Monday, August 11, 2014

திருமணம் என்னும் நிக்காஹ்

காதல் கதை என்றெண்ணி திரையரங்கத்துக்கு வருபவர்களுக்கு அதற்கு நேர்மாறான கதை இது என்பதை முதல் சில காட்சிகளிலேயே உணர்த்திவிடுகிறார் இயக்குநர். ரயில் பயணத்துக்காக ஒரு பொய் சொல்லப்போக அந்தப் பெயரிலேயே நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் ஜெய்யும் நஸ்ரியாவும் ஒருவருக்கொருவர் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாமலேயே முஸ்லிம் என்று எண்ணிக்கொண்டு ஒருவரையொருவர் கவர ஏதேதோ செய்கிறார்கள். 



நாயகனையும் நாயகியையும் ஒரே சாதியாக ஏன் காட்டவேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. அதிலும் நஸ்ரியாவுக்கும் ஜெய்க்கும் அந்த அய்யங்கார் பாத்திரம் பொருந்திப்போகவில்லை. எனினும், அய்யங்கார் வீடு எப்படி இருக்கும் என்பதை அச்சு அசலாக அப்படியே திரையில் வடித்திருக்கிறார்கள். அதுபோலவே ஜெய் இஸ்லாம் குறித்து தெரிந்துகொள்வதற்காக வரும் முஸ்லிம் பெரியவர் வீட்டின் காட்சிகளும் அசலாக இருக்கின்றன. 

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் தமிழ் சினிமாவில் அவர்களுக்கான நியாயம் சின்னச் சின்ன வசனங்களின் மூலம் சொல்லப்படுகின்றன. முஸ்லிம் பெரியவரின் வீட்டில் இந்தியா விளையாடும் கிரிக்கெட் மேட்ச் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பது போன்ற சில காட்சிகள் நுட்பமானவை. ஜெய்யும் அவருடைய சகோதரரும் சேனல் மாற்றுகையில் முஸ்லிம் பாடல்களும் அய்யங்கார் பாடல்களுமாக ஓடிக்கொண்டிருப்பது ரசிக்க வைக்கும் காட்சி. இப்படி ஆரம்பத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் படம் பின்னால் திரைக்கதையில் பலமில்லாமல் தொய்வடைகிறது. ரயிலில் நஸ்ரியாவை விடியோ எடுக்கும் ஒருவன் அவருக்கே மேலதிகாரியாக வருவதை இடைவேளையில் ஒரு பெரிய திருப்பம் போல் காண்பிப்பதால் நாம் ஏதோ பெரிதாக எதிர்ப்பார்த்தால் அதுவும் ஒன்றுமில்லாமல் போகிறது. 

எல்லோரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். சில காட்சிகளை கிளைமாக்ஸுக்காக படம்பிடித்துவிட்டு அவற்றை இயக்குநரே வெட்டிவிட்டதுபோல தெளிவில்லாமல் தொக்கி நின்று அப்படியே முடிகிறது படம். படத்தின் மிகப்பெரிய ஆறுதல் ஜிப்ரானின் இசை. பாடல்கள் அனைத்தும் இனிமை. அதிலும் அந்த பரதநாட்டியப் பாடலை படமாக்கிய விதமும் பாடலும் அழகு. ஒளிப்பதிவு படத்துக்கு பலம். 

திருமணம் எனும் நிக்காஹ் என்கிற பெயர் ஏற்படுத்தும் தாக்கத்தை படம் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

(நன்றி: இந்தியா டுடே)

No comments:

Post a Comment