Wednesday, July 23, 2014

அத்துமீறுகிறதா காவல்துறை?

சென்ற ஆண்டு மரணமடைந்த தர்மபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனின் முதலாண்டு நினைவஞ்சலி நிகழ்வுக்காக ஊர் மக்கள் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 6 பேரையும் தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்த்தில் கைது செய்திருக்கிறது தர்மபுரி மாவட்ட காவல்துறை. அவர்கள் உள்ளூரில் உள்ள வன்னிய சாதி தலைவர்களைக் கொல்லும் நோகக்த்தில் தலைமறைவாய் இருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரிடம் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்று காவல்துறை குற்றம் சாட்டுகிறது. ‘துடி’ இயக்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் அவர்கள் அரக்கோணத்திலும், சென்னை மெரினா கடற்கரையிலும் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்றும் காவல்துறை கூறுகிறது.

அரக்கோணத்தில் ஆயுதப் பயிற்சி எடுத்ததாக தர்மபுரி மாவட்ட காவல்துறை கூறுவதுகுறித்து அரக்கோணம் உள்ள வேலூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் இந்தியா டுடே பேசியபோது “இத்தகவலை உறுதிப்படுத்தவேண்டும். உறுதிப்படுத்தாமல் என்னால் எதுவும் சொல்ல முடியாது” என்றார். “வேலூர் காவல்துறைக்கும் சென்னை காவல்துறைக்கும் தெரியாமல் ஆயுதப் பயிற்சியை நத்தம் இளைஞர்கள் பெற்றார்களா?” என்று கேள்வி எழுப்புகிறார் துடி இயக்கத்தின் காப்பாளர் கிறிஸ்துதாஸ் காந்தி. ”எங்கள் இயக்கம் இதுவரையில் தலித் மக்களின் கல்விக்காக மட்டுமே பாடுபடும் ஓர் இயக்கம். ஆயுதப் போராட்டத்தில் முற்றிலும் நம்பிக்கை இல்லாத இயக்கம். தேவையில்லாமல் ஒரு தலித் இயக்கத்தை நக்சல் இயக்கம்போல சித்தரிப்பதன் மூலம் தலித்துகளுக்காக வேறெந்த அமைப்பும் வேலைசெய்யக்கூடாது என்கிற எச்சரிக்கையை விடுக்கிறது காவல்துறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.” என்றார்.

இளவரசனின் தந்தை இளங்கோவிடம் பேசியபோது “காவல்துறை. ஊரில் எல்லோரும் பதட்டத்தில் இருக்கிறார்கள். யாரை எப்போது கைது செய்வார்கள் என்றே தெரியாமல் ஆண்கள் ஊருக்கு வெளியே இருக்கிறார்கள். ஒரு நினைவஞ்சலி செலுத்த முயன்றால் தேசிய பாதுகாப்பு சட்டம் போடுவது எந்த ஊரில் நடக்கும்?” என்றார். “இமானுவேல் சேகரனுடைய நினைவிடம்போல இளவரசனுடைய நினைவிடம் தலித் மக்கள் ஆண்டுதோறும் வந்து அஞ்சலி செலுத்தும் இடமாக மாறிவிடக்கூடாது என்று நினைக்கிறது காவல்துறை. அதனால்தான் இவ்வளவு செய்கிறது. அஸ்ரா கர்க் தன் தலைமையிலான மாவட்டத்தில் நக்சல் இயக்கம் இல்லை என்று பிரச்சாரம் செய்வதற்காகவே அரக்கோணத்திலும் சென்னை மெரினா கடற்கரையிலும் ஆயுதப் பயிற்சி நடந்ததாகக் கூறுகிறார். நத்தம் கிராமத்திலிருந்து 50 பேரை அழைத்துக்கொண்டு வெளியேறி பயிற்சி தரும்வரை காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டாக கிராமத்தில் காவல்துறை குடியிருக்கிறதே? பிரிட்டிஷ் இந்தியாவில் கூட 144 தடைச் சட்டம் இவ்வளவு நாட்கள் எங்கும் நீடித்ததில்லை. ஆண்டுக்கணக்கில் நீட்டிப்பது உரிமை மீறல். அதை முதலில் திரும்பப் பெறவேண்டும்” என்கிறார் கிறிஸ்துதாஸ் காந்தி.

இது குறித்து பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில் கள ஆய்வுக்குச் சென்று வந்த குழு அண்மையில் விடுத்த அறிக்கை கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறது:1. நத்தம் கிராமத்தில் தலித்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது எனில் எப்போது அது கைப்பற்றப்பட்டது? ஏன் பத்திரிகையாளர்கள் அப்போது அழைக்கப்படவில்லை?  2.கடந்த பல மாதங்களாக நத்தம் கிராமத்துக்கு தீவிரவாதிகள் வந்து செல்வதும் நத்தம் தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதும் காவல் துறைக்குத் தெரியுமெனில் ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இளவரசன் நினைவு நாள் வரும் வரை காத்திருந்தனர்? 3. இளவரசன் சமாதிக்கு அருகில் கடந்த ஓராண்டாக சி.சி.டி.வி காமரா பொருத்தப்பட்டுள்ளது சமாதிக்கு வருபவர்களை மட்டுமின்றி ஊருக்குள் வந்து செல்பவர்களையும் அது படமெடுக்கும். ஆயுதப் பயிற்சி அளித்தவர்கள் வருகையை அது படம் எடுக்கவில்லையா? 4.மெரீனாவிலிருந்து ஆறு கி.மீ தொலைவில் கடற்கரையில் ஒரு ஆயுதப் போராட்டக் குழு ஆயுதப் பயிற்சி எடுக்க முடியுமா? தருமபுரி காவல்துறை ஒரு வேளை மாநகரக் காவல்துறை மற்றும் இதர கண்காணிப்புத் துறைகளைக் கிண்டல் செய்கிறதா?

இக்கேள்விகளுக்கு விடைதேடி தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்கை தொலைபேசியில் இரு முறை தொடர்புகொண்டபோதும் தானே அழைப்பதாகக் கூறியவர். இந்த இதழ் அச்சேறும் வரை தொடர்புகொள்ளவே இல்லை. 

(நன்றி: இந்தியா டுடே)

Monday, July 14, 2014

பொன்னியின் செல்வன்

மதுரையின் டி.வி.எஸ். லட்சுமி சுந்தரம் அரங்கம் நிரம்பி வழிந்தது. கல்கியின் பொன்னியின் செல்வனை மேடையில் கண்டுவிட துடித்தனர். எழுதப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவுபெறும் இந்த வேளையில் மேஜிக் லேண்டன் குழுவினரின் உருவாக்கத்தில் கல்கியின் வரலாற்றுப் புகழ் பெற்ற நாவல் மேடை வடிவம் கண்டிருக்கிறது. 1999ல் மேடையேறிய இந்த நாடகத்தை இந்த ஆண்டு மீண்டும் மேடையேற்றியுள்ளனர். அப்போது சின்ன பழுவேட்டரையாக நடித்த பேராசிரியர் மு.ராமசாமி இப்போது பெரிய பழுவேட்டரையராக நடிக்கிறார். அப்போது நடித்த நாசர் இப்போது இல்லை. இப்படி சிற்சில மாற்றங்கள்




தோட்டாதரணியின் பிரம்மாண்டமான மேடை அமைப்பு முதலில் பார்வையாளர்களை உள்ளிழுக்கிறது. முதல் காட்சியிலேயே பல கால எந்திரத்தில் பயணித்து பல நூற்றாண்டுகளைத் தாண்டிவிட முடிகிறது. பொன்னியின் செல்வன் என்கிற மகத்தான காவியத்தை வாசித்தவர்களுக்கு நாவலின் நிகழ்வுகள் ஒரு திரைப்படம் போல கண்முன் நகரும் அதிசய அனுபவத்தை அடைந்திருப்பர். அந்த அதிசய அனுபவத்தை மேடையிலும் எதிர்ப்பார்த்துச் செல்பவர்களுக்கு நாவல் தரும் கற்பனைக் காட்சிகள் இன்னும் உவப்பாக இருக்கக்கூடும். ஏனெனில் அப்படியான ஒரு கதையை மேடையில் கொண்டு வருவதென்பது சவாலானது. திரைப்படமாகும் சாத்தியம் வேண்டுமானால் அதிகமாக இருக்கிறதே ஒழிய நாடக மேடைக்கே உள்ள  சில வரையறைகள் பிரம்மாண்டத்தை காட்சிப்படுத்த இயலாத ஒன்றுதான்.. ஆனாலும் பொன்னியின் செல்வன் நாடகத்தை நாம் கண்கொட்டாமல் பார்க்கிறோம். ஒரு காட்சியும்கூட அலுப்புத் தட்டாமல் விறுவிறுவென்று செல்கிறது நாடகம். 

கடலில் சுழிக்காற்று ஏற்படுவது ஓர் அத்தியாயம் முழுவதும் நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சியினை எவ்வாறு மேடையில் கொண்டுவரப்போகிறார்கள் என்கிற ஆவல் பார்வையாளர்களுக்கு இருந்தது. ஒரு பெரும் கூட்டமான மனிதர்களை வைத்து சுழிக்காற்றையும் கடலின் கோரத்தாண்டவத்தையும் அபிநயிக்க வைத்திருப்பது புத்திசாலித்தனம். அவர்களுடைய கரங்களின் அபிநயத்தில் சிறு சிறு அலைகளாக வெண் நுரை பொங்குவதையும் கடலில் கப்பல் காற்றில் அலைக்கழிந்து ஆடுவதையும் காண முடிகிறது. பிரமிக்க வைத்த காட்சி இது.  அருள் மொழி வர்மனை ஏன் மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்கிற கேள்வியுடன் நாகப்பட்டினம் சூடாமணி விஹாரத்தை மக்கள் முற்றுகையிடும் காட்சிக்குப் பின் வரும் கடல் பொங்கி ஊருக்குள் வரும் காட்சியை நாடகத்தில் வைக்காமல் விட்ட புத்திசாலித்தனமும் பிரமிக்கவே வைக்கிறது.  இப்போது நாம் சுனாமி என்று அழைக்கும் கடற்கோள் குறித்த வர்ணனைகளை மிகத் துல்லியமாக கல்கி தந்த அத்தியாயம் அது. 

எந்தெந்த அத்தியாயங்களை எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற தேர்வு மிகச் சரியாகவே இருக்கிறது. அதுபோலவே நடிகர் தேர்வும். ஆதித்த கரிகாலனின் வருகைக்குப் பின் மேடை நிறைவானதாக மாறுகிறது. பிரபுமணி அத்தனை இயல்பாக நடிக்கிறார் எனினும் பசுபதியின் பாதிப்பிலேயே நடிக்கிறார். நந்தினியாய் வரும் மீரா கிருஷ்ணனின்  குரலும் கம்பீரமும் மறக்கவியலாதது. இயல்பிலேயே சாகசக்காரியாய் கல்கியால் வர்ணிக்கப்பட்ட கோடிக்கரை பூங்குழலியாக நடித்த காயத்ரி ரமேஷின் உடல்மொழி அந்த பாத்திரத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது. மிக அநாயசமாக சுவர்களில் தாவி ஏறுவதும், ஓடுவதுமாக வீரமகள் ஒருத்தியை கண்முன் நிறுத்துகிறார். 'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?' என்று பூங்குழலி பாடும் பாடலில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கவேண்டும் பின்னணி பாடிய பெண்.

வந்தியதேவனின் பாத்திரத்தை வர்ணிக்கையில் கல்கி இப்படிக் கூறுவார் “மஞ்சள் பூசிய முகத்தைப் பார்த்தாலே அவனுக்கு தலை கிறுகிறுத்துவிடும்”. அதை அப்படியே உள்வாங்கி நடித்திருக்கிறார் வந்தியதேவனாக நடித்த ஸ்ரீகிருஷ்ணா தயாள்.. கதாநாயகத்தனமும் வேண்டும். கொஞ்சம் கிறுக்குத்தனமும் சாகசமும் வீரமும் காதலும் மையலும் கொண்ட அந்த பாத்திரம் மேடையில் அப்படியே உலவுகிறது. 

பசுபதி வடிவமைத்த சண்டைக்காட்சிகள் கூடுதலாய் ஈர்க்கின்றன. உடைகள் வடிவமைத்திருக்கும் ப்ரீத்தி ஆத்ரேயாவுக்கு சிறப்பான நன்றியைச் சொல்லலாம். உயிரைக்கொடுத்து நடித்தாலும் வெளியே தெரியாமல் முகத்தையே முக்கால்வாசி மறைத்துவிடும் கிரீடங்கள் நகைகள் எலலாம் இல்லாமல் அளவான உடைகள். பானுவின் கச்சிதமான ஒப்பனை நடிப்பில், காதல் காட்சிகளில் வழியும் இனிமையான புல்லாங்குழல் இசை, இளவரசரின் வருகையை கட்டியம் கூறும் முரசு என்று இசைக்குழு நாடகத்துக்கு உயிர் தந்திருக்கிறது.  இடைவேளையில் வெளியே சென்றவர்களை வந்து முரசறைந்து உள்ளே வரும்படி கூறிய சமயோசிதத்தை மக்கள் ரசிக்கவே செய்தார்கள். 

வசனங்கள், குறிப்பாக ஈழப்போர் குறித்த உரையாடல்கள் சமகால அரசியலுடன் ஒத்துப்போகின்றன. பூங்குழலி அறிமுகமாகும் காட்சியில் கடல் நீலத்தில் தெரியும் அந்த ஒளி இன்னமும் கண்களில் நிற்கிறது. நேர்த்தியான ஒளியமைப்பு இன்னொரு பாத்திரமாகவே நாடகம் முழுவதும் கூடவே வருகிறது. 

மந்தாகினி இறக்கும் காட்சி துண்டாக முடிவதுபோன்ற உணர்வைத் தருகிறது. ஆழ்வாக்கடியான் நம்பி பாத்திரம்தான் இன்னும் கொஞ்சம் பூசினாற்போல் இருந்திருக்கவேண்டும். பொன்னியின் செல்வன் நாவலை வாசிக்காமல் நாடகம் பார்க்க வருபவர்களுக்கு கதைமாந்தர்கள் எந்தளவு மனதில் பதிவார்கள் என்பது சந்தேகமே. இடையிடையே இருவர் வந்து இக்கால உடையில் தோன்றி பார்வையாளர்களிடம் பேசுகிறார்கள். யானை உருவத்தை மேடையில் கொண்டு வரும்போது கால்களில் அணிந்திருக்கும் பேன் தெரிவது. அரேபியர்களை குறிக்கும் உடைக்காக ஷேக்குகள் அணிந்திருக்கும் முழு அங்கியை அணிந்து வருகிறார்கள். இப்படி சில குறைகள் இருந்தாலும் ஈர்க்கவே செய்கிறான் பொன்னியின் செல்வன்.

(நன்றி: இந்தியா டுடே)

Wednesday, July 09, 2014

மனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை

ரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில்   தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் மழைத்தூறலுடன் கொல்லம் அருகேயுள்ள இரவிபுரத்திலுள்ள அந்த வீட்டிற்குச் சென்றபோது குழந்தைமை பொருந்திய சிரிப்புடன் வரவேற்கிறார் மணியன்பிள்ளை.  தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சீரியல். வெளியே தடதடத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு ரயில். ஓர் உரையாடலுக்குத் தயாராய் எதிரில் வந்து அமர்கிறார்.

யார் இந்த மணியன்பிள்ளை? “பதினேழு வயதுமுதல் இன்று வரையிலான என்னுடைய வாழ்க்கை முழுவதுமே பயத்தாலும் பாதுகாப்பின்மையாலும் உழன்றுகொண்டிருக்கிறது. இளமையை என்னால் அனுபவிக்க இயலவில்லை. மனைவியுடன் ஒருபோதுமே மன அமைதியாகப் படுத்துத் தூங்கியதுமில்லை. குற்றவாளிகளாலும் குற்றவாசனையுள்ளவர்களாலும் நிம்மதியாகத் தூங்க முடியாது. சிறைச்சாலைகளும் போலீசாரின் சித்திரவதைகளும் தந்த வியாதிகள்...” என்கிறார் ‘நான்’ என்கிற தலைப்பில் தன்குறித்து எழுதும் முன்னாளில் திருடனாயிருந்த மணியின்பிள்ளை. ஒரு நாள் திருடனை வாழ்நாள் திருடனாக்கியது காவல்துறை என்பதை தனது சுயசரிதையில் பல்வேறு வாழ்க்கைச் சம்பவங்கள் மூலம் நமக்குச் சொல்கிறார். இவர் சொல்லச் சொல்ல மலையாளத்தில் ஜி.ஆர். இந்துகோபன் எழுதிய இவரது சுயசரிதை நூல் இன்றுவரை 6,000 பிரதிகள் விற்றிருக்கின்றன. அண்மையில் தமிழில் குளச்சல் முகமது யூசுப் மொழியாக்கத்தில் தமிழில் ’திருடன் மணியன்பிள்ளை’ என்கிற பெயரில் வெளிவந்தது. தமிழ் இலக்கிய வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த இப்பிரதி குறித்து மலையாள இலக்கிய உலகில் நூல் வெளியான சமயத்தில் கனத்த மௌனம் நிலவியதாக மதுரையில் இந்த நூலுக்காக நடந்த விமர்சனக்கூட்டத்தில் பேசிய ஜி.ஆர்.இந்துகோபன் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அதே கூட்டத்தில் வந்து பேசமுடியாமல் கண்ணீர் சிந்தியவாறே கூட்டத்தை நோக்கி கைக்கூப்பிய மணியன்பிள்ளையின் மனதில்  பொங்கும் மனிதநேயத்தை தரிசிக்கவேண்டுமெனில் நூலை வாசிப்பது ஒன்றுதான் வழி. இவர் திருடிய ஒரு வீட்டின் சிறுமி நீதிமன்றத்தில வந்து அழுததைப் பார்த்த அவர் சிறையிலிருந்து ஒரு கடிதம் எழுதி “மகளே! மாமா திருடியதை உனக்கே திருப்பித் தந்துவிடுவேன். இனி நீ நீதிமன்றத்துக்கு வரவேண்டாம். அழவும் வேண்டாம்” என்று ஒரு அக்குழந்தையிடம் பாவமன்னிப்பு கேட்கும் இடம் ஒன்றுபோதும்.

நூலில் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், சிறைத்துறையினர், பெரும்புள்ளிகள், அரசியல்வாதிகள் என்று பலர் குறித்தான உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவர்கள் எல்லாம் இதை எவ்வாறு எதிர்கொண்டனர்? “நீதிபதிகள் போன்ற வெகு சிலருடைய பெயர்களை மாற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். மற்றபடி என் உறவுக்காரர்கள் இதை விரும்பவில்லை. ஆனால் எனக்கு அவர்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் இந்த நூல் வருவதற்கு முன்பிருந்தே இல்லை” என்கிறார் மணியன்பிள்ளை. நூல் வெளியானபின் காவல்துறை அவர்மீது இதுவரை 12 வழக்குகள் போட்டிருக்கிறது. அதில் 11 வழக்குகளில் மீண்டு ஒரே ஒரு வழக்கு மட்டும் நடந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார் மணியன்பிள்ளை சகோதரியின் வீட்டில் வசிக்கிறார். சாலைகளில் பேருந்தில் ரயிலில் என்று செல்லும்போது மக்கள் அடையாளம் கண்டுகொண்டு வந்து பேசுவதைக் குறிப்பிடும் அவர் “மக்கள் என்னிடம் நீங்கள்தானா மணியன்பிள்ளை என்று கேட்டு அன்போடு அணைத்துக்கொள்கிறார்கள். என்ன வித்தியாசம் பாருங்கள்!” என்கிறார்.”நான் 95ல் வி.ஆர்.எஸ். வாங்கிவிட்டதால் இப்போது ஃபீல்ட் எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை.” என்று சிரிக்கிறார்.

ஒரு கச்சிதமான திரைக்கதை போல உள்ளது மணியன்பிள்ளையின் வாழ்க்கை. 65 வயதாகும் அவருடைய வாழ்வில் நிகழ்ந்தவற்றைவிட ஒரு சினிமா எதையும் பெரிதாகச் சொல்லிவிடப்போவதில்லை. அத்தனை திகில், திருப்பங்கள், வேதனைகள், மரணங்கள், உயரங்கள், பள்ளங்கள் என்று எல்லாவற்றையும் பார்த்துவிட்ட அவரிடம் எல்லாமே அனுபவங்களாக எஞ்சி நிற்கின்றன. மணியன்பிள்ளையிடம் இந்த நூலில் உங்களுக்குப் பிடித்த பகுதி எது என்று கேட்டால் “அம்மா குறித்தவைதான்” என்கிறார். தன் பர்ஸில் நடிகை அமலாவின் சாயலில் இருக்கும் மனைவி மெஹருன்னிசா, தங்கை, தங்கையில் பிள்ளைகள் என்று குடும்பத்தினர் அத்தனை பேரின் புகைப்படங்களையும் பாஸ்போர்ட் அளவில் வைத்துக்கொண்டே போகுமிடமெல்லாம் செல்கிறார். மெஹருன்னிசாவை மணக்க முஸ்லிமாக மாறி யூசுப் பாட்சாவானார்.


இவருடைய நூலை பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டபோது அது ஒரு திருடனின் சுயசரிதை என்பதாலேயே நிராகரிக்கப்பட்டது. ஆனால் என்ன முரண்பாடு? அவருடைய கதை இன்று சினிமாவாகி உலகமே பார்க்கப்போகிறது.  ”பலர் என்னை பணம் சேர்க்கச் சொல்கிறார்கள் இனி சேர்த்து என்னதான் செய்யப்போகிறேன்? என் கதை சினிமாவாகப் போகிறது. அப்போது கொஞ்சம் பணம் கிடைக்கும். அதில் இரண்டு செண்ட் நிலம் வாங்கி ஒரு வீடு கட்டவேண்டும். இதுதான் ஒரேயொரு ஆசை எனக்கு. ” என்கிறார்.

26 திரைப்படங்களிலும் 30 நெடுந்தொடர்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் ‘வேட்டைக்காரன்’ படத்தில் சாமியார் வேடத்தில் நடித்த மணியன்பிள்ளைக்கு தமிழில் விஜய் படங்கள் என்றால் மிகவும் இஷ்டம். அழகாகப் பாடும்திறன் கொண்டவர் இப்போது உடல்நலம் சரியில்லை என்பதால் பாடுவதில்லை. மலையாளத்தில் மிகவும் பிடித்த இசையமைப்பாளர் ரவீந்திரன். தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன். இந்தியில் பப்பிலஹரி என்று அடுக்குகிறார். தமிழில் தன் அபிமான பாடலென அவர் குறிப்பிடும் பாடல் இது. “குயிலைப் புடிச்சு கூண்டிலடைச்சு கூவச்சொல்லுகிற உலகம். இந்தப் பாட்டைக் கேட்டால் கண்ணீர் விட்டு அழுவேன். அப்படித்தானே என் வாழ்க்கையும். நிம்மதியில்லாத வாழ்க்கை. அதற்குக் காரணமும் நான் தான். வேறு யாரைச் சொல்ல முடியும் நான்” என்கிறார்.

வாழ்த்துங்கல் கிராமத்தின் ரயில்வே கேட்டை கடந்து வந்து அந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து ஆட்டோ ஏற்றிவிடுகிறார். தங்கும் விடுதிக்கு விரையும் ஆட்டோவிலிருந்து இறங்கியபின் பேசிய நூறு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் குறைத்துக்கொண்டு தொண்ணூறு ரூபாய் மட்டும் வாங்குகிறார் ஆட்டோ ஓட்டுநர். வியப்போடு புருவம் உயர்வதைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார். “நீங்கள் மணியன் அண்ணனின் விருந்தாளியல்லவாமணியன் அண்ணனுக்காக பத்து ரூபாய் குறைத்துக்கொண்டேன் அவரை எங்களுக்குப் பிடிக்கும். அவர் எப்போதும் கொழுத்தவர்களிடம் திருடி இல்லாதவர்களுக்குத் தந்து உதவுவார்” என்கிறார். 

****

புத்தகத்திலிருந்து...
-------------------------------- 

பாட்டுப் பாடியே வலியைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தால் அம்மா. எனது குழந்தைப் பருவத்து நினைவுகலில் செத்துக்கிடந்த நிறைய பாடல்களை மாஅ பாடிப்பாடி உயிரூட்டினாள். ஒருநாள், பெரிய அக்கா வரும்போது படுத்திருந்தபடியே அம்மா பாடிக்கொண்டிருந்தாள். ‘’என்னதான் முடியலைன்னாலும் பாட்டுக்கெல்லாம் ஒரு குறையுமில்லை,” அக்கா கேலி செய்தாள். பிறகு பாட்டுக் கேட்கவில்லை. தான் சொன்னதைக் கேட்டு அம்மா பாட்டை நிறுத்தியிருப்பாளென்று நினைத்து அவள் உள்ளே போனாள். அதற்குள் அம்மாவும் போய்விட்டாள். வாய் திறந்தபடியே இருந்தது. பாதி பாடல் அம்மாவின் உதடுகளில் தங்கியிருந்தது.

மணிக்குட்டன் தன் சட்டையைக் கழற்றி அவளிடம் கொடுத்தான். அதை அணிந்து அவள் தண்ணீரில் இறங்கி நின்று துணியை அவிழ்த்து அவனிடம் கொடுத்தாள். அவள் குளிக்கும்போது அவன் விலகியிருந்து அழுக்குத் துணுகளை ஒரு கல்லில் அடித்துத் துவைத்தான். அன்று அவன் செய்த வேலைகளைப் புரிந்துகொள்வதற்கான அறிவு எங்களுக்கில்லை. .....அன்று அவளிருந்த நிலைமை இப்போதும் என் கண்களில் நிற்கிறடு. அனாதைமையின் மனித பிம்பம். அவனை உதாசீனம் செய்யுமளவிலான தன்னம்பிக்கை அன்று அவளிடம் தென்படவே இல்லை. ...எங்கள் மனங்களிலிருந்து பங்களா மணிக்குட்டன் ஒருபோதுமே மாய்ந்துவிட முடியாது. ஒருபோதுமே! அவளுடைய உடுப்புகளை கல்லில் அவன் துவைத்துப் பிழிந்த அந்தக் காட்சி ஒன்றே போதும், இதற்குச் சான்று!

என்னுடைய இச்சிறு உடலானது ஒரு வீட்டினுள் நுழைந்துவிட்டால் பிறகு ஆட்சியதிகாரத்தின் எல்லாக் கட்டமைப்புகளும் ஓடி வருகின்றன மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள், உயரதிகாரிகள், தொழிட்நுட்பப் புலனாய்வாளர்கள், மக்கள் திரள், அவர்களை விரட்டியடிக்கும் போலீசார், அதிகாரவர்க்கத்தின் இந்தப் பதற்றம் நமக்குள் தோற்றுவிக்கும் மமதை, நான் உருவாக்கி வைத்த உற்சவம் கனஜோராக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதிலிருக்கும் அக மகிழ்ச்சி. இதுதான் ஒரு திருடனின் மனதினுள் செயல்படுகிற அம்சங்கள்.

***
என்னுடைய வழக்குகளுக்கு நானே வழக்கறிஞர். புதிதாக வந்த நீதிபதிகள் கேட்பார்கள்: “நீ ஏன் வக்கீல் ஏற்பாடு செய்யல? கேஸ்ல ஜெயிக்க வேண்டாமா?” நான் சொல்வேன்: “யுவர் ஹானர், நான் நிரபராதின்னு தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏதோ ஒரு வழக்கறிஞரை விடவும் எனக்குத்தானே அதிகம்?”
என்னுடைய வழக்குகள் கொல்லம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிற நாட்களில், நீதிபதியாக இருந்த சுரேந்திரநாத பணிகர் கோட்டுப்போட்ட ஜூனியர் பையன்களிடம் சொல்வார்: “மதியத்துக்குப் பிறகு மணியன்பிள்ளையோட வழக்கு இருக்கு. சீக்கிரமாக சாப்பிட்டுட்டு வந்தீங்கன்னா வாதாடக் கத்துக்கலாம்.”

***

அப்போது ஜனதா கட்சியால் சட்டமன்றத் தொகுதிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த வேட்பாளர் நான். அன்று பிடிபடாமலிருந்திருந்தால் திருடர்கள் ஒற்றுமையுடன் வாழும் அரசியல் அரங்கில் நானுமொரு ‘விலைமதிக்க’ முடியாத அன்பளிப்பாகி இருப்பேன். அந்தத் தேர்தலில் ஞனதா கட்சிதான் அதிகாரத்திற்கு வந்தது. ‘சிறுபான்மை’ சமூகம் என்பதால் அமைச்சர்வையிலும் வாய்ப்புக் கிடைக்கும் என்று பேசிக்கொண்டார்கள்.

***
ஒரு வீட்டினுள் திருடுவதற்காக நுழைந்தேன். சமையல் கட்டின் கம்பியை வளைத்து உல்லே ஏறினேன். ஒரு கையில் கத்தி, மற்றொரு கையில் டார்ச். எதுவோ அசைவதுபோல் சத்தம் வந்தது. லைட் அடித்துப் பார்த்தேன். வெளிச்சம்பதிந்த இடம் ஒரு மூதாட்டியின் கண்கள். அதில் உலகத்திலுள்ள எல்லாத் தீவினைகளையும் ஒருசேரப் பார்த்துவிட்டதுபோன்ற பயம் தெரிந்தது. அந்த அம்மா நடுக்கத்துடன் துவண்டுகொண்டிருந்தார். வேதனையின் மெல்லிய சீகாரம் அவரிடமிருந்து வெளிப்பட்டது. பயம் ஒரு வனமிருகம்போல் அவரை வலைத்திருந்தது. எனக்கு என்னவோ போலாகிவிட்டது.
நான் மெதுவாகச் சொன்னேன்: “பயப்பட வேண்டாம்மா! நான் போயிடறேன்” வந்த வழியாக வெளியேறி, வீட்டின் மதில் சுவரில் சாய்ந்து நின்று வாய்விட்டு அழுதேன். இந்த அளவுக்கு மற்றவர்கள் பயந்து வெறுக்கிற துஷ்டனாக மாறிவிட்டேனே!இந்த இடத்தில் என்னுடைய அம்மாவாக இருந்திருந்தால்...மதிலில் தலியை முட்டி அழுதேன். பிறகு எல்லாமே தகர்ந்துவிட்டவன்போல் திரும்பி நடந்தேன்.

***
குழந்தைப் பருவத்து நினைவுகள் தீராத இரணங்களாகி விடும். வேதனைகளையும் அவமானஞ்களையும், நான்கைந்து வயதிலிருந்தே குழந்தைகள் மனதில் பாதுகாத்து வைத்திருப்பார்கல். பச்சை மனங்களை ஒருபோதும் புகைய வைத்து விடக்கூடாது

***

குட்டப்பனின் வாட்ச் ரிப்பேருக்கான சாதங்களிருக்கும் பெட்டியைச் சுமந்துகொண்டு ஐந்தாறு மாதங்கள் அவனுடன் திரிந்தேன். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஏறி வாட்ச் ரிப்பேர் செய்யணுமா என்று கேட்கும் வேலை என்னுடையது. நிறைய சொந்தக்காரர்கலின் வீடுகளுக்கும் சென்றேன். “குறவனோட பெட்டியை நாயர் பையன் சுமபப்தா?” இதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பட்டினி கிடக்கும்போது கூப்பிட்டு ஒரு பிடி சோற்றுப் பருக்கைத் தந்ததில்லை; நாலணா காசு தந்து ஏதாவது வாங்கிச் சாப்பிடு என்று சொன்னது கிடையாது. வீட்டிற்கு வந்து அம்மாவிடம் பராதி மட்டும் சொனனார்கள்.

***

இன்றெல்லாம் மூன்று நான்கு திருடர்களாக சேர்ந்து வருகிறார்கள். பயமுறுத்தித் திருடுகிறார்கள். பெண்களையும் தொந்தரவு செய்கிறார்கள். எவ்வளவு தைரியமுள்ள திருடனாக இருந்தாலும் சரி.வீட்டிலிருப்பவர்கள் பார்த்துவிட்டால் ஓடிவிடத்தான் வேண்டும். அது ஒரு மரியாதை. திருடனாகிவிட்டோம்தான். இருந்தாலும் கொஞ்சம் மரியாதையுடன் நடந்துகொள்ளலாமா? வேண்டாமா?

****

உங்களுடைய வீடுகளில் இதுவரை திருடன் நுழையவில்லை என்பதற்காக நீஙக்ள் பலத்து பாதுகாப்பினுள் இருக்கிறீர்கள் என்று அர்த்தமில்லை. டிருடன் உஞ்கள் வீட்டை இன்னும் நோட்டமிடவில்லை. அவ்வளவுதான். உங்கள் வீடு அவனுடைய கவனத்தில் படவில்லை என்பது மட்டும்தான் உங்களுடைய பாதுகாப்பு. 

****
இந்தப் புத்தகத்தை உங்களால் சுவாரஸ்யமாக வாசிக்க முடியும். காரணம், நீங்கள் சட்டத்தின்கண்களில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். ஆகவேதான் சில இடங்களில் உங்களால் சிரிக்கவும் முடிகிறது. எனுடைய கண்ணிரின் உப்பு கலந்த ஒரு கடல் இந்தப் புத்தகம். செய்துத் தீர்த்த பாவங்களின் ஆகமொத்த சாரம். ஒரு திருடனை ஊரிலோ வீட்டிலோ யாருமே வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள். 

(நன்றி: இந்தியா டுடே)


Tuesday, July 08, 2014

முண்டாசுப்பட்டி

பெயருக்கேற்றவாறு முண்டாசு அணிந்திருக்கும் ஆண்கள், நிழற்படம் எடுத்தால் இறந்துவிடுவோம் என்கிற மூடநம்பிக்கை, விண்கல்லின் ஒரு பகுதி விழுந்ததை வானமுனி என கடவுளாக்கி வழிபடும் மக்கள், பள்ளிக்கூடம் பக்கம் போனால் ரத்தக் காட்டேரி அடிக்கும் என நம்பும் அப்பாவிகள் என இந்த முண்டாசுப்பட்டியில் வாழ்பவர்களுக்கு ஒரு விதமான மூட நம்பிக்கைகள். இந்த மூட நம்பிக்கைகளை ஜல்லியாக்கி உடைத்து அதன் மேல் ஒரு ராஜபாட்டையைப் போட்டு கம்பீரமாக நடக்கிறார் இயக்குநர்.



இரண்டரை மணி நேரம் தன்னை மறந்து சிரிக்க உத்தரவாதம் உண்டு. திரையரங்கம் சில காட்சிகளில் சிரிப்பால் அதிர்வதால் அடுத்த காட்சியின் நகைச்சுவை தவற விடுகிறோம். திரைக்கதையிலும் வசனங்களிலும் இழையோடும் நகைச்சுவை படத்துடன் பார்வையாளர்களை ஒன்றச் செய்கிறது. ஒரு கட்டத்தில் ஒரு வசனத்தையும் தவற விடக்கூடாதென்று செவிகளைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறோம். அந்தளவுக்கான நகைச்சுவை விருந்து முண்டாசுப்பட்டி.

மனிதர்களின் மூட நம்பிக்கைகளை இதைவிட அழகாக யாரும் பகடி செய்துவிட முடியாது. கொஞ்சமும் பிரச்சார நெடியில்லாத ஒரு நாத்திகம் படத்தின் அடிநாதம். ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நாயகன், ஃபோட்டோ எடுத்தால் இறந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையுடைய ஊரில் வாழும் நாயகி என்று வித்தியாசமான இணை. படம் முழுவதும் விஷ்ணுவும் அவருடைய நண்பர் காளி வெங்கட்டும் செய்யும் கலாட்டாக்கள் களைகட்டுகின்றன. ஆனால் படத்தின் துவக்கத்தில் வரும் ஃபோட்டோ ஸ்டுடியோ காட்சிகள் மட்டும் சற்று மெதுவாக நகர்கின்றன. அந்தக் காட்சிகளை மட்டும் மற்றவற்றைப் போல புதிதாக யோசித்திருக்கலாம். பள்ளிக்கூடத்துக்கு படம் எடுக்கச் சென்றவுடனேயே பறக்கத் தொடங்கும் படம். இறுதிவரை தரையிறங்கவே இல்லை.

‘விடிஞ்சாலும் விடிஞ்சிரும்’ என்கிற படத்தில் நடிக்கும் முண்டாசுப்பட்டியைச் சேர்ந்த முனிஸ்கானாக நடிக்கும் ராமதாஸுக்-க்கு மட்டும் ஃபோட்டோ பிடித்தால் இறந்துவிடுவோம் என்கிற மூடநம்பிக்கை இல்லை. அவர் பண்ணும் அட்டகாசங்களில் முண்டாசுப்பட்டி மக்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும் கலகலத்துப் போகிறார்கள். மிகக் கூர்மையான வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பலம். ஆனால் அதே சமயத்தில் வசனமே இல்லாமல் பல காட்சிகள் சிரிப்பை அள்ளித் தெளிக்கின்றன. உதாரணமாக பறவையி ஒற்றைச்சிறகை நந்திதாவின் மேல் போடும் காட்சியில் அது வழிமாறி அவருடைய அப்பாவின் நாசி அருகே சென்று குறட்டை விடுகையில் மீண்டும் நந்திதாவுக்கே வரும் காட்சியைச் சொல்லலாம்.

இசையும் பாடல்களும் படத்தில் எங்கும் உறுத்தாதவண்ணம் வருகின்றன. ஆனால் விஷ்ணு நந்திதாவைப் பார்க்கும் ஆரம்பக் காட்சிகளில் வரும் பின்னணி இசை ‘நீர்ப்பறவை’ யின் ‘பற பற பறவையொன்று’ பாடலைப் போன்றே இருப்பது உறுத்தல். அதிலும் விஷ்ணு. இதிலும் விஷ்ணு. அதற்காகவாவது வேறு பின்னணி இசை முயன்றிருக்கலாம். சாவு வீட்டில் பாடப்படும் பாடலில் புதிய இசையமைப்பாளர் சியான் ரோல்டன் வெல்கிறார்.

80களில் நடப்பதாக வரும் கதையில் கலை இயக்குநரின் பங்குதான் அதிகம். வீடுகளில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் வைக்கக்கூடிய ஸ்டாண்ட், சுவர்க் கடிகாரம் முதல் கேமிரா, திரையரங்கம் வரை எல்லாமே பார்த்துப் பார்த்து கவனமாக செயல்பட்டிருக்கிறார்கள்.  வசனங்களில் 80களில் புழக்கத்தில் இல்லாமல் இப்போது மட்டுமே புழக்கத்தில் உள்ள வார்த்தைகள் சிலவும் வருகின்றன.

விஷ்ணுவைவிட அவருடை நண்பர் பாத்திரத்தில் வரும் காளிவெங்கட் கவர்கிறார். படத்தின் இறுதிக் காட்சி யூகிக்கக்கூடியதாக இருந்தாலும் அபாரமான க்ளைமாக்ஸ்தான். அதிலும் ஃபோட்டோ மூடநம்பிக்கை அற்ற ராமாதாசின் முகம் மட்டும் ஃபோட்டோவுக்குத் தெரிவதுடன் படம் முடிகிறது.

மனம் விட்டு சிரிக்க ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம் என்று சுருக்கி விடாதபடிக்கு உள்ளீடாக மூடநம்பிக்கைக்கு எதிரான படமாகவும் விளங்குகிறது. கலையும் அரசியலும் சரியான கலவையில் சேரும் படைப்பாகவும் மிளிர்கிறது.

(நன்றி : இந்தியா டுடே)