Friday, November 15, 2013

படிக்கக் கூடாத கடிதம்

அன்புள்ள பிரீதம்,

எனது அன்பு முத்தங்கள். நேற்றோடு 79 முறை சிறையில் கம்பிகளுக்கு அப்பால் இருந்து என்னை பார்த்துச் சென்றாய். இப்போது எந்த நாளையும் விட நேற்றைய தினம் உனது வருகை என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது. நேற்றோடு நமக்கு திருமணம் நடந்து 4 ஆண்டு கள் ஆகிவிட்டன. நமது திருமண நாளை நினைவுபடுத்தாமலேயே என்னை நீ பார்த்துச் சென்றாய். எனக்கு நினைவு இருந்த போதும் அதை உனக்கு சொல்லுகிற தைரியம் இல்லாத தால் நானும் உன்னிடம் பேசவில்லை. இனி மேல் அடிக்கடி நீ என்னை சிறையில் வந்து சந் திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.சிறைக்கு வந்த சில வாரங்கள், தினந்தோறும் நீயோ, நமது உறவினர்களோ என்னைப் பார்க்க வரவேண்டும் என்று நான் ஏங்கியிருக்கிறேன். சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரைச் சொல்லி என்னை சந்திக்க வேண்டுமென்று அவர்களிடம் வேண்டிக் கொள்ள உனக்குக் கூறி யிருந்தேன்.

உனக்கு நினைவிருக்கிறதா, வாரம் இருமுறை சந்திப்பதற்கு வாய்ப்பிருந்தும் போன ஆண்டின் ஒரு வாரத்தில் ஒரு நாள் நீ வராத போது நான் மிகவும் துடித்துப் போனேன். அடுத்த முறை சந்தித்த போது நான் அழுவதைப் பார்த்து என்னிடம் ஏன் என்று கேட்டாய்? நான் அதற்கு பதிலேதும் சொல்லவில்லை. அம்மா மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டிருந்ததையும் அவர்களோடு நீ இருந்ததையும் நீ எனக்குச் சொல்லவில்லை. ஆனால், பின்னர் வழக்கறிஞர் மூலம் அதை நான் தெரிந்து கொண் டேன். ஆனால், இப்போது நான் சிறையிலிருந்து வெளிவரும் வரை என்னைப் பார்க்க வராமல் இருந்தால் நல்லது என்று தோன்றுகிறது. என்னைப் போல இன்னும் 146 பேர் என் னோடு பணிபுரிந்தவர்கள் ஒரு வருடத்திற்கு மேலாக இந்த சிறைச் சாலைக்குள் தான் இருந்து கொண்டிருக்கிறோம். அவர்களில் பலரது அம்மா வோ, மனைவியோ அவர்களை வாரா வாரம் சந்திப்பதில்லை.

நிரந்தர வருமானமற்று போன தால் குழந்தைகளை படிக்க வைக்க, பெற் றோரை மருத்துவரிடம் கவனிக்க என்று எத்த னையோ செலவுகளுக்காக வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாள் சிறைச் சாலைக்கு வருவது என்பது ஒரு நாள் உணவை இழக்க வேண்டும் என்பதோடு இன்னொரு நாள் உணவுக்கான பணத்தை பயணத்தில் இழக்க வேண்டியிருக்கிறது.சிறையில் இருப்பவர்களுக்கு வெளியிலிருப் பவர்கள் அடிக்கடி பார்த்துவிட்டு செல்வது ஒரு மிகப்பெரிய ஆடம்பரம். என்னோடு வேலை செய்து இப்போது சிறையில் இருக்கிற இதர 146 பேரில் பலருக்கும் உறவினர்களை பார்க்கும் இந்த வாய்ப்பு இல்லாத போது அந்த ஆடம்பரத்தை நான் அனுபவிப்பது ஒரு அந்நியப்பட்டுப் போன உணர்வை உருவாக்கியிருக்கிறது. இவர்கள் அனைவரும் என்னைப்போலவே 25க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினர். சிலருக்கு திரு மணமாகவில்லை. பலருக்கும் கைக்குழந் தைகள் இருக்கிறார்கள்.உனக்கு நினைவிருக்கும், சிறைச்சாலைக்கு வந்த சில நாட்களில் நீ என்னைப் பார்க்க வந்த போது மிகப்பெரிய தைரியத்தோடும் தெம்போடும் உனக்கு ஆறுதல் சொன்னேன். விரைவில் ஜாமீனில் வெளியே வந்துவிடுவேன். என் மீது போடப்பட்ட வழக்குகள் பொய் என்பதை நிரூபிப் பேன்.

பொய் வழக்குப் போட்டவர்களை சட்டத் தின் முன்னாள் நிறுத்துவேன் என்று உன்னிடம் கூறியிருந்தேன். நான் சிறைக்கு வரும் முன்பாக அந்த தொழிற்சங்கத்தில் நான் உறுப்பினர் இல்லை. அவர்கள் மீது எனக்கு வெறுப்பு இருந்த தும் கிடையாது. ஆனால், இன்று அந்த தொழிற் சாலையின் வாயிலுக்கு முன்னாள் ஓங்கி வளர்ந்த ஒரு கம்பத்தை நட்டு அதன் உச்சியில் பட்டொளி வீசி பறக்கும் சங்கத்தின் கொடியை பறக்கவிட்டு தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துவது போல தொழிலாளர்கள் அனைவரும் தொழிற் சாலைக்கு செல்லும் முன் அதற்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்று கனவு காண ஆரம் பித்திருக்கிறேன். இப்போது என்னுடைய ஒரே கனவாக அது மட்டுமே இருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் (நான் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், நிர் வாகம் என்னை அவர்கள் நிறுவனத்திலிருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டது) மனித வளத்துறை பொது மேலாளர் அவானிஷ் தேவ் இறந்து போன அன்றைய தினத்தில் எத்தனை பதற்றத்தோடு இருந்தேன் என்பதை நீ அறிவாய்.

எனது சொந்த சகோதரனை பறிகொடுத்தது போன்ற உணர்வில் நான் இருந்தேன்.அப்போது சங்கத் தலைவர்களாக இருந்தவர் கள் கூட அவரைப் பற்றி நல்லவிதமாகவே பேசி னார்கள். அவர் தொழிலாளர்களுக்கு ஆதரவான வர் என்பதால் நிர்வாகம் கூட அவர் மீது கோப மாக இருந்ததாக ஒரு பேச்சு உண்டு. இப்போது அவருடைய பிரதேப் பரிசோதனை அறிக்கை மர்ம முடிச்சுகளால் சூழப்பட்டிருக்கிறது. அவரை அடித்து கொன்று எரித்ததாக எல்லா பத்திரிகை களும் செய்திகள் வெளியிட்டன. நானும் கூட உண்மை என்று நம்பியிருந்தேன். இப்போது காலில் சில காயங்களைத் தவிர வேறு காயங்கள் உடம்பில் இல்லை என்றும் மூச்சுத் திணறல் மற்றும் தீக்காயங்களால் இறந்து போனார் என்றும் வெளிப்பட்டிருக்கிறது. தொழிலாளிகளைப் பற்றி எனக்குத் தெரியும். தொழில் தகராறுக்காக அவர்கள் யாரையும் கொல்லத் துணியமாட் டார்கள். அப்படி எல்லாம் நடந்தால் இந்த நிறு வனத்தில் எத்தனையோ கொலைகள் நடந் திருக்க வேண்டும். இந்த நல்ல மனிதரை கொல் வதற்கு நிச்சயம் தொழிலாளிகள் துணிந்திருக்க மாட்டார்கள்.நம் திருமணம் முடிந்து ஒரு வார காலம் முடிந்த பிறகு உனது வீட்டிற்கு விருந்திற்காக வந் திருந்தேன். உனது உறவுக்காரர்களை எல்லாம் அழைத்து வந்து உனது அப்பா பெருமை பொங்க எனது மருமகன் மாருதி சுசுகியில் வேலை செய்கிறார். அது ஒரு ஜப்பான் நிறுவனம். நல்ல சம்பளம். கவுரமான வேலை என்று குறிப்பிட்டார்.அப்போது, உங்கள் குடும்ப உறுப்பினர் களிடமும் உறவினர்களிடமும் ஒரு பெருமிதம் தொற்றிக் கொண்டதை உணர முடிந்தது. அடுத்த நாள் நான் கடைவீதிக்குச் சென்றபோது சில இளைஞர்கள் தாங்கள் மாருதி சுசுகி நிறு வனத்தில் பணிக்குச் சேர முடியுமா? என்னால் அதற்கு உதவ முடியுமா என்றெல்லாம் கேட் டார்கள்.

சில சிறார்கள் கூட, அந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமென்றால் என்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் கூட கேட் டார்கள். நான் அவற்றிற்கெல்லாம் ஏதோ பதில் சொல்லிவிட்டு வந்தேன்.நிறுவனத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். 48 நிமிடத்தில் ஒரு கார் உற்பத்தியாகி வெளியே வந்துவிடும். எனவே, சில நொடி களைக் கூட விட்டுக் கொடுப்பதற்கு நிர்வாகம் அனுமதிக்காது. ஆனால் பிரீதம், ஒரு மனிதன் டீ குடிக்கக் கூட உட்கார முடியாது.ஆனால் கூட எங்கள் மேலதிகாரிகள் டீ குடிக்கிற இடத்தில் வேலை சம்பந்தமாக ஆணைகளை பிறப்பிப்பார்கள். அது ஒன்றும் புதிய விசயம் கிடையாது, எங்களுக்குப் பழகிப் போன ஒன்றுதான்.துரதிர்ஷ்டமான அந்த ஜூலை 17 ஆம் தேதி ஒரு தொழிலாளி பாவம் அவன், என்ன சிரமத்தில் இருந்தானோ அவனிடமிருந்த மனிதன் சற்று தலையைத் தூக்கி மேலதிகாரியிடம் இந்த 7 நிமிடம் டீ குடிப்பதற்கான எங்கள் நேரம். இப் போது எதுவும் சொல்லாதீர்கள் என்று கூறியிருக் கிறான். உலகம் முழுவதும் பெருமிதத்தோடு தங்கள் கார்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிறுவனத்தின் சூப்பரவைசரிடம் அப்படியெல்லாம் பேசக் கூடாது என்கிற நியதி பாவம் அந்த தொழிலாளிக்கு தெரிந்திருக்க வில்லை. அப்படி கேள்வி கேட்டதற்காக அந்த தொழிலாளியை சாதியைச் சொல்லி அந்த சூப்பிர வைசர் திட்டிவிட்டார். இது அனைத்து தொழி லாளிகளின் முன்பு நடந்து, அனைத்து தொழி லாளிகளும் அவமான உணர்வை அனுபவித் தார்கள். இதுகுறித்து நிர்வாகத்திடம் முறையிட்ட போது சம்பந்தப்பட்ட சூப்பிரவைசர் மீது நட வடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவமானப்பட்ட தொழிலாளி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதை யொட்டிய நிகழ்ச்சிகளுக்குப் பின்பு இதுவரை நாங்கள் சிறையிலிருக்கிறோம்.ஆகஸ்ட் 1 ஆம் தேதி 2012 இல் போலீஸ் 10 பேரை கைது செய்தது. அவர்களில் சங்கத் தலைவர்களும் அடங்குவர். அவர்களை போலீஸ் தேடிக் கண்டுபிடித்து கைது செய்ய வில்லை. போலீஸ் தேடுகிறது என்று தெரிந்ததும் அவர்களாகவே காவல்நிலையத்திற்கு போனார்கள். பிரீதம், காக்கி உடையைப் போட்ட பிறகு காவல்துறையினர் மனித குணங்களை கழற்றி வைத்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். சரணடைந்த அந்த தொழிலாளிகளை காவல் துறையினர் வாயிலும் நெஞ்சிலும் பூட்ஸ் கால் களால் மிதித்ததையும், அது அவர்களின் கடமை யைப் போல செய்ததையும் என் வாழ்நாளில் அதை மறக்கமாட்டேன்.அதன் பிறகு நானும் கைது செய்யப்பட்டேன் இப்போது 147 பேரில் காசநோயால் பாதிக்கப் பட்ட ஒருவரைத் தவிர மீதி அனைவரும் சிறைக்குள் தான் இருக்கிறோம். நான் கைது செய்யப்பட்ட போது சங்கத் தலைவர்களும் கைது செய்யப்பட்ட மற்றவர் களும் நான் எதற்காக கைது செய்யப்பட்டேன் என்று கேட்டார்கள். ஏனென்றால், அவர்களுக் குத் தெரியும் நான் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவன் அல்ல. தொழிற்சங்கத் தலை வர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விமர்சித்து அவர்களுக்கு ஆதரவாக பேசியதற்காகவே நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். சிறைக்குள் வந்த பல நாட்களில் எனக்கு உறக்கமே பிடித்ததில்லை. நான் சிறைக்குள் வந்ததை விட, இதர 146 பேருடன் எந்த வகை யிலும் தொடர்பில்லாத நான் சிறையிலடைக்கப் பட்டதை அவமானமாக கருதினேன். ஆனால், பிரீதம் இப்போது இவர்களோடு இருப்பதற்காக, அவர்களின் துயரங்களில் பங்கெடுத்ததற்காக, அவர்களின் ஒருவனாக நிர்வாகமும் போலீசும் சொல்வதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

இந்த ஒரு காரணத்திற்காகத் தான் அவர்களுக்கு மறுக்கப்பட்ட வார இருமுறை உறவினர்கள் சந்திப்பு என்கிற ஆடம்பரத்தை நான் அனுபவிக் கக் கூடாதஎன்பதற்காகவே நீ இனிமேல் என்னைப் பார்ப்பதற்கு சிறைக்கு வரவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். பிரீதம், நேற்று வரை நாங்கள் சிறைக்கு வந்து 15 மாதங்கள் முடிந்துவிட்டன. ஆனால், இன்று வரையிலும் எங்களுக்கு பெயில் கிடைக்க வில்லை. நம் நாட்டில் சட்டத்தின் முன் அனை வரும் சமம் என்பதை பெருமிதத்தோடு பிரகட னப்படுத்தி நமது நாட்டின் நாடாளுமன்றம், சட்ட மன்றங்கள் இயங்கிக் கொண்டே இருக்கிறது. நமது நாட்டின் தாலுகா முதல் தலைநகரம் வரை பல படிநிலை நீதிமன்றங்களிலும் தினந்தோறும் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. நமது நீதி வழங்கும் முறை, ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாத என்று வலியுறுத்திக் கொண்டிருக் கின்றது. கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப் பட்டவர்கள் கூட மேல்முறையீடு செய்து இடைக்காலத்தில் பெயிலில் வெளியே வரு கிறார்கள். ஆனால், 147 பேர் 15 மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் சிறைச் சாலைக்குள்ளே இருக்கிறோம். அன்று ஒரு சகோதரி தன்னுடைய அண்ணனை பார்க்க வந்திருந்த போது நீதிபதி களுக்குத் தெரியாதா, 147 பேர் சேர்ந்து ஒரு மனி தனைக் கொண்டிருப்பார்களா என்றெல்லாம் கேள்வி கேட்டார். இதற்கு எனக்கு விடை தெரியவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும் முன்பு ஓராண்டு காலம் சிறையிலடைக்கப்படுவதற்கு நமது சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.எனக்கு நமது அரசியல் சட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. இப்போதும் கூட அதன் மீதான நம்பிக்கையை நான் முழுவதுமாக இழந்துவிடவில்லை. அரசியல் அதிகாரத்தி லிருப்போர் அவ்வப்போது சட்டம் தன் கடமை யைச் செய்யும் என்று முடங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பிரீதம், மாருதி சுசுகி தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டமட்டில் சட்டம் தன் கடமையைச் செய்திருந்தால், இந்த நிகழ்வுகள் எதுவுமே இல்லாமல் போயிருக்கும். தொழிலாளர்கள் விசயத்தில் கடமையைச் செய்யாத சட்டம், மாருதி சுசுகி நிறுவனத்திற்காக 147 குடும்பங் களின் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக் கிறது. இது அவானிஷ் தேவ் இன் கொலைக்காக இத்தனை கடுமையாக நடந்து கொள்வதாக நான் நினைக்கவில்லை.

மாருதி சுசுகி நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கான சட்டப்படியான உரிமை யைக் கோரியதற்காகவும் சங்கம் வைக்க முயற் சித்ததற்காகவும் கொடுக்கப்பட்ட தண்டனை. இந்தியாவில் செயல்படும் எந்த ஒரு பன் னாட்டு நிறுவனத்திடமும் தொழிற்சங்கம் வைப்ப தற்கு எவனும் துணியக் கூடாதஎன்பதற்கான எச்சரிக்கை. இந்தியாவில் இருக்கக் கூடிய அந்நிய தூதரங்கள் அந்தந்த நாட்டு சட்டங்களின் படி செயல்படும். ஆனால், இந்தியாவில் செயல் படும் எந்த நாட்டு நிறுவனமும் எந்த நாட்டு சட்டங்களையும் மதிக்காது.நம்முடைய அரசியல் சட்டம் முடமாக்கப் பட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் வீடு, மனைவி, மக்கள், சுகம், செல்வம் அனைத் தையும் இழந்து நம் முன்னோர்கள் பெற்ற சுதந் திரம், அந்நிய நிறுவனங்களிடம் செயலற்று நிற் பதைப் பார்க்கிற போது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அந்த பிரகடனம் கண் கள் பிடுங்கப்பட்டு, செவிப்பறைகள் கிழிக்கப் பட்டு, குரல்வளை நெறிக்கப்பட்டு, தேகம் எங்கும் குருதி வழிய குற்றுயிராய் கிடப்பதை நான் உணர்கிறேன்.பிரீதம், இப்போது என் மனதில் ஒரே ஒரு நோக்கத்தைத்தான் பிரதானமாக வைத்திருக் கிறேன். நேற்று உனக்குப் பின்பு வேறொருவரை பார்க்க வந்திருந்த ஒருத்தர் சொன்னார், மாருதி சுசுகி நிறுவனத்தின் வாயில் முன்பாக பறந்து கொண்டிருக்கும் சங்கத்தின் கொடி அழுக் கடைந்து, கந்தலாகி படபடத்துக் கொண்டிருப்ப தாகக் கூறினார். அதை சொல்கிறபோது நாடாளு மன்றமும் சட்டமன்றங்களும் நீதிமன்றங்களும் குற்றுயிரும் குலையிருமாய் துடித்துக் கொண் டிருக்கும் ஒரு மனிதனை ஏதோ ஒரு விசுவாசத் தால் ஏதோ ஒரு பயத்தால் ஏதோ ஒரு நிர்ப்பந்தத் தால் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன்.ஒரு சங்கம் வைக்க முயற்சித்ததற்காக நாங்கள் 146 பேர் சிறையிலிருப்பது மட்டுமல்ல, 3200 பேர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நிரந்தரத் தொழிலாளி, தற்காலிகத் தொழிலாளி, அப்ரண்டிஸ் என எல்லா தொழி லாளிகளும் அடக்கம். இவர்களுடைய எல்லா குடும்பங்களும் தெருவில் தான் நின்று கொண் டிருக்கின்றன. இவர்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்களை நிர்வாகம் வேலைக்கு அமர்த்தியிருக்கிறதாம்.

ஒருவேளை நாங்கள் 147 பேரும் கொலைக் குற்றத்திற்காக உள்ளே இருக் கிறோம் என்றால் இந்த 3200 பேரும் எதற்காக வெளியேற்றப்பட்டார்கள். தொழிற்சங்கம் அமைக்க முயற்சித்ததற்காக. எனவே, இது அவானிஷ் தேவ் கொல்லப்பட்டதற்கான தண்ட னை அல்ல. தொழிற்சங்கம் அமைக்க முற்பட்ட தற்கான எச்சரிக்கை.பிரீதம், எனக்கு ஒரு கனவிருக்கிறது. நான் வெளியே வருவேன். நாடாளுமன்றத்தாலும், சட்டமன்றத்தாலும் நீதிமன்றங்களாலும் கை விடப்பட்ட அழுக்கடைந்து கிழிந்து படபடத்துக் கொண்டிருக்கும் அந்தக் கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்வேன். தேசியக் கொடியை வணங்குவதுபோல் தொழிலாளிகள் தங்கள் சங்கக் கொடியை பெருமிதத்தோடு வணங்கச் செய்வதற்கான பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்.பிரீதம், கிழித்தெறியப்பட்டு, கீழே கண் டெடுக்கப்பட்ட அரசியல் சாசன புத்தகத்தின் அந்தப் பக்கத்தை பத்திரமாக வைக்கிறேன். அதை, அதன் ஆன்மாவை பாதுகாக்கும் முயற்சி யில் இதர தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு நான் போராட வருவேன். முன்பிருந் தது போன்ற குருட்டுத் தனமான பக்தியின் அடிப் படையில் அல்ல. ஒரு அரசியல் சட்டம் தன் நாட் டின் அத்தனைக் குடிமக்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிற உண்மையான அர்த்தத்தில்.என்னைப் போன்று கணவனையோ, மகனையோ, தந்தையையோ, சிறையில் கடந்த ஓராண்டு காலமாக பார்த்துக் கொண்டிருக்கிற எல்லோருக்கும் சொல், நிச்சயமாக ஒரு நாள் நமது நியாயங்களை நமது அரசியல் சட்டம் உத் தரவாதப்படுத்தும். ஒருவேளை அது இயலாமல் போனால், புதியதொரு அரசியல் சட்டத்தை இந்தியாவின் அனைத்து மக்களையும் சமமாக மதிக்கிற சட்டத்தை நாம் உருவாக்குவோம்.

பிரீதம், இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன் பாக மிகப்பெரும் சுமைகளை உனக்கு விட்டு வந்திருப்பதற்காக நான் வருந்துகிறேன். நான் சிறைக்கு வந்த பிறகு அம்மாவுக்கும் உனக்கு மான பிணக்குகள் கூட தீர்ந்திருப்பதாக அம்மா கூறினார். அவர்களை தன் மகளைப் போல பார்த்துக் கொள்வதாக அம்மா குறிப்பிட்டார். உன் தாய், தந்தையர் உனக்கு உதவ முயற்சித்த போது அதை மறுத்துவிட்டதாகவும் அம்மா என்னிடம் சொன்னார். நீ பக்குவப்பட்டிருப்பதையும் தைரியம் அடைந்திருப்பதையும் நான் உணர்கிறேன். சிறை யிலிருக்கும் 146 பேரையும் வெளியே கொண்டு வருவதற்கான முயற்சியில் பல தொழிற்சங்கங் கள் போராடிக் கொண்டிருக் கின்றன. அவர்களது முயற்சியில் உன்னையும் இணைத்துக் கொள். வாரா வாராம் என்னைப் பார்ப்பதை விட வாரத் தில் ஒரு நாளாவாது அந்த முயற்சியில் பங்கெடுப் பதையே நான் பெருமை யாகக் கருதுகிறேன்.

அன்புடன்
ஜிதேந்தர்

தமிழில் : க.கனகராஜ்





Tuesday, November 12, 2013

காவல் சீர்திருத்தச் சட்டம் பலன் தருமா?

தமிழ்நாட்டில் தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் மட்டும் 36 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் 8 மரணங்களும் கடந்த 3 மாத காலத்தில் 6 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. காவல்துறை பொதுமக்களுடன் நட்பு பாராட்டுவதில்லை. ஒரு வீட்டின் காவல்காரரைப் பார்த்து வீட்டுக்காரர் பயப்படும் விநோதம் போன்றது இது. ஏன் இந்த அச்சம்? காவலர்களுக்கு உள்ள அதிகாரம்தான். அதிகாரங்கள் சரியாக பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்கிற கேள்விக்கு விடைசொல்லுவதாக காவல்நிலைய மரணங்கள் அதிகரித்துள்ளன. என்கவுண்ட்டர்கள், காவல்நிலைய மரணங்கள், விசாரனை கைதிகளை சித்திரவதை செய்தல், சிறையில் பாலியல் வன்முறை என்று எதுவுமே தமிழகத்துக்கு புதிதில்லை. இப்படியொரு சூழலில்தான் தமிழக அரசு சட்டமன்றத்தில் ஓர் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி அதன்மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய விவாதத்தை முற்றிலும் புறந்தள்ளி மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கியுள்ளது. செப்டம்பர் 2013ல் தமிழக அரசு ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியது.  சட்டமன்றக் கூட்டத்தொடர் இப்போதைக்கு இல்லை எனும் நிலையில் அதற்காக காத்திருக்க இயலாது எனும்போது அசாதாரணமான, எதிர்பாராத, அவசரமான நிலைமை ஏற்பட்டால் மாநில ஆளுநர்  அரசமைப்பு சாசனத்தின் 213வது பிரிவின் கீழ் அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம். அப்படியான அவசரம் எதுவுமே இல்லாத நிலையில் அவசரச்சட்டத்தை ஏன் இயற்றவேண்டும் என்பதே மனித உரிமை அமைப்புகளின் கேள்வியாக உள்ளது. எந்த ஒரு அவசரச் சட்டத்தையும் 6 வார காலத்துக்குள் சட்டமன்றத்தைக் கூட்டி மசோதாவாக அறிமுகம் செய்து சட்டமாக்கவேண்டும் என்பது விதி.

இந்த அவசரச் சட்டம் ஏன் இயற்றப்பட்டது? இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர காலத்தில் காவல்துறையினரின் அத்துமீறல்கள் நடந்ததையடுத்து ஜனதா ஆட்சிக்காலத்தில் தேசிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டு அவை பல அறிக்கைகளை அளித்தன. ஆனால் ஆட்சி மாறி மீண்டும் இந்திரா ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அறிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. ஆணையமும் முடிவுக்கு வந்தது. அந்த அறிக்கைகளின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என்று கோரி 1996ல் பிரகாஷ் சிங், என்.கே.சிங் என்கிற முன்னாள் காவல்துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதன்பின் நீதிமன்றம் ரிபெய்ரோ தலைமையில் குழு அமைத்தது. 2000-ல் பத்மநாபய்யா குழு அமைக்கப்பட்டது. 2006-ல் சொலி சொராப்ஜி குழு அமைக்கப்பட்டது. இக்குழுக்கள் நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கைகள் அளித்தாலும் அவை கிடப்பில் போடப்பட்டன. அந்த வழக்கு விசாரணை முடிந்து 2006ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு மாநில அரசும் 7கட்டளைகளை நிறைவேற்றி ஒரு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் இயற்றவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழகம் உட்பட சில மாநிலங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை.

இந்நிலையில்தான் மே 2013ல் உச்ச நீதிமன்றம் தானாகவே பீகார் மற்றும் ஹரியானாவில் நிகழ்ந்த காவல்துறை அத்துமீறல்கள் குறித்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது பிரகாஷ் சிங் வழக்கில் எந்தெந்த மாநிலங்களெல்லாம் உச்ச நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்கவில்லை என்று பார்த்து அக்டோபர் 22 அன்று அடுத்தகட்ட விசாரணை நடைபெறுவதாக இருந்தது. ”அந்த நிலையில்தான் நீதிமன்ற அவமதிக்குப்புக்கு ஆளாகமல் தப்பிக்கவே அவசரம் அவசரமாக காவல்துறை சீர்திருத்தங்கள் சட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு.  ஆனால் தேதி குறிப்பிடப்படாமல் அக் 22 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. ” என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன். 

சட்டமன்றத்தில் இதுகுறித்து அக்டோபர் 30 அன்று விவாதம் நடந்தபோது எதிர்க்கட்சிகளான சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்றவை கடுமையாக எதிர்த்தன. ”உச்ச நீதிமன்றத்தின் 7 கட்டளைகளில் 6 கட்டளைகள் உச்ச நீதிமன்றம் கூறியதற்கு நேரெதிராக உள்ளன. ஒரேயொரு கட்டளை மட்டுமே சரியாக பின்பற்றப்பட்டிருக்கிறது’’ என்கிறார்  ஹெச்.ஆர்.எஃப். அமைப்பின் நிறுவனர் ஆஸி  ஃபெர்னாண்டஸ்.

அதென்ன 7 கட்டளைகள்? 
1. மாநில பாதுகாப்பு ஆணையம் ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த ஆணையம் மாநில அரசு காவல்துறை மீது அரசு நிர்வாகம் தேவையற்ற செல்வாக்கு செலுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது இந்த ஆணையத்தின் நோக்கம். துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், வல்லுநர்கள் போன்றோர் இந்த ஆணையத்தில் இருக்கவேண்டும் என்பது விதி.  “பாதுகாப்பு ஆணையத்தின் இந்த நோக்கம் குறித்து குறிப்பிடப்படவில்லை. மாநில ஆணையங்களின் தலைவர்களை உறுப்பினரகளாகப் போட்டிருப்பதும் ஏற்கத்தக்கதல்ல” என்று சட்டமன்றத்தில் பேசினார் மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா. 

2. காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தகுதி அடிப்படையில் வெளிப்படையான முறையில் நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும், அவரது பதவிக்காலம் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாகவே இருக்க வேண்டும் என்கிறது கட்டளை.

3.அதுபோலவே மாவட்ட அளவில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளின் பதவிக்காலமும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாக இருக்கவேண்டும் என்கிறது கட்டளை. “ஆனால் எழுத்துபூர்வமாக பதிவு செய்யப்படவவேண்டிய பிற நிர்வாக அடிப்படைகளின்பேரில் அவரை பணியிலிருந்து விடுவிக்கலாம் என்று கட்டளை 2 மற்றும் 3 இரண்டிலும் சட்டம் சொல்கிறது. இது தவறான முறையில் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது” என்கிறார் ஜவாஹிருல்லா.

4. காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வு பணிகளையும் பிரிக்கவேண்டும் என்பது கட்டளை. இப்போது இவை இரண்டும் ஒன்றாக உள்ளன. ஒரு காவல்நிலையத்தில் இரண்டுக்கும் தனித்தனி காவலர்கள் இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். ‘’இதை மட்டும்தான் தமிழக அரசு முறையாகப் பின்பற்றி இருக்கிறது’’ என்கிறார் ஆஸி ஃபெர்னாண்டஸ்

5. காவல்துறை கண்காணிப்பாளர் நிலைக்குக் கீழ் உள்ள காவல்துறையினரின் இடமாறுதல்,, பணி நியமனம், பதவி உயர்வு மற்றும் பணிகள் தொடர்பான மற்ற விஷயங்களை முடிவு செய்யவும், காவல்துறை கண்காணிப்பாளர் நிலைக்கு மேல் உள்ளவர்கள் குறித்த இதே விஷயங்களில் பரிந்துரை செய்யவும், காவல்துறை நிர்வாக வாரியம் அமைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் கட்டளை. ‘’ஆனால் இந்த அதிகாரத்தை புதிய சட்டத்தின் மூலம் மாநில அரசே எடுத்துக்கொண்டுவிட்டது. இது உச்ச நீதிமன்றத்தின் கட்டளையை மீறுவதாகும்’’ என்கிறார் ஹென்றி திபேன்.

6. காவல் நிலைய மரணம், பலத்த காயம் அல்லது காவலின்போது வன்புணர்ச்சி போன்ற கடுமையான தவறுகள் தொடர்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் நிலைக்கு மேல் உள்ள அதிகாரிகள் அல்லது மாநில அளவிலான அதிகாரிகள் மீதான பொது மக்களின் புகார்கள் குறித்து விசாரிக்க முறையே மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் ஒரு காவல்துறை புகார்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றம். ‘’ஆனால் இந்த ஆணையத்தின் உறுப்பினராக காவல்துறை அதிகாரியான டி.ஜி.பி.யையே நியமித்திருக்கிறது மாநில அரசு. பின் எப்படி பொதுமக்கள் புகார் அளிக்க முன்வருவார்கள். அத்துடன் அங்கீகாரம் பெற்ற நோட்டரி பப்ளிக் ஒருவரிடம் பிரமாண பத்திரம் பெற்றுவந்து புகார் செலுத்தவேண்டும் என்பது சாமான்ய மக்களை சோர்வடையச் செய்யும் நடைமுறை. இப்படியான நடைமுறைகளை பின்பற்றச் சொன்னால் காவல்துறையினரின் மீது புகார் கொடுக்க ஒருவரும் முன்வர மாட்டார்கள்” என்கிறார் ஆஸி ஃபெர்னாண்டஸ்.

7வது கட்டளை மத்திய அரசுக்கு என்பதால் மாநில அரசு அதில் ஒன்றும் தலையிடுவதற்கில்லை. சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தில் இந்த விதிமீறல்களையெல்லாம் பட்டியலிட்டு, அதில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்பது உட்பட எல்லாவற்றையும் எழுத்துப்பூர்வமாக அளித்தேன். ஆனால் முதல்வர் அவை எதையும் கணக்கில் கொள்ளாமல் நிராகரித்துவிட்டார். அவர்கள் பெரும்பான்மை என்பதால் சட்டமும் நிறைவேறிவிட்டது’’ என்கிறார் ஜவாஹிருல்லா. 

காவல்துறையினர் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரியை தொடர்புகொண்டபோது அவர் ‘’இது குறித்து விவரங்கள் ஏதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆகவே கருத்து சொல்லமுடியாது’’ என்று ஒதுங்கிக்கொண்டார். முன்னாள் காவல்துறை அதிகாரியான நாஞ்சில் குமரன் ஐ.பி.எஸ். “இத்தகைய முக்கியமான சீர்திருத்த சட்டத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து விவாதித்து மாவட்டந்தோறும் கூட்டங்கள் நடத்தி மக்களின் கருத்தை அறிந்தபிறகே சட்டமாக்க வேண்டும்.” என்கிறார். பொதுமக்களின் கருத்துகேட்கப்பட்டிருக்கவேண்டும் என்று அழுத்தமாகச் சொல்கிறார் முன்னாள் டி.ஜி.பி. கே.ஆர்.ஷியாம் சுந்தர். அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்றால் சட்ட மசோதாவை ஒரு அனைத்துக்கட்சிக் குழுவுக்கு அனுப்பியிருக்கவேண்டும். அதில் உள்ள ஓட்டைகள் சரிசெய்யப்பட்டிருக்கும். ஒருவேளை அது நடந்திருந்தால் மனித உரிமை மீறல்கள் நடக்காமல் இனி தடுக்கப்பட்டிருக்கும்.’’ என்கிறார். மாநில உள்துறை செயலாளரை தொடர்புகொள்ள முயன்றும் இறுதி வரை முடியவில்லை.

‘’இச்சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம். உச்ச நீதிமன்ற விசாரணையில் தமிழக அரசு இச்சட்டத்திற்கு பதில் சொல்லியே தீரவேண்டும்’’ என்கிறார் ஹென்றி திபேன்.

(நன்றி : இந்தியா டுடே)


Sunday, November 10, 2013

ஒரு காட்சி, ஒரு நடனம், ஒரு காதல்

ஒரு படத்தின் காட்சி இத்தனை உயிரோட்டமாய மனதைக் கவர்கிறது என்றால் அந்தக் காட்சி உணர்வுபூர்வமாய் இருக்கிறது எனலாம். ‘தில் தோ பாகல் ஹை’ இந்திப் படம் வந்த புதிதில் அதை நான் பார்த்திருக்கிறேன். ஒரே ஒரு முறை பார்த்த மாதுரி தீக்‌ஷித்தின் அந்த கதக் நடனம் மனதிலேயே நின்றது. இப்போது யூ டியூபில் அவ்வபோது அதை எடுத்துப் பார்ப்பதுண்டு. எத்தனை அழகான காட்சி. ஷாருக்கானும் மாதுரியும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். மாதுரியின் கைகளின் அந்த அபிநயமும், முகபாவமும், நளினமும் அந்த நடனத்தை அற்புதமாக்குகின்றன. சற்றும் சளைக்காமல் கைகளால் தாளமிசைக்கும் ஷாருக்கின் துள்ளல் இந்தக் காட்சிக்கு அழகு சேர்ப்பது. மேலிருந்து பாயும் ஒளிவெள்ளத்தில் ஒரு வெள்ளை தேவதையாய் மாதுரி..இத்தனை அழகாய், நளினமாய், புன்னகைக்கும் ஒரு நடிகை...உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நடன அசைவுகள்...மாதுரியின் திறமைக்கு எல்லை இல்லை. ஒரு முறை ஓவியர் எம்.எஃப்.உசேன் கூறினார். ‘நான் என் கை விரலை எவ்வள்வு எளிதாக அசைக்கின்றேனோ அது போல மாதுரி தன் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நடனத்தின்போது எளிதாக அசைக்கும் திறன் பெற்றிருக்கிறார். இது எல்லோருக்கும் வராது” என்றார். உண்மைதான். அதனாலேயே எம்.எஃப். உசேன் மாதுரியின் தீவிரமான விசிறியானார்.

நடன இயக்குநர் என்று ஒருவர் இருக்கிறாரா அல்லது இவரே தானாக ஆடுகிறாரா என்கிற சந்தேகம் வரும்படி ஒரு நடனத்தை இப்படி அனுபவித்து ஆடுவது என்பது எல்லோருக்கும் வந்துவிடாது. ஒரு சிலர் நடன அசைவு ஒரு மாதிரியும் முகபாவம் வேறாகவும் இருந்து நடனத்தைக் கெடுக்கும். அல்லது முகபாவமே இல்லாமல் ஆடுவதும் உண்டு. ஆனால் இந்தப் பாடலுக்கான பாவமும் உணர்ச்சியும் இப்படித்தான் இருக்கமுடியும் என்பது போல முகத்தில் எத்தனை விதமான வெளிப்பாடுகள் மாதுரிக்கு. இந்த நடனம் மட்டுமல்ல. ‘ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்’ படத்தின் பாடல்களை கவனியுங்கள். அதில் ஒரு பாடலில் சல்மான்கானைப் பார்த்து தன் தாயின் தலைக்குப் பின்னால் மறைந்துகொண்டு பார்ப்பார். அந்தக் கண்களில் ஒளிரும் காதல்..மாதுரி ஒரு மிகச் சிறந்த நடிகை என்பதைச் சொல்லும்.

தில் தோ பாஹல் ஹை படம் முழுவதும் எல்லா பாடல்களிலுமே மாதுரியின் நடனம் கொடிகட்டிப்பறக்கும் என்றாலும் இந்த கதக் மிகவும் விசேஷம். ஏனெனில் இந்தக்காட்சியின் பின்னாலுள்ள காதல். தன்னை மறந்து இசைக்கு நடனமாடி சட்டென்று உணர்ந்து நின்று உயர்த்திய தன் கரங்களை இறக்கிக்கொண்டு கூந்தலை அவிழ்த்து..தன் பையை எடுத்துக்கொண்டு சலங்கை சத்தத்துடன் வெளியேறும் அந்தக் காட்சி..என்ன சொல்வது? அந்த வெள்ளை தேவதை சென்றபின் அந்த ஒளிவெள்ளத்தின் வெற்றிடத்தை நோக்கிய ஷாருக் ‘மாயா’ என்று பெயர் சொல்லிவிட்டு அந்த இடத்தை நோக்கிச் சென்று கைகளை நீட்டிக்கொண்டு நிற்கும் காட்சியில் மறைந்துள்ள காதல் வெளிப்படும் இடம். இந்தக் காட்சியின் இயக்குநருக்கு, நடன இயக்குநருக்கு, இசையமைப்பாளருக்கு எல்லோருக்குமாய் நன்றி சொல்லத் தோன்றுகிறது.


Friday, November 08, 2013

அம்மா உன்னை நான் கண்டதில்லை-ஜோதி பாபுரே லஞ்சேவருக்கு அஞ்சலி

ஜோதி பாபுரே லஞ்சேவர்- மராத்திய தலித் எழுத்தாளரான இவர், இன்று காலை காலமானதாக மும்பையிலிருந்து எழுத்தாளர் அம்பை தெரிவித்திருக்கிறார்.  அவருடைடய நினைவாக தலித் முரசு 2003 மே இதழில் வெளியான அவருடைய மராத்திய கவிதையின் மொழியாக்கம் இதோ. தமிழாக்கம் செய்தவர் சுபா. நன்றி சுபா!

ஜோதி பாபுரே லஞ்சேவர்

அம்மா உன்னை நான் கண்டதில்லை 

உன்னை நான் என்றுமே கண்டதில்லை

அம்மா
தங்க சரிகையிட்ட புத்தம் புது
ஈரக்கல் பட்டு சேலையில்
உன் கழுத்தோடு
தங்கக் காசு மாலையுடன்
உன் மணிக்கட்டுகளில்
வளையல்களுடனும் சங்கிலிகளுடனும்
உன் காகளில் ரப்பர் செருப்புகள் அணிந்துகொண்டும்
உன்னை நான் கண்டதில்லை

அம்மா
கூலியாட்கள் கூட்டத்துடன்
சாலைகளை ரிப்பேர் செய்தபடி
உன் வெற்றுக் கால்கள்
எரியும் நிலத்தின் மீது பற்றி எரிய
முட்களடர்ந்த கருவேல மரத்தின் கிளைகளில்
உன் குழந்தை
ஏதொ ஒரு துணியில் தூங்க
தார்ச்சட்டிகளை சுமந்த
உன்னை நான் கண்டேன்

உன் தலையில் மண் கூடைகள்
கால்கள் இலைகளாலும்
கந்தல்களாலும் சுற்றப்பட்டிருந்தன
தினக்கூலிக்காய்
நீ அடிமைப்பட்டிருக்கையில்
தத்தித்தத்தி ஓடி வந்த உன்
அம்மணக் குழந்தையை முத்தமிட்ட
உன்னை நான் கண்டேன்

ஏரியில் அணை கட்ட உதவினாய்
சங்கிலித் தொடராய் உன் பின்னே
கண்ணீரை வடித்துக்கொண்டு வந்த
குழந்தைக்கு வியர்வைகலந்த முத்தமிட்டு
உன் அடி வயிற்றை பிசைந்தபடி
தாகத்தால் வதைக்கப்பட்டு
உனக்கே உதடுகள் வறளுகையில்
உன்னை நான் கண்டேன்.

வண்டி வண்டியாய் தலை மீது
சிமெண்டையும் மண்ணயும்
சுமந்து கொண்டு
கவனமாய்
கர்ப்பம் தரித்து வீங்கிப்போன
உன் கால்களை பதித்தபடி
அழகிய புதுமனையின் உயரே
நீ மூங்கில் சாரத்தில் ஏறும்போது
உனதென்று சொல்ல நான்கு சுவர் கொண்ட
இருப்பிடம் இல்லாமல்
உன்னை நான் கண்டேன்

மாலை மங்கும் நேரத்தில்
மார்போடு குழந்தையை அணைத்து
உன் முந்தானையின் சின்ன முடிச்சை
அவிழ்த்தாய்
கொஞ்சம் எண்ணையும் உப்பும் வாங்க
பளபளத்த சின்னக்காசு ஒன்றை சேமித்தாய்
என் சின்னஞ்சிறு உள்ளங்கையில்  வைக்க
“போய் ஏதாச்சும் வாங்கித் தின்னு
அம்பேத்கரப்போல பெரிய படிப்பு படி
நான்தான் கூடைகளை சுமக்கிறேன்”
என்று சொன்ன உன்னை நான் கண்டேன்

உன் உடம்பை கட்டைகளாக எரித்துக் கொண்டும்
அடுப்பில் எரிபொருளாய் ஒரு கத்தை
உலர்ந்த கரும்புச் சக்கையை
கொளுத்திக் கொண்டும்
எல்லோருக்கும் நான்கு பக்ரிகளை பங்கிட்டு
நீ மட்டும் அரை பட்டினியாய்
ஒரு சின்ன துண்டை உன் சேலையில்
பிறகு சாப்பிடவென முடிந்தபோது
உன்னை நான் கண்டேன்

பாத்திரங்கள் தேய்த்தாய்
துணிமணிகள் துவைத்தாய்
நான்கு வெவ்வேறு வீடுகளில்.
இருந்தும் மிச்சம் மீதிகளை
ஏற்க மறுத்தாய்
சுயமரியாதையுடன்
ஏழுமுறை  கிழிந்த
எண்ணில்லா சின்னச் சின்ன தையல்கள்
போட்டு வைத்த
உன் கந்தல் சேலையால் உன்னை நீ
தன் மானத்துடன் போர்த்திக் கொண்டாய்.
உன்னை நான் கண்டேன்.

ஊர்ச்சந்தையின் நட்ட நடுவில்
உன் மீது காமப்பார்வை
வீசத்துணிந்தவர்களின்
ஆத்தாளையும்
அக்காளையும்  ஏசிய
உன்னை நான் கண்டேன்

முந்தானை சுருளை தலைமீது வைத்து
கனமான பழக்கூடைகளை சுமந்தாய்
மக்கள் நெரிசலில்
உன் மீது இடிக்க துணிந்தவர்களை
செருப்பை தூக்கி மிரட்டிய
உன்னை நான் கண்டேன்

மலையென தூக்கிச் சுமந்த
உன் வேலைகளை செய்தபின்
நாளின் முடிவில் நான் பார்க்கையில்
வீடு நோக்கி திரும்பிய உன் கால்கள்
இருளை கூறிட்டன
குடி போதையில் வந்த உன் புருசனை
கோபத்தோடு வெளியேற்றிய
உன்னை நான் கண்டேன்

 புடவையை இடுக்கிக்கொண்டு
நீண்ட நெடும் பயணத்தில்
முன்னே நடந்தாய்
”நாம் நமது பெயரை மாற்ற வேண்டும்”
என்று முழக்கமிட்டபடி
சுரீரென்று போலீஸ் லத்தியை தாங்கி
தலை நிமிர்ந்தபடி
சிறைக்குச் சென்ற
உன்னை நான் கண்டேன்

போலீஸ் துப்பாக்கிக்கு பலியான
உன் ஒரே மகனிடம்
நீ பீமனுக்காக செத்தவண்டா
உன் உசிருக்கு அர்த்தத்தை
தேடிக்கிட்டடா ராச”
என்றாய்
உனக்கு இரண்டு அல்லது மூன்று மகன் கள்
இருக்க மேலும் பாக்கியம் செய்திருந்தால்
நீ மீண்டும் போரிட்டீருப்பாய்
என்று போலீசை எதிர்த்து  பேசின
உன்னை நான் கண்டேன்

உன் மரணப்படுக்கையில்
உன் கடைசி வினாடிகளை
எண்ணிக்கொண்டு
குப்பை சத்தகள் பொறுக்கி
அலைந்து திரட்டிச் சேமித்த பணத்தை
பொதுச் சேவைக்கு நன்கொடையாக்கிய
உன்னை நான் கண்டேன்

”ஒற்றுமையாய் இருங்க
பாபாசகேப்புக்காக போரிடுங்க
அவர் நினைவா ஒரு சின்னம் கட்டுங்க.”
என்றபடி  உன் கடைசி மூச்சுடன்
“ஜெய் பீமா,” என்ற வார்த்தைகள்
உன் உதட்டோடு ஒலிக்க
உன்னை நான் கண்டேன்.

புத்தம்புது ஈரக்கல் சேலைக்காய்
ஜெபமாலையை உருட்டிக்கொண்டு
உன்னை நான் என்றுமே கண்டதில்லை.

அம்மா உன்னை நான் கண்டேன்

***
  
The English Version... not the one I translated but something that's close can be found at the following link
http://roundtableindia.co.in/lit-blogs/?tag=jyoti-lanjewar

-Shuba
 http://shubasblog.blogspot.in