியேறக்கூடும். ஆனால் வாய்ப்பற்றவர்களின் நிலைமைதான் கேள்விக்குறி.

ஓரினம்.நெட் என்கிற இணையதளத்தின் ஒரு தன்னார்வலராகவும் பயோமெடிக்கல் அறிவியல் மருத்துவரான டாக்டர் ராமகிருஷ்ணனிடம் பேசியபோது ”. எச்.ஐ.வி தடுப்புக்கான ஆணுறைகளை வழங்குவது, பாதுகாப்பு வழிமுறைகள் தருவது என்று சமூகத்தினர் மத்தியில் வந்து சொல்லித் தந்த சுகாதார பணியாளர்களுக்கு இனி வேலை இல்லை.சர்வதேச எய்ட்ஸ் சொசைட்டி இந்திய குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றத்தீர்ப்புமீதான தன் அதிருப்தியை கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறது” என்கிறார். 

பிறப்பால் உடலால் ஆணாகவும், உணர்வால் பெண்ணாகவும் உள்ளவர்கள் திருநங்கைகள். அதுபோலவே பிறப்பால் உடலால் பெண்ணாகவும் உணர்வால் ஆணாகவும் உள்ளவர்கள் திருநம்பிகள். ,அத்தகைய ஒரு திருநம்பியான ஜோவின், "என் வீட்டிலுள்ளவர்கள் நான் பிறப்பால் பெண் ஆனால் எண்ணத்தால் ஓர் ஆண். பெண் மீதுதான் எனக்கு விருப்பம் வருகிறது. அதனால் நான் திருநம்பி என்று புரிந்துகொண்டனர். ஆனால் இனி என்னைப் போல வீட்டில் தன்னைக் குறித்து வெளிப்படுத்தும் ஒருவரை சமபாலின ஈர்ப்பாளர் என்று புரிந்துகொள்ளக்கூடும்  ஒருவேளை சட்டத்துக்கு பயந்துதான் திருநம்பி என்று பொய் சொல்வதாக சந்தேகம் வரக்கூடும். இது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கப்போகிறது. திருநங்கைகளையும் இப்படித்தான் சந்தேகப்படுவார்கள்” என்கிறார் ஜோவின். 

நிறங்கள் அமைப்பைச் சேர்ந்த சங்கரி. “பொதுச்சமூகத்தை நோக்கி நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். எங்கள் எல்.ஜி.பி.டி.(LGBT - Lesbian Gay Bi-sexual and Transgenders) சமூகம் வெளியே வந்து வெளிப்படையாக போராடுகிறது. பொதுச்சமூகம் என்கிற பெயருக்குள் எத்தனை சமபாலின ஈர்ப்புகொண்டவர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். வெளியில் வந்து போராட தைரியம் இல்லாதவர்கள். ஆசனவாய் புணர்ச்சி, வாய்வழி புணர்ச்சி என்பதெல்லாம் கணவன் - மனைவிக்கு இடையில் கூட தவறு என்று சொல்கிறது இத்தீர்ப்பு. இதை எதிர்த்து போராட நீங்கள் யாரும் முன்வரமாட்டீர்களா? ” என்று கொதிப்புடன் கேட்கிறார். தமிழகத்து சம்பாலின ஈர்ப்பாளர்களை வைகோவின் அறிக்கை புண்படுத்தியிருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. “அவர்களை ஈனப்பிறவிகள் என்று சொல்லும் வைகோ அவர்களின் வாக்குகள் வேண்டாம் என்று சொல்லட்டும் பார்க்கலாம். சுயமரியாதை, பெரியார் என்று சொல்லும் அவர் மீதிருந்த மதிப்பு  குறைந்துவிட்டது” என்கிறார் செயற்பாட்டாளர் ஸ்ரீஜித்.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? “இது பொதுப்பட்டியலில் இருப்பதால், மத்திய அரசோ மாநில அரசு இதில் திருத்தங்கள் செய்யலாம்.எப்படி இந்து திருமணச் சட்டத்தில் தமிழகத்தில் மட்டும் சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடி ஆகுமென திருத்தம் கொண்டுவரமுடிந்ததோ அதே முன்னுதாரணத்தைக்கொண்டு தமிழகத்தில் மட்டும் திருத்தம் கொண்டுவரலாம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பினால் அவர் அனுமதி தரலாம். தரவில்லையென்றாலும் மீண்டும் தீர்மானம் இயற்றி அனுப்பினால் அவர் ஒப்புதல் தந்துதான் ஆகவேண்டும். இந்த ஒரு வழி இருக்கிறது” என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம். இப்போதைக்கு தமிழகத்தில் இந்தத் திருத்தம் வரவேண்டுமென எல்.ஜி.பி.டி. சமூகத்தினர் முதல்வரிடம் கோரிக்கை வைத்துக் காத்திருக்கிறார்கள். 

(நன்றி : இந்தியா டுடே)

யார் வகுத்த விதியில் 
எங்கள் காதல் அடங்கும்
எந்த மேகலையின் சுரபியில்
மனத்தீ அடங்கும்

- இன்குலாப்

1 comment:

  1. நீதி மன்றத்தீர்ப்பை விட கொடுமை நான் பெரிதும் மதிக்கப்பட்ட வை.கோ வின் பின்னூட்டம்.,பா.ஜ.கவின் மொழியாக்கப்படுகிறார்.,சேரிடம் அறிந்து சேர்கிறார்.. காலம் காவிகளின் மொழிகளை கறுப்புத் துண்டுகளை வைத்து
    பேசவைப்பதை ஆச்சர்யமாக நான் பார்க்கவில்லை..

    ReplyDelete