Thursday, December 06, 2018

நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே...



-         கவின் மலர்


கஜா புயல் இரவு அடிக்கப்போவதாக வானிலை அறிக்கைகள் சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில்தான் நாகப்பட்டினத்தில் பத்தாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டதாக வந்த செய்தியைப் பார்த்தேன். எனக்கு அதிர்ச்சியாகவே இருந்த்து. ஏனெனில் பத்தாம் எண் கூண்டு ஏற்றப்படுவதென்பது அதிக ஆபத்து என்பதை அறிவேன். இதுவரை நாகையில் அப்படி ஏற்றப்பட்டதாக நானறிந்து தெரியவரவில்லை. நாகைக்கு தொடர்புகொண்டு எச்சரித்தபோது கூட யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் அப்போது நன்றாக வெயில் அடித்துக்கொண்டிருந்தது.
ஆனால் மாலையில் நிலைமை மாறத் தொடங்கியது. மேகங்கள் சூழ கடும் மழையோடு கூடிய காற்று இரவு பத்து மணிக்குத் தொடங்க, அன்று இரவு யாரும் உறங்கி இருக்கவில்லை. விடிய விடிய அடித்த கடும் மழையிலும் புயல் காற்றிலும் கடல் உறுமலிலும் யாரும் உறங்கி இருக்கவில்லை. உலகம் அழிகிறதோ என்று தோன்றும் அளவுக்கு சப்தம் இருந்ததாக மக்கள் சொல்கின்றனர்.
அந்த இரவு டெல்டா மக்கள் மறக்க விரும்பும் இரவு. அந்த ஓர் இரவு தங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும் என அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அரசு எச்சரித்திருந்தாலும் வழக்கமான புயல் எச்சரிக்கை என்றே பலரும் நினைத்திருக்க, வந்த்தோ இதுவரை வரலாற்றில் காணாத புயல். வயதானவர்களைக் கேட்கையில் 1952 புயலுக்குப் பின் இதுவே கடுமையான புயல் என்கின்றனர். ஆனால் அப்போதைய புயலில்கூட இத்தனை அழிவு இல்லை என்கின்றனர்.
பலர் அருகில் இருந்த சமுதாய நலக்கூடங்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் சென்று பாதுகாப்பாக இருந்துகொண்டனர். ஒன்றும் ஆகாது என நினைத்தவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்தனர். ஓலைக் குடிசைகளில் இருந்தவர்கள் ஓட்டு வீடுகளில் இருந்தவர்கள், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீடுகளில் இருந்தவர்கள் என எவரும் தப்பவில்லை. எல்லோர் வீடுகளிலும் கூரைகள் பறந்தன. அதைப் பார்த்து அலறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிவிடலாம் என்று வீட்டை விட்டு வெளியேறியவர்களை காற்று பழிவாங்கியது. எங்கிருந்தோ வந்த ஓடுகள் அவர்கள் மீது வந்து விழுந்தன. ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள், முறிந்த மரங்களின் கிளைகள் எல்லாம் ஓடியவர்கள் மீது தூக்கி வீசப்பட்டன. பெரும் மரங்கள் நடுவே விழுந்து மேலே நகர முடியாமல் பயமுறுத்தின. தங்கள் மேல் ஏதாவது மரம் விழுந்து விடுமோ என்கிற நடுக்கமே பலரை அச்சுறுத்தியது. இவை எல்லாவற்றையும் விட பேய்த்தனமாக வீசிய காற்று அவர்களை நகரவிடாமல் கீழே தள்ளியது. விழுந்து எழுந்து விழுந்து எழுந்து சில அடிகள் தொலைவில் இருந்த இடங்களுக்குச் செல்வதும் ஒளியாண்டு தொலைவாக இருந்த்து பலருக்கு. விழுந்த்தில், ஓடுகள் தாக்கியதில் பலருக்கும் உடலெங்கும் காயம். இதில் கைக்குழந்தைகளை வேறு வைத்துக்கொண்டு ஓடிய பெண்களின் நிலை இன்னும் கொடூரம். அன்று தப்பி உயிர் பிழைத்த்தே மறுபிறவி போல என்கின்றனர் பலரும்.
இத்தனை கொடூரங்களை செய்துவிட்டு புயல் சென்றுவிட்ட்து. மறு நாள் காலையில் வெளியில் வந்து பார்த்தவர்களுக்குக் காத்திருந்த்து பெரிய அதிர்ச்சி. த்ங்கள் வீடுகள் தரைமட்டமாகிப் போனதைக் கண்ட பலரும் அழுது கதறினர். டெல்டாவெங்கும் ஓலம் எதிரொலித்த்து. ஓர் இரவில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கிக்கொண்டு, வீடுகளையும் பிடுங்கிக்கொண்ட்த் புயல். சில கான்கிரீட் வீடுகளும் இடிந்து விழுந்திருந்தன. ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் விழுந்து ஊரே போர்க்களமாக்க் காட்சியளிக்க, விக்கித்து நின்றனர். ஓரளவுக்கு அதிர்ச்சி விலகாமலேயே ஏதாவது செய்தாகவேண்டும் என்பதறகாக ஆங்காங்கே இளைஞர்கள் ஒன்றுகூடி மரங்களை சாலைகளில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அதனால் வழி கிடைத்தபின்னர்தான் அவர்கள்  வீடுகளுக்குச் செல்ல முடிந்த்து.
வீடுகள் இருந்த இடங்களில் சிலருக்கு மண் மேடுதான் இருந்த்து. சேறும் சகதியுமாக இருந்த வீடுகளுக்குள் நுழைய முடியாத நிலை.  கடலை ஒட்டிய வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்திருந்த்து. கோடியக்கரையில் ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் புகுந்த கடல்நீர் அது பள்ளமான பகுதி என்பதால் வெளியேற முடியாமல் அங்கேயே இப்போது வரை தேங்கிக்கிடப்பதைப் பார்க்க முடிந்த்து.
நாகை மாவட்ட்த்தின் கடற்கரை கிராமங்களில் இருந்த படகுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு உடைந்து நொறுங்கின. பல படகுகளில் இஞ்சின்கள் பழுதாகிக் கிடக்கின்றன. இந்தப் படகுகளை எல்லாம் சரிசெய்ய லட்சக்கணக்கில் ஆகும்.  இதன் காரணமாக மீன்பிடித் தொழில் கடுமையாக் பாதிக்கப்பட்டிருக்கிறது.  வேதாரணியம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறையில் புயல் ஒரு கோரத்தாண்டவம் ஆடி இருக்கிறது.  செருதூர் தொடங்கி ஆறுகாட்டுத்துறை வரை இதுவே நிலைமை. அனைத்து கடற்கரை கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. 
நாகை மாவட்ட்த்தில் மாந்தோப்புகளும் தென்னந்தோப்புகளும் வேதாரணியம் பகுதியில் அதிகம் உண்டு. புஷ்பவனம், நாலுவேதபதி போன்ற கிராமங்களில் அத்தனை தென்னைகளும் விழுந்து கிடப்பதைக் காணச் சகியாமல் அவற்றின் உரிமையாளர் கண்ணீர் விடுவதைப் பார்த்தால் உள்ளம் உருகிவிடும். இங்கு பலருக்கு தென்னை மரங்கள்தான் ஒரே ஆதாரம். அதை வைத்துத்தான் பிள்ளைகளை படிக்கவைத்துக்கொண்டிருந்தனர்.  மாமரங்கள் அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்ட்து போல கிடக்கின்றன. அழகழகான ஊர்கள் இம்மாவட்ட்த்தில் உண்டு. அத்தனை அழகும் அதன் மரங்களால் வந்த்துதான். வெயிலே படாத ஊர்கள் உண்டு. ஆனால் இப்போது நிழலில்லாமல் வெயில் காயும் ஊராக பல ஊர்கள் மாறிவிட்டன.
வேளாணி முந்தல் என்கிற கிராமத்தில் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவருக்குக் கணவர் இறந்துவிட்டார். பெண்குழந்தை ஒன்று. ஆடுகளை வளர்த்து வருகிறார். அவை மட்டுமே அவரின் வாழ்வாதாரம். இந்தப் புயலில் அவருடைய பத்து ஆடுகள் இறந்துவிட, இப்போது நாதியற்றுக் கிடப்பதாக அழுதார்.  இவரைப் போல பல பெண்களும் ஆண்களும் ஆட்டையும் மாட்டையுமே கொண்டு வாழ்க்கை நடத்திவந்தனர். இவர்களை ஏதுமற்றவர்களாக மாற்றிவிட்டது இப்புயல்.  நான் சென்று பார்த்தபோது தலைஞாயிறுக்கு அருகேயுள்ள அரிச்சந்திரா நதியில் கூட்டமாக கால்நடைகள் செத்து மிதந்ததைப் பார்க்க முடிந்தது.
அரசாங்கம் உடனடியாக வந்து இறந்த மாடுகள் ஆடுகள் மற்றும் கோழிகளை கணக்கெடுக்காத்தால் சில இடங்களில் அவற்றை அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டு வைத்திருந்த்தையும் காண முடிந்த்து. எடுத்துப் புதைத்துவிட்டால், அதை வளர்த்த்தற்கான நிரூபணமே இல்லாமல் போய் விடும் என்கிற அச்சம் மக்களுக்கு. இதன் காரணமாக, பல இடங்களில் கால்நடைகளின் உடல் அப்படியே கிடக்க, நோய் பரவும் அபாயமும் இருந்த்து.  நல்லவேளையாக அவை அப்புறப்படுத்தப்பட்டன.
முகாம்களில் தங்கியுள்ள மக்களின் அவதி சொல்லி மாளாது. குறிப்பாக பெண்கள் படும் பாடுகளை அவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். கழிப்பறை தொடங்கி எல்லாமே அவர்களுக்குப் பிரச்சனைதான். மாதவிலக்கு ஆகிற பெண்களின் கதை இன்னும் மோசம்.  மாற்று உடைகள் இன்றி, சரியான சாப்பாடு இன்றித் தவிக்கும் அவர்களின் கதை மிகப் பரிதாபமானது. குழந்தைகள் இரவுகளில் கொசுக்கடியில் தவிக்கின்றனர். கொசுக்கடி காரணமாக நோய் பரவும் ஆபத்து ம் உண்டு. அடிக்க்டி பெய்யும் மழை வேறு அவர்களுக்குத் தடையாக இருக்கிறது. சகதியான ஊரில் வெளியில் எங்கேயும் படுக்க முடிக்காது. பலர் தார்ச்சாலைகளில் வந்து அமர்ந்துகொள்வதையும் ஆங்காங்கே காண முடிந்த்து.  அப்படி தார்ச்சாலையில் அமர்ந்து இரவு நேரத்தில் பேசிக்கொண்டிருந்த நான்கு பெண்கள்தான் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நீர்முளையில் ஒரு வேனில் அடிபட்டு இறந்தனர். ஆகவே அதன்பின் அச்சம் ஏற்பட்டு, சாலைகளில் அமர்வதைத் தவிர்த்தனர் மக்கள். ஆனால் அவர்கள் ஒண்டி உட்கார்ந்துகொள்ள, உறங்குவதற்கு ஓரிடம் இல்லாமல் போய்விட்ட்து. ஏனெனில் பல சமுதாயக் கூடங்களில் ஒரு ஹாலில் 200 பேர் வரை தங்கவேண்டுமெனில் அது மூச்சு முட்டும் சிரம்ம். சில இடங்களில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அந்த இட்த்தைத் தந்துவிட்டு வெளியிக்ல் ஆங்காங்கே கிடைத்த இட்த்தில் ஆண்கள் படுத்துக்கொள்வதையும் காண முடிந்த்து. மொத்தத்தில் டெல்டா உறங்கி பல நாட்களாகின்றன.
மின்சாரத்துக்குப் பழகிவிட்டிருக்கும் மக்களுக்கு இருள் மிரட்டுகிறது. மின்சாரம் இல்லை என்பதே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. சரிந்து கிடக்கும் மின் கம்பங்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில், எல்லா இடங்களுக்கும் மின் விநியோகம் கிடைக்க குறைந்தபட்சம் இன்னும் ஓரிரு மாதங்கள்  தேவைப்படும். சோலார் விளக்குகளும் தார்ப்பாய்களும்தான் இன்று டெல்டாவின் முக்கிய தேவையாக இருக்கிறது.  விழுந்துகிடக்கும் மின்கம்பங்கள், பல்வேறு உயரங்களில் சரிந்து நிற்கும் மின்கம்பங்களுக்கு இடையிலான மின்கம்பிகள் இன்று பலருக்கு துணி உலர்த்தும் கொடியாகி இருப்பதைக் காண முடிந்த்து.
பிற மாவட்டங்களில் இருப்போருக்கும், தமிழ்நாட்டுக்கு வெளியே இருப்போருக்கும் இந்தப் புயலின் தாக்கம் சென்று சேரவில்லை என்றே சொல்வேன். நடந்த பேரழிவில் ஊடகத்தில் வந்தவை மிக்க் குறைவே. இந்திய அளவிலான ஊடகங்கள் ஏறத்தாழ புறக்கணிக்கவே செய்தன. அவற்றுக்கு சென்னை விமான நிலையம் மூழ்கினால் மட்டுமே அது முக்கியமான செய்தியாக இருக்கும்.  மக்கள் தங்களுக்குள் உதவிக்கொண்டனர். கேரளாவிற்கோ, சென்னை வெள்ளத்துக்கோ கிடைத்த்து போன்ற உதவிகள் முதலில் கிடைக்கவில்லை. மக்கள் பசியிலும் பட்டினியிலும் கிடந்து தவிப்பதைக் காணச் சகிக்கவில்லை.  தனிமனிதர்கள் களமிறங்கி சமூக வலைத்தளங்களில் தாங்கள் கண்டவற்றை பகிரத் தொடங்கியவுடன் தான் ஊடகங்கள் பல விழித்துக்கொண்டு டெல்டா நோக்கி வரத் தொடங்கின. பேரழிவின் தாக்கத்தை மெல்ல மெல்ல தமிழகம் இப்போதுதான் உணரத் தொடங்கியதாகத் தெரிகிறது.
பசுமையாய் நின்று சூழலை சமன் செய்த எங்கள் கோடியக்காடு...இன்று கஜா புயலுக்குப் பின், முற்றிலும் அழிந்து வான்வழி தாக்குதலில் குண்டு போட்டு சிதைந்துபோன இடம் போல் காட்சியளிக்கிறது. ராமர் பாதம் என்றொரு இடமுண்டு. உயரமான அந்தக் கட்டடத்தின் மேல் நின்று பார்த்தால் கோடியக்காடு கண்களுக்கு விருந்து போல பச்சைப் பசேலென காட்சியளிக்கும். நேற்று அங்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனேன். சென்றமுறை கோடியக்காட்டின்வழி நண்பர்களுடன் சென்ற பயணம் நினைவில் வந்து போனது. யாருமற்ற கடற்கரையில் ஆயிரக்கணக்கான பறவைகள் பார்வையாளர்களாய் இருக்க, ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவதுஎன்று குரலெடுத்துப் பாடிய நினைவுகளும் நெஞ்சில் மோதின.  சொல்லாமல் எங்கள் காடள்ளிப் போனது இப்புயல். நூற்றுக்கணக்கான மான்களையும் காட்டுக் குதிரைகளையும் இன்னபிற விலங்குகளையும் வாரிக்கொண்டுபோனது கடல். அவை காரைக்கால், தரங்கம்பாடி என வெவ்வேறு ஊர்களில் கரையொதுங்கின.  நண்பரொருவர் சொன்னார்.
டெல்டாவின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வந்து பார்க்கட்டும். கண்ணீரின்றி இம்மாவட்டங்களிலிருந்து வெளியேறிவிட முடியாது. எழுத்தில் வடிக்கவொண்ணா துயரம். காட்சிவழி ஊடகங்களிலும் காட்டவொண்ணா துயரம்.
திருச்சியிலிருந்து மாணவர்கள் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொண்ட டெல்டாவின் நாடியம் கிராமத்து  விவசாயிகள், அவர்களை திருப்பி அனுப்புகையில், நன்றி தெரிவிக்கும் விதமாக வீழ்ந்து கிடந்த தென்னை மரங்களில் இருந்து இளநீர் காய்களைப் பறித்து ஏற்றி அனுப்பியுள்ளனர்.
நாகை நம்பியார் நகர் மீனவர்கள் அவர்களுக்கு கேரளாவில் இருந்து வந்த நிவாரணப் பொருட்களில் அவர்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்ட வெள்ளப்பள்ளம், வானவன்மாதேவி, புஷ்பவனம் போன்ற மீனவ கிராமங்களுக்கு அப்பொருட்களை அளித்துவிட்டனர்.  போலவே, வண்டல் கிராமத்துக்கு எங்கள் குழு சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கியபோதுதான் தெரியும். அங்கு செல்வோரை கடந்த ஐந்தாறு நாட்களாக படகில் ஏற்றி அழைத்துக்கொண்டுப் போவது நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த காத்தவராயன்,சகாதேவன்,வெற்றிவேல் ஆகியோர்தான் என. படகை லாரியில் ஏற்றிச் சென்று அந்தப் பகுதியில் இந்தச் சேவையை செய்து வருகின்றனர். இதில் சுவாரஸ்யம் என்னவெனில் பொருட்களை எடுத்துச் சென்று விநியோகம் செய்யச் சென்ற குழுவிலும் நம்பியார் நகர் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இப்பணியில் ஈடுபட்டிருப்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் சேவை இவர்களுக்குத் தெரியாது. இரு குழுவும் வண்டல் செல்லும் படகில் ஏறுகையில்தான் சந்தித்துக்கொண்டனர். இந்த எளிய மீனவ மக்கள் நெகிழ வைக்கிறார்கள்!

இப்படி மனிதம் ஊற்றெடுத்த நிகழ்வுகளும் உண்டு. என் சாதிக்கு அதிகம் வேண்டும். அவர்களுக்கு வேண்டாம் என ஆதிக்க சாதி மக்கள் சொன்ன மனிதம் செத்த நிகழ்வுகளும் உண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரை, ஒரே ஒரு புயல் அடித்த ஊரையும் சேரையும் ஒன்றாக்கிவிடும் என நான் நம்பவில்லை. ஒரேயோர் இயற்கை பேரிடருக்குக் கூட அந்த சக்தி கிடையாது. ஆகவே இந்த சாதியப் பாகுபாடுகள் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் இதே புயல் தென்மாவட்டங்களில் அடித்தால் நிலைமை வேறுதான். தென் மாவட்டங்களை ஒப்பிடுகையில் கீழத்தஞ்சையிலுள்ள சாதியம் குறைவுதான். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதிலொன்று பொதுவுடமை இயக்கம்.

தென்னை விவசாயிகளின் துயரைச் சொல்லி மாளாது. நாங்கள் புஷ்பவனம் கிராமத்துக்குச் சென்று ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். “இவ்வளவு நேரம் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறோம். சாதாரண காலத்தில் வந்திருந்தால் முதலில் இளநீர் வெட்டிக்கொடுத்துவிட்டுத்தான் பேச்சைத் தொடங்கி இருப்போம். இப்போ பாருங்க…எல்லாம் விழுந்துகிடக்கு’ என்று தன் தென்னை மரங்களைக் காட்டினார். தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், முந்திரித் தோப்புகள் வைத்திருப்போர் போக ஒரு சில மரங்களை வைத்து மட்டும் பேணிவந்து அதையே வாழ்வாதாரத்துக்கு ந்மபிக்கொண்டிருந்த எளிய மக்களும் உண்டு. அவர்கள் இன்று செய்வத்றியாது திகைத்து நிற்கிறார்கள்.
இதுவரையிலான இயற்கைப் பேரிடர்களின்போது நிவாரணப்பொருட்களில் தார்பாலின் ஷீட்டுகளை வழங்கி யாராவது பார்த்திருக்கிறீர்களா? இந்த கஜா புயலுக்குப் பின்னான நிவாரணத்தில் உணவுக்கு அடுத்தபடியாக மக்களுக்குத் தேவையாக இருப்பது அதுவே. கூரைகள் பறந்துவிட்ட குடிசைகள், ஓட்டு வீடுகள், ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளில் இப்போதைக்கு ஃப்ளெக்ஸ் பேனர்களை சிலர் கூரையாக்கி வைத்திருக்கின்றனர். பேனர் கலாசாரம் பெருகிவிட்டதெனத் திட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று அவைதான் கைகொடுக்கின்றன.
வீடுகளில் கொஞ்ச நஞ்சம் மிஞ்சியவற்றை தொடர்ந்து பெய்யும் மழையில் இருந்து காக்க தார்பாலின் தேவைப்படுகிறது.
தமிழகத்திலேயே அதிக குடிசைகளைக் கொண்ட நாகை மாவட்டத்தின் அத்தனை குடிசை வீடுகளையும் காற்று தனதாக்கிக் கொண்டது. புயல் அடிக்கும் மாவட்டத்தில்தான் தமிழகத்திலேயே குடிசைகளும் அதிகம் உள்ளன என்பது எத்தனை விந்தையாக இருக்கிறது. இவ்வீடுகள் கான்கிரீட் வீடுகளாக அரசு மாற்றாதவரை இழப்புகள் பெருமளவில்தான் இருக்கும்.
குடிசைகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். சொன்னால் நம்புவீர்களா? மாற்று உடை இல்லாமல், புயல் அடித்த அன்று அணிந்த உடையோடு ஆறேழு நாட்கள் வரை அவர்கள் இருந்தனர்.
ஒரு சிறுவன் புயல் அடித்த அன்றிரவு கால்சட்டை மட்டும் அணிந்திருந்தவன், நாங்கள் பார்க்கையில் கொட்டும் மழையில் ஒரு கோழிக்குஞ்சு போல மேல்சட்டையின்றி நடுங்கிக்கொண்டிருந்தான். இதில் குளிர்க் காய்ச்சல் வேறு பலருக்கு. இரக்கமே இல்லாமல் கொட்டியது மழை. ஒரு மூட்டை அரிசியும், மூவாயிரம் பணமும் ஒரு முகாமுக்கு ஒரு நாளைக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் ஊரில் எல்லோருக்கும் உணவு மூன்றுவேளைக்குக் கிடைக்காது என்பதால் ஒரேயொரு வேளை மட்டுமே உண்ணும்.கிராமங்களைப் பார்த்தோம். அவ்வூரின் குழந்தைகளும் அப்படியே. கைக்குழந்தைக்குக் கூட பால் இல்லை. அவற்றும் அதே உணவுதான். இந்த ஒருவேளை உணவும் கிடைக்காத கிராமங்கள் உண்டு.
இந்நிலையில்தான் ஒரு பிஸ்கட் பாக்கெட்டுக்கு கையேந்தும் நிலை இன்று.
வரலாறு காணாத துயரமிது. காணும் காட்சிகள் அப்படியே சுனாமியை நினைவுப்படுத்தி விடுகின்றன. மனம் பின்னோக்கிப் போய் ஸ்தம்பித்துவிடுகிறது.
புயலுக்குப் பின்னர், நாகை வந்ததும் முதல்நாள் கண்ட காட்சிகளில் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். பின் அடுத்த கிராமத்துக்குச் சென்றால் அதைவிட பயங்கரம். அடுத்த இடத்தில் அதைவிட பயங்கரம். இப்படிப் பார்த்துப் பார்த்து ஒருகட்டத்தில் எல்லாம் மரத்துப் போயின.
சுனாமியின்போது நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. எங்கள் வீட்டுக்கும் எங்கள் கல்லூரிக்கும் இடையிலான ரயில்வே டிராக்கில் நான் நடந்துவந்துகொண்டிருந்தேன். சுனாமி வந்து ஏறத்தாழ ஒரு வாரம் இருக்கும். இரண்டு பையன்கள் கையில் ஒரு கேனுடன் நின்றுகொண்டிருந்தனர். என்னிடம் வந்து 'தீப்பெட்டி இருக்கா?' என்றனர். நான் 'இல்லை' என்றேன். ஏன் என்று கேட்டபோது புதருக்கு நடுவில் கைகாட்டினர். அங்கே ஒரு பெண்ணின் உயிரற்ற உடல். கால் மட்டும் வெளியே தெரிந்தது. காலுக்கு அருகிலேயே ஒரு குழந்தை. பொம்மைபோல உப்பி வெள்ளை வெளேரென வெளுத்திருந்தது. எனக்கு அந்நாளில் பிணங்களைப் பார்ப்பது மரத்துப் போயிருந்தது. அதிர்ச்சியெல்லாம் இல்லை. (எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் அப்படித்தான் இருந்தது)
சரிவில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தீப்பெட்டி வாங்கியவர்கள் கேனில் இருந்த மண்ணெண்ணெயை இரு உடல்களின் மீது கொட்டி தீமூட்டிவிட்டினர். நானும் அவர்களும் எதிரெதிர் திசைகளில் நடந்து சென்றோம். உடல்கள் எரிந்துகொண்டிருந்தன.
இந்த சம்பவம் சாதாரண பொழுதுகளில் நடக்க வாய்ப்பே இல்லை. ஓர் அசாதாரண சூழல் நிலவிய நாட்கள் அவை. கொத்துக்கொத்தாய் பிணங்கள் இல்லையே தவிர, அதே அசாதாரணச் சூழல்தான் இப்போதும் நிலவுகிறது.
அதே அகதி வாழ்க்கை. அதே முகாம். அதே..அதே..எல்லாம் அதே..அரசாங்கமும் அதே...
இச்சூழலை வெளியில் இருந்து பார்ப்பவர்களால் சரியாக உள்வாங்க முடியாது என்பது உண்மை.  எப்படி இயற்கையின் அழகை கண்ணால் காண்பது போல் கேமிரா வழியே பார்த்தால் உள்வாங்கமுடியாதோ அதுபோலவேதான் இயற்கை பேரிடர்களும். அதன் கோரத்தை நேரில் பார்த்தால்தான் உணரமுடியும்.  ஊடகங்களின்வழி நாம் காணும் எதுவும் அக்கோரத்தை நமக்குத் தெரிவிப்பதில்லை என்பதே உண்மை.
 நாங்கள் சென்ற கிராமங்களில் பல இடங்களில் மக்கள் 'அத்திப்பட்டி போல எங்கள் கிராமத்தைக் காணாமல் ஆக்கப் போகிறார்கள் பாருங்கள்' என்றனர். சொல்லிவைத்தது போல தொடர்ச்சியாக இப்படி மக்கள் கூறியது எனக்கு வியப்பாக இருந்தது. தங்கள் கிராமமும் தாங்களும் காணமலாக்கப்படுவோம் என்கிற அச்சம் சாதாரணமானதில்லை. ஆம் இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடி வரை இங்கே அசாதாரணச் சூழல்தான் நிலவுகிறது.
இந்த அசாதாரணச் சூழல்தான் பலரை நிவாரணப் பணிகளில் ஈடுபட வைத்திருக்கிறது. நிவாரணப் பணிகளுக்கு அரசை நிர்பந்திக்கவேண்டும் என்பது உண்மையே. மக்களுக்குள் எத்தனை நாட்கள் உதவிக்கொள்ள முடியும் என்கிற கேள்வியிலும்  நியாயம் இருக்கிறது. ஆனால், கண்ணெதிரே குடிக்க நீர் வேண்டும், பசிக்கிறது உணவு தாருங்கள் என்று கையேந்திக் கேட்கும் சகமனிதர்களுக்கு அந்த நேரத்தில் அவர்களுக்கு வேண்டியது கிடைக்க ஆவண செய்யவில்லையெனில் நம் மனசாட்சி நம்மை மன்னிக்குமா? அதன் காரணமாகவே இத்தகைய பணிகளில் ஈடுபடவேண்டிய தேவை இருக்கிறது. என்ன செய்வது? நமக்கு வாய்த்த அரசாங்களுக்குக் காதும் கேட்கவில்லை. கண்களும் இல்லை. அவர்களை நம்பி நம் மக்களை கைவிடுதல் எவ்வகையிலும் நியாயம் இல்லை.

jkavinmalar@gmail.com

(நன்றி : - உயிர்மை, டிசம்பர் 2018)





x

Thursday, October 04, 2018

வண்ணங்களின் அரசியல் – காலா




பாசிசத்தின் கூறுகள் எப்படி இருக்குமென உணர்த்துகிறது நம்மைச் சுற்றியுள்ள இருள். குஜராத் முதல்வராய் இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்ற பின்னரான இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உச்சமாக, தமிழ்நாட்டில் தற்போது நடந்துகொண்டிருக்கும் விஷயங்கள் அனைத்துமே மக்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இருண்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த இருண்ட காலத்தின் வெளிச்சக்கீற்று என்று நாம் எதைச் சொல்ல முடியும்? இருண்ட காலத்தில் இருக்கிறோம் என்பதை மக்களுக்கு உணர்த்தும் படைப்புகளைத்தான். அப்படியனா ஒரு படைப்புதான் காலா.

போராடும் மக்களை சிறைக்குத் தள்ளும், துப்பாக்கியால் சுட்டுத் தள்ளும் அரசு நமக்கு வாய்த்திருக்க, நமக்கு இன்றைக்கு நேர்வதை ஒரு திரைப்பட இயக்குநர் குறைந்தபட்சம் ஓராண்டு முன்னரே தீர்க்கதரிசி போல் உணர்ந்து ஒரு திரைப்படத்தைத் தந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது காலா.

வெறும் திரைப்படம்தான் என்று ஒதுக்கிவிட முடியாத படம். ஒரு திரைப்படமாக காலா நமக்குள் ஏற்படுத்தும் சிந்தனைகளும் காட்சியனுபவமும் அலாதியானவை. இதற்கு முன்னான பா.இரஞ்சித்தின் திரைப்படமான ‘மெட்ராஸில்’ அப்படத்தை ஒரு வெகுஜன சினிமாவாகவும் ரசிக்கமுடியும். அரசியல் சினிமாவாகவும் ரசிக்க முடியும். ’கபாலி’யில் ரஜினி என்கிற உச்ச நடிகருக்கான சில விஷயங்களும் இருக்கும். அதே சமயத்தில் இரஞ்சித் நம்பும் தலித் அரசியலுக்கான வசனங்களும் காட்சிகளும் இருக்கும். தலித் அரசியல் என்றால் என்னவென்றே அறியாதோரும்கூட கபாலியை ரசிக்கலாம். ஆனால் காலா அப்படியல்ல. இப்படத்தின் அடிநாதமாக இழையோடும் ‘நிலம் எங்கள் உரிமை’ என்கிற விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்களால் இப்படத்தின் அரசியலோடு ஒன்றிப்போக முடியாது. குறிப்பாக அதிகாரத்திற்கு அடிபணியும் குணமுள்ளவர்களும், வளர்ச்சி என்கிற பெயரால் அரசு சொல்லும் அத்தனைத் திட்டங்களும் நம்மை உய்விக வந்தவை என நம்புபவர்களும், அத்தோடு அத்திட்டங்கள் எவ்வளவு அபாயகரமானவை என்று தெரிந்திருந்தாலும் சொந்த ஆதாயங்களுக்காகவும், கொண்ட தவறான கொள்கைகளுக்காகவும் முட்டுகொடுப்போரும் காலாவை எதிர்க்கவே செய்வர்.

மக்கள் பிரச்சனையைப் பேசுகிறது என்பதற்காகவே ஒரு படத்தை சிறந்தபடம் என்று சொல்லிவிட முடியாது. திரைப்படம் என்கிற கலை கோரும் விஷயங்கள் பல்வேறு வகைப்பட்டவை. பார்வையாளர்களை உணர்வுரீதியாக தாக்கவேண்டும். மக்களுக்கான சினிமா எத்தனையோ வந்திருந்தாலும் எல்லாவற்றையும் நாம் கொண்டாடுவதில்லை. ஏனெனில் அவை சினிமாவாக இருந்தனவா என்பது முக்கியம். வெகுசில படங்களே கலையும் அரசியலும் சரியான கலவையாகி நிற்பவை. அந்த வகையில் காலாவின் கச்சிதமான கதை சொல்லும் பாங்கும், அழகியல் மிகுந்த காட்சிகளும் வெறும் அரசியல் சினிமா என்பதைத் தாண்டி ஒரு செவ்வியல் தன்மையுடன் அமைந்திருப்பதே காலாவுக்கான இத்தனை கொண்டாட்டங்களுக்கும் பின்னணியில் இருப்பது.
திரைப்படங்களின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்ட நாயக பிம்பம் இத்திரைப்படத்தில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ரஜினியின் அறிமுகக் காட்சி மிக சாதாரணமாக அமைக்கப்பட்டிருப்பதை ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இந்நாயகன் வழக்கமான ரஜினி பட நாயகன் இல்லை என அக்காட்சியில் மிடில் ஸ்டம்ப் எகிற அவுட் ஆகி, அதற்கும் நோ பால் கேட்கும் காலா சொல்லாமல் சொல்கிறார், தொடரும் காட்சியில் பூமி பூஜை நடைபெறும் இடத்துக்கு வரும் காலா, போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்ணை அடித்தது யார் எனக் கேட்கிறார். சராசரி ரஜினி ரசிகர்கள் இந்த இடத்தில் ‘தலைவர் அவனை அடி பின்னப் போகிறார்’ என்று எதிர்பார்த்தவாறே அமர்ந்திருக்க, காலாவோ, அப்பெண்ணை அழைத்து ‘அவனைத் திருப்பி அடி’ என்கிறார். நாயகன் அல்லவா அடிக்கவேண்டும்? ஆனால் காலா ஏன் அப்படிச் செய்கிறார் என குழம்புகிறார்கள் ரசிகர்கள். பின் அடுத்துடுத்து வரும் காட்சிகளில், தாம் பார்த்துக்கொண்டிருப்பது வழக்கமான ரஜினியை அல்ல என்று அவர்களுக்குப் புரிகிறது,. முழுக்க முழுக்க இயக்குநருக்காக தம்மை ஒப்புக்கொடுத்த ஒரு நடிகரைத்தான் காலாவில் பார்க்க முடிகிறதேயொழிய, ரஜினியைக் காணவில்லை. கபாலியிலும் சரி, காலாவிலும் சரி, அதற்கு முன் காணாமல் போயிருந்த ஒரு மகாகலைஞனை நம்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இரஞ்சித்.

ரஜினியை அவருடைய அரசியல் தாண்டி நாம் இப்படத்தில் ரசிக்க முடிந்ததற்குக் காரணமே அவர் முழுமையான நடிகராக தன்னை வெளிப்படுத்தி இருப்பதுதான். ரஜினி தன் வயதுணர்ந்து முதிர்ந்த பாத்திரத்தில் தோன்றுவதும், தன் முதுமையை அவரே ஒரு வசனத்தில் ஒப்புக்கொள்வதும் மாற்றத்தை நோக்கிய பயணம். ‘நீ மட்டும் எப்படி சின்னப்பொண்ணாவே இருக்கே? என்னைப் பாரு. வயசாகி தலையெல்லாம் வெள்ளையாகி..’ என்கிற அந்த இயல்பான அந்த வசனம்கூட ரஜினி பேசுவதால் நமக்கு முக்கியமாகத் தெரியும் அளவிற்கு இதுவரையிலான ரஜினி படங்கள் இருந்திருக்கின்றன என்பதும் உண்மை. 

’வேங்கையன் மகன் ஒத்தையில நிக்கேன்’ என்று சவால் விடும் காட்சிக்குப் பின் வரும் சண்டைக்காட்சியில் காலா அல்ல, காலாவின் மூத்த மகனே வந்து அப்பாவுக்காக சண்டையிடுகிறான். காவல் நிலையத்தில் காலா அடிவாங்கிவிட்டு வந்து மனைவியிடம் ‘அவனுங்களை விட்டுட்டா வந்திருப்பேன். அடிச்சு பல்லை உடைச்சுட்டேன்’ என்று பொய் சொல்லி மாட்டுவது என பல காட்சிகள் காலாவில் உண்டு. க்ளிஷே என்று சொல்லப்படும் தேய்வழக்கிலிருந்து நமக்கு எவ்வளவு பெரிய விடுதலை!

’நிலம் எங்கள் உரிமை’ என்கிற முழக்கத்தை முன்வைக்கும் காலா திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பும் பின்பும் தமிழ்நாட்டில் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் உக்கிரமான போராட்டங்கள் எல்லாம் நிலம் தொடர்புடையவை. சேலம் – சென்னை எட்டுவழிச்சாலையில் பறிக்கப்படும் விளைநிலங்களும் கதறும் மக்களுமாக, காண்போரை ஆக்ரோஷம் கொள்ளச் செய்யும் அரசியல் அநியாயங்கள் நடைபெறும் இக்காலகட்டத்தில் ஒடுக்கப்படுவோரின் உரிமைக்குரலை உரத்து ஒலித்திருக்கிறது காலா.

நிலம், நீர், காற்று என அனைத்தும் கொள்ளை போகின்றன. இக்கொள்ளையை முதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசின் துணையோடு நடத்துகின்றன. அவை எந்தெந்த உருகொண்டு வரும் என்பதைக் காலாவில் காணலாம். அடுக்குமாடிக் குடியிருப்பு என்று ஆசை காட்டும்.  என்.ஜி.ஓ.க்கள் மூலமாக உடன் நிற்பதான பாவனை காட்டும். அதை நம்பும் மக்கள் எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதையும் நாம் நிஜத்தில் காண்கிறோம். இவை அப்படியே காலாவில் காட்சிகளாக வருகின்றன. நிலம் கையகப்படுத்தவேண்டும்; ஆனால் மக்கள் அதற்குத் துணைபோகவில்லை எனில் அரசு என்னவெல்லாம் செய்யும்? மின்சாரத்தைத் துண்டிப்பது, குடிநீர் இணைப்பைத் துண்டிப்பது என அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும். அப்படியும் அவர்கள் மசியவில்லை எனில் அவர்களின் குடிசைக்கு அரசே தீ வைக்கும். இது சென்னை மாநகரில் நாம் கண்ட உண்மை. சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிரேயுள்ள மர்கீஸ் கார்டன் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டது. எப்படி தீப்பிடித்தது என்றே தெரியாது. தீடீர் தீயில் குடிசைகள் எரிந்து சாம்பலாகும். இப்படித்தான் அடிக்கடி விபத்துகளை நடத்தி அம்மக்களை மாநகருக்கு வெளியே பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி என தொலைவான பகுதிகளுக்குக் குடியமர்த்திவிடுகிறது அரசு. இத்தீவிபத்துகளுக்கு அப்போதைய அமைச்சராக இருந்த பா.வளர்மதியையே மர்கீஸ் கார்டன் பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மர்கீஸ் கார்டன் மட்டுமல்ல சென்னை மாநகரின் ஏராளமான ‘திடீர் நகர்’களுக்கு இந்த நிலைதான். இந்த நிஜங்கள் எல்லாம் காலாவில் காட்சிகளாக வருகின்றன. 2015ல் நாம் பார்த்த மெரினா போராட்டம், அதில் காவலர்களின் வன்முறை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என அனைத்தையும் நாம் திரையில் பார்க்கிறோம்.

காலாவின் வசனங்கள் மிகக் கூர்மையானவை. நானறிந்தவரை ’பாசிசம்’ என்கிற சொல் முதன்முறையாக தமிழ் சினிமாவில் வருகிறது. ‘எதிர்த்து கேள்வி கேட்டால் கொலைன்னா அது பாசிசம்’ என்கிறாள் சரீனா. அதுபோலவே ‘ஜெய்பீம்’ முழக்கம் ஒலித்த முதல் படம் இதுதான். ”வந்துட்டாங்க என்.ஜி.ஓ. மேடம்”  என  பின்னணியில் ஒலிக்கும் சமுத்திரகனியின் குரல் கூட ஓர் அரசியல் பேசுகிறது. “ஏ… காக்கி டவுசரு…ஓடிரு” என்பது இன்னொரு எடுத்துக்காட்டு. மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா, பா.இரஞ்சித் ஆகியோரின் பங்களிப்பில் இயல்பான ஆனால் எதிராளியை வீழ்த்திவிடும் வசனங்கள் குறிப்பிடத்தக்கவை. அது போராட்டக் காட்சியாக இருந்தாலும் சரி. காதல் காட்சியாக இருந்தாலும் சரி.

சரீனாவுக்கும் காலாவுக்குமான காதலைச் சொன்னவிதமும், அந்த ‘கண்ணம்மா’ பாடலும் உமாதேவியின் ’ஊட்டாத தாயின் கனக்கின்ற பால்போல் என் காதல் கிடக்கின்றதே’ போன்ற வரிகளும், காலா-சரீனா இணைக்கான சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும். இப்படத்திற்குள் இன்னொரு சினிமாவை ஒளித்துவைத்திருக்கின்றன.  எப்படி பல ஆண்டுகளுக்கு முன் சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் முதன்முதலில் சந்தித்தார்களோ அதே போல ஆண்டுகள் பல கடந்தபின் அதே போன்றதொரு மின்சாரமில்லா நாளில் விளக்கு வெளிச்சத்தில் சந்திக்கிறார்கள் சரீனாவும் காலாவும். சரீனாவைப் பார்த்தபின் மாறும் காலாவின் முகபாவமும், சரீனாவின் மகளை தலைகோதும்போதும் கண்ணில் தெரியும் வாஞ்சையுமாக ரஜினிக்குள் இருக்கும் காதலன் மிகச் சரியாக சில நொடிகளுக்கு திரையில் மின்னி மறைகிறார்.

காலா  தன் முன்னாள் காதலியை சந்தித்துவிட்டு வந்தபின், ‘திருநெல்வேலிக்கு ஒரு டிக்கெட்  போடு. நானும் ஒரு எட்டு பார்த்துட்டு வாரேன்என்று சொல்லும் செல்வி பாத்திரம் தமிழுக்குப் புதிது. ஆணின் பழைய காதலை ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண்ணின் முன்னாள் காதலை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ‘அழகி’  திரைப்படத்தில் நாயகன் தன் முன்னாள் காதலியை தன் வீட்டிலேயே வேலைக்கு வைத்துக்கொள்வதுபோல ஒரு நாயகியால் செய்ய முடியுமா தமிழ்  சினிமாவில்? அநேகமாக அடுத்தடுத்த பா.இரஞ்சித் படங்களில் இது சாத்தியமாகக் கூடும் என்பதற்கு சாட்சியாய் இந்த ஒரு காட்சி இருக்கிறது.  

சுயமரியாதை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் காட்சியொன்று உண்டு. ‘‘கைகொடுத்துப் பழகுங்க சார். அதுதான் ஈக்வாலிட்டி. கால்ல  விழச் சொல்றது இல்லைஎன்று கூறி சமத்துவம் என்றால் என்னவென காட்டுகிறாள் சரீனாபடத்தின் இன்னொரு பாத்திரமான புயல் கலகக்காரியாக வருகிறாள். ‘இவங்களுக்கு திருப்பி அடிக்கத் தெரியாதுஎன்று சொல்லும்போது வந்து திருப்பி அடித்துவிட்டுகொடி பிடிக்கவும்  தெரியும், திருப்பி அடிக்கவும் தெரியும்என்கிறாள். வன்முறையின்போது காக்கி அணிந்த  காவலர்களால் அவளுடைய உடை உருவப்பட்டு தரையில் கிடக்கிறதுஅந்த உடைக்கு அருகிலேயே லத்தி ஒன்று கிடக்கிறது. கணநேரத்தில் அவள் முடிவுசெய்து உடையை விட்டுவிட்டு லத்தியை எடுத்து அவர்களைத்  தாக்கத் துவங்குகிறாள். பெண் எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்கிற தெளிவோடு இருக்கிறாள் புயல்இதுவரையிலான தமிழ்த் திரைப்படங்களில் இப்படியான காட்சிகளில் நாயகன் வந்து அவன் போட்டிருக்கும் உடையை தூக்கியெறிய நாயகி அதை  அணிந்து கொண்டு பயந்து நடுங்கிக்கொண்டு நிற்பாள். நாயகன் வில்லன்களிடம் சண்டையிடுவான். இந்தக் காட்சிகளைக் கண்டு சலித்த கண்களுக்கு  பெண் விஸ்வரூபமெடுக்கும் இக்காட்சி எத்தனை பெரிய ஆறுதல்! தொன்றுதொட்டு பெண்ணை பலவீனமாக்க அவளது நடத்தை பற்றி அவதூறு கிளப்புவதோ அல்லது பொதுவில் அவளை துகிலுரிவதோதான் நடக்கிறது. உடையில் எதுவுமில்லை என்கிறாள் புயல். ’நீ என்னை அவமானப்படுத்த என் உடையை உருவினால் அது என் மயிருக்குச் சமம்’ என்று அதை உதறிவிட்டு ஆயுதத்தை கையிலெடுத்து திருப்பித் தாக்குகிறாள். ’பெண்ணிய நோக்கில் காலா’ என்பது தனியே எழுதப்படவேண்டிய கட்டுரை. 

ஈஸ்வரிராவ், அஞ்சலி பாட்டீல், சமுத்திரகனி என ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். அதிலும் புயல் அஞ்சலி பாட்டீலின் உடல்மொழி ஒரு யதார்த்தமான போராளிப் பெண்ணின் உடல்மொழி. ’எங்கிருந்தீர்கள் இத்தனை நாட்களாக?’ என்று கேட்கவைக்கிறார் ஈஸ்வரிராவ். ஏன் இந்த நாயகியை தமிழ் சினிமா அதிகம் கவனிக்கவில்லை என்று ஆதங்கம் தோன்றும்படியான நடிப்பு. எல்லோரையும் தாண்டி தன் இருப்பை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் லெனினாக வரும் மணிகண்டன். வீட்டைவிட்டு வெளியேறும் காட்சியிலும், கிளைமாக்ஸில் மக்கள் கூட்டத்தில் ஒருவராக மணிகண்டனின் முகம் தெரியும் காட்சியிலும் காட்டும் முகபாவமும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

தமிழ் சினிமா வரலாற்றில் இஸ்லாமியர்களின் சித்தரிப்பு என்பது 1992க்கு முன்னும் பின்னும் என பிரிக்கலாம். இஸ்லாமியர்களை இயல்பாக காட்டிய படங்கள் மிகவும் குறைவு. அதிலும் அண்மைக்காலத்தில் இந்தப் போக்கு ‘விஸ்வரூபம்’ எடுத்தது. கடும் நெருக்கடிக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளான ஒரு சமூகமாக இஸ்லாமியர்கள் உள்ளனர். வில்லன்களாகவும் தீவிரவாதிகளாகவுமே பெரும்பாலும் காட்டப்பட்டு வந்த தமிழ் சினிமா வரலாற்றில் இப்படம் அவர்களை இயல்பானதாகக் காட்டுகிறது. காலாவின் முன்னாள் காதலியான சரீனா பத்தமடையிலிருந்து சென்று மும்பையில் குடியேறிய இஸ்லாமியக் குடும்பத்தின் பெண். ஃபிளாஷ்பேக்கில் காட்டப்படும் அவர்களின் காதல் கதை அனிமேஷனாக விரிவது ஒரு நல்ல யுக்தி. அவர்களின் திருமண மேடை ஹரிதாதா செய்த கலவரத்தில் எரிய அவர்கள் அன்றோடு பிரிகிறார்கள்.

இஸ்லாமியர்களும் இந்துக்களும் தாராவியில் ஒன்றுகலந்து வாழ்வதை பதிவு செய்கிறது படம். அதற்கான எந்த மெனக்கெடலும் இல்லாமல் மிக இயல்பாகவே பாத்திரங்கள் உருவாக்கப்படிருப்பது ஒரு பெரும் ஆறுதல். காலாவின் மணிவிழாவில் பாடல் பாடும் இஸ்லாமியர்கள் மனதைக் கவர்கிறார்கள். தாராவியில் கலவரத்தை மூட்ட முயலும் ஹரிதாதாவின் ஆட்கள் மசூதியில் தொழுகை வேளையில் பன்றிக்கறியை எறிவதும், அதே நேரத்தில் இந்து கோயில் ஒன்றில் குண்டு வெடிப்பதும் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு ஓடிவரும்போது அவர்கள் ஹரிதாதாவின் ஆட்கள் என்பதை கண்டுகொள்ளும் காலா மக்களிடம் அவர்களைப் பற்றி சொன்னதும் மக்கள் அவர்களை துரத்தி அடிக்கிறார்கள். காலாவுக்காக இஸ்லாமியர் ஒருவர் நெஞ்சில் குண்டு பாய்ந்து இறக்கிறார். இப்படி சமத்துவம் என்பதை வார்த்தைகளில் சொல்லாமல் காட்சிவழி சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குநர். ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில் பொட்டு வைத்த’ தமிழ் சினிமாவில் நாயகன் வரும்போது எழுந்து நிற்கும் மக்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு பேசும் காலாவும், நலம் விசாரிப்பவரை கட்டி அணைத்துக்கொள்ளும் காலாவின் நண்பன் வாலையப்பனும்தான் இன்றைய தேவை.

சோஷலிசம் என்பது நம் முன்னோர்களின் திட்டத்தை அப்படியே நகல் எடுப்பது அல்ல. கொள்கைகளை அப்படியே நகல் எடுத்ததுதான் 20-ம் நூற்றாண்டில் நாம் செய்த மிகப்பெரிய தவறு. தனித்தன்மையோடு, இப்போதுள்ள வேறுபாடுகளோடு ஒவ்வோர் இனத்தில் இருந்தும் உருவாகும் மக்கள் சக்தியில் இருந்தும் நாம் அந்தந்தப் பகுதி சார்ந்த, மண் சார்ந்த சோஷலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” என்கிறார் வெனிசுலாவின் முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸ். அவரை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
 “புத்தகத்தைப் படிச்சிட்டு மக்களோட மனசைப் படிக்காமலிருக்கும்” மகனைத் திட்டும் காலாவின் விமர்சனமும் சாவேஸ் வைக்கும் அதே விமர்சனம்தானே? அதை ஏற்பதில் என்ன பிரச்சனை? இங்கு நட்பு முரணா பகை முரணா என்பதையும் கணக்கிலெடுக்கவேண்டியுள்ளது. இது நட்பு முரண்தான் என்பதற்கு சாட்சியாக காலா சொல்லும் இன்னொரு வசனம் உண்டு. தாராவியிலிருந்து வெளியேற நினைக்கும் தன் மகன்களுக்கு லெனினைக் காட்டி “அவன் இந்த மண்ணு மேலயும், மக்கள் மேலயும் வச்சிருக்கிற பற்றுமேல துளிகூட சந்தேகம் இல்ல” என்கிறார். எனக்கு இந்த வசனமே முக்கியமாகப் பட்டது.

படத்தின் பாடல்கள் அனைத்தும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. குறிப்பாக ‘நிலமே எங்கள் உரிமை’ பாடலின் வரிகளிலும் காட்சிகளிலும் அத்தனை நேர்த்தி. அக்காட்சிகளில் இடிந்தகரை தொடங்கி தமிழகத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு போராட்டங்களும் நம் நினைவில் வந்துபோகின்றன. காவல்துறை செய்யும் கலவரத்தில் நீருக்குள்ளிருந்து வெளியே வரும் போராட்டக்காரர்களை மீண்டும் லத்தியால் அடித்து மூழ்கடிக்கும் காட்சியில் மாஞ்சோலை நினைவில் மோதுகிறது. எரிந்த வீடுகளில் எஞ்சியவற்றைப் பார்த்து வாலையப்பன் அழும் காட்சியிலும், ‘என் பாடப்புத்தகங்கள் எரிஞ்சுபோச்சு’ என்று பெண்குழந்தையொன்று கண்ணீர் விடும் காட்சியிலும் தர்மபுரியில் நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி என எரிந்த ஊர்களின் மிச்சங்கள் புகைந்துகொண்டிருந்த காட்சி நினைவில் நிழலாடி கண்ணீரை வரவழைக்கின்றன.

மிகப்பெரும் பலம் ராமலிங்கத்தின் கலை இயக்கம். எது செட், எது நிஜ தாராவி என்று கண்டறிய முடியாதபடியான அவரது குழுவினரின் உழைப்புக்கு வாழ்த்துகள். பெரியார் சிலை, புத்தர் கோயில் என தாராவியை கண்முன் நிறுத்துகிறார். உழைக்கும் மக்களின் நிறமாகிய கருப்பும், தூய்மையின் தூதாகப் போற்றப்படும் வெள்ளையும் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் அபாரமானது. வில்லன் ஹரிதாதாவின் வீட்டில் இருக்கும் பொருட்கள் எல்லாம் அத்தனை வெண்மை. அப்பழுக்கில்லாத வெண்மை, அங்கிருக்கும் கடவுள் சிலை உட்பட எல்லாமே சுத்தமாக தூய்மையாக இருக்கின்றன. அந்த வெண்மைக்கும் தூய்மைக்கும் நடுவில் காலாவின் கருப்பு முகமும், உடையும் கம்பீரமாக அமரும்போது தனித்துத் தெரிகிறது. கருப்பு நிறத்தின் அரசியல் குறித்து காலா பேசும் வசனத்துக்கு அப்படியானதொரு தனித்துவ வெண்மை பின்னணியில் தேவைப்படுகிறது. அதன் காரணமாகவே காலா ஹரிதாதாவின் வீட்டுக்கு இயக்குநரால் வரவழைக்கப்பட்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட கலை இயக்கம்.
இத்திரைப்படத்தோடு ‘அலைபாயுதே’ திரைப்படத்தில் வரும் ‘பச்சை நிறமே’ பாடல் காட்சியை ஒப்பிட்டுப் பார்த்தது மனம். இயக்குநர் மணிரத்னம் அப்பாடல் காட்சியில் ஒவ்வொரு நிறமாக திரையில் காண்பித்தார். அந்த நிறங்கள் சொன்ன செய்தி என்ன? அவை வெறும் அழகோடு நின்றுவிட்டன. காதலுணர்வைச் சொன்னதோடு நின்றுவிட்டன. ஆனால் காலாவில் வரும் வண்ணங்கள் அரசியல்மயமானவை. ஒவ்வொரு நிறத்துக்குப் பின்னும் ஒரு வரலாறு உண்டு என்கிறது காலா. கருப்பை உழைப்பின் வண்ணமாக்கி, வெண்மையை ஆளும் கும்பலின்அசிங்கத்தோடு தொடர்புபடுத்துகிறது. வெண்மைக்கும் காவி நிறத்துக்குமான தொடர்பை கோடிட்டுக் காண்பிக்கிறது.

வாள் போன்ற நீண்ட ஆயுதம் ஒன்றில் இருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்துகொண்டிருக்கிறார் ஹரிதாதா. அப்போது காலா அங்கே வருவது என காட்சி அமைத்த நுட்பம் அபாரம். ஹரிதாதாவின் பேரக்குழந்தை அவரிடம் ‘He seems to be a nice person. Don’t kill him’ என்று சொல்லுமிடம் வன்முறையின் அழகியல் எனலாம். எல்லாவற்றையும் தூய்மையாக வெண்மையாக வைத்திருக்கும் ஹரிதாதாவின் வீட்டுக் குழந்தை மூலம் பாசிசத்தின் கொலைவெறியைச் சொல்லவைக்கும் காட்சி மிக நுட்பமானது. குழந்தை வந்து தாத்தாவிடம் காலாவை கொல்லாமல் விட்டதற்கு நன்றி சொல்கிறாள்.

ஹரிதாதாவும் காலாவும் சந்திக்கும் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு பதட்டம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது. சந்தோஷ் நாராயணின் நடுக்கமூட்டும் பின்னணி இசையும், நானா படேகரின் அசரவைக்கும் நடிப்பாற்றலும் இப்படத்தின் உன்னதங்களில் இடம்பிடிப்பவை. நானா படேகரின் உடல்மொழி, ’காலாசேட் நான் போலாமா?’ என கேட்கும்போதான முகபாவம், காவல் நிலைய பஞ்சாயத்து காட்சியில் உயிர்பிச்சை இடுவதான தொனியில் கையை ஆட்டுவது, ‘மரணம்தான் பரிசு’ என அலட்டாமல் எச்சரிப்பது என திரையில் அவர் மீதான பார்வையை எடுக்கமுடியாமல் நாம் திணறுகிறோம். 

கிளைமாக்ஸில் முதலில் திரையை வியாபிக்கும் கருப்பு நிறத்தைக் கண்டு மனம் ஒருவித புளங்காகிதம் அடைவதை உணர்ந்தேன். ஹரிதாதாவின் முகத்தில் வீசப்படும் அந்த பொடியால், அவர் முகம் கருக்கிறது. வெண்மையை சிலாகித்து கருப்பைப் பழித்த ஒருவரின் முகத்தில் பூசப்படும் கரி எத்தனை உயர்வானது! அந்த கரிய நிறப் பொடிதான் ஹரிதாதாவை ஒரு பிடி மண்ணையும் அங்கிருந்து எடுக்க விடாமல் செய்கிறது. இதை முதலில் தொடங்கிவைப்பது ஒரு பெண் குழந்தை. பின் திரை சிவக்கிறது. நரம்புகள் புடைக்கின்றன நமக்கு. பின்னணியில் ஆக்ரோஷக் குரல் ஒலிக்க ஆண்களும் பெண்களுமாய் களிநடனம் புரிகிறார்கள். இறுதியில் வரும் நீலத்தின்போது உடல் சிலிர்க்கிறது. கருப்பு, சிவப்பு, நீலம் என நிறங்கள் இணைந்து இதுவல்லவோ நாம் நினைத்த அரசியல். நாம் இதுநாள் வரை ஏங்கியது இதற்கல்லவோ என விம்முகிறது மனம். பின் பல்வேறு நிறங்கள் நாலாபக்கமிருந்தும் ஒரு புகைமண்டலம் போல் கிளம்பிவர திரையை வண்ணங்கள் நிரப்புகின்றன. 
ஹரிதாதாவின் கதை முடிகிறது. மக்கள் இணைந்து தங்கள் எதிரியின் கதையை முடிப்பதை இப்படியும் சொல்ல முடியுமா? ஒரு வன்முறைக் காட்சியையும் காட்டாமல், ரத்தமில்லாமல், ஆயுதமில்லாமல் இதைச் சொல்லமுடியுமா? இத்தனை அழகியலாய் மக்கள் கிளர்ச்சியில் நடந்த ஒரு கொலையைக் காட்டமுடியுமா? எத்தனையோ படங்களின் கிளைமாக்ஸை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு ஈடான ஒரு காட்சி தமிழில் இல்லை எனலாம்.

அது போலவே, காலாவின் உயிர் பிரியும் காட்சியும். அதை நேரடியாகக் காட்டவில்லை என்றாலும் மிக நுட்பமாக படம் உணர்த்துகிறது. மக்கள் போராட்டம் எப்போதும் ஒரு தனிநபரை நம்பி இல்லை என்பதையும் படம் நுட்பமாகச் சொல்லிவிடுகிறது. நூற்றுக்கணக்கான காலாவின் முகமூடிகள் நடத்தும்  ஹரிவதம் அதைச் சொல்லிவிடுகிறது. மிகக் குறிப்பாக, சற்றே நடிப்பில் பிசகினாலும் அக்காட்சியின் பொருள் பிசகிவிடும் எனும் நிலையில், மணிகண்டன், நானா படேகர், ரஜினி, ஆகியோரின் முகபாவங்கள் அக்காட்சிக்கு பொருள் தருவதாக உள்ளன.
காலா முன்வைக்கும் மிக நேரடியான துணிவான பா.ஜ.க. எதிர்ப்பு இக்காட்சிகளில் வெளிப்படுகிறது. ராமாயணத்தை மறுவாசிப்பு செய்வதுபோன்ற உணர்வை உண்டாக்கும் அந்த கதாகாலட்சேபக் காட்சியும், மறுபுறம் காண்பிக்கப்படும் வன்முறை வெறியாட்டங்களும் திரைப்படத்தை மென்மேலும் உயரத்துக்கு இட்டுச் சென்றுவிட்டது. ’ராமன் ராவணனின் ஒவ்வொரு தலையாய் துண்டிக்கத் துண்டிக்க வேறொரு தலை முளைத்தது’ என கதை சொல்லப்படும்போது இங்கே காலாவின் தூண்களாய் இருக்கும் ஒவ்வொருவரும் தாக்கப்படுகிறார்கள். இறுதியில் வஜ்ராயுதம் போன்றதொரு ஆயுதத்தை வைத்துத்தான் காலாவை தாக்குகிறது ஹரிதாதாவின் அடியாட்படை. காவிகள் சிலாகிக்கும் ராமாயணத்தை வைத்தே ராவண காவியம் தீட்டியிருக்கிறார் இரஞ்சித்.

-          கவின் மலர்