Saturday, December 18, 2010

வாத்சாயனாரின் காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கோயில்களை தரைமட்டமாக்க வேண்டும்


தலித் முரசு - காஞ்சா அய்லய்யா நேர்காணல் - பகுதி IV



நீங்கள் பல தடைகளைக் கடந்து, உலக அளவில் உங்களை நிரூபித்திருக்கிறீர்கள். இளம் ஆய்வாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் முன்மாதிரியாகவும் திகழ்கிறீர்கள். அவர்கள் அறிவுத்தளத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை என்பது, இன்னமும் உலகத்தால் விளங்கிக் கொள்ளப்படாத, அறியப்படாத ஓர் அறிவுக் களஞ்சியமாகவே இருக்கிறது. இந்திய மக்களின் மனங்களில் உலகத்திற்கான அறிவு கொட்டிக் கிடக்கிறது. நான் கிராமங்களை கூறுகிறேன். அறிவியல், தொழில்நுட்பம், உற்பத்தி, இந்து மத எதிர்ப்பு ஆகியவை நூல்களில் கொண்டுவரப் படுவதில்லை; பதிவு செய்யப்படுவதில்லை. என்னைப் பொருத்தவரை, அய்ரோப்பா, சீனா போன்றவை சோர்ந்து விட்டன. நல்லவேளையாக சுயநலமிக்க பார்ப்பனியத்தால் – படைப்பாற்றலையும், அறிவாற்றலையும் தரமுடியாமல் போனதால், இன்னும் இந்தியாவின் கிராமங்களிலுள்ள தலித் – பெரும்பான்மை சமூகங்களில் அறிவுச் சுரங்கங்கள் இருக்கின்றன. பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் வென்று விட்டால் மிஞ்சுவது எதிர்காலத்தில் அறிவியலே. உங்கள் கிராமத்தில் அமர்ந்தோ, அறிவியல் சோதனைக்கூடத்தில் அமர்ந்தோ இவ்வுலகை மாற்ற முடியும். இதைத்தான் இணையம் சாத்தியமாக்கியிருக்கிறது. இருப்பினும், உலக அறிவியலின் பார்வையில் படாமல் இன்னமும் மறைவாக இருக்கும் ஒரு பகுதி இருக்கிறது. அதுதான் இந்தியா. தலித் – பெரும்பான்மை இந்தியா! இதைத்தான் நான் இந்நூலில் சொல்லியிருக்கிறேன்.

நாம் நம் மக்களின் மனங்களிலிருந்து பார்ப்பனியத்தை களைந்தெறிய வேண்டி இருக்கிறது. பார்ப்பனியத்தைவிட, இந்து மதத்தையே தூக்கியெறிய வேண்டியிருக்கிறது. நம் நாட்டை இந்து மதத்திலிருந்து விடுவிக்க வேண்டும். இதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இந்தியா ஒரு கிறித்துவ நாடாகவோ, பவுத்த நாடாகவோ, இஸ்லாமிய நாடாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குக் கவலையில்லை. ஆனால், அது ஓர் இந்து நாடாக மட்டும் இருக்கக் கூடாது என்பதே முக்கியமானது. ஏனெனில், இந்து மதம் அறிவியலுக்கெதிரானது. மனித இனத்திற்கெதிரானது. உற்பத்திக்கெதிரானது.

மதச்சார்பற்ற இந்துக்களையும் நாம் கையாள வேண்டியிருக்கிறது. வகுப்புவாத இந்துக்களிடம்கூட அத்தனை பிரச்சனையில்லை. ஆனால், மதச்சார்பற்ற இந்துக்கள்தான் இந்து மதத்தை காப்பாற்றுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத்காரர்கள் கூட இந்து மதத்தைக் காப்பாற்ற முடியாது. எடுத்துக்காட்டாக, "தேசிய இந்து மதசார்பற்ற உதவித் தொகை'யை எடுத்துக் கொள்ளுங்கள். அவை மேற்கு வங்கத்திலிருந்து, மகாராட்டிராவிலிருந்து, தமிழ் நாட்டிலிருந்து வருகின்றன. மகாராட்டிரா பவுத்தத்தோடு தொடர்புடையது. தமிழ் நாடு பெரியாரோடு தொடர்புடையது. மேற்கு வங்கம் கம்யூனிஸ்டுகளோடு தொடர்புடையது. ஆனால், வங்கம் இன்று உலகின் மிக ஏழ்மையான பகுதியாகிவிட்டது. ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளை விட வங்கம் இன்று ஏழ்மையான இடமாகிவிட்டது. வங்கத்தில் தலித் அறிவுஜீவி என்று எவரும் கிடையாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்துகூட ஓர் அறிவுஜீவிகூட இல்லை. இந்த மதச்சார்பற்ற இந்துக்களை, மிதவாத இந்துக்களை கையாளாமல் விட்டால், இந்து மதத்தை ஒழிக்க முடியாது. அவர்கள் இந்து மதத்தை காப்பவர்களாக மாறிவிட்டனர். ""வகுப்புவாத இந்து மதம் நல்லதல்ல. ஆனால், இதற்கு இந்து மதத்தை குற்றம் சொல்ல முடியாது'' என்கின்றனர்.

இந்து மதத்தில் உள்ளவற்றைப் பாருங்கள். கொலை செய்யும் தெய்வங்களெல்லாம்கூட இருக்கின்றன. தெய்வீகம் என்று சொல்லப்படக்கூடிய இடத்திலிருந்து வரும் நேர்மறையான அன்பைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒழுக்கத்தை அறிவுறுத்துபவையாக அவை மாறும்போது – நான் இந்த இந்து தெய்வங்களைவிட புத்தர், ஏசு, நபிகள் ஆகியோர் அறிவுறுத்திய ஒழுக்கங்களையே பரிந்துரைப்பேன். நிச்சயமாக பிரம்மன், இந்திரன், ராமன், கிருஷ்ணன் ஆகியோர் செய்த கொலைகள், பாலியல் வன்முறைகள், திருட்டுத்தனங்கள் ஆகியவற்றை அல்ல. நான் வாத்சாயனாரின் காமசூத்திரத்தை பரிந்துரைக்க மாட்டேன். 64 வகைகளில் பாலியல் தொழிலாளியுடன் பாலுறவு கொள்வது எப்படி என்பதை விளக்கும் இவைகளை கற்றுக் கொடுத்தால், எய்ட்ஸ்தான் பரவும். ஆண் – பெண் உறவு நிலைமைகள் ஏசு கூறியதைப் போல இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். புத்தரைப் பொருத்தவரை, இந்த விஷயத்தில் அவருடைய கருத்து என்னவாக இருந்தது என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை. ஆனால், ஏசு என்ன சொல்கிறார் என்றால், ""கடவுள் கணவனையும் மனைவியையும் சரிபாதியாக ஓருடலில் படைத்தார்'' என்கிறார். இதில் ஒரு நீதி இருக்கிறது. அதனால்தான் அய்ரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறையுள்ளது.
ஆனால், இந்தியாவில் உள்ள இந்து மதத்தில், சாதியை அடிப்படையாகக் கொண்டு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்தான் நடக்கின்றன. காதல் திருமணங்களும், இந்து மதமும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க முடியாது. என்னுடைய போர், இனி மதச்சார்பற்ற இந்துக்களிடம்தான். இந்து மதத்தை தோற்கடிக்கவில்லையெனில், அதை அழிக்க முடியாது. கிறித்துவத்தைப் பரப்புவதை சுதந்திரமான மனித உரிமையாக விரிவுபடுத்த வேண்டும். நல்ல மதங்கள் மக்களிடையே போட்டி போட வேண்டும். போட்டி என்பது அடிப்படை உரிமை. இந்த இடத்தில் மார்க்சிஸ்டுகளோடு  நான் ஒத்துப்போகவில்லை. நமக்கு இந்தியாவில் உலகளாவிய ஆன்மிகப் போட்டி ஒன்று தேவை.

உங்களுடைய இந்தக் கூற்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கொஞ்சம் விளக்குவீர்களா?

நான் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன். இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியிலும் மக்களை பணம் கொடுத்து கிறித்துவத்திற்கு மதமாற்றம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. மதம் பரப்புதல் என்றாலே கிறித்துவம் மட்டும்தான் செய்கிறது என்று நினைக்கிறார்கள். முஸ்லிம்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதில்லை. சூபி இனத்தவரே தங்கள் மதத்தைப் பரப்புகிறார்கள். பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் மதத்தைப் பரப்புவதில் ஈடுபட்ட சூபியிஸத்தினால் இஸ்லாமுக்கு மாறினார்கள். அவர்கள் குரானோடு மக்களிடம் போனார்கள். அதனால்தான் மக்கள் மதம் மாறினார்கள். ஆனால் எங்கே முதலில் மதப் பரப்புரை நடந்திருக்கும்? உலகின் முதல் மதப்பரப்புரையாளர் அசோகர்தான். தன் மகனை, மகளை, தன் படைகளை புத்த மதத்திற்கு மாற்ற – அவர்களை சீனாவுக்கும், இலங்கைக்கும் அனுப்பவில்லையா? ஆகவே, கிறித்துவம் தான் முதலில் மதப் பரப்புரை செய்யப்பட்ட மதம் என்று ஏன் நினைக்க வேண்டும்? இந்தியாவில் வாழும் மதச்சார்பற்ற இந்துக்கள், இந்திய வரலாற்றை சரியாகத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

அசோகரின் மதம் பரப்பும் நடவடிக்கைகள் குறித்து ஒரு முழுநீளப் படம் எடுக்க வேண்டும். வெகுமக்கள் ரசனைக்கேற்ற வகையில் ஒரு நல்ல படம் அசோகரைப் பற்றி எடுக்க வேண்டும். ஹாலிவுட் ஆட்களிடம் இந்த கோரிக்கையை வைக்கப் போகிறேன். ஹாலிவுட் ஆட்கள் எடுத்தால் அது ஹிட் தான். சீனா, இலங்கை, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் உள்ள மக்களை யார் புத்த மதத்திற்கு மாற்றியது? அசோகர்தான். பார்ப்பனியத்திற்கு படைப்பாற்றால் கொண்ட மூளை கிடையாது. பார்ப்பானின் மூளை பாறை போன்றது. அதிலிருந்து படைப்பாற்றல் வராது. தலித் – பெரும்பான்மை மக்களின் மூளை பச்சை மண் போன்றது. அதிலிருந்து என்ன வேண்டுமானாலும் விளையும்.

புத்த மதம், கிறித்துவ மதம், சூபியிசம் ஆகியவை போட்டியில் இருக்கட்டும். மக்கள் தேர்ந்தெடுக்கட்டும் தங்கள் மதத்தை. சந்தையில் நல்ல பொருளை வாங்குவதை மார்க்சியம் ஆதரிக்கிறது. பின் ஏன் அது மத விஷயத்திலும் நடக்கக் கூடாது? இந்து மதம் தோற்றுப் போய் நிற்கிறது. அது தலித்துகளையோ, பிற்படுத்தப்பட்டவர்களையோ கவரவில்லை. நேர்மறையான பிரதிகளே அதில் இல்லை. மனிதத் தன்மையுடைய கடவுள்களே இந்து மதத்தில் இல்லை. இருக்கும் எல்லா கடவுளர்களும் – பெண்ணை பாலியல் வன்முறை செய்பவர்களாகவும், கொலை செய்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.

ஆகவே என் மக்கள் ஏசு, புத்தர், நபிகள், மார்க்ஸ், அம்பேத்கர் ஆகியோரில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்தத் தேர்வின் மூலம் மார்க்சிஸ்டுகளாக சிலர் மாறலாம். அவர்களுக்கு மதமில்லை. பெரியார் இருந்தார். நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பெரும்பான்மையான மக்கள் மதத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது, மதங்களின் காலம். முதலாளித்துவமும், முதலாளித்துவத்திற்குப் பிந்தைய காலகட்டமும் மதங்களை அழிக்கவில்லை. இன்னமும் இஸ்லாமும் கிறித்துவமும் தங்கள் மதத்தை விரிவாக்கம் செய்ய வும், ஜனநாயகப்படுத்தவும் போட்டியிடுகின்றன. புத்த மதமும் போட்டியில் இருக்கிறது. ஆகவே, இளம் ஆய்வாளர்களுக்கு நான் கூற விரும்புவதெல்லாம் இந்தியா மற்றும் இந்திய கிராமங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆன்மிகம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு கவனம் செலுத்துங்கள் என்பதே.

இந்திய மக்களிடையே போதுமான வாசிப்புத் திறன் இல்லை. பார்ப்பனியம் மக்களுக்கு வாசிப்பை மறைத்தும் மறுத்தும் வைத்திருந்தது. அதோடு பார்ப்பனியம் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும். ஒருபோதும் வாசிக்காது. திருமணமாக இருந்தாலும், ஏரோபிளேன் முதன்முதலில் விடும் பூஜையாக இருந்தாலும் சரி, அங்கே போய் மந்திரங்களை ஒப்பித்துவிட்டு வருவார்கள் புரோகிதர்கள். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இவர் என்ன சொல்கிறார் என்றே தெரியாது. "சமர்ப்பயாமே' என்றும் "ஸ்வாகா' என்றும் சொல்லி, அவர்களின் சொத்தை சுருட்டிக் கொள்வார்கள். அவர்களை ஒன்றாக வாழச் சொல்கிறாரா அல்லது நாளைக்கே விவாகரத்து பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா என்றுகூட நமக்குத் தெரியாது.
பவுத்தத்திலும்கூட பெரிதாக வாசிக்கும் பழக்கம் இருப்பதாக சொல்ல முடியாது. கிறித்துவமும், இஸ்லாமும் அப்படியல்ல. வாசிக்க வைப்பவை. அதனால்தான் கிறித்துவ உலகத்தில் கல்வி பரவுகிறது. அரசாங்கங்களால் அல்ல, தேவாலயங்களால் பரவுகிறது. சொல்லப் போனால், அரசைவிட தேவாலயங்கள்தான் அதிக மக்களுக்கு கல்வியறிவு அளித்திருக்கிறது. இஸ்லாமில் மதரசாக்கள் மசூதிகளால் கட்டப்பட்டன. ஆனால் நாம் இதில் கோட்டை விட்டோம். வாசிப்பதில் உள்ள முக்கியத்துவத்தை உணரத் தவறினோம். இன்றைக்கு இந்தியாவில் யாரும் வாசிப்பதேயில்லை. இது, மிகவும் வருத்தத்திற்குரியது. எனவே, வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே அதிகரிப்பதற்கான செயலில் ஈடுபட வேண்டும். பைபிள் அனுபவங்கள் வழி நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதல் அச்சு எந்திரம் உருவானதே பைபிளை அச்சிடுவதற்காகத்தான். அச்சுத் தொழில்நுட்பம் வளர்ந்ததே பைபிள்களை வெவ்வேறு முறைகளில் அச்சிடுவதற்காகத்தான். கத்தோலிக்க பெண் துறவிகளும், அருட்தந்தைகளும் மதவுணர்வினால் செய்த தியாகத்தில் விளைந்தவைதான் இவையெல்லாம். எழுதுபவர் ஒருவராக இருக்கலாம்; ஆனால் விநியோகித்தவர்கள் பலர்.

நான், "போஸ்ட் இந்து இந்தியா' (இந்து இந்தியாவுக்குப் பிறகு) அல்லது "நான் ஏன் இந்து அல்ல' போன்ற நூல்களை எழுதும்போது, அதை வாசிக்க ஆளில்லையென்றால் நான் எழுதி என்ன பயன்? மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த ஊழியர்களை நியமித்தால் மட்டும் போதாது. வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். அம்பேத்கரின் "சாதி ஒழிப்பு', புலேவின் "குலாம்கிரி', "நான் ஏன் இந்து அல்ல', "போஸ்ட் இந்து இந்தியா' போன்ற சில குறிப்பிட்ட நூல்களை எடுத்து, ஒரு பத்து லட்சம் மக்களையாவது வாசிக்க வைக்க வேண்டும். இதோடு சேர்த்து தலித் – பெரும்பான்மை மக்களில் ஒரு பகுதியினரை ஆங்கிலம் வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொடுக்க வேண்டும். பிராந்திய மொழிகளில் உள்ள அறிவு என்பது ஒரு பகுதி அறிவுதான். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள மக்களுக்கு இது பயனளிக்காது. இந்தியாவை ஆங்கிலமயப்படுத்த வேண்டும்.

பிராந்திய மொழிகளின் ஆதிக்கத்தைப் பார்த்தோ, பார்ப்பனியத்தைப் பார்த்தோ நாம் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில், அவை ஏற்கனவே சமஸ்கிருதமயமாகி இருக்கின்றன. நாம் நம்முடைய இந்திய ஆங்கிலத்தை வளர்ப்போம். அமெரிக்க ஆங்கிலமும் அய்ரோப்பிய ஆங்கிலமும் வெவ்வேறானவை. ஆங்கிலம் ஏற்கனவே நம்முடைய தேசிய மொழி. ஆகவே, ஆங்கிலத்தை நமது தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள நாம் அச்சப்படக் கூடாது. நம் பழங்குடியின மக்களின் மொழிக்கு மீண்டும் நாம் போவது என்பது சாத்தியப்படாது. நாம் முற்போக்காகவும், உலக நடப்புகளை, அறிவியல் வளர்ச்சிகளை அறிந்து கொள்ளவும் ஆங்கிலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சொற்களைக் கொண்டுள்ளது. வருங்காலத்தில் குழந்தைகள், அரசுப் பள்ளிகளில் ஏன் ஆங்கில வழிக் கல்வி கற்றுக் கொடுக்கப்படவில்லை என்று கேள்வி கேட்கத் தொடங்குவார்கள்.

ஆகவே "பாம்செப்' போன்ற அமைப்புகள் பிரச்சாரம் செய்தால், 25 ஆண்டுகளில் இந்தியாவை தலித் மயமாக்கலாம். ஆங்கிலமயமாக்கலாம். எந்த மாதிரியான அறிவாளிகள் உலகில் உருவாவார்கள் என்று யாரும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஒரு குக்கிராமத்திலிருந்து ஒரு காஞ்சா அய்லைய்யா இதுபோன்றதொரு ஆங்கிலப் புலமையையும், எழுத்துத் திறனும் கொண்டு உருவாவாரென்று அம்பேத்கர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். மார்டின் லூதர் கிங், ஒபாமாவைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், அவர்கள் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். கல்வித் துறையில் பாடத் திட்டத்தில் நம்முடையவை வரவேண்டும். அதனால்தான் கல்வியில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறேன். என்னுடைய “Turning the pot Tilling the Land” என்ற நூல்தான் இலக்கியப் பின்னணியில் வந்த கல்வி தொடர்பான நூல். நம்மிடம் நிறைய நூல்கள் வேண்டும். கதை நூல்கள் வேண்டும். அதன்பிறகுதான் நாம் பாடத்திட்டத்தில் நம்மைப் பற்றிய பாடங்களை சேர்க்க முடியும். எல்.கே.ஜி. முதல் சொல்லித்தரப்படும் A for Apple கதை, A for Ant என்றாக வேண்டும். B for Buffalo, C for Cattle என்றாக வேண்டும். C for Cow நீக்கப்பட வேண்டும். நமக்கான சொற்களை அந்த கட்டத்திலிருந்தே உருவாக்க வேண்டும்.

பார்ப்பன இலக்கணங்களை ஒழிக்க வேண்டும். அவை subject, object, predication என்று தான் இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கின்றன. அதை எப்படி சொல்லித் தருகிறார்கள் என்று பாருங்கள். Rama killed Raavana இதில் ராமன் Object, ராவணன் subject. செய்யும் செயல் கொல்வது இளம் வயதிலேயே கொலை செய்வதையா சொல்லித் தருவார்கள்? அதற்கு பதில், அவை இப்படி மாற்றப்பட வேண்டும். Farmer is Tilling the land அல்லது Mother is cooking the food, Father is looking after the Cattle என்பது இப்படி மாற வேண்டும் : Father should also cook the food and Mother should also look after the Cattle. நாம் இப்போது ஆண் இருக்கும் இடத்தில் பெண்ணையும், பெண் இருக்கும் இடத்தில் ஆணையும் மாற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது, மிகவும் முக்கியம். Rama killed Raavana என்று இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கும் இந்த தேசம் மாற வேண்டும். Krishna has stolen the butter. ஆக, கடவுளே திருடுகிறார் என்று தொடக்கத்திலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். இதுவா தேவை? இல்லை. இந்தியாவிலிருந்து இந்த கடவுளர்களை முற்றாக நீக்க வேண்டும்.

வாத்சாயனாரின் காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிலைகளைக் கொண்ட கோயில்களை தரைமட்டமாக்க வேண்டும். இது, நமது குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பாடு அல்ல. பாலுறவு என்பது இயல்பானதாக இருக்க வேண்டும். இந்த பாழாய்ப்போன வாத்சாயனாருக்கு முன்பிருந்தே தலித் – பெரும்பான்மையினர் மத்தியில் மகிழ்ச்சியான பாலுறவு வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக நீடித்து இருந்து வந்தது தானே? நாம் பாலுறவை அறிவியலாகக் கற்றுக் கொள்ளலாம். அதை எதற்கு வாத்சாயனõரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்? பாலுறவு குறித்த நமது பிரதிநிதிகளை நாம் உருவாக்குவோம். அம்பேத்கரை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். காந்தி இளம் பெண்களுடன் ஆடையின்றி நிர்வாணமாக உறங்கினார். அம்பேத்கரோ இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதுதான் இயல்பான வாழ்க்கை. ஆக, ஒவ்வொரு விஷயத்திலும் நாம் சாத்தியமான மாற்று ஒன்றை உருவாக்க வேண்டி இருக்கிறது.

ஆன்மிகப் பாசிசத்தின் (இந்து மதம்) உருவாக்கம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நான் பின்னோக்கிப் பார்க்கிறேன். பாசிசம் என்றால் என்ன? ஒடுக்கும் தன்மையுடைய, அழிக்கக்கூடிய ஒன்று எனலாம், உலகளாவிய அளவில் எடுத்துக் கொண்டால், போருக்கு இட்டுச் செல்வது பாசிசம் என்று பிரதிகள் நமக்கு பாசிசம் பற்றிக் கூறுகின்றன. ஜெர்மனியிலிருந்தும், இத்தாலியிலிருந்தும் இது தோன்றியதாக நாம் அறிகிறோம். ஹிட்லரும், முசோலினியும் எடுத்துக்காட்டுகள். உற்று நோக்கினால், இந்து மதத்திற்கும் நாஜிக்களின் தத்துவத்திற்கும் "ஸ்வஸ்திக்' சின்னம் உட்பட நிறைய தொடர்பிருக்கிறது.

ஹிட்லரே நாஜிக்களை ஆரியர்கள் என்றுதான் குறிப்பிட்டார். நான் இந்திய ஆரியர்களை நாஜிக்களோடு பொருத்திப் பார்த்தேன். ஜெர்மனியில் ஆரியர்களுக்கு தொன்மையான வேர்கள் கிடையாது. ஆனால், இந்தியாவில் உள்ளது. பார்ப்பனர்கள் ஜெர்மனியிலிருந்து வந்தார்களா அல்லது ஈரானிலிருந்தா என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. பாசிசத்தின் தன்மைகளாக அடக்குவதையும் ஒடுக்குவதையும், போருக்கு இட்டுச் செல்வதையும், பாலியல் வல்லாங்கு செய்வதையும் வைத்துப் பார்க்கும்போது, இவையெல்லாம் ரிக்வேதத்திலும் இருக்கின்றன. "ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களைப் படைக்கிறார் கடவுள்' என்கிறது ரிக்வேதம். இது எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்றும் சொல்கிறது வேதம். அதுமட்டுமல்ல, சிலர் காலில் பிறந்தார்களாம். சிலர் தலையில் பிறந்தார்களாம். சிலர் பிறக்கவேயில்லையாம்! ஆகவே மதத்தின் பெயரால், ஆன்மிகத்தின் பெயரால் கடவுளே ஒரு பெரிய ஒடுக்குமுறையை கடைப்பிடிக்கிறார்.

புருஷசுத்தம் என்பது சமமற்ற தன்மை எனும்போது, அது எப்படியெல்லாம் இந்து மதத்தோடு பொருந்திப் போகிறது என்பது மிகவும் முக்கியம். ஆகவே, இந்து மதத்தின் இந்தத் தன்மையை எப்படி விளக்குவது என்று நான் யோசித்தேன். அப்போது ஒரு விஷயம் புரிந்தது. நாஜியிசமோ, பாசிசமோ அரசியலோடு தொடர்புடையது என்பது புரிந்தது. அங்கே ஆன்மிகமோ, மதமோ வரவேயில்லை. ஏனெனில், அங்கு கிறித்துவப் பின்னணி இருந்தது. இது குறித்து ஆழ்ந்து யோசிக்கையில் இங்கிருப்பது ஆன்மிகப் பாசிசம் என்று புலப்பட்டது. பாசிசத்தின் மீது ஆன்மிகத்தை கட்டியெழுப்பினால், அதற்கு வலிமை அதிகமாகி, நீண்டகாலம் நீடிக்கும். இந்த ஆன்மிக பாசிசத்தன்மையினால் தான் இந்து மதம் இத்தனை காலம் தாக்குப்பிடித்து வந்திருக்கிறது. பெரிய அளவு இழப்புகளோடு குறுகிய காலத்தில் அய்ரோப்பாவில் அரசியல் ரீதியான பாசிசத்தை ஒழித்துவிட முடியும்.

ஆனால் ஆன்மிகப் பாசிசத்தை அழித்துவிட முடியாது. அதன் முக்கியமான பரிமாணங்களை மக்கள் புரிந்து கொள்வதும் கடினம்தான். ஒரு மதத்தை அல்லது அரசை புரிந்து கொள்ள ஒரு காலகட்டம் தேவை. நமது காலத்தில்தான் இந்த ஆன்மிகப் பாசிசம் என்கிற சொல் பிடிபட்டிருக்கிறது. ஏனெனில், பாசிசத்தின் பல கோணங்களை நாம் உணர்ந்திருக்கிறோம். அன்று தேசியம், காலனித்துவம் போன்றவை முக்கியப் பங்கு வகித்தன. காலனியாதிக்கத்திற்கெதிரான போராட்ட காலத்தில் அம்பேத்கரால் கிறித்துவம் குறித்த ஒரு சாதகமான பார்வையை வைத்திருக்க முடியாது. இப்போது செய்தாலே குற்றவாளியாக்குகிறார்கள். அன்றைக்கு அப்படி அவர் செய்திருந்தால், அவரையும் குற்றவாளியாக்கி இருப்பார்கள்.

ஆனால் எந்த விருப்பு வெறுப்புமின்றி, என்னால் பவுத்தத்தை வெளியிலிருந்து ஆராய முடிகிறது. ஆனால், நான் அம்பேத்கரின் தோள்களில் நின்று கொண்டு பார்க்கிறேன் என்பதுதான் முக்கியமானது. ஒவ்வொரு காலகட்டமும் அந்த காலத்திற்கேற்ப ஒரு சிந்தனையாளரை உருவாக்குகிறது. அம்பேத்கரின் "நவயான' பவுத்தத்திற்குப் பிறகு, இந்து மதத்திற்கு சவாலாக கிறித்துவமும், இஸ்லாமும்தான் இருக்கின்றன. இஸ்லாத்தைப் பொருத்தவரை சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் போல விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனால் இந்து மதத்திற்கு சவால் விட ஒரே ஒரு நூல் "நான் ஏன் இந்து அல்ல' மட்டுமே வந்திருக்கிறது. ஆனால், இஸ்லாத்திற்குள்ளேயே அதற்கு சவால் விட்டு நிறைய நூல்கள் வந்திருக்கின்றன. கிறித்துவத்திற்கும் இது பொருந்தும். இந்த நிலைமையில்தான் ஒரு கருத்தியல் ரீதியான முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. ஆன்மிக ஜனநாயகம் என்கிற புதிய சொல்லாடல் இங்கே சாத்தியமாகிறது. பவுத்தம், கிறித்துவம், இஸ்லாம் ஆகியவற்றை ஒரு செவ்வகத்திற்குள் அடைக்கலாம். இவற்றுக்கிடையே வேறுபாடுகளும் உண்டு. அது குறித்த விவாதங்களும் உண்டு. இந்த விவாதங்கள் தொடர வேண்டியது அவசியம். 

- முற்றும்

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால், ஆர்.ஆர். சீனிவாசன்
தமிழில் : கவின் மலர்


Wednesday, December 08, 2010

மக்களின் அறிவைக் கொண்டு உருவான நூல்கள் அதிகமாக வெளிவர வேண்டும்

கடந்த இரு இதழ்களில் வெளிவந்த பேராசிரியர் காஞ்சா
அய்லைய்யா அவர்களின் பேட்டி, இந்த இதழிலும் தொடர்கிறது


தலித்முரசு காஞ்சா அய்லய்யா நேர்காணல் பகுதி III

இந்தியாவின் அறிவுத்தளம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து சொல்லுங்கள்.

இந்தியாவின் அறிவுத்தளம் என்பது, மேற்கோள்களாகச் சுருங்கிவிட்டது. நாம் மக்களின் வாழ்க்கையிலிருந்து ஆய்வுகளைச் செய்யும்போது, மேற்கோள் காட்ட வேண்டிய அவசியமில்லை. அம்பேத்கர், புலே போன்றோரின் மேற்கோள்களை எடுத்தாளலாம். ஆனால், எப்போதும் மக்களிடமிருந்துதான் முதன்முதலில் நிரப்பப்பட வேண்டும். அதனால்தான் நான் மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்ட எழுத்துகளை நிராகரித்தேன். பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், ஏன்? மார்க்ஸ், அம்பேத்கர் இவர்களில் யாருடைய அனுபவங்களையாவது வரித்துக் கொண்டு எழுதப்படும் எழுத்துகளையும் நிராகரித்தேன். இவர்களில்யாருடைய நூல்களையாவது பாருங்கள்! மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டா எழுதியிருக்கிறார்கள்? மார்க்ஸின் "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யோ, அம்பேத்கரின் "சாதி ஒழிப்பு' நூலோ மேற்கோள் சார்ந்தவை அல்ல. எனவே, மக்களின் மனங்களுக்குள் சென்று அவற்றிலிருந்து ஒரு தத்துவார்த்த பிரதி உருவாவதையே நான் விரும்புகிறேன்.
மக்களின் வாழ்க்கை முறை, உற்பத்தி, அறிவியல், தொழில்நுட்பம், உணவுப் பண்பாடு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. மரக்கறி உணவையே இந்திய உணவு என இந்து மதம் கட்டமைத்தபோது, நாம் ஆற்றலிழந்து போனோம். நம்மிடையே கால்பந்து வீரர்கள் இல்லை. ஏன்? மரக்கறி உணவை மட்டும் உண்பவர் கால்பந்து வீரராக முடியாது; ஒலிம்பிக் சாம்பியனாக முடியாது. ஆக, உணவுப் பண்பாடு  ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தலித் – பெரும்பான்மை உணவுப் பண்பாடு, சங்கராச்சாரியின் வருகைக்குப் பிறகு இந்து மதத்தால் அழிக்கப்பட்டது. ஆகவே, மக்களின்  அனுபவங்களின் மூலம் இந்து மதம் தகர்க்கப்பட வேண்டும் என்று நினைத்தேன்.

எனவே, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உழைத்து Post Hindu India என்ற நூலை  உருவாக்கினேன். பார்ப்பன அறிவாளிகள் கூறும் தேசியம் என்கிற கருத்துருவாக்கத்தையும் அழிக்க விரும்பினேன். ஏனென்றால், பார்ப்பனியம் ஒரே வடிவத்தில் இல்லை. அது மார்க்சியம், தேசியம், பெண்ணியம் உட்பட பல்வேறு வடிவங்களில் வருகிறது. நம்மிடையே போதுமான பெண் அறிவாளிகள் இல்லை. நானேகூட கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று விட்டு வரவில்லை. மாறாக, உள்ளூர் சரக்குதான். இதுவே என் பலமும் பலவீனமுமாக இருக்கிறது. ஆனால், என் பலவீனத்தை நான் பலமாக மாற்றிக் கொள்ள வேண்டுமென விரும்பினேன்.

ஆகவே, "பாப்புலர் பிரஸ்ஸி'ல் பல மணி நேரங்களை எழுதுவதிலும், படிப்பதிலும் செலவழித்தேன். மேலும், கிராமங்களுக்குச் செல்வதன் மூலம், மக்களின் உற்பத்தி வாழ்க்கை குறித்த பெரும் தகவல்களை சேகரித்து வந்தேன். கருவிகளின் பெயர்கள், மக்களிடையே புழங்கும் பழமொழிகள், உணவுப் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுப் பின்னணி போன்ற பல தகவல்களை சேகரித்தேன். அதிலிருந்து சிந்திக்கத் தொடங்கினேன். என்னுடைய சமீபத்திய நூல் Weapon of the other இது குறித்ததே. இப்படித்தான் தலித்தியம் # பார்ப்பனியம் என்கிற கருத்தாடலுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தேன். ராஜாராம் மோகன்ராயின் தேசியத்திற்கு எதிராக புலேயின் தேசியம், கவுடில்யருக்கும் மநுவுக்கும் எதிரான புத்தரின் தேசியம் போன்றவற்றை நீங்கள் அறிவீர்கள்.
நேரு நினைவு அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் பார்வையிட்டபோது நேரு, காந்தி, ராஜாராம் மோகன்ராய் எல்லோரும் அங்கே இருக்கிறார்கள். ஆனால் அம்பேத்கர், புலே, பசவா, பெரியார் ஆகியோர் இல்லை. இந்த அறிவுஜீவி வாழ்க்கை ஒரு துன்புறுத்தலாகவும், ஓய்வற்றதாக வும் இருந்தாலும்  – நான் அதை கடின உழைப்புக்குரியதாகவும், முடிந்தவரை வெகுமக்களுக்குரியதாகவும் ஆக்கிக் கொள்ள முனைந்தேன். ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக அறிவாளிகளுக்காகவும், வெகுமக்களுக்காகவும் எழுதுவது என்பது கடினமானது. எடுத்துக்காட்டாக, என்னுடைய Buffalo Nationalism என்கிற தலைப்பை நான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ இந்து பரிஷத்தின் பசு தேசியத்தை எதிர்த்துதான் வைத்தேன். ஆனால் என்னுடைய நண்பர்களே, ""இதென்ன தலைப்பு?'' என்று சிரித்தார்கள். ""நான் ஏன் இந்து அல்ல'' எழுதியபோது அதைக் கொஞ்சம் போல ரசித்தவர்கள்கூட, இந்தத் தலைப்பைப் பிடிக்கவில்லை என்றார்கள்.

அவர்களிடம் நான் சொன்னேன் : இது என்னுடைய மூளையில் உதித்ததல்ல. எருமைøய ஒவ்வொரு வீட்டின் விலங்கு என்று சொல்லலாம். இந்தியாவில் பால் உற்பத்தி, எருமை மாடுகளிடமிருந்துதான் வருகிறது; பசுக்களிடமிருந்து அல்ல. இந்த பாழாய்ப்போன படைப்பாற்றலற்ற பார்ப்பனிய மூளையோ – ஒன்றுக்கும் உதவாத ஒரு விலங்கை தெய்வமாக்கியும், கருப்பாக இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக – உற்பத்திக்கு உதவும் ஒரு விலங்கை எமனுக்கு வாகனமாகவும் மாற்றி விட்டிருக்கிறது. ஆனால், அது கொடுக்கும் பாலின் நிறம் வெள்ளை என்பதால் மட்டும் பருகுகிறார்கள் என்றேன்.

ஆகவே, புதியதாய் எதையாவது செய்ய வேண்டி இருக்கிறது. சில வேளைகளில் அதற்காக எள்ளி நகையாடப்படுவதையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. என்னுடைய நண்பர்கள் சிலருக்கு இருக்கும் பார்ப்பனிய தாக்கம்; கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் பயின்று விட்டுத் திரும்பியவர்களிடம் இருக்கும் மேற்கோள்களால் நிரப்பப்பட்ட ஆய்வு மனப்பான்மை மற்றும் மேலைநாட்டு சிந்தனைகள் ஆகிய எல்லாவற்றோடும் போராட வேண்டி இருக்கிறது. சிலர் நம்மை ஏற்றுக் கொள்வார்கள். சிலர் நம்மை மறுப் பார்கள். ஆனால் இறுதித் தீர்ப்பு மக்கள் கையில் உள்ளது. இயக்கங்கள்தான் இத்தகைய பணிகளை கைக்கொள்ள வேண்டும். என்னுடைய நூல்களைப் பொருத்தவரையில் வெகுமக்கள் இயக்கங்கள், அறிவுத்தளம் இரண்டிலுமே நல்ல வரவேற்பைப் பெற்றன. பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டவையெல்லாம் சூடான விவாதங்களைக் கிளப்பவில்லை.

இந்தியாவில் தற்பொழுது ஆங்கிலம் பேசக்கூடிய அறிவாளிகள் குழு ஒன்று உருவாகியுள்ளது. இத்தகைய ஓர் ஆக்கம் வெளிவரும்போது, ஆதிக்க சாதிகளிலிருந்து மிகப்பெரிய அளவில், கலவையான எதிர்வினைகள் வந்தன. சிலர் அதனை வரவேற்றாலும், பார்ப்பனர்கள் மிகவும் எரிச்சலுக்குள்ளானார்கள் என்று சொல்லலாம். "நான் ஏன் இந்த அல்ல?' நூல் வெளிவந்தபோது, நூல் குறித்து நிறைய திறனாய்வுகள் வந்தன. தற்போதைய பதிப்பில் அனைத்து திறனாய்வு களையும் இணைத்துள்ளேன்.  என்னுடைய நூலுக்கு ராஜ்தீப் சர்தேசாய், ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். அவருடைய மனைவி சகரிகா கோஷ், இந்நூலால் கவரப்பட்டு என்னை ஒரு நீண்ட நேர்காணல் எடுத்தார். குடும்பத்தில் ஒரு தத்துவப் போரே நடைபெற்றது அப்போது. இந்நூல் பல குடும்பங்களிற்குள் சண்டையை உண்டாக்கியது. எனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால், இந்நூல் ஒரு விவாதத்தை தோற்றுவித்தது.

Post Hindu India வந்தபோது ஒரு பெரிய தாவல் நடந்தது. எடுத்துக்காட்டாக, ""இந்நூலில் தீவிரத்தன்மை இல்லை. ஆய்வுத்தன்மை இல்லை. முடிவுக்கு வர உதவிய தரவுகள் குறித்த குறிப்புகள் இல்லை'' என்று "ஹிமால்' இதழில் மீரா நந்தா எழுதியிருந்தார். அதற்கு நான் ஒரு பதில் எழுதினேன் : ஆய்வுத்தன்மை, தரவுகள் என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? என்னுடைய நூலில் அடிக்குறிப்புகளும், தரவுகளும் இல்லையென்பதற்காக நீங்கள் அதன் தீவிரத்தன்மையை குறைத்து மதிப்பிடுவீர்களானால் – பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், மார்க்ஸ் போன்றவர்களுடையதையும் நீங்கள் அப்படி சொல்லிவிட முடியுமா? பார்ப்பனிய அறிவுஜீவி குண்டர்த்தனம் எதை நிராகரிக்கச் சொல்கிறதோ, அதனை நிராகரிக்க வேண்டுமாம். எதைப் புகழ வேண்டுமெனச் சொல்கிறதோ அதை மற்றவர்களும் புகழ வேண்டுமாம். இது என்ன நியாயம்? எந்தவொரு மானுடவியலாளரின் நூலிலாவது, அவர்களை ஒரு முடிவுக்கு வரவைத்த தரவுகள் குறித்த குறிப்புகள் இருக்கின்றனவா?

மானுடவியல் என்பது, ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் உணவுப் பழக்கம், கருவிகள், உற்பத்தி உறவுகள் குறித்தான ஆய்வுகள் தானே? அவற்றை எல்லாம் எங்காவது போய் இதெல்லாம் உண்மைதானா என்று கள ஆய்வு செய்து பார்த்துதான் ஒப்புக் கொள்கிறார்களா? வெறும் பார்ப்பனியத்திற்கும் தலித்தியத்திற்கும் இடையேயானதல்ல இது. இதில் அறிவியல், தொழில்நுட்பம், மதங்கள் எல்லாமே கலந்திருக்கின்றன. இந்து, முஸ்லிம், தலித் – பெரும்பான்மை மக்கள், பழங்குடியினர் ஆகியோரிடையே அறிவியலும் தொழில்நுட்பமும் உள்ளன. ஆனால், இந்து மதம் இதனை அழித்துவிட்டது. இதனாலேயே நாம் அறிவியலுக்கு உலகளவிலான எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்றாகிப் போனது.

பவுத்த உலகமான சீனா, அறிவியல் துறையில் உலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்று விட்டது. கோபர் நிக்கஸ் முதல் சிப் உருவாக்கம் வரை, கிறித்துவ உலகம் நிறையவே பங்களித்து விட்டது. இவற்றில் "சர்ச்சு'கள் பெரிய பங்கு வகித்தன. இஸ்லாமிய உலகத்தை எடுத்துக் கொண்டால், நபிகள்கூட அறிவியல் அறிவுடன் இருந்தவர். துணிகளைத் தைப்பது, ஆண் – பெண் உறவுகள் குறித்த கருத்தாக்கங்கள், மணற்பாங்கான பகுதிகளில் எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்தது போன்ற பல விஷயங்களைச் சொல்லலாம். இதுபோன்ற எதையாவது இந்து உலகம் தந்திருக்கிறதா? ஆர்யபட்டாவைச் சொல்வார்கள். பூஜ்யத்தை கண்டு பிடித்ததை, இந்து மதத்தின் பங்களிப்பாகச் சொல்வார்கள். நான் என்னுடைய நூலில் இதை ஒரு "நான்சென்ஸ்' என்று நிரூபித்திருக்கிறேன். இடையர்கள்தான் பூஜ்யத்தை கண்டுபிடித்தார்கள். ஆர்யபட்டா 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். நம் இடையர்கள் ஆடுகளையும், மாடுகளையும் அதற்கு முன்னரே கணக்கு வைத்து எண்ணிக் கொண்டுதானே இருந்தார்கள், அதுவும் நூற்றுக்கணக்கில்! பூஜ்யம் இல்லாமல் எப்படி நூறு வரும், 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்னால்?

இதனைத் தவறு என்றால் ராமாயணம், மகாபாரதம் எல்லாமே தவறுதான். அதில் தலைகளின் எண்ணிக்கை, நபர்களின் எண் ணிக்கை, ஆடுகளின் எண்ணிக்கை எல்லாம் வருகிறதே? என்ன கொடுமையென்றால் இடையர்கள் இவற்றைப் பற்றி எழுதுவதற்கான அனுமதி இன்றி இருந்தனர். அவர்களுடைய விரல்கள் துண்டிக்கப்பட்டன. அறிவியல், தொழில்நுட்ப, கணித சூத்திரங்களை எல்லாம் ஒரு நூலாகப் பதிவு செய்ய முடியாமல் போனதன் விளைவு, ஆர்யபட்டா பூஜ்யத்தை கண்டுபிடித்தவராகிவிட்டார். இவர் ஒரு பார்ப்பனர் என்பதால், ""நான்தான் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தேன்'' என்று முந்திக் கொண்டார்.

நம்மிடையே இன்று மிகப்பெரிய பண்பாட்டு அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன. மக்களின் அறிவைக் கொண்டு உருவான நூல்கள் அதிகமõக வெளிவர இயக்கங்கள் முயல வேண்டும். இவற்றை சிறந்த முறையில் செய்ய வேண்டும். இல்லையெனில், ஆக்ஸ்போர்டு, ஹார்வார்ட், கேம்பிரிட்ஜிலிருந்து வரும் பார்ப்பனர்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளி விடுவார்கள். நான் இப்படிச் சொல்வதால், நம் பிள்ளைகள் இப்பல்கலைக் கழகங்களுக்குச் சென்று பயிலக்கூடாது என்பதில்லை. எனக்கெல்லாம் அந்த வாய்ப்பு நிச்சயமாக இல்லை. டெல்லிக்குச் சென்று பயில்வதைக்கூட என்னால் கற்பனை செய்து பார்க்க இயலாத நிலையில் இருந்தேன்.

அறிவு சார்ந்த விஷயங்களைப் புதிய முறையில் கூறுவது, புதிய சொற்களை உருவாக்குவது, தத்துவம் சார்ந்த கருத்துருவாக்கம். பல்கலைக்கழக கல்வியையும், மக்கள் போராட்டங்களையும் இணைப்பது போன்றவை மக்கள் போராட்டங்களிலிருந்தே சாத்தியப்படும். எடுத்துக்காட்டாக, ""இந்தியா தலித்மயமானது; சமஸ்கிருதமயமானதல்ல'' என்று சொன்னபோது, எம்.என். சீனிவாசன் போன்றவர்கள், கேம்பிரிட்ஜ் வரை சென்று பயின்றுவிட்டு இந்தியாவுக்கு வந்து இந்திய கிராமங்கள் பார்ப்பனமயமாக்கப்பட்டிருக்கின்றன என்றார். பார்ப்பனர்கள் வெளியே சொல்லாமல் தங்கள் கொல்லைப்புறத்தில் மாமிச உணவு உண்ண முயற்சி செய்து கொண் டிருப்பதை அறியாமல் அவர்கள் இப்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள். விஸ்கி, பிராந்தி மற்றும் இன்னபிற குடிவகைகள் அனைத்தையும் வெளியே தெரியாமல் குடிக்கும் பார்ப்பனர்கள் இல்லையா என்ன? பார்ப்பனப் பெண்களிடையே புகைக்கும் பழக்கமும்கூட அந்த சமயத்தில் இருந்தது. இவையெல்லாம் தலித்துகளின் பழக்கங்கள் என்று நீங்கள் சொல்வதானால், பார்ப்பன குலம் தலித்மயமாகி விட்டது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்? ஆனால் அவரோ, இந்திய கிராமங்கள் பார்ப்பன மயமாகி விட்டன என்றார். ஆகவே நான், "இந்தியா தலித்மயமாகியிருக்கிறது' என்று கூறியது உலகின் கவனத்தை ஈர்த்தது. ரவுட்லட்ஜ் பதிப்பகம், பின் – காலனிய இலக்கியங்களை தொகுத்தபோது, அதில் என்னுடைய அத்தியாயம் ஒன்று இருந்தது. அய்லைய்யா இருந்தார். மார்க்ஸ் இருந்தார். மாவோ இருந்தார். பிராங் பனான் இருந்தார் ஆனால் எம்.என். சீனிவாசன் இல்லை!
இந்திய பார்ப்பனர்கள் எங்களை ஓரங்கட்ட நினைத்தனர். ஆனால் அங்கீகாரமளிக்க உலகம் தயாராக இருக்கிறது.

ஆக, இந்த போர்க்களமே மிகுந்த மன அழுத்தத்தைத் தரக்கூடியது. அதிலும் கல்விப்புலத்தில் தேர்ந்தெடுத்தவர்களைத்தான் முன்னேற அனுமதிப்பார்கள். நம்முடைய நூல்களைப் புறக்கணிப்பார்கள். அவர்கள் நினைப்பதையெல்லாம் பாடமாக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வரலாறை எடுத்துக் கொண்டால், இப்போது இருவகை வரலாற்று நூல்கள் நம்மிடையே உள்ளன. புத்தர் முதல் இன்று வரையிலான தலித் – பெரும்பான்மை மக்களின் போராட்டங்கள் அடங்கிய வரலாறு ஒன்று; கவுடில்யர் முதல் இன்று வரையிலான அவர்களின் வரலாறு மற்றொன்று. ஆனால், நம்முடைய வரலாறை பாடமாக நடத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஆகவே, பார்ப்பனியத்திலிருந்து இந்தியாவை விடுவிக்க மிக கவனமாகவும், போட்டி மனப்பான்மையுடனும் நாம் இலக்கியங்களை உருவாக்க வேண்டும். போட்டி மனப்பான்மை மிகவும் முக்கியமானது.

– அடுத்த இதழிலும்

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால்,
ஆர்.ஆர். சீனிவாசன்
தமிழில் : கவின் மலர்

Sunday, November 21, 2010

இந்து பெரும்பான்மை மாயை தகர்ர்க்கப்படவேண்டும்

தலித் முரசு - காஞ்சா அய்லய்யா நேர்காணல் பகுதி -2



உங்களுடைய God as political Philosopher – Buddha's challenges to Brahminism நூல் உருவானதன் பின்னணி என்ன?

அம்பேத்கரைத் தொடர்ந்து புலேவை தேடி வாசித்தேன். தொன்மையான விஷயங்களையும் தேடி வாசிக்கத் தொடங்கி இருந்தேன். இதற்கிடையில் என்னுடைய ஆசிரியர் ஒருவர், "இந்திய அரசியல் கோட்பாடுகள்' குறித்துப் பாடமெடுக்கும்போது வேதங்கள் குறித்து குறிப்பிட்டுச் சொல்லி, கவுடில்யர், மநு ஆகியோரை பண்டைய சிந்தனையாளர்களாகக் குறிப்பிட்டார். நான் அவற்றை வாசிக்கத் தொடங்கியபோது, அதில் சிந்தனைகள் என்று சொல்லும்படியான எதுவும் எனக்குத் தென்படவில்லை. சிந்தனைகளாகத் தெரிபவை எல்லாமே தேவையற்றவையாக இருந்தன. எல்லாமே மனித இனத்திற்கெதிரானவை. மக்களுக்கு ஒவ்வாதவையாக இருந்தன. அதிகாரத்தின் கைவேலையாக இருந்தன. இதைவிட சிறந்த சிந்தனைகள், பண்டைய இந்தியாவில் இல்லையா என்று என் ஆசிரியரிடம் கேள்வி எழுப்பினேன். இவையே சிறந்த கருத்துகள் என்றார் அவர். "நாம் புத்தர் குறித்து நினைத்துப் பார்க்க வேண்டும். புத்தர் ஒரு மிகப்பெரிய ஞானியென்றால், அவரிடம் அரசியல் சிந்தனைகளே இல்லையா என்ன?' என்றேன். ஆனால், புத்தர் குறித்து அவர் தெரிந்து வைத்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை.

அதன் பிறகு நிலச்சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்து, என்னுடைய எம்.பில். படிப்பை முடித்தேன். பிறகு என்னுடைய பிஎச்.டி. பட்டத்திற்காக புத்தரின் அரசியல் சிந்தனைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் என்னுடைய மேற்பார்வையாளர், "புத்தரை சிந்தனையாளர் என்று சொல்ல முடியாது' என்றார். அதனால் என் மேற்பார்வையாளரை நான் மாற்றிக் கொண்டேன். பிறகு ஒரு பெண் பேராசிரியர், இத்தலைப்பிற்கு ஒப்புக் கொண்டார்.

பாலி மொழியில் எழுதப்பட்ட ஆவணங்கள் படித்துப் பார்க்கப்படவேயில்லை. நான் அதைச் செய்ய விரும்பினேன். ஆனால், சில ஆசிரியர்களோ "இது முடியாத காரியம். பாலி மொழி உனக்கு தெரியாது. ஆகவே, அந்தப் பிரதிகளை விளங்கிக் கொள்ள முடியாது. அதனால் புத்தர் குறித்து நீ தெரிந்து கொள்ள முடியாது' என்றனர். ஆனால் நான் உறுதியாக அவர்களிடம் கூறினேன்: "கிரேக்க சிந்தனையாளர்கள் குறித்து ஆங்கிலத்தில் ஒருவரால் ஆய்வு செய்ய முடிகிறது. ஆங்கிலத்தில் பவுத்தம் குறித்த இலக்கியங்கள் போதுமான அளவு இருக்கும்போது, நான் ஏன் இதைச் செய்ய முடியாது?' என்றேன். பணியில் இறங்கினேன். புத்தரின் அரசியல் சிந்தனைகள் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினேன். அதன் விளைவாகத்தான் God as political philosopher - Buddha’s challenge to Brahmanism என்ற நூல் உருவானது.

பார்ப்பனியத்திற்கெதிரான புத்தரின் போராட்டங்கள் குறித்து ஆய்வு செய்தேன். புத்தரின் விவாதங்களில் புத்தர் தன் வாழ்நாளில் ஒவ்வொரு விஷயத்திலும், தன் சமகால பார்ப்பனர்களை கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார் என்பதற்கான சான்றுகள் உள்ளன. மனித இனம், உளவியல், இயற்கை அரசின் தோற்றம், ஆண்–பெண் உறவுகள் இப்படி எல்லாவற்றையும் பார்ப்பனர்களே முடிவு செய்தனர். என் ஆய்வுக்கட்டுரையில் இவற்றையெல்லாம் சொல்லியிருந்தேன். ஆய்வுக்கட்டுரை வெளியானவுடனேயே அது புத்தகமாகவும் வெளிவந்தது.

மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில், உங்களுடைய பங்கு குறித்து சொல்லுங்கள்?

வியக்கத்தக்க வகையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அறிவுஜீவிகள் எவரும் – பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும், மண்டல் குழு பரிந்துரைக்காகவும் வாதாட முன்வராத சூழல் அப்போது நிலவியது. பிற்படுத்தப்பட்ட தலைவர்களான சரத் யாதவ், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் தவிர, பெரிய அளவில் தலைவர்கள் இல்லை. அவர்களைக்கூட ஊடகங்கள் கோமாளிகளாகத்தான் சித்தரித்தன. அந்த நேரத்தில் அய்தராபாத்தைச் சேர்ந்த பெண்ணியவாதிகளான சுசிதாரு, ரமா மில்கோட்டே, லலிதா மற்றும் சிலரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்தோம். தேசிய அளவில் ஊடகங்களுக்காக கட்டுரைகள் எழுதினோம். Experience as Framework of debate என்ற புகழ்பெற்ற என்னுடைய கட்டுரை, அந்த நேரத்தில்தான் "எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி'யில் வெளிவந்தது. மண்டல் போராட்டத்தில் பார்ப்பனியத்தை வெல்ல, நம் அனுபவங்களையே முக்கியமான கருத்தியலாக முன்னிறுத்த வேண்டும் என்று அக்கட்டுரையில் கூறினேன். அது ஒரு முக்கியமான கட்டுரையாகப் பேசப்பட்டது. ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் நிறைய பேரை அக்கட்டுரை மாற்றியது.

இதற்கு சிறிது காலத்திற்கு முன்புதான் நாங்கள் "நலுப்பு' (black) என்ற இதழை நடத்தத் தொடங்கியிருந்தோம். அருண்ஷோரியை எதிர்த்தும், பார்ப்பனர்களை எதிர்த்தும், புலே, அம்பேத்கர் ஆகியோரை தெலுங்கு மக்களுக்கு அறிமுகப்படுத்தியும் கட்டுரைகளை எழுதினோம். "பேட்' என்ற புகழ்பெற்ற காவியத்தை எழுதிய கவிஞர், "பிளாக் பேட்'டை இந்து மதத்திற்கெதிரான போராட்டத்தின் குறியீடாக அதில் வைத்திருந்தார். அதிலிருந்து "நலுப்பு' என்ற பெயரை எடுத்துக் கொண்டோம். எங்கள் இதழ் மிகவும் பிரபலமடைந்தது. ஆந்திராவின் தெலுங்கு இலக்கிய வட்டத்தை உலுக்கியது எங்கள் இதழ். இந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு மண்டல் ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டோம். 

இந்தப் பின்னணியில்தான் மண்டல் இயக்கம் உருப்பெற்றது. இந்துத்துவ பார்ப்பனர்கள் ஒரு புறம், பழைமைவாத காங்கிரஸ்காரர்கள் ஒருபுறம் என எதிர்ப்புகள் இரு முனைகளிலிருந்தும் மண்டல் பரிந்துரைகளுக்கு எதிராக வந்தன. முடிவில், இது மண்டல் X கமண்டலம் அரசியலானது. இதன் விளைவாக கமண்டல அரசியல், பாபர் மசூதியை இடித்தது. இந்துக்கள் பெரும்பான்மையாகவும், முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் இருந்தபடியால், முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளைக் கோர முடியாது என்றானது. இந்து பெரும்பான்மைவாதம் என்றால் என்ன? யார் இந்த இந்துக்கள்? யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு அளிக்கக்கூடாதென வாதிடுகிறார்களோ, அந்த பிற்படுத்தப்பட்டவர்களையும் உள்ளடக்கித்தானே இந்து பெரும்பான்மையினர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்? தலித்துகள் வேறு மதத்திற்குச் செல்ல தயாராக இருக்கின்றனர். பிற்படுத்தப்பட்டவர்கள்தான் அடிப்படையில் இந்து கட்டமைப்புக்குள் வருகின்றனர். அதனால்தான், இந்த இந்து பெரும்பான்மைவாத மாயையை முதலில் தகர்க்க வேண்டுமென நினைத்தேன். இந்நிலையில்தான் "நான் ஏன் இந்து அல்ல' என்ற நூலை எழுதத் தொடங்கினேன்.

உங்கள் நூல்களை வெளியிடுவதில் எத்தகைய இடர்ப்பாடுகளை சந்திக்கிறீர்கள்?

நான் அம்பேத்கரின் இலக்கியங்கள் குறித்து திறனாய்வுகளை தேடத் தொடங்கினேன். அவருடைய நூல்களுக்கு விமர்சனங்களோ, திறனாய்வுகளோ இல்லை. அவர் தனது நூல்களை தானே பதிப்பித்துக் கொண்டார்; அல்லது நெருங்கிய தலித் நட்பு வட்டாரங்களில் அவருடைய நூல்களைப் பதிப்பித்தார்கள். 1956 இல் அம்பேத்கர் "புத்தரும் அவர் தம்மமும்' பதிப்பித்தபோது அவரிடம் பணமில்லை. அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. இதில் வருத்தத்திற்குரிய விஷயமென்னவென்றால், அம்பேத்கர் நேருவுக்கு பணம் கேட்டு கடிதம் எழுதினார். அப்போது முக்கியமான உலக பவுத்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். ஆதலால் புத்தகத்தை அச்சிடும் செலவுக்கான தொகை கிடைத்தால் உடனடியாக அச்சிட்டு, மாநாட்டுக்கு வரும் புத்தமத பெரியவர்களுக்கு அதை வழங்கலாம் என்கிற யோசனையில் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தார். ராதாகிருஷ்ணனோ அந்தத் தொகையை வழங்க மறுத்தார்.

இதை அறிந்தபோது நான் மிகவும் வருத்தமடைந்தேன். பெரும்பான்மை வாசகர்களுக்காக ஒரு நூலை பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. இந்நூலை எழுதுவதற்காக நான் கிராமங்களுக்கு செல்லத் தொடங்கினேன். குழந்தைப் பருவம் முதல் முதுமைப்பருவம் வரை, பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் பார்ப்பன – பனியாக்களுக்கும் மற்றவர்களுக்குமான வேறுபாட்டை ஆராயத் தொடங்கினேன். ஆய்வின் முடிவில் அந்த நூலை எழுதினேன். ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எவரும் அந்நூலை அந்தத் தலைப்பில் பதிப்பிக்க முன்வரவில்லை.

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, சுயசரிதை உள்ளிட்ட பல நூல்களை பதிப்பித்த "பாப்புலர் பிரகாஷன்' பதிப்பகம் என்னுடைய நூலை பதிப்பிக்க முன்வந்தது. ஆனாலும் அவர்களுக்கு மும்பையிலிருந்து இந்தப் பணியை மேற்கொள்வதில் சிக்கல் இருந்தது. ஏனெனில், மும்பையில் சிவசேனா – பா.ஜ.க. ஆட்சி நடந்தது. அப்போது மும்பை யிலிருந்த பதிப்பகத்தார் என்னை வந்து சந்தித்து ""நாங்கள் பதிப்பிக்கிறோம். ஆனால் புதியதொரு பதிப்பகப் பெயரில், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பதிப்பிக்கிறோம்'' என்றார். "சாம்யா' என்று புதிய பதிப்பகப் பெயரிடப்பட்டு கல்கத்தா முகவரியிலிருந்து அந்த நூல் பதிப்பிக்கப்பட்டது.

1996 இல் "நான் ஏன் இந்து அல்ல' வெளியானது. அதிலிருந்து ஒரு புதிய கருத்தியலை உருவாக்குவதில் நான் பங்காற்றத் தொடங்கினேன். இந்நூல் பிரான்சிஸ் பனானின் "ரெச்சர்ட் ஆப் தி எர்த்' நூலோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டது. உலகமறிந்த பெண்ணிய அறிஞர் சுசிதாருதான் அவ்வாறு என் நூலை ஒப்பிட்டவர். புதிய முறைகளில், சிந்தனை உருவாக்கங்களில் நான் நிறைய சோதனைகளை செய்து பார்க்க வேண்டியிருந்தது. நான் ஏன் இந்து அல்ல வெளியான பிறகு, நான் ஒரு நூலாசிரியராக கருத்தில் கொள்ளப்பட்டேன். ஆனால், கம்யூனிஸ்டுகள் இந்தப் புத்தகத்தோடு உடன்படவில்லை.

ஜனநாயகவாதிகளும், ஆதிக்க சாதியிலுள்ள ஜனநாயகவாதிகளும், தலித் வாசகர்களும், வெளிநாட்டவரும்தான் நூலை வாசிப்பவர்களாக இருந்தனர். "டெக்கான் கிரானிக்கிள்' ஆசிரியர் ஜெயந்தி, "தி இந்து' பத்திரிகையின் மாலினி பார்த்தசாரதி,(என். ராம் அல்லர். அவர் என் எழுத்துகளை வெளியிட விரும்புபவர் அல்லர்) ஆகியோர் என் எழுத்துகளைப் பதிவு செய்ய முன்வந்தனர். ஆகவே, ஆங்கிலத்தில் நான் பரவலாக எழுதத் தொடங்கினேன். பத்தி எழுத்துகளாக செய்தித்தாள்களில் என் கருத்துகளை எழுதினேன். அந்த நேரத்தில் வெகு சில அறிவுஜீவிகள் மட்டுமே பார்ப்பனியம் குறித்து ஆதிக்க சாதியினரோடு விவாதிக்கத் தயாராக இருந்தனர். பண்டைய காலம் முதல் நவீன காலம் வரை இதற்கு பெரிய வரலாறு உண்டு.

ஆகவே, தொன்மத்தை நாடிச்சென்று புத்தரின் அரசியல் கருத்துகளிலிருந்து என் வேர்களைத் தேடினேன். எனக்கு முன்மாதிரிகளாக அம்பேத்கரையும், புலேவை யும் மட்டும் நான் வைத்திருக்கவில்லை. மார்க்சும் என் முன்மாதிரியாய் இருந்தார். ஏனெனில், கம்யூனிச தத்துவங்களை வைத்து அவர் இலக்கிய விதிகளை வகுப்பதற்கு முன்னால், மார்க்ஸ் பண்டைய கிரேக்கத்தை முழுமையாக ஆய்வு செய்தார். அவருடைய பிஎச்.டி. ஆய்வின் தலைப்பே The Struggle between Epicurance and Democratus என்பதுதான். அதனால் அவரைப் போலவே பின்னோக்கிச் சென்று, பவுத்தர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான போராட்டத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.

புலேவும், பகுஜன் சமாஜ் கட்சியும் என் பின்புலம். புலே, சாகுமகாராஜ், பெரியார், அம்பேத்கர், சாவித்ரி பாய் ஆகியோரை உள்வாங்கிய அரசியல் அடையாளமாக கன்ஷிராம் இருந்தார். நான் என்னுடைய கருத்துகளை அறிவுத்தளத்தில், வெளிக்கொணர தலைப்பட்டேன். கோபால் குரு, தோராட் போன்ற மிகச் சில நண்பர்களே இப்பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றனர். ஆனாலும் அவர்கள் வேலை செய்வது அறிவுத்தளத்தில் மட்டுமே. அம்பேத்கர் குறித்து எழுதினால், அவரைப் பற்றி மட்டுமே எழுதுவது என்கிற நிலை தற்பொழுது இருக்கிறது. அவரை சமகாலத்தவர்களோடு பொருத்திப் பார்ப்பதில்லை. உலகில் மிகப் பெரும் தாக்கத்தை செலுத்தக்கூடிய பெண்ணியம் மற்றும் மார்க்சியத்தின் கருத்துகளை, அம்பேத்கரியலோடு இணைக்க வேண்டும். அப்படிச் செய்தால், அது ஒரு பரந்துபட்ட தளமாக இருக்கும். அம்பேத்கர் ஓர் அசாதாரணமான மனிதர். அதனால்தான் என்னுடைய அண்மைக்கால புத்தகமான கணிண்t ஏடிணஞீத ஐணஞீடிச் வில் அவரை புத்தர், ஏசு, முகமது நபிகள், மார்க்ஸ் ஆகியோரோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். அவரை அய்ந்தாவது "இறைதூதர்' என்பேன்.

ஏனெனில், ஓர் இறைதூதருக்கõன வாழ்க்கையில்லாவிடில் – அந்தளவிற்கு எழுதியிருக்கவோ, அந்தளவிற்கு அரசியல் செய்திருக்கவோ, ஒரு தீண்டாமையில் அல்லலுறும் வாழ்க்கையை ஒரு தலைமுறைக்குள்ளாகவே நவயானா பவுத்தத்திற்கு உருமாற்றவோ முடியாது. நான் அம்பேத்கரில்லை. மிகச் சிறியவன். எனவே, நான் வேறு மாதிரி முடிவு செய்தேன். சமகாலத்தில் இந்து மதம், தலித்தியம் ஆகியவை குறித்த ஒரு முழுமையான கொள்கை சார்ந்த பார்வையை உருவாக்கவும், இன்றைய காலகட்டத்தில் பழங்குடியினர் முதல் பார்ப்பனர்கள் வரை, என்னென்ன வேறுபாடுகள் உள்ளன என்பதையெல்லாம் கண்டறிவதும், எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்கவும் முனைந்தேன்.

என்னுடைய "நான் ஏன் இந்து அல்ல' நூலில், பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்குமான பண்டைய கால போராட்டங்களைப் பின்புலமாக வைத்து, இன்றைய சமகாலத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அத்தனை விஷயங்களிலும் கடவுளர்களின் பெயரால் எத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன, பார்ப்பனியம் எத்தனை கொடுமையான பங்கு வகிக்கிறது, எப்படியெல்லாம் ஆண் – பெண் உறவுகள் பாதிக்கப்படுகின்றன என்பதை பிற்படுத்தப்பட்டவர்களின் பார்வையிலிருந்து விளக்கியிருக்கிறேன். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும், பண்பாட்டு ரீதியாக, ஆன்மிக ரீதியாக, உடல் ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளா தார ரீதியாக எத்தனை வேறுபாடுகள்? பின் எப்படி இதை மாறிவிட்ட ஒரு ஜனநாயக நாடு என்று நாம் சொல்ல முடியும்?

நவீன உலகம் கல்வியின் உலகமாக இருக்கிறது. அம்பேத்கரின் வாழ்க்கையிலிருந்து நான் ஒன்றை கற்றுக் கொண்டேன். தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மத்தியிலிருந்து நிறைய இலக்கியங்கள் வருகின்றன. ஆனால், இந்திய அளவில் அவை கவனத்தைப் பெறுவதில்லை. ஆகவே, ஆங்கிலத்தில் எழுத வேண்டும். ஏனெனில், கருத்துருவாக்கத்திற்கு ஆங்கிலத்தில் தத்துவச் சொல்வளம் ஏராளம். அதனாலேயே அறிவுத்தளத்தில் நம் குரல் ஓங்கி ஒலிக்கச் செய்ய சீராக ஆங்கிலத்திலேயே எழுத வேண்டுமென்று நினைத்தேன். அப்போதுதான் அறிவுத்தளம், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் மக்களிடையே கருத்துகளையும் போராட்டங்களையும் கொண்டு சேர்க்க முடியும்.

பிறகு சமஸ்கிருதத்தையும் பிராந்திய மொழிகளையும் ஒழிக்க வேண்டும் என்று கூறத் தொடங்கினேன். ஏனெனில், எல்லா பிராந்திய மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் வேர்கள் இருந்தன. ஆகவேதான் நான் ஆங்கிலத்தை ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கினேன். நான் இந்திய ஆங்கிலத்தைத்தான் சொல்கிறேன். என்னுடைய ஆங்கிலத்தைப் பார்த்தீர்களென்றால் – காலனியாதிக்க ஆங்கிலமாகவோ, அமெரிக்க, அய் ரோப்பிய ஆங்கிலமாகவோ இருக்காது.
"நான் ஏன் இந்த அல்ல' நூலை எழுதி முடித்து, அது உருவாக்கிய விவாதங்களுக்குப் பிறகு உற்பத்தி சமூகத்தின் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறைகளில் கவனம் செலுத்த தொடங்கினேன். ஆனால் இந்தத் திறமைகளுக்கெல்லாம் கூட, மதங்களில்தான் வேர்கள் இருக்கின்றன. எங்கள் தலைமுறை எதிர்கொண்ட சிரமம் எதுவெனில், தலித் இயக்கங்கள் எல்லாம் நூற்றுக்கணக்கான கல்வி புலம் சார்ந்த கருத்தரங்குகளில் அம்பேத்கரை முன்னிறுத்தின. அம்பேத்கரிய கல்வி மய்யங்கள் உருவாகின. புலேவையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தலித்துகளுக்கும் ஓர் இடைவெளி இருந்து கொண்டே இருந்தது. இந்த இடைவெளி களையப்பட வேண்டுமென விரும்பினேன். தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள், பெண்கள், சிறுபான்மையினர் என்று அனைவரும் ஒற்றுமையாக இல்லையெனில், நம் போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியாது. அதுதான் நம்முடைய முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும். இல்லையெனில், அரசியல் அதிகாரத்தைப் பெற முடியாது.

எனவே, நான் பண்டைய இந்தியாவிற்குச் சென்று அசோகர் காலத்திய நடைமுறைகளைப் பற்றி ஆய்வு செய்தேன். அசோகர் ஒரு சாதாரணமான மன்னராக இருந்திருந்தால், அவரால் வெற்றி பெற்றிருக்க முடியாது. அவர் பவுத்தத்தை தேர்ந்தெடுத்தார். உலகம் முழுவதும் பவுத்தத்தை பரவச் செய்ய வேண்டுமென நினைத்தார். ஒருபுறம் கிறித்துவ மத போதகர்கள் தாக்கப்படுகிறார்கள். பெண் துறவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். பாதிரியார்கள் கொல்லப்படுகிறார்கள். மறுபுறம் தலித் இயக்கங்கள் மதங்களை கேள்வி கேட்காமல், தலித் பொருளாதாரம், தலித்துகளுக்கான அதிகாரம், தலித் அரசியல் என்று மட்டுமே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தன. ஆகவே, இந்து மதத்திற்கு எதிர்ப்பு என்பது கிட்டத்தட்ட இல்லாமலேயே போனது. பிற்படுத்தப்பட்டவர்களின் முக்கியமான பிரச்சனையே இந்து மதம்தான்.

தலித்துகள் பவுத்தத்திற்கும், கிறித்துவத்திற்கும் மாறிவிடலாம். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் இதற்குள்ளேயே ஓர் இந்து கடவுளின் காலடியில் பார்ப்பன மேற்பார்வையிலேயே இருக்கிறார்கள். அதனால்தான் பிற்படுத்தப்பட்டவர்களின் பார்வையில் இந்து மதத்தை கேள்வி கேட்க வேண்டும் என்கிறேன். எனவேதான் "தலித் பகுஜன்' என்ற சொல்லை உருவாக்கினேன். இதற்குள் பெண்ணியத்தையும் அடக்கினேன். நீங்கள் என்னுடைய எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் சரி, பெண்ணியம் அதில் ஒரு பகுதியாக வந்து கொண்டேயிருக்கும்; அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை. நூல் முழுவதும் வரும். அதனால் தான் சாதி பண்பாட்டுப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக, அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றை இந்து மத எதிர்ப்புத் திட்டமாகப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதுதான் Post Hindu India என்கிற என்னுடைய கனவு நூலை உருவாக்க முனைந்தேன்.     

– அடுத்த இதழிலும்

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால்,
ஆர்.ஆர். சீனிவாசன்

தமிழில் : கவின் மலர்



Tuesday, November 16, 2010

இரவில் கரையும் நிழல்கள்

இப்போதெல்லாம் கயல்விழி நினைவு ஓயாமல் வருகிறது. பள்ளிக்கு ஒன்றாகப் போகும் சிறுமிகளைப் பார்க்கும்போதும் சைக்கிளில் செல்லும் மாணவிகளைப் பார்க்கும்போதும் அவள் நினைவு தவறாமல் வந்து போகிறது. அப்போதுகூட அவள் இப்போதிருக்கும் உருவத்தில் எனக்கு நினைவுக்கு வர மறுக்கிறாள். கருநீல பாவாடை தாவணியுடனும் வெள்ளை ஜாக்கெட்டுடனும் மட்டுமே நினைவுக்கு வருகிறாள். அந்தப் பள்ளிச் சீருடையில் நாங்கள் ஊரை சைக்கிளிலேயே வலம் வந்த நாட்கள் நெஞ்சில் இன்னும் பசுமையாய் நினைவிருக்கின்றன

அவள் வீட்டிலிருந்து என் வீடுவரை வந்து என்னை அழைத்துக்கொண்டு இருவரும் ஒன்றாகத்தான் பள்ளிக்குப் புறப்படுவோம். அவள் கொஞ்சம் சிவப்பாகவும் நான் கருப்பாகவும் இருப்பதால் பையன்கள் எங்களுக்கு பிளாக் அண்ட் வொய்ட் என்று பெயர் வைத்து அழைத்தார்கள். ரெட்டைப்புறா, நீலக்குயில்கள், அதிசயப் பிறவிகள், ஏசியன் புரொடக்ஷன்ஸ் - இப்படி எத்தனையோ பெயர்கள் எங்களுக்கு. இதில் இந்த ’ஏசியன் புரொடக்ஷன்ஸ்’ என்ற பட்டப்பெயருக்கு மட்டும் இந்த நொடிவரை எனக்கு காரணம் விளங்கவில்லை. நாங்கள் போகும்போது பின்னால் வரும் பையன்கள் இந்தப் பெயரிட்டு சத்தமாக அழைத்து கலாட்டா செய்வதும் நாங்கள் சாலையில் செல்லும்போதே சிரித்துக்கொண்டு சைக்கிளோட்டிச் செல்வதும் நேற்று நடந்ததுபோலிருக்கிறது.

கயல் எப்போதிருந்து எனக்கு தோழியானாள் என்று யோசித்துப் பார்க்கிறேன். சரியாய் நினைவு வரவில்லை. ஆறாவது படிக்க பள்ளியில் சேர்ந்தபோது இரட்டை சடை மடித்துக்கட்டி ஸ்கர்ட் சட்டையில் கயலைப் பார்த்த நினைவு. ஒன்பதாம் வகுப்பில்தான் நெருங்கிப் பேசி தோழிகளானோம் என்று நினைக்கிறேன். அதன் பின் வேறு யாரையும் நாங்கள் சட்டை செய்யவில்லை. வகுப்பில் நாங்கள் சிரித்து திட்டு வாங்காத நாளே இல்லை என்றானது
எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும்வரை நடந்தது அத்தனையும் என்னிடம் ஒப்பிப்பாள். நானோ தூங்கியபிறகானவற்றையும் அவளிடம் சொல்லுவேன்.

“3 மணிலேர்ந்து 4 மணிவரை படிச்சேண்டி, ஒரு உப்பு பெறாத விஷயத்துக்கு 4 மணிக்கு அம்மா வந்து என்னைத் திட்டினாங்க, 4 டூ 5 அழுதேன். அப்புறம் 5 மணிக்கு அப்பா வந்திட்டாங்க. அவங்ககிட்ட பேசிட்டு திரும்பவும் படிக்க 6 மணிக்கு உட்கார்ந்தேன். 10 மணிவரை சயின்ஸ் படிச்சேன். தூக்கம் சொக்குச்சு. அப்படியே தூங்கிட்டேன்”.

இப்படி அவள் எல்லாவற்றையும் என்னிடம் ஒப்பிப்பாள். பள்ளியிலும் வெளியிலும் எங்களைப் பற்றிப் பேசாதவர்களே கிடையாது.
ஒரு பையனால் எனக்கு ரொம்பத் தொல்லை. வகுப்பறையின் டெஸ்கில் வந்து என்னிடத்திற்கு நேரே “ஐ லவ் யூ” என்று எழுதி வைப்பான். யாராவது பார்த்துவிட்டால் என்னாவது என்று நான் பயந்து நடுங்குவேன். எரிச்சலாய் இருக்கும். என்னை எங்காவது சாலையில் பார்த்தால்கூட அவனுடைய நண்பர்கள் அவன் பெயரைச் சொல்லி அவனுடைய ஆள் என்பார்கள். ஒரு குரங்குக் கூட்டம்போல பின்னாலேயே சைக்கிளில் வந்து தொல்லை கொடுப்பார்கள். அதேபோல அவளுக்கும் ஒருத்தன் வாய்த்தான். எங்கள் பின்னால் இரு கூட்டங்கள் வரத் தொடங்கின. முதலில் பயந்த நாங்கள் அதற்குப் பின் அவர்களைப் பற்றி எங்களுக்குள் கிண்டலடித்து சிரிக்கத் தொடங்கினோம். எங்கள் ஊரின் சாலைகளின் பள்ளங்களை எங்கள் சைக்கிள்கள் கடக்கும்போதெல்லாம் எங்கள் சிரிப்பால் அவற்றை நிரப்பினோம்.

எங்கள் சிரிப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாயிற்று. வீட்டில், வெளியில், சாலையில், டியூஷனில், வகுப்பில், கடைத்தெருவில், சைக்கிள் கடையில் என்று நாங்கள் சிரிக்காத இடமேயில்லை. “போங்கடி! சிரிப்பா சிரிக்கப்போறீங்க” என்று வேறு ஸ்கூல் பையன்கள் சாபம் விடுவார்கள். “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு” என்று எங்களை கைகாட்டி பையன்கள் பாடுவார்கள். எங்கள் சிரிப்பு எல்லோரையும் உறுத்தியது என்பது மிகத் தாமதமாகத்தான் உணர்ந்துகொண்டோம்.

நாங்கள் சாலையில் ஒருவர் பின் ஒருவராக ஒருபோதும் சென்றதில்லை. இருவரின் சைக்கிள் சக்கரங்களும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி போவோம். போகிறவர்கள் வருகிறவர்களெல்லாம் பல நேரங்களில் திட்டிவிட்டுப் போவார்கள். ஆனாலும் அதிலொரு சந்தோஷம். அப்போதுதானே பேச முடியும். வகுப்பறையில் நடந்தது, முருகன் சார் சொன்ன ஜோக், வீட்டில் நடந்தது, வெளியில் நடந்தது என்று எதையாவது பேசி ஓயாமல் சிரித்துக்கொண்டேயிருந்தோம். நாங்கள் எங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டாலும் சாலையைப் பார்த்து சைக்கிள் ஓட்ட வேண்டிய கட்டாயமிருந்ததால் நேரே பார்த்துக்கொண்டே வாய் மட்டும் பேசிக்கொண்டும் ஜோக் அடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டுமிருக்கும். அப்போது எதிர்ப்படும் வேறு ஸ்கூல் பையன்களெல்லாம் நாங்கள் ஏதோ அவர்களைப் பார்த்து சிரிக்கிறோம் என்று தப்பாக நினைத்துக்கொண்டு பின்னால் வரத் தொடங்கினார்கள். எங்களுக்குக் குழப்பமாக இருக்கும். ”இவன் யாருக்காக வர்றான்” என்று புரியாமல் விழிப்போம் முதலில். அப்புறம் அவன் பார்வை யார் மேல் இருக்கிறதென்பதை வைத்து கண்டுபிடிப்போம். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம். அவளுக்காக எவனாவது வந்தால் அவனைத் திட்டும் வேலையை நானெடுத்துக்கொள்வேன். எனக்காக எவனாவது வந்தால் அவள் திட்டுவாள். ஆனால் மறந்தும் வாயெடுத்து மற்றவர் ஏதும் பேசிவிட மாட்டோம். இதை நாங்கள் சொல்லியெல்லாம் வைத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் எப்படியோ கடைபிடித்தோம்.

ஒருமுறை ஆளா பையனா என்று தெளிவாக சொல்ல முடியாத வயதுடைய ஒருவன் வந்தான். வழக்கமான முதல் குழப்பத்திற்குப் பின் அவன் கயலுக்காக வருகிறான் என்பதை கண்டுபிடித்தோம். வழக்கம்போல நான் திட்டத் தொடங்கினேன். "அறிவேயில்லையா? ஏனிப்படி தொல்லை செய்றீங்க” என்று. "நான் உங்க பிரண்டை லவ் பண்றேன்” என்றான்.

ஒரு வாரம் இப்படியே போனபின் கயல் அவனைத் திட்டத் தொடங்கினாள். நான் மவுனமாகி விட்டேன். அவன் திடீரென்று என்னைப் பார்க்க ஆரம்பித்தான். எனக்காக வருவதுபோல் தெரிந்தது. எது அவனை அப்படி மாற்றியது என்று தெரியவில்லை. இரண்டாவது வாரமே எப்படி ஒருவன் இப்படி மாறுவான் என்று எனக்கு விளங்கவில்லை.

“இவன் என்ன லூஸாடி?” என்றேன்.

“நீ திட்டிய அழகு அவனுக்குப் பிடிச்சிருக்குபோல” என்றாள்.

மறுநாள் ஒரு கடிதத்தை எடுத்து வந்து என்னிடம் நீட்டினான். நான் அதைத் தொடக்கூட இல்லை. நாங்கள் இருவருமே சுயமரியாதை பாதிக்கப்பட்டதுபோல் உணர்ந்தோம். “திருட்டுப்பய! என்கிட்டயே வந்து உன்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு இன்னைக்கு வந்து என்னை லவ் பண்றேன்னு சொன்னா என்ன திமிர்; ஆணவம். ஆம்பிளைங்கிற கொழுப்பு” - நான் அவனைத் திட்டிக்கொண்டேயிருந்தேன் கயலிடம்.
இப்போதும் ஊருக்குப் போகும்போது அவனைப் பார்ப்பேன். தன் மனைவியோடு குழந்தையோடு கடைவீதிகளில் பார்ப்பதுண்டு. ஏனோ அவனைப் பார்த்தால் பாவமாயிருக்கிறது இப்போதெல்லாம்.

கயலுடைய அப்பாவும் என்னுடைய அப்பாவும் தமிழாசிரியர்கள் என்பதால் எங்களுக்கு தமிழ்ப் பெயர் வாய்த்தது. “சுடர்மொழி - கயல்விழி” என்று நாங்கள் இரட்டைப் பிறவிகள் போலவேதான் அறியப்பட்டோம். நாங்கள் இருவருமே நன்றாகப் பாடுவோம். அதனால் பள்ளி அசெம்பிளியில் பாடுவோம். அந்த இரண்டொரு நிமிடங்களிலும் கூட்டத்தில் யாரோ ஒரு பையன் அல்லது பெண் முகத்தில் ஏதாவதொரு ஜோக்கைத் தேடி சிரித்து வைப்போம். ஒருமுறை இருவருமே சிரிப்பை அடக்க முடியாமல் பாடமுடியாமல் தவித்து நிறுத்தி விட, கூடப் பாடிய மாணவி ஒற்றை ஆளாய் பாடி முடித்தாள். அன்று ராபர்ட் சாரிடம் திட்டு வாங்கினோம். அப்போதும் சிரித்தோம். சிரிப்புத்தான். எப்போதும் சிரிப்புத்தான்.

எங்கள் படிப்பும், சிரிப்புமாக நாங்கள் விளையாட்டுத்தனமாக இருக்கையிலேயே பிளஸ் டூ பரிட்சை வந்தது. ரிசல்ட் வந்தபோது நான் மட்டும் பாஸாகியிருந்தேன். இடிந்து போனேன். அவளுக்கு கணக்குப் பாடத்தில் போய்விட்டது. அழுதாள். அழுதாள். அழுதுகொண்டேயிருந்தாள். எனக்கு அவள் பெயிலான சோகத்தைவிட அவள் என்னுடன் இனி படிக்க முடியாது என்பதே உறுத்தியது. நான் கல்லூரியில் கணிதம் சேர்ந்தேன். அவள் அக்டோபர் தேர்விற்குப் படிக்கலானாள். தனியாக டியூஷன் சென்று படித்தாள்.

அப்போதுதான் எங்கள் இருவர் வீடுகளிலும் தொலைபேசி வந்த புதிது. தினமும் பார்த்துக்கொள்ள இயலாத சூழலில் மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசுவோம். நான் பேசும் விதத்தை வைத்தே அப்பா “கயலா?” என்பார். போனை கையிலெடுத்ததும் ஆரம்பிக்கும் சிரிப்பு ஒரு மணிநேரத்திற்குக் குறையாது. “என்னதான் பேசுவீங்களோ? இப்படி சிரிக்க” என்று அம்மா அலுத்துக்கொள்வது பெரிதாக அவளுக்கு கேட்கும். “என்னடி சொல்றாங்க?” என்பாள். “நீ பேசு! கண்டுக்காதே!” என்று சொல்லி மீண்டும் தொடங்குவோம். எங்களுக்கு சிரிக்க நிறைய விஷயங்கள் இருந்தன. நான் கல்லூரியில் நடப்பவற்றையெல்லாம் சொல்ல, அவள் டியூஷனில் நடப்பவற்றையெல்லாம் சொல்ல சிரிப்போம்.

அக்டோபர் தேர்வெழுதி பாஸ் செய்தாள் கயல். அடுத்த ஆண்டு எனக்கு ஜூனியராக வந்து எங்கள் கல்லூரியில் சேர்ந்தாள். எனக்கு காலை எட்டரையிலிருந்து ஒன்றரை வரை. அவளுக்கு ஒன்றரையிலிருந்து மாலை ஐந்தரை வரை. அதனால் பார்த்துக்கொள்ளும் நேரம் குறைந்தாலும் தினமும் மாலையில் வீட்டுக்கு வந்து என்னைப் பார்க்காமல் போக மாட்டாள். அப்போதும் நாங்கள் சிரித்தோம். சிரிப்பதற்கு எங்களுக்கு விஷயங்களிருந்தன.

எனக்கு கல்லூரியில் புதிதாக சில தோழிகள் கிடைத்தார்கள். என் தோழிகளெல்லோரும் வெவ்வேறு வகுப்புகளில் இருந்தோம். பாட்டு, பேச்சு, கட்டுரை என்று போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் நிறைய வாங்குவேன். என் பாட்டுக்கு கல்லூரியில் மாணவர்கள் முதல் பிரின்சிபால் வரை ரசிகர்கள். கூட்டம் அடங்காமல் கத்திக்கொண்டிருந்தால் என்னைக் கொண்டுபோய் ஒலிவாங்கி முன்னால் நிறுத்திவிடுவார்கள். நான் பாட ஆரம்பித்தவுடன் அமைதியாகிவிடும் கூட்டம். கல்சுரல்ஸில் நான் பாட, என்னோடு வந்த மற்றவர்கள் நடனம் அது இது என்று பரிசுகளை அள்ளிக்கொண்டு வருவோம். இப்படி கல்சுரல்ஸூக்குப் போய்ப் போயே ஒரு தோழிகள் வட்டம் சேர்ந்தது எனக்கு. நாங்கள் 7 பேர் அதிலுண்டு. 7 ஸ்டார் குரூப் என்று கல்லூரியில் எங்களை செல்லமாய் அழைத்தார்கள். ஓரளவிற்கு எனக்கு அவர்களோடு பழக்கமாகி நட்பாகி விட்டேன். கயல் கொஞ்சம் என்னை அவர்களோடு பார்த்தால் எரிச்சலாவாள். அதுபோலவே அவளுடைய வகுப்பில் உள்ளவர்களோடு அவளைப் பார்த்தால் நான் எரிச்சலாவேன். சின்னச் சின்னதாய் சண்டைகள் எங்களுக்குள் வந்தன. ஆனாலும் நாங்கள் எங்கள் சிரிப்பைத் தொடர்ந்தபடி நட்பு மேலும் இறுகிப்போயிருந்தது. 

இப்படியே இறுதியாண்டு வந்துவிட்டது எனக்கு. கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு விடை கொடுக்கும் ஃபேர்வெல்டே வந்தது. அதற்கு பச்சை நிறத்தில் ஒரே போல 7 ஸ்டார் குரூப்பில் புடவை எடுத்துக் கட்டினோம். அதற்கு பிரண்ட்ஸ் ஸாரி என்று பெயர். எங்களை கும்பலாய் பச்சை நிறச் பிரண்ட்ஸ் ஸாரியில் பார்த்த கயல் பொங்கி வரும் கண்ணீரை அடக்கிக்கொண்டு மறைவிடம் நோக்கி ஓடினாள். நான் விக்கித்துப் போனேன். பின்னாலேயே ஓடி அவளை சமாதானப்படுத்தினேன். 
“இது ஒரு நாளைக்குத்தானே.. எல்லோரும் ஆசைப்பட்டாங்க. அதான்” 
“எதுக்கு எல்லோரும் ஒரே கலர்ல ஸாரி எடுத்துருக்கீங்க?”
“இது பிரண்ட்ஸ் ஸாரி கயல்”
அவ்வளவுதான். பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். நான் விழித்தேன். இந்த அன்பிற்கு நான் என்ன செய்யப் போகிறேன்? 
கல்லூரியை விட்டு வெளியேறும் நாளில் எல்லோரிடத்திலும் ஆட்டோகிராப் வாங்கினேன். அவளிடமும் போய் நீட்ட முறைத்தாள். 
“நானும் போடணுமா?”
“ஆமாம்! போடு” - எனக்குள் ஒரு ஆவல் இருந்தது என்னதான் எழுதுகிறது இந்தப் பிசாசு. பார்ப்போம் என்று. 
நெடுநேரம் எழுதிக்கொடுத்து "வீட்டுக்குப்போய் வாசி” என்றாள்.
வரும் வழியிலேயே வாசித்துக்கொண்டே வந்தேன். “நாம் ஒருவருக்குள் ஒருவர் வாழ்கிறோம். இந்த ஆட்டோகிராப் கூடத் தேவையில்லை” என்று தொடங்கி பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாள். “பிரண்ட்ஸ் ஸாரி” என்கிற வார்த்தை அவளை எப்படி துடிதுடிக்க வைத்தது என்றெழுதியிருந்தாள். வாசிக்கையில் கண்ணில் எனக்கு நீர் முட்டியது.
வீட்டுக்குள் நுழைந்தேன் தொலைபேசி மணி அடிக்க..மறுமுனையில் கயல். “என்ன? படிச்சிட்டியா? நீ எவ கூட வேணும்னாலும் பிரண்ட்ஸ் ஸாரி எடுத்துக்கோ. கட்டிக்கோ. நான்தான் உனக்கு பிரண்ட். தெரியுதா?” என்றாள். நான் சிரித்தேன். சிரித்தோம். சிரித்துக்கொண்டேயிருந்தோம். அப்பா வழக்கம்போல வந்து “கயலா?” என்று கேட்டு விட்டுப் போனார்.

*********************************
சுடரு! சாப்பிடவா! - அழைத்தாள் கயல். 

டைனிங் டேபிளில் அமர்ந்தேன். சூடான இட்லி வைத்தாள். காலடியில் அவள் மகன் வந்து என் காலை சுரண்டினான். “சாப்பிடும்போது இப்படியெல்லாம் டிஸ்டர்ப் பண்ணாதே!  ஓடு! போய் டிவி பாரு போ!” - துரத்தினாள் மகனை. 

இப்போது நான் அவள் வீட்டில்தானிருக்கிறேன்.

“டெல்லியில் இருந்தப்போ நீ நடிச்ச நாடகம் பத்தி உன் பேட்டி ஏதோ ஒரு சேனல்ல பார்த்தேன். பயங்கர மெச்சூரிட்டியா பேசுற. ரொம்ப பெருமையா இருந்துச்சு. அவர்கிட்ட சொல்லிக்கிட்டேயிருந்தேன்” என்றாள்.

வளசரவாக்கத்தில் சொந்த வீடு. கணவர் வெளிநாட்டில் இருந்தார். அவளுக்குத் துணைக்கு அவளுடைய மாமியார் இருந்தார். இடையில் மணமான புதிதில் டெல்லி சென்று விட, அவளோடு பேசாமலிருக்கப் பழகிக்கொண்டேன். அவள் வாரமொரு முறையாவது என்னை அழைத்து பேசுவாள். அதன்பின் அவள் கணவர் திடீரென்று வெளிநாட்டுக்குச் செல்ல நேர்ந்தபோது அவளையும் கூட்டிக்கொண்டு போய்விட அதன்பின் என்றைக்காவது பேசுவது, ஈமெயில், சாட்டிங் என்றானது. நாடு திரும்பி அவளும் குழந்தையும் இங்கிருக்க, அவள் கணவர் மட்டும் வெளிநாட்டிலிருந்தார். நானோ பல வேலைகள் செய்து மாறி மாறி இறுதியில் எனக்குப் பிடித்த ஒரு வேலையில் சேர்ந்து விட்டேன்.

அவ்வப்போது கைபேசியில் அழைப்பாள். எனக்கும் வேலைப்பளு அதிகமாக இருந்ததால் அடிக்கடி பேசிக்கொள்ள இயலாமல் போனது. ஆனால் தினமும் அவளை நினைத்துக்கொள்வேன்.  வீட்டு உரிமையாளர் திடீரென்று இரண்டு மடங்காக வாடகை கேட்க உடனே காலி செய்ய வேண்டிய நிலையில் அவளிடம் பேச, “இங்கே வர வேண்டியதுதானே? என்ன யோசனை உனக்கு” என்று கடிந்துகொள்ள பெட்டி படுக்கையோடு அவள் வீட்டுக்குச் வந்துவிட்டேன்.. உடனே ஒரு வீடோ, ஹாஸ்டலோ பார்க்கவேண்டும். பார்க்கும்வரை இங்கிருக்கலாம்.

வீடு தேடும் படலம் ஆரம்பமானது. என் ஏழாயிரம் ரூபாய் சம்பளத்தில் வீட்டுக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்தான் ஒதுக்க முடியும். ஒரு லோன் வேறு கட்ட வேண்டி இருந்ததால் விழி பிதுங்கியது எனக்கு. தினமும் வீடு பார்க்கையில் அட்வான்ஸ் ஒத்துவராது அல்லது வாடகை இடிக்கும் அல்லது வீடு பிடிக்காமல் போகும். இப்படியே பதினைந்து நாட்கள் போனது. 

அலுவலகத்தில் வேலை முடிய இரவு பத்துக்கு மேலானது அன்று. அவசரமாக ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். மணி 11. அழைப்பு மணியை அழுத்தினேன். உள்ளே குழந்தை வீறிட்டுக் கத்தும் சப்தம் கேட்டது.

“இன்னைக்கு வேல முடிய நேரமாயிடுச்சு கயல்”

“சரி வா! சாப்பிடு!” - அவள் அன்பை கரைத்து தோசை வார்த்துத் தந்தாள். சாப்பிடும்போது தூக்கக்கலக்கத்துடன் கயலின் அத்தை படுக்கையறையின் வாசலில் நின்று கேட்டார்

”வீடு பாத்தியாம்மா? 

“பார்த்துக்கிட்டுத்தானிருக்கேன். ஒண்ணும் செட்டாகலைம்மா”

"மெட்ராஸில் ரெண்டாயிரம் மூவாயிரத்துக்கு வீடு கிடைக்கிறது கஷ்டமாச்சே. கொஞ்சம் பட்ஜெட்டை கூட்டி வீடு தேடு. அப்பத்தான் சட்னு கிடைக்கும்”

“இல்லம்மா.. இதுக்கு மேலே வச்சா லோன் கட்ட முடியாம போயிடும்”

“அப்படியா? சரி.”

அன்றைக்கு எனக்கு உறக்கம் வரவில்லை. அத்தை என் அப்படி கேட்கவேணும்? நினைவை உதறி மாடியறையில் புரண்டு படுத்தேன். கீழே குழந்தை அழும் சத்தம். சின்னச் சின்ன சத்தத்திற்குக்கூட விழித்துக்கொள்கிறது குழந்தை. இரவெல்லாம் தூங்காமல் கஷ்டப்படுகிறாள் கயல்

மறு நாள் ஒரு கூட்டத்திற்காக மறைமலைநகர் வரை போக வேண்டி இருந்தது. போய்விட்டேன். கூட்டம் முடிய அங்கேயே ஒன்பதேமுக்காலானது. அதற்கு மேல் கிளம்பி வளசரவாக்கம் வந்தால் கண்டிப்பாக 11 மணிக்கும் மேலாகிவிடும். குழந்தை அழும் சத்தம் எனக்கு இப்போதே கேட்பது போலிருந்தது. என்ன செய்யலாம்? மறைமலை நகரில் கூடப் படித்த விஜி இருப்பது நினைவுக்கு வர அவள் கைபேசியை எடுத்து எண்களை அழுத்த, அவள் ”நான் ஊரில் இருக்கேன்” என்றாள். இப்போதென்ன செய்ய? கைகளைப் பிசைந்தேன். நடு ராத்திரியில் போய் தொந்தரவு செய்ய வேண்டுமா? பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. ஒரு சாலையோரக் கடையில் 4 இட்லிகளை தின்றவாறே யோசித்தேன். எப்.எம்.ரேடியோவில் பாட்டு பாடிக்கொண்டிருந்த்து. “உனக்கென இருப்பேன்... உயிரையும் கொடுப்பேன்..” காதல் படப்பாட்டு. பளீரென மின்னல் அடித்தது. திருவண்ணாமலை பேருந்தை கைகாட்டி ஏறினேன். குளிரான அந்த மழை இரவில் பயணம் ஒரு நிராதரவான மனநிலையை எனக்கு அடையாளம் காட்டியது. திருவண்ணாமலைக்கு ஒரு டிக்கெட் எடுத்துவிட்டு ஆயாசமாய் அமர்ந்தேன். பேருந்து முடிவற்றுப் போய்க்கொண்டே இருந்தது. கண்களை மூடி தூங்க முயற்சித்தேன். முடியவில்லை. பையில் இருந்த புத்தகத்தை படிப்பதற்காக எடுத்தேன். பிரித்த அடுத்த இரண்டாவது நிமிடம் விளக்குகள் அணைக்கப்பட்டன. விழித்தபடியே இருளுக்குள் வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்தேன். முடிவற்ற அந்தப் பயணம் என்னை பயமுறுத்தியது. எங்கு போகிறேன்? எதற்குப் போகிறேன்? இலக்கில்லாத பாதையில் அந்தப் பேருந்து என்னை இட்டுச் சென்றது.

சுற்றிலும் கவனித்தேன். ஒரு பெண் தன் கணவனின் தோளில் சாய்ந்து தூங்கிக்கொண்டு வந்தாள். அவள் கயல் சாயலில் இருப்பது போலிருந்தது. இடையில் கயல் குண்டாகி இருக்கிறாள். இரண்டு குழந்தைகளானவுடன் நன்றாய்த்தான் பெருத்திருக்கிறாள். எப்படி இவ்வளவு சதை வைத்தது அவளுக்கு? எத்தனை ஒல்லியாய் இருப்பாள் முன்பு! ஒட்டடைக்குச்சி என்று எங்கள் பள்ளித்தோழனொருவன் அவளுக்கு பட்டப்பெயர் வைத்திருந்தது நினைவுக்கு வந்தது.

கயலுக்கு அழகான குரல். பாடினால் நன்றாக இருக்கும். பிள்ளைகளுக்கு தாலாட்டு கூட சினிமா பாட்டுதான் பாடுகிறாள். தூங்க வைக்க பாடுவது எனக்கு மாடிக்கு சன்னமாய் கேட்கும். ரசித்துக்கொண்டே நானும் தூங்கிப் போவதுண்டு. அப்படி ஒரு நாள் தூங்கிப்போய்விட, திடீரென வந்து எழுப்பினாள். 

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நீ ஏன் இப்படி இருக்கே?”

“எப்படி இருக்கேன்?”

“ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை?”

”ஏன் பண்ணனும்?”

என்னை மவுனமாய்ப் பார்த்தாள். ”சரிதான் நீ சொல்றது. நான்கூட ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நினைச்சுருக்கேன்”

“நீ படிச்ச படிப்பென்ன? உன் திறமை என்ன. நீ ஏன் இப்படி வீட்டில் அடைஞ்சு கிடக்கணும்?”

“இருந்தாலும் அப்பா அம்மாவுக்குப் பிறகு யார் உன்னைப் பார்த்துப்பாங்க. அதுக்காவது புருஷன் புள்ளை வேணுமில்லையா?”

"இப்போதைக்கு எனக்கு அது தேவையில்லைன்னு தோணுது. விட்டுடு ப்ளீஸ்!”

அவள் என்னையே பார்த்தாள். கண்கள் கலங்கி கொட்டத் தயாராய் நின்றன. 

“உன்னை நினைச்சா பயமா இருக்கு!” - பொல பொலவென உதிர்ந்தது கண்ணீர்.

“ஒண்ணும் ஆகாது. செத்தா போயிடுவேன்? தனியா வாழ்ந்துடுவேன். பின்னாடி கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணினா பண்ணிக்குவேன். சரியா? போய்த்தூங்கு கயல்”

எனக்காக கண்ணீர் விட்ட ஜீவன் அவள். கயல்! என் பிரியமான சிநேகிதியே!  மனம் குழைந்து அவளுக்காய் பொங்கி விழிகளில் வழிந்தது.

“திருவண்ணாமலை இறங்கு” - நடத்துனரின் குரல் கலைத்தது என்னை. இறங்கிக்கொண்டேன். ஒரு தேநீர் குடித்தால் நன்றாயிருக்குமென்று தோன்றியது. தேநீர்க்கடையில் தேநீர் வாங்கி பருகினேன். “மெட்ராஸ்.. மெட்ராஸ்..” கூவி அழைத்தார் நடத்துனர். ஓடிப்போய் ஏறிக்கொண்டேன். இந்தப் பேருந்தில் மூட்டைப் பூச்சி உயிரை எடுத்தது. உடலெல்லாம் அரிக்க எரிச்சல் மண்டியது. வண்டி என் மனத்தைப் போலவே எதையோ அசை போட்டுக்கொண்டு மெதுவாக பயணித்துக்கொண்டிருந்தது. மீளா இரவா இது? விடியாதா? இத்தனை நீண்ட நெடியதா இரவு? எத்தனையோ நாள் புத்தகம் வாசிக்க விடிய விடிய விழித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நீளாத இரவு மலைப்பாம்பைப் போல நீண்டு நெளிந்து என்னை விழுங்கி ஏப்பம் விட்டது. கிண்டி நெருங்கியபோது விடிந்திருந்தது. 
வீட்டு வாசலில் அழைப்பு மணியை அழுத்தினேன். கயல் வந்து கதவைத் திறந்தாள். “என்னாச்சு?” என்றாள். 

“ஆபீஸிலேயே தங்கிட்டேன்”

என்னைப் பார்த்தாள். “ஆபீசிலா? பயமாயில்லையா உனக்கு?” 

“என்ன பயம்? எல்லாரும் மனுசங்கதானே?” - கூறியவாறு மாடிப்படியேறினேன்.

அன்று அலுவலகம் கிளம்புகையில் அத்தை என்னைப் பார்த்த பார்வை ஏனோ தொந்தரவு செய்தது.. 

அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது திடீரென பொறி தட்டியது. நேற்றிரவு கயல் எனக்கு போன் பண்ணவில்லை என்பது உறைத்தது. இரவு முழுதும் வரவில்லை. நான் என்ன ஆனேனென்று அவள் ஏன் என் என்னை அழைத்துக் கேட்கவில்லை? மனது தவித்தது. கேள்விக்கு விடை தெரியாத வரை வேலை செய்ய முடியாது போலிருந்தது. பர்மிஷன் போட்டுவிட்டு மெரினாவிற்குச் சென்றேன். கடல் அலைகள் படாத தூரத்தில் அமர்ந்துகொண்டு கடலை வெறித்துப் பார்த்தேன். திடீரென சுனாமி நினைவு வந்தது. விருட்டென எழுந்தேன். விடுவிடுவென சாலைக்கு வந்து கிடைத்த பேருந்தில் ஏறினேன். ராணிமேரிகல்லூரிக்கு அருகே பேருந்து வந்தபோது செல்வத்தின் அறைக்குச் சென்று அவரைப் பார்த்தாலென்ன என்று தோன்றியது. செல்வம் நல்ல நண்பர். அவருடைய அறைக்கு வந்தேன். தூங்க வேண்டும் போலிருந்தது. படுத்துவிட்டு எழுந்தவுடன் மணி பார்த்தேன். எட்டாகி இருந்தது. சீக்கிரம் போகவேண்டும். கிளம்பினேன். வீட்டிற்குப் போனபோது பத்து மணியாகியிருக்கவில்லை. அப்பாடா என்றிருந்தது. கயல் தூங்கிப் போயிருந்தாள். நானாகச் சென்று சாப்பாடு எடுத்துச் சாப்பிட ஏனோ தயக்கமாக இருந்தது. அத்தை டிவி பார்த்தவாறிருக்க, நான் படியேறி வந்து படுக்கையில் விழுந்தேன்.

எழுகையில் வெயில் சுள்ளென அடித்தது. இரண்டு மணிக்குப் போனால் போதும் அலுவலகத்திற்கு. ஆனாலும் சீக்கிரம் கிளம்பினேன். கயல் சமையலைறையில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். 

”இன்னிக்கு சீக்கிரம் போகணும் கயல். வர்றேன்.”

”சாப்பாடு சுடர்!” 

“பசியில்லை. வேணாம். மொத்தமா சேத்து மதியம் சாப்பிட்டுக்குறேன்”

சாலையில் இறங்கி நடந்தேன். கொலை பசி. ஆனால் எதுவும் சாப்பிடப்பிடிக்கவில்லை. அலுவலகத்தை அடைந்தேன். அலுவலகத்திலேயே தங்கியிருக்கும் மோகன் அப்போதுதான் விழித்து உட்கார்ந்திருக்க.. “என்னங்க அதுக்குள்ள வந்துட்டீங்க. இத்தனை சீக்கிரமா?” - ஆச்சரியப்பட்டான்.

”சும்மாத்தான்..”

கைபேசியில் கயல் குரல் ஒலித்தது.

“சொல்லு”

“அடுத்த வாரம் நாத்தனார் வீட்லேர்ந்து வர்றாங்க”

“ஓ! எப்படி இருக்காங்க அவங்க எல்லாம்?”

“அவங்களுக்கென்ன? நல்லாத்தானிருக்காங்க. அவங்க கொஞ்சம் பழைய ஆளுங்க சுடரு. அதனால தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்பாங்க. நீ ஏன் இங்கே இருக்கேன்னு கேட்பாங்க. ஹாஸ்டலோ வீடோ ஒரு வாரத்துக்குள்ள பாத்துற முடியுமா?”

கையில் காசில்லாமல் எங்கே போவதென்ற இயலாமை ஒரு புறமும் அவளிடமிருந்து நான் எதிர்பார்க்காத வார்த்தைகள் ஒருபுறமும் வந்து தாக்க நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. மயக்கம் வருவது போலிருந்தது.

“பார்த்துடலாம் கயல்”

கைபேசியை அணைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தேன். உடல் பலகீனமாய் உணர்ந்தேன். 

“மோகன் கொஞ்சம் தண்ணி..”

தண்ணிரைக் குடித்துவிட்டு கவிழ்ந்து மேஜையில் படுத்தேன். காகிதங்களை கண்ணீர் நனைக்க மோகன் என்னை விநோதமாய்ப் பார்த்தான்.

“என்னாச்சு? யார் போன்ல?”

“ஒண்ணுமில்லை”

”இல்லை. சொல்லுங்க.” அருகில் வந்து கைகளைப் பற்றிக்கொண்டு கேட்டான். 


பற்றிய அவன் கைகள் நனைந்தன. இன்றிரவிலிருந்து கயல் வீட்டுக்குப் போக முடியாது. என்ன செய்யலாம்? செல்வத்திடம் கேட்கலாமா ”செல்வம்! 
இன்றிரவு உங்கள் அறைக்கு வருகிறேன். கயல் அவசரமாய் ஒரு சாவுக்காக ஊருக்குப்போயிருக்கிறாள். அவசரத்தில் சாவி வைக்க மறந்துவிட்டாள்” 
என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பி பதிலுக்காகக் காத்திருந்தேன்.

“தாராளமா வாருங்கள்” என்று பதில் வந்தது.

இரவு பத்தரை மணிக்கு செல்வத்தின் அறையிலிருந்தபோது கைபேசி ஒலித்தது. 

“எங்கே இருக்கே? இன்னும் காணலை?” - கயலின் குரலில் மெலிதான தடுமாற்றமும் நடுக்கமும்.

“இங்கே ஆபிஸிலேயே தங்கிக்கிறேன். இன்னும் வேலை முடியலை.”  செல்வம்  என்னை விநோதமாய்ப் பார்த்தார்.

“சுடர், காலையில நான் சொன்னதுக்கு வருத்தப்படுறியோன்னு எனக்கு பயமாயிருக்கு. அதனால் நீ வரலையோன்னு கஷ்டமாயிடுச்சு எனக்கு”

“இல்லை கயல். நிஜமாவே எனக்கு வேலையிருக்கு. அதான்”

பேசிமுடித்த அடுத்த நிமிடத்தில் கயலிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது 

“என் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. நான் உன்னை கஷ்டப்படுத்திட்டேன். ஆனால், எனக்கு வேற வழியில்லாமல்தான் அப்படிச் சொல்ல நேர்ந்தது. எனக்கு ஏனோ மனசஞ்சலமாய் இருக்கிறது. என்னைப் புரிந்துகொள். ப்ளீஸ். நான் ஒரு சூழ்நிலைக்கைதி. நாத்தனார் வீட்டில் ஒரு வாரம் கழித்துதான் வருகிறார்கள். நீ நாளைக்கு வீட்டுக்கு வா. நான் காத்திருப்பேன்”

எனக்குத் தெரியும் நான் இனி அங்கு போகப்போவதில்லையென.

நான் அவளுக்கு பதில் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

“எனக்கு உன்னைத் தெரியும். உன்னைப் புரியும்.”

திடீரென உறைத்தது. .அவள் வீட்டில் இருந்த இத்தனை நாட்களிலும் ஒருமுறைகூட நாங்கள் இருவரும் சிரிக்கவேயில்லை என்பது.

(நவம்பர் மாத 'உயிர் எழுத்து' இதழில் வெளியான என் சிறுகதை)