Friday, September 26, 2014

சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - என்ன் ஆனது கண்ணகி முருகேசன் வழக்கு?


சென்றவாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. கண்ணகி-முருகேசன் வழக்கில் விரைந்து நீதி வழங்குமாறும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கவேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்கவேண்டுமெனக் கோரியும் மனு அளிக்கப்பட்டது. கண்ணகி-முருகேசன் வழக்கில் முருகேசனின் குடும்பத்திற்கு எஸ்சி/எஸ்டி சட்டப்படி அளிக்கவேண்டிய இழப்பீட்டுத் தொகையான 2 லட்சத்தை இதுவரை தமிழக அரசு வழங்கவில்லை. பிரேத பரிசோதனை முடிந்த உடனேயே இந்தத் தொகை வழங்கப்படவேண்டும். ஆனால் 11 ஆண்டுகளாகியும் வழங்கப்படவில்லை என்பதுடன் குற்றம்சாட்டப்பட்டோரும் சுதந்திரமாக உலவி வருகின்றனர். 

2003ஆம் ஆண்டில் தமிழகத்தையே அதிர வைத்த சாதிய வன்மத்தின் உச்சமான இரட்டைக் கொலைகள். கடலூர் மாவட்டத்தில் விருத்தாசம் அருகே உள்ள புதுக்கூரைப் பேட்டையியைச் சேர்ந்த படையாச்சி சாதியைச் சேர்ந்த கண்ணகியும் பறையர் சாதியைச் சேர்ந்த முருகேசனும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள். இருவரும் காதலித்து திருமணம் முடித்து அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்தனர். வீட்டில் விஷயம் தெரிந்து இருவரும் வெளியேறிவிட அவர்களைத் தேடிப் பிடித்து வந்து, ஊரார் கூடி நிற்க அந்த அவலம் அரங்கேறியது. 8.7.2003 அன்று காலை எல்லோர் முன்னிலையிலும் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் முருகேசனுக்கு விஷம் கொடுக்கப்பட்டது. கண்ணகி விஷம் குடிக்க பிடிவாதமாக மறுக்கவே அவருடைய காதிலும் மூக்கிலும் விஷத்தை ஊற்றி அவர்கள் இருவரும் பிணமானவுடன் உடல்கள் அவரவர் சாதி சுடுகாட்டில் எரிக்கப்பட்டன. இதைக் கண்ணால் கண்ட சாட்சிகள் அந்த ஊர் மக்கள். நடந்ததை கண்ணால் கண்ட முருகேசனின் சித்தியான சின்னத்தாயியும் அத்தை அமராவதியும் காவல் நிலையத்துக்குச் சென்று முறையிட அங்கு அவர்களின் முறையீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ”இருவரும் எரிக்கப்படுவதை காணச் சகியாமல் தொலைபேசி மூலம் போலிசுக்கு தெரிவித்த மனசாட்சியுள்ள யாரோ ஒரு படையாச்சி அங்கு மறைந்து வாழ்கிறார். யாரெனத் தெரிந்தால் கண்ணகிக்கு நேர்ந்த கதி அவருக்கும் நேரக்கூடும்.” என்று சம்பவ இடத்துக்கு நேரில் சென்று தகவல்கள் சேகரித்த உண்மை அறியும் குழுவில் சென்ற எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா எழுதிய ‘சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்’ என்கிற கட்டுரை. அங்கு வந்த காவலர் ஒருவர் எரியும் பிணத்தை காலால் தட்டிப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார் என்கிறார் முருகேசனின் அத்தை அமராவதி.

அதன்பின் அவர்கள் காவல்நிலையத்துக்குச் சென்றபோது அவர்களுடைய புகார் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன்பின் ஊடகங்களில் இந்தச் சம்பவம் வெளிவந்தபின் தமிழகம் அதிர்ந்தது. உண்மை அறியும் குழுக்கள் சென்றன. வழக்கறிஞர் பொ. ரெத்தினம் தனது குழுவுடன் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க தன் சட்டப்போராட்டத்தைத் தொடங்கினார். அதன் விளைவாக இடையில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆயிற்று. இது நடந்து 11 ஆண்டுகள் ஆயிற்று. இந்த பதினோரு ஆண்டுகளில் இந்த வழக்கு என்னதான் ஆனது? 

”பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் அவலம் நிகழ்ந்தது. முருகேசனின் தந்தை உட்பட நால்வரை கொலைக்குற்றம் சாட்டியது காவல்துறை. அவர்கள்தான் முருகேசனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாகச் சொன்னது காவல்துறை” என்கிறார் வழக்கறிஞர் ரெத்தினம். அதன்பின் மூவர் விடுவிக்கப்பட்டாலும் முருகேசனின் சித்தப்பாவான அய்யாசாமி மீது இன்னமும் குற்றச்சாட்டு அப்படியேதான் உள்ளது. சிபிஐ விசாரணையிலும் பல சிக்கல்கள் உள்ளதாக முருகேசன் தரப்பு குற்றம் சாட்டுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் சிபிஐ இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆதிக்க சாதியினருக்கு சாதகமாக நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. 

கண்ணகியின் தந்தை துரைசாமி புதுக்கூரைப்பேட்டையின் பஞ்சாயத்துத் தலைவர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டவுடன், தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவருடைய பஞ்சாயத்துத் தலைவர் பதவி பறிக்கப்படும் என்பதைக் காரணம் காட்டி கடலூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதி முனி ரத்னம் அவரை 23 நாட்களில் விடுவித்தார். ஆனால் முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவை 36 நாட்கள் வரை காவலில் வைத்திருக்க அனுமதித்தார் என்றும் மனு குற்றம்சாட்டுகிறது.

இந்த வழக்கில் வாதாடிய ரெத்தினம் இந்தியா டுடேயிடம் “11 ஆண்டுகளுக்கு முன்னால் 2 லட்சம் இழப்பீடு. இப்போது தந்தால் அதற்கான இன்றைய மதிப்பில் பார்த்தால் இன்னும் கூடுதல் தொகை வரும். ஆனால் இந்த 2 லட்சமும் கூட இன்னமும் வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை” என்கிறார்.

முருகேசனின் சகோதரர் வேல்முருகன் இந்தியா டுடேயிடம் “. ஊள்ளூர் இன்ஸ்பெக்டர் சரியில்லை என்று சிபிஐயின் குற்றப்பத்திரிகை சொல்கிறாது. ஆனால் சிபிஐ இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கொலையாளிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்த வழக்கில் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறார். 

பிரச்சனைக்குப் பின் தங்கள் சொந்த ஊரான குப்பநத்தத்தில் வசிக்கும் முருகேசனின் குடும்பத்தினர். முருகேசனின் இன்னொரு சகோதரர் பழனிவேல் “இப்போதும் ஆதிக்க சாதியினர் புதுக்கூரைப்பேட்டை காலனி மக்களை அடிமைகளாகத்தான் வைத்திருக்கின்றனர். அவர்களை எதிர்த்து யாராவது காவல்துறைக்குச் சென்றால் அவர்களின் வீடுகள் கொளுத்தப்படுகின்றன. அதற்கு பயந்துகொண்டு பலர் கண்ணகி-முருகேசன் வழக்கில் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லாமல் உள்ளனர். பஞ்சாயத்துத் தலைவராக துரைசாமி இருப்பதால் அதிகாரமும் அவர்கள் கையில் உள்ளது” என்கிறார்.

முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவிடம் பேசியபோது “சமாதானமாகப் போகச்சொல்லி இப்போதும் அவங்க தரப்பில் பேசுறாங்க.. நான் ஒத்துக்கமாட்டேன். என் பிள்ளையே போனப்புறம் என்னை பணத்தால வாங்கமுடியாது. அவங்களுக்கு தண்டனை வாங்கித் தரவும், எங்களுக்கு நஷ்ட ஈடு வாங்கித்தரவும் ரெத்தினம் சார்தான் உதவுறாங்க. அவரைத்தான் நம்பியிருக்கேன்” என்கிறார் நெகிழ்ச்சியுடன். 



பஞ்சாயத்துத் தலைவர் மேலவளவு முருகேசன் கொலைவழக்கில் வழக்கறிஞர் ரெத்தினம்தான் கொலையாளிகளுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் பெற்றுத்தர போராடினார். இப்போது இந்த வழக்கும் இவர்வசம் இருப்பதால் கண்ணகியின் கணவர் முருகேனின் குடும்பத்தினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். மேலவளவு முருகேசனுக்கும் புதுக்கூரைப்பேட்டை முருகேசனுக்கும் பெயர் ஒன்றுதான். ஆனால் இரு வழக்குகளிலும் உள்ள ஒரு வேறுபாட்டை கவனிக்கவேண்டும் மேல வளவு முருகேசன் ஒரு தலித். அவர் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பதைப் பொறுக்கமாட்டாமல் ஆதிக்கசாதியினர் அவரை வெட்டி வீழ்த்தினர். இங்கே கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு ஆதிக்கசாதிக்காரர். இவரும் ஒரு பஞ்சாயத்துத் தலைவர்தான். ஆனால் இவர் பஞ்சாயத்துத் தலைவராக நீடிக்கவேண்டும் என்பதற்காக காவலில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். ஒரே நாடு. ஒரே அரசியல் சாசனம். ஒரே மாநிலம். ஆனால் சாதிகள் வெவ்வெறு என்றால் நீதியும்கூட மாறும் அவலத்தின் சாட்சியாக காலமும் மக்களும் உள்ளதை யாராலும் மறுக்கமுடியாது.





Wednesday, September 17, 2014

சலீம்

நேர்மையாக, மனிதாபிமானத்துடன் வாழவேண்டும் என நினைக்கும் ஒரு மனிதனின் கதை. பிறருடன் தேவையில்லாத பிரச்சனைகள் வேண்டாம் என நினைத்து சின்னச் சின்ன விஷயங்களுக்கு ஒதுங்கிப்போகும் சலீமை பெரிய விஷயங்களுடன் மோத விடுகிறது வாழ்க்கை. அதில் அவனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
முதல் பாதியில் பணக்கார தனியார் மருத்துவமனை எப்படி நோயாளிகளிடம் சுரண்டுகிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால் இக்காட்சிகள் அனைத்தும் சலீமை நல்லவனாகக் காட்டுவதற்காக என்கிற அளவுடன் நின்றுபோய்விடுவதால் அக்காட்சிகளுக்கான அழுத்தம் இல்லை. நேர்மைக்க்குப் பரிசாக வேலையை விட்டு வெளியேற்றப்படும் நொடியிலிருந்து சலீம் வேறொருவனாகிறான். அந்த நொடியிலிருது படம் வேறொரு பாதைக்குச் செல்கிறது.


நாயகனாக வரும் விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தைப் போலவே இதிலும் அமைதியான சாகசக்காரனாக வருகிறார். இஸ்லாமியர் வேடம் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. நடிக்கிறாரா இல்லையா என்பது புரியாத மாதியான அமைதியான நடிப்பு. விஜய் ஆண்டனியின் முதல் படமான ‘நான்’ படத்தின் மருத்துவக் கல்லூரி மாணவனான சலீம் இந்தப் படத்தில் மருத்துவர். ’நீ எந்த இயக்கம். அல்கொய்தா?சிமியா?’ என்று காவல்துறை அதிகாரி அடுக்க, நிதானமாக ‘சலீம் என்கிற பெயரைப் பார்த்ததும் இப்படியெல்லாம் கற்பனை செய்றீங்களா? வேணும்னா என் பேர் விஜய் என்றோ ஆண்டனி என்றோ வைச்சுக்கோங்க’ என்று சொல்லும் இடத்தில் கைத்தட்டலில் அதிர்கிறது திரையரங்கம் தமிழ் சினிமா இயக்குநர்கள் தேய்வழக்காக மீண்டும் மீண்டும் நிறுவ முயலும் ஒன்றை இந்த வசனம் உடைப்பதோடு மட்டுமல்லாமல் பொதுபுத்தியையும் கேள்வி கேட்கிறது.

சலீம் ‘நோ பார்க்கிங்கில்’ வண்டியை விடுபவர்கள் குறித்து இந்தியன் தாத்தா பாணியில் பேசும்போது இன்னும் எத்தனை சினிமாக்களில் நேர்மையில் இலக்கணமாக இதையே பார்ப்பது என்கிற சலிப்பு வருகிறது. கதாநாயகியாக வரும் அக்‌ஷாவின் ஆரம்ப காட்சிகள் அலுப்பூட்டுகின்றன. சலீம் இத்தனை நல்லவனாக இருப்பது வாழ்க்கைக்கு உதவாது என்று பொருமும் காட்சியில் மட்டும் மிளிர்கிறார்.  அமைச்சர் தவபுண்ணியமாக வரும் மனோகர், காவல்துறை அதிகாரியாக வரும் அபிஷேக், இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் என்று அனைவரும் சிறந்த பாத்திரத் தேர்வுகள். விஜய் ஆண்டனியின் பாடல்கள் இனிமை. பின்னணி இசையும் படத்தொகுப்பும் படத்துக்கு வலுவூட்டுகின்றன. ’நான்’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படத்தைப் பார்க்கலாம். மூன்றாம் பாகத்தை எதிர்நோக்கவைக்கிறது இறுதியில் போடப்படும் அந்த ‘தொடரும்’.

(நன்றி : இந்தியா டுடே)


Tuesday, September 16, 2014

ஆசிரியர், புத்தக ஆசிரியர் - ஆயிஷா இரா. நடராசன்

கண்ணீரில்லாமல் யாராலும் ஆயிஷாவை வாசிக்க முடியுமா? நம் குழந்தைகளை கூட்டுக்குள் அடைக்கும் கல்வி முறையின் மீதான சாட்டையடி கேள்வியாக வெளிவந்த ஆயிஷா என்கிற அந்த குறுநூல் தமிழ் வாசர்களிடையே ஏற்படுத்திய அதிர்வு இன்னமும் மறைந்துவிடவில்லை. எங்கோ ஒரு மூலையில் அந்நூலை வாசித்து தினமும் ஒருவருடைய விழிகளில் நீர் கசியவே செய்கிறது. ஆயிஷா ஒரு லட்சத்துக்கும் அதிமான பிரதிகள் விற்று எப்போதும் சந்தையில் கிடைக்கும் நூலாக உள்ளது. அதன் ஆசிரியர் இரா. நடராசன் அந்த நூலுக்குப் பின் ஆயிஷா நடராசன் என்றே அறியப்படுகிறார்.  இந்த ஆண்டு குழந்தைகள் இலக்கியத்துக்கு வழங்கப்படும் பால சாகித்ய அகாடமி விருது அவருடைய ‘விஞ்ஞான விக்ரமாதித்யன்’ கதைகள்’ நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கென ஏராளமான நூல்களை எழுதியுள்ள இரா. நடராசன் தமிழ்நாடெங்கும் உள்ள குழந்தைகள் சிறுவர் நூல்களை வாங்கிப் படிக்கிறார்க்ள் என்கிற உண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமே தனக்குக் கிடைத்துள்ள விருது என்கிறார்.



நடராசன் கடலூரில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். ஆசிரியப் பணி, எழுத்துப்பணி இரண்டிலுமே மிகச் சிறப்பான முறையில் செயல்படும் நடராசனின் சொந்த ஊர் கரூர். கல்லூரியில் பயிலும்போது இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பணியாற்றியவர் மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டு, தொடர்ந்த தீவிர இலக்கிய ஈடுபாடு என்றிருந்தவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்டம் ஒன்றில் நடந்த சம்பவத்தால் குழந்தைகளுக்காக எழுதத் துவங்கியதாகக் கூறுகிறார். “சிறுவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளச் சொல்லிக்கொண்டிருந்தோம். அப்போது எழுந்த ஒரு சிறுவன் என்ன புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று கேட்டான். அப்போது பதில் சொல்ல திண்டாடிப்போனோம். இதுவே என்னை குழந்தைகளுக்காக எழுதத் தூண்டியது” என்கிறார்.

இவருடைய முதல் நூல் நாகா. அன்று தொடங்கி இன்று வரை இவர் எழுதிக்குவித்தவைகளில் சிறுகதைகள், நாவல்கள், அறிவியல் புனை கதைகள், அறிவியல் நூல்கள் என்று அனைத்தும் அடக்கம். “குழந்தைகளுக்காக எழுதுவதில் சிரமங்கள் பல உண்டு. மொழி முதலில் கைவரவேண்டும். ஒரு ஊர்ல ஒரு மகாராஜா என்று தொடங்கினால் அடுத்து அவருக்கு இத்தனை மனைவிகள் என்று எழுதினால் அது பெரியவர்களுக்கான எழுத்து. இதையே குழந்தைகளுக்கு எழுதினால் மகாராஜா குண்டானவரா ஒல்லியானவரா என்று எழுதவேண்டும்.” என்கிறார்.

திண்டிவனத்திற்கு அருகில் ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச் சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தைத் தழுவினான். இதுவே ஆயிஷா கதைகான அடிப்படை. “1985-ம் ஆண்டே 'ஆயிஷா’ எழுதப்பட்டுவிட்டது என்றால் நம்புவீர்களா? அனுப்பிய இடங்களில் எல்லாம் கதை திரும்பி வந்தது. 'ஆயிஷா’ சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது நம் சமூகத்தில் இல்லை. குழந்தைகளுக்கு நம் கல்விமுறையில் அளிக்கப்படும் தண்டனைகளில் ஒரு தவறும் இல்லை என்றேதான் நினைத்துஇருந்தது சமூகம். 10 ஆண்டுகள் விடாமல் முயன்றேன். பின்னர், 1995-ல் 'கணையாழி’ குறுநாவல் போட்டியில் இரா.முருகன், சுஜாதா இருவரும் நடுவராக இருந்து 'ஆயிஷா’வைத் தேர்ந்தெடுத்தார்கள்.'' என்கிறார். கல்விக்கூட சிந்தனைகள், கல்வி முறையில் மாற்றங்கள் இதுகுறித்தெல்லாம் சமூகம் இப்போதுதான் பேசத்தொடங்கியிருக்கும் நிலையில் 1985ல் ஆயிஷா எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

விஞ்ஞான விகரமாதித்யன் கதைகள் ஒரு வித்தியாசமான முயற்சி. வேதாளம் ஒருவனுடைய நோய்க்கும் பில்லி சூன்யம்தான் காரணமென்று விக்ரமாதித்யனிடம் சொல்ல அவனோ அது சர்க்கரை நோய் என்று கூறி, இன்சுலில் எப்போது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது, தீர்வுகள் என்று சொல்கிறான். இப்படி ஒவ்வொரு நோய் குறித்தும் வேதாளம் ஒரு கதை சொல்ல அதை அறிவியல்பூர்வமாக விக்ரமாதித்யன் மறுப்பதான கதைகளே இந்நூலில் இடம்பெற்றுள்ளன. “நாம் எப்போதும் தொன்மக் கதைகளை பிள்ளைகளுக்குச் சொல்கிறோம். வெறுமனே அப்படியே சொல்லாமல் அந்த வடிவத்தை எடுத்துக்கொண்டு புதுமையான அறிவியல் கருத்துக்களைச் சொன்னால் மிக எளிதாக குழந்தைகளை அவை சென்றடையும்” என்கிறார்.

எல்லா வயது சிறுவர்களுக்கும் ஒரேபோல் எழுதமுடியாது; 5 ஆம் வகுப்பு வரை ஒரு மாதிரியும் எட்டாம் வகுப்பு வரை ஒரு மாதிரியாகவும், ஒன்பது பத்து வகுப்புகளுக்கு ஒரு மாதிரியாகவும் எழுதவேண்டும். இதை உணர்ந்துகொள்ளவே தனக்கு ஐந்து ஆண்டுகள் பிடித்தன என்கிறார் நடராசன். அத்துடன் கோவை, சென்னை, மதுரை போன்ற வட்டார வழக்கில் எழுதக்கூடாதெனவும் நுட்பங்களைச் சொல்கிறார். ”பாடப் புத்தகத்தின் தொடர்ச்சியாக மகிழ்ச்சியளிப்பதாகத்தான் சிறுவர் நூல்கள் இருக்கவேண்டும்.” என்கிறார்.

டார்வின். பாரடே. மேரிகியூரி.கலீலியோ ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை சிறுவர்கள் மேடையேற்றும் ஓரங்க நாடகங்களாக படைத்துள்ள நடராசனின்  ஆயிஷா, ஒரு தோழனும் மூன்று நண்பர்களும் எனும் நாவல், உலகப்பெண் விஞ்ஞானிகள், வரலாறு மறந்த விஞ்ஞானிகள் ஆகிய அறிவியல் நூல்கள் உட்பட இவரது பல படைப்புகள் மலையாளம், தெலுங்கு, கொங்கனி, ஆங்கிலம்  பிரெஞ்சு ஆகியவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.  தமிழின் முதல் முயற்சியாக பார்வையற்ற குழந்தைகளும் வாசிக்கும் வண்ணம் 'பூஜ்ஜியமாம் ஆண்டு' நாவல் பிரைல் மொழியிலும் வெளிவந்துள்ளது, ’கணிதத்தின் கதை’ நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்றிருக்கிறார்.

”கூகிவாதியாங்கோ போன்ற  உலகின் மிகப்பெரும் எழுத்தாளர்களும் குழந்தைகளுக்காக எழுதுகிறார்கள். சத்யஜித்ரே ஒரு படம் எடுத்தால் குழந்தைகளுக்கான இரண்டு நூல்கள் எழுதிவிட்டுத்தான் அடுத்த படம் எடுப்பார். ஆனால் தமிழில் சிறுவர் இலக்கியம் மிகவும் பின் தங்கியே உள்ளது. அழ. வள்ளியப்பா குழந்தைகளுக்கா எழுதுபவர்களுக்கான சங்கத்தை நடத்தினார். திரு.வி.க., மு.வ., பூவண்ணன், வாண்டுமாமா போன்ற பலர் இயங்கினார்கள். தற்போது யூமா வாசுகி பல்வேறு மொழிபெயர்ப்புகளை குழந்தைகளுக்கு அள்ளி வழங்குகிறார். விழியன், விஷ்ணுபுரம் சரவணன் போன்றோரின் பங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. இப்போதுதான் பால. சரவணன் எழுத வந்திருக்கிறார். இப்படி வெகுச்சிலரே இயங்கும் இத்துறையில் இன்னும் புதிது புதிதாக பலர் வரவேண்டிய அவசியம் இருக்கிறது” என்று ஆதங்கப்படுகிறார்.

தமிழில் குழந்தைகளுக்காக வெளிவரும் பத்திரிகைளில் ஆங்கிலக் கலப்பு அதிகம் உள்ளதை சுட்டிக்காட்டும் நடராசன் “புத்தகக் கண்காட்சிக்கு பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துவந்தாலும் ஒரு குளிர்பானம் வாங்கித்தந்து அவர்களுக்கு மீண்டும் பழைய புராண கதைப் புத்தகங்களை வாங்கித் தருகின்றனர். குழந்தைகளை சுதந்திரமாக விட்டால் அவர்களே அவர்களுக்கு வேண்டியதை தேர்ந்தெடுப்பார்கள். பெரியவர்களைவிட குழந்தைகள் மிகவும் பொறுப்பாகவே நூல்களை தேர்வு செய்கின்றனர். பெற்றோரோ ஐ.ஏ.எஸ். ஆவது எப்படி போன்ற நூல்களை வாங்கித்தந்து தங்கள் கனவுகளை அவர்கள் மீது திணிக்கிறார்கள்” என்கிறார்.

தொடக்கத்தில் தீவிர இலக்கியத்தில் கொண்ட ஈடுபாட்டை விட்டுவிடாமல் தீவிர இடதுசாரி இலக்கியம் வாசிக்கும் வாசகர்களுக்கான ‘புத்தகம் பேசுது’ இதழின் முதன்மை ஆசிரியராக உள்ளார். கல்வியாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், குழந்தைகளுக்கான புனைகதைகளும் கட்டுரைகளூம் எழுதுபவர், தலைமை ஆசிரியர் என்று எல்லாமும் இருந்தாலும அவருக்கு திருப்தி என்னவோ குழந்தைகளுடன் குழந்தையாகப் பழகுவதில்தான். தன் வீட்டில் எப்போதும் இருக்கும் டெலஸ்கோப் ஒன்றைப் பார்க்க எப்போது வேண்டுமானாலும் குழந்தைகள் வந்து மொட்டைமாடியில் நட்சத்திரங்களையும் கோள்களையும் விண்வெளிக் காட்சிகளையும் கண்டுகளிக்கலாம் என்கிறார்.

( நன்றி :இந்தியா டுடே)



Wednesday, September 10, 2014

ஆட்டத்தை மாற்றியவர்கள் - புதிய பாதையில் தமிழ் சினிமா

மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதைக்கு தமிழ்க் கவிதை மாறிய காலகட்டம்போல் இன்றைய தமிழ் சினிமா இருக்கிறது என்கிறார் திரைப்பட விமர்சகர் ராஜன் குறை. புதிய இளைய இயக்குநர்களால் நிரம்பி வழிகிறது கோடம்பாக்கம். புதிதாக சிந்திக்கிறார்கள். கருத்து, காட்சி என அனைத்துமே புதுமை. எழுபதுகளின் இறுதியில் பாரதிராஜாவின் வருகை தமிழ் சினிமாவை கிராமங்களுக்கு இட்டுச் சென்றது. அதன்பின் மணிரத்னம் அதை வேறொரு தளத்துக்கு இட்டுச் சென்றார். தொண்ணூறுகள் தமிழ் சினிமாவின் தேக்ககாலம் எனலாம். தமிழ் சினிமா முற்றிலும் அடையாளம் இழந்துபோய் புற்றீசல் போல மசாலா படங்கள் வந்து குவிந்த காலம் அது. தொண்ணூறுகளின் இறுதியில் வெளியான பாலாவின் சேது தமிழ் சினிமாவை மீட்டது. அவரைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல், செல்வராகவன், அமீர், வெற்றிமாறன், வசந்தபாலன், பாண்டிராஜ், சசி குமார், சிம்புதேவன், சுசீந்திரன், வெங்கட்பிரபு என்று பல இளைஞர்கள் தமிழ் சினிமாவின் முகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார்கள். அர்த்தமுள்ள படங்கள் வரத்துவங்கின. ஆனாலும் இவர்கள் அனைவருமே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களிடம் துணை இயக்குநர்களாக பணியாற்றியவர்கள்தான்.



கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா இன்னுமொரு கட்டத்தைத் தாண்டியுள்ளது. எவரிடமும் துணை இயக்குநராக இல்லாத இயக்குநர்களின் வருகை திரைப்படத்தின் வரையறைகளை புரட்டிப்போட்டது. ஒருபுறம் ரஜினி, கமல், விஜய், அஜீத் என்று அவர்களின் ரசிகர்களுக்கான படங்களும் வந்து வெற்றிபெற்றாலும் புதிய ஊற்றாய் புறப்பட்ட இளம் இயக்குநர்களின் படை ஒவ்வொரு படத்தின்மூலமும் ரசிகர்களை அசரடித்தனர். தண்ணீரே வந்து சேராத கடைமடைப் பகுதி விவசாயிக்கு காவிரியில் நுரைபொங்க ஓடும் நீரைப் பார்த்தால் ஏற்படும் அதே உணர்வில் தமிழ் சினிமா ரசிகர்கள் உள்ளனர். நல்லவர்கள் மட்டும்தான் நாயகர்கள் என்பதை தமிழ் சினிமா உடைத்தது. அத்துடன் ஒரு பெரிய நாயகன் இருக்கவேண்டும். மிக அழகான கவர்ச்சியான கதாநாயகி வேண்டும்; கண்டிப்பாக டூயட் இருக்கவேண்டும்; ஒரு கவர்ச்சிப் பாடல் இருக்கவேண்டும்; இப்படி பலவேண்டும்களை துணிச்சலுடன் வேண்டாம் என்று புதிய இயக்குநர்கள் புறக்கணித்தனர். திரைக்கதையில் கவனம் குவிந்தது. அட்டக்கத்தி தினேஷ் போல தலித் பையன் ஒருவன் கதாநாயகன், ஒரு சுமார் மூஞ்சி குமாரு, ஒரு குழந்தையை கடத்துபவன், ’என்ன ஆச்சிஎன்று சொன்னதையே படம் முழுவதும் சொன்னாலும் சலிக்கவைக்காத நாயகன், எண்பதுகளின் கேமிராவுடன் அலைபவன், கண் தெரியாதவன், சீர்திருத்தப்பள்ளியில் படித்தவன், திருடன், ஒரு மதுரை தாதா, குறும்பட இயக்குநர்கார் ஓட்டுனர், வேலைவெட்டி இல்லாமல் கிராமத்துக்குள் வருத்தப்படாமல் சுத்துபவன் என்று அண்மைக்காலமாக திரையில் உலவும் வித்தியாசமான முகங்களில் இது வரை புறக்கணிக்கப்பட்ட முகங்களும் அடங்கும்.

நம்ம நாலு பேர்ல நீங்க மட்டும்தான் ஹீரோன்னு யாராவது சொன்னாங்களா பாஸுஎன்று மூடர் கூடம் திரைப்படத்தில் சென்றாயன் கேட்பது ஒட்டுமொத்த தமிழ்சினிமாவின் நாயக பிம்பத்தை உடைக்கும் ஒற்றைக் கேள்வி. பிறரை ஏமாற்றும் எவரையும் ஏமாற்றலாம் என நீதி சொல்லும் சதுரங்கவேட்டை, பகுத்தறிவை மிக நாசூக்காக பிரச்சாரமின்றி சொல்லும் முண்டாசுப்பட்டி, வடசென்னையின் சேரி நாயகனை கண்முன் நிறுத்தும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என எல்லாமே புதுசுதான்.

இயக்குநர்  பாண்டி ராஜ்எங்கள் காலத்தில் ஓர் இயக்குநரை சந்திக்கச் சென்றால் முடியவே முடியாது. அவர் போகும் இடங்களுக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து, அவர் பார்வையில் படும்படி நின்று கெஞ்சி அப்புறம்தான் நம்மை ஏறெடுத்துப் பார்ப்பார்கள். ஆனால் இப்போது கதை அப்படியல்ல. தகவல் தொடர்பு மிக எளிதாகிவிட்டது. வாட்ஸ் அப்பில் ஒரு குறும்படத்தை அனுப்பிப் பார்க்கச் சொல்கிறார்கள். காரில் போகும் ஒரு சிறிய பயணத்தில் அதைப் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் கூப்பிட்டு சேர்த்துக்கொள்ளும் காலம் இது. நாளைய இயக்குநர் போன்ற நிகழ்ச்சிகள் பெரும் துணை புரிகின்றன. திரைப்படத்தின் glamour, grammer இரண்டையும் புதியவர்கள் உடைக்கிறார்கள். இது ஆரோக்கியமான ஒன்றுஎன்கிறார்.

இந்தப் படங்களின் பேசுபொருள் ஒருபோதும் காதலாக இல்லை. படத்தில் காதல் ஒரு அங்கமாக வந்தாலும் இவை எதுவுமே காதல் படங்கள் இல்லை. சொல்லப்போனால்அடுத்த வேளை சோற்றுக்கு வழியிருப்பவர்கள் காதலைப் பற்றி யோசிக்கலாம்என்கிறது மூடர்கூடம். ஒரு படி மேலேபோய் நாயகன் காதலியை ஒரு வேலை ஆகவேண்டும் என்பதற்காக காதலிப்பதுபோல் நடிக்கிறான்; எல்லாவற்றுக்கும் மேலே தமிழ் பேசுபவர்களே நடிகர்களாக இருக்கிறார்கள். “பாடல் காட்சிக்கு மட்டும் கதாநாயகி வேண்டும் என்றால் வெளிமாநிலங்களிலிருந்து அழைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு நடிக்க அதிக காட்சிகள் இருக்கையில் தமிழ் பேசும் நாயகிதான் தேர்வாக இருக்கவேண்டும்என்கிறார் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குநர் கோகுல். குறிப்பாக புதுமுகங்களே பெரும்பாலும் நடிக்கின்றனர். ” புது முகங்களை வைத்து எடுப்பதால் படத்துக்கு ஃப்ரெஷ்னஸ் கிடைக்கிறது. ஆடிஷன் வைத்துதான் நடிகர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். ரிகர்சல் நடத்திவிடுகிறோம். ஜிகர்தண்டா படத்துக்கு வொர்க்‌ஷாப் நடத்தினோம் இது புதுமுக நடிகர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது” என்கிறார் ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.

இந்தப் புதிய இயக்குநர்களின் வரவு உற்சாகமளிப்பதாகச் சொல்கிறார் சுசீந்திரன். “வாயை மூடிப் பேசவும் படம் போல டயலாக் இல்லாமல் ஒரு முயற்சி புதிதுதான்.  பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் பார்த்து வியந்தேன். புதிய எண்ணங்கள். ஆனால் இந்த வகை படங்களில் உணர்வுகள் குறைவாக உள்ளன என்பதை ஒரு சிறிய குறையாகப் பார்க்கிறேன். பார்வையாளரை உணர்ச்சிவயப்படுத்தும் தருணங்கள் ஒரு படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திவிடும். ஆனால் இதையெல்லாம் மீறி புதியவர்கள் ‘அட’ போட வைக்கிறார்கள்” என்கிறார்.

இப்போதெல்லாம் யாரும் இன்னொரு பாரதிராஜாவாகவோ அல்லது இன்னொரு மணிரத்னமாகவோ வரவேண்டும் என்று உறுதி ஏற்று வருவதில்லை. அவரவர் தனித்திறமையுடன் தனக்கான பலத்தை கண்டுபிடித்து அதற்கேற்ற திரைக்கதையை எழுதுகிறார்கள். புதியவர்கள் யாரிடமும் துணை இயக்குநராக இல்லாமல் குறும்படங்க்ளை எடுத்து அதை தயாரிப்பாளரிடம் போட்டுக்காண்பித்து வாய்ப்பை பெறுகிறார்கள். “துணை இயக்குநராக பணிபுரியும்போது யாரும் வகுப்பு எடுப்பதில்லை. பார்த்துப் பார்த்து அனுபவத்தின்மூலம்தான் ஒரு படம் எடுக்கும் விதத்தை கற்றுக்கொள்ள முடிகிறது. அதையே நேரடியாக குறும்படங்கள் எடுத்து அனுபவம் பெற்று வருவதும் ஒரு வகையில் சிறப்பான விஷயம்தான்” என்கிறார் பாண்டி ராஜிடன் துணை இயக்குநராக இருந்த மூடர் கூடம் இயக்குநர் நவீன்.

துணை இயக்குநராக பணியாற்றாமல் முதல் படம் கொடுக்கும் பாரம்பரியத்தை அண்மைக்காலத்தில் ஆரண்ய காண்டம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தொடங்கி வைத்தார். ”நான் உட்பட அப்படியானவர்களிடம் அயல்நாட்டுப் படங்களின் தாக்கம் உண்டு. ஆனால் காப்பி அடிப்பது வேறு. மரபான பாணியில் இல்லாது கண்டதை கேட்டதை வைத்து படமெடுப்பதாலேயே இப்படங்கள் மரபுகளை உடைபப்தாக உணர்கிறேன். இந்த புதிய அலைக்குக் காரணமே அயல்நாட்டுப் படங்களின் தாக்கமும், வித்தியாசமாக சிந்திப்பதும்தான்.” என்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ”நிறைய படவிழாக்கள் நடக்கின்றன. விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறை பல கல்லூரிகளில் வந்துவிட்டது. முன்பெல்லாம் அறிவுஜீவிகள்தான் அங்கு போவார்கள். ஆனால் இப்போது சாதாரண ரசிகர்களும் படவிழாக்களுக்குச் செல்கின்றனர். ஆகவே காப்பி அடித்தால் மிக எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்” என்கிறார் திருமணம் என்னும் நிக்காஹ் படத்தின் இயக்குநர் அனீஸ்.

“நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்கள் துணை இயக்குநர்களாக இல்லாவிட்டாலும் 15 ஆண்டுகள் சினிமாவை உற்றுநோக்கி அதிலேயே உழன்றிருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு உகந்ததுபோல ஒரு கோடி செலவில் ஒரு படத்தை எடுத்துவிட முடிவது சாதகமான விஷயம். அதனாலேயே பெரிய ஸ்டார்களை போடமுடியாது. எங்களுக்கேற்ற மாதிரி புதுமுகங்களை தேர்வுசெய்வதால் நாங்கள் நினைக்கும் நேரத்தில் அவர்களால் வரவும் முடியும்” என்கிறார் சதுரங்க வேட்டை இயக்குநர் வினோத்.

ஆனால் மூத்த இயக்குநரான பாக்கியராஜின் கருத்தோ வேறுமாதிரி இருக்கிறது. ”இவர்கள் களப்பயிற்சி ஏதுமின்றி சினிமாவைப் பார்ப்பதுமூலமாகவே படம் எடுக்கிறார்கள். இது நல்ல விஷயம்தான். ஆனால் இதுவே சினிமாவுக்கான இலக்கணம் அல்ல. முதல் படத்தில் வெற்றி பெறுகிறார்கள். அடுத்தடுத்த படங்களை பொறுத்திருந்து பார்ப்போம்” என்கிறார்.

படங்களில் உதட்டசைத்து இப்போதெல்லாம் யாரும் பாடுவதில்லை. கதையின்போக்கில் பாடல் வருகிறது. அல்லது பாடலுக்குள் கதை நகர்கிறது என்பதால் பாடல்காட்சியில் எவரும் எழுந்துபோக முடியாது. “உதட்டசைத்து பாடுவதென்றால் ஆடுகளம் படத்தில் வரும் ஒத்தச் சொல்லாலே போன்ற பாடலை வைக்கலாம். வெற்றிமாறன் போல அதைச் சரியாகச் செய்யமுடியுமென்றால் செய்யலாம். இல்லையெனில் பின்னணியில் மட்டும் பாடல் ஒலிப்பதுபோல் வைக்கலாம்” என்கிறார் சூது கவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமி.

பழைய மரபுகளை உடைத்தெறிகிறார்கள் புதியவர்கள். போகிறபோக்கில் ஒரு லிவிங் டூகெதர் ஜோடியை பீட்சாவில் எந்தச் சலனமும் ஆர்ப்பாட்டமுமின்றி காண்பித்துவிட்டுப் போகிறார் கார்த்திக் சுப்பாராஜ். ஆனால் பெரிய இயக்குநர்களின் படங்களில் இவை எல்லாமே ஒரு பெரிய புரட்சி போல் காண்பிக்கப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். புதியவர்களுக்கு முன்னோடியான செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனிக்காக நாயகன் ஒரு குளியலறையில் பல் துலக்குவதும், அருகே நாயகி மேற்கத்திய கழிவறையில் அமர்ந்திருப்பதுமான போஸ்டர் ஏற்படுத்திய சலசலப்பை மறந்துவிட முடியாது.

”புதிய இயக்குநர்களிடம் ஹாலிவுட் இயக்குநர்களின் பாதிப்பு உள்ளதை உணரமுடிகிறது. வெகுஜன சினிமாவுக்குள் ஒரு இணை சினிமாவை இதன்மூலம் நிகழ்த்திக்காட்ட முடிகிறது. புதிய இயக்குநர்கள் நிறைய படங்களைப் பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் வாசிப்பு பழக்கமும் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்போதைய படங்கள் அனைத்துமே பணம், க்ரைம், த்ரில்லர் என்கிற வகைகளுக்குள் அடக்கிவிடலாம். இதில் நல்லவன் கெட்டவன் இல்லை. ஹீரோயிசம் கிடையாது. ப்ளாக் காமெடி உண்டு. மக்களை 3 மணி நேரம் தங்கள் பிடியில் வைத்திருக்கும் அதே சமயத்தில் வணிக சினிமாவுக்குள் ஒரு மாற்று முயற்சி என்கிற வகையில் கதாநாயகத்தன்மையை உடைக்கும் இப்படங்களை வரவேற்க வேண்டும்” என்கிறார் அட்டகத்தி இயக்குநர் பா.ரஞ்சித்.

ஆனால் இப்படங்கள் அனைத்துமே ஏ செண்டர் படங்களாக அமைவதன் காரணம் என்ன? “அனைத்து செண்டரிலும் ஹிட்டாகும் படத்துக்கான கதை எழுத வேண்டும் என்று ஆரம்பித்தால் பிரச்சனைதான். ஜிகர்தண்டா படத்தில் சில காட்சிகள் மாஸ் ஆக இருக்கு என்றார்கள். இதெல்லாம் தானாக அமைவதுதான். ஸ்க்ரிப்டுக்கு நேர்மையாக இருப்பதுதான் வெற்றிக்கு சிறந்த வழி.” என்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.

இன்னொரு மாற்றம் படங்களுக்கு வைக்கப்படும் பெயர்கள். எண்கணித ஜோதிடப்படி பெயர்கள் வைக்கும் அதே சினிமாவில்தான் மிக அழகான பெயர்கள் படங்களுக்கு வைக்கப்படுகின்றன. சதுரங்க வேட்டை, மஞ்சப்பை, குக்கூ, பூவரசம் பீப்பி, ஜிகர்தண்டா, முண்டாசுப்பட்டி, சூது கவ்வும் என்று யாரும் யோசிக்காத புதுப்புது பெயர்கள்என்று சிலாகிக்கிறார் ஒரு துணை இயக்குநர்.

புதியவர்கள் படங்களுக்கான விளம்பரம் செய்யும் யுக்தியும் வித்தியாசமாகவே உள்ளது. ”ப்ரமோஷனில் புதிய உத்திகளைக் கையாள வேண்டியிருக்கிறது முண்டாசுபட்டி படத்துககு புதுமையான வகைகளில் ப்ரமோஷன் செய்தது நல்ல பலனளித்தது.” என்கிறார் முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமார். கார்ட்டூன் போல வித்தியாசமான போஸ்டர்கள் முண்டாசுப்பட்டியை நோக்கி ரசிகர்களை வரச் செய்தன. “மவுண்ட் ரோட்டில் ஜெமினி மேம்பாலத்தில் ஒரு குதிரையின்மீது நாயகன் அமர்ந்திருப்பது போல படம்போட்டுஇதற்குத்தானே ஆசைப்பட்டாய்என்று விளம்பரம் செய்தோம். இது மக்களுக்குப் பிடித்திருந்ததுஎன்கிறார் கோகுல். ஆனால் வெறும் விளம்பரங்களை மட்டும் நம்பி மக்கள் வருவதில்லை. “இந்த ஆண்டு நல்ல படம் என்று சொல்லப்பட்ட அனைத்து படங்களும் ஓடியிருக்கின்றன. ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது. புதுமையான முயற்சிகளை ஏற்கத் தொடங்கிவிட்டார்கள். கமர்ஷியல் படங்கள், மசாலா படங்கள் மட்டுமே வேண்டும் என்று ரசிகர்கள் கேட்பதில்லை.” என்கிறார் ராம்குமார். ”ப்ரமோஷனுக்காக யோசித்த விஷயம் படத்தில் சீனாக வைக்கும் அளவுக்கு நன்றாக இருக்கும். சீனாக யோசித்து படத்தில் வைக்க முடியாததை பிரமோஷனுக்கு பயன்படுத்துவதும் நடக்கும்.” என்கிறார் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குநர் பொன்ராம்.

இந்தப் புதியவர்கள் சமூக வலைதளங்களை காத்திரமாக பயன்படுத்துகிறார்கள். சில சமயம் சாதகமாகவும் சில சமயம் பாதகமாகவும் முடிகிறது இவ்விமர்சனங்கள். “சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுதுவதை யாரும் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஆனால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றிருப்பதால் முழுக் கதையையும் சில நேரங்களில் படத்தின் மையமான் ட்விஸ்டையும் எழுதிவிடுகிறார்கள்என்கிறார் பொன்ராம். “முன்பு அதில் ஒரு கண்னியம் இருந்தது. இப்போதெல்லாம் தங்களுக்குப் பிடிக்காதவர்கள் என்றால் வேறு மாதிரி விமர்சிக்கிறார்கள். ஆகவே அவற்றை முழுமையாக நம்பமுடியவில்லைஎன்கிறார் ஹரிதாஸ் இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலன்.

ராஜுமுருகனின் குக்கூ பார்வையற்றோரின் காதலையும், ஜி.என்.ஆர். குமாரவேலின் படமான ஹரிதாஸ் ஒரு சிறுவனுக்கும் அப்பாவுக்குமான கதையாகவும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் கோச்சடையான் வித்தியாசமான அனிமேஷன் முயற்சியாகவும்., அட்லீயின் ராஜா ராணி தம்பதிகளுக்கிடையேயான உறவுச் சிக்கலைப் பேசுவதாகவும், கிருத்திகா உதயந்தியின் வணக்கம் சென்னை வெற்றிகரமாக ஓடியும் கவனத்தைக் கவர்ந்தன.

இன்றைய இயக்குநர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று அயல் நாட்டு படங்களைக் கண்டு அதன் பாதிப்பில் நம் மண்ணுக்குப் பொருந்துவதான கதையை எழுதி படமாக்குபவர்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பண்ணையாரும் பத்மினியும், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்போல அயல்நாட்டுத்  தாக்கங்கள் இல்லாத ஆனால் வேறுபட்ட கதைகள். ஆனால் இவ்விரு வகை இயக்குநர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. முந்தைய தமிழ் சினிமா இயக்குநர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாக இவர்கள் உள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் மண்ணின் மனம் வீழும்அட்டகத்திபோன்ற படங்கள் அல்லது எந்த மொழிக்கும் பொருந்தும்ஆரண்ய காண்டம்போன்ற படங்கள். இரண்டுமே ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடுவதாய் இருப்பது ஆரோக்கியமான விஷயம்

(நன்றி : இந்தியா டுடே)