Saturday, December 10, 2011

தேவதைகள்


நான் சென்னை வந்த புதிது. ஹாஸ்டலில் தங்கி இருந்தேன். சென்னைக்கு வந்த மூன்றாம் மாதத்தில் என் பிறந்தநாள் வந்தது. அப்போது ஈ-காமர்ஸ் கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு வகுப்பு இருந்ததால் நான் ஊருக்குச் செல்லவில்லை. நினைவு தெரிந்த நாள் முதலாய் அம்மா அப்பாவோடு தான் என் பிறந்தநாளைக் கழித்திருக்கிறேன்.

என் முதல் பிறந்தநாளை அப்பாவும் அம்மாவும் மிக விமரிசையாகக் கொண்டாடியதாகச் சொல்வார்கள். எனக்கும் என் தம்பிக்கும் ஆண்டுதோறும் வரும் பிறந்தநாள் மட்டுமே எங்கள் வீட்டின் பண்டிகை. அப்பா இசுலாமியக் குடும்பத்திலும் அம்மா இந்துக் குடும்பத்திலும் பிறந்தவர்கள். அதனால் எங்கள் வீட்டில் பண்டிகைகள் கொண்டாடுவது என்பதில் பல சிக்கல்கள் உண்டு. அப்பா தனது மாணவப்பருவத்தில் இருந்தே திராவிடர் கழகத்தில் இருந்ததால் மதம் தொடர்பான விஷயங்களுக்கு கடும் எதிரியாக இருந்தார். அதனால் அம்மாவின் தீபாவளி கொண்டாடும் ஆசைக்கு அப்பாவால் நீரூற்றி வள்ர்க்க முடியவில்லை. அம்மா தீபாவளியைக் கொண்டாட முனைவார்கள். அப்பா அதற்கு ஒத்துழைக்க மாட்டார். அதனால் எங்களுக்கு பண்டிகை நாட்களின் சந்தோஷம் என்பது பிறந்தநாளில் கிடைப்பதுதான்.ஆனால் தீபாவளிக்கு எல்லோரும் வெடி வெடிக்கும்போது நாங்களும் சிறுவயதில் வாங்கித்தரக் கேட்டு அடம்பிடித்து வாங்கி வெடித்ததுண்டு. இப்படி ஒரு சூழலில் இருந்ததாலோ என்னவோ அம்மாவும் அப்பாவும் எங்கள் பிறந்தநாளை சந்தோஷமாகக் கொண்டாடுவார்கள்.

எல்லோர் வீட்டிலும் பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்வார்கள் என்றால், எங்கள் வீட்டில் மட்டும் என் பிறந்தநாளுக்கு முன்பும், தம்பியின் பிறந்த நாளுக்கு முன்பும் தான் அம்மாவும் அப்பாவும் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டை சுத்தம் செய்வார்கள். தஞ்சாவூர் சிலோன் தாசன் பேக்கரியில் முன்பே ஆர்டர் செய்யப்பட்ட கேக்கை முதல் நாள் அன்று சென்று வாங்கிக்கொண்டு வருவோம். மறுநாள் காலையில் கேக் வெட்டி கொண்டாடிவிட்டு அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டு, பள்ளிக்குக் கிளம்பிச் சென்று அங்கே எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்துவிட்டு அப்படியே திரும்பி விடுவேன். அன்றைக்கு பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொள்வோம் நானும் தம்பியும். இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும்!

எனக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது கேக் எல்லாம் வெட்டி கொண்டாடுவதற்கு ஏனோ விருப்பமில்லாமல் போனது. அடம்பிடித்து கேக் வெட்டமாட்டேன் என்று சொல்லி கேக்- ஐத் தவிர்த்தேன். ஆனாலும் அந்த நாளின் விசேஷத்தன்மை எங்கள் வீட்டில் அதன்பிறகும் கூட குறையவில்லை. நிச்சயமாக புதுடிரஸ் எடுத்து விடுவோம். இப்படியே பழக்கப்பட்ட நான் சென்னைக்கு வந்து புதிய ஊரில் அம்மா அப்பாவை விட்டுக் கொண்டாடும் முதல் பிறந்தநாள். அன்றைக்கு அப்பா தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லத் தொடங்கி முடியாமல் அழுதார். ’’இத்தனை வருஷத்தில் உன்னைப்பிரிந்து இருந்ததில்லையே....ஊருக்கு இன்னைக்கு வந்திருக்கலாம்ல..’’ என்று விசும்பலுக்கிடையே சொல்ல, எனக்கும் அழுகை வந்தது. அம்மாவும் போனில் அழுதார். நான் போனில் அழுவதைப் பார்த்த என் அறைத் தோழிகள் காரணம் கேட்டபோது சொன்னேன். ‘இவ்வளவு ஃபீல் பண்ணுவாங்கன்னு தெரியும்ல உனக்கு. ஊருக்குப் போயிருக்கலாம்ல..?’’ என்றனர் கோரஸாக. ’கிளாஸ் இருக்கு. அதான் போகல’ என்று அவர்களிடம் சொன்னாலும், உள்ளுக்குள் இந்தக் கொண்டாட்டங்களை நான் வெறுக்கத் தொடங்கி இருந்தேன் என்பது தான் முக்கியக் காரணம். ஆனாலும் நான் அம்மாவும் அப்பாவும் கண்கலங்கியதை எண்ணிக் கலங்கினேன். உடனே அம்மாவையும் அப்பாவையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கஷ்டப்பட்டு அந்த நினைப்பைப் புறந்தள்ளினேன். அப்போது என் அறைத்தோழி அகிலா கேட்டாள் ‘உங்க வீட்டில் ரொம்பப் பெரிசா பிறந்தநாளைக் கொண்டாடுவீங்களா?’’ என்று கேட்க, எங்கள் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய கதைகளை அறைத்தோழிகளுக்கும் சொல்லி விட்டு வகுப்புக்குப் புறப்பட்டேன்.

அன்றைக்குப் பூராவுமே வகுப்பில் அரைகுறையாகவே கவனித்தேன். அப்பா - அம்மாவும் காலையில் அழுதது அன்றைய நாளை என்னால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாத நாளாக மாற்றி விட்டது. மாலை வரை அப்பாவின் விழும்பலும், அப்பாவின் தொண்டையிலிருந்து வெடித்துக் கிளம்பிய அழுகையும் மனதைப் பிசைந்தவாறே இருந்தன.நேரே ஹாஸ்டலுக்கு வரப் பிடிக்காமல் எங்கெங்கோ சுற்றிவிட்டு ஏழரை மணியளவில் ஹாஸ்டலுக்கு வந்தேன். மிகவும் சோர்ந்து போய் வந்தபோது பூட்டியிருந்த அறைக்கதவைத் திறக்க, சாவியைத் தேடும் சக்தி கூட அற்றவளாய் இருந்தேன். ஒரு வழியாய சாவியைத் தேடி எடுத்து கதவைத் திறந்தபோது, அறையெங்கும் பரவியிருந்த இருட்டை மேலும் அழகாக்க, கட்டிலின் மேல் வைக்கப்பட்டிருந்த கேக்-ம் அதில் எரிந்து கொண்டிருந்த ஒற்றை மெழுகுவர்த்தியும் என்னை வரவேற்றன. நான் ஸ்தம்பித்து நின்றேன். ‘ஹேப்பி பர்த்டே கவின்’ என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட அந்த கேக் என்னைப் பார்த்து சிரிக்க அறையில் ஒவ்வொரு இருட்டு மூலையிலிருந்தும் ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’என்று பாடியபடியே தேவதைகளாய் வெளிவந்த என் தோழிகளைப் பார்த்தபோது எதுவும் புரியாமல் நின்றேன். என் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொத்தியபடி மதுரிமா குழந்தைக்குச் செய்வது போல் என் கைகளைப் பிடித்து கேக்கை வெட்டச் செய்தாள். அவர்கள் எனக்கு ஊட்டி விட, பொங்கி வந்த கண்ணீரோடு சிரித்துக் கொண்டே நானும் அவர்களுக்கு ஊட்ட, வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை உணரச் செய்த தருணங்கள் அவை.

சென்ற ஆண்டு 2010, பிறந்தநாளான டிசம்பர் 3 அன்று முழுவதும் நாள் முடிந்து மறுநாள் விடிந்த பின் அப்பாவிடமிருந்து போன்...’’கவின்! எப்படி மறந்தேன் என்றே தெரியவில்லை. நேத்து வாழ்த்து சொல்லவே இல்லை. எப்படி மறந்தேன்னே தெரியலை..அம்மாவும் கூட மறந்துடுச்சு....வயசாயிடுச்சுப்பா எங்க ரெண்டு பேருக்கும்...இல்லையா?’’ என்றார் வேதனை கலந்த ஆற்றாமையோடு. எனக்கு அப்போதும் கண்ணீர் முட்டியது!

இந்த ஆண்டு சரியாய் 12 மணிக்கு அம்மாவும் அப்பாவும் அழைத்தார்கள். ‘போன வருஷம் மாதிரி மறந்துடக் கூடாதுல்ல.. அத்னால நினைச்சுக்கிட்டே இருந்து போன் பண்றோம்”” என்றார்கள்.

அன்றைக்கு நான் சென்னைக்கு வந்த புதிதில் எனக்கு பர்த்டே கேக் வெட்டிய தோழிகள் இன்றைக்கு கல்யாணமாகி, குடும்பம், குழந்தைகள் என்று செட்டிலாகி விட்டார்கள். அவர்களில் ஒருவருடைய வாழ்த்தும் இன்று எனக்குக் கிட்டவில்லை. அவர்களில் சிலர் இப்போது தொடர்பறுந்து எங்கே இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. அதற்கு அவர்கள் பெண்ணாய்ப் பிறந்ததைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? பெண்களுக்கு மட்டும்தான் இப்படியான தற்காலிகத் தோழமைகள் அதிகமாக இருக்கின்றன. நிரந்தரமாக்கிக் கொள்ள அவர்களை ஃபேஸ்புக்கில் தேடிக்கொண்டே இருக்கிறேன்.இன்னும் தேடுகிறேன்! தேடுவேன்!

Tuesday, November 15, 2011

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக மாற்றம், பரமக்குடி தலித் படுகொலைகள் - எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கல்வியாளர்கள் கண்டன ஆர்பாட்டம்


அன்புடையீர்,

அறிவுலகத்தின் மீது கடுமையான தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் தருணம் இது. அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மருத்துவமனையாக்கும் தமிழக அரசின் அறிவிப்பு நம் மனங்களில் நெருப்பை அள்ளிக் கொட்டியிருக்கும் நிலையில், கொழுந்து விட்டு எரியும் அந்தத் தீயை அணைக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? நம் எதிர்ப்பை தெரிவிக்க ஆங்காங்கே பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நம் கருத்துக்களை எடுத்து வைத்தாலும், நாம் ஒன்று கூடி நமக்கு நேர்ந்த இந்த அவமானத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பது கடமையல்லவா?

தமிழக அரசு தலித்துகளின் உயிரை கிள்ளுக்கீரையாய் நினைத்து பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பலியானோர் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் மட்டுமே வழங்கி, தலித்துகளின் உயிரை மலிவெனக் கருதுவதை வெளிப்படுத்தியது. கண் துடைப்பு விசாரணை கமிஷன் ஒன்றை நிறுவியிருக்கும் தமிழக அரசின் செயல், பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் செயல். தவறு செய்பவரும், தண்டிப்பவரும் ஒருவரேயெனில் நியாயமும் நீதியும் எப்பக்கம் செல்லும் என்பது திண்ணம். ஆகவே, சி.பி.ஐ விசாரணை கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கக் கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரக் கோரியும் எழுத்தாளர்களாகிய நாம் ஒடுக்கப்ப்ட்ட மக்களின் குரலாய் ஒலிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்காகவும், அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. நவம்பர் 20, ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே திரள்வோம் நண்பர்களே! நம் எதிர்ப்பை தெருவில் இறங்கி முழங்குவோம். தமிழ்நாடெங்கிலும் இருந்து தங்கள் கடமையெனக் கருதி நண்பர்கள் புறப்பட்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளுமாறு அழைக்கிறோம். தனிநபராகவோ, தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பிலோ எப்படியாயினும், தங்கள் பங்கேற்பு இன்றியமையாதது!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் ஒலிக்கப் போகும் நம் கண்டனக் குரல்கள் அறிவுலகின் மீது விடப்பட்டுள்ள சவாலின் எதிர்வினை.

நம் எதிர்ப்புக் குரலின் வலிமையில் கோட்டைக் கதவுகள் திறந்து கொள்ளட்டும்!

சென்னை நோக்கி அணிவகுத்து வாருங்கள்!

நண்பர்கள் இதை உங்கள் முகநூல் பக்கத்திலும் வலைப்பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். மின்னஞ்சல் மூலம் மற்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கவும் வேண்டுகிறோம்.

இப்படிக்கு

எஸ்.வி.ராஜதுரை, இன்குலாப், வ.கீதா, பிரின்ஸ் கஜேந்திர பாபு, எஸ்.எஸ்.ராஜகோபாலன், அழகிய பெரியவன், அரங்க மல்லிகா, சந்திரா, தி.பரமேஸ்வரி, கம்பீரன், விஷ்ணுபுரம் சரவணன்,கவின் மலர்
தொடர்புக்கு : 98411 55371, 93603 33336, 94437 54443 

Wednesday, November 09, 2011

ஆசான்களின் ஆசான் தாஸ் வாத்தியார்!

படம் : என்.விவேக்
தூரிகையில் உயிர்த் தொழிற்சாலை நடத்தும் ஆதி மூலம், மணியம் செல்வன், டிராட்ஸ்கி மருது போன்ற முக்கியமான ஆளுமைகளின் ஆசான்... சி.ஜே.ஆன்டனிதாஸ்!
அவரது தூரிகையின் மேல் கொண்ட தீராக் காதலின் சாட்சியாக 'தி கேலரி ஆஃப் சி.ஜே.ஆன்டனிதாஸ்’ என்ற பெயரில் அவரது ஓவியங்கள் அடங்கிய தொகுப்பை அவரது மகள் அனிதா தாஸ் உருவாக்கி இருக்கிறார்.

டிராட்ஸ்கி மருதுவிடம் ஆன்டனிதாஸ் குறித்துக் கேட்டபோது, குரலில் பெருமிதம் பொங்கி வழிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்...

''தாஸ் வாத்தியார் என்றுதான் அவரை அழைப்போம். ரியலிஸ்ட்டிக் ஓவியங்களில் அவர்தான் எங்களின் பிதாமகன். ஏறத்தாழ 500 ஓவியர்களை உருவாக்கிய முக்கியமான ஆளுமை. மூன்று ஆண்டுகள் அவருடைய மாணவனாக இருந்தேன். சென்னை ஓவியக் கல்லூரிக்கும் அவருக்கும் 45 ஆண்டு கால உறவு. எளிய குடும்பத்தில் பிறந்தவர். உலகப் புகழ்பெற்ற வில்லன் நடிகர் வின்சென்ட் ப்ரைஸ் இந்தியாவுக்கு வரும்போது, தாஸ் வாத்தியாரின் ஓவியங்களை வாங்கிச் செல்வார். நடிகர் சந்திரபாபு, தான் கஷ்டப்பட்ட காலத்திலும்கூட அவருடைய ஓவியத்தைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தார். மீனவர்களின் வாழ்க்கையை மிகத் தத்ரூபமாக ஓவியங்களில் படைத்திருக்கிறார். அவருடைய ஓவியங்கள் இந்தியாவின் மிக முக்கியமான மியூஸியங்கள், ஆளுநர் மாளிகைகள், நாடாளுமன்றத்தில் எல்லாம் அலங்கரிக்கின்றன. இந்தியாவில் ஓர் ஓவியத் தலை முறையையே அவர் உருவாக்கினார் என்பேன்!'' என்று சிலிர்க் கிறார் மருது.

காத்திருக்கும் பெண்ணின் கண் கள், இசைக் கருவி வாசிக்கும் பெண்கள், உழைக்கும் மாந்தர்கள், காற்றோடும் மழையோடும் அல்லா டும் மீனவ மக்கள், தாயின் அணைப்பில் தன்னை மறக்கும் குழந்தை, கருணையும் வலியும் வேதனையும் நிரம்பிய இயேசு கிறிஸ்து, கோட்டோவியமாக உருமாறி இருக்கும் மாடல்கள் என்று ஒவ்வொரு விதத்திலும் அசரவைக்கின்ற ஓவியங்கள். கலை நேர்த்தியோ அதிஅற்புதம்!

40 ஆண்டுகளுக்கும் மேல் பேராசிரியராக இருந்த ஆன்டனிதாஸ் ஓய்வு பெறுவதற்கு முன் சென்னை ஓவியக் கல்லூரியின் முதல்வராக இருந்தார். அவர் இறந்த சமயம் அவர் இறுதியாக வரைந்திருந்த ஓவியம் ஈரம்கூடக் காயாமல் இருந்ததை நெகிழ்வோடு நினைவுகூர்கிறார் அனிதா தாஸ்.

''அப்பாவின் 75-வது பிறந்த நாளுக்குப் பரிசாக இந்தத் தொகுப் பைப் பரிசளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அவர் காலமாகி மூன்று மாதங்கள் கழித்துத் தான் தொகுப்பை என்னால் உருவாக்க முடிந்தது. தனது ஓவியங்களைப் புத்தகமாகப்  பார்க்கும்போது அப்பாவின் முகத்தில் தோன்றும் கண நேரப் புன்னகையை நான் இழந்துவிட்டேன். நான் பார்க்காத அந்தப் புன்னகை என் வேதனையின் வெம்மை யைத் தினம் தினம் அதிகரிக் கிறது!'' - சட்டென மௌனிக் கிறார் அனிதா.
இயேசுவின் ஒவ்வொரு ஓவியத் தையும் வரைவதற்கு முன் ஆன்டனிதாஸ் தன் மனதுக்குள் ஒரு சிலுவை சுமந்திருப்பாரோ என்று எண்ணும் அளவுக்கு இவர் வரைந்த இயேசுவின் முகபாவனைகள் விசேஷமானவை. தலையில் முள்கிரீடம் சுமந்து, கை கால்களில் ஆணி அறையப்பட்டு, பாரச் சிலுவை சுமக்கும் இயேசுவின் துயரத்தில் அத்தனை அடர்த்தி. ''இயேசுவின் ஓவியங்களை வரைவதற்கு முன்பு மனதை ஒருங்கிணைக்க தியானம் செய்வார் அப்பா. அப்போதுதான் இயேசுவின் துன்பங்களை மனதில் உணர்ந்து அதைப் பாவமாக ஓவியத்தில் வெளிப் படுத்த முடியும் என்பார்'' - மெல்லிய குரலில் சொல்கிறார் அனிதா.

தொகுப்பில் உள்ள நான்கு பென்சில் கோட்டோ வியங்களை எடுத்துக் காட்டியபடியே, ''இவை கல்லூரியில் அவரது அறையின் குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்தவை என்றால் நம்புவீர்களா? இந்தத் தொகுப்பை உருவாக்குவதில் எனக்குப் பெருமளவில் உதவியவர் என் நண்பர் ஸ்வரூப். ஓவியர் மணியம் செல்வனுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

அப்பாவின் ஓவியங்களை வைத்து நடந்த கண்காட்சியில், 10 நாட்களும் தினமும் ஒருவர் வந்து ஓர் ஓவியத்தின் முன்னால் நெடுநேரம் நிற்பார். இசைக் கருவிகளை வைத்து அப்பா வரைந்த ஓவியத்தின் முன் நின்று பார்த்த ஒரு பெண், பிறர் பார்ப்பது குறித்துக் கவலைப்படாமல் நெடுநேரம் பாடினாள். அப்பாவின் ஓவியங்கள் மனித மனங்களுக்குள் செய்யும் வித்தைகளை நான் இன்னும் ஆழமாக உணர்ந்த தருணங்கள் அவை!'' - சிலிர்ப்புடன் முடிக்கிறார் அனிதா

Tuesday, October 18, 2011

நீளும் கனவு


சின்னு வந்திருக்கிறாள். அவளுக்கு அனுவின் சமையல் என்றால் ரொம்ப இஷ்டம். அனு அவளுக்காக மீன் குழம்பு வைத்திருந்தாள் .  காரம் கொஞ்சம் அதிகமாகி விட்டது. ஆனாலும் என்ன? சின்னுவுக்குப் பிடிக்கும் தான். இரண்டு தட்டுகளை கழுவி எடுத்து வந்தாள். சின்னு சாப்பிட அமர்ந்தாள். தன் சின்ன கைகளால் மெல்ல தட்டிலிருந்து ஒரு பிடி எடுத்து உருட்டினாள். “நம்பி சாப்பிடலாமா? ஆம்புலன்ஸுக்கு சொல்லி வச்சுட்டு வாய்ல வைக்கவா?’’ என்று கேலி செய்தவாறே ஒரு கவளத்தை வாய்க்குள் வைத்தவள் சாப்பிட்ட வாயாலேயே அனுவின் கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள்.

‘’நல்லாருக்கு!..உப்பு காரம் எல்லாம் சரியாய் இருக்கு!’’ என்றவாறே ரசித்து  சாப்பிட்டாள். சோறு கொஞ்சம் குழைவாய் வடித்திருந்தது நன்றாகவே இருந்தது. அனு தனக்கும் கொஞ்சம் எடுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.. நல்ல சாப்பாடு சில சமயம் மனதை ரசனையாக்கி விடுகிறதுதான். சின்னு பெரும்பாலும் சமைப்பதில்லை. வெளியில் ஹோட்டலில் தான் சாப்பிடுகிறாள். அதனால் அவளுக்கு சோற்றை அள்ளி நிறைய வைத்தாள் அனு. 

‘’இப்படி யாராச்சும் தினமும் சமைச்சு வச்சா நல்லா சாப்பிடலாம்!’’ என்றாள் சின்னு. அவள் வாய் பேசிக்கொண்டே இருந்தது. ஏதேதோ பேசினாள். இடையிடையே சாப்பிட்டாள். பேசியதில் பாதி மீன்குழம்பின் ருசி பற்றியே இருந்தது. சாப்பிட்டு முடிந்ததும் கையைத் துடைத்துக் கொண்டே வந்தவள் அருகில் வந்து நின்று தலையை சாய்த்து சொன்னாள்

“அனு! சாப்பாடு ரொம்ப நல்லாருந்தது. ரொம்ப நாளைக்குப் பிறகு ரசிச்சு சாப்பிட்டேன்….’’

’’சமைக்கும்போது வெறும் எண்ணெய், மிளகாய் மட்டுமா போட்டேன். அன்பும் ஒரு துளி கலந்து தானே சமைச்சேன்?’’

‘’ஒரு துளி தானா?’’

‘’சமைக்கும்போது ஒரு துளிதான்...பரிமாறும்போது நிறைய…....ஒரு பொன்மொழி தெரியுமா...?

’எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள். ஆனால் அன்புடன் பரிமாறுங்கள்’..கேள்விப்பட்டிருக்கியா?’’

”இல்லையே! நல்லாருக்கு..!’’” என்றவள் உண்ட மயக்கத்தில் அருகில் இருந்த பாயை எடுத்து விரித்துப் போட்டுப் படுத்தாள்.

னவில் தான் செந்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். கனவும் நனவுமான வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை. கனவு மட்டுமே போதுமானதாகத் தோன்றியது. காணும் கனவு அப்படியே வாழ்நாளின் இறுதி வரை நீடிக்காதா என்று ஆசையாய் இருந்தது. இப்போதும் கனவு கண்டு கொண்டிருக்கிறான். இந்தக் கனவு இப்படியே நீளாதா? என்ன ஆச்சரியம்? அவன் கனவு நீடித்தது. உறக்கத்தில் கால்களை நீட்டிக்கொள்வதை அவன் உணர்கிறான். ஆனாலும் தொடர்ந்து கனவு கண்டுகொண்டிருக்கிறான்.

பாட்டி அடிக்கடி ‘உனக்குன்னு ஒரு ராஜகுமாரி எங்கே வளர்ந்த்துக்கிட்டு இருக்காளோ?’ என்று சிறுவயதிலிருந்து சொல்வதைக் கேட்டிருக்கிறான் செந்தில். அந்த ராஜகுமாரி ஒருமுறை கூட அவன் கனவில் வருவதில்லை. கனவில் அம்மா, அப்பா, பாட்டி, பக்கத்து வீட்டு ஜேம்ஸ், எதிர்வீட்டு சீனு  என்று எல்லோரும் வந்தார்கள். ஆனால் ராஜகுமாரி மட்டும் வரவேயில்லை.

செந்திலுக்கு நிறைய முடி..சுருள் சுருளாக நெற்றியில் புரளும். காற்றில் ஆடும் அவன் முடிக்கென்றே சின்ன வயதிலிருந்தே அவன் வயதையொத்த பையன்கள் ரசிகர்கள். ‘உனக்கு மட்டும் எப்படி இப்படி வந்து விழுது?’’ என்று தொட்டுத் தொட்டுப் பார்ப்பார்கள். அவனுக்கு உள்ளூர பெருமையாக இருந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ள மாட்டான். அவனைப் பார்த்து பையன்கள் அந்த ஒரு விஷயத்தில் தான் பொறாமைப் படுவார்கள். அதனால் சரியாய் முடியை முன்னும் பின்னும் கத்தரித்து நெற்றியில் மட்டும் வந்து சரிந்து விழும்படி த்ன்னுடைய தலையலங்காரத்தை வைத்துக் கொள்வான். பையன்கள் பொறாமைப்படும்போதெல்லாம் அவனுக்கு சந்தோஷம் தாங்காது.

இப்போது கனவிலும் பையன்கள் நிறைய பேர் வந்து சுற்றி சுற்றி வருகிறார்கள்.. இவனுடைய முடியை தொட்டுப் பார்க்கிறார்கள். இவனுக்கு சற்றுக் கூச்சமாக இருக்கிறது. ஒருவன் வந்து செந்திலின் கரங்களைத் தொட்டுப் பார்த்துக் கேட்கிறான். ‘’உன் கை ரொம்ப அழகு! உன் கையைப் பிடிச்சுக்கவா கொஞ்ச நேரம்?’’ இவன் தலையாட்ட கைகளை கெட்டியாகப் பற்றிக்கொள்கிறான். இன்னொருவன் வந்து ‘’உனக்கு அழகான கண்ணுடா!’’’’ என்றான். இவனுக்குப் பெருமையாய் இருந்தாலும் கூச்சமாக இருக்கிறது.. வெளிக்காட்டிக் கொள்ளாமல் படபடப்போடு நிற்கிறான் எதிர்வீட்டு சீனு இப்போது வருகிறான். ‘’செந்தில்! உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். தெரியுமா உனக்கு?’’ என்றபோது செந்தில் கனவில் மட்டுமில்லாமல் நிஜமாகவே தன் உடல் சிலிர்த்ததை உணர்ந்தான்.

கனவில் இன்னும் ஏதேதோ காட்சிகள்!. ஒரு சர்ச், மசூதி, கோவில் என்று எங்கெல்லாமோ சுத்துவது போலவும், வகுப்புப் பையன்களோடு சேர்ந்து சிகிரெட் குடிப்பது போலவும் விதவிதமாய் கனவுகள்.

கனவுகளுக்குத்தான் எத்தனை விதமான கால்கள்? சில நீளமானவை. சில குட்டையானவை. சில வேகமாய் ஓடக்கூடிய கால்கள். சில அன்னநடை போடும் கால்கள். அவை எப்படியிருந்தாலும் மெலிதான ஏதோவொரு இடப்பெயர்ச்சி அல்லது அசைவு மட்டும் கனவில் உத்தரவாதமாய் இருக்கிறது.

அப்பா இப்போது செந்திலின் கனவில் வருகிறார். அப்பா! அவனுக்கு முதல் நண்பன் அப்பா தான். ஒரு நாளின் அத்தனை நிகழ்வுகளையும் சொல்லும்போது அப்பா விழுந்து விழுந்து சிரிப்பார். அப்பாவுக்கு செந்திலின் நகைச்சுவை உணர்வு ரொம்பவே பிடிக்கும். இருவருமாய் சேர்ந்து அம்மாவையும் தம்பியையும் கிண்டல் செய்வது, தொலைக்காட்சி பார்ப்பது, கடைத்தெருவுக்குப் போவது என்று ஒன்றாகவே திரிவார்கள். அப்பாவை அண்ணனா என்று பலர் கேட்பதுண்டு. அப்பா அத்தனை இளமை. ஆனால் கொஞ்ச நாட்களாக அப்பா அவனோடு பேசுவதில்லை.  கனவில் இப்போது வருகிறார். நிஜத்தில் இப்போது இருப்பது போலவே கனவிலும் அப்பா பேசவில்லை. அவருடைய முகம் வாடியிருக்கிறது. “ஏன்பா?’’ என்கிறான் செந்தில். ‘’நீ போறது கஷ்டமாவும் பயமாவும் இருக்கு செந்தில்’’ என்றார். ‘’அய்யோ! நான் எங்கப் போகப்போறேன். இதோ இருக்குற மெட்ராஸுக்குத் தான படிக்கப் போறேன். இதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படுறீங்க?’’ என்றவாறே அப்பாவின் அருகில் சென்று அமர்ந்து கொள்கிறான் செந்தில். அப்பா அவனையே பார்த்துவிட்டு சொல்கிறார் ‘’உனக்கு இது புரியாதுடா!’’ என்கிறார். அப்பாவின் கண்கள் கலங்கி இருந்தன. ஆண்பிள்ளை அழக்கூடாது என்று எவனோ சொல்லி வைத்ததை நம்பி அப்பா அழுகையை அடக்கிக் கொள்வது தெரிகிறது. அவன் அப்பாவையே பார்த்துக் கொண்டு நிற்கிறான்.

அப்பா சிறிது நேரத்திலேயே கனவிலிருந்து போய்விடுகிறார். பின்னாடியே அம்மா வந்து கனவிற்குள் நுழையும்போதே பெரிதான ஓலத்தோடு அழுதவாறே வருகிறாள். அப்பாவைப் போல அவளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. பெண்கள் அழலாம். பெண்கள் அழுதுதான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் பெண்ணேயில்லை என்று எவனோ சொன்னது அம்மாவுக்கு வசதியாய்ப் போய்விட்டது. அழுகை வந்தால் மறைக்க வேண்டியதில்லை. அப்பா போல அம்மா கண்ணீரை உள்ளுக்குள் உறைய வைக்கவில்லை. உருகி உருகி அழுகிறாள். இவனுக்குத்தான் எரிச்சலாக இருக்கிறது. என்ன இது? எல்லோரும் வந்து அழுதால் எப்படி? கனவிலேயே அம்மாவை அழாமலிருக்கும்படி மன்றாடுகிறான். அம்மா கேட்கவில்லை. இந்தக் கனவு பிடிக்கவில்லை. நீண்ட கனவு வேண்டும் என்று நினைத்ததால் தானே இந்தப் பிரச்சனை? கனவு நின்று போக்க்கூடாதா?

என்ன ஆச்சரியம்! கனவு கலைந்து போனது. கண்களைத் திறந்தான். அப்பா கண் முன்னால் நின்றார். ஒரு வார்த்தையும் பேசாமல் கண்களால் மட்டுமே வெறுப்பைக் கொட்டும் வித்தை அப்பாவுக்குத் தெரிந்திருந்தது.  அவனுக்கு ஆயாசமாய் இருந்தது. 

கனவு மட்டும் இல்லையென்றால் வாழ்க்கை ரணமாகி இருக்கும். துன்பத்தையும் துயரங்களையும் கரைத்து மனிதர்களை புது மனிதர்களாக்கும் சக்தி கனவுகளுக்கு உண்டு. மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். இந்த முறை அவனுக்கு அவ்ன் நினைத்த நேரத்தில் கனவு வரவில்லை.

னு புரண்டு படுத்தாள். சின்னு அருகில் படுத்திருந்தாள். சின்னுவிடமிருந்து  இளங்குறட்டை வந்தது. அவளுடைய சின்னப் புருவங்களும், கூர்மையான நாசியும் அவளுடைய அழகுக்கு மெருகூட்டின. சின்னுவோடு வாழப்போகிறவன் கொடுத்து வைத்தவன். சின்னு சின்ன வயதிலேயே அம்மாவை இழந்தவள். அன்பைத் தேடித் தேடி அலைபவள். சின்னதாய் அன்பு செலுத்தும் ஜீவனையும் பாய்ந்து பாய்ந்து நேசிப்பவள். அன்பைக் கண்டறியாத சின்னுவுக்கும், அன்பு என்பதே மறந்துபோன அனுவுக்கும் இடையேயான நட்பு அவர்களுக்குத் தந்த ஆறுதல் போல வேறெதுவும் தரவில்லை. சாப்பிடும்போது சின்னு கொடுத்த முத்தம் நினைவுக்கு வந்தது. அனுவுக்கு கண்களில் நீர் திரண்டது. பதிலுக்கு இப்போது அவளை முத்தமிட வேண்டும்போல் தோன்றியது அவள் உறக்கத்தைக் கலைக்க மனமில்லாமல் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள்.

ஆனால் மனம் அனபை எப்படியாவது வெளிப்படுத்தச் சொல்லி அலறியது. தன் கரங்களால் மெல்ல அவள் உறக்கம் கலையாதபடிக்கு அவள் தலையைக் கோதினாள். லேசாகப் புரண்டு படுத்தாள் சின்னு. ‘’என்னைப் பிடிச்சிருக்கா?’’ என்று சன்னமாக அவள் இதழ்கள் முணுமுணுத்தன. கனவு காண்கிறாள் போலிருக்கிறது. கனவில் வந்த ராஜகுமாரன் யாரோ? அனுவின் முகத்தில் புன்னகை அரும்பியது. தானும் அவள் அருகில் படுத்துக்கொண்டாள். ஆனால் உறக்கம் மட்டும் வரவில்லை.  கண்கள் திறந்தபடியே இருந்தன. மனம் மட்டும் எங்கெங்கோ சென்று விட்டு   மீண்டு, பின் மறுபடி மறுபடி எங்கோ சென்று மீண்டு வந்தது.

செந்தில் கண்களை மீண்டும் மூடிக்கொண்டான். உறங்குவது போலும் சாக்காடு. இப்படியே போய்விட்டால் நன்றாக இருக்கும். நீண்ட கனவு வருவது போலவே நீண்ட தூக்கமும் வந்து விட்டால் இனி ஜென்மத்துக்கும் எழ வேண்டியதில்லை. அம்மா, அப்பாவின் கோபக்குரல்களையும் ஒப்பாரிகளையும் கேட்கவோ பார்க்கவோ வேண்டியிருக்காது. கனவே! வா! வந்துவிடு! என் துயர் துடைக்க வந்து விடு! என்னை இந்த உலகை விட்டு நீங்க வைத்து எங்காவது அழைத்துச் சென்று இந்த பிரபஞ்சத்தை சுற்றிக் காண்பிப்பாயா? மானுட துன்பம் நீங்கி, என் ஆசை, காதல்,  காமம், உடல் குறித்த பிரக்ஞையற்ற ஒரு வெளிக்குள் என்னை திணிப்பாயா? உடல் கரைந்து உருகி...எலும்புகள் உடைந்து நொறுங்கி, உறுப்புகள் தூள் தூளாக சிதறி வெறும் மனம் மட்டுமே உலவும் இடமென்று எங்கேனும் இருந்தால் என்னை அங்கே கொண்டு சேர்ப்பாயா கனவே! – அவன் மனம் அரற்றியது. அவன் உறக்கம் கனவைத் தேடித் திரிந்து...இதோ..கண்டடைந்தும் விட்டது. கனவு அவனை நெருங்கியது.

கனவில் வகுப்புப் பையன்கள் அவனைக் கண்டதும் தெறித்து ஓடுகிறார்கள். அசூயையாய் விலகிச் செல்கிறார்கள். இவன் அழுகிறான். கனவிலுமா? இங்குமா? இங்குமா? வேண்டாம்! கனவைத் துரத்த முயன்று தோற்றுப் போகிறான். கனவு அவனைத் துரத்தியபடியே இருந்தது. இந்தக் கனவில் அவளாவது வரக்கூடாதா? அவள்..அவள்..என்றால்..அவள் பெயர் செல்வி. இவன் வகுப்பின் ஒரே மாணவி.. அவள் மனதை வெல்வது யார் என்பதில் பையன்கள் மத்தியில் கடும் போட்டி  இவனுக்கு மட்டும் அவளிடம் அப்படியெதுவும் தோன்றியது இல்லை. ஆனால் செல்வியை அவனுக்குப் பிடிக்கும். ’நீயாவது வா செல்வி! வந்து என்னைக் காப்பாற்று இந்தக் கொடுமையிலிருந்து...’ இதோ.... இதோ.. வந்துவிட்டாள். அவன் ஓடிச் சென்று அவள் கரம் பற்றுகிறான். அவளோ பயந்து உதறுகிறாள். அவன் அவளை விடாமல் பற்றிக்கொண்டு நிற்கிறான். அவள் பதட்டம் தணிந்து நடுக்கம் குறைந்து மெலிதாய் புன்னகைக்கிறாள். இவன் நிம்மதியடைகிறான். ’’செல்வி..! முடியல செல்வி...எதெல்லாம் நடக்க்க்கூடாதுன்னு நினைக்கிறேனோ அதெல்லாம் கனவுலயும் நடந்தா எப்படி. அதான்.. நீ வந்தா நல்லாருக்குமேன்னு நினைச்சேன். வநதுட்டே..கிளாஸ்ல யார் கிட்டயும் பேசப்பிடிக்கலை உன்னைத் தவிர.  சீனு, ஜேம்ஸ்கிட்டக் கூட பேசுறது குறைஞ்சு போச்சு. எப்பவும் நீ என் ஃபிரண்டா இருப்பியா?’’ – இவன் செல்வியிடம் அரற்றினான். அவள் ஆதரவாய் அவன் கரம் பற்றுகிறாள். ‘’நான் இருக்கேன் உனக்கு!’’ என்கிற மூன்று சொற்கள் அவள் கரங்களின் வழியே அவனுக்குள் இறங்குகின்றன.

சட்டென்று செல்வி காணாமல் போகிறாள். மீண்டும் அம்மாவும் அப்பாவும் வந்து அழுகிறார்கள். அவன் அவர்களை துரத்துகிறான். செல்வியின் வருகைக்காக காத்திருந்தான். அவள் வரவில்லை. பதிலுக்கு சீனு வந்தான். சீனுவைப் பார்த்ததும் நிஜத்தில் வரும் படபடப்பை இப்போதும் கனவிலும் உணர்கிறான் செந்தில். சீனு கருப்புக்கும் சிகப்புக்கும் நடுவில் மாநிறம். சிரித்தால் கன்னத்தில் குழி விழும். சீனு ஒரு அழகன். சிறு வயதிலிருந்து ஒன்றாக விளையாடித் திரிந்த இருவருக்குள் ஏதோ ஒரு திரை விழுந்தது போலாகி விட்டது இப்போதெல்லாம். அவனைப் பார்த்தாலே செந்திலுக்கு லேசான படபடப்பு தோன்றி விடுகிறது. இயல்பாக அவனோடு பேச முடியவில்லை. இந்த விலகல் ஏன் என்பது சீனுவுக்குத் தெரியுமா? தெரியாது என்றுதான் தோன்றியது செந்திலுக்கு. அவனிடம் பேச முடியவில்லை என்றாலும் அவனைப் பார்ப்பதே கூட போதுமானதாக இருந்தது

சீனு அவனருகே வருகிறான். ‘’ஏண்டா! இப்போவெல்லாம் சரியா பேச மாட்டேங்குற? என்னாச்சு?’’  என்கிறான். இவன் தலைகுனிந்து நிற்கிறான். இந்த வார்த்தையை நிஜத்தில் அவன் கேட்க மாட்டானா என்று துடித்திருக்கிறான் செந்தில். ஆனால் ஒருபோதும் அவன் கேட்டதில்லை. இவன் விலக விலக அவனும் விலகியே சென்றான். ஆனால் இப்போது கனவில் வந்து கேட்கிறான். அவனிடம் எதைச் சொல்வது? மௌனமாய் நிற்கிறான். அருகில் வந்த சீனு மெதுவாய் அவன் கைகளைப் பற்றி தன் கைகளுக்குள் வைத்துக்கொள்கிறான். செந்தில் உடலுக்குள் மெலிதான மின்சாரம் பாய்ந்து நரம்புகளில் ஏற...வெடுக்கென்று கையை எடுத்துக் கொள்கிறான். கனவு இங்கே தடைப்பட... திடுக்கிட்டு விழித்தவன் தன் உடல் நடுங்குவதை உணர்ந்தான். வியர்த்துக் கொட்டியது. அந்தக் கணம், அடிக்கடி இப்போதெல்லாம் தோன்றுகிற அதே உணர்வு. மிக அந்தரங்கமாய் தன் தொடைகளுக்கிடையே அனாவசியமான இடைச்செருகலொன்றை உணர்ந்தான்.

எப்போது இப்படியான ஒரு உணர்வு தோன்றியது என்று யோசித்துப் பார்த்தான் செந்தில். சரியாய்த் தெரியவில்லை. உடலின் ஒவ்வொரு அணுவிலும அவன் தன் ஆண்தன்மையின் மிச்ச சொச்சம் அழிந்து கொண்டிருப்பதை உணர்ந்து ஆண்டுகளாகி விட்டன. அப்பாவும் அம்மாவும் எப்போது எப்படி கண்டுபிடித்தார்கள் என்று இவனுக்குத் தெரியவில்லை. ஆனால் இவனை வெறுக்க ஆரம்பித்த்தை மட்டும் அவன் உணர்ந்து கொண்டான். ஆனால் அதிலிருந்து அவனை அப்பா பார்க்கிற பார்வையில் அசூயையும், அம்மா பார்க்கிற பார்வையில் துயரமும் அவனைக் கொன்றன. பெண்ணுடலோடு இருக்கும் மனிதர்களைப் பார்க்கையில் பொறாமை வந்த்து. ஏக்கம் தின்றது. எந்த அழகான பெண்ணைப் பார்த்தாலும் அவள் அணிந்திருக்கும் உடையைப் போன்றதொரு உடையை தான் அணிந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி கற்பனையில் மிதந்தான். சினிமா பார்க்கும்போது கதாநாயகியின் இட்த்தில் தன்னை வைத்துப் பொருத்திப் பார்த்து “என் கிட்ட யாராவது இப்படி நடந்துக்கிட்டா அவன் அவ்வளவுதான்’’ என்று பெண் பாத்திரத்தோடு மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான். அழகான ஆண்களைப் நிரம்பப் பிடித்த்து. தன் பாலியல் விழைவுகளை சமூகத்தில் உள்ள மற்ற பெண்களைப் போலவே அடக்கக் கற்றுக்கொண்டான். பெண்மையின் நெருப்பு அவனுக்குள் கொழுந்து விட்டெரிந்த்து. அதன் தீப்பிழம்புகள் அவனைச் சுடத் தொடங்கியபோது அவன் செய்வதறியாது திகைத்தான். யாரிடம் சொல்ல? எப்படி சொல்ல? என்னவென்று சொல்ல?

ஜேம்ஸ் வந்தான் ஒரு நாள். “உனக்குள் ஒரு பெண் இருக்கிறாள்!’’ என்றான். அவனையே பார்த்தான் செந்தில். ஒரு துளி நீர் விழிகளிலிருந்து வெளிப்பட்டு நதியாகி கடலானது. என்ன இது? எது அவன் அந்தரங்கமோ, எதற்கு அவன் பயப்பட்டானோ, எதைச் சொல்ல எண்ணியும் சொல்ல முடியாமலும் தவித்தானோ, அதை சர்வசாதாரணமாகச் சொல்கிறான் ஜேம்ஸ். செந்தில் கதறினான். ஜேம்ஸ் அருகில் வந்து அவன் தோளைப் பற்றி தன் மார்போடு அணைத்துக்கொண்டான். இப்போது செந்திலின் கரங்கள் சீனு தொடும்போது நடுங்குவது போல் நடுங்கவில்லை. மனம் படபடக்கவில்லை. சீனு தொட்டால் மட்டுமே அத்தகையதொரு உணர்வு. அதற்குப் பெயரென்ன? தெரியவில்லை. ஆனால் ஜேம்ஸின் அணைப்பில் தன்னுடலை ஒப்படைத்துவிட்டு செந்தில் நிர்வாணமாய் நிற்பவன் போல் நின்றான்

செந்தில் இதுநாள் வரை வெளியே தெரியாமல் பொத்திக் காப்பாற்றிய பெண்மை உள்ளுக்குள் உறங்கிப் போக, உலகம் அவனைப் பார்த்த ஆண்மையும் மறைந்து போக, ஜேம்ஸின் மனிதம் விழித்துக்கொண்டு செந்திலை அரவணைக்க, பால்பேதமற்ற இரு உடல்கள் தழுவிக்கொண்டன. ஜேம்ஸ் கண்டறிந்த உண்மையை அவன் எந்த ஆரவாரமுமின்றி சொன்னை விதத்தில் ஒரு கண்ணில் ஆனந்தக் கண்ணீரும், ஒரு கண்ணில் துயரக்கண்ணிருமாய் வழிய, கண்ணீரைத் துடைக்காமலும் கூட அவனைக் கட்டிக்கொண்டு கதறினான் செந்தில். அந்தக் கண்ணீரில் அவனுக்குள் மிச்சமிருந்த ஆண்மையை துளித்துளியாய் வெளியேற்றினான். அவன் அழுது தீரும் வரை அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு, முதுகில் ஆதரவாய்த் தட்டிக்கொடுத்தான் ஜேம்ஸ். ‘’ஒண்ணுமில்ல! சரி பண்ணிடலாம்!’’ என்பதே அவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகள். “இந்த உடம்பு வேணாம் ஜேம்ஸ்’’ – கதறிக்கொண்டே இருந்தான் செந்தில்.  

னுவின் புகைப்பட ஆல்பத்தையெடுத்து பார்த்துக்கொண்டிருந்தாள் சின்னு. தோழிகளோடு கடற்கரையில் எடுத்தது, ம்காபலிபுரத்தில் சிற்பங்களுக்கு மத்தியில் நின்று எடுத்துக்கொண்டது, மும்பையின் தாராவி பகுதியில் உள்ள தமிழர்களோடு எடுத்தது என்று விதவிதமாய் புகைப்படங்கள்....பார்த்துக்கொண்டே வந்தவள் ஒரு புகைப்படத்தைப் பார்த்ததும் நிமிர்ந்து இவளைப் பார்த்தாள். அது கல்லூரி காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு குரூப் போட்டோ. அதில் ஒரே ஒரு முகத்தின் மேல் மட்டும் கருப்பு மை பூசப்பட்டிருந்தது. சின்னு நிமிர்ந்து புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

”ஏன் இப்படி கிறுக்கி வச்சுருக்கே?’’

‘’அது எதுக்கு இனிமே? பழசை நினைவுபடுத்தும் எதுவுமே வேணாம்  அதான் கருப்புப்பேனாவால் கிறுக்கி முகத்தை மறைச்சு வச்சிருக்கேன். கிழிச்சுப் போட்டுடலாம்னு நினைச்சேன். ஆனா மத்தவங்க முகத்தை நான் பார்க்கணுமில்லையா? அதனால தான் வச்சிருக்கேன்’’

அனு சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டு கொஞ்ச நேரத்தில் உறங்கிப் போனாள்.  

கனவு காணத் தொடங்கினாள் அனு. கனவில் ஜேம்ஸ் தூரத்தில் புள்ளியாய்த் தெரிய, செல்வி சற்று தொலைவில் நிற்கிறாள். சீனு இவளைப் பார்த்து புன்னகைத்து அருகில் வந்து அவள் கரத்தை எடுத்து தன் கைகளுக்குள் பொத்திக் கொள்கிறான். ஒரு வெப்பக்கடத்தி போல அவன் கைகளின் சூடு இவள் உடலில் பரவ, நிஜத்தில் இவள் உடல் சிலிர்த்தது. சட்டென்று சீனு காணாமல் போய்... அம்மாவும் அப்பாவும! இவளைக் கண்டதும் வழக்கம் போல அழுகிறார்கள். 

கனவு நீண்டு கொண்டிருக்கிறது!

Friday, October 14, 2011

முகவரியற்றவள்

எங்குமிருப்பேன்
நேற்று அங்கே
இன்று இங்கே
நாளை எங்காவது
நான்கு சுவர்களும் மேற்கூரையும்
எனக்கானதல்ல

அணை கட்ட முயல்கிறாய்
பாதாளத்தில் தள்ளுகிறாய்
மணலைத் தின்று செரிக்கும் சமுத்திரமும்
புதையல்களோடு வருபவளும் நான்

கருமையைப் பூசுகிறாய்
கடுங்குளிர் காற்றைத் திருப்புகிறாய்
இருள்
துருவப் பறவை
இரண்டும் நான்

புனைவுகளைத் தின்கிறாய்
புதைகுழிக்குள் தள்ளுகிறாய்
கனவுகளின் தொழிற்சாலை
ஈர்ப்பு விசைத் தத்துவத்திற்கு சவாலும் நான்



சுவாசத்தைத் திருடுகிறாய்
இடுகாட்டில் தள்ளுகிறாய்
சகல உயிர்களுக்குமான மூச்சுக் காற்றும்
எகிப்தியப் பிரமிடுகளில் வாழ்பவளும் நான்

அனலைக் கக்குகிறாய்
கிழிந்த என் உடுப்புகளை எள்ளி நகையாடுகிறாய்
அணைக்க முடியா நெருப்பும்
நிர்வாணசாந்தி அடைந்தவளும் நான்

எனக்கு முகவரியளிக்க முயல்கிறாய்
புவிக் கோளத்தின் கானகங்களில் வேட்டையாடி
இறைச்சியையும் காய்கனிகளையும் கொணர்ந்து
கார்முகிலில் நீரெடுத்து
சூரியனின் தகிப்பில் உணவு சமைத்து
சந்திரனின் முதுகிலமர்ந்து உண்டு களித்து
வெண் பஞ்சு மேகப் பொதிகளில் உறங்கியெழுந்து
நட்சத்திரங்களுக்கிடையே அண்டவெளியில் தாவி விளையாடி
கோள்களுக்கிடையே ஊஞ்சல் கட்டியாடுகையில்
மின்னல் விழுதைப் பிடித்து மீண்டும் பூமிக்கு வந்து
இப்பிரபஞ்சத்தை இணைப்பவள் நான்
பிரபஞ்சம் முழுவதும் என் வாழிடம்

என் காலத்தைப் பறிக்காதே
நானொரு சகாப்தம்.

Friday, October 07, 2011

வாச்சாத்தி வலி!

நின்று வென்ற நீதி!

ர்மபுரி மாவட்ட நீதிமன்ற வளாகம். அந்தத் தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் கூடியிருந்த வாச்சாத்தி கிராம மக்களின் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. காலம் கடந்து தீர்ப்பு வந்திருந்தாலும், 19 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைத்ததாகவே அவர்கள் எண்ணினர்.

 ''அந்தக் கண்ணீர் ஆனந்தக் கண்ணீரா, துயர நினைவுகளால் உருவான கண்ணீரா என்றெல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடு இருந்தோம்'' என்கிறார் 19 ஆண்டுகளாகப் பல வகைகளிலும் போராடி இந்தத் தீர்ப்பைப் பெற்றுத் தந்திருக்கும் மலைவாழ் மக்கள் சங்கத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான பெ.சண்முகம்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 269 பேர். இவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். எஞ்சிய 215 பேரையும் குற்றவாளிகள் என்று அறிவித்து, அவரவர் செய்த குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே இருக்கிறது வாச்சாத்தி. சந்தனக் கட்டைகளைத் தேடப் போன வனத் துறையினரும் காவல் துறையினரும் வருவாய்த் துறையினரோடு கூட்டணி அமைத்துக்கொண்டு, 1992-ம் ஆண்டு ஜூன் 21, 22, 23 தேதிகளில் இங்கு நடத்திய கொடூரத் தாக்குதல்களும் பாலியல் வன்முறைகளும் அச்சில் ஏற்ற முடியாதவை. சாட்சியம் கூறிய பெண்களின் வாக்குமூலங்களை வாசிக்கக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு வக்கிரத்தை அரங்கேற்றியது அரச அதிகாரம்.

''இந்திய நீதித் துறை வரலாற்றிலேயே இப்படி ஒரு தீர்ப்பு வந்தது இல்லை. இதில் புலனாய்வு செய்த சி.பி.ஐ-யின் பங்கு மிக முக்கியம். அதனாலேயே சி.பி.ஐ-க்கு சிறப்புத் தொகையாக ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டது. இதுவும் நீதித் துறைக்குப் புதியதுதான். ஒரே ஒரு ஏமாற்றம், பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களைத் தவிர, பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கவில்லை'' என்று மகிழ்ச்சிக்கு இடையே சின்ன ஆதங்கம் தெரிவிக்கிறார் சண்முகம்.


''1992-ல் அந்தக் கொடூரம் அரங்கேறி 25 நாட்களுக்குப் பிறகுதான் நாங்கள் கிராமத்துக்குள் சென்றோம். மயானம்போல் இருந்தது கிராமம். ஒருவர்கூட ஊரில் இல்லை. எல்லா வீடுகளும் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. ஊரே இருக்கக் கூடாது என்கிற வெறியோடு அங்கே ஒரு கொடூர தாண்டவம் நடந்திருப்பதை உணர முடிந்தது. ஒரு சந்தில், ஒரே ஒரு பெண் மட்டும் ஒளிந்து இருந்தார். எங்களைப் பார்த்ததும், நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று உணர்ந்ததும் எங்கள் அருகில் வந்தார். அவர் சத்துணவு ஆயா என்பதால், அவரைச் சிறையில் அடைத்தால் பிரச்னையாகிவிடும் என்று அவரை மட்டும் வெளியே விட்டு வைத்திருந்தது காவல் துறை. அவர் தான் காட்டுக்குள் 25 நாட்களாக ஒளிந்திருந்த ஊர் மக்களில் 40 பேரை அழைத்து வந்து எங்களிடம் உண்மை நிலையைச் சொல்ல வைத்தார்.

தேடுதல் வேட்டைக்கு வந்த காவலர்கள் ஒரு மரத்தடிக்கு இழுத்து வந்து எல்லோ ரையும் அடித்து உதைத்து இருக்கின்றனர். அவர்களில் சில பெண்களை மட்டும் வண்டியில் ஏற்றி ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று சிதைத்து இருக்கிறார்கள். அவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக மீண்டும் ஊருக்குள் வந்தபோது, உறவினர்களிடம் ஒப்படைக்காமல் வனத் துறை அலுவலகத்தில் அடைத்துவிட்டனர். அதனால், அவர்களுக்கு நேர்ந்த கொடுமை ஊருக்குள் எவருக்கும் தெரியாமலேயே போய் விட்டது.

அங்கும் அவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும் வக்கிரக் கொடுமைகளும் தொடர்ந்தபடியே இருந்திருக்கின்றன. காவலர்கள் முன்னிலையிலேயே பெண்களைச் சிறுநீர் கழிக்கச் சொல்வது, சாப்பிட்டு முடித்த எச்சங்களைக் கொடுத்து உண்ணச் செய்வது என்று இயல்பான மனித மனம் யோசிக்க முடியாத வன்முறைகள் அவை!

அப்படியே சத்தம் காட்டாமல் அவர் களை சேலம் சிறையில் அடைத்துவிட்டார்கள். அந்தப் பெண்களைப் பார்க்க நாங்கள் சிறைக்குச் சென்றபோது, அங்கிருந்த பெண் வார்டன் ஒருவர் மனம் பொறுக்காமல் நடந்த கொடுமைகளை எங்களிடம் விவரித்தபோதுதான், சம்பவங்களின் தீவிரம் எங்களுக்கு உறைத்தது!

அந்த 18 பெண்களில் ஒரு பெண் நிறைமாதக் கர்ப்பிணி. அவருக்கு சிறையிலேயே பிறந்த குழந்தைக்கு 'ஜெயில் ராணி’ என்று பெயர்வைத்தார். முதிய பெண் ஒருவர், உடல் ஊனமுற்ற பெண் எனப் பலவீனமான பலர் அந்தக் கும்பலில் அடக்கம். அதில் எட்டாம் வகுப்பு மாணவியான 13 வயதே ஆன செல்வி என்கிற சிறுமி, 'அன்னிக்கு எனக்கு ஸ்கூல் லீவு சார். அன்னிக்கு மட்டும் எனக்கு ஸ்கூல் இருந்து இருந்தா, எனக்கு இப்படி ஆகியிருக்காது’ என்று கேவிக் கேவி அழுதபோது, அதிர்ச்சி யில் உறைந்துவிட்டோம் நாங்கள்.  எல்லாக் குழந்தைகளுக்கும் விடுமுறை என்பது சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆனால் அவளுக்கு மட்டும்...'' என்று நிறுத்தியவர், அதற்கு மேல் பேச முடியாமல் குரல் உடைந்து கண்ணீர்விட்டார்.

''வழக்குத் தொடுத்தோம். உயர் நீதிமன்றமோ 'அரசு அதிகாரிகள் இப்படி எல்லாம் நடந்துகொண்டு இருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை’ என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. கீழ்வெண்மணி வழக்கில் 'கோபாலகிருஷ்ண நாயுடு காரில் போகிறவர். சமூக அந்தஸ்து உள்ளவர். அவர் கொலை செய்திருக்க மாட்டார்’ என்று சொன்ன நீதித் துறைதானே? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலா ளராக இருந்த தோழர் ஏ.நல்லசிவன் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்குத் தொடந்தார்.

எங்குமே இல்லாத அதிசயமாக இந்த வழக்கில்தான் இன்று வரை காவல் துறை எஃப்.ஐ.ஆர். என்ற ஒன்றைப் போடவே இல்லை. 1,345 பேரை நிறுத்தி 1995-ல் நடந்த பிரமாண்ட அடையாள அணிவகுப்பில் ரகளை செய்தார்கள். நீதிபதியின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் அடையாள அணிவகுப்பு ரத்தானது. அதன் பின் உயர் நீதிமன்றம் தலையிட்டு, அடையாள அணிவகுப்பு நடத்தியாக வேண்டும் என்று கண்டிப்பாகச் சொன்னது. வேறு வழி இன்றி, 50... 50 பேராக அணிவகுப்பு நடத்தப் பட்டு, அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்டினார்கள்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கைக் கையாண்ட வழக்கறிஞர்கள் வைகை, சம்கிராஜ், இளங்கோ ஆகியோரின் பங்கு மகத்தானது. இந்த வழக்கை நடத்தக் கூடாது என்று பலப் பல கொலை மிரட்டல் கள், கொலை முயற்சிகள், தாக்குதல்களுக்கு இடையில் நாங்கள் கரை சேர்ந்திருக்கிறோம்.

அன்றைய அ.தி.மு.க. அரசில் வனத் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் இந்தக் கொடூரங்களை மூடி மறைத் தார். தமிழகமே கொதித்து எழுந்தபோதும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அது குறித்துச் சலனமே இல்லாமல் இருந்தார். இப்போதும் தீர்ப்பு வந்த பின்னர் அது குறித்துப் பெரிதாக அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை!'' என்று முடித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது எப்படி இருக்கிறார் கள்?

''வாச்சாத்திக் கொடூரங்களைப் பொது மேடைக்குக் கொண்டுவந்தால், அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்கிற உறுத்தல் இருந்தது. ஆனால், அவர்கள் அனைவரும் இன்று திருமணமாகி நல்ல நிலையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது'' என்கிறார் சண்முகம்.

அவர்களில் ஒருவரான பரந்தாயியிடம் பேசியபோது, ''தீர்ப்பு கிடைச்சப்போ எல்லாரும் கண்ணீர்விட்டோம். தண்டனை குறைவா இருக்குறதாத்தான் நாங்க நினைக்கிறோம். ஏன்னா, நாங்க அத்தனை கொடுமைகளை அனுபவிச்சு இருக்கோம். அவங்கள்லாம் ஜாமீன்ல வெளில வந்துட் டதாச் சொல்றாங்க. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 15,000 ரூபாய் தர்றதா சொல்லி இருக்காங்க. எங்க 20 வருஷக் கஷ்டத்தை இந்தக் காசு சரிபண்ணிடுமா?'' என்று கேட்கிறார்.

பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணான அமரக்கா, ''இந்தத் தண்டனை பத்தாது. எங்க ஊர் அத்தனை பாடுபட்டு இருக்கு. நான் இப்போ உள்ளாட்சித் தேர்தல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பா நிக்கிறேன். எதிர்த் தரப்புல ஓட்டுக்குக் காசு கொடுக்குறதா பேச்சு இருக்கு. மக்கள் காசுக்கு ஆசைப்படாம இருந்தா நான்தான் ஜெயிப்பேன்'' என்கிறார் உறுதியுடன்.

பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஊர் மக்களில் ஒருவராக இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் ஒரு பதவியைப் பெறுவதற்கு அமரக்காவுக்கு எத்தனை இடர்பாடுகள்? ஆனால், வாச்சாத்தி விவ காரத்தையே மூடி மறைத்த அப்போதைய அமைச்சர் செங்கோட்டையன் இப்போதும் அமைச்சர் என்பது எத்தனை முரண்!

பரமக்கா ஜெயிக்கிறாரோ இல்லையோ, போராடி அநீதியை வென்ற வாச்சாத்தி மக்களுக்கு ஒரு சல்யூட்!

நன்றி : ஆனந்த விகடன்

Monday, October 03, 2011

பதற வைக்கும் பரமக்குடி காட்சிகள்


வேனுக்குள் துடித்த முத்துக்குமாரின் உயிர்..
 
மிழகத்தையே உலுக்கி எடுத்துவிட்டது பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம். அதில் நிகழ்ந்த மரணங்கள், கேள்விப்படுகிறவரின் கண்களில் ரத்தம் கசிய வைப்பவை. இறந்துபோன சிலரது உறவுகளையும் சுற்றத் தாரையும் சந்தித்தோம். 

அந்தப் பெண் நிலை குத்திய பார்வையோடு உட்கார்ந்து இருக்க... கையில் வளைகாப்பு நடந்த அடையாளமாகக் கண்ணாடி வளையல்கள். இன்னோர் உயிரையும் சுமந்துகொண்டு இருக்கிறாள். ஆனால், அந்த உயிரைத் தந்த ஜெயபால் உயிரைக் காவல் துறை பறித்துவிட்டது. அவள் பெயர் காயத்ரி. திருமணமாகி ஓர் ஆண்டுதான் ஆகிறது. கலப்பு மணம் புரிந்த தம்பதி. பரமக்குடி - ராமநாதபுரம் சாலையில் உள்ள மஞ்ஞூரில் உள்ளது அவர்கள் வீடு. நிறைமாதக் கர்ப்பிணியாதலால் பரமக் குடியில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்ட மனைவியைப் பார்க்க பரமக்குடிக்கு வந்த ஜெயபாலுக்குதான் பரிசாகக் கிடைத்தது, துப்பாக்கிக் குண்டு!

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர் கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய உணமை அறியும் குழுவில் ஒருவராக, ஜெயபாலின் உறவினர்களை  சந்தித்தோம்.

''எம் புள்ள அந்த போஸ்ட் மரத்துல பாதி இருப்பான். ஆயுதம் இல்லாம வந்தா, பத்து கான்ஸ்டபிள்னாலும் சமாளிப்பான். பாவிக, அவனைத் துப்பாக்கியால சுட்டு... அப்படியும் சாகலைன்னு, மிதிச்சுக் கொன்னுருக்காங்க. என் புள்ளய சாக் கடையில தூக்கிப் போடப்போனப்பத்தான் 'ஏன்டா இப்புடி பண்றீங்க?’ன்னு ஒருத்தர் கேட்டிருக்கார். அந்த வயசானவரையும் கொன்னுட்டாங்க...'' என்று அரற்றுகிறார் ஜெயபாலின் அப்பா பாண்டி.

''நான் ஒரு பழ வியாபாரிங்க. என் பொண்ணை ஸ்கூலுக்குப் போகையில பார்த்துட்டு, என்கிட்ட வந்து 'கல்யாணம் பண்ணிக்கிறேன்’னு கேட்டுச்சு. மொதல்ல முடியாதுன்னேன். அந்தப் புள்ள என் பொண்ணு மேல ரொம்ப ஈர்ப்பா இருந்ததைப் பார்த்துட்டு, 'வேற சாதின்னாலும் பரவால்ல’ன்னு ஒப்புக்கிட்டுக் கல்யாணம் பண்ணிவெச்சேன். என் பொண்ண நல்லா வெச்சுக்குச்சு. ஆனா, இப்படி அல்பாயுசுல அநியாயமாப் போகும்னு யாரு நெனச்சா!'' என்று கலங்கினார் காயத்ரியின் தாய்.

இத்தனை பேர் பேசினாலும், காயத்ரி மட்டும் எதுவும் பேசவில்லை. பள்ளியில் படிக்கும்போது தடகள விளையாட்டு வீராங்கனை! ''அரசு கொடுத்த ஒரு லட்சம் ரூபாயைவைத்துக்கொண்டு இந்தப் பெண் எத்தனை நாளைக்குக் காலம் தள்ள முடியும்? அரசு வேலை ஏதாவது கிடைக்காதா..?'' என்பது ஜெயபால் தரப்பின் கோரிக்கையாக இருக்கிறது.

ஜெயபால், புதிய தமிழகம் கட்சியின் உறுப்பின ராக இருந்தாலும், தீவிரமாக அரசியலில் ஈடுபடு பவர் கிடையாது. 'பரமக்குடி சென்றவரைக் காணவில்லை’ என்று அவரது செல்போனுக்குத் தொடர்புகொண்டபோது, ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந் தது. குடும்பமே தவித்து நின்றிருக்கிறது. காலையில் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்து, விஷயத்தைத் தெரிந்துகொண்டவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ஓட, மாலை 5.30 மணி வரை முகத்தைப் பார்க்கவிடாமல் காவல் துறை அலைக்கழித்திருக்கிறது.

ஒரே பிள்ளையைப் பறிகொடுத்த ஜெயபாலின் தாய், எதுவுமே பேசாமல் வெறித்தபடி இருந்தார். இது மஞ்ஞூரில் நடந்த கதை. கனத்த மனதோடு, அடுத்த கிராமமான காக்கனேந்தல் போனோம்.
அங்கே இருந்து ஒரு திருமணத்துக்குச் சென்றவர், பிணமாய்த் திரும்பி வந்த சோகத்தை சுமந்துகொண்டு இருந்தது அந்த கிராமம்.

நண்பர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்ற வெள்ளைச்சாமியும் சின்னாளும் பரமக்குடிக்கு வரும்போது துப்பாக்கி சூடு நடக்கிறது. மறுநாள் காலை வரை இவர்கள் இருவரும் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. வெள்ளைச்சாமியின் பெயர் மட்டும் தொலைக்காட்சியில் இறந்தவர்கள் பட்டியலில் அறிவிக்கப்பட, சின்னாளின் கதி என்ன என்று கிராமமே தேடுகிறது. அவரும் இறந்துவிட்டதாக முடிவு செய்து குடும்பத்தினர் அழுதுகொண்டு இருந்த போது... பரமக்குடியில் இருந்து 25 கி.மீ. தூரம் நடந்தே தனது கிராமத்துக்கு வந்த 65 வயது சின்னாளைக் கண்டதும், கிராமமே சூழ்ந்துகொள்கிறது.


என்ன நடந்தது என்று சின்னாளிடம் கேட்டோம். ''ரெண்டு பேரும் பரமக்குடி வந்தப்போ, சாலை மறியல் நடந்துது. நாங்க அங்கே என்னன்னு புரியாமப் பார்த் துட்டே போனோம். எனக்கு பத்தடி முன்னால வெள்ளைச்சாமி போக... நான் பின்னால போனேன். திடீர்னு நான் பார்த்துக்கிட்டு இருக்குறப்பவே பெரிய கம்பால போலீஸ் அவரை அடிச்சுது. உடம்புல ஒரு இடம் விடலை. அத்தனை அடி..! நான் பயந்து போய் வாயடைச்சு நிக்க... என் காலிலும் போலீஸ் அடிச்சுது. நான் உடனே தலைதெறிக்க ஓடி, பக்கத்துல உள்ள கோயில் பக்கம் ஒளிஞ்சு நின்னு பார்த்தேன்.

வெள்ளைச்சாமியை ஆத்திரம் தீர்ற வரைக்கும் அடிச்சாங்க. வெள்ளைச்சாமியைத் துப்பாக்கியால சுடலை. அடிச்சேதான் கொன்னாங்க. என் கண்ணாலயே பார்த்தேன். அப்புறம் போலீஸே தூக்கிட்டுப் போய் ஒரு வண்டியில ஏத்துச்சு. நான் வெளிய வரப் போனேன். அப்போ அங்கே பக்கத்து வீட்டுல இருந்த ஒரு பொம்பளைப் புள்ள, 'அங்கே போகாதீங்க. உங்களையும் அடிச்சே கொன்னுடுவாங்க’ன்னு அவுங்க வீட்டுக்குள்ள கூப்பிட்டு வெச்சுருந்துச்சி. அந்தப் புள்ள இல்லேன்னா, நானும் அப்பவே செத்திருப்பேன். பஸ் ஓடலைங்கறதால மறுநாள் நடந்தே ஊருக்கு வந்தேன்...'' என்றார் திகிலாக.

அடுத்து இன்னொரு கிராமத்தின் துயரம் இது. காக்கனேந்தலில் இருந்து நயினார் கோவில் போகும் வழியில் இடதுபுறச் சாலையில் இருக்கிறது பல்லவராயனேந்தல். அங்கிருந்து தன் மகன் திருமணத்துக்கு, 11-ம் தேதி பரமக்குடியில் உள்ளவர்களுக்குப் பத்திரிகை வைக்கச் சென்றார் கணேசன். போன இடத்தில் துப்பாக்கி சூட்டுக்குப் பயந்து ஓடிய அவரது நெஞ்சுப் பகுதிக்குக் கீழே குண்டு பாய்ந்து இறந்துபோனார்.

அவர் குடும்பத்தார் நம்மிடம், ''அவர் இறந் தாலும் அந்த சோகத்தி லும், கல்யாணத்தை முடிச் சிட்டோம். நின்னுருச்சின்னா அந்தப் பொண்ணுக்கு மறுபடியும் கல்யாணங்கிறது கனவாப் போயிருமே... அவர் இருந்து நடத்திவெச்சிருக்க வேண்டிய கல்யாணம் இது. ஆனா...'' என்று மேற்கொண்டும் பேச முடியாமல் அழுதனர்.

அடுத்த உயிர்ப் பலி... வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர். தன் மகளைப் பார்ப்பதற்காக பரமக்குடி வந்த பன்னீர், செப்டம்பர் 11-ம் தேதி காலை 11.30 மணிக்கு தன் மகள் ரெபெய்க்காளிடம், ''இங்க பதற்றமா இருக்கு. கவலைப்படாதே! வந்துடுறேன்...'' என்றிருக்கிறார். ஆனால், அதன் பின் கொஞ்சநேரத்தில் செல்போன் அணைந்து போக... தந்தையைக் காணாமல் இவர் தேட... இரவு 7.30 மணிவாக்கில் மீண்டும் செல்போன் ஆன் செய்யப்பட்டு... போலீஸ்காரர் ஒருவர்தான் பன்னீரின் பெயர், ஊர் என்று எல்லா விவரங்களையும் அவரது மகளிடம் கேட்டிருக்கிறார்.

ரெபெய்க்காள் நம்மிடம், ''எல்லா விவரத்தையும் கேட்டுட்டு, அப்பா இறந்த சேதியைக்கூட போலீஸ் சொல்லலை. அப்பாவின் நெற்றியில் குண்டு பாய்ந்த காயம் இருந்தது.. உடல் பூராவும் லத்தியால் அடிச்ச காயங்களும் இருந்துச்சு...'' என்று கேவினார்.

சடையனேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமாரும் இந்த சம்பவத்தில் உயிர்விட்டவர். இவரது உடலைக் காட்டுகிறேன் என்று சிவகங்கை, இளையான்குடி, ராமநாதபுரம், மதுரை என்று குடும்பத்தினரை இழுத்தடித்திருக்கிறது போலீஸ். 11-ம் தேதி இம்மானுவேல் குருபூஜையில் கலந்துகொள்ள பரமக்குடி சென்றார் முத்துக்குமார்.  இவருடைய வலது பக்க விலாவில் குண்டு பாய்ந்து... போலீஸ் அவரை இளையான்குடி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. அப்போதும் அவருக்கு உயிர் இருந்திருக்கிறது. முதலுதவி செய்யப்பட்டு மதுரைக்கு மாற்றப்பட்டார். அங்கே இரவு 9.30 மணி வரை உயிருடன் இருந்தவர், அதன் பின்தான் இறந்திருக்கிறார்.
அடுத்ததாக இறந்துபோன தீர்ப்புகனி, கீழக்கொடும்பளூரைச் சேர்ந்தவர். பரமக்குடிக்கு காலையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர், துப்பாக்கிச் சூடு நடப்பதைப் பார்த்தவுடன் அப்படியே தனது வாகனத்தை அங்கேயே ஓர் இடத்தில் விட்டுவிட்டுக் கிளம்பி இருக்கிறார். நிலைமை ஓரளவு சரியானது போல் தெரிந்து, மாலை 4 மணிக்கு தன் வாகனத்தை எடுக்க வந்தவரைப் பிடித்துக்கொண்டது போலீஸ். அவரை அடித்து இழுத்துப் போனதைப் பார்த்ததாக அவருடைய பெரியப்பா எஸ்.பி.முனியாண்டி நம்மிடம் சொன்னார்.

''கை ரெண்டையும் பின்னாடி கட்டிவெச் சுட்டு, லத்தியால அடிச்சுக்கிட்டே போலீஸ் வண்டியில அவனை ஏத்துனதை நான் பார்த்தேன். அப்புறம் ஒரு தகவலும் இல்ல. மதுரையில் தீர்ப்புகனி உடல் இருப்பதாத் தகவல் தெரிஞ்சு போய்ப் பார்த்தப்போ, அவன் உடம்புல இருந்த துணி எல்லாம் காணோம். அவனோட பனியனை மட்டும் இடுப்பில் சுத்தியிருந்தாங்க. மண்டையில் அடிச்சு, பின்னந்தலையே பிளந்து இருந்துச்சு. குதிகாலில் சின்னதா ஒரு ரத்தக் காயம். குண்டு பாய்ஞ்ச அடையாளமே இல்லை!'' என்றார் சோகமாக.

''இந்தத் திட்டமிட்ட தாக்குதல் தேவைதானா?'' என்ற கேள்வியுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராயை சந்தித்தோம்.
''துப்பாக்கி சூடு நடந்தது எனக்குத் தெரியாது. நடந்து முடிந்தவுடன் தாசில்தார் எனக்குத் தகவல் சொன் னார். நான் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடவில்லை. இந்த நிலைமையை வேறு மாதிரி கையாண்டிருக்கலாம் என்பதை விவாதரீதியாக ஒப்புக் கொள்கிறேன். ஆனால், துப்பாக்கிச் சூட்டின் பின்னால் சதி இருக் கிறது என்கிற சந்தேகம் தேவையற்றது. பரமக்குடி நகரின் பாதுகாப்புக்காகவே போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது!'' என்று மட்டும் சொன்னார்.

நடந்து முடிந்த துப்பாக்கி சூட்டின் முதல் தகவல் அறிக்கையில், தானே முதலில் சுட்டதாக ஒப்புக்கொண்டு இருக்கும் பரமக்குடி இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை சந்தித்தோம். ''விசாரணை கமிஷன் அமைத்த பின்னால், நான் எதுவும் பேசக் கூடாது!'' என்றார். ''மாவட்ட ஆட்சியர் இது குறித்துப் பேசுகிறார். நீங்கள் பேச மறுக்கிறீர்களே?'' என்று கேட்டபோது, ''அவர் சம்பவத்தோடு சம்பந்தப்படவில்லை. நான் நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பதால் பேச முடியாது!'' என்றார் திட்டவட்டமாக. தனது முதல் தகவல் அறிக்கையில், 'சாலை மறியல் செய்தவர்கள் தாக்கியதில் தனக்குப் பலத்த காயம் பட்டதாகவும், அதன் காரணமாகவே துப்பாக்கி சூடு நடத்த வேண்டி வந்தது’ என்றும் தெரிவித்திருக்கிறார் சிவக்குமார்.

அரசாங்கம் அமைத்துள்ள விசாரணை அறிக்கை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்!

கவின் மலர்
நன்றி : ஜூனியர் விகடன்

Thursday, September 29, 2011

அண்ணன்

அண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இருக்காது. அண்ணன் என்று தான் நினைக்கத்தோன்றும் எப்போதும். ‘அண்ணன் இப்ப என்ன பண்ணிக்கிட்டுருப்பான்?’, ‘சாப்பிட்டிருப்பானா?’, ‘நான் தினமும் நினைச்சுப் பார்க்குற மாதிரி அண்ணனும் நினைச்சுப் பார்ப்பானா?’ இப்படி பல எண்ணஙக்ள் ஓடும் உள்ளுக்குள். 

அவன் தான் எனக்கு ஒரே ஆறுதல். என்ன கஷ்டம் வந்தாலும் சொல்லி அழ, ஆறுதல் தர அவன் ஒருவன் தான் இருந்தான் எனக்கு. தோழிகளோடு சண்டை, ஆசிரியர் திட்டுகிறார், அம்மாவோடு பிரச்சனை, அப்பா பேசுவதில்லை என்று எல்லா கஷ்டங்களுக்கும் உடனுக்குடன் தீர்வு சொல்கிறானோ இல்லையோ, எனக்கு ஆறுதலாவது சொல்வான் அண்ணன். என்  தோழிகளுக்கும் அவன் அண்ணனாகிப் போனான். அவர்களும் அவனை முத்து அண்ணன் முத்து அண்ணன் என்று சுற்றி வருவது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனாலும் பொறுத்துக் கொள்வேன்..

ஊருக்கே தெரிந்திருந்த்து எங்கள் நட்பு. இல்லை...இதை நட்பு என்று சொன்னால் அதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இது நட்பு இல்லை. அண்ணன் மேல் வைத்திருக்கும் அன்பு ரொம்பவே புனிதமானது.. என்னுடன் கூடப் படிக்கும் கார்த்திக்கின் மீது உள்ளது நட்பு என்பதையும், அது போன்றதல்ல அண்ணனின் மீதான அன்பு என்பதையும் நான் உணர்ந்தே வந்திருக்கிறேன்.

”என் மேல் ஏன் உனக்கு இத்தனை பாசம்?” – இது அடிக்கடி அண்ணன் கேட்கும் கேள்வி. நான் சிரித்துக்கொள்வேன். சும்மா வந்துவிடுமா இந்தப் பாசம்? சின்ன வயதிலிருந்தே அண்ணன் இல்லையே என்கிற என்னுடைய ஏக்கம் என்னை விட வேகமாக வளர்ந்த்து. அண்ணன் உள்ள தங்கைமார்களைப் பார்க்கும்போதெல்லாம் பொறாமையா ஏக்கமா என்று புரியாத ஒரு உணர்வு என்னை ஆட்கொள்ளும். பள்ளிக்கு ஒன்றாக வரும் அண்ணன் – தங்கையைப் பார்க்கும்போதும், சைக்கிளில், வண்டியில் வைத்து ஊரில் ஏதோ ஒரு அண்ணன் தன் தஙகையைக் கூட்டிச் செல்லும்போதும் எனக்கு மனதைப் பிசையும். எனக்கு ஒரு அண்ணன் இல்லாமல் போயிட்டானே? சின்ன வயதில் அம்மாவிடம் போய் ஒரு நாள் கேட்டிருக்கிறேன் “எனக்கு ஒரு அண்ணன் பெத்துக் குடும்மா”  அம்மா சிரிக்கத் தொடங்கி விட்டது. நான் கோபித்துக்கொண்டு சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்தேன். “அண்ணனையெல்லாம் பெத்துத்தர முடியாது. உனக்கு முன்னாடியே பிறந்தாத்தான் அண்ணன். உனக்கு அப்புறம் பிறந்தா தம்பி தங்கச்சி தான் பொறக்கும்” என்று அம்மா விளக்க ஏமாற்றத்தில் முகம் சுண்டிப் போக சாப்பிட மாட்டேன் என்று அன்றைக்கு அழுது அடம் பிடித்தது இன்னமும் நினைவிருக்கிறது.

சினிமாவில் அண்ணன் – தங்கை பாசம் தொடர்பான பாச மலர், பாசப்பறவைகள் என்று படங்களையெல்லாம் பார்த்துவிட்டு அண்ணன் இல்லாத ஏக்கத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தனிமையில் நான் அழுததுண்டு. எனக்கு ஒரு அண்ணன் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பதுண்டு. அவனோடு விளையாடி, சண்டை போட்டு, சினிமாவுக்குப் போய், அவன் பாடம் சொல்லிக் கொடுத்து படித்து, ஒன்றாகவே திரிந்து, பாட்டு கேட்டு – இப்படி என்னவெல்லாம் செய்திருக்க முடியும்? ஏக்கத்தில் எத்தனையோ நாட்கள் பெருமூச்சு விட்டிருக்கிறேன். இந்த ஏக்கத்தையெல்லாம் தீர்க்க வந்தவனாகவே முத்து தெரிந்தான் எனக்கு. கார்த்திக்கின் நண்பனாய் வந்தான் முத்து. ஆனால் கார்த்திக்கை விட வயதில் பெரியவன். முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்த நான் என்னைப் போலவே அவனுக்கும் கவிதை பிடிக்கும் என்று அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன். அதன் பிறகு கவிதை நூல்கள் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினோம். எங்கள் புத்தகங்களை ஒருவர் மாற்றி ஒருவருக்குக் கொடுப்பதில் கார்த்திக் தான் தூது. அவன் மூலமாகவே புத்தகஙக்ள் போய்ச் சேர்ந்தன. இடையில் கார்த்திக் சில நாட்கள் புத்தகத்தை வைத்து அவன் படித்துவிட்டு அப்புறம் மெதுவாக்க் கொண்டுச் சேர்ப்பான்.


“எனக்கு வேற வேலையில்லைன்னு நெனைச்சீங்களா ரெண்டு பேரும்?” என்று அவ்வபோது அலுத்துக்கொண்டாலும் தொடர்ந்து புத்தகத்தூது அவன் மூலமாகவே நடந்தது. நானும் அண்ணனும் வாரத்தில் ஒரு நாள் தான் சந்தித்துக்கொள்ள முடிந்தது. ஏனெனில் ஊரின் அந்தக் கடைசியில் என் வீடும், இந்தக் கடைசியில் அண்ணனின் வீடும் இருந்தது.

ஒரு நாள் கார்த்திக் என்னை அண்ணனின் வீட்டுக்கு அழைத்துப் போனான். அண்ணன் அப்படியொன்றும் வசதியானவன் இல்லை. என் அப்பா அரசாங்க வேலையில் இருக்கிறார். அவனுக்கு அப்படியில்லை. வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு அவனுக்கிருந்த்து. அவன் வீட்டில் பெரும்பாலும் புத்தகங்கள் நிறைய வைத்திருந்தான். அத்தனையையும் அள்ளிக்கொண்டு வந்து விடலாமா என்று வெறி வந்தது எனக்கு. அத்தனையும் கவிதைத் தொகுப்புகள். ஒருசிலவற்றை எடுத்து வாசித்தபோது எனக்குச் சற்றுப் புரியாத மாதிரி இருந்த்து. என்ன இருந்தாலும் அண்ணன் என்னை விட புத்திசாலி என்பது என்னுடைய திடமான எண்ணமாக இருந்தது. அண்ணனின் கையெழுத்து முத்து முத்தாக மிக அழகாக இருக்கும். எந்த அடித்தல் திருத்தல் இல்லாமல் அண்ணன் எழுதுவதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கும். 


எல்லா வயசுப்பசங்களுக்கும் போல அண்ணனுக்கு ஒரு காதலி இருந்தாள்.  இருவருக்கும் தீவிரமான காதல். நானும் கூட அவ்வபோது அவர்கள் இருவருக்கும் இடையே தூது போயிருக்கிறேன். நல்ல எலுமிச்சை நிறத்தில் இருக்கும் அந்தப் பெண். அண்ணனோ கருப்பு. சேர்ந்து நடந்தால் தி.மு.க. கொடி போலிருக்கும் என்று நான் கிண்டல் செய்வேன்.

‘’ரொம்ப கிண்டல் பண்ணாதே! உனக்கு எவன் வர்றான்னு நான் பார்க்கத்தானே போறேன்’’ என்று அண்ணன் கிண்டல் பண்ணினான். ஏனோ எனக்கு கார்த்திக்கின் முகம் மனக்கண்ணில் வந்து போனது. அண்ணனிடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்ல்வேயில்லை. கொஞ்ச நாளாக கார்த்திக்கைப் நினைத்தால் வித்தியாசமான ஏதோ ஒன்று தோன்றுகிறது. ஒருவேளை இதுதான் காதலோ? அண்ணனிடம் கேட்டாலென்ன? ஒரு டாக்டர் போல, எனக்கு என்ன செய்கிறது என்று பொறுமையாக்க் கேட்டுவிட்டு இது காதல் தான் என்று அடித்து சொன்னான்.

எனக்கு கார்த்திக் என்கிற பெயர் கொடுக்கும் இன்பம் வேறெதுவும் தரவில்லை. அவன் தூரத்தில் வந்தாலே படபடப்பாகி விடும். கிட்ட நெருங்கிப் பேசுகையில் வியர்த்தது. அவன் எப்போதும் போல தோளில் தட்டிச் சிரிக்கும்போது நரம்புகளுக்குள் ஏதோ ஒன்று பாய்ந்து பரவி ஓடி சிலிர்த்தது உடல். ஆனால் கார்த்திக் வெகு சீக்கிரமே என்னுள் நடந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டு விட்டது போல் தெரிந்தது. என் கண்களை ஒரு நாள் உற்றுப் பார்த்தான். எந்த வார்த்தையும் பேசாமலேயே என் விழிகளின் ஓரத்தில் மின்னிய காதலை அவன் கண்டுகொண்டு விட்டான். ஒரே ஒரு நொடி அவன் கண்களும் ஒளிர்ந்ததைப் பார்த்தேன். இது போதும்! அவனும் என்னைக் காதலிக்கிறான். அண்ணனிடம் சொல்லவேண்டும்.

உடனே ஓடினேன். சொன்னேன். ‘நான் பேசட்டுமா?’ என்றான். வேண்டாம் என்றேன். அன்றைக்கு அண்ணன் என் கையை எடுத்து தன் கைகளில் பொத்திக்கொண்டான். ‘கார்த்திக் நல்ல பையன். நல்ல சாய்ஸ்’ என்றவாறே என் கைகளில் மென்மையாக முத்தமிட்டு ‘எது வந்தாலும் பார்த்துக்கலாம். கவலைப்படாதே!’ என்றான்.

அன்றைக்கு பூராவும் மிதந்து கொண்டேயிருந்தேன். ஒரு வனாந்திரத்தில் இரண்டு பற்வைகள் பறந்துகொண்டிருக்கின்றன. ஒன்று நான். இன்னொன்று கார்த்திக். இப்படியெல்லாம் கனவு வந்த்து. மறுநாள் அவனைப் பார்க்கப் போனபோது இனம் புரியாத பயமும், கலக்கமும் எனக்குள் தளும்பிக்கொண்டிருந்தன. அதையும்மீறி ஒரு குறுகுறுப்பும், சந்தோஷமும் எட்டிப்பார்த்தன. என்னைப் பார்த்ததும் அவன் கண்கள் மீண்டும் ஒளிர்ந்தன. விழிகள் மின்னினாலும் அவன் இதழ்கள் என்னிடம் சரியாகப் பேசவில்லை. எனக்குக் குழப்பமாக இருந்தது. ஏன் என்பது புரியவில்லை. என்னாலும் முன்பு போல அவனிடம் இயல்பாக இருக்க முடியவில்லை. அவனுடன் இருக்க வேண்டும் போலிருந்தாலும் உடனே கிளம்பினேன். வழக்கமாக தோளில் தட்டி விடைகொடுக்கும் கார்த்திக் அன்று பேசாமல் இருந்தான். நான் இரண்டே இரண்டு நொடிகள் அவன் கைகள் என் தோளில் படுவதற்காய்க் காத்திருந்தேன். ஆனால் அது நிகழவில்லை. விருட்டென்று கிளம்பினேன். ஒருவேளை தப்பு செய்கிறேனா நான்? இது என்ன கொடுமை?  கார்த்திக் என் நண்பன். அவன் எனக்குக் கடைசி வரை வேண்டும். இந்த சனியன் பிடித்த காதலால் ஒருவேளை அவன் என்னுடன் பேசாமலிருந்து விடுவானா? இல்லை.. அவனுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. அவன் கண்களின் அந்த விருப்பத்தை நான் பார்த்தேன். ஆனால் அவன் இயல்பாக இல்லை. என்ன செய்யலாம்?

அண்ணனிடம் போய் நின்றேன். புலம்பினேன். ‘விடு! சொல்லிட்டே இல்ல. நான் பார்த்துக்குறேன்’ என்றான். மறுநாள் கார்த்திக் என்னைத் தேடி வந்தான். ’வா கார்த்திக்’ என்று நான் சொன்னது எனக்கே கேட்கவில்லை. அவன் முகத்தைப்பார்த்தேன். எனக்கு பெரும் ஏமாற்றமாய் இருந்த்து. அவன் கண்கள் ஒளிரவில்லை. எங்கே? கண்களைச் சுற்றிலும் வெள்ளி இழை போல மின்னும் அவன் காதல் எங்கே? தேடினேன். கருமை படர்ந்திருந்தன அவன் கண்கள். இரவு வெகுநேரம் தூங்காததன் அறிகுறியாய் இருந்தது அந்தக் கருமை. ‘உன்கிட்ட பேசணும்’ என்றான். ‘சொல்லு’ என்றேன். இதயம் நின்று பின் துடித்தது. ‘பாவி! என்ன சொல்லப் போகிறாய்!’ 


‘நான் கொஞ்ச நாளா வித்தியாசமா உணர்றேன். நீயும் தான் இல்லையா?’ என்றான்.

நான் பதிலேதும் சொல்லவில்லை.’இல்லை’ என்பதா?’ஆமாம்’ என்பதா?
‘இல்லைன்னு சொல்லாதே! நான் பாத்தேன். உன் கண்ல பாத்தேன்.’ என்றான். ஒரு வார்த்தை பேசாமல் கண்கள் பார்த்து காதல் உணர்வது சாத்தியம்தானா? 
அடுத்து சொன்னான்...’இது வேணாம்னு தோணுது. நாம் ஃபிரண்ட்ஸா இருக்கலாம்’  ஆயிரம் ஈட்டிகள் பாய்ந்தன எனக்குள். ‘உன் சாதிக்காரங்களப் பத்தித் தெரியுமில்ல..! வெட்டிக்கொன்னுடுவாங்க...அதனால் படிக்கிற வழியப் பாரு. இது நடக்காது. வீணா ஆசைய வளர்த்துக்கிட்டு கஷ்டப்படவேணாம்’ என்றான்.

நான் அழுதேன். அவன் பிடிவாதம் பிடித்தான். எத்தனை தடை வந்தாலும் நான் அவனோடு சேரத் தயாராய் இருந்தேன். அவனோ முரண்டுபிடித்தான் ‘லூஸா நீ? தைரியம் இல்லையா உனக்கு?. நான் வந்துடறேன்’ என்று கத்தினேன். என்னைப் பார்த்துச் சொன்னான்..


 ‘உன்கிட்ட இனி பேசமாட்டேன்’ 


நான் அதிர்ந்து நிற்க, அவன் போய்விட்டான்.

நான் கண்ணீர் வற்றிய ஜீவனாய் பித்துப் பிடித்துத் திரிந்தேன். வீட்டில் என்னை விநோதமாய்ப் பார்த்தார்கள். கார்த்திக் என்னைப் பார்க்கவேயில்லை. அடுத்து வந்த ஒருவாரம் வெறுமையாய்க் கழிந்தது. அண்ணன் தான் என் ஒரே ஆறுதல். அண்ணன் வருத்தப்பட்டான். ஆனால் மறுநாளே அண்ணனுக்காய் நான் வருத்தப்படும்படியானது. அண்ணனின் காதலிக்கு அவசரம் அவசரமாய் நிச்சயம் செய்து விட்டார்கள். அண்ணன் இடிந்து போனான். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அதன்பின் அண்ணனின் காதலியும், கார்த்திக்கும் எங்கள் கண்களுக்குப் படவே இல்லை. அண்ணனின் நிலையைக் கண்டு அண்ணனின் அம்மா ஒரு  பெண்ணைப்பார்த்து கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னது. அண்ணன் அன்று என்னைத் தேடி வந்தான். ‘என்ன செய்ய நான்?’ என்றான். ‘கட்டிக்கோ!’ என்றேன். மறுவார்த்தை பேசாமல் எழுந்து சென்றான். அடுத்தநாள் அண்ணனின் அம்மா என்னிடம் வந்து ‘உன்னாலதான் இந்தக் கல்யாணமே நடக்குது. ராசாத்தி’ என்று கொஞ்சியது.

எல்லாம் நன்றாகவே போனாலும் கார்த்திக்கை மட்டும் என் மனதிலிருந்து தூக்கியெறிய முடியவில்லை. தூரத்தில் என்னை எங்காவது பார்க்க நேர்ந்தாலும் அவன் என் பார்வை படாத தொலைவிற்குப் போய்விடுகிறான். அவனை அண்ணன் கல்யாணத்திற்கு வரும்போது கிட்டேயாவது பார்த்துவிடவேண்டும் என்பதில் குறியாயிருநதேன். கார்த்திக் என் உயிருக்குள் ஊடுருவி இருந்தான். விழிகளை மூடினாலே அவன் கண்களைச் சுற்றி படர்ந்து மின்னிய காதல் தான் பிம்பமாய்த் தெரிந்தது. விழிகளைத் திறக்கையில் அவன் இல்லாத வெறுமை வந்து தாக்கியது. ‘நான் வரேன்னு சொல்றேன். அவனுக்கு தைரியமில்லயே! படுபாவி’ – மனசு அரற்றியது. கண்ணீர் வழிந்தது எனக்கு. துடைத்துக்கொண்டேன். தினமும் இதுவே வாடிக்கையாகிப் போனது. இரவு மணி பன்னிரண்டு. நான் விறுவிறுவென்று அண்ணனுக்கு கடிதம் எழுதத் தொடங்கினேன். என் கண்ணீர் முழுவதையும் காகிதத்தில் இறக்கி வைத்தேன். உறங்கிப் போனேன். மறுநாள் அண்ணனிடம் காகிதத்தை நீட்டினேன். வாங்கி வாசித்தான். ‘நீ இவ்வளவு நேசிக்கிறியா அவனை?’ என்றான். நான் தலையாட்டினேன். ’அவன் தான் வேணாம்னு சொல்றான்ல..ஏன் இப்படி உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிறே’ என்றான். நான் விசும்பினேன்.


அண்ணனின கல்யாணம் நெருங்கிக் கொண்டிருந்தது. நான் எழுத நினைத்த டி.என்.பி.எஸ்.சி தேர்வும் அண்ணனின் கல்யாணமும் ஒரே நேரத்தில்  நடக்கவிருக்கின்றன. அம்மா என்னிடம் “என்ன செய்யப் போறே?” என்றது. “அண்ணன் கல்யாணம் இருக்கையில் பரிட்சை என்ன பெரிய பரிட்சை. போ... நான் கல்யாணத்துக்கு வருவேன். பரிட்சை எழுதலை” என்றேன். அம்மா திட்ட த் தொடங்கியது. “அண்ணன் கல்யாணம் தான் எனக்கு முக்கியம்” என்றேன். அம்மா முகத்தைச் சுளித்துக்கொண்டே போனது.

அண்ணன் கல்யாணத்துக்கு முதல்நாள் அவன் வீட்டுக்குப் போனேன். அவன் முகம் வாடி இருந்தது. நான் காரணம் கேட்டேன். ‘தெரியலை’ என்று உதட்டைப் பிதுக்கினான். அருகில் அழைத்து என் கைகளைப் பற்றிக்கொண்டான். அவன் கைகள் கொதித்தன. ‘என்னாச்சு? காய்ச்சலா?’ என்றேன் பதறியபடி. அவன் இல்லையென்று தலையாட்டினான். வெறித்த பார்வை பார்த்தபடி நின்றிருந்தான். நான் சமையலறைக்குச் சென்று அவனுக்கு தேநீர் தயாரித்து வந்து கொடுத்தேன். தேநீர் குவளையை வாங்கி அருகில் வைத்தவன் “எனக்கு உன் ஆறுதல் வேணும்!” என்றான். நான் அவனை நெருங்கினேன். அண்ணனின் கைகளைப் பற்றிக்கொண்டேன்.  ‘என்ன கஷ்டம்னாலும் சரியாயிடும்..நாளைக்குக் கல்யாணம். சந்தோஷமா இருங்க.சரியா?’ என்றேன். அவனைப் பார்க்கவே பாவமாய் இருந்தது எனக்கு.

அவன் தன் கைகளை என் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டான். மெல்ல என்னை நெருங்கினான். அவன் விழிகள் என்னை உற்றுப் பார்த்தன. மெதுவாய் என் தோளில் கை வைத்தான். எனக்கு கார்த்திக் நினைவு வந்தது. இப்படித்தான் அவனும் கை வைத்து விடைபெறுவான். அண்ணன் தொட்டால் எனக்கு சாதாரணமாகவும் கார்த்திக் தொட்டால் மட்டும் ஏன் நான் இப்படி செத்துப் பிழைக்கிறேன்?  யோசித்துக் கொண்டிருந்தபோதே சடாரென்று என்னை அண்ணன் அணைத்துக் கொண்டான். மெதுமெதுவாக அவன் பிடி இறுகியது. என்ன இது..? வழக்கமாய் இப்படிச் செய்ய மாட்டானே? எனக்குப் புரியவில்லை. குழப்பமாய் நின்றேன். இரண்டே நொடிகளில் எனக்கும் அவனுக்குமிடையே காற்று கூட புக முடியாத இடைவெளி மட்டுமே மிச்சமிருந்த்து. அவன் கரங்கள் என் முதுகைச் சுற்றியும் கழுத்தைச் சுற்றியுமிருந்த்து. நான் செய்வதறியாது திகைத்தேன். ‘விடுங்க. என்னாச்சு உங்களுக்கு?’ என்றேன். சடாரென்று கழுத்தில் முத்தமிட்டான். அதிர்ச்சியில் உறைந்து போய் நிலைகுத்தி நின்றன என் கண்கள். உலகம் தலைகீழாய்ச் சுற்றுவது போலிருந்தது. இதற்கு முன் அண்ணனின் ஸ்பரிசத்தில் இல்லாத ஏதோ ஒன்றை உணர்ந்தேன். பாதாளத்திற்குள் பாய்ந்து நான் கீழே கீழே செல்லத் தொடங்கி இருந்தேன். மயக்கம் வரும்போலிருந்தது. கை கால்களை அசைக்க முடியாத அளவிற்கு அவன் பிடிக்குள் நான் திமிறினேன். கத்த நினைத்து வாய் திறந்தேன். வார்த்தை வரவில்லை. பிளிறலாய் ஒரு சத்தம் எனக்குள்ளிருந்து வெளிப்பட்டது. அடுத்த நொடி...என் இதழ்களை அவன் இதழ்கள் மூடிவிட்டன. நான் அவன் கரங்களில் சிறைபட்ட பறவையானேன். அவன் வலிமைக்கும் பலத்துக்கும் முன்னால் வலுவிழந்து நான் திமிறிக்கொண்டிருந்தேன். என் இதழ்களை அவன் விடுவித்தபோது நான் நிலைகுலைந்து போயிருந்தேன். அவன் கைகள் மெதுவாக என் உடலில் இருந்து எடுத்து என்னை விடுவிக்க, நான் நிற்க முடியாமல் தள்ளாடினேன். கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. அருகில் இருந்த சுவற்றைப் பிடித்துக்கொண்டேன். என்ன நடந்தது? ஒரு சில விநாடிகளில் என்ன நடந்தது? மனசுக்குள் பெரிதான ஓலம். அவன் இருந்த திசையைப் பார்க்கவே திகிலாக இருந்தது. சன்னமாய் அவன் குரல் எனக்குப் பின்னாலிருந்து கேட்டது. “என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. ப்ளீஸ்..போகாதே!”. நான் கீழே விழுந்து விடாமலிருக்க சிரமப்பட்டேன். திரும்பிப் பார்க்காமல் தட்டுத்தடுமாறி வெளியேறினேன்.

எப்போது வீடு வந்தேன் எப்படி வந்தேன் எதுவும் நினைவில் இல்லை. அம்மா வந்து என்னை எழுப்பும்போது விழித்தேன். ’இந்த நேரத்துல தூங்குற...என்ன மூஞ்சி பேயறஞ்ச மாதிரி இருக்கு. என்னாச்சு?’ என்றது. ‘தலைவலி’ என்று சன்னமாய் முனகினேன். அம்மா அறைக் கதவை சாத்திவிட்டு வெளியே சென்றது.

நான் கதறத் தொடங்கினேன். என் கண்ணீருக்கு அளவில்லாமல் இருந்தது. இரவு எனக்கு கொடுமையாதாகக் கழிந்தது. ஒரு நொடியும் உறக்கம் வராமல் அண்ணனின் முகம் வாட்டியது, இன்றைக்கு பார்த்த அவனுடைய வித்தியாசமான பாவத்தையும் மறக்க முடியவில்லை. அந்த நொடிகளை நினைத்தாலே கைகால்கள் நடுங்கின. நான் என்ன செய்யப் போகிறேன்? என்ன ஆனது அவனுக்கு? நன்றாகத்தானே  இருந்தான்? பொங்கிப்பொங்கி அழுதேன். வாய்க்குள் துணியை வைத்துக்கொண்டு சத்தம் வராமல் அழுதேன். “என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. ப்ளீஸ்..போகாதே!” என்கிற அவனுடைய குரல் எனக்கு பூதாகரமாய்க் கேட்டது. அறையின் சுவர்கள் நான்கும் பெரிதாகிப் பெரிதாகி என்னை நோக்கி வந்தன. நான் கத்த நினைத்து வார்த்தைகள் வராமல் மூர்ச்சையானேன். விடியற்காலையில் யாரோ என்னை அழுத்துவது போல கனவு கண்டு அலறினேன். கனவில் அண்ணனின் கைகள் என் கழுத்தைச் சுற்றின. அவை பாம்பாக மாறி என் உடலெங்கும் கொத்துகின்றன. அப்போது கார்த்திக் வருகிறான். வந்து பாம்பை எடுத்து தரையில் வீசியடிக்கிறான். என் தோளில் தட்டி சிரித்து விடைபெற்றுச் செல்கிறான். நான் விழித்துக்கொண்டேன்.

அண்ணனுக்கு இன்றைக்குக் கல்யாணம்! நான் போகவில்லையென்றால் ஊரே ஏனென்று கேள்வி கேட்கும். போனால் அவன் முகத்தைப்பார்க்க வேண்டும். என்ன செய்யலாம்? எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.


போகணுமா? இனி எப்படி அவன் என் முகத்தில் விழிப்பான்? நான் எப்படி அவன் முன்னால் நிற்பேன்? யோசித்துக்கொண்டே வாசலுக்கு வந்தேன். சரேலென வாகனத்தில் என்னைக் கடந்து செல்வது யார்? அவன் தான். இன்னும் இரண்டு மணி நேரத்தில் கல்யாணம். இங்கே என்ன செய்கிறான்? என் இதயம் நின்று மீண்டும் இயங்கியது. வியர்த்துக்கொட்டியது. போகும்போது ஏதோ போட்டு விட்டுப் போனது போலிருந்த்து. குனிந்து பார்த்தேன். முத்து முத்தான அவன் கையெழுத்து தான். நடுங்கும் விரல்களால் பிரித்தேன்.
நான்கு வரிகள் மட்டுமே எழுதப்பட்டிருந்த்து.

“வேறு எந்தப் பெண்ணிடமும் நான் இத்தனை சுகத்தை உணர்ந்ததில்லை. நான் என் வசமில்லை. இது எனக்குத் திருமணமானாலும் தொடரவேண்டும். இது எனக்காக அல்ல..உனக்காக..கார்த்திக்கைத் தவிர வேறு யாரையும் மனதால் நினைக்க மாட்டேன் என்று அடம்பிடித்த உனக்கு வாழ்க்கையில் இப்படியுமொரு சுகம் இருக்கிறது என்று காட்ட நினைத்தேன். அதனால் தான் நேற்றைக்கு அப்படியானது. அது உனக்காக! நீ அவனை மறந்துவிட வேண்டும் என்பதற்காக! ஒரு வேண்டுகோள். இனி நீ என்னை அண்ணா என்றழைக்க்க்கூடாது. “

படித்த வேகத்தில் அதனைக் சுக்குநூறாகக் கிழித்து எறிந்தேன். விழிகளில் நீர்முட்டிக்கொண்டு நின்றது. குளியலறைக்குச் சென்று தண்ணீர்க்குழாயைத் திறந்து வைத்துவிட்டு அழுதேன்.வெளியேவந்து அம்மாவிடம் சொன்னேன்
“அம்மா! கல்யாணத்துக்கு நான் வரலை. பஸ்ஸுக்கு பணம் தா. நான் டி.என்.பி.எஸ்.சி எக்ஸாம் எழுதப் போறேன்..” என்றேன்.


அம்மா என்னை விநோதமாய்ப் பார்த்துக்கொண்டே பணத்தைத் தந்தது. அதைப் பெற்றுக்கொண்டு சாலையில் இறங்கி நிதானமாய் நடந்து, எதிர்ப்புறம் வந்த பேருந்தைக் கைகாட்டி ஏறி “காலேஜ் ஸ்டாப் ஒண்ணு” என்று டிக்கெட் எடுத்து அமர்ந்தேன்.

பேருந்து என்னை சுமந்தவாறு விரைந்து கொண்டிருந்தத்து. பேருந்தில் இருவர் அமரும் இருக்கை ஒன்றில் ஒரு இளைஞன் மட்டும் உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்துச் சொன்னான் “அட சும்மா உட்காரும்மா! அண்ணனா நினைச்சு உட்காரு’’ என்றான். அவனருகில் சென்று அமர்ந்தவாறே சொன்னேன்.. ”நன்றிங்க! அண்ணனா ஏன் நினைக்கணும்? ஃபிரண்டா நினைச்சு உட்காந்துக்குறேன்’’ என்றவாறே ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். மரங்களும், வீடுகளுமாக பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன.

Friday, September 09, 2011

செங்கொடிக்கு ஒரு கடிதம்


தோழி செங்கொடிக்கு!

எப்படி இருக்கிறாய் என்று நான் இனி உன்னைக் கேட்க முடியாது. எங்கே இருக்கிறாய் என்பது மட்டுமே தெரியும். காஞ்சி மக்கள் மன்றத்தில், நீ வளர்ந்த கம்யூனில் இருக்கிறாய். மண்ணில் புதைக்கப்பட்டு இருக்கிறாய் நீ. இன்னும் சில நாட்களில் உன் உடல் புழுக்களுக்கு இரையாகக் கூடும். புன்னகை தவழ்ந்த உன் முகம் செல்லரித்துப் போகக் கூடும். பறையெடுத்து ஆடிய உன் கைகள் இற்றுப்போய் வெறும் எலும்புகளாக மட்டுமே மிஞ்சக் கூடும். ஆனாலும் நீ வாழ்கிறாய்!

அன்புத் தோழி செங்கொடி! நான் உன்னை அறிந்தவளில்லை. நமக்குள் அறிமுகம் இல்லை. ஆனால் எனக்குத் தெரியும். நீ சாதாரணமானவள் அல்ல. அதை உன் பெயரே பறைசாற்றும். செங்கொடி...பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். ஆனால் எம்மை விட்டுப் பிரிந்து பறந்து சென்றுவிட்டது நியாயமா தோழி?

மூன்று உயிர்கள் மரித்துப் போய்விடக்கூடாது என்று தமிழகமே திரண்டு போராடுகையில், நீயும் போராடி இருக்கிறாய். போராட்டத்தில் உன்னை இணைத்துக் கொண்டிருக்கிறாய். .

உன் மரணத்தை கோழைத்தனம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் வீரமரணம் என்றும் நான் சொல்ல மாட்டேன். வெறும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் நீ முடிவெடுக்கவில்லை. உன் முடிவை முட்டாள்த்தனம் என்றும் என்னால் போகிறபோக்கில் சொல்லிவிட முடியவில்லை. முதல் நாள் முத்துக்குமாரின் கடிதத்தை நீ வாசித்திருக்கிறாய். ‘முத்துக்குமார் போல இன்னொருவர் இன்றைய சூழலில் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டால் அன்று எழுந்த எழுச்சி போல இன்றைக்கு ஏற்படுமா?’ என்று நீ உன் தோழிகளிடம் கேட்டிருக்கிறாய் என்று அவர்கள் இப்போது சொல்கிறார்கள்.


நீ நினைத்ததை செய்து முடித்த திருப்தியோடு இப்போது உறங்கிக்கொண்டிருக்கிறாய். ஆனால் உன்னைப் பிரிந்து வாடும் நெஞ்சங்கள்?

உன் உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த அந்த இரவு, வெளியே கூட்டம் அலைமோதியது. அனைவர் கரங்களிலும் நீ எழுதிய கடித்த்தின் நகல் உன் கையெழுத்தில்! சுதந்திரத்திற்குப் பின்னான இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் காரணத்துக்காக உயிர் நீத்த முதல் பெண் நீ தான் என்பதை திருமாவளவன் ஊடகங்களுக்கு எடுத்துரைத்தார். அப்போது என் உடல் சிலிர்த்தது. ஆனால் அதையும் மீறி உன் மரணம் எத்தகைய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது, அதிர்ச்சியளித்தது என்பதை நீ அறிய மாட்டாய். உனக்குத் தெரிந்திருக்கும் செங்கொடி! சிவகங்கைச் சீமை வெள்ளையனிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, உடலெங்கும் வெடிமருந்தைக் கட்டிக்கொண்டு வெள்ளையர்களின் ராணுவக்கிடங்கில் குதித்து ஆயுதங்களை அழித்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குயிலியின் கதையை நீ அறிந்திருப்பாய்.  உன் மரணத்தை நீயே தேடிக்கொண்டது பற்றிய விமர்சனங்கள் ஆயிரம் இருந்தாலும், நீ நம்பிய உன் கொள்கைக்கு நீ உண்மையாய் இருந்திருக்கிறாய். அந்த உண்மைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உன் உடலைக் காண நான் உள்ளே செல்லவில்லை. என்னைப் போலவே பலரும் உன்னை அப்படியொரு கோலத்தில் பார்க்க மனது வராமல் நின்றிருந்தனர். அந்த இரவு பூராவும் காஞ்சி அரசு மருத்துவமனை வளாகம் மனிதத்தால் நிரம்பியது.

மறுநாள் மதியம் உன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு காஞ்சி மக்கள் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நீ வாழ்ந்த இடத்திற்குப் பயணமானது உன் உடல். பத்து கிலோமீட்டர் தொலைவை உன் உடலைச் சுமந்த வாகனம் கடந்து சென்றது. பல்வேறு இயக்கத்தினர் கலந்து கொண்ட அந்த ஊர்வலம் காஞ்சி நகரத்தின் வீதிகளில் சென்றபோது காஞ்சி நகர மக்கள் வீதியின் இருமருங்கிலும் நின்றனர். நகர எல்லையைக் கடந்து ஒரு வயல்பகுதியில் உன் உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது, தொலைவில் ஒரு பெண் வயற்காட்டினிடையே உன்னைப் பார்க்க ஓட்டமாய் ஓடிவந்தார். கூட்டமாய் ஓரிடத்தில் பெண்கள் திரண்டு உன் அழகோவியமான உருவத்தை வரைந்த பதாகையை உயர்த்திப் பிடித்து வந்த தோழர்களிடம் சொல்லி அந்த பதாகையை கையில் வாங்கித் தொட்டுப் பார்த்து கண்ணீர் விட்டு கதறியதை எப்படி நாங்கள் மறப்பது?

வழியெங்கும் மக்கள் எழுப்பிய உணர்ச்சிமிகு முழக்கங்கள் விண்ணைப்பிளந்தன. ஆனால் கேட்பதற்கு உன் செவிகள் செயலிழந்திருந்தன. பத்து கிலோமீட்டர் தொலைவைக் கடந்து நீ வாழ்ந்த ஊரான மங்ககலப்பாடிக்கு உயிரற்ற உடலாய் சென்று சேர்ந்தாய. உன்னோடு வாழ்ந்த மக்களின் கதறலுக்கிடையே உன் உடல் இறக்கப்பட்டது.

அந்த இடத்தில் தானே நீ நடமாடியிருப்பாய்? அந்த இடத்தில் தானே நீ உன் ஆட்டக்கலைப் பயிற்சிகளையும் ஒத்திகைகளையும் மேற்கொண்டிருப்பாய்? அந்த இடத்தில்தானே உன் அரசியல் அறிவை நீ வளர்த்துக் கொண்டிருப்பாய்? அந்த இடத்தில் தானே உன் கனவுகள் அலைந்து கொண்டிருக்கும்? நீ வாழ்ந்த வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்காது. கம்யூன் வாழ்க்கை என்றால் நம்மில் பலருக்குத் தெரியாது. குடும்பத்தை விட்டு நீங்கி ஒரு பொதுவான இடத்தில் பொதுவான செயல்பாட்டுத் திட்டத்தோடு இணைந்து கூட்டாக வாழும் வாழ்க்கை உனக்கு வாய்த்திருந்தது. பாலின பேதமின்றி வாழும் அந்த வாழ்க்கை வாழ்ந்த நீ கொடுத்து வைத்தவள். ஆனால் அந்த வாழ்க்கையை நீ முழுதுவதுமாக வாழாமல் போய்விட்டதில் தான் எங்களுக்கு வருத்தம்!

உன் உடல் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டு உன்னை உன் தோழர்கள் வந்துப் பார்த்து உனக்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் இருக்க, நீ அமைதியாய் கண்ணாடிப் பேழைக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாய். மேல்தளத்தில் உன் உடலை என்ன செய்வது என்கிற விவாதம் நடந்துகொண்டிருந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்காக உன் உடல் சென்னையில் வைக்கப்படவேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருந்தது. உன்னோடிருந்த காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷும், ஜெஸ்ஸியும், காவல்துறை அனுமதியளித்தால் எடுத்துச்செல்லுங்கள் என்றனர். ஆனால் காவல்துறை அனுமதியளிக்குமா? பல இயக்கங்களின் பிரதிநிதிகள், தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கூடியிருந்தனர் செங்கொடி!. அரசியல் கட்சித்தலைவர்கள், தலித் தலைவர்கள், இடதுசாரித் தலைவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று ஒரு முப்பது பேர் வரை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோம் தோழி!



உன் உடலை எங்கே புதைப்பது? என்ன செய்வது? என்று முடிவு செய்வதற்காக கூட்டப்பட்டக் கூட்டம் கிட்டத்தட்ட  இரண்டு மணிநேரம் நடந்தது. வெளியே வந்திருந்த கூட்டம் பதைபதைப்பாகக் காத்திருக்க, அவரவர் கருத்தை அவரவர் முன்வைக்க சூடான விவாதங்கள் தொடங்கின. இளைஞர்கள் ஒருபுறம் உன் உடலை சென்னைக்கு எடுத்துச் சென்று பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும் என்று கடுமையாக வாதிட்டனர். ஒரு கட்டத்தில் கடும் வாக்குவாதம் நடக்க, சென்னைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எடுத்துச் சொன்னார்கள் தலைவர்கள். எத்தனை சிக்கல்கள் வந்தாலும், குண்டடிப்பட்டாலும் அதைத் தாங்கத்தயாராக இருப்பதாக இவர்கள் சொன்னார்கள். ஆனால் தலைவர்களோ அதனை வேண்டாமென்றனர். “எங்களுக்கு வழிகாட்டுங்கள். உங்கள் வழிகாட்டுதல் படி நாங்கள் செயல்படுகிறோம். நீங்கள் மனது வைத்தால் காவல்துறையிடம் பேசி அனுமதி வாங்க முடியும்” என்று அரசியல் கட்சித் தலைவர்களிடம் கேட்டனர் பல்வேறு அமைப்பினர். ஆனால் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தனர் தலைவர்கள். ஒரு கட்டத்தில் இளைஞர்கள் உணர்ச்சி வேகத்தில் பேசுவதாக தலைவர்கள் கூறினார்கள். நீ எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி “செங்கொடியின் கடிதத்துக்கு என்ன பொருள்? அவள் கூறிய போராட்டத்தை நாம் முன்னெடுக்கப் போவதில்லையா?” என்று கேட்டனர் சிலர். இறுதியில் முடிவு நீ சார்ந்த காஞ்சி மக்கள் மன்றத்தின் கைகளில் விடப்பட்டது.  நீ வாழ்ந்த அந்த வீட்டில்தான் உன்னைப் புதைக்க வேண்டுமென்று ஏற்கனவே நீ கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய மகேஷ் உன் உடலை எடுத்துப் போவது குறித்து எந்த ஆட்சேபணையும் இல்லையென்றும், ஆனால் எந்த சிக்கலும் இல்லாமல், காவல்துறையின் அனுமதியோடுதான் எடுத்துப் போக வேண்டும். எங்கு எடுத்துச் சென்றாலும் மீண்டும் இங்கே, இதே வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்து ஒப்படைத்துவிட வேண்டும் என்று கூறிவிட, அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன. இறுதியில் காவல்துறையின் அனுமதி பெறும் அளவுக்கு இன்னமும் சக்தி பெறாத சிறிய இயக்கத்தினரும், தனிநபர்களும் தங்கள் கோரிக்கையை ஏமாற்றத்தோடு கைவிட்டனர். உன் உடலை அங்கேயே அடுத்த நாள் முழுதும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பதென்றும், அதற்கடுத்த நாள் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் முடிவானது. இத்தனையும் மேலே மாடியில் நடக்கையில் நீ கீழே உன் சுற்றத்தார் புடைசூழக் கிடந்தாய்.

அன்றைக்கு மங்கலப்பாடி கிராமத்தை விட்டுக் கிளம்புகையில் மனம் கனத்துக் கிடந்தது. அதற்கடுத்த முழு நாளும் நீ அங்கேயே நீ வாழ்ந்த வீட்டிலேயே இருந்தாய். உன் சிரிப்பொலி அலங்கரித்த அந்த வீட்டில் உன் கனத்த மௌனம் காற்றில் பரவியிருந்த்து. உன் இறுதி நிகழ்வுக்காகக் காத்திருந்தாய். 31 ஆகஸ்ட் அன்று காலை, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனைக்கு நீதிமன்றம் எட்டுவார காலத்தடை விதித்தது. மகிழ்ச்சியில் துள்ளிய பலரும் “செங்கொடி ஒரு நாள் பொறுத்திருந்து பார்த்திருக்கலாமே” என்று ஆதங்கப்பட்டதைக் காண முடிந்தது. உன் இறுதிச்சடங்கிற்கு பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் திரளுக்கு நடுவே உன் உடல் புதைக்கப்பட்டதாக செய்தி வந்தது..

உன் உடலை என்ன செய்வது என்று முடிவெடுக்கும் கூட்டத்தில் நான் கேட்ட ஒரு குரல் இப்படிச் சொன்னது “சரியான வழிகாட்டுதல் இல்லாத, சரியான தலைமை இல்லாத ஒரு சமூகத்தில் தற்கொலைகளை தவிர்க்கமுடியாது. ஆனால் அது தற்கொலை அல்ல. கொலைதான். செங்கொடியின் மரணம் தற்கொலை அல்ல. அது கொலைதான்” என்றது அந்தக் குரல்.
ஆமாம் செங்கொடி! கையறு நிலையில் ஒரு சமூகமே நின்றுகொண்டிருக்கையில் வேறு வழியின்றிதான் இந்த நிலைக்கு நீ வந்திருப்பாய்.  உன் மரணம் தமிழக அரசிற்கு விடப்பட்ட எச்சரிக்கை மணியென்பதை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சொல்கிறது. முதல்நாள் குடியரசுத்தலைவரின் ஆணையை மாற்ற முதல்வருக்கு அதிகாரமில்லை என்றவர் மறுநாளே இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியதில் உன் மரணத்திற்கும், உன் உடலைச் சுமந்து காஞ்சி நகர் வீதிகளில் வந்த அந்த ஊர்வலத்திற்கும் பங்கிருக்கிறது. ஒரு வகையில் நீ நினைத்ததை சாதித்துவிட்டாய். ஆனால் நீ எங்களுக்குத் திரும்பக் கிடைப்பாயா? தலித்-பழங்குடி சமூகமான இருளர் சமூகத்திலிருந்து  சமூகத்திற்காகப் போராட வந்த, போராட்ட குணம் கொண்ட,  உன்னை நாங்கள் இழந்து விட்டோமே! இந்த இழப்பை ஈடுசெய்ய முடியுமா? உன் மரணத்திற்குப் பின் உன் பாதையை பலர் தேர்ந்தெடுத்துவிடக்கூடாதே என்கிற பதைபதைப்பு தந்த பலரின் மரண அவஸ்தையை வார்த்தைகளில் விவரிக்க இயலாது செங்கொடி! நீ போய்விட்டாய். ஆனால் உன்னை யாரும் பின் தொடர்ந்து விடக்கூடாது என்பதே எங்கள் கவலை. உயிரின் மதிப்பு உன்னை இழந்த பின் அதிகம் தெரிகிறது செங்கொடி! மூவர் உயிர்காக்க நடந்த போராட்டத்தில் உன் உயிரை நீ மாய்த்துக் கொளவதை எப்படிச் சகிப்பது? பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் உன் மரணச்செய்தி கேட்டபோது துடித்துக் கதறினார். “வேண்டாம் பிள்ளைகளா! நான் என் மகனின் உயிரைக் காப்பாற்றத்தானே 21 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். இன்னொரு உயிரைக் கொடுத்தா என் மகன் உயிரைக் காக்க வேண்டும். ஏன் இப்படிச் செய்தாய் செங்கொடி?” என்று கதறினார். தீராத துன்பத்தை உன் மரணம் அவருக்குத் தந்து விட்டதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

செங்கொடி! இப்படி போராட்டக்களத்தில் ஒவ்வொருவரும் உயிர் நீக்க நினைத்தால்...போராடயாரிருப்பார்? உன்னோடு போகட்டும் இந்த உயிர் நீக்கும் போராட்டம். வேறொருவர் இப்படி உயிர்நீத்து “ஆமாம்! எங்கள் சமூகம் வழிகாட்டுதலின்றித்தான் இருக்கிறது.” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டாம்! இது எங்கள் கனவு. ஆனால் கனவுகள் அனைத்தும் உண்மையாகி விடுவதில்லை.

போராட்டத்தன்மை மற்றும் போராட்டக் களத்தின் மீதான விமர்சனமாய் உன் மரணத்தை நீ அளிக்க, அதைக் கொச்சைப்படுத்தி ஆதாயம் தேடும் ஊடகங்களின் பார்ப்பன ஆணாதிக்கத் திமிரை அடக்க பல கோடி செங்கொடிகள் உருவாகி, உயிர் நீக்காமல் போராட வேண்டும்!

செங்கொடி! உனக்குப் பிரியாவிடை கொடுத்தனுப்பினோம். நீ வாழ்கிறாய் எங்கள் நெஞ்சங்களில்! ஆனால், எங்கள் நெஞ்சங்களில் வாழ்வதை விட, எங்களோடு நீ வாழ்ந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்போம். இந்த மகிழ்ச்சியை தமிழ்ச்சமூகம் எங்களுக்கு விட்டு வைக்குமா? இனியாவது?
இந்தக் கேள்விக்கு விடை உன்னைப்போன்ற, என்னைப்போன்ற யார் கையிலும் இல்லை. ஒரு தலைமையோ, வழிகாட்டுதலோ இல்லாத இச்சமூகம் என்ன செய்யப் போகிறது?  தற்கொலைகளால் போராட்டக்களத்தை நிரப்பப் போகிறதா? நம் வரலாறு தற்கொலைத் தேதிகளால் எழுதப்படுமா?

சாதியை கணக்கிலெடுக்காத தமிழ்த்தேசியமும்,  மக்களின் விருப்பத்தை அல்ல இயக்கத் தொண்டர்களின் விருப்பத்தைக்கூட அறியாத இடது அரசியலும்,  தங்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியமல் தொடர்ந்து தங்களின் இருப்புக்காய் போராடும் தலித் அரசியலும்,  தொடங்கிய பாதையை விட்டு வெகுதூரம் போய்விட்ட திராவிட அரசியலும், எங்கனம் எங்களுக்குத் வழிகாட்டக் கூடும்? இந்த உண்மையை உரக்கச் சொல்வதற்காக நீ மாய்த்துக்கொண்டாயோ?

செங்கொடி! உன்னை யாரும் பின் தொடர்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக்கொண்டே உன் பாதையில் செல்! பின் தொடர்ந்தால் கொலைகள் தொடர்கின்றன என்று பொருள். அது தனிமனிதக் கொலை அல்ல. ஒரு சமூகக் கொலை. சித்தாந்தங்களை கற்பித்தவர்களின் தோல்வி. கற்றுக்கொண்டவர்களின் தோல்வி. கையறு நிலையின் வெற்றி.

ஏதாவது செய்யச் சொல்கிறது உணர்வு. என்னவென்று கேட்கிறது அறிவு. உணர்வுக்கும், அறிவுக்குமான ஊடாட்டத்தில் மெல்ல விலகுகிறது பனித்திரை. எதிரே பிரம்மாண்டமாய் நிற்கிறது என் கையறு நிலை. கிழித்துச்செல்ல எத்தனிக்கிறேன். கிழிபட்டுப் போகிறேன். கிழிசல் ஓட்டைகளுக்கு இடையே நம்பிக்கை கண் சிமிட்டுகிறது நட்சத்திரங்களின் வடிவில்! – இப்படித்தான் முடிக்க நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை தோழி! கிழிபட்டுப் போவதுதான் தற்போதைய அரசியல் சூழலில் சாத்தியம். உனக்கு நேர்ந்ததும் இதுவே.

அனைத்துக் கதவுகளும் இறுக மூடிக்கொண்ட ஒரு வீட்டினுள், வெளியேற இயலாமல், மீட்பருக்காகக் காத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப் போல இன்னும் எத்தனை காலம் கழியப்போகிறது? விடைகாண இயலாத இப்படியான பல கேள்விகளால் நிறைந்திருக்கிறது மனம். கேள்விகளின் கனம் போலவே துயரத்தின் கனமும்,  இப்பூமியில் காற்று நிரம்பியிருப்பது போல மனமெங்கும் நிரம்பியிருக்கின்றது தோழி!

இப்படிக்கு,
உன் தோழி

Friday, August 19, 2011

நிராகரிப்பு



அனைத்து உயிரினங்களிலும்
ஆணும் பெண்ணுமாய்
ஒரு ஜோடி
நோவாவின் கப்பலில்.
நீராலழிந்த புவிக்கோளத்தின்
மீட்டுருவாக்கத்தின்பின்
திகைத்து நிற்கிறான் நோவா
கப்பலில் இடம் மறுக்கப்பட்டும்
பேரழிவுக்குப் பின்னும் உயிர்த்தெழுந்த
மூன்றாம் பாலினம் நோக்கி!

Monday, August 08, 2011

எதிரொலிக்கும் கரவொலிகள்!




ண்களால், பெண்களால் நுழைய முடியாதது திருநங்கைகளின் உலகம். சமூகத்தில் திருநங்கைகள் குறித்த பார்வை முற்றாக மாறிவிடவில்லை. எனினும், ஆங்காங்கே நடக்கும் சில அபூர்வ நிகழ்வுகள் மாற்றம் குறித்த நம்பிக்கைத் தருகின்றன. அதில் ஒன்றுதான் கடந்த வாரம் கன்னிமரா நூலக அண்ணா சிற்றரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்து இருந்த 'திருநங்கையர் படைப்புலகம்’ என்ற நிகழ்வு. திருநங்கைகளின் எழுத்துக்கள், அவர்களைப் பற்றிய பதிவுகள் குறித்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்ட இந்நிகழ்ச்சி, தமிழ்ச் சூழலில் முதல் முயற்சி.
 நிகழ்ச்சியில் சுபாஷ் இயக்கிய 'காந்தள் மலர்கள்’, சி.ஜெ.முத்துக்குமார் இயக்கிய 'கோத்தி’ ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக வேலை தர மறுக்கும் நிறுவனங்களின் போக்கை காந்தள் மலர்களும், பெற்றோர் வெறுத்து ஒதுக்கிய நிலையில், வாழ வழியின்றி கடைகளில் காசு கேட்கச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுவதை கோத்தியும் படம் பிடித்துக்காட்டின.

மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய 'வாடாமல்லி’ நாவல் குறித்தும், நாடக இயக்குநர் அ.மங்கை எழுதிய 'எதிரொலிக்கும் கரவொலிகள்’ நூல் குறித்தும் பிரியா பாபு ஆய்வுரை நிகழ்த்தினார். தமிழ் இலக்கியத்தில் ஒரு திருநங்கையை முக்கியக் கதாபாத்திரமாக வைத்துப் படைக்கப்பட்ட முதல் நாவல் 'வாடாமல்லி’. சு.சமுத்திரம் அந்த நாவலை எழுதக் காரணமாக இருந்த மூத்த திருநங்கை நூரியும் நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார்.

'அ.மங்கை 'கண்ணாடிக் கலைக் குழு’ என்று திருநங்கைகளைக்கொண்டு ஒரு கலைக் குழுவைத் தொடங்கி 'மனசின் அழைப்பு’ என்கிற நாடகத்தின் மூலம் திருநங்கைகள் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்கியவர். அவருடைய நூலில் சமபாலின ஈர்ப்புகொண்டவர்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையேயான வேறுபாடு நுட்பமாக விளக்கப்பட்டு இருக்கிறது. திருநங்கைகள் குறித்து அறிந்துகொள்ள நினைப்பவர்கள் அந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும்!'' என்றார் பிரியா பாபு.
திருநங்கைகள் குறித்து தமிழ் இலக்கியத்தில் உள்ள பதிவுகள் குறித்துப் பேசிய கவிஞரும், அரங்கக் கலைஞருமாகிய 'லிவிங் ஸ்மைல்’ வித்யா, சங்க காலத்தில் இருந்தே திருநங்கையர் குறித்த பதிவுகள் தமிழ் இலக்கியத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டினார். ''எஸ்.பாலபாரதியின் 'அவன்-அது=அவள்’ நாவல் முதன்முதலில் திருநங்கைகளின் காதல் குறித்து நுட்பமாகப் பேசியது. கி.ராஜநாராயணன் 1960-ல் எழுதிய 'கோமதி’ திருநங்கைகள் குறித்தான முதல் சிறுகதை. 1995-ல் ஹவி எழுதிய 'தீட்டு’, இரா.நடராசனின் 'மதி என்னும் மனிதனின் மரணம்’, திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் 'ஆச்சிமுத்து’, லட்சுமண பெருமாளின் 'ஊமாங்கொட்டை’, 1997-ல் வெளியான 'வக்கிரம்’, 2009-ல் வெளியான பாரதி தம்பியின் 'தீராக் கனவு’ ஆகிய கதைகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.

திருநங்கைகளோடு ஒப்பிடுகையில் திருநம்பிகள் குறித்தான பதிவுகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை. (பெண் உணர்வுகொண்டு பெண்ணாக மாறும் ஆணை திருநங்கை என்பதுபோல, பெண் ஆணாக உணர்ந்து மாறினால் அவர்கள் திருநம்பிகள்!) இது மிகவும் வருத்தத்துக்கு உரியது. அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ளவர்கள்!'' என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார் 'லிவிங் ஸ்மைல்’ வித்யா.
இவரின் 'நான் சரவணன் வித்யா’, ரேவதியின் 'உணர்வும் உருவமும்’, ப்ரியாபாபுவின் 'மூன்றாம் பாலின் முகம்’ ஆகிய மூன்று நூல்கள் குறித்து பேராசிரியை சந்திரா தன் கருத்துக்களைப் பதிவு செய்தார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகும் 'லிவிங் ஸ்மைல்’ வித்யா மேடையில் வாசித்த அவரது கவிதை மட்டும் செவிகளில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.

'அப்போது நான்
முழுக்கை சட்டையும், கால் சராயும்
அணிவது வழக்கம்
அப்போது நான்
மாதம் ஒருமுறையென
சீராக முடிதிருத்தி வந்தேன்
அப்போது நான்
ஆண்களுடன்
பள்ளியில்தான் படித்தேன்
இருந்தாலும் அவர்கள்
கிண்டல் செய்தார்கள்
நான் ஆணில்லை என
இப்போது நான்
புடவை கட்டி
ஒத்தசடை பின்னி
பூ முடிந்து
பாந்தமாக வளைய வந்தாலும்
அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்களாம்
'நான் பெண் இல்லை’என்று.!’