Thursday, July 26, 2012

அழிபடும் தடயங்கள்


நீயற்ற பொழுதுகள்
வெறுமையாய் கழிகின்றன
என் ஏக்கத்தின்
தீராத பெருமூச்சு
புயலாகிச் சீறுகிறது கடற்பரப்பில்
பெருமூச்சோ சிறுமூச்சோ
என் சுவாசக் காற்றல்லவா அது
ஆனந்தமாய் உள்ளிழுத்துக்கொள்
தெறிக்கும் நீர்த்திவலைகளில்
என் தொடுகையை உணர்வாயா அன்பே
என் கண்ணீர் கரிக்கும உப்புநீரை
சுவைத்துப் பார்
பாதம் தொடும் அலைகளில்
முத்தங்களை அனுப்புகிறேன்
பெற்றுக்கொண்டதுபோக
மிச்சமிருக்கும் முத்தங்களால்
காதலர்களின் கரையோர காலடித்தடங்களை அழிக்கிறேன்
நாம் கைகோர்த்து நடக்கும் நாள்வரை
காதலரின் தடயங்களை அழித்துக்கொண்டேயிருப்பேன்
அவர்களிடத்தில் இரக்கம் கொள்ளாதே
கவனம் அன்பே 
என்றேனும்
காதலர்கள் வந்துபோனதன்
அடையாளமாய் 
அழிபடாத காலடித்தடங்கள்
தென்படக்கூடும்
அன்றைக்கு
நான் மட்டும் எங்கோ
கரை ஒதுங்கி இருப்பேன்



Wednesday, July 25, 2012

திருநங்கைக்கு மறுக்கப்படும் சொத்துரிமை


பெண்களுக்கான சொத்துரிமையே மிகத் தாமதமாகக் கிடைத்த நாட்டில், திருநங்கைகளுக்கான சொத்துரிமை மட்டும் அத்தனை எளிதில் கிடைத்துவிடுமா? அதற்கான போராட்டத்தில்தான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கிறார் திருநங்கை ஸ்வேதா. 
பிரச்னை என்னவாம்?
சென்னை ராயபுரம் காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்வேதா. தனது பாலினம் குறித்து தெரிய ஆரம்பித்தவுடன் மும்பைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறினார். சென்னை திரும்பியவர், திருநங்கை களுக்காகச் செயல்படும் 'சகோதரன்’ அமைப்பில் ஊழியராகப் பணியாற்றுகிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டில்தான் தன் தாயைச் சந்தித் தார். முதலில் தயங்கிய சொந்தங்கள், இப்போது இவரைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டார்கள். அதன் பிறகு நடந்ததை ஸ்வேதாவே சொல்கிறார்.
''என் மாத வருமானம் 5,000 ரூபாய். நான் தங்கி இருந்த வீட்டுக்கு வாடகையே 3,000 ரூபாய். அதனால் போக்குவரத்துச் செலவுக்கும் சாப் பாட்டுக்கும் பணம் போதவில்லை. அதனால் அம்மா வுக்குச் சொந்தமான ஒரு வீட்டில் என்னை குடியிருக்கச் சொன் னார்கள். அங்கேதான் வந்தது சிக்கல்.
அந்த வீட்டில் இரண்டு தளங்கள். ஒன்று என் அம்மாவுக்குச் சொந்தமானது, இன்னொன்றில் என் சித்தி இருக்கிறார். என் அம்மா 10 வருடங்களாக அங்கு போகவே இல்லை. அந்த வீட்டை லீஸுக்குக் கொடுத்துவிட்டு போரூரில் வேறு ஒரு வீட்டில் இருக்கிறார்கள். லீஸுக்கு இருந்தவர்களைக் காலி பண்ணச் சொல்லிவிட்டு, அந்த வீட்டில் தன்னுடைய மகளைக் குடி வைத்திருக்கிறார் சித்தி. எனக்காக அந்த வீட்டை அம்மா கேட்ட பிறகும், 'தர மாட்டேன்’ என்று சித்தி கூறியதுதான் பிரச்னைக்குக் காரணம்'' என்ற வரைத் தொடர்ந்து பேசினார் ஸ்வேதாவின் தாய் சுந்தரி.
''நான் குடி வெச்சிருந்தவங்களை என் தங்கச்சி சரளாவும் தங்கச்சி வீட்டுக்காரர் ஹரிகிருஷ்ணனும் சேர்ந்து வெளியேத்திட்டு, அவங்க பொண்ணைக் கொண்டுவந்து குடிவெச்சிட்டாங்க. அதுவே தப்பு. ஸ்வேதா வீடு இல்லாமக் கஷ்டப்படவே, நான் அந்த வீட்டைக் கேட்டேன். தர மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டாங்க. அவங்களுக்கு லோக்கல் ரவுடிகள், அரசியல்வாதிகள் சப்போர்ட் இருக்கு. அதனால் ஆள் வெச்சு மிரட்டுறாங்க. ஸ்வேதாவையும் மிரட்டினாங்க. நாங்க போலீஸுக்குப் போனோம். ராயபுரம் ஏ.சி. முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்துச்சு. லீஸ் பணம் 90,000 ரூபாயும் இதுவரைக்கும் அவங்க கட்டின வீட்டு வரிக்கும் சேர்த்து 1,20,000 ரூபாயை ஸ்வேதா கட்டினா... வீட்டைத் தர்றதா முடிவாச்சு'' என்கிறார் சுந்தரி.
அதன் பிறகும் விவகாரம் கமிஷனர் அலுவலகம் வரை வளர்ந்தது எப்படி?
பேசிய பணத்துடன் போயிருக்கிறார் ஸ்வேதா. அப்போது சித்தி சரளா, வீட்டை இடித்துத் தருவதாகவும் அங்கேயே புது வீடு கட்டிக்கொள்ளுமாறும் சொல்லவும் மீண்டும் பிரச்னை.
''நான் திருநங்கை என்பதால்தான் அப்படிச் சொல்கிறார். 'நான் புள்ளை பெத்துருக்கேன். உன்னைப்போல இல்லை. என் பொண்ணு வாழ்ந்த வீட்டில் உன்னை வாழவிட மாட்டேன். வீட்டை இடிச்சுத் தர்றேன். வேணும்னா புதுசா கட்டிக்கோ’ என்கிறார்கள். பணத்தையும் வாங்கிக்கொண்டு, வீட்டையும் இடித்து மண்ணாக்கித் தந்தால் மறுபடியும் வீடு கட்ட பணத்துக்கு எங்கே போவேன்? என் சொந்த வீட்டில் வாழ்வதற்கு நான் எத்தனை கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. என் சொந்தக்காரர்களே இப்படி என்றால், சமுதாயத்தில் மற்றவர்கள் என்னை எப்படி நடத்துவார்கள்?'' என்றார் ஸ்வேதா.
சென்னை மாநகரக் காவல் துறை ஆணையரின் உத்தரவின்பேரில் மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சரளா, ''வீட்டின் நடுவில் கோடு போட்டுப் பிரித்து ஒரு பகுதியை இடித்துத்தான் தருவேன். இப்போது ஒரே படிக்கட்டின் வழியாகத்தான் இரண்டு வீடுகளுக்கும் பாதை இருக்கிறது. ஸ்வேதா மாதிரி திருநங்கையும் நாங் களும் ஒரே படிக்கட்டை எப்படிப் பயன்படுத்துவது? அது எனக்குக் கேவலம்'' என்று கறாராய்ச் சொல்கிறார்.
ஸ்வேதாவின் முடிவு என்ன?
''வழக்குப்  போடும் முடிவில் இருக்கிறேன். ஆனாலும் அதற்கு வாய்ப்பு இல்லாமல் சித்தி எனக்கு வீட்டைக் கொடுத்துவிடுவார் என்று நம்புகிறேன். என்ன இருந்தாலும் அவர் என் ரத்த சொந்தம்தானே'' என்கிறார் ஸ்வேதா.
ரத்த பாசம் ஜெயிக்குமா என்பதைப் பார்க்கலாம்.

படங்கள்: ஆ.முத்துக்குமார், ச.இரா.ஸ்ரீதர்

Tuesday, July 24, 2012

கவிதைகள் செழித்து வளர்ந்த
அடர்வனத்தில் 
சொற்கள் கிளைகளாயின
எழுத்துக்கள் இலைகளாகின
படிமங்கள் மலர்களாகவும்
வடிவங்கள் கனிகளாகவும்...

எவ்வளவு தேடியும்
தென்படவில்லை மொழிமட்டும்

களைப்புடன்
ஒரு கவியடியில் அமர்ந்தேன்
முகில் கருநிறமாதல்
மொழிக்கான அறிகுறியென்றது
உச்சியிலிருந்த சொல்லொன்று

உட்கூறுகளைக் காண விழைந்து
ஆயுதங்கொண்டு குறுக்காகப் பிளந்தேன்
அக்கவிதையை

நிலத்துடனான தொடர்பறுபட்டுக்
துண்டாகி வீழ்ந்தது கவி
மண்ணை ஆழத்தோண்டி
உற்று நோக்கினேன்.
துடித்துக்கொண்டிருந்தது வேர்
மொழியருந்தும் தாகத்துடன்
கவிதையின் உணர்வுகளாய்..

Wednesday, July 18, 2012

குடும்ப வன்முறை...குமுறும் பெண்மை

படங்கள் : ஆ.வின்செண்ட் பால்

மாலினிக்கு 20 வயது. திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் கர்ப்பிணி ஆனாள். பேறுகாலக் கவனம் செலுத்த வேண்டிய கணவனோ இன்னொரு பெண்ணைவீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தத் தொடங்கினார். கர்ப்பக் காலத்தில் சத்தான காய்கறிகள், உணவு வகை களைச் சாப்பிடவேண்டிய மாலினிக்கு, ஒரு டம்ளர் பால்கூடத் தரப்படவில்லை. செலவுக்குப் பணமும் தராமல் தேவைகளையும் கவனிக்கவில்லை. மாலினியின் நிலைமை என்ன ஆகும்?  
 வேலைக்குச் செல்லும் கீதா பகல் முழுக்க அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்த பின் ஓய்வைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியாது. வீட்டு வேலைகள் மலையெனக் குவிந்துகிடக்கும். கணவர் வருவதற்குள் வீட்டைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் கன்னத்தில் பொளேரென விழும் அறையில் தொடங்கி, சுவரில் தலையை மோதி உடைக்கும் அளவுக்குக் கொடுமை இருக்கும். கீதாவுக்கு எப்போதுதான் விடிவுக்காலம்?
மிதுனாவின் கணவன் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு, வீட்டாரின் நிர்பந்தத்துக்காக மிதுனாவைக் கட்டிக்கொண்டார். இதனால், மிதுனாவிடம் பட்டும்படாமலும்தான் நடந்துகொள்வார். ஆசையோ, பாசமோ, நேசமோ காட்டாமல், 'என்ன’ என்றால் 'என்ன’ என்பதோடு உரையாடல் நின்றுபோகும். கணவனுக்கு உடல் தேவை அழுத்தும் நள்ளிரவுகளில் மட்டும் சில நிமிடங்கள் மிதுனா விட்டம் நோக்கியாக வேண்டும். ஒரு வசவு, ஓர் அதட்டல்கூட இல்லாத அந்த வாழ்க்கையின் கொடூரத்தை மிதுனாவால் மட்டுமே உணர முடியும். மிதுனாவின் வாழ்க்கை?
நான்கு சுவர்களுக்குள் இப்படிப் பெண்களுக்கு எதிராகத் தினம் தினம் அரங்கேறிக்கொண்டு இருக்கும் வன்முறைக்குத் தீர்வுதான் என்ன?  
சராசரியாக வாழும் பெண்களுக்கு மட்டும்தான் இந்த நிலை என்றில்லை. சமூகத்தில் முற்போக்கான பெண்களுக்கு உதாரணங்களாகச் சொல்லப்படுவோரும்கூட குடும்ப வன்முறையில் இருந்து தப்பிக்க முடிவது இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஆங்கில எழுத்தாளர் மீனா கந்தசாமி. தான் காதலித்து மணந்த கணவன் சார்லஸ் அன்றனி என்கிற தர்மராஜா தன்னை அடித்துத் துன்புறுத்தத் தொடங்கியபோது, அதில் இருந்து தப்பிக்க வழியின்றித் தவித்திருக்கிறார் மீனா. ஒருகட்டத்தில் யாருடனும் பேசக் கூடாது, தொடர்புகொள்ளக் கூடாது என்று கட்டுப்படுத்தப்பட்டதோடு, அவருடைய மின்னஞ்சல் தொடர்புகளை அழித்தல், ஃபேஸ்புக் கணக்கை முடக்குதல், செல்போனில் உள்ள அனைத்து எண்களையும் அழித்தல் என்று அடையாள வன்முறையும் தொடங்கி இருக்கிறது. மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார் மீனா கந்தசாமி. ஒரு கட்டத்தில் தன் கணவருக்கு ஏற்கெனவே திருமணமான செய்தியை அறிந்தபோது, அவரை விட்டு வந்திருக்கிறார் மீனா கந்தசாமி.
இப்படி எல்லாத் தரப்புப் பெண் களையும் விட்டுவைக்காத இந்த குடும்ப வன்முறைக்கு என்ன காரணம்?
''சமூக மதிப்பீடுகளில் இருந்து தான் குடும்ப வன்முறை தோன்றுகிறது. ஆண்கள் பெண்களைவிட அதிக விஷயங்கள் தெரிந்தவர்கள் என்றும், பலசாலிகள் என்றும் கருத்து இருக்கிறது. பெண்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி, அவர்களை அடித்துத் துன்புறுத்தி அவர் களை நல்வழிப்படுத்தும் உரிமையும் கடமையும் ஆண்களுக்கு இருப்ப தாக இந்தச் சமூகம் நம்புகிறது. மனைவியை அடிக்கும் எந்தக் கணவனும் அதைத் தவறு என்று நினைப்பது இல்லை. 'என் மனைவி தவறு செய்கிறாள். நான் அவளைத் திருத்துகிறேன்’ என்றே அடிக்கும் ஒவ்வொரு கணவனும் நினைக் கிறான். வன்முறையின் கொடூரம் என்ன என்றால், அது உரையாட லைத் தடை செய்கிறது. பெண் களுக்குள் நம்பிக்கை இன்மையை விதைக்கிறது. வீட்டில் வளர்க்கும் விலங்குகளான நாய் அல்லது பூனைக்கு ஒப்பானவளாக ஒரு பெண்ணைத் தரமிறக்குகிறது'' என்கிறார் மீனா கந்தசாமி.
பெரும்பாலான பெண்கள் வீட்டுக்குள் நடக்கும் வன்முறையை வெளியில் சொல்வது இல்லை. அது ஒரு சாதாரண விஷயம் என்றே சிறு வயது முதல் போதிக்கப்பட்டு இருக்கிறது. கணவர் மீதோ, கணவர் வீட்டார் மீதோ காவல் துறையில் புகார் அளித்தால், அது கௌரவக் குறைச்சலாகிவிடும் என்று பெண்கள் கருதுவதே பல ஆண்களின் கேடயம். அப்படியானால், பாதிக்கப்படும் பெண்களுக்கு என்னதான் நிவாரணம்?
'விவகாரத்து வேண்டாம்; ஆனால், இந்தக் கொடுமைகளை என்னால் சகித்துக்கொள்ள முடியாது’ எனும் பெண்களுக்கானதே குடும்ப வன் முறைத் தடுப்புச் சட்டம். இந்தச் சட்டத்தின்படி காவல் துறைக்குச் செல்ல வேண்டியது இல்லை. இந்தச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால், மாவட்டம்தோறும் உள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் முறையிடலாம். பெரும்பாலும் பெண்கள்தான் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை அழைத்து கவுன்சிலிங் செய்வதுதான் அவர்களின் முதல் பணி. இந்தச் சட்டத்தின் கீழ் கணவர் மீது வழக்கு தொடுக்கலாம். வழக்கறிஞர் வைத்து வாதாட வசதியற்ற பெண்களுக்கு இலவச வழக்கறிஞர் சேவை யும் அளிக்கப்படுகிறது.
''வன்கொடுமைக்கு ஆளாக்கும் ஒரு மனிதனோடு வாழ இந்தச் சட்டம் நிர்பந்திக்கிறதா? ஏன் அந்தப் பெண் கணவனை விவாகரத்து செய்யவிடாமல் குடும்பத்துக்குள்ளேயே இந்தச் சட்டம் சமரசம் செய்துவைக்க முயல்கிறது?'' என்கிற கேள்வியோடு வழக்கறிஞர் அஜிதாவை அணுகியபோது, ''பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பணியிடத்திலோ, பொது இடத்திலோ நடந்தால் அவற்றுக்கான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், வீட்டுக்குள் நடப்பவற்றுக்கு மட்டுமே அப்படியானதொரு சட்டம் இல்லாமல் இருந்தது. அதனால், கேட்பார் யாரும் அற்ற நிலை இருந்தது. அதை இந்தச் சட்டம் மாற்றி அமைத்துஉள்ளது. அவ்வளவு எளிதாக குடும்ப பந்தத்தைவிட்டு நம் சகோதரிகள் பிரிந்து வர விரும்புவது இல்லை. சச்சரவுகளுக்குச் சமரசம் கண்டு குடும்பத்துக்குள்ளேயே வாழ விரும்புபவர்களுக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பு வழங்குகிறது'' என்றார்.
இந்தச் சட்டத்தின்படி புகார் அளிக்கப்பட்டால் யாரையும் கைதுசெய்ய சட்டத்தில் இடம் இல்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தால், எப்படி எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்படுகிறதோ,  அதைப் போலவே இந்தச் சட்டத்தின்படி புகார் அளித்தால் டி.ஐ.ஆர் (Domestic Incident Report) பதிவுசெய்யப்படும். அந்தப் புகாரின் அடிப்படையில், மாவட் டப் பாதுகாப்பு அதிகாரி புகாருக்கு உள்ளான நபரை அழைத்துப் பேசுவார்.
''இந்தச் சட்டம், 'புகுந்த வீட்டார்’ என்ப தற்குப் பதிலாக 'பகிர்ந்துகொள்ளப்பட்ட மண வீடு’ (Shared Householders) என்று அழகான பதத்தைக் கையாள்கிறது'' என்கிறார் அஜிதா. இந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண்ணை ஓர் ஆணோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ வீட்டில் இருந்து வெளியேற்ற முடியாது. திருமண வாழ்வில் அவளுக்குக் கணவன் வீட்டில் வாழ முழு உரிமை உண்டு. இதற்கு 'குடியிருப்பு உத்தரவு’ என்று ஓர் உத்தரவைப் பாதுகாப்பு அதிகாரி பிறப்பிப்பார். அவளுக்கு வேண்டிய பாதுகாப்பை வழங்க வேண்டியது வீட்டா ரின் கடமை. இதற்கான பாதுகாப்பு உத்தரவையும் தனியாகப் பாதுகாப்பு அதிகாரி பிறப்பிப்பார். இந்தப் பாதுகாப்பு உத்தரவை மீறினால் 20,000 அபராதமும்  ஓராண்டு சிறைத் தண்டனையும் உண்டு.
''கணவன் மீதோ, கணவன் வீட்டார் மீதோ புகார் அளித்தால் குடும்பம் சிதைந்துவிடும். வாழ்க்கை போய்விடும் என்று பல பெண்கள் அஞ்சுகிறார்கள். அப்படி பயப்படத் தேவை இல்லை. உண்மையில் குடும் பத்தில் நிகழும் சிக்கல்களைத் தீர்த்துவைத்து, வன்முறையில் இருந்து பெண்களைக் காக்கிறது இந்தச் சட்டம்'' என்று தைரியம் அளிக்கிறார் அஜிதா.
1098 என்ற தொலைபேசி எண்ணில் குடும்ப வன்முறை தொடர்பான புகாரை அளிக்கலாம். ''பெண்களிடமே இந்த எண்குறித்து போதிய விழிப்பு உணர்வு இல்லை. 'புள்ளிராஜா’ விளம்பரம் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்பு உணர்வைப் பரவலாக்கிய முயற்சிபோல, இந்தச் சட்டம் குறித்தும் அப்படியான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மகளிர் சட்ட உதவி மையச் செயலாளர் ஜான்சி.
இந்தச் சட்டம் குறித்த மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் ஜான்சி. ''திருமணமான பெண்கள் மட்டுமல்ல; பெற்றோரோடு வாழும் பெண்களும்கூட வீட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டால், புகார் அளிக்கலாம். பெண் காதலிப்பது பிடிக்காமல் தாங்கள் பார்த்த மாப்பிள்ளை யைத் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துவார்கள். அந்தப் பெண் மறுக்கும் பட்சத்தில் அறைக்குள் பூட்டிவைப்பது, அடித்துத் துன்புறுத்துவது, 'குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம்’ என்று எமோஷனல் பிளாக்மெயில் செய்வது போன்ற சித்ரவதைகளுக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் நிவாரணம் பெறலாம்'' என்று கூடுதல் தகவலுடன் முடிக்கிறார்.  
முகம் தெரியாத தோழி ஒருத்தி எழுதிய வலி மிகுந்த வரிகள் குடும்ப வன்முறையின் கோர முகத்தை உரத்துச் சொல்கின்றன...

'இன்று மலர்களைப் பெற்றேன். 
என் பிறந்த நாளுமல்ல... 
வேறெந்த விசேஷ நாளுமல்ல; 
எங்கள் முதல் வாக்குவாதம் நேற்றிரவு அரங்கேறியது. 
அவன் தன் தீ நாக்குகளால் என்னைப் பொசுக்கினான்; 
நான் அறிவேன் 
அவன் அதற்கு வருந்துகிறான் என்று
 இந்த மலர்களின் மூலம்.

இன்று மலர்களைப் பெற்றேன். 
எங்கள் மண நாளோ 
அல்லது 
வேறெந்த விசேஷ நாளுமோ அல்ல; 
நேற்றிரவு என் உடலைச் சுவரில் வீசி 
என் வலியைப் பிழிந்தான். 
நம்ப முடியாத ஒரு கொடூரக் கனவு போன்று இருந்தது. 
நான் அறிவேன் அவன் வருந்துகிறான்... 
இந்தப் பூக்கள் அவன் மனதைச் சொல்கின்றன;

இன்று மலர்களைப் பெற்றேன். 
இன்று அன்னையர் தினமோ 
அல்லது 
வேறெந்த விசேஷ நாளுமோ அல்ல; 
நேற்றிரவு அவன் கரங்கள் வன்மையாய் 
என்னை மீண்டும் தாக்கின 
முன்னெப்போதும் இல்லாதவகையில்... 
என்ன செய்வேன் அவனைப் பிரிந்து? 
பொருளாதாரமின்றி என் குழந்தைகளை 
எப்படிக் காப்பேன்?
நான் அஞ்சு கிறேன்... 
விலக எண்ணுகிறேன். 
ஆனால்... 
அவன் வருந்துகிறான்... 
நான் அறிவேன் 
இந்தப் பூக்கள்விடு தூது மூலம்.

இன்று மலர்களைப் பெற்றேன். 
இன்று விசேஷமான தினம். 
என் இறுதிச் சடங்குக்கான நாள். 
நேற்றிரவு அவன் கரங்களின் வன்முறையைத் தாங்காமல் 
என் உயிர் பிரிந்தது. 
நான் அவனைப் பிரியும் வலுவுள்ளவளாக இருந்திருந்தால்... 
இன்றைக்கு நான் மலர்களைப் பெற்றிருக்க மாட்டேன்!’

Sunday, July 15, 2012

மூன்று நிற வானவில்


தாம்பரம் செல்லும்  ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் பறந்துகொண்டு இருந்தன. கடலுக்குள் நீந்தும் ஒரு சிறிய மீனைப் போல என் ஸ்கூட்டி அந்தச் சாலையில் போய்க்கொண்டு இருந்தது. மனம் பரபரத்ததைப் போலவே என் வாகனமும் பரபரப்பாகச் சென்றுகொண்டு இருந்தது. முன்னால் செல்லும் வாகனங்களின் மிக அருகில் நான் சென்ற பின்னரும்கூட பிரேக் போட்டு வேகத்தைத் தடை செய்யப் பிடிக்கவில்லை. அப்படி ஓர் ஆர்வம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு முரளியைப் பார்க்கப்போகிறேன் என்பதே எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. இப்போது எப்படி இருப்பான் முரளி? என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. அவனுடைய அழகான முகம் கண் முன் வந்து நின்றது. என் வாகனத்தின் முன்னால் சென்ற வாகன அணிவகுப்பு எல்லாம் மறைந்து எங்கு பார்த்தாலும் முரளியின் பால் வடியும் குழந்தைப் பருவ முகமே தெரிந்தது. முரளி நல்ல அழகு. அவனை அழைத்துக்கொண்டு நடந்தால், சாலையில் எதிர்ப்படுபவர் எல்லோருமே அவனைக் 'குட்டிப் பையா’,  'செல்லம்’ என்று அவன் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சிவிட்டுத்தான் போவார்கள். சின்ன பிள்ளையான அவனோ எல்லோ ரிடமும் ஒட்டிக்கொள்வான். அவர்கள் ஒரு வார்த்தை பேசினால், நூறு வார்த்தைபேசு கிறவனாக இருந்தான். ஒவ்வொருவரிடம் இருந்தும் அவனைப் பிரித்தெடுத்துக் கூட்டி வருவதற்குள் உயிரே போகும்!
பத்தாம் வகுப்பு விடுமுறையின்போது ஊரில் உள்ள பெரியம்மா  வீட்டுக்குச் சென்றபோதுதான் முரளியை முதன்முதலாகப் பார்த்தேன். பெரியம்மா வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக் குழந்தை அவன். ''முரளிக் கண்ணா... நீ யாரு செல்லம்?'' என்று கேட்டால், அம்மாவையும் அப்பாவையும் ஏமாற்றக் கூடாது என்று ''அஸ்க்கு புஸ்க்கு... ஆராச்சும் ஒருத்தரைச் சொல்வேன்னுதான கேக்குறீங்க. நான் அம்மா - அப்பா செல்லம்!'' என்று பதில் சொன்ன முதல் நாளே, அவனை எனக்குப் பிடித்துவிட்டது. அங்கு இருந்த ஒரு மாதமும் அவனை என்னுடனேயே வைத்துக்கொண்டேன். அவனும் என்னிடம் நன்றாக ஒட்டிக்கொண்டு செல்லப்பிள்ளையாகிப்போனான். ''அக்கா... அக்கா'' என்று என்னைச் சுற்றிச் சுற்றி வந்தான்.
டவுனுக்கு சினிமாவுக்குப் போனாலோ, கடைக்குப் போனாலோ அல்லது எங்கும் போகாமல் இருந்தாலோகூட முரளி எனக்குத் தேவைப்பட்டான். அவனுடைய அழகான சுருள் சுருளான முடி நெற்றியில் மட்டும் கொஞ்சமாக வந்து விழும். அழகான பெரிய சிரிக்கும் கண்கள். அந்தக் கண்கள் 'பளிச்’ என்று இருக்கும். அந்தக் கண்களின் அழகுக்காகவே அவனைப் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். ''அது ஏன்க்கா எல்லாக் கடையிலயும் உப்பை மட்டும் வெளியே வெச்சிருக்காங்க?'' என்று படபடவெனக் கண்களை அடித்துக்கொண்டு அவன் கேட்பதே இதயத்தைக் கொள்ளை கொள்ளும். ''ஏன் வானம் ப்ளூ கலர்ல இருக்கு?'', ''ஏன் அந்த அண்ணன் உன்னைப் பார்த்து எப்பப் பாரு சிரிக்கிறான்?'', ''ஏன் நாம தினம் குளிக்கணும்?'', ''பூனை, நாயெல்லாம் யாரு குளிப்பாட்டுவாங்க?'' - இப்படி அவன் கேள்விகள் விரிந்துகொண்டே சென்றன. பல சமயம் எனக்குப் பதில் தெரியாத கேள்விகளாகக் கேட்டு என்னைத் திணறடித்தான்.
விடாது அவன் கேட்டுக்கொண்டு இருந்த கேள்விகளே அவனது புத்திசாலித்தனத்தை உணர்த்தின. அவன் வயதில் மற்ற குழந்தை களுக்குத் தெரியாத விஷயங்கள் அவனுக்குத் தெரிந்தன. அவனுக்கு நான் பாடம் கற்றுக் கொடுத்தேன். அவன் கற்றுக்கொண்ட வேகம் என்னை வியக்கவைத்தது. அந்த ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்த அன்று, ''அக்கா... நீங்க சொல்லிக் கொடுத்த தைத்தான் ஸ்கூல்ல சொல்லிக்கொடுக்குறாங்க. டீச்சர் போர்டுல எழுதுறதுக்கு முன்னாடியே நான் எழுதிட்டேன். 'யாரு சொல்லிக்கொடுத்தா?’னு டீச்சர் கேட் டாங்க. நான், 'எங்க அக்கா’னு சொன் னேனே!'' என்று என் கழுத்தைக் கட்டிக் கொண்டான். நான் அவனைத் தூக்கி முத்தமிட்டேன்.
மறுநாள் அவனுடைய அம்மாவும் அப்பாவும் என்னைத் தேடி வந்து நன்றி சொன்னார்கள். முரளியின் அம்மா சரிதா அக்காவும் எனக்கு நெருக்கமானாள். முரளியின் அப்பாவுக்கு மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்கும் வேலை. அவர் கொண்டுவரும் பணம் வாய்க்கும் வயிற் றுக்கும் சரியாக இருந்தது. சரிதா அக்கா ரொம்ப அழகு. அவளுக்குத் திருமணம் ஆகி விட்டது என்று சொன்னால்  யாரும் நம்ப மாட்டார்கள்.
முரளிக்காகவே ஒவ்வொரு விடுமுறையின்போதும் பெரியம்மா வீட்டுக்குச் செல்வது எனக்கு வழக்கமாகி இருந்தது. முரளியை அழைத்துக்கொண்டு வெளியே செல்வது எனக்குப் பிடித்தமான ஒன்று. வெளியே செல்லும்போது அவன் என் கைகளைப் பிடித்துக்கொள்வான். ஒரு நொடிகூட விட மாட்டான். அவன் கைகளின் மென்மை என்னை வியக்கவைக்கும். குழந்தைகளுக்கே உரிய மென்மையும் மிருதுத்தன்மையும்கொண்ட அந்தக் கைகளைப் பற்றிக் கொள்வது எனக்கு விருப்பமானதாக இருந் தது. ஒவ்வோர் ஆண்டும் விடுமுறைக்குச் செல்லும்போதும் அவன் எவ்வளவு வளர்ந்திருக்கிறான் என்பதைப் பார்க்கும் ஆவலுடன் செல்வேன். அவன் கைகளின் மென்மை குறைந்திருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் அதே ஆவலுடன் கைகளைப் பற்றிப் பார்ப்பேன். ஆள்தான் வளர்ந்தானேயழிய, அவன் கரங்களில் குழந்தைமை பெருகிக்கொண்டே இருந்தது. வளர வளர முரளியின் கேள்விகள் அதிகரித்தன. அவனுடைய கேள்விகளுக்கு ஆசிரியர்களேகூடச் சில சமயம் உடனே பதில் சொல்ல முடியாமல் திணறுவார்களோ என்று தோன்றும்.
''முரளி... நீ என்னவாகப்போறே?'' என்று சரிதா அக்கா கேட்டபோது அவன் சட்டென்று சொன்னான்... ''பெரிய்ய்யவனாவேன்!''
''ஆகி..?''
''இப்பவே கேட்டா எப்புடிம்மா..? தெரியலையே!'' என்றான். சரிதா அக்கா விடாமல், ''டாக்டராவியா? எல்லாருக்கும் ஊசி போடலாம்'' என்றாள். ''தெரியாது!'' என்றான். எனக்குத் தெரிந்து சரிதா அக்கா விடாமல் அவனை ''டாக்டராவியா?'' என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். அவன் ஒருபோதும் ''சரி'' என்று சொன்னது இல்லை. அக்காவுக்கு அவனை டாக்டர்ஆக்க வேண்டும் என்பதுதான் ஆசை.
சரிதா அக்கா ஒருநாள் அவனை மடியில்வைத்துக் கொஞ்சிக்கொண்டு இருந்தபோது நான் போய் அவனை அழைத்தேன். அப்போதும் அக்கா ''டாக்டராவியா?'' என்று கேட்க, எப்போதும் ''தெரியாது'' என்று சொல்பவன் அன்றைக் குப் படாரென்று ''முடியாது'' என்றான். அக்காவின் முகம் மாறியது. ''அக்கா, அவன் புத்திசாலிக்கா! பெரிசா வருவான் பாருங்க. டாக்டராத்தான் வரணும்னு என்ன? அதெல்லாம் முரளி ஜம்முனு வந்துடுவான் பாருங்க'' என்றேன். ''ஆயிஷானு ஒரு கதை. அதுல வர்ற பொண்ணு... சின்ன பொண்ணு. அப்படி ஒரு அறிவு அவளுக்கு. ஸ்கூல்ல அவள் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாம டீச்சருங்க எல்லாரும் முழிப்பாங்க... அப்படி ஒரு புத்திசாலிப் பொண்ணு. அந்தப் பொண்ணு மாதிரிதான் இருக்கான் நம்ம முரளி!'' என்றேன். அக்காவுக்குப் பெருமை பிடிபடவில்லை.
முரளியின் மிடுக்குக்கும் அறிவுக்கும் அவன் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவான் என்றும் எனக்கு அவ்வப்போது தோன்றியது உண்டு. ஆனால், இத்தனை புத்திசாலிப் பையன் எதற்குக் கைகட்டி அரசாங்கத்துக்கு வேலை பார்க்க வேண்டும் என்று அந்த நினைவைப் புறந்தள்ளிவிடுவேன். ஓயாமல் கேள்வி கேட்கும், சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளும் அவனுடைய அறிவைப் பார்க் கையில், அவன் ஒருவேளை விஞ்ஞானி ஆவானோ என்று தோன்றியது. வழக்கறி ஞராக, அரசாங்க அதிகாரியாக, ஆசிரிய ராக என்று பலவாறாக அவனைக்கற்பனை செய்து பார்த்தாலும் எதிலும் அவனைப் பொருத்த முடியவில்லை.
வாகனத்தின் ஹாரன் சத்தம் நினைவுகளைக் கலைத்தது. பல்லாவரத்தை நெருங்கிவிட்டு இருந்தேன். பேருந்து நிலையத்தில் கூட்டம் நின்றுகொண்டு இருக்க... அதில் கண்களுக்குப் பட்ட இள வட்டப் பையன்களைப் பார்த்தேன். இவர் களில் யார் மாதிரி முரளி இப்போது இருக் கக்கூடும்? இப்போது அவனுக்குப் பதினாறு, பதினேழு வயது இருக்கும். எனக்கு அவனைப் பார்க்கும் ஆவல் அதிகமாகியது. என் வாகனத்தை அருகில் இருந்த ஒரு ஹோட்ட லில் நிறுத்திவிட்டு, காபி குடிக்க அமர்ந் தேன். முரளிக்கு நான் போடும் காபி என்றால் ரொம்பவே பிடிக்கும் என்பது நினைவுக்கு வந்தது.
சரிதா அக்காவிடம் இருந்து காலை பத்து மணிவாக்கில் போன் வந்தபோது சந்தோஷமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. நெடுநாளைக்குப் பிறகு பேசும் சந்தோஷம் அக்காவின் குரலில் தெரிந்தது. அக்காவின் கணவர் கடை வைத்திருந்தார். அதில் நஷ்டமாகி கந்துவட்டிக்குக் கடன் வாங்கி, இப்போது சாப்பாட்டுக்கே குடும்பம் கஷ்டப்படுவதைச் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. முரளி என்ன படிக் கிறான் என்று கேட்டேன். சரிதா அக்கா வின் குரல் கம்மியது. குற்றவுணர்வு தொனிக்கும் குரலில் சொன்னாள், ''அவனைப் படிக்கவைக்க முடியலை. வேலைக்குப் போறான்!'' என்றாள். நான் அதிர்ந்துபோனேன். என்னால் எதுவும் பேச முடியவில்லை. ''ஏன்க்கா?'' என்றேன். பலவீனமான, ஏமாற்றம் அடைந்த குரலுடன் நான் கேட்டது எனக்கே கேட்கவில்லை. ''வீட்டுக் கஷ்டம்தான். வேறென்ன? புள்ளைய வேலைக்குப் போகச் சொல்ல எனக்கும் விருப்பம் இல்லை. அவனை ஸ்கூலைவிட்டு நிப்பாட்டியாச்சு. நாலு காசு வருமேனு அவனை வேலைக்கு அனுப்பினோம். வேற வழியில்ல!'' என்றாள் தயக்கத்துடன்.  ''அக்கா... அவன்... அவன்... எப்படி இருக்க வேண்டிய ஆளு தெரியுமாக்கா? ஏன்க்கா?'' நான் விசும்பத் தொடங்கினேன். சரிதாக்கா எதுவும் பேசவில்லை. அவள் மூக்குறிஞ்சும் சத்தம் மட்டும் அவள் அழுதுகொண்டு இருக்கிறாள் என்று உணர்த்தியது. அவன் என்ன வேலை பார்க்கிறான் என்று கேட்டேன். 'கிடைச்ச வேலையைச் செய்வான். இப்போகூட அவனுக்காகத்தான் உன்னைக் கூப்பிட்டேன். முரளி அங்கேதான் மெட்ராஸுக்கு வந்திருக்கான். வந்த இடத்துல பணத்தை யாரோ பிக்பாக்கெட் அடிச்சுட்டாங்களாம். யாருகிட்ட கேட்குறதுனு அவனுக்குத் தெரியலை. எனக்கு போன் பண்ணினான். எனக்கு மெட்ராஸ்ல யாரைத் தெரியும்... உன்னைத் தவிர? அதான் உன் நம்பரை உங்க பெரியம்மாகிட்ட வாங்கி இப்போ பேசுறேன். அவனுக்குக் கையில ஒரு நூறோ எரநூறோ குடுக்க முடியுமா?'' அக்கா குரலில் நடுக்கமும் தயக்கமும் தெரிந்தன.
''சரிதாக்கா... நான் பார்த்துக்குறேன். அவன் நம்பர் குடுங்க!'' என்று எண்ணைக் குறித்துக்கொண்டேன்.
''அவனைப் படிக்கவைக்க முடியலைனு கஷ்டமா இருக்கு. அறிவான பையனை இப்படி வேலைக்கு அனுப்புற நெலமை வந்துடுச்சேனு கஷ்டப்பட்டோம். ஆனா, என்ன செய்யிறது? அவருக்கும் நடுவுல ஆக்சிடென்ட்ல கால்ல அடிபட்டு எக்கச்சக்க செலவாச்சு. அவருக்கு எஸ்.டீ.டி. பூத்துக்கு அப்ளிகேஷன் போட்டிருக்காங்க. இன்னும் வரலை. எப்படிப் பொழைக்க? அதனால, நான் ஊர்ல ஒரு ஜவுளிக் கடையில வேலை பார்க்குறேன்!''- அக்காவின் குரல் அடைத்துக்கொண்டது.
''ஜவுளிக் கடையிலயா?''- நான் அதிர்ச்சியுடன் கேட்டேன். நாளிதழ்களில் நான் பார்த்த செய்திகளும் பார்த்த சினிமாக்களும் நினைவுக்கு வந்து பதற்றமாகி, ''ஏன்க்கா அங்கெல்லாம் போறீங்க?'' என்றேன். அக்கா வெறுமையாகச் சிரித்தாள். ''முரளி அப்பாவுக்கு மருந்து மாத்திரை மட்டும் மாசம் மூவாயிரம் ஆகும். அதுக்காகத்தான். எப்படியாச்சும் அவரைச் சரிபண்ணி நல்ல நெலமைக்குக் கொண்டாந்துடணும். அதுக்காகத்தான் நானும் முரளியும்...'' - அவள் குரல் கம்மியது. அதில் தெரிந்த விரக்தியும் வெறுமையும் என்னைச் சுழற்றியடித்தன.
பெரியம்மா வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டதால், நான் பல ஆண்டுகளாக அவர்களைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. கடைசியாக முரளியை என் திருமணத்தில் வைத்துப் பார்த்ததுதான். குடும்பத்தோடு வந்திருந்தார்கள். மேடையில் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பின் முரளி என் அருகில் வந்து நின்றுகொண் டான். அப்போது வளர்ந்திருந்தான். என்னைப் பார்த்துச் சிரித்தான். ''அக்கா... புடைவையில சூப்பரா இருக்கீங்க!'' என்றான். நான் எனக்குக் கொடுக்கப்படும் பரிசுப் பொருட்களை அவனிடம் கொடுத்து பின்னால் வைக்கச் சொன்னேன். நெடுநேரம் கால்கடுக்க என்னோடு நின்று அந்த வேலையைச் செய்தான். ''மாப்பிள்ளை அழகா இருக்காரு!'' என்று எனக்கு மட்டும் கேட்குமாறு கிசுகிசுத்தான். சாப்பாட்டுப் பந்தியில் எங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டான். மண்டபத்தைக் காலி செய்துவிட்டு வீட்டுக்குப் போனோம். நான் என் தோழிகளுடன் சென்று அமர்ந்து சற்றே கதை பேசிக்கொண்டு இருந்துவிட்டு அப்படியே தூங்கிப்போனேன்.
கண் விழித்தபோது முரளியைக் காணவில்லை. கடற்கரைக்கு விளையாடப் போயிருக்கிறான் என்றார்கள். எட்டரை மணிக்குத்தான் நான் அவனைப் பார்த் தேன். கேட்டைத் திறந்துகொண்டு வீட்டுக் குள் வந்தவன் என்னை நோக்கி ஓடி வந்தான். அவனுக்கு மூச்சிரைத்தது. 'டொட்டடொய்ங்’ என்று வாயாலேயே மியூஸிக் போட்டுவிட்டு, கைகளை விரித்தான். புத்தம் புதிய பேனா அவன் கைகளில் மினுமினுத்தது.
''உங்களுக்குத்தான்க்கா... கல்யாணத்துக்கு கிஃப்ட்!'' என்றான். ''காலையில கொடுக்காம இப்ப வந்து குடுக்குறியேடா!'' என்றேன். ''பீச்சுக்குப் போற வழியில இதை வாங்கினேன். நாங்க காலையில சீக்கிரமே ஊருக்குப் போயிடுவோம். நீங்க இன்னிக்கு சீக்கிரம் ரூமுக்குள்ள போயி தூங்கிடுவீங்கல்ல. காலையில லேட்டாத்தானே எந்திரிப்பீங்க... அதுக்குள்ள நாங்க போயிடுவோம். அதான் இப்ப தரேன்!'' என்று அவன் சொல்ல... என் முகம் சிவந்தது.
வீட்டில் பெரியவர்கள் மத்தியில் அவன் விகல்பம் இல்லாமல் சொல்லிவிட... நான் நெளிந்தவாறே, ''பேனா அழகா இருக்கு... தேங்க்ஸ்!'' என்றேன். அவன் சிரித்தான். சிரிக்கும்போது முரளி இன்னும் அழகு. வளர வளர முரளி இன்னும் இன்னும் அழகாகிக்கொண்டே இருக்கிறான் என்று தோன்றியது. முன்னைவிட அவன் முகத் தில் அறிவுக் களை கூடியிருந்தது.
சரிதா அக்கா அவன் வகுப்பில் முதல் மாணவனாக வருவதாகக் கூறினாள். மாநில அளவில் நடந்த பொது அறிவு விநாடி வினா போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றதை, பாட்டு, நடனம் என்று ஒன்றையும் விடாமல் கலந்துகொண்டு அவன் பரிசு பெறுவதை என்னிடம் கூறும்போது, அக்காவின் முகத்தில் தெரிந்த பெருமிதமும் சந்தோஷமும் கண்ணிலேயே நிற்கின்றன. 'செல்லமே’ என்று அவனுடைய மென்மையான கரங்களைப் பற்றிக்கொண்டேன். அன்று பார்த்ததோடு சரி! அவனை அதன் பின் நான் இப்போதுதான் பார்க்கப்போகிறேன்.
காபியைக் குடித்து முடித்திருந்தேன். சரிதா அக்கா கொடுத்த எண்ணுக்கு அழைத்தேன். முரளியுடன் பேசப்போகிறேன். எனக்குச் சந்தோஷம் மனதை நிறைத்தது. மறுமுனையில் ''யாரு?'' என்ற குரலுக்கு ''முரளி..'' என்று நான் இழுக்க... ''முரளிதான் பேசுறேன்... நீங்க!'' என்ற அந்தக் குரல்... இது அவன் குரலா? அப்படித் தெரியவில்லையே... எனக்கு உறைத்தது. அவன் சின்ன பையனா இன்னும்? பதின்பருவ வயதுக்கே உரிய பையன்களின் குரல் அது. லேசாக உடைந்து ஓர் ஆணின் குரலாகவும் இல்லாமல் ஒரு சின்னப் பையனின் குரலா கவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் இருந்தது.
''முரளீ... நான் அக்காடா!'' என்றேன். மறுமுனையில் அவன் குரலில் உற்சாகம்.
''அக்காஆஆஆ... எப்படிக்கா இருக் கீங்க... எத்தனை நாளாச்சு பார்த்து?'' என்று ஏறத்தாழ கூவினான்.
''நான் பல்லாவரத்துல இருக்கேன் முரளீ... நீ எங்கே இருக்கே?'' என்றேன்.
''நான் தாம்பரம் வசந்தபவன் பக்கத்துல இருக்கேன்'' என்றான். ''சரி... அங்கேயே இரு. நான் வரேன் என்ன?'' என்றுவிட்டு தொடர்பைத் துண்டித்தேன்.
வெளியே வந்து வண்டியை எடுத்துக்கொண்டு தாம்பரம் நோக்கிச் செலுத்தினேன். வசந்தபவன் வாசலில் நிறுத்தினேன். எங்கே அவன்? தேடினேன். ஒரு டிரான்ஸ்ஃபார்மருக்கு அருகில் நின்றுகொண்டு அவனுக்கு அழைத்தேன். ''முரளி... டிரான்ஸ் ஃபார்மர் பக்கத்துல வா!'' என்றேன். ''இதோக்கா!'' என்றுவிட்டுத் துண்டித்தான். இரண்டு நிமிடங்கள் காத்திருந்தேன். ஆளைக் காணவில்லை. மீண்டும் கைபேசியை எடுக்க முனைந்தபோது, பின்னால் இருந்து கேட்டது அந்தக் குரல்.... ''அக்கா!''
திரும்பிப் பார்த்தேன். அதிர்ந்து நின்றேன். இவன் முரளியா? இது... இது... முரளியா? இளைத்துப்போய்... கருத்துப்போய்... முகம் கை கால்கள் எல்லாம் தோலுரிந்து. ஆனால், அந்தப் பளிச்சிடும் கண்கள் அது முரளிதான் என்றன. என்னால் நம்ப முடியவில்லை. பேச்சு எழவில்லை. ''முரளி!'' என்று சன்னமான குரலில் அழைத்தேன். ''எப்படிக்கா இருக்கீங்க? எத்தனை வருஷம் ஆச்சு?'' என்றான். திருமணத்தன்று நான் பார்த்த அவனுடைய மலர்ந்த முகம் நினைவுக்கு வந்தது. அந்த முரளியா இது? எப்படி இப்படிப் கருத்துப்போனான்? என்னால் அது முரளிதான் என்பதை நம்ப முடியவில்லை. அவன் முகத்தையே பார்த்தேன். ''என்னக்கா அப்படிப் பார்க்குறீங்க?'' என்றான்.
''ஒண்ணுமில்ல..'' என்றவாறே அவனை அழைத்துக்கொண்டு வசந்தபவனுக்குள் நுழைந்தேன். எதிரெதிரில் அமர்ந்தோம்.
''என்ன சாப்பிடுறே!'' என்றேன்.
''நீங்க சூப்பரா காபி போடுவீங்கள்ல... ம்... இப்போ வாங்கியாவது குடுங்க!'' என்றவனைக் கட்டாயப்படுத்தி, தோசை சாப்பிடவைத்து, பிறகு காபி வாங்கிக் கொடுத்தேன்.
''உங்க டேஸ்ட் வராதுக்கா!'' என்றான்.
''முரளி... அதையெல்லாம் ஞாபகம் வெச்சிருக்கியா?'' என்றேன். ''அதெப்படி மறக்கும்? உங்களுக்கு ஒரு பேனா குடுத்தேனே அது எங்கே?'' என்றான். நான் விழித்தேன். ''உங்க கல்யாணத்துக்கு கிஃப்ட் குடுத்தேனே... அது எங்கே?'' என்றான். சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், வீட்டில் பத்திரமாக இருப்பதாகப் பொய் சொன்னேன்.
''நீங்க முன்னைவிட கொஞ்சம் குண்டா கிட்டீங்க!'' என்றான். நான் சிரித்தேன். ''வீட்டுக்குப் போகலாம்... வா!'' என்றேன். வீடு எங்கே இருக்கிறது என்கிற அவன் கேள்விக்கு, 'அசோக் நகர். அரை மணி நேரத்துல போயிடலாம்’ என்றேன். ''இல்லேக்கா! அவ்வளவு தூரம் வந்தா லேட்டாயிடும். இன்னொரு நாள் வர்றேன்!'' என்றான்.
சரிதா அக்கா கூறியதுபோல அவனுக்கு வெறும் 200 ரூபாய் தர மனம் இடம் கொடுக்கவில்லை. அலுவலக நண்பரிடம் 1,000 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டுதான் கிளம்பியிருந்தேன். திரும்பிப் போவதற்கு பெட்ரோல் போட 50 ரூபாய் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, என்னுடைய பர்ஸில் இருந்து 1,000 ரூபாயை எடுத்து அவன் கையில் கொடுத்தேன்.
''அக்கா! இவ்வளவு வேணாம். ஊருக்குப் போகத்தான் காசில்லக்கா. அதுக்குமட்டும் குடுங்க!'' என்றான்.
''பரவாயில்லை வெச்சுக்கோ முரளி...'' என்று அவன் கையில் திணித்து ''ஊருக்கு எப்படிப் போகப்போறே?'' என்றேன்.
''இங்கே ஏறினா சீட் கிடைக்காதுக்கா... கோயம்பேடு போயிடுறேன். ஆவடி, அம்பத்தூர் பஸ்ல ஏறினா போயிடலாம்!'' என்றான். ''இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும்?'' என்றேன் ஆச்சர்யமாக.
''இங்கேதான் இருந்தேன்க்கா. ஒரு ஆபீஸ்ல ஆறு மாசம் ஆபீஸ் பாயா இருந்தேன். ரெண்டாயிரம் குடுத்தாங்க. பஸ்ல போகும்போது ஃபுட்போர்டுல அடிச்சுக் கீழே விழுந்துட்டேன். மூணு மாசம் ஆஸ்பத்திரியில இருந்தேன். அதனால அம்மா பயந்து ஊருக்கே வரச் சொல்லிட்டாங்க. போயிட்டேன்!'' என்றான். மனதைப் பிசைந்து வலிப்பதுபோல் இருந்தது.
வாய் பேசிக்கொண்டு இருந்தாலும் அவனிடம் வேறு ஏதோ ஒன்றைக் கேட்க வேண்டும் என்று மனம் துடித்துக்கொண்டு இருந்தது. அவன் என் ஸ்கூட்டிக்கு அருகில் வந்து, ''உங்களுதாக்கா? நல்லாருக்கு!'' என்று வண்டியின் மேல் அமர்ந்துகொண்டான். இப்படித்தான் பெரியம்மா வீட்டு சைக்கிளின் மேல் அவன் உட்கார்ந்துகொள்வான். நான் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டு மிதிப்பேன். சக்கரம் சுற்றுவதைக் கண்டு சிரிப்பான். அப்புறம் கொஞ்சம் வளர்ந்த பின் சைக்கிளில் வெளியே தெருவில் வலம் வர வேண்டும் என்று அடம்பிடித்து அழைத்துச் செல்லச் சொல்வான். அவனுக்காக நான் சைக்கி ளின் பின்னால் அவனை அமர்த்திக்கொண்டு இரண்டு தெருக்களைச் சுற்றிவிட்டு வருவேன்.
''வண்டியில ஒரு ரவுண்ட் போகலாமா?'' என்றேன். அவன் சற்று யோசித்துவிட்டு, ''வேணாம்க்கா! ஊருக்குப் போகணும். அப்பாவுக்கு ஆஸ்பத்திரி செலவுக்கு வாங்கின காசுக்கு நாளைக்குள்ள வட்டி கட்டணும். ஒருத்தர்கிட்ட கேட்டிருக்கேன். தர்றேன்னுருக்கார். அதை வாங்கணும். இருட்டுறதுக்குள்ள போனாத்தான் உண்டு. அதனால கிளம்பட்டுமாக்கா?'' என்றான்.
எனக்குள் எதுவோ உடைந்தது. இவன் சின்னப் பையன் இல்லை. பொறுப்பாக வீட்டுக் கடனுக்கு வட்டி கட்டும் அளவுக்கு வளர்ந்துவிட்ட முரளி. அப்போதுதான் அவன் முகத்தை நன்றாக உற்றுப்பார்த்தேன். அரும்பிய மீசை, அடர்த்தியான புருவங்கள், கசங்கலான பழைய சட்டை, நைந்த பேன்ட் என்று ஒரு தினுசான கோலத்தில் இருந்தான். எனக்கு ஏதோ செய்தது. அவனுக்கு ஒரு பேன்ட்- ஷர்ட் எடுத்துக் கொடுக்கலாமா என்று ஒரு யோசனை ஓடியது. ஆனால், அதை அவனிடம் சொல்லவே சங்கடமாக இருந்தது. ஒருவேளை பழைய உடுப்புகளைப் போட்டிருப்பதால் பரிதாபப்பட்டு நான் வாங்கித் தருகிறேன் என்று நினைத்துவிடுவானோ என்று பயமாக இருந்ததால் அந்த நினைவைப் புறந்தள்ளினேன். நான் தூக்கி வளர்த்த முரளியா இவன்? இத்தனை பெரியவனாக... எங்கே போனது முரளியின் அழகு..? யார் போலவோ அல்லவா இருக்கிறான்..? பெருமூச்சு விட்டேன்.
''அக்கா... கிளம்பட்டுமா?'' என்றான். நான் தலையாட்டினேன். ''தேங்க்ஸுக்கா. நீங்க இல்லாட்டி நான் ஊர் திரும்ப என்ன பாடுபட்டு இருப்பேனோ?'' என்றான்.
''ச்சீ...ச்சீ... இப்படியெல்லாம் பேசக் கூடாது! அக்காகிட்ட தேங்க்ஸ் சொல்லக் கூடாது!'' என்றேன்.
''சரி... வாபஸ்!'' என்று சிரித்தவன் கையசைத்துப் புறப்பட்டான். நான்கைந்து அடிகள் சென்ற பின் அவனைக் கூவி அழைத்தேன். நின்று திரும்பிப் பார்த்தான். அருகே நெருங்கி அவன் கைகளைப் பிடித்தேன். அவனது உள்ளங்கை காய்த்துப் போய் சொரசொரவென்று இருந்தது. என் கைகளில் முட்கள் குத்திய உணர்வு. அவனுடைய பளிச்சிடும் கண்களைப் பார்த்தவாறே கேட்டேன்.
''ஏண்டா இப்படி ஆயிட்டே?''
''எப்படி?''
''கருத்துப்போய், இளைச்சுப்போய், தோலெல்லாம் ஒரு மாதிரியாகி... ஏன்?''
''ஆங்... கட்டட வேலைக்கும் மூட்டை தூக்குற வேலைக்கும் போனா அப்படித்தான்!''- சிரித்துக்கொண்டே சொன்னான். நான் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தேன். என் இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டு என்னிடம் கேட்டான்.
''அக்கா! மெட்ராஸ்ல எனக்கு ஒரு வேலை பார்த்துக் குடுப்பீங்களா? எங்கேயுமே சம்பளம் சரியா தர்றதில்ல. எவ்வளவு வேலைன்னாலும் செய்வேன்க்கா. எவ்ளோ வெயிட்னாலும் தூக்கிடுவேன். ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்கக்கா!''
நான் அழத் தொடங்கினேன்!