Sunday, January 30, 2011

தலித் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?


தேர்தல் நெருக்கத்தில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த வேளையில் புதிதாய் எழுந்துள்ள ஒரு சர்ச்சை கவனத்திற்குள்ளாகி இருக்கிறது. தலித் மக்களின் திட்டங்களுக்கான நிதியை வேறு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு திருப்பி விட்ட்து என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த அக்டோபர் நவம்பர் மாதங்களில் சென்னை நகரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வாழும் 31 பகுதிகளில் கள ஆய்வு நடத்தியது. “சென்னை நகரின் விரிவாக்கங்கள் எந்த வகையிலும் தலித் மக்களை எட்டவில்லை. தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 19 சதவீதம் தலித் மக்கள் ஆனால், சென்னையில் தலித்மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மக்கள்த்தொகை கணக்கெடுப்பிலும் குறைந்துகொண்டேயிருக்கிறது. சென்னைநகரின் உள்கட்டமைப்பு பணிகளுக்காக சென்னையிலிருந்து தலித் மக்கள் வெளியேற்றப்படுவதைத்தான் இப்புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மீதமுள்ளவர்கள் கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு போன்றவற்றின் கரைகளில்தான் பெரும்பாலான தலித் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கென்று குடிநீர், கழிப்பறை, சாக்க்டை போன்ற அடிப்படை வசதிகள் கிடையாது. தலித் மக்களுக்கென்று கடந்த 38 ஆண்டுகளில் 72000 வீடுகள் மட்டுமே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டித்தரப்பட்டுள்ளன. 2003ல் “குடிசையில்லா சென்னை” என்கிற இலக்கை தமிழ்நாடு அரசு அறிவித்த்து. ஆனால் தலித் மக்களுக்கு வீடுகள் கட்டித்தராமல் அவர்களை மாநகர எல்லையிலிருந்து வெளியேற்றுவதே நோக்கமாக இருக்கிறது. இவர்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தில் ரூ.3,821 கோடி நிதி செலவிடப்பட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். அந்த நிதியிலிருந்து இவர்களது வீடுகள் ஏன் புதுப்பிக்கப்படவில்லை?  அந்த நிதி வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.” என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றம்சாட்டுகிறது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின்படி ஒவ்வொரு நூறு ரூபாயிலும் 19 ரூபாய் தலித் மக்களுக்கென செலவிடப்படுவதாக கணக்கிருக்கிறது. இதுவும் கூட 31 ஆண்டு கால தலித் மக்களின் போராட்டத்திற்குப் பிறகே சாத்தியமானது.  ஆனால் நடைமுறையில் இவை இல்லை.
நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்ப்டும் நிதி தலித் மக்களுக்குச் சென்று சேர்வதை உத்தரவாதம் செய்யும் வகையில் 1979ல் ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் மத்திய அரசின் சிறப்புக்கூறு திட்டம் (ஸ்பெஷல் காம்பொன்ண்ட் ப்ளான்) உருவாக்கப்பட்டது. பின்னர் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதன் பெயர் ஷெடியூல்டு சாதியினருக்கான சப்-பிளான் (Scheduled Caste Sub-plan) என்று மாற்றப்பட்டது. இத்திட்டம் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கமே, ஒரு நூறு பேர் கொண்ட கிராமத்தில் இருபது தலித் மக்கள் இருந்தால் அக்கிராமத்திற்கு செலவிடப்படும் தொகையில் ஒவ்வொரு நூறு ரூபாயிலும் இருபது ரூபாய் தலித் மக்களுக்குச் சென்று சேரவேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்துவதே. ஆகவே தமிழ்நாட்டில் 19% சதவிகித தலித் மக்கள் இருப்பதால் செலவு செய்யப்படும் ஒவ்வொரு நூறு ரூபாயிலும் பத்தொன்பது ரூபாய் தலித் மக்களுக்குச் சென்று சேர வேண்டும்.

மத்திய அரசில் 55 செக்டார்களும், 105 துறைகளும் உள்ளன. அதுபோலவே தமிழ்நாடு அரசின்கீழ் 18 செக்டார்களும், 48 துறைகளும் உள்ளன. ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கையில் மத்திய மனித வள மேம்பாட்டு, மின்சாரம், போக்குவரத்து, பெட்ரோலியம், கிராமப்புற மேம்பாடு போன்ற துறைகள் பாதிக்கும் மேற்பட்ட நிதியை எடுத்துக்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, 2010-11 பட்ஜெட்டின் மொத்த்த் தொகை 5.25 லட்சம் கோடி ரூபாய் இதில் 2.75 லட்சம் கோடி ரூபாயை மேற்சொன்ன துறைகளே எடுத்துக்கொண்டன.

தமிழ்நாட்டிலும் மின்சாரம், குடிநீர், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை ஆகிய ஐந்து அமைச்சகங்களே ஐம்பது சதவிகித நிதியைப் பெறுகின்றன. இருபதாயிரம் கோடி ரூபாய் தமிழக பட்ஜெட்டில் 11000 கோடி ரூபாயை இத்துறைகளே எடுத்துக்கொண்டன. மத்தியிலும், தமிழ்நாட்டிலும் இந்த்த் துறைகளே தலித் மக்கள் வாழும் பகுதிகளுக்கான வளர்ச்சித்திட்டங்களுக்குப் பொறுப்பேற்பவை.  தலித் மக்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்படும் தொகை (divisible expenditure), பொது நிதியிலிருந்தும் பயன் பெறும் தலித்மக்களுக்கான தொகை (Indivisible expenditure) என்று தொகையை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்.

தமிழ்நாட்டிலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறையே தலித் மக்களுக்கான நலத்திட்டஙக்ளை செயல்படுத்தும் பொறுப்பிலிருக்கிறது. ஆகவே மற்ற துறைகள் எடுத்துக்கொள்ளும் நிதி தலித் மக்கள் பகுதிகளுக்கும் சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு இத்துறைக்கு உண்டு. ஆனால் அப்படிப்பட்ட கண்காணிப்பு எதுவும் நடைபெறுவதில்லை.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீட்டு வசதித்திட்டம் ஆகியவை பொது நிதியிலிருந்துதான் நடைமுறைப்ப்டுத்தப்படுகின்றன. இதுபோன்ற பொதுநிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்களையெல்லம் தலித் மக்களுக்கான நிதியான ஷெடியூல்டு சாதியினருக்கான சப்-பிளானின் கீழ் வருவதாக்க் காட்டப்படவிருக்கின்றன. ஆனால் இந்த்த் திட்ட்த்தால் பயன்பெறுவது தலித் மக்கள் மட்டுமல்ல. எனவே தலித் மக்களுக்கான நிதியை மற்றவர் பயன்படுத்த அனுமதிப்பது சரியல்ல. விதவை பென்ஷன், வேலையற்றோருக்கான உதவித்தொகை,மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் திருமண உதவித்திட்டம் போன்றவையும்  ஷெடியூல்டு சாதியினருக்கான சப்-பிளானின் கீழ் கணக்கு காட்டப்ப்டுகின்றது. இத்திட்டங்களின் கீழ் பயன்பெறுபவர் அனைவரும் தலித் மக்கள் அல்ல. தலித் அல்லாதோரும் இத்திட்டங்களினால் பயன்பெறும்போது இப்படி செய்வது சரியா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.

தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசியோ  ”மற்ற அரசாங்கங்களை விட தி.மு.க. அரசு தலித் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துகிறது. அவர்களுடைய நிதி வேறெதற்கும் பயன்படுத்தப்படவில்லை” என்று நாளிதழ்களுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
கரகாட்டக்காரன் பட்த்தில் வரும் வாழைப்பழ காமெடி போல, தலித் மக்களுக்கான திட்டங்கள் எங்கே என்று கேட்டாலும் இவைதான் என்றும், பொதுத்திட்டங்களும் இவைதானென்று தமிழ்நாடு அரசு சொல்கிறது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி. சம்பத் தலித்துகளுக்கான நிதியை பயன்படுத்த அரசுக்கு சில ஆலோசனைகளை சொல்கிறார்:

"அரசு கட்டிக்கொடுத்த ஆதிதிராவிடர் குடியிருப்புகளெல்லாம் மிக மிகப் பழசாகி எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பழுது பார்க்கலாம் அரசு. அல்லது புது வீடுகள் கட்டிக்கொடுக்கலாம். புதுச்சேரியில் தலித் மாணவர்க்ளின் மேற்படிப்பிற்கான செலவுகளை அம்மாநில அரசே ஏற்றுக்கொள்கிறது. அத்திட்டத்தை இங்கும் நடைமுறைப்படுத்தலாம். இதன்மூலம் முதல் தலைமுறை மாணவர்க்ளுக்கு பயன்பெறும் வித்த்தில் அத்தொகையை செலவு செய்யலாம்.

ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதிகள் எல்லாம் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. சென்னையில் உள்ள எம்.சி.ராஜா விடுதிக்குச் சென்று பார்த்தபோது அங்கு கண்ட காட்சிகள் மிக்க்கொடுமையானதாக இருந்த்து. ஒரு அரசு மருத்துவமனையின் பிணக்கிடங்கு போலிருக்கிறது. இதை நான் மிகையாகச் சொல்லவில்லை. யார் வேண்டுமானாலும் போய்ப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். மாணவர்களுக்கு குளியலறை கூட இல்லை. வெளியே பொதுஇட்த்தில் ஆளுக்கொரு புறத்தில் நின்று குளிக்கிறார்கள். 8 பேர் மட்டுமே தங்க முடிந்த அறையில் பதினெட்டு பேர் இருபது பேர் என்று தங்குகிறார்கள். இந்த அடிப்படை வசதிகளை எல்லாம் உருவாக்கலாம்.

தலித் குடியிருப்புகளுக்கு வேண்டிய சாக்கடைக் குழாய்கள் அமைத்தல், சாலைகள் அமைத்தல் என்று அடிப்படை வ்சதிகளை அமைக்கலாம். தலித் பகுதிகளில் இரவு பாடசாலைகள் அமைக்கலாம்.
மலம் அள்ளும் தொழிலில் இன்னும் மனிதர்கள் ஈடுப்ட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள். ஒரு தொண்டு நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிவரத்தின்படி ஐம்பதாயிரம் பேர் தமிழ்நாட்டில் இன்னும் இந்த பணியைச் செய்கின்றனர். ரயில்வே டிராக்குகளில், பொதுக்கழிப்பிடங்களில், நிறைய மக்கள் கூடும் ஊர்த்திருவிழாக்களில்  என்று எத்தனையோ இடங்களில் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம் தொடர்கிறது. இதனை ஒழிப்பதற்கு திட்டங்கள் தீட்டலாம். அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கலாம். கைரிக்‌ஷா ஒழிக்கப்பட்ட்து போல இதையும் ஒழிக்கலாம்.

அரசு வேலையில் துப்புரவு பணியாளர்களாக தலித்தல்லாதவர்களும் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இந்த வேலை செய்வதில்லை. அதிகாரிகளும் இவர்களுக்கு ஆபீஸ் அட்டெண்டர், எல்க்ட்ரிஷியன், ஓட்டுனர் என்று அவர்களுக்குத் தெரிந்த வேறு வேலைகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவுட் சோர்ஸிங் செய்வது போல இவர்களிடத்தில் ஒரு தலித்தை அழைத்து வந்து கொஞ்சம் பணம் கொடுத்து துப்புரவு பணியை செய்ய வைத்து ஊதியத்தை மட்டும் இவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். இப்படியான அநியாயங்களை களைய நடவடிக்கை எடுக்கலாம்." என்றார் பி.சம்பத்

 சமூக சமத்துவ மக்கள் படையின் நிறுவன தலைவர் சிவகாமியிடம் பேசியபோது
”அரசு 3800 கோடி ரூபாய் தலித் மக்களுக்கென்று செலவிட்டிருப்பதாக்க் கூறுகிறது. ஆனால் எந்தெந்த வகையில் அவற்றை செலவு செய்தது என்கிற விவரம் தெரிவிக்கப்படவில்லை. மின்சார இணைப்புகள், சாலைகள் அமைப்பது போன்ற உள்கட்டுமானப் பணிகள் தலித் மக்களின் நலனையும் உள்ளிட்டவைதான் என்றால் மின்சாரத்தை பயன்படுத்தும்படியான வீடுகள் முதலில் தலித்துகளுக்கு இருக்கிறதா என்பது ஒரு கேள்வி. அடுத்து இவர்கள் போடும் நால்வழிச்சாலை போன்றவற்றால் தலித் மக்கள பயன்படுத்தும் நிலையில் இருக்கிறார்களா என்பது இன்னொரு கேள்வி. விவசாயத்திற்கு தேவைப்படும் நீர்ப்பாசனத்திற்கு செலவு செய்த்தாக எடுத்துக்கொண்டால், எத்தனை தலித்துகள் விவசாய நிலம் வைத்திருக்கிறார்கள்? அதற்காக செலவிடப்படும் நிதி எப்படி தலித் மக்களை சென்றடைந்த்தாகச் சொல்ல முடியும்? அப்படியிருக்கையில் அரசின் இந்த அறிவிப்பு ஒரு மோசடி என்றே கருதவேண்டியிருக்கிறது. எந்தெந்த திட்டங்களுக்கு நிதி போனது, அந்த்த் திட்டங்கள் தலித்துகளுக்கு எந்த வகையில் நன்மை செய்த்து, இந்த விஷயங்கள் ஒழுங்காக நடக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க என்ன வழிமுறை – இந்த மூன்று கேள்விகளுக்கும் விடையில்லாதபோது தலித் மக்களின் நிதி மடைமாற்றப்பட்டதாகவே அர்த்தம்” என்றார்.

இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தலித் மக்களுக்கான நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே அதிகமிருக்கின்றன. இந்தப் பெருமையைப் பெற்றிருக்கும் தமிழ்நாடு அரசு இந்தக் களங்கத்தைப் போக்கி தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுக்க வேண்டும் என்பதே இப்போதைய கோரிக்கையாக இருக்கிறது.

நன்றி: புதிய தலைமுறை

Monday, January 17, 2011

தேசியத் தலைவர் அம்பேத்கர்

(தலித் முரசு டிசம்பர் 2010 இதழில் எழுதிய கட்டுரை)


ம்பேத்கர் யார் என்று சமூக அரசியல் பிரச்சனைகளில் நாட்டமில்லாத மாணவர்களிடமோ இளைய சமூகத்தினரிடமோ அல்லது பெரியவர்களிடமே கூட கேட்டால் வரும் பதில் என்னவாக இருக்கும்? அம்பேத்கர் நமது அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கியவர் என்பதைத் தாண்டி எதுவும் நமது வரலாற்றுப் பாடங்களில் கற்றுத்தரப்படவில்லை. அதையும் மீறிப் போனால் சட்ட அமைச்சராக இருந்தவர் என்பதுதான் வரலாற்றுப்பாடங்கள் கற்றுக்கொடுத்தவை.

அம்பேத்கர் என்கிற மாமனிதரின் மேன்மை, போராட்டமாகவே கழிந்த அவரது வாழ்க்கை, பெண்களின் முன்னேற்றத்தில் அவருடைய பங்கு, தீண்டத்தகாத மக்களின் அரசியல் உரிமைகளையும், சமூக அந்தஸ்தையும் நிலைநாட்ட தனது வாழ்நாளை ஒப்படைத்த அவருடைய அர்ப்பணிப்பு, ஆதிக்க சாதிகளின் அடிவேரை அசைத்துப் பார்த்த அவருடைய புரட்சிகர போராளித்தன்மை இவற்றையெல்லாம் முன்னிலைப்படுத்தாமல் அம்பேத்கரை அரசு என்கிற அதிகார வர்க்கத்திற்கும் அவருக்குமான தொடர்பை மட்டுமே முன்னிலைப்படுத்தி அவரது மற்றைய பணிகளை இருட்டடிப்பு செய்த தேசத்தில் வாழ்கிறோம் நாம்.

அம்பேத்கரின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது முதன்முதலில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அம்பேத்கர் குறித்த பேச்சுப்போட்டிகளும் கட்டுரைப்போட்டிகளும் நடத்தப்பட்டன. அப்படியொரு கட்டுரைப்போட்டியில் கலந்து கொள்ள பள்ளிச் சிறுமியான நான் அம்பேத்கர் குறித்து நூல்கள் தேடியபோது அவரது வாழ்க்கை வரலாறை முதன்முறையாக அறிய நேர்ந்து அதிர்ந்து போனேன். இவையெல்லாம் என்னுடைய வரலாற்றுப்பாடத்திலோ வேறெதிலுமோ சொல்லப்படவில்லை. ஆனால் காந்தி தனது தாய்க்கு செய்து கொடுத்த வரலாற்றுக்கு எவ்விதத்திலும் சற்றும் தொடர்பில்லாத தனிநபர்விஷயமான மூன்று சத்தியங்களைக் கூட நான் பாடத்தில் படித்திருக்கிறேன். அம்பேத்கர் திட்டமிட்டு பாடத்திட்டம் உருவாக்கியவர்களால் மறைக்கப்பட்டிருக்கிறார் என்பதையெல்லாம் மிகத் தாமதமாகவே உணர்ந்துகொள்ள முடிந்தது.

பெண்களுக்கான சொத்துரிமை, விவாகரத்து, மறுமணம் போன்றவற்றைப் பற்றி அன்றைக்கு மிகத் தீவிரமான கருத்துகளைக் கொண்ட இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற அம்பேத்கர் போராடினார். ஆனால் பார்ப்பன – பனியா கூட்டத்தின் சதியால் அவரால் அம்மசோதாவை நிறைவேற்ற இயலாத போது, மனம் வெறுத்து தனது அமைச்சர் பதவியை விட்டு விலகினார். இன்றைக்கும் பார்ப்பனப் பெண்கள் உட்ப்ட அனைத்துப் பெண்களுக்குமான உரிமைகளுக்கு அன்றே குரல் கொடுத்தவர் அம்பேத்கர். எனக்கு தேசமொன்று ஒன்று இல்லைஎன்று பிரகடனப்படுத்திய அம்பேத்கர் எல்லா ஏற்றத்தாழ்வுகளோடு இருந்தாலும் கூட இச்சமூகத்தை மிகவும் நேசித்தார்.

இந்தியத் துணைக்கண்டத்திற்கான  அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்க அவர் செலவழித்த காலமும் உழைப்பும் அளப்பரியவை. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட குழுவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தினால் இப்பணியில் ஈடுபட இயலாத சூழலிருக்க, அம்பேத்கர் ஒற்றை மனிதராய் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற வரலாறு. .ஆக நாடு முழுமைக்கும் தனது அறிவாலும் ஆற்றலாலும் நிர்வாகத்திறனை வளர்க்கும் சட்டதிட்டங்களை உருவாக்கிய ஒரு தேசிய தலைவரை இன்று தலித் மக்களின் தலைவராக மட்டும் பார்க்கும் போக்கு நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவு.

தன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பன – பனியாக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு தங்கள் செயல்பாடுகளை வடிவமைத்துக்கொண்ட காந்தி போன்றவர்கள் தேசம் முழுமைக்குமான தலைவர்களாகவும், அம்பேத்கர் தலித் மக்களுக்கு மட்டுமேயான தலைவராகவும் சுருக்கப்பட்டிருக்கிறார். அவர் அனைத்து மக்களுக்குமான தலைவர் என்பதை உரக்கச் சொல்ல வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. திட்டமிட்ட சதியின் மூலம் வட்டத்துக்குள் அடைபட்ட அம்பேத்கரின் பிம்பத்தை விடுவிக்க எடுக்கப்பட வேண்டிய பலகட்ட முயற்சிகளில் ஒரு பகுதியாகவே அம்பேத்கர்திரைப்படத்தை பார்க்க வேண்டும்.



இத்திரைப்படத்தை தமிழ்நாடு முழுதும் கொண்டுசெல்வதற்கான முயற்சிகள் செய்யப்பட வேண்டும். ‘காந்திதிரைப்படம் வெளியானபோது ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் அத்திரைப்படத்தை மாணவர்களுக்கு திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்று காண்பித்தார்கள். அப்படியெல்லாம் ‘அம்பேத்கர்திரைப்படத்திற்கு நடந்ததாகத் தெரியவில்லை. இத்திரைப்படத்தை எடுத்திருக்கும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NFDC) இப்படத்தை குறுந்தகடாகவோ டி.வி.டி.யாகவோ விரைவில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அதனை அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அளித்து மாணவர்கள் திரைப்படத்தைப் பார்க்க வழிவகை செய்யப்படவேண்டும். இதற்கு தமிழக அரசு ஆவன செய்யவேண்டும். நேரம் ஒதுக்கி பல்வேறு திரைப்படங்களையும், திரைப்பட விழாக்களையும் கண்டுகளிக்க்கும் தமிழக முதல்வர் இதுவரை அம்பேத்கர் படம் தமிழில் வந்த பின்னர் படத்தைப் பார்த்ததாகத் தெரியவில்லை.

அம்பேத்கர் குறித்து பெரிதும் அறியாதவர்களுக்கு அற்புதமான தகவல் களஞ்சியமாக வந்திருக்கிறது அம்பேத்கர் திரைப்படம். இதனை தமிழில் கொண்டுவருவதற்குத்தான் எத்தனை தடைகள்? தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி மாவட்டங்களில் படம் திரையிடப்படவில்லை என்று செய்தி வந்துள்ளது. தேனி மாவட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள் படத்தைத் திரையிட்டால் பிரச்சனை வர வாய்ப்புண்டு என்று பயப்படுவதாக தகவல்கள் வருகின்றன. தொண்ணூறுகளில் நடந்த தென் மாவட்ட சாதிக்கலவரங்களின் தலைநகரமாக விளங்கியது தேனி என்பதை நாம் மறந்து விட இயலாது. இங்கே அம்பேத்கர் திரைப்படத்தை திரையிட இயலவில்லை என்பது ஒரு சமூக அவலம்.

இந்த ஆதஙகங்களெல்லாம் ஒருபுறமிருந்தாலும், சில மாவட்டங்களில் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் பேசும் அம்பேத்கரைப் பார்க்கவே மகிழ்ச்சியாகவே இருக்கிறது. பத்தாண்டுகள் காத்துக்கிடந்த பின்னல்லவா அம்பேத்கர் நம் முன் தோன்றி திரையில் தமிழ் பேசுகிறார்? மொழியாக்கம் செய்ததில் சில இடங்களில் சற்றே நெருடுகிறது. முதல் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு திரைப்படத்திற்குள் பயணிப்பதில் இதனால் சிக்கல் ஏற்படுகிறது. தூய தமிழில் அம்பேத்கரும் மற்றவர்களும் உரையாடுவது பொருத்தமின்றி உள்ளது.

வாழ்நாள் முழுதும் மக்களுக்காய் பேசியும் எழுதியும் உழைத்த அம்பேத்கரின் வாழ்க்கையை படமாக்கும்போது இயல்பாகவே அவர் மக்களிடையேயும் மேடையிலும் பேசுவதுபோன்ற காட்சியமைப்புகள் சில நேரங்களில் நீளமானதாகத் தோன்றுகின்றன. இன்னும் வசனங்களைக் குறைத்து காட்சிகளைப் பேசவைத்திருந்தால் இது ஒரு முழுமையான கலைப்படைப்பாக மாறியிருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் காந்தி வந்தவுடன் காந்திக்கும் அம்பேத்கருக்குமான உரையாடல்களும், காட்சியமைப்புகளும் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன. மேற்சொன்ன மிகச் சிறிய விமர்சனங்களெல்லாம் படம் பார்த்து முடிந்து வெளியே வருகையில் மனதில் நிற்காமல் அம்பேத்கர் என்கிற மிகப்பெரிய ஆளுமை கம்பீரமாக மனதில் மம்முட்டியின் வடிவில் வந்து குடியமர்ந்து நம் நினைவுகளை அலைக்கழிக்கிறார். அம்பேத்கர் மறு உருவெடுத்து வந்தது போல மம்முட்டிக்கு அத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது வேடம்.

தன்னுடைய தகுதிகளையெல்லாம் சொல்லிவிட்டு என்னிடம் பாடம் கற்க விரும்பாதவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறலாம்என்று கம்பீரமாகச் சொல்லும்போதும், கூட பணியாற்றும் பேராசிரியர்கள் தான் குடிக்கும் தண்ணீரை குடிக்கமாட்டேனென்று சொல்லும்போது “உங்களுக்குத்தான் தீட்டுப்பட்ட நீரை புனிதமாக்கும் மந்திரம் தெரியுமே திரிவேதிஎன்று தீர்க்கமாகப் பார்த்துக்கொண்டே மந்திரத்தை உச்சரிக்கும்போதும், மனைவியிடம் பரிவு காட்டும்போதும், எப்போதும் கேலி இழையோடும் காந்தியுடனான உரையாடலிலும், வீறுகொண்டெழும் வேங்கையாக சீறும்போதும், “சங்கராச்சாரியின் இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரை அமர்த்தி அவர் கால்களில் பார்ப்பனர்கள் விழுவார்களா?என்கிற கேள்வி கேட்கும்போதும் மம்முட்டி அம்பேத்கராகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.




வட்டமேசை மாநாட்டில் கடுங்கோபமாக தன் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்துவிட்டு அணிந்திருக்கும் கோட்டை ஒரு முறை இழுக்கும் அந்த உடல்மொழி ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அடங்கிக்கிடந்த மக்களின் ஆவேசத்தை வெளிப்படுத்துகிறது..

டாக்டர் அம்பேத்கராக நடிக்க மம்முட்டியை தேர்வு செய்தது மிக பொருத்தமானது என்பதை நூற்றுக்கணக்கான தலித் மக்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மம்முட்டி பேசும் போது, அவர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட போதும் அவர்களிடம் கண்ணீரை வர வழைத்த போதும் உணர்ந்தோம். இதுவே திறமைமிக்க நடிகருக்கு மகத்தான வெற்றியாக அமைந்ததுஎன்கிறார் இயக்குநர் ஜாஃபர் பட்டேல்

இந்தியா பல தளங்களைக் கொண்ட ஒரு கட்டிடம். அதில் பல தளங்கள் உண்டு. ஆனால் மாடிப்படிகள் இல்லை. ஒருவன் எந்த்த் தளத்தில் பிறக்கிறானோ அந்த்த் தளத்திலேதான் மடிந்துபோகிறான்என்பது போன்ற அம்பேத்கரின் கூரிய சிந்தனைகள் படத்தில் வசனங்களாக இடம்பெறுகின்றன. எத்தனையோ நூல்களை வாசித்து திரட்டிக்கொள்ள வேண்டிய அறிவையும் தகவல்களையும் மூன்று மணி நேரம் இத்திரைப்படத்தைப் பார்க்க செலவழிப்பதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

காந்தி எரிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு
“காந்தி துறவியென்று யார் சொன்னது. அவர் சமயத்துக்குத் தகுந்தமாதிரி மாறிக்கொள்ளும் சந்தர்ப்பவாத அரசியல்வாதி
“காந்தியின் உயிருக்காக என் மக்களுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது
“பார்ப்பனர்கள் எவ்வளவு தந்திரமானவர்கள் என்பது உங்கள் பேச்சின் மூலம் தெரிகிறது
“மகாத்மாக்களின் மனதில் என்ன இருக்கிறது என்று சாதாரண மனிதர்களாகிய நமக்கெப்படித் தெரியும்?
என்பன போன்ற விமர்சனங்களையடக்கிய துணிச்சலான வசன்ங்களின்போது திரையரங்கில் எழும் ஆரவாரம் அடங்க நேரமாகிறது.

சாகு மகாராஜாவாக நடித்திருப்பவரின் முகத்தில் அம்பேத்கர் குறித்துப் பேசுகையில் தான் எத்தனை பெருமிதம்? அந்தப் பெருமிதம் நம்மையும் தொற்றிக்கொள்ளும் விதத்தில் அதனை வெளிப்படுத்துகிறார். அம்பேத்கரின் வாழ்க்கைத்துணைவியாய் வரும் சோனாலி குல்கர்னி தன் நுணுக்கமான முகபாவங்களால் தன் பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.

அம்பேத்கர் உணவு உண்ணாமல் பாத்திரத்தை திருப்பி அனுப்பியதும் அதனை எடுத்துக்கொண்டு அவரைத் தேடிவருகிறார் அவரது மனைவி; அதே நேரம் “இந்நேரம் காந்தி உண்ணாவிரதம் தொடங்கியிருப்பார்என்ற வசனம் மிக நுணுக்கமான பொருளை உள்ளடக்கியது. அதுபோலவே காந்தியின் சிறிய அளவிலான உருவச்சிலையை அம்பேதகர் தன் கைகளால் உருட்டுவது போன்ற ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் அந்த குறியீட்டுக் காட்சியும் மிக முக்கியமானவை. ஆயிரம் பக்க வசனங்கள் சொல்லாத செய்தியை அந்த ஒரு காட்சி சொல்கிறது. அது போலவே உண்ணாவிரதப் படுக்கையில் அம்பேத்கரிடம் காந்தி “இனி என் வாழ்நாள் முழுவதையும் தீண்டாமையை ஒழிக்கவே பாடுபடுவேன்என்று கூறிவிட்டு காந்தி இருமுவதாய்க் காண்பிக்கும் காட்சி. இதுபோன்ற காட்சிகளை முற்பாதியிலும் அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

“பிறப்பால் மட்டுமல்ல கொண்ட கொள்கையாலும் விருப்பத்தாலும் கூட நானொரு இந்துதான்என்று காந்தி அம்பேத்கரிடம் தெளிவாகச் சொல்கிறார். வருணாசிரமத்தை ஆதரிக்கும் காந்தியை திரைப்படம் வெளிச்சம் போட்டுக்காண்பிக்கிறது. காந்தி குறித்த கதையாடல்களை அதிகம் கேட்டு வளர்ந்த ஒரு சாதாரண இந்தியக் குடிமகனுக்கு காந்தியின் மறுபக்கத்தை மிக நேர்மையுடனும் தெளிவாகவும் வரலாற்றின் துணைகொண்டு காட்டுகிறார் இயக்குநர் ஜாபர் பட்டேல். இப்படத்தின் மூலம் காந்தியின் பிம்பம் உடைபடுகின்றது. அதைக் காணச் சகியாமல் ஜெயமோகன்களும் சாவித்திரி கண்ணன்களும் காந்தியின் அருமையென்ன பெருமையென்ன என்று கூவிக்கொண்டிருக்கிறார்கள்..



படம் முழுவதிலும் பிராமணர் என்கிற சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. தமிழுக்கு மாற்றுகையில் பார்ப்பனர் என்கிற சொல்லை பயன்படுத்தியிருந்தால் அதில் கிடைக்கும் அடர்த்தி வேறுமாதிரியானதாக இருந்திருக்கும். படம் முழுவதிலும் அம்பேத்கரை பொது மக்கள் பல தருணங்களில் தேசத்துரோகிஎன்றும் “அம்பேத்கர் ஒழிகஎன்றும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அன்றைக்கு இருந்த நிலையில் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் ஒன்றுதான் முதல் குறிக்கோள் என்று மக்கள் இருந்த நிலையில் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் விடுதலையை மனதில் வைத்து போராடிய ஒப்பற்ற தலைவரை சமூகம் எப்படிப் பார்த்தது அன்று; எத்தனை எதிர்ப்புகளையும் காழ்ப்புணர்ச்சிகளையும்  தாண்டி அவர் அந்த நம் அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கும் நிலையை அடைந்திருப்பார் என்பதை இக்காட்சிகள் பார்வையாளருக்கு நன்றாக உணர்த்துகின்றன.

அதிகாரமும் பார்ப்பனியமும் என்றென்றைக்கும் கூட்டாளிகளாகவே இருப்பவைதான். அது அடிமை பிரிட்டிஷ் இந்தியாவானாலும், சுதந்திர இந்தியாவானாலும் சரி.  தேரிழுக்கும் காட்சியில் தலித் மக்களை தேரிழுக்க விடாமல், பூணூல் அணிந்த பார்ப்பனர்களும் காவல்துறையும் இணைந்து அவர்க்ளை அடித்து நொறுக்கும் காட்சி இதனை மிகச்சரியாய் சித்தரிக்கிறது.

அம்பேத்கர் தனது வாழ்வின் பல்வேறு காலகட்டத்தில் விட்டுக்கொடுத்தும் அனுசரித்தும் போக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததையும் திரைப்படம் நேர்மையோடு பதிவு செய்கிறது. தனது ஆய்வுக்கட்டுரையை திருத்தச் சொல்லும் பேராசிரியரைப் பற்றி தோழியிடம் இரைந்து கோபமாகப் பேசிய அடுத்த நொடியே “என்ன செய்யப்போகிறீர்கள்?என்கிற தோழியின் கேள்விக்கு “திருத்துவேன்என்று வெறுப்புடன் கூறும் இடம் ஒரு எடுத்துக்காட்டு.

காந்தியாக நடித்த மோகன்கோகலேவிற்கும், காந்தியின் பாத்திரமுணர்ந்து மிகப் பொருத்தமாக காந்திக்கு தமிழில் குரல் கொடுத்தவருக்கும் முக்கியமாய் பாராட்டுதல்களை தெரிவிக்கவேண்டும். எந்த இடத்திலும் உறுத்தாத அளவான ஒளியமைப்பைக் கொண்ட ஒரு வரலாற்றுப் படத்துக்கேயுரிய பொருத்தமான அஷோக் மேத்தாவின் ஒளிப்பதிவு, உணர்வுகளுக்குத் தகுந்த ஆனந்த் மோடக்கின் இசை, காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் விருது பெற்ற நிதின் சந்திரகாந்த் தேசாயின் கலை இயக்கம என அனைத்தும் மிகச்சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது.

சவுதார் குளத்தில் இறங்குவதற்காக அம்பேத்கர் படகில் வந்திறங்கும் காட்சியின் பின்னணியில் வரும் பாடலும், அம்பேத்கர் தபேலா வாசிக்க, அவர் வாழும் பகுதியிலிருக்கும் மக்களிடையே பாடப்படும் பாடலும் மொழி புரியாவிட்டாலும் கூட மனதைக் கவர்கின்றன. பாடலில் பொருள் தேடச் சொல்கின்றன.

அம்பேத்கர் வாழ்நாள் முழுதும் நெடுங்காலம் பல மதங்களை அலசி ஆராய்ந்து அவற்றிலிருந்து தான் பவுத்தத்தை தனது நெறியாகத் தேர்ந்தெடுக்கிறார். இதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலமும் முயற்சிகளும், மிக அழகாக படத்தில் கூறப்பட்டுள்ளது.  பொதுவாக ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்கும்போது அவருடைய இறப்புக்காட்சியே உச்சகட்ட காட்சியாய அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் அம்பேத்கர் திரைப்படத்தில் லட்சோபலட்சம் மக்களுடன் அவர் பவுத்தத்தைத் தழுவும் காட்சியே இறுதிக்காட்சியாக்கப்பட்டு, அம்பேத்கரின் மறைவை எழுத்துக்களில் சொல்லி முடிப்பது மிகச் சரியான வித்தியாசமான அணுகுமுறை. காலத்தின் தேவையும் கூட.

காலமெல்லாம் சாதி ஒழிப்புக்காக அரும்பாடுபட்ட, இந்துவாகப் பிறந்துவிட்டேன். ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என்று சூளுரைத்த அம்பேத்கர் இந்து மதத்தைத் துற்ந்து பவுத்தம் தழுவும் சிலிர்க்க வைக்கும் காட்சியோடு நிறைவடைகிற்து படம்.

அம்பேத்கர் – தன் வாழ்நாளை சமூகத்திற்கென அர்ப்பணித்த பெருந்தலைவனின் வாழ்க்கை காவியம் இதுவரை அறியப்பட்ட வரலாற்று நூலை புரட்டுகையில் ஒன்றோடொன்று ஒட்டிகொண்டு நின்ற அல்லது ஒட்டவைக்கப்பட்ட பல தாள்களை பிரித்து, அறியப்படாத அந்தப் பக்கங்களை  மக்களுக்கு எளிதில் புரியும் வடிவத்தில் அளித்த மாயக்கரங்களுக்கு சொந்தக்காரர் இயக்குநர் ஜாஃபர் பட்டேல். அம்பேத்கரின் எழுத்துக்களூடே, அவர் வாழ்க்கை குறித்த குறிப்புகளூடே பயணப்பட்டு எவற்றையெல்லாம் நமக்கு காட்டவேண்டுமோ அவற்றையெல்லாம் நம்மை கைபிடித்து அழைத்துச் சென்று காட்டிய ஜாஃபர் பட்டேல் மற்றும் அவரது குழுவினருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.


Saturday, January 08, 2011

இரவைக் கொண்டாடுவோம்

(புத்தகச்சந்தையை ஒட்டி 7.1.2011 அன்று மாலை வெளியிடப்பட்ட “இரவு” நூலிற்காக எழுதப்பட்ட கட்டுரை இது. கவிஞர் மதுமிதா தொகுத்த இந்நூலில் 36 எழுத்தாளர்கள் தங்களுடைய இரவு குறித்த கருத்துகள், மனப்பதிவுகள், அனுபவங்கள், கதை, கவிதை ஆகியவற்றை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்கள். சந்தியா பதிப்பம் இதனை வெளியிட்டுள்ளது)



ரவு 10 மணியானால் என் தந்தை இப்படி சொல்வார்

“என் சாம்ராஜ்ய நேரம் தொடங்கிசிடுச்சு

உண்மைதான். எனக்கும் அப்படியே. ஊரெல்லாம் உறங்கத் தயாராய் இருக்கும் பொழுதில் நாம் மட்டும் ஏதோ ஒரு வேலைக்காக தயாராவது ஒரு வித கர்வத்தையளிக்கும். படிக்கிற காலத்தில் நான் படிக்க அமருகிற நேரம் இரவு 10 மணியாய் இருக்கும். விடிய விடிய என்னால் அதிகாலை 4 மணி வரை கூட படிக்க முடியும். ஆனால் 10 மணிக்குத் தூங்கி காலை 4 மணிக்கு எழ மட்டும் என்னால் முடியாது.

ஊரே விழிக்கும் வேளையில் தூங்குகிறாய். என்று அதிகாலையில் விழித்து விடும் என்னுடைய நண்பர்கள் கேட்பார்கள். இந்த தலைகீழ்த்தன்மை எனக்குப் பிடித்திருக்கிறது. இரவு எப்போதும் என்னை தாலாட்டியதில்லை. மாறாக உற்சாகம் கொள்ள வைக்கிறது.

இசை கேட்கும் இரவு, இலக்கியம் வாசிக்கும் இரவு, நண்பர்களுடன் பொழுதுபோக்கும் இரவு, மேடையில் கழியும் இரவு, தனிமை கனத்திருக்கும் இரவு, உற்சாகம் பொங்கும் இரவு, எழுதத் தூண்டும் இரவு என்று பல இரவுகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால் பொதுவாகவே எழுத்துக்களில் இரவு என்பதை இருளாகவும், இருளை கருப்பாகவும், கருப்பை துக்கத்தின் அல்லது ஒரு நெகடிவ் தன்மைக்கான குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.  பகல் ஒளி மிகுந்தது. வெளிச்சமானது; அதில் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை; எல்லோருடைய கண்களும் பார்க்கும் வண்ணம் பகலில் தவறுகள் நிகழாது என்கிற மாயத்தோற்றம் உண்டு. உண்மையில் தவறு செய்ய நினைப்பவருக்கு பகலென்ன இரவென்ன? சொல்லப்போனால் இரவுகளில் வீட்டில் காத்திருக்கும் துணையோ, உறவோ ஏதோ ஒன்றிற்காக வீட்டிற்குத் திரும்பும் நெருக்கடி நிறைய பேருக்குண்டு. ஆகவே தவறுகள் அல்லது தவறுகள் என்று கருதப்படுபவையெல்லாம்  அதிகமாக பகலில் நிகழவே வாய்ப்பு அதிகம்.

மனிதன் தூங்கும்போதுதான் தப்பு செய்யாமலிருக்கிறான் என்று யாரோ சொன்ன பொன்மொழி உண்டு. ஆகவே ஊர் உறங்கும் இரவில் நிகழும் தவறுகளை விட பகலில் நிகழும் தவறுகள் அதிகமாக இருக்கக் கூடும். இரவு என்பதை துக்கத்தின் குறியீடாகவும், தவறுகளின் குறியீடாகவும் திரைப்படங்களிலும், கதைகளிலும், கவிதைகளிலும் காண்கிறோம். என்னைப் பொறுத்தவரை இரவு கொண்டாட்டத்திற்குரியது. இரவை நான் கொண்டாடுகிறேன்.

ஊர் அடங்கிய பின்னர் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வரும் சன்னமான இசை ஆளை மயக்கும். என் சிறுவயதில் பள்ளிப் பிராயத்தில் இசையில்லாத இரவுகளே இல்லை எனலாம். ஒரு வானொலிப்பெட்டி வீட்டில் இருந்தது. நான் படித்தாலும், எழுதினாலும், அந்த வானொலியில் திரைப்படப்பாடல் ஒலித்துகொண்டேயிருக்கும். பகல் பூராவும் துள்ளல் இசைப்பாடல்களை ஒலிபரப்பினாலும், இரவுகளில் மட்டும் வானொலியில் எனக்கு மிகவும் விருப்பமான மெலடி பாடல்கள் ஒலிபரப்பாகும்போது அதை விட மனசிருக்காது. வானொலியைக் கேட்டுக்கொண்டே எல்லாவற்றையும் செய்வேன். ரேடியோ கேட்டுக்கிட்டே படிக்கிறியே? எப்படி மனசில் பதியும்என்று அம்மா திட்டிக்கொண்டே இருப்பது இன்னமும் காதில் ரீங்காரமிடுகிறது. ஆனாலும் விடமாட்டேன். இரவுகளிலும் இது தொடரும்.  அதிகாலையில் எழுந்து படித்தால் நன்றாக மனதில் பதியும் என்று பிறர் சொன்னதைக் கேட்டு நான் சிலநாட்கள் அதையும் முயன்றிருக்கிறேன். ஆனால் அதிகாலை கண்விழிப்பு எனக்கு தூக்கத்தையே கொடுத்தது. என் உடல் அப்படி பழகியிருந்தது எனக்கு மிகப்பெரும் பிரச்சனையிருந்த்து. அதனால் வழக்கம் போலவே இரவுகளையே தேர்ந்தெடுத்தேன் படிப்பதற்கு. உறங்கச் செல்லும் வேளையில் இளையராஜாவின் இசை எனக்கு கைகொடுத்திருக்கின்றது.

என் நண்பர்கள் என்னை ‘ராப்பிசாசுஎன்றும் ‘ராக்கோழிஎன்றும் செல்லமாய் அழைப்பார்கள். இரவில் படிக்கும் பழக்கமே பின்னாளில் என் பணிகளையும் இரவுகளில் செய்ய வைத்தது. பணிநிமித்தம் முக்கியமான கட்டுரை எழுதவேண்டுமென்றால் அவ்வபோது அதை இரவுக்குத் தள்ளிப்போட்டு எழுதுவேன். என்னுடைய பயணங்கள் அனைத்துமே இரவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். இரவுப்பயணம் அலாதியானது. அதிலும் ரயிலில் இரவுப் பயணம் அற்புதம்.

ஒரு நொடி கூட உறங்காமல் விழித்திருந்த இரவுகள் நிறைய உண்டு. அவை பெரும்பாலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய கலை இரவுகள் தான். “சிவராத்திரிக்கு கண்விழிக்கும் நீங்கள் ஒரே ஒரு நாள் இந்த கலை இரவுக்காக கண்விழியுங்கள்என்று பிரசாரம் நடக்கும்.  நாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கூட கலை இரவுகள் களைகட்டும். நான் கலை இரவுகளில் இயக்கப் பாடல்களைப் பாடுவேன். விடிய விடிய கண்விழித்து கலை நிகழ்வுகளைக் காண வரும் மக்கள் கூட்டத்தைப் பார்க்க வியப்பாகவே இருக்கும். அதிலும் நாகப்பட்டினம் நகரில் நடக்கும் கலை இரவு ஊர்த்திருவிழா போல. சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தெல்லாம் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் டிராக்டர்களிலும், வேன்களிலும் மாலை 6 மணியிலிருந்தே வந்து அவுரித்திடலை நிரப்பி விடுவார்கள். வங்கக்கடலே திடலில் வந்து சங்கமமானதைப் போல பார்க்க அத்தனை ஆனந்தமாயிருக்கும். அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் இந்த கலை இரவில் பாடுவது அதிலும் மக்கள் பாடல்களை அவர்களுக்காக பாடுவது என்பது மிகுந்த மனநிறைவையும் உற்சாகத்தையும் கொடுக்கும். நான் முதலில் ஒரு பார்வையாளராகத்தான் கலை இரவிற்குச் செல்லத் தொடங்கினேன்.  என்னை மாற்றிய பெருமையும் இந்த கலை இரவிற்கு உண்டு.

எத்தனையோ கற்றுக்கொண்டேன் அந்த கலை இரவுகளில். வாழ்க்கையை, மக்கள் பிரச்சனைகளை, நம்மை மீறிய ஒரு உலகமிருப்பதை எனக்கு என் பள்ளிப்பருவத்திலேயே அடையாளம் காட்டியது கலை இரவுகள் தான். கலை இரவுகளை நான் அதிகம் நேசிக்கிறேன். இந்த இருபதாண்டுகளில் கலை இரவு என்னும் வடிவம் பழகிப்போய் அது பழையதாகி இருக்கலாம். மக்களிடம் பேச ஒரு புது வடிவத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயமிருக்கலாம். ஆனால் என் வயதையொத்தவர்களிடம் கலை இரவுகள் ஏற்படுத்திய தாக்கத்தை நேரடியாக நான் கண்டிருக்கிறேன். கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், தேவராட்டம் என்று எல்லாவிதமான ஆட்டக்கலைகளையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது கலை இரவு. மண்ணின் கலைகளை ரசிக்கக் கற்றுக்கொடுத்தது. மக்கள் பாடல்களை கரிசல் குயில் கிருஷ்ணசாமி அண்ணனின் குரலில் இரவெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பாரதி கிருஷ்ணகுமார் போன்ற எத்தனையோ சிறந்த உரை வீச்சாளர்களின் பேச்சுக்களைக் கேட்டு என் பள்ளிப்பருவத்தில் கண்ணீர் விட்டிருக்கிறேன். இந்த இரவுகள் தான் என்னை ஆளாக்கின. சமூகத்தை நேசிக்க வைத்தன. என் சுயநலத்தைப் பொசுக்கின. என் வாசிப்பை அதிகப்படுத்தின. அரசியலில் ஆர்வம் கொள்ள வைத்தன. மக்களுக்காய் யோசிக்க, ஒரு சொட்டாவது விழிநீரை வெளியேற்ற வைத்தன, என் கலையை வளர்த்தன. நானும் ஓரிரவில் இரவு 11 மணி வாக்கில் முதன் முதலில் நாகை அருகே திருக்குவளையில் நடந்த கலைஇரவில் மேடையேறிப் பாடினேன். அன்றைக்குக் கிடைத்த மகிழ்ச்சி என் வாழ்நாளில் இனி கிட்டுமா என்று தெரியவில்லை. அன்றையிலிருந்து நிறைய மேடைகள், எத்தனையோ நகரங்களில் கிராமங்களில் என்று இயக்கப்பாடல்களைப் பாடியாகி விட்ட்து.

இன்று ஒரு பத்திரிகையாளராய் நானிருக்கிறேன். எழுதுகையில் இரவுகளில் எழுதினாலும் அது என்றைக்கு யாரை எப்போது எப்படி சென்றடைகிறது என்பது நமக்குத் தெரியாது. இதைவிடவும் எனக்கு ஒரு கலைஞராய் கலை இரவில் மக்களிடையே பாடுவது அதிக மனநிறைவையும், மகிழ்வையும் அளித்தது. இந்த இரவு வீணாகவில்லை. உருப்படியாய் எதோ செய்கிறோம் என்கிற நிறைவை அளித்தது.

ஒவ்வொரு கலை இரவை முடித்துவிட்டு வந்தபின்னும், பல இரவுகள் நானும் என் பெற்றோரும் அதுகுறித்து சிலாகித்துப் பேசியவண்ணம் இருப்பதெல்லாம் இப்போதும் மனக்கண்ணில் நிழலாடுகின்றன. என் தந்தை தமுஎகசவின் மாவட்டச் செயலாளராய் இருந்தார். அதனால் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார். அவரும் ஒரு ராக்கோழி என்பதால் எல்லா வேலைகளையும் இரவுகளில் தான் செய்வார். அம்மா “அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்குஎன்று என்னை கேலி பேசுவார்.

என் படிப்பை முடித்துவிட்டு பணிநிமித்தம் நான் செனைக்கு வந்தபோது சென்னை சட்டென்று இரவு 10 மணிக்கெல்லாம் உறங்கும் நகரமாகிவிடுவதைப் பார்க்க வியப்பாய் இருந்தது. எங்கள் ஊரில் திரைப்படத்திற்குச் செல்வதென்றால் பெரும்பாலும் இரண்டாவது காட்சிக்குத்தான் செல்வோம் இங்கே 10 மணிக்கு நகரம் உறங்கிவிடுவதைப் பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது. தூங்கா நகரம் என்ற பெயருக்காகவே மதுரையை மிகவும் பிடிக்கும்.

ஒரு நேரத்தில் என் வேலை போய், வீட்டிற்கு வாடகை கொடுக்க இயலாத சூழலில் வீட்டை காலி செய்து பொருட்களையெல்லாம் நாகையில் உள்ள பெற்றோர் வீட்டில் கொண்டு வைத்துவிட்டு நான் மட்டும் தோழர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கத் தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் ஒரு வீடு. ஏராளமான நண்பர்களைப் பெற்றிருக்கும் நான் ஓரிடத்தில் தங்க இயலாமல் போகும்போது இன்னொரு தோழியோ தோழனோ கைகொடுத்த நிலைமை இருந்தது. தோழர்கள் ஓவியா, நீலகண்டன், அமுதா, ரேவதி, நீதிராஜன், ஜாஃபர், நா.வே.அருள், அ.குமரேசன், லட்சுமி, கலைமுகில், ராஜன்குறை, மோனிகா, மலர்விழி, மல்லிகா, கல்பனா, பாரதி புத்தகாலயம் சிராஜுதீன், அ.மங்கை போன்ற பலருடைய வீடுகளிலும், தமுஎகசவின் மாநிலக்குழு அலுவலகத்திலும் குறைந்தபட்சம் ஒரு இரவாவது தங்கியிருக்கிறேன்.

மாலை அரை அலுவலகம், அதன்பின்னர் கூட்டங்கள் அல்லது தோழர்களை சந்தித்தல் என்று இரவு வரை தாக்குபிடித்தாலும் இரவு 9 மணிக்கு எங்கு போவது என்ற கேள்வி எழும். யார் அந்த நேரத்தில் ஊரில் அல்லது வீட்டில் இருக்கிறார்கள் என்று கைபேசியில் பேசிவிட்டு அங்கே போய்விடுவது வழக்கம். எனக்கென்று ஒரு டி.வி.எஸ். சாம்ப் இருக்கிறது. அதனால் எத்தனை மணியானாலும் இரவில் எங்கு வேண்டுமானாலும் போய்விடும் வசதி இருந்த்து. “டான் குயிக்ஸாட்டின் குதிரை போன்றது உங்கள் வாகனம். டான் குயிக்ஸாட் தனது குதிரை இரவு எங்கே களைத்து நிற்கிறதோ அங்கே தங்கி விடுவான். அது போல்வே இரவு இறுதியாக உங்கள் வண்டி நிற்கிறதோ அங்கே தங்கி விடுகிறீர்கள்என்று ஒரு முறை கவிஞர் லீனா மணிமேகலை என்னிடம் கூறியதை அவ்வபோது நினைத்துக்கொள்வேன்..

தோழர்கள் நீலகண்டன், அமுதா, மலர்விழி – இவர்களோடுதான் அதிக இரவுகளை கழித்திருக்கிறேன் அந்த காலகட்டத்தில். அப்போது மலர்விழிக்கு சொந்தமான அச்சகம் ஒன்றில் நீண்டநாள் தங்கியிருந்தேன். மறக்க முடியாத இரவுகள் அவை.

நான் நேசிக்கும் இரவுகள் எனக்கு பெரும் சோதனையாய் அமைந்த காலமும் வந்தது. அப்போதுதான் ஈழத்தின் பேரவலமும், நெஞ்சில் நீங்காத காயத்தை உண்டாக்கிய இறுதிப் போரின் நேரம். அந்த செய்திகளும் காட்சிகளும் கண்டு விம்மி வெடிக்கும் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அந்த அச்சகத்தில் தான் நான் பல இரவுகளை மலர்விழியோடு கழித்தேன். பிரபாகரனின் உடல் என்ற ஒன்றை தொலைக்காட்சியில் கண்டபோது என் சிறுவயதிலிருந்து நேசித்த ஒரு பிம்பம் இப்போதில்லை என்கிற உண்மையை நம்ப மறுத்தது மனம். இரவுகளில் இணையத்தில் மூழ்கி பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்று குழம்பித் தவித்து ஒவ்வொரு புகைப்படமும் வெளியாக வெளியாக உறைந்து போனேன். புலிகள் மேலிருந்த விமர்சனமெல்லாம் மறந்து போய் பித்து மனநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன் அந்த சமயத்தில்.

அன்றாடம் இரவுகளில் இரண்டு மூன்று மணி வரை நானும் மலர்விழியும் அமர்ந்து இணையத்தில் ஈழம் குறித்த செய்திகளை வாசிப்பது படங்களை சேகரிப்பது என்பதை வாடிக்கையாக வைத்திருந்தோம். கோடரிகொண்டு பிளக்கப்பட்ட பிரபாகரனின் கபாலமும், எண்ணற்ற மக்கள கொத்து கொத்தாய் மடிந்த அவலமும் உறங்கவிடாமல் என் இரவுகளை இம்சித்தன. நான் இரவுகளில் வேலை செய்பவளாதலால் என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் போனது. இணையத்தில் கிடைக்கப்பெறும் அத்தனை காணொளிகளையும் படங்களையும் பார்த்துப் பார்த்து குழம்பி பித்து நிலையில் இருந்தேன் எனலாம். இரவுகள் எல்லாமே இணையத்தில் வீணாகின. ஒரு கட்டத்தில் இவற்றில் எந்த புகைப்படத்தையோ காணொளியையோ இனி பார்க்கக்கூடாது என்று முடிவு செய்து தவிர்க்கத் தொடங்கினேன். இது என் இரவுகளை மீண்டும் எனதாக்கிக் கொள்ளும் ஒரு யுக்தி. மீளாத் துயரிலிருந்து என்னை நானே மீட்டெடுக்க நிர்பந்தித்துக்கொண்டேன். இன்று வரை ஈழம் என்ற பெயரில் வரும் எந்த காணொளியையும் படத்தையும் பார்ப்பதேயில்லை நான். இந்த முயற்சி ஓரளவிற்கு கைகொடுத்தது. மீண்டும் என் இரவுகள் எனக்குச் சொந்தமாயின. மீண்டும் இரவுகளில் வேலை செய்யத் தொடங்கினேன். அதன்பின் தான் அதிகமாக எழுத்த் தொடங்கினேன் என்று நினைக்கிறேன்.

ஐஸ்ஹவுஸ் மசூதி போகும் வழியில் ராயப்பேட்டையில் இருந்தது நாங்கள் இருந்த அச்சகத்தின் அலுவலகம். ஒரு கட்டிடத்தின் சின்ன சந்திற்குள் நுழைந்து உள்ளே வந்தால் அச்சகம். அந்த சின்ன சந்தில் இரவில் மட்டும் படுக்க வரும் இரண்டு வயதான் பாட்டிகள் இருந்தார்கள். நான் ஒவ்வொரு நாளும் அவர்களைத் தாண்டித்தான் அச்சகத்திற்குள் வருவேன். ஒவ்வொரு முறையும் இருட்டில் அவர்களை மிதித்து விடக்கூடாதே என்று ஜாக்கிரதையாக வருவேன். சிலசமயம் மிதித்துவிடுவதும் உண்டு. அந்த பாட்டிகள் எங்களுக்கு காவல் போலிருந்தார்கள். அவர்களைத் தாண்டித்தான் யாராயிருந்தாலும் உள்ளே வரவேண்டும். ஒரு நாள் விசாரித்தபோது ஒரு பாட்டி சொன்னார் “பகலில் எங்காவது போயிடுவேன். நாலு காசு வேணும்ல சாப்பிட.. நைட்டு எங்கே போறது. தூங்கணுமே. அதான் இந்த சந்துக்கு வந்து படுத்துடுவேன்.என்றது பாட்டி. அவருடைய மகனும் மகளும் இதே ஊரில் இருப்பதாகவும் ஆனால் இவரை கைவிட்டுவிட்டதாகவும் சொன்னபோது வேதனை அதிகமானது. இன்னொரு பாட்டிக்கும் கிட்டத்தட்ட இதே கதைதான். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருந்தார்கள். இந்த தள்ளாத வயதில் அந்தப் பாட்டிகளின் நடைபாதை வாழ்க்கை துயரமானது.

ஒரு இரவு நான் அலுவலகத்திலிருந்து என் வண்டியில் வந்துகொண்டிருந்தேன். பீட்டர்ஸ் சாலையோர நடைபாதையில் புதிதாய் பளீர் விளக்கொளியில் ஒரு ஷாமியானா பந்தல் போடப்பட்டு கூட்டமாக இருந்தது. சரியாய் கவனிக்காமல் வந்து அச்சகத்தில் புகுந்தேன். திடீரென்று உறைத்தது. இரண்டு நாளைக்கு முன்புதான் நான் வழக்கம்போல இரவு வரும்போது பாட்டி முனகிக்கொண்டிருந்தது. வயிறை வலிக்குதுஎன்றது. மறுநாள் காலையில் பாட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. இரண்டு நாளாயிற்று..அவசரமாய் வெளியே வந்தேன். விளக்கு வெளிச்சத்தை நோக்கி நடந்தேன். நடைபாதையிலேயே ஷாமியானா போடப்பட்டு, பளீர் விளக்கொளியில் பாட்டி சவப்பெட்டிக்குள் கிடந்ததைப் பார்த்தேன். இன்னொரு பாட்டி என்னைக் கணடதும் ஓடி வந்து கண்ணீர் விட்டது. நான் ஒரு வார்த்தையும் பேசாமல் அச்சகத்தில் நுழைந்தேன். நடைபாதையில் வாழ்ந்து நடைபாதையிலேயே மறுநாள்  பாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட இருக்கிறது. தாங்க இயலாமல் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினேன். மலர்விழிக்கு கைபேசியில் அழைத்து தகவல் சொல்ல முடியாமல் விம்ம, அவள் உடனே கிளம்பி வந்தாள். அதற்கு முன் நீலகண்டனும், அமுதாவும் வந்து நின்றார்கள். பாட்டியின் உடல் இருக்கும் இட்த்திற்குப் போவோம் என்றார்கள். எனக்கென்னவோ அங்கு போகவேண்டுமென்று தோன்றவில்லை. போகவும் இல்லை. பாட்டியின் சடலம் நடைபாதையில் அன்று இன்னொரு பாட்டி இன்னும் சிலரின் துணையுடனும் இரவு முழுதும் இருந்த்து. அந்த இரவு முழுதும் சவப்பெட்டிக்குள் கிடந்த பாட்டியைப் போலவே நானும் கிடந்தேன் அச்சகத்தினுள்.

நமக்காவது அச்சகம் இருக்கிறது. நண்பர்கள் இருக்கிறார்கள். நடைபாதைவாசிகளுக்கு யாரிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ளும் எனக்கு பாட்டியின் உடலோடு இரவைக் கழித்து இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய இன்னொரு பாட்டியின் உருவம் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறது.

நட்சத்திரங்கள் பகலில் விழிகளுக்குப் புலப்படுவதில்லை. அவை மனிதர்களுக்குக் காட்சி தர தேவைப்படுவதும் ஒரு இரவுதானே?

இரவைக் கொண்டாடுவோம்!