Friday, March 28, 2014

கூட்டு வன்புணர்வுக்கு ஆளான சிறுமியின் குடும்பம் - ஊரைவிட்டு வெளியேறும் அவலம்

அந்தச் சிறுமியை நினைவிருக்கிறதா? சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு அருகேயுள்ள சென்றாம்பாளையத்தில் 5 பேரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பத்து வயது சிறுமி மறைந்து வெகுநாட்கள் ஆகிவிடவில்லை. பிப்ரவரி 14 அன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அந்த 5ம் வகுப்புச் சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு வன்புணர்வு செய்ததில் அவள் இறந்துவிட அவளை மரத்தில் தொங்கவிட்டுச் சென்றது. விசாரணையில் 5 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

பெற்ற குழந்தையை கொடூரமான நிலையில் இழந்து நிற்கும் அவளுடைய குடும்பத்துக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஊரில் யாரும் இவர்களுடன் பேச்சுவார்த்தையில் இல்லை என்பதால் ஊரைவிட்டு வெளியேறி விட்டதாகக் கூறுகிறார் சிறுமியின் தந்தையும் தறித் தொழிலாளியுமான பரமசிவம். அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாத அக்குடும்பம் சொந்த ஊரில் வாழ வழியின்றி வேறொரு ஊரில் உள்ள உறவினர் வீட்டில் தற்போது தங்கியிருக்கிறது. சிறுமியுடன் கூடப் பிறந்த தங்கையும் அண்ணனும் உள்ளனர். இருவரும் சென்றாம்பாளையத்தில் உள்ள பள்ளியில் படிக்கின்றனர். “ஊரை விட்டு விலக்கி வைத்ததுபோல யாரும் எங்களுடன் பேசுவதில்லை. பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குச் செல்ல பயப்படுகிறார்கள். அங்கே போனால் கூட படிப்பவர்களும் பேசுவதில்லையாம். சின்னவள் ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். அதே பள்ளிக்கூடத்தில் தன்னுடன் படித்த அக்காவைக் குறித்து பள்ளியில் மற்றவர்கள் கேட்டுக்கொண்டே இருப்பதால் பள்ளிக்கூடத்துக்குப் போவதில்லை. பையனும் இதே காரணத்துக்காக போகவில்லை. இருவரும் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் ஊரைவிட்டு வெளியேறிவிட்டோம். பரீட்சை மட்டும் இந்த ஆண்டு எழுதவைத்து வேற பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும்” என்கிறார் தாய் பழனியம்மாள்.

சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த 5 பேரும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். ”காவல்துறைக்குப் போனது பலபேருக்குப் பிடிக்கவில்லை. கைது செய்யப்பட்டிருப்பவர்களின் குடும்பத்தினர் எங்களை ஏறெடுத்துப் பார்க்காமல் கட்ந்துபோய்விடுகிறார்கள். ஆனால் ஊருக்குள் பலர் சொந்த சாதிக்காரர்களை நாங்கள் காட்டிக்கொடுத்ததாக புகார் சொல்லுகின்றனர்.  இத்தனை பெரிய இழப்பை சந்தித்திருக்கிறோம். ஆனால் ஊரில் ஒருவர் என்னவென்று கேட்பதில்லை. துக்கத்துக்கு வெளியூரிலிருந்து வந்தவர்களெல்லாம் போய்விட்டபின்னால் அனாதை போல அந்த ஊரில் நான்கு பேரும் இருந்தோம். பேச்சுவார்த்தையே இல்லை. அங்கிருக்கமுடியவில்லை. அதனால் என் வேறொரு ஊரில் எங்கள் சின்ன மாமியர் வீட்டில் இருக்கிறோம்.” என்று கூறும் பரமசிவத்துக்கு மீண்டும் சென்றாம்பாளையம் செல்வது குறித்து யோசிக்கவே முடியவில்லை என்கிறார். தும்பல் என்ற அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்ல முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். சென்றாம்பாளையத்தில் வீட்டிலேயே தறி வைத்திருக்கிறார். “அதை தும்பலுக்கு எடுத்துவந்து பொருத்த ஒன்றரை லட்சம் செலவாகும். அவ்வளவு பணம் இல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. கூலிவேலைக்குப் போயாவது குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும்” என்கிறார்.

பாலியல் வன்கொடுமைக்கு பிள்ளையை பறிகொடுத்துவிட்டு சொந்த ஊர் மக்களின் புறக்கணிப்பையும் தாங்கிக்கொள்ள முடியாமல் ஊரைவிட்டு வெளியேறும் அவல நிலைக்கு இன்று ஒரு குடும்பம் தள்ளப்பட்டிருக்கிறது. இவர்களுக்குத் ஆதரவாக உள்ள வழக்கறிஞர் ரத்தினம் “புதிய விசைத்தறி அமைக்க பரமசிவத்துக்கு வட்டியில்லாத கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும். முதல்வர் அறிவித்த 3 லட்ச ரூபாயை உடனடியாக அக்குடும்பத்துக்கு வழங்கவேண்டும். முக்கியமாக அவரக்ளுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். பிள்ளைகளின் படிப்பைத் தொடர அரசு உதவவேண்டும்” என்றார்.

(நன்றி : இந்தியா டுடே)

Wednesday, March 19, 2014

இலங்கை-போர்க்குற்ற வியாபாரம்

இலங்கையிலிருந்து வரும் ஒவ்வொரு போர்க்குற்ற விடியோவும் காண்போர் மனதை உலுக்குவதாக உள்ளன. அண்மையில் வெளியான போர்க்குற்றங்கள் குறித்த விடியோ பதிவுகளில் சேனல் 4 வெளியிட்ட விடியோவை குறித்து கேலம் மெக்கரே தான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் கொடூரமான மனதை உலுக்கிய விடியோ இதுதான் என்கிறார். 

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த காட்சிகளில் குண்டுபோடுதல், ஷெல்லடித்தல், அவற்றால் குழந்தைகள் பயந்து அலறி ஒடுதல் என பார்ப்பவரின் கண்களை ஈரமாக்கும் காட்சிகள் இல்லாத விடியோக்கள் இல்லை. அத்தனையும் ஈழ மக்களின் பாடுகளையும் துயரங்களையும் சொல்பவைதான். சில மாதங்களுக்கு முன் வெளியான பாலச்சந்திரனின் படக்காட்சி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு ரொட்டித்துண்டுடன் அமர்ந்திருக்கும் அச்சிறுவனின் முகத்துடன் ஒரு படம். அடுத்த படத்தில் அவன் 6 துப்பாக்கி குண்டுகள் நெஞ்சில் துளைக்க விழுந்துகிடக்கும் படம். இப்படம் தமிழ்நாட்டில் பெரும் கிளர்ச்சியை உண்டுபண்ணியது. தமிழ்நாட்டு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின் தமிழ்நாடு அத்தகைய போராட்டத்தை அப்போதுதான் பார்த்தது. 

அதன்பின் வெளியானது இசைப்ரியா குறித்த் காணொளி. இசைப்ரியாவின் உயிரற்ற உடலுக்கு நேர்ந்த கதியை அப்படமே சொன்னது. மார்ச் 9 அன்று வெளியான இன்னொரு விடியோ காட்சியில் பெண் போராளி ஒருவர் இறந்துகிடக்க, அவரது பிறப்புறுப்பில் துப்பாக்கியைச் செலுத்தி மகிழ்ச்சியாக ஆரவாரக் கூச்சலிடும் சிங்கள ராணுவ வீரர் ஒருவரைப் பார்த்து அதிர்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்? போரில் இறந்த உடல்களை என்ன செய்யவேண்டும், எப்படி கையாளவேண்டும் என்பதற்கு நடைமுறைகள் உள்ளன. ஆனால் இலங்கை ராணுவம் அவற்றில் எதையும் கடைபிடிக்கவில்லை என்பதை இக்காணொளி காட்சி தெளிவாக நிரூபிக்கிறது. ‘இறந்த பெண்ணின் உடலையே இப்படிச் செய்கிறார்கள் என்றால், உயிருடன் பிடிபடும் பெண்களை என்னவெல்லாம் செய்வார்கள் என்று யோசித்துப் பாருங்கள்” என்கிறார் ஐரோப்பாவில் வசிக்கும் ஈழத்தமிழர் ஒருவர். சேனல் 4 தொலைக்காட்சி இங்கிலாந்து நாட்டின் விதிகளுக்குட்பட்டு பல காட்சிகளை வெட்டி, சில காட்சிகளில் உடலை மறைத்தே ஒளிபரப்பியது. ஆனால் அதன் அசல் வீடியோ மின்னஞ்சலில் பரவியுள்ளது. 

இப்படி அவ்வபோது வெளியாகும் போர்க்குற்றங்கள் குறித்த விடியோக்கள் சேனல் 4 தொலைக்காட்சிக்கு வந்தடைகின்றன. இக்காட்சிகள் கொண்ட விடியோ கோப்பை பெறுவதற்கான முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவை புலம் பெயர் தமிழர்கள் பலரும் இம்முயற்சியில் ஆங்காங்கே ஈடுபடுகின்றனர். அவர்களில் சிலரிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

”எங்களுக்கு இது போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்கள் என்பதால் எப்பாடுபட்டாவது இவற்றை சேகரித்து சர்வதேச சமூகத்தின் முன்னால் காண்பித்து நியாயம் கேட்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆகவே கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில்தான் இவற்றை சேகரிக்கிறோம்” என்றார். இத்தகைய ஆவணங்கள் முழுதும் ராணுவ வீரர்களின் செல்போனில் படம்பிடிக்கப்பட்டவை. ”அவர்கள் அப்போது புலிகள் இயக்கத்தை வெல்வோமென்று கனவில் நினைத்துப் பார்க்காதவர்கள். ஆகவே அந்த வெற்றியை அவர்கள் வெறிக்கூச்சலிட்டுக் கொண்டாடினார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் அவர்களுடைய அத்தனை நடவடிக்கைகளும் அமைந்தன. கொண்டாட்டத்தை படம்பிடிக்கும் நோக்கில்தான் புகைப்படங்கள் எடுப்பது, செல்போன்களில் படம் பிடிப்பது என்று எல்லாவற்றையும் செய்தனர். பின்னாளில் செல்போனை சர்வீஸ் செய்ய சேவை மையங்களுக்குச் செல்கையில் அங்கே இந்தப் படங்கள் எடுக்கப்பட்டு வெளியே வந்தன. ஆனால் இப்போது அது ராணுவவீரர்களிடையே ஒரு வியாபாரமாகவே ஆகிவிட்டது” என்கிறார் இன்னொரு புலம்பெயர் தமிழர். 

ஒரு குறிப்பிட்ட விடியோ காட்சியை பேரம் பேசி புலம் பெயர் தமிழர்களிடம் விற்கிறார்கள் சிங்கள ராணுவ வீரர்கள். ஒரு சிலர் நடப்பவை வெளியே தெரியவேண்டுமென்ற நோக்கில் அவர்களாகவே முன்வந்தும் கொடுப்பதாக முன்னதாக கேலம் மெக்கரே தன் பேட்டியொன்றின் குறிப்பிட்டிருந்தார். அப்படியான வெகு சிலர் போக பலருக்கு இதில் கை நிறைய பணம் கிடைக்கிறது. இலங்கை அரசிடம் மாட்டிக்கொள்ளாமல், அடையாளத்தை மறைத்து இத்தகைய காட்சிகளை வழங்குவதில் அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதால் அதிக பணம் கேட்கின்றனர். “அங்குள்ள ராணுவ வீரர்கள் இப்படி பணம் பண்ணும் வேலைகளில் இறங்கியுள்ளனர். ஆனால் அது எங்களுக்குச் சாதகமாகவே உள்ளது. அதனால் போர்க்குற்றங்கள் குறித்த மேலும் பல சாட்சியங்கள் கிடைக்கின்றன. ஒரு காணொளி என்பது போர்க்குற்றமாகப் பார்க்கப்படும். இப்படியான பல காணொளிகள் கிடைக்கப்பெறுகின்றன. ஆகவே இது ஒரு இனப்படுகொலை என்று நிறுவதற்கு இவை பயன்படும். பல லட்சம் கொடுத்துத்தான் நாங்கள் இப்படங்களை பெறுகிறோம். இதில் கொடூரம் என்னவென்றால் இழைத்த குற்றத்துக்கு ஏற்றவாறு ராணுவ வீரர்கள் அந்தப் படத்துக்கான தொகையை நிர்ணயிப்பார்கள்” என்கிறார் இப்படியான ஒரு படத்தை பேரம் பேசி வாங்கி உலகுக்கு அளித்த ஈழத்தைச் சேர்ந்த புலம்பெயர்தமிழர் ஒருவர். 

சரி. இதற்கான தொகை எப்படி வருகிறது? “புலிகள் இயக்கம் இருந்தபோது புலம்பெயர் தமிழர்களிடம் இதற்கான தொகை என்று கேட்டால் உடனே கிடைத்துவிடும். ஆனால் இப்போது பணம் திரட்டுவது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. ஆகவே ஆர்வமுள்ளவர்கள், இலங்கை அரசை சர்வதேசத்தின் முன் குற்றவாளி என நிரூபிக்க முழு வேகத்துடன் செயல்படும் பல்வேறு இயக்கங்கள் தனிநபர்கள் என்று வேலை செய்து தனிநபர்களிடம் சென்று விஷயத்தைச் சொல்லி உதவி கேட்போம். ஆனால் இடையில் நாங்கள் பேசுவதில்லை. எவர் பணம் தர ஒப்புக்கொள்கிறாரோ அவரையே அந்தக் காணொளியை வைத்திருக்கும் ராணுவவீரரிடம் பேசவைத்து அதைப் பெறுவோம். இடையில் பணத்தை நாங்கள் தொடுவதில்லை. அதில் தெளிவாக இருக்கிறோம். ஏனெனில் இதில் நம்பகத்தன்மை மிகவும் முக்கியம். பணம் கொடுப்பவர் எங்களை நம்பவேண்டும். காணொளியைத் தருபவரும் நம்பவேண்டும். ஏனென்றால் தெரிந்தே மிகப்பெரும் ஆபத்தான செயலில் ஈடுபடுகிறார்கள். ஆகவே இலங்கை அரசிடம் மாட்டிக்கொள்ளாத வகையில் நம்பகத்தன்மை எங்கள் மீது வந்தபின்பே எங்களிடம் பேசுவார்கள். எனவே இது எங்களுக்கும் பெரிய சவாலான வேலை. எங்கள் நோக்கம் இலங்கை அரசை குற்றவாளிக்கூண்டில் ஏற்றவேண்டும். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு புலம்பெயர் தமிழர்..

இலங்கை ராணுவ வீரர்களின்  இத்தகைய காணொளிகளை வெளியே கசியவிட்டது பணத்துக்காகவே என்பது உச்சகட்டக் கொடூரம். இத்தகைய பணத்தாசை ஏதோ ஒரு வகையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உதவுவதால் சந்தோஷப்படுவதா அல்லது செய்வதையும் செய்துவிட்டு இப்படி அதையே விற்கும் ராணுவ வீரர்களுக்காக கோபப்படுவதா என்று தெரியாத இரட்டை நிலையில்தான் இன்றைக்கு ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இருக்கிறார்கள்.   

Tuesday, March 18, 2014

நிறுத்தப்பட்ட நாடகம் - தமிழகத்தில் இந்துத்துவ அபாயம்

மீண்டுமொரு முறை மதவாத இந்துத்துவ சக்திகள் ஒரு கலைப் படைப்பை தடுத்து நிறுத்தியிருக்கின்றன. ஓவியர் எம்.எஃப். ஹுசேன், குஜராத்தில் ஒவியர் சந்திரமோகனின் கண்காட்சி தாக்குதல் என்று கலைகள் மீதான இந்துத்துவாவின் தாக்குதல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் நாட்டில் இது ஒன்றும் அதிசயமல்ல. ஆம். ஏவம் குழுவினரின் தயாரிப்பில் கார்த்திக் குமார் எழுதி நடித்துள்ள ’அலி ஜே’ என்கிற நாடகத்தை சென்னையில் நடத்த இந்துத்துவ சக்திகள் அனுமதிக்கவில்லை. 



இந்நாடகம் மும்பையில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் காவல்துறை பாதுகாப்புடன் பெங்களூரில் நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள அல்லயன்ஸ் பிரான்சைஸ் அரங்கத்தில் நிகழ்த்தப்படுவதாக இருந்த ‘அலி ஜே’ நாடகம் பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் உருவாக்கப்பட்ட நாடகம். அலி ஜே என்பது முகமது அலி ஜின்னாவைக் குறிக்கிறது. அவரும் ஒரு பாத்திரமாக வருகிறார்.  இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் எழுதிய கடிதத்தில் இந்து முன்னணியும், இந்து ஜன ஜாக்ரிதி சமிதியும் இந்நாடகத்தை நடத்தக்கூடாது என்று புகாரளித்துள்ளதாக தெரிவித்த காவல்துறை ஆணையர் இந்நாடகத்தை நடத்தவேண்டாம் என்றும் அறிவுறுத்தியதை அடுத்து நாடகம் நடத்தப்படவில்லை.

பத்திரிகையாளரும் பரீக்‌ஷா நாடகக்குழுவின் இயக்குநருமான ஞாநி “நான் தொடுத்த வழக்கில் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி எந்த நாடகத்துக்கும் காவல்துறை அனுமதி பெறவேண்டிய தேவையில்லை. ஆகவே இவர்கள் நாடகத்தை நடத்தியிருக்கலாம்” என்கிறார். இது குறித்து இந்தியா டுடேயிடம் பேசிய ஏவம் குழுவின் இயக்குநர் சுனில் விஷ்ணு “சென்னை காவல்துறை வாய்மொழியாக உத்தரவு போடுவது அதிர்ச்சியாக இருக்கிறது. நாங்கள் மிகுந்த மனவருத்தத்திலும் வேதனையிலும் இருக்கிறோம். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விசாரித்தபோது தமிழ்நாடு காவல்துறை சட்டம் பிரிவு 41 படி சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் நிறுத்த காவல்துறைக்கு அதிகாரம் உண்டு என்கிறார்கள். சட்டம் ஒழுங்குக்கு பிரச்சனை வரும் என்று தெரிந்தால் பாதுகாப்பு கொடுப்பது தானே முறை? ஆனால் நாடகத்தை நிறுத்துவது படைப்புரிமைக்கு எதிரான செயல். இது இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் நாடகம். தேச ஒற்றுமையை வலியுறுத்தும் நாடகம். இதில் எந்த மதத்துக்கும் விரோதமாக எதுவும் இல்லை” என்கிறார்.

மோடி பிரதமராகிவிட்டதுபோன்றே இந்துத்துவ சக்திகளின் செயல்பாடுகள் அண்மைக்காலமாக அமைந்துள்ளன. அண்மையில் சன் டிவியில் 17 ஆண்டுகாலமாக ‘நேருக்கு நேர்’ என்கிற அரசியல் விமர்சன நிகழ்ச்சியை நடத்திவந்த ஊடகவியலாளர் வீரபாண்டியனின் நிகழ்ச்சி 7 வாரங்களாக ஒளிபரப்பப்படவில்லை. காரணம் பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகள் காவல்துறையில் அவர்மீது அளித்த புகார்தான். அரங்க நிகழ்ச்சி ஒன்றில் மோடி குறித்து விமர்சனம் செய்ததால் அவர்குறித்து காவல்துறையில் புகாரளித்தன இந்து அமைப்புகள். சன் டிவி நிர்வாகத்துக்கும் அழுத்தம் தந்து நிகழ்ச்சியை நிறுத்தவைத்தனர். அவருடைய நிகழ்ச்சி நிறுத்தப்பட்டவுடனேயே களமிறங்கிய மதச்சார்பற்றோர் மாமன்றம் இந்துத்துவ சக்திகளின் செயலை பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று கண்டித்து அறிக்கை தயாரித்து அனைத்து கட்சித் தலைவர்களிடமும் கையெழுத்து பெற்று வெளியிட்டது. ஆனாலும் அவருடைய நிகழ்ச்சி இப்போதுவரை ஒளிபரப்பாகவில்லை. இதுகுறித்து மதச்சார்பற்றோர் மாமன்றத்தைச் சேர்ந்த தேவநேயன் “அவர் நடத்தும் நிகழ்ச்சியில் எத்தனையோ இந்துத்துவவாதிகள் கலந்துகொண்டிருக்கிறார்களே?” என்று கேட்கிறார். இப்படி தொடர்ந்து தமிழ்நாட்டில் மோடியை ஆதரிக்கும் இந்துத்துவ சக்திகளால் மதச்சார்பின்மைக்கும் கருத்துரிமைக்கும் சிக்கல் ஏற்படுகிறது. 

தமிழ்நாடு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டது என்கிறார் சுனில் கிருஷ்ணா. ஏனெனில் சென்னையைத் தொடர்ந்து பெங்களூரிலும் மார்ச் 12 அன்று நடத்துவதாக இருந்த காட்சியை சென்னை காவல்துறை பாணியில் பார்வையாளர்கள் எல்லோரும் வந்துவிட்ட நிலையில் பெங்களூர் காவல்துறை, நாடகம் மேடையேறக்கூடாது என்று சொல்லி முதல் நாள் நிகழ்ச்சியை நடத்தவிடவில்லை என்கிறார். இது நாடு முழுவதும் தொடரும் அபாயம் உள்ளதை சென்னையிலும் பெங்களூரிலும் நடந்துள்ள நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

(நன்றி :இந்தியா டுடே)




Friday, March 07, 2014

சென்னை மண்ணின் பாடகன்

ட்டாயிரம் கடனைப் பட்டு செத்துட்டான் - அவனுக்குப்
பத்தாயிரம் வெடியை வாங்கிவெடிக்கிறான்

குரலெடுத்துப் பாடுகிறார் கானா பாலா. வெகு சாதாரணமான வார்த்தைகள். ஆனால் கானா பாலா பாடும்போது காந்தம்போல் இழுக்கின்றன. ஜீன்ஸ் அணிந்துகொண்டு காதில் மூன்று கடுக்கண்களுடன் மைக் பிடித்து பாலா பாடத் தொடங்கினால் கூட்டம் சேர்ந்துவிடுகிறது. இன்றைக்கு தமிழ் சினிமாவில் அவர் பாடல் இல்லாத படமே இல்லை எனும் அளவுக்கு ஆகிவிட்டிருக்கிறார். பல படங்களின் விளம்பரத்துக்கு இவருடைய பாடல்கள்தான் பயன்படுகின்றன. 


“இசையமைப்பாளருக்காக படம் ஓடியிருக்கு தமிழ்நாட்டில். ஆனால் ஒரு பாடகருக்காக தியேட்டருக்குப் போய் மக்கள் பார்க்கறது கஷ்டம். ஒரு தியேட்டரில் நூறு பேர் என் பாட்டுக்காகப் போறாங்க. இதைப் பெரிய விஷயமா நினைக்கிறேன். வேற பாடகருக்கு இந்தப் பெருமை இல்லை. என்ன...நான் சொல்றது சரிதானே?”  புருவங்களை உயர்த்தியவாறு கேட்கிறார் பாலா.  ஒவ்வொரு வாக்கியத்துக்கு இடையிலும் ட்ரேட் மார்க் போல ‘என்ன..நான் சொல்றது சரிதானே?’ என்கிறார். வெகுளிச் சிரிப்பு, வாய் நிறைய பாட்டு, மனம் நிறைய சந்தோஷம், இதுதான் பாலா. ”படிக்கிறப்போ ஃபுட்பால், கேரம் ப்ளேயர். ஆனா அதுக்கெல்லாம் என்னை வீட்ல விடலை. படிப்புத்தான் முக்கியம். படின்னு சொல்லிட்டாங்க. விட்டிருந்தா கேரம்ல உலகப்புகழ் பெற்றிருப்பேன்” என்கிறார். 

‘அப்பா எம்.ஆர்.எஃப்ல ஃபையர் மேன். அம்மா வீட்டோட இருந்தாங்க. பொறந்தது இங்கதான். புளியந்தோப்பு-கன்னிகாபுரம். இதைவிட்டு கோடி ரூவா குடுத்தாலும் வரமாட்டேன். சூட்டிங், ரெக்கார்டிங் எல்லாம் இங்கிருந்துதான். அரைமணி நேரத்துல போயிடலாம்” எனும் பாலா வாங்கிய காரை விற்றுவிட்டார். இருசக்கர வாகனம் அல்லது பேருந்தில் பயணம் செய்கிறார். “இப்போ பலபேர் அடையாளம் கண்டு பேசுறாங்க. அப்போ சந்தோஷமாத்தான் இருக்கு. மக்கள்ட்ட பேசுறதைவிட வேறென்ன சந்தோசம். சும்மா கார் கதவை சாத்திக்கிட்டு உள்ள உட்கார்ந்து போறதுல என்ன இருக்கு?” என்கிறார்.

சென்னை மாநகரத்தின் புறக்கணிக்கப்பட்ட பகுதியான வடசென்னைதான் கானா அதிகம் புழங்கும் இடம். சிறுவயதிலிருந்தே கானா பாடுவதில், பாட்டு கட்டுவதில் தனித்திறமையுடன் இருந்த கானா பாலா என்கிற பாலமுருகன் ஒரு வழக்கறிஞர். சென்னை ப்ரெஸிடென்சியின் பி.எஸ்சி. தாவரவியல் முடித்தபின் மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று நீதித்துறையில் இருந்தாலும், தன் தனி அடையாளமான கானாவை விடவில்லை பாலா. ஏராளமான பக்திப்பாடல் குறுந்தகடுகளை வெளியிட்டிருக்கும் பாலா 22 ஆண்டுகளாக வேளாங்கண்ணிக்கு நடைபயணம் செல்கிறார். “மாதா பாடல்களில் என்னளவுக்கு யாரும் பாடியிருக்கமாட்டாங்க. இஸ்லாமிய பாட்டு, இந்துப் பாட்டு எந்தப் பாட்டு பாடச் சொன்னாலும் பாடத் தயாரா இருக்கேன்” என்கிறார். 

’அட்டக்கத்தி’ படத்தில் பாலா பாடிய ‘நடுக்கடலுல’ மற்றும் ‘ஆடிப் போனா ஆவணி’ ஆகிய பாடல்கள்தான் பாலாவை மக்களுக்கு அடையாளம் காட்டின. அதன்பின் வரிசையாய் படங்கள். வெற்றிமாறன் தயாரித்த ‘உதயம் என்.எச்’ படத்தில் ‘ஓரக்கண்ணால’ பாடலை அவரே எழுதி பாடி நடிக்கவும் செய்தார். ’சூது கவ்வும்’ படத்தின் ‘காசு பணம் துட்டு’ ஒலிக்காத வீடுகளே இல்லை எனலாம். பாலா புகழின் உச்சியில் இருக்கிறார். ஆனாலும் எளிமையாய் இருக்கிறார். “சினிமாவில் நான் ஜெயிப்பேன்னு பல வருஷத்துக்கு முன்னாலயே தெரியும். டிவில பாட்டு பாடி அது மூலமாக வரலை நான். எந்தப் பின்னணியும் கிடையாது. கேள்விஞானத்தில் சொந்தத் திறமையால்தான் பாடுறேன். திறமையாளன் ஜெயிச்சுத்தானே ஆகணும்? எனக்கு.இன்னும் எல்லா இசையமைப்பாளர்கிட்டேயும் பாடணும். அட்டக்கத்தி மூலம் ரஞ்சித் ஒரு ப்ரேக் கொடுத்தார். எழுதும் திறமையை அங்கீகரிச்சு ஓரக்கண்ணால பாட்டு எழுத வாய்ப்பு தந்தது வெற்றிமாறன் சார்” என்று இருவரையும் நினைவுகூர்கிறார்.

அட்டக்கத்தி இயக்குநர் பா.ரஞ்சித் “அவர் தலித் செயல்பாடுகளில் ஈடுபடுபவர் என்கிற முறையில்தான் முதலில் அறிமுகமானார். பூவைமூர்த்தியின் கொள்கை விளக்கப் பாடல்கள் பாடுவார். எங்க ஏரியாவில் அவரைத் தெரியாதவர்களே கிடையாது.. எங்க ஊர் கோயில் திருவிழாவுக்குப் பாட வந்தபோது முதலில் அவர் பாடி கேட்டேன் . நலல் திறமை. கானா மட்டுமில்லை. கிளாசிக்கல் பாடலையும் ரிதம் பிடிச்சுப் பாடக்கூடிய அசாத்திய தனித்திறமை உண்டு. எங்க அண்ணனும் வழக்கறிஞர். அவரும் வழக்கறிஞர். ரெண்டுபேரும் நல்ல நண்பர்கள். அந்த அடிப்படையில் அவரைப் பாடக் கூப்பிட்டேன். ரொம்பப் பிடிச்சிருச்சி. அப்படித்தான் அந்த ரெண்டு பாட்டும் படத்தில் வந்தது. என் அடுத்த படத்திலும் பாலா அண்ணனுக்காகவே ஒரு ஜாலியான பாட்டும் ஒரு சாவு கானாவும் வச்சிருக்கேன்” என்கிறார். 

அதென்ன சாவு கானா? மரண வீட்டில் இரவுமுழுவதும் பாடும் கானா அது. “நான் கல்யாணத்திலும் பாடுவேன். சாவு வீட்டிலும் பாடுவேன். கல்யாணத்தைவிட சாவுவீட்டுக்குப் பாடப்போனால் பெரிய போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள் எனக்கு” எனும் பாலா இப்போதும் துக்க வீடுகளுக்கு கானா பாட செல்கிறார். 

’பீட்சா’ படத்தின் ‘நினைக்குதே’ ரிங் டோன் பாடல் இவர் பாடியதுதான் என்பதை பலர் நம்பவே இல்லை என்கிறார். பாலாவுக்கு மிகவும் பிடித்த கலைஞர் சந்திரபாபுதான். “டி.எம்.எஸ்ஸும் பிடிக்கும். சிவாஜி, எம்.ஜி.ஆர். ரெண்டுபேருக்கும் அவர் பாடுவது ஆச்சரியமா இருக்கும். ஆனால் சந்திரபாபுசார்தான் நமக்கு ஆசான். என்ன மாதிரி கலைஞன்! சில பாட்டுல அவர் ஸ்டைலை ஃபாலோ பண்ணியிருக்கேன். இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்; முகிலின் கண்ணீர் மழை எனச் சொல்வார்; இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்” சன்னமாக உருக்கும் குரலில் பாடிக் காட்டுகிறார். திடீரென்று உற்சாகமாகி ‘குங்குமப்பூவே..குஞ்சுபுறாவே’ பாடுகிறார். “சென்னை மாதிரியான ஊர்ல வாணிபம் செய்ய கடல்வழியா பலர் வந்துபோனாங்க. கானாவை கவனிச்சா அதில் பாகிஸ்தான் கவாலியும் இலங்கையின் பைலாவும் கலந்த ரிதம் இருக்கும். வெள்ளைக்காரன் ஆட்சியிலதான் கானா உருவாக ஆரம்பிச்சது. அதனால ஆங்கில வார்த்தைகள் அதிகம் இருக்கும். சினிமா பாட்டு மெட்டிலும் கானா பாடுவதுண்டு. இப்போ சமூகம், அறிவுரை, நையாண்டி, அப்புறம் பெண்கள் பத்திப் பாடுறது இதுதான் கானா. பாடுறவங்க எல்லாம் ஆண்கள்தானே. அவங்களை அவங்களே தாழ்த்திப்பாங்களா? அதான் பொண்ணுங்களைப் பத்தியே இருக்கு எல்லா பாட்டும். வடசென்னையில் என்னையும் சேர்த்து 200 பேராவது கானா பாடகர்கள் இருப்பாங்க. கானாவில் அதிகமா உள்ளது ரெண்டு வகைதான். எதிராளியை கிண்டல் பண்ணுவது, பெண்களைப் பாடுவது” என்று கானாவின் வரலாற்றைச் சொல்கிறார் பாலா. 

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார் கானா பாலாவுடன் பணியாற்றுவது மிகவும் விருப்பமானது என்கிறார். “அவருக்கு ஏராளமான ரசிகர்கள். தன் வேலையை அவர் ரசித்து செய்கிறார். உச்சபட்ச திறமை இருக்கிறது. பாடுவது மட்டுமல்லாமல் பாட்டெழுதுவதிலும் மெட்டமைப்பதிலும் அவருக்கு இருக்கும் திறன் கண்டு வியக்கிறேன். தன் இதயத்தின் அடிஆழத்திலிருந்து அவருடைய கலை வெளிப்பாடு உள்ளது. இத்தனை இருந்தும் தலைக்கனம் இல்லாத மனிதர். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். மிகச் சிறந்த நடிகராக திரையில் ஒளிர்வார்” என்று சிலாகிக்கிறார். அதற்கேற்றாற்போல் பாலாவும் இப்போது ஒரு மாதமாக நடனம் கற்றுக்கொண்டிருக்கிறார்.

ஹால் அலமாரி முழுதும் சட்டப் புத்தகங்கள், வாங்கிய விருதுகளும் கோப்பைகளுமாக இருக்கின்றன. அலமாரியில் நீலநிறத்தில் அம்பேத்கரின் நூல்தொகுதிகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. “அம்பேத்கரை வாசிக்கிறேன். எனக்கு பாட்டு, சினிமா எல்லாமே ரெண்டாம்பட்சம்தான். சமுதாயப் பணிதான் முதலில். இதை அம்பேத்கரிடம் கத்துக்கிட்டேன். ஒரு ஜவுளிக்கடை திறப்புக்குக் கூப்பிட்டால் எனக்கு பத்தாயிரம் தருவாங்க. நான் அந்தப் பத்தாயிரத்துக்கு பதிலாக எங்க ஊர்க்காரங்க பத்து பேருக்கு ஆயிரம் ரூபாய்க்கு இந்த வருஷம் முழுசும் எப்பவேணும்னாலும் துணி எடுத்துக்க அனுமதி கேட்பேன்.” என்று கூறும் பாலா உள்ளாட்சித் தேர்தலில் நின்றிருக்கிறார். “அவர் தேர்தலில் ஜெயிக்காததுகூட நல்லதுக்குத்தான். அதனால்தான் பாடகரா சினிமாவில் வரமுடிஞ்சது” என்கிறார் பாலாவின் மனைவி நதியா. ”தி.மு.க., அ.தி.மு.க. ரெண்டும் ஆளுங்கட்சியாக இருந்தபோதும் தோற்றிருக்கிறேன். அப்படின்னா நான் மக்கள்கூட இருக்கேன்னு அர்த்தம்” என்னும் பாலா யாருக்கேனும் கல்வி கற்க பணம் தேவைப்படுகிறது என்றால் தயங்காமல் உதவுகிறார். ’எஜுகேஷன் முக்கியம். அதான்” எனும் பாலா ஒவ்வோர் ஆண்டும் அச்சடித்து பகுதி மக்களுக்கு வழங்கும் நாட்காட்டியில் பாலா தன் இரு குழந்தைகளுடன் நிற்கும் படம். மேலே அம்பேத்கரின் “கற்பி, புரட்சிசெய், ஒன்றுசேர்’ வாக்கியம் காணப்படுகிறது. பாலாவின் இன்னொரு முகம் வித்தியாசமானது. பாலாவுக்கு அபிநயா, அபிமன்யூ என்று இரு குழந்தைகள். யூ.கே.ஜி. படிக்கும் அபிநயா இப்போதே நடனம் பாட்டு என்று திறமையாய் இருப்பதில் பெருமைப்படுகிறார். “பாட்டுல ரெண்டுபேரும் என்னை மிஞ்சிடுவாங்க” என்கிறார்.

பிளாட்டுல இருந்தாலும் பிளாட்பாரத்தில் படுத்தாலும்
லாஸ்டுல சேரும் இடம் ஆறு அடிடா
ரோட்டுல கண்ணைமூடி ஊர்வலம்தான் போகும்போது
உனக்கு யாருக்கும் கேட்காது ஒத்தை அடிடா

இன்னொரு பாட்டுக்கான கோரிக்கையில் பாட்டு வகையை மாற்றுகிறார்.

ஃபாலோ பண்ணிப் போவாதே நீ நில்லு
வேற பொண்ணைப் பார்த்து பரிசம் போடச் சொல்லு

(நன்றி: இந்தியா டுடே)

Monday, March 03, 2014

கேள்விக்குறியாகும் பெண்கள் உரிமை

சிறுசேரியில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் உள்ளது அந்த புதர்மண்டிய இடம். அந்தப் புதரின் மறைவில் 9 நாட்கள் கழித்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உமா மகேஸ்வரியின் உடலை சில விலங்குகள் சிதைத்த அடையாளம் இருந்ததாய் காவல்துறை கூறுகிறது. அந்த விலங்குகளுக்கு முன்பாகவே சில மனிதர்கள் உமா மகேஸ்வரியின்மீது பாலியல் வன்முறை செய்து கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார்கள். அந்தப் புதர் மண்டிய இடத்தில் பகலிலேயே நடப்பது எதுவும் தெரியாத அளவு அடர்த்தியுடன் உள்ளது. இரவு பத்து மணிக்கு என்றால் யாருக்கும் எதுவும் தெரிய சாத்தியமில்லை. தெரு விளக்குகள் ஏதுமற்ற அச்சாலையில் அந்தி மங்கியபின் பெண்கள் யாரும் செல்ல மாட்டோம் என்கிறார் சிப்காட் வளாகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர்.

உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட செய்தி வெளியானதும் தகவல் தொழில்நுட்பத் துறையினர் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சமூக ஊடகங்கள் எல்லோரும் தங்கள் கவலையை பகிர்ந்துகொண்டனர். நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டன. முன்னெப்போதுமில்லாத வகையில் ஆளில்லாத விமானம் மூலம் சான்றுகளை சேகரித்தது சிபிசிஐடி. ஆங்காங்கே எல்லோரும் இதுகுறித்தே பேசினார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 500 பேர் சிப்காட் வாயிலில் கூடி பதாகைகளை ஏந்தியபடி, கோரிக்கை தட்டிகளைப் பிடித்தபடி முழக்கமிட்டனர். கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் பெண்களின் பாதுகாப்புக்கான கோரிக்கைகளை முன்னெடுக்கக் கோரியும் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தை சேவ் தமிழ்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இரண்டு நாட்கள் விசாரணைக்குப் பின் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டதாகவும் காவல்துறை அறிவித்திருக்கிறது.

சேவ் தமிழ்ஸ் அமைப்பைச் சேர்ந்தவரும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவருமான பரிமளாவிடம் பேசியபோது.டி. துறையில் பல ஷிப்டுகளாக பணி செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக அமெரிக்க நிறுவனங்களுக்கு பணியாற்றுகையில் அவர்களில் நேரப்படி இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை பணியாற்றவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. நம் ஊரில் இரவில் வெளியில் வரும் பெண்கள் குறித்த கண்ணோட்டம் மிகவும் பிற்போக்கானதாக இருக்கையில் இந்தத் துறைக்கு வரும் பெண்கள் முதலில் இத்துறைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்ள சிரமப்படுகிறார்கள். அதன்பின் அவர்கள் இரவுநேரப்பணிக்கும்டீம் அவுட்போன்றவற்றுக்கும் தங்களை பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்என்கிறார். இரவு அவர்களைப் பொறுத்தவரை மிகவும் பழகியதாக மாறிவிடுகிறது. ஆனால் இச்சமூகத்துக்கு இரவில் வெளியேவரும் பெண்கள் குறித்த பார்வை மாறவில்லை. ஆகவே .டி.துறை பெண்கள் பணி முடிந்து வீட்டுக்குச் செல்ல முறையான வாகன வசதிகளை ஏற்பாடு செய்துதரவேண்டியது நிறுவனத்தின் கடமையாகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பின் டி.சி.எஸ். நிறுவனம் பெண் ஊழியர்கள் காலை எட்டரை மணீயிலிருந்து மாலை ஐந்தரை மணிக்குள் மட்டுமே வேலை செய்யவேண்டும் என்றும் ஐந்தரை மணிக்குப்பின் வேலை செய்யும் பெண்கள் மறுநாள் அதற்கான காரணத்தை எழுத்துபூர்வமாக தரவேண்டுமென்றும் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு வகையில் பெண்களை உற்பத்தியிலிருந்தும் உழைப்பிலிருந்தும் வெளியே வைக்கும் நடவடிக்கை. எனலாம். பத்து மணிக்கு மேல் வெளியே செல்லும் பெண்களுக்கு முறையான வாகன வசதி செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும்.

வழக்கறிஞர் கீதா ராமசேஷன்தொழிலாளர் சட்டத்தின்படி ஒரு விபத்து நடந்தால் அது வேலை நேரத்தில் பணியிடத்தில் நடந்தால் மட்டுமல்ல, வேலைக்கு வரும்போதோ வேலை விட்டுப்போகும்போதோ நடந்தால் கூட அதற்கு பணியாற்றும் நிறுவனம் பொறுப்பேற்கவேண்டும். அதன்படி பார்த்தால் உமா வேலைவிட்டு வரும்போது கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுவும் பணிநேரம் என்றுதான் கருதவேண்டும். ஆனால் ஒரு கொலைக்கு நிறுவனத்தை மட்டும் பொறுப்பாக்க முடியாது. கொலையாளிகள், இச்சமூகம், தெருவிளக்குகள் போடாத நிர்வாகம் என்று எல்லோருக்கும் கூட்டுப்பொறுப்புள்ளது அந்தப் பகுதி ஆண்களுக்கும் பாதுகாப்பில்லாத பகுதியே. சில காலம் முன்பு ஒரு மென்பொருள் ஊழியரை கடத்திக்கொண்டு போய் அவருடைய உடலை தடா அருகே கண்டெடுத்தார்கள். இப்படி யாருக்கும் பாதுகாப்பில்லாத இடமாகவே அத்தகைய பகுதிகள் உள்ளன.” என்கிறார்.

பலருக்கும் பெண்களுக்கு மிகவும்  பாதுகாப்பான துறை என்று நம்பிய .டி. துறையில் உமாவுக்கு நேர்ந்ததைப் பார்க்கையில் இன்னும் சமூகத்தின் கீழ் அடுக்குகளில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பு எப்படியிருக்கும் என்கிற அச்சம் வருவதாக மென்பொருள் துறையில் பணியாற்றும் பெண் ஒருவர் கூறுகிறார். சிப்காட் வளாகத்தில் இரவு நேரத்தில் பேருந்துகள் அதிகம் வருவதில்லை. இரவு 6 மணிக்கு மேல் ஷேர் ஆட்டோக்கள் உள்ளேவரக்கூடாது என்று எழுதப்படாத விதி உள்ளது. ஆகவே அவர்கள் வருவதில்லை. 6 மணிக்குமேல் அங்கு ஆட்டோரிக்‌ஷாக்களும் பேருந்துகளும் மட்டுமே உண்டு. பொது போக்குவரத்தை அதிகப்படுத்துவது இத்தகைய குற்றங்களை தடுக்க இன்னொரு வழியாக இருக்கும். பல்லாயிரக்கணக்கானோர் வந்துபோகும் பகுதியில் கூப்பிடுதூரத்தில் ஒரு காவல்நிலையம் அமைக்கலாம் என்று சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் பெண்கள் யோசனை கூறுகிறார்கள். சென்னை மாநகரத்தில் விடாமல் ரோந்துவரும் காவல்துறையினர் போல இத்தகைய புறநகர் பகுதிகளிலும் இரவுநேர ரோந்துப் பணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டால் குற்றங்களை தடுக்கலாம். ”அலுவலகத்துக்கு அருகிலேயே இருப்பதால் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் குடிவந்துவிடுகின்றனர். சில பெண்கள் விடுதிகளும் உருவாகிவிடுகின்றன. ஆனால் மிகக் குறைந்த தொலைவுக்கு வாகன வசதி கேட்கவேண்டாம் என்று சில பெண்கள் நடந்தோ அல்லது இருசக்கரவாகனத்திலோ கும்மிருட்டில் செல்லும் நிலை இருக்கிறது. அப்போது ஆண்கள் அவர்களை கேலிபேசுவதும் ஈவ் டீஸிங் செய்வதும் அதிகமாக இருப்பதாக பெண்கள் புகார் தெரிவித்தனர். தெருவிளக்குகளை முறையாக போடுவது முதல்படியாக இருக்கும்என்கிறார் பரிமளா.

உமாமகேஸ்வரியின் தந்தை பாலசுப்பிரமணியிடம் பேசியபோது, “பெற்ற பெண்ணை இழந்து நிற்கிறோம். குற்றவாளிகளை விரைந்துபிடித்த காவல்துறைக்கு நன்றி. இதைத் தவிர வேறு என்ன பேசுவது என்று தெரியவில்லைஎன்றார் வேதனையுடன். இச்சம்பவத்தைக் காரணமாகக் காட்டி பெண்களின் உரிமைகளை முடக்கிவிடும் அபாயமும் இன்றைக்கு எழுந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளர் .கீதா. “பெண்களின் பாதுகாப்புக்கான  எந்த நடவடிக்கையும் அவளுடைய வேலை செய்யும் உரிமையையும், அவளது சுதந்திரத்தையும், எங்கும் செல்லும் உரிமையையும் மறுத்து விடக்கூடாதுஅவர்கள் வெளியிடங்களுக்குச் செல்ல அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதும், அவர்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள நிர்பந்திப்பதும் கூடாது. இதற்கு பதிலாக பொறுப்புணர்வுடன் கூடிய, அரசியல் சட்டம் அனுமதித்துள்ள பெண்களுக்கும், ஆண்களுக்குமான பாதுகாப்பே இப்போதைய தேவைஎன்கிறார்..தில்லி நிர்பயாவின் கொலைக்குப்பின் எப்படி பெண்கள் இரவு நேரத்தில் வெளியே செல்வது குறித்து சர்ச்சை எழுந்ததோ அதுபோலவே இப்போதும் எழுந்துள்ளது. இரவு நேரத்தில் ஒரு பெண் வெளியே போவது என்பது அசட்டுத்துணிச்சல் இல்லை. உமா மகேஸ்வரிக்கு படித்துமுடித்தவுடன் வீட்டைவிட்டு தொலைவில் வந்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி சம்பாதித்து சொந்தக்காலில் நிற்கும் துணிவு இருந்தது. இரவு பத்து மணிக்கு மேல் தைரியமாக ஆளரவற்ற இருட்டான சாலையில் நடந்துசெல்லும் தைரியம் இருந்தது. இந்தத் துணிச்சலின் பின்னால் இருந்தது நமக்கு ஒன்றும் ஆகிவிடாது என்கிற இச்சமூகத்தின் மீதான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை சிதைத்திருக்கிறது இச்சமூகம் என்பது வேதனை தரும் உண்மை

(நன்றி: இந்தியா டுடே)