Tuesday, April 27, 2010

இப்படியும் ஒரு பள்ளிக்கூடம்!

நான் ஸ்கூலுக்குப் போகணும்!

“இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு!

“வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க கொண்டுபோய் விடுங்க!
இப்படி ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்குமான உரையாடலை எங்கேனும் கண்டிருக்கிறீர்களா? பள்ளிக்கூடம் என்றாலே வேப்பங்காயாக்க் கசக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமைகூட வரவேண்டும் என்று அடம்பிடிக்கும் அளவிற்கு இந்தப் பிள்ளைகளுக்கும் பள்ளிக்குமான உறவு மட்டும் இத்தனை வலுவாக இருக்கும் காரணம் என்ன?

இந்தக்குழந்தை படிக்கும் பள்ளிக்க்குள் நுழைந்தால் தென்படும் காட்சிகள் அசர வைக்கின்றன. மைதானத்தில் குழந்தைகள் துள்ளி குதித்து விளையாடுகிறார்கள். ஒரு பக்கம் களிமண் கொண்டு பொம்மைகள் செய்யும் குழந்தைகள். இன்னொரு பக்கம் அட்டைகளை கையில் வைத்துக்கொண்டு பாடம் கற்கும் குழந்தைகள். கடலை சாப்பிட்டபின் குப்பைக்கூடைக்குப் போகும் கடலைமூடிகளைக் கொண்டு உருவங்களை உருவாக்கும் குழந்தைகள். வாலிபால் விளையாடும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்.  மைதானத்தைக் கடந்து உயர்நிலைப்பள்ளிக்குள் நுழைந்தால் ஒரு பக்கம் நாடக ஒத்திகை நடக்கிறது. வகுப்பறைக்குள் எட்டிப்பார்த்தால் ஒரு குழந்தை ஆசிரியையின் மடியில் அமர்ந்திருக்கிறது. மற்ற குழந்தைகள் நின்று கொண்டும், அமர்ந்துகொண்டும், கால்களை நீட்டி உட்கார்ந்துகொண்டும் பாடம் படிக்கின்றன. கைகட்டி வாய்பொத்தி பலகைகளில் அமர்ந்திருக்கும் குழந்தைகளை மட்டுமே வகுப்பறைகளில் பார்த்திருக்கும் நம் கண்களுக்கு இந்தக் காட்சிகள் வித்தியாசமாய் தெரிகின்றன.

மாணவர்கள் ஆசிரியர்களிடம் நண்பர்கள் போல உரையாடுகிறார்கள். சந்தேகங்களை கேட்கிறார்கள். நூலகத்தில் அமைதியாய் அமர்ந்து வெவ்வேறு தலைப்புகளில் நூல்களை வாசிக்கிறார்கள் மாணவர்கள்.
பேராசிரியர் ராமானுஜத்துடன்..

இவையெல்லாம் எங்கே என்கிறீர்களா? இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம் நடத்தும் பள்ளியில்தான்! பட்டுக்கோட்டையிலிருந்து பேராவூரணி செல்லும் சாலையில் 16வது கிலோமீட்டரில் உள்ள குறிச்சியில் இருக்கிறது இந்தப் பள்ளி. சில்லென்ற காற்று வருடிவிட, 6 ஏக்கர் பரப்பளவில் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியும் உயர்நிலைப்பள்ளியும் ஒருங்கே அமைந்துள்ளன

ஊழியர் சங்கங்கள் என்றால் வேலைநிறுத்தம், சம்பள உயர்வு போன்றவற்றிற்கு மட்டும்தான் என்றில்லாமல் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தேவையை உணர்ந்து ஆரம்பிக்கப்பட்ட்தே ஐ.பி.இ.ஏ. பள்ளி. பெரும்பாலும் கிராமங்களில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிடும் மாணவர்கள் அதிகம் உண்டு. இதற்குக் அவர்களது பொருளாதார நிலையும் ஒரு காரணம். ஆகவே இது போன்ற மாணவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தப் பள்ளி. பெரும்பாலும் நிலமற்ற கூலி விவசாயிகளின் பிள்ளைகள் இங்கே படிக்கிறார்கள்.. வழக்கமான கல்வி முறை கிடையாது. தமிழக அரசு தற்போது நடைமுறைப்படுத்தி இருக்கும் செயல்வழிகற்றல் முறையை கடந்த 8 ஆண்டுகளாகவே பின்பற்றி வரும் பள்ளி இது. இந்தியன் வங்கி ஊழியர்கள் அளிக்கும் நன்கொடை, கடன், வங்கி சாராத மற்ற உள்ளங்கள் அளிக்கும் நன்கொடைகள் இவற்றைக் கொண்டுதான் இந்தப் பள்ளி நட்த்தப்படுகிறது.

 “2002ம் ஆண்டில் பள்ளி செயல்பட ஆரம்பித்த்து. தமிழக அரசின் கல்வித்திட்ட்த்தைத்தான் நாங்க்ள் பின்பற்றுகிறோம். பிள்ளைகளை அடிக்க மாட்டோம். பிள்ளைகளுக்கு சுமையான வீட்டுப்பாடம் இருக்காது. வீட்டுப்பாடம் அதிகமாக் அளிக்கும் பள்ளியே சிறந்த பள்ளி என்று மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கை களைந்தெறியப்படவேண்டும் இங்கே ரேங்க் கார்டு கிடையாது. ஆகவே பொறாமை, காழ்ப்புணர்ச்சிக்கு இடம் கிடையாது தாழ்வு மனப்பான்மைக்கும் இடமில்லை. நாங்கள் தமிழ்வழியில்தான் மாணவர்களை பயிற்றுவிக்கிறோம். சில பெற்றோர்களுக்கு இருக்கும் ஆங்கிலத் தாக்கத்தால் பிள்ளைகளை தமிழ்வழிக்கல்வியில் சேர்க்க தயங்குகின்றனர். தமிழ்வழி கல்வி தரும் பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவது காலத்தின் தேவையாக மாறும் என்று நம்புகிறோம்..” என்கிறார் பள்ளியின் அறங்காவலர் கிருஷ்ணன்.
கள ஆய்வில் மாணவர்கள்

கல்விக்கட்டணம் குறைவுதான். ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது. பிள்ளைகளுக்கு கல்வியோடு சேர்த்து நாடகம், ஓவியம், சிற்பம் போன்ற கலைகளையும் பயிற்றுவிக்கின்றனர். “தி ஹிந்து” நாளிதழில் ‘யங்வோர்ல்டு’ பகுதியில் அடிக்கடி இப்பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் இடம்பெறுவதைக் காணலாம். இதற்கு உயர்நிலைப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் சரவணன் ஒரு முக்கிய காரணம். பள்ளி விழாக்களில் திரைப்பட பாடல்கள் கிடையாது. அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகளான கரகம், மான்கொம்பு, தேவராட்டம், ஆதிவாசிகள் நடனம் போன்றவற்றையும் தொழிற்முறை கலைஞர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்கள்.தென்னிந்திய அளவில் நடந்த நாடகப்போட்டியில் பங்கு கொண்ட இப்பள்ளி மாணவர்கள் நடித்த ‘வானிலை மாற்றம்’ என்ற நாடகம் சிறந்த இயக்கத்திற்கான பரிசு பெற்றது.

பேராசிரியர் ராமானுஜம், அலெக்ஸ், மாதையன் பிரகதீஸ்வரன் போன்ற கலைஞர்கள் எங்கள் பிள்ளைகளுக்கு நாடகப் பயிற்சி அளித்திருக்கின்றனர். நாடகப் பயிற்சி பட்டறைகளில் மாணவர்களின் தன்னம்பிக்கையும் படைப்பாற்றலும் நினைவாற்றலும் மிளிரும் வண்ணம் பயிற்சி இருக்கும். பழங்குடி நடன்ங்களை முரசு கலைக்குழுவினர் பயிற்சி அளிக்கிறார்கள். திண்டுக்கல் சக்தி க்லைக்குழுவினரும் எங்கள் மாணவர்களை பயிற்றுவித்திருக்கிறார்கள். தினமும் அசெம்பிளியில் மதம் சார்ந்த பாடல்களையும் வழிபாட்டு முறைகளையும் நாங்கள் பின்பற்றுவதில்லை. முகில், கோவிந்தன் போன்ற கலைஞர்கள் எங்கள் மாணவர்களுக்கு அளித்த பாடல் பயிற்சியில் கற்றுக் கொண்ட மதச்சார்பற்ற சமூக மேம்பாட்டுப் பாடலகளைத்தான் அசெம்பிளியில் பாடுகிறார்கள் மாணவர்கள்” என்கிறார் பள்ளியின் தாளாளர் தனபால்.

மாணவர்களை குழுவாரியாக பிரித்து கதை சொல்ல வைப்பது இங்கே பின்பற்றப்ப்டும் இன்னொரு முறை. கதை சொல்லும் ஆற்றல் மாணவர்களுக்கு இதன் மூலம் வளர்கிறது. இப்பள்ளி மாணவர்கள் ப்ரிதிவி, பிரியதர்ஷினி, பிச்சைமுருகன் ஆகியோர் கூறிய வாய்மொழிகதைகள் பாரதி புத்தகாலயத்தால் நூல்களாக பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் வினாடி-வினா போட்டிகளில் முதலிடம் பெற்றிருக்கிறார்கள்.

“ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ரெக்கார்டு வைத்திருக்கிறோம். அதில் அவர்கள் கதை, கவிதை இப்படி என்ன நினைக்கிறார்களோ அதை எழுதுவார்கள். சிறுவயதிலேயே மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையைத் தூண்டும் வித்த்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களை களப்பணிக்கி அனுப்புகிறோம்.” என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராபின்சன்.



2006ம் குழந்தைகளுக்கான தேசிய அறிவியல் மாநாட்டில் அப்துல் கலாம் கையால் ஐ.பி.இ.ஏ. பள்ளி மாணவர் ரங்கராஜன் ‘இளம் விஞ்ஞானி’ விருது பெற்று வந்தபின் அடுத்த வந்த ஆண்டுகளிலும் ரகுவரன், இனியவன் என இப்பள்ளி மாணவர்களே ‘இளம் விஞ்ஞானி’  விருது பெற்று ஹாட்ரிக் அடித்திருக்கிறார்கள். மாணவர்கள் ஆண்டுதோறும் ஒரு புராஜக்ட் செய்கிறார்கள். அதற்காக ஒரு குழுவாக மாணவர்கள் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று ஆராய்ச்சி செய்து கட்டுரைகளை சமர்ப்பிக்கிறார்கள். ஆண்டுதோறும் நடக்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்காக இவர்கள் விருது பெற்றனர்..

2006
தலைப்பு : குறிச்சியில் நீராதாரங்கள்  - ஓர் ஆய்வு.
 விருது பெற்ற மாணவன்: ரங்கராஜன் 
2007
தலைப்பு: பண்ணவயல் ஏரி – ஓர் ஆய்வு
விருது பெற்ற மாணவன்: ரகுவரன்

2008
தலைப்பு: இயற்கைவழி விவசாயமும் மண்வளப்பாதுகாப்பும்
விருது பெற்ற மாணவன் : இனியவன்


எல்லாம் சரி! எப்படி படிக்கிறார்கள் இவர்கள்? இதுவரை மூன்று செட் மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறார்கள். முதல் ஆண்டு 97% தேர்ச்சி. அதன்பின் கடந்த இரண்டு வருடங்களாக 100% தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் மாணவர்கள்.

“எந்த மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவனுக்கு சமமாகவும் எங்கள் மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்கிறார்கள். பொனிக்ஸ் எனப்படும் ஒலிக்குறியீடுகளைக் கொண்டு வார்த்தைகளை வாசிக்கும் முறையையும் நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். ஆசிரியரை எதிர்பார்க்காமல் எங்கள் பிள்ளைகள் பாடங்களை படித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு நுட்பமானவர்களாக இருக்கிறார்கள்.  செல்ப் லெர்னிங் எனப்படும் சுயகற்றல் முறையை நாங்கள் அவர்களிடத்தில் வளர்க்கிறோம். அவர்களை இவ்வாறு வளர்த்தெடுப்பதில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ஊதியத்திற்காக உழைக்காமல் உண்மையான ஈடுபாட்டுடன் ஆசிரியர்கள் பணியாற்றுவதனாலேயே எங்கள் மாணவர்கள் சாதிக்க முடிந்திருக்கிறது. சனிக்கிழமை அன்று ஃப்ரீரைட்டிங் என்றொரு வகுப்பு இருக்கும். இந்த வகுப்பில் மாணவர்கள் எதுபற்றி வேண்டுமானாலும் கட்டுரை எழுதலாம். இந்தப் பயிற்சி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது.” என்கிறார் தனபால்.
கிருஷணன்


தனபால்
         
முரட்டுத்தனமான மாணவர்களை ஆசிரியர்கள் கையாளும் முறையே வித்தியாசமானது. அப்படிப்பட்ட மாணவர்கள் பிறரை கிள்ளுவது அடிப்பது என்றிருப்பார்கள். அவர்களிடம் ஒரு சோடா மூடியையும் ஒரு ஆணியையும் கொடுத்து அதில் ஓட்டை போடச் சொல்வது போன்ற பல பயிற்சிகள் இங்கே உண்டு. நாளடைவில் அவர்களது முரட்டுத்தனம் விலகி விடும்

பரிசோதனை முயற்சிகள் பலவற்றை செய்துகொண்டு பொது பாடத்திட்டத்தையும் கற்பித்து மாணவர்களை வெற்றிபெறச் செய்வதில் இப்பள்ளி மற்ற பள்ளிகளுக்கு ஒரு முன்னோடியாக உள்ளது. நாங்கள் நினைப்பவற்றை சுதந்திரமாக பரிசோதனை செய்து பார்க்க முடிகிறது. படைப்பாற்றல் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டுமே இங்கே வேலை. எந்திரத்தனமாக பாடம் நடத்திக்கொண்டு சிலபஸ் முடிக்கவேண்டும் என்று மட்டும் நினைக்கும் ஆசிரியர்களுக்கு இங்கே வேலை இல்லை. ஒவ்வொரு மாணவருக்கும் புரியும் வரை நாங்கள் விடுவதில்லை.என்கிறார்கள் இங்கே பணியாற்றும் ஆசிரியர்கள்.

வரும் ஜனவரி மாதத்திலிருந்து வாரம் ஒரு குறும்படம் திரையிட்டு மாற்றுசினிமாவை மாணவர்களிடையே அறிமுகப்படுத்தி, அவர்களை விமர்சனம் செய்ய வைக்க இருக்கிறோம்” என்கிறார் தனபால்.

மாற்றம் விரும்புபவர்களுக்கான பள்ளி இதுதான்!


நன்றி : புதிய தலைமுறை

Thursday, April 22, 2010

சல்யூட்!!!

அந்தச் சிறுவனுக்கு பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும் என்று ஆசை. அப்பா லாரி ஓட்டுனர். வீட்டில் ஐந்து பிள்ளைகள். எல்லோரையும் படிக்க வைக்க அப்பாவால் முடியவில்லை. வீட்டின் வறுமையைப் பார்த்து அவனே ஐந்தாம் வகுப்பு வரை படித்தது போதும் என்று முடிவு செய்து விட்டான்.  புத்தகத்தை சுமக்க வேண்டிய அவன், குடும்பத்தின் வறுமைநிலையைப் போக்க தன்னால் இயன்ற வரை உழைக்க வேண்டும் என்கிற முடிவோடு ஐஸ் கம்பெனிக்கும், பேனா நிப்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் சென்று வேலை பார்த்தான்.

இப்படி கொஞ்ச காலம் கழிந்தபின் அம்மா கொடுத்தனுப்பிய ஒரு மஞ்சள் பையில் இரண்டு கால்சட்டைகளும் இரண்டு சட்டைகளும் அடங்கிய ஒரு மஞ்சள் பையோடு சென்னைக்குப் பயணமானான். அங்கு ஒன்பது ஆண்டுகள் பெரம்பூரில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்தான். பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு க்ரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு மளிகைக்கடையில் வேலை.

அதன்பின் 1990ம் ஆண்டு சாத்தூருக்குத் திரும்புகிறான். திரும்பவும் அங்கே 1996 வரை ரேசன் கடையில் தினக்கூலியாக பணி. துள்ளி விளையாட வேண்டிய குழந்தைப் பருவத்தையும், பள்ளிப் பருவத்தையும் இழந்து நின்ற அந்தச் சிறுவன் பெயர் மாரிமுத்து. அன்று சிறுவனாக இருந்த மாரிமுத்துவிற்கு இப்போது வயது 40. மாரிமுத்து தற்போது நெடுஞ்சாலைத்துறையின் சாலை ஆய்வாளர் (ரோடு இன்ஸ்பெக்டர்) என்றால் நம்ப முடிகிறதா? கூடிய விரைவில் இளநிலை பொறியாளராக பதவி உயர்வும் பெறவிருக்கும் மாரிமுத்து எப்படி திடீரென இந்த நிலைக்கு உயர முடிந்தது?

 “சென்னையிலிருந்து திரும்பி ரேஷன் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு நாளைக்கு ஐம்பது அறுபது ரூபாய் கிடைக்கும். மிகவும் சிரமமாக இருந்தது. இடையில் எனக்கு திருமணம் ஆகிவிட்டிருந்தது. இரண்டு பெண்கள், ஒரு பையன் என மூன்று குழந்தைகள் பிறந்துவிட்டனர். அப்போதுதான் தமிழக அரசு சாலைப் பணியாளர்கள் நியமனம் தொடர்பாகக் கொடுத்திருந்த விளம்பரத்தில் ஐந்தாவது வரை படித்திருந்து நல்ல உடல்வாகு இருந்தால் போதும் என்றிருந்தது. அந்தப் பணிக்கு விண்ணப்பித்தேன். வேலையும் கிடைத்துவிட்டது.

நான் சென்னையில் சிறுவயதில் மளிகைக்கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது என்னுடைய சம்பளத்தை அம்மாவுக்கு மணியார்டர் அனுப்பும்போது அம்மாவை நாலு வார்த்தை நலம் விசாரித்து எழுதவோ,  கடிதம் எழுதவோ முடியாது. கோணல் மாணலான கையெழுத்தோடு பிழையாக வேறு எழுதுவேனோ என்கிற தாழ்வு மனப்பான்மையால் என் முதலாளியிடமோ அல்லது போஸ்ட் ஆபீஸுக்கு வரும் யாரிடமாவதோ கெஞ்சி இரண்டு வரி எழுதச் சொல்லி மணியார்டர் அனுப்புவேன். இது போன்ற சமயங்களிலும், ஸ்கூலுக்குச் செல்லும் மாணவர்களைப் பார்க்கும்போதும் படிக்காமல் போயிவிட்டோமே என்ற ஏக்கம் வந்து அலைக்கழிக்கும். அந்த ஏக்கம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அதனால் சாலைப்பணியாளராய் வேலைக்குப் போனாலும் எப்படியாவது படிக்கணும் என்கிற வெறி மட்டும் இருந்தது. எட்டாம் வகுப்புத் தேர்வுக்கு 32 ரூபாய் கட்டணம் கட்டி விண்ணப்பித்து நானே வீட்டில் படிக்கத் தொடங்கினேன்.  என்னை அப்போது கிண்டலாக பார்த்தவர்கள் நிறைய பேர் உண்டு. இத்தனை வருஷத்துக்கு அப்புறம் படிக்கப் போறியா.. இதெல்லாம் ஆகாத கதை என்றார்கள் சிலர். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படித்தேன். எட்டாம் வகுப்பு பாஸ் செய்ததும் பத்தாம் வகுப்புத்தேர்விற்கு விண்ணப்பித்தேன்.  அதிலும் தேர்ச்சி பெற்றவுடன், பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வு எழுதினேன்.

இதற்கெல்லாம் நடுவில் 2002ல் சோதனையாக நான் உட்பட பத்தாயிரம் சாலைப்பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். அப்போது நாங்கள் அத்தனை பேரும் சிரமப்பட்டோம். நான் சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் இருந்தேன். எங்களுக்கு வேலை மீண்டும் கிடைக்க பல போராட்டங்களையும் வழக்குகளையும் நடத்தினோம். நாற்பத்தோரு மாதங்கள் வேலையின்றி சிரமப்பட்டோம். இந்த போராட்ட காலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் எங்கள் சங்கமும் குடும்பச் செலவுகளுக்கு உதவின.

இப்படி ஒரு பக்கம் போராட்டங்கள் தொடர்ந்தாலும், நான் இன்னொரு பக்கம் படித்துக்கொண்டே வந்தேன். எல்லா வகுப்பிலுமே நான் முதன் முறை அட்டெண்ட் பண்ணியவுடன் பாஸ் செய்யவேயில்லை. கணக்கில் 4 மார்க் கூட வாங்கியிருக்கேன். எனக்கு சிறுவயதில் படிக்காமல் போன ஏக்கம் இருந்ததாலோ என்னவோ பெயில் ஆனாலும் பெரிதாகக் கவலைப்படமாட்டேன். அந்த பாடங்களை மீண்டும் ஒரு முறை படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததே என்று சந்தோஷம்தான் பட்டிருக்கிறேன். விடாமல் பாஸ் செய்யும் வரை திரும்பத் திரும்ப தேர்வு எழுதினேன். ப்ளஸ்டூ பாஸ் செய்ததும் அந்த சர்டிபிகெட்டை பெற நான் தேர்வு எழுதிய பள்ளியில் அந்தப் பள்ளி மாணவர்களோடு வரிசையில் நின்றபோது கண்ணீர் பொங்கியது எனக்கு. மறக்கமுடியாத நிமிடங்கள் அவை. அதன்பின் நேரடியாக எம்.காம் படிப்புக்கு விண்ணப்பித்தேன்.  இப்போது நான் எம்.காம் பட்டதாரி. 2008ல் நான் பட்டம் வாங்கினேன்.என்கிறார் மாரிமுத்து.

மீண்டும் அரசு பத்தாயிரம் சாலைப்பணியாளர்களையும் பணியிலமர்த்தியது. அதன் பின் அரசாங்கம் இவரது படிப்பிற்குப் பரிசாக இவருக்கு சாலைப்பணியாளரிலிருந்து சாலை ஆய்வாளராக பதவி உயர்வு அளித்தது. சாலைப்பணியாளர் பணியில் கடும் உடல் உழைப்பை செலுத்த வேண்டி வரும். சாலைகள் அமைத்தல், தார் ஊற்றுவது உட்பட பல வேலைகள் உண்டு. சாலை ஆய்வாளருக்கு இந்த வேலைகளை மேற்பார்வை செய்யும் பணியோடு, புதிய சாலைகள் அமைத்தால் அவற்றிற்கான உத்தேச செல்வுத்திட்டத்தை அளித்தல், தினமும் நடக்கும் பணிகள் குறித்த விவரங்களை சரிபார்த்தல் போன்ற பணிகளும் உண்டு.

இவர் தனியாக எந்த டுட்டோரியல் காலேஜிலோ, டியூஷனோ போகாமல் சொந்த முயற்சியில் தான் இவ்வளவு படித்திருக்கிறார் என்பது வியப்பான செய்தி. “அக்கவுண்டன்ஸி படிக்க கொஞ்சம் சிரமப்பட்டேன். ஆனால் சிறு வயதிலிருந்தே வியாபாரக் கணக்கு போட்டு பழக்கமானதாலோ என்னவோ.. எளிதில் பிடித்துக்கொண்டேன். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் என் பிள்ளைகள் எனக்கு ஆசிரியராக இருந்ததுதான். கணக்கு பாடமெல்லாம் என் பிள்ளைகள் எனக்கு சொல்லித்தந்தனர். அவர்களோடு நானும் அமர்ந்து ஒன்றாகப் படிப்பேன். வயது குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எனக்கு ஆசிரியர்களே!என்கிறார் நெகிழ்ச்சியோடு.

தற்போது மாரிமுத்து விருதுநகரில் வசிக்கிறார். விருதுநகரின் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கரடு முரடான சாலைகளில் பயணித்தால் வருகிறது முத்துராமலிங்கம் நகர். அங்கே பழைய சிவகாசி சாலைக்கருகில் உள்ள ஆனைக்குழாய் தெருவில் இருக்கிறது மாரிமுத்துவின் வீடு. மனைவி புவனேஸ்வரி மூன்றாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். மூத்தமகள் முருகேஸ்வரி வெளியூரில் பதினொன்றாம் வகுப்பும், அடுத்த மகன் சக்திவேல் 10ஆம் வகுப்பும், கடைக்குட்டி மகாலட்சுமி 9ஆம் வகுப்பும் படிக்கிறார்கள்.

நான் மாநிலத்திலேயே முதலாவதாக வருவேன் – மகாலட்சுமி, பி.எல்., ஐ.ஏ.எஸ்”  என வீட்டு சுவற்றில் சாக்பீஸில் கிறுக்கி வைத்திருக்கிறாள் மகாலட்சுமி. “அப்பா இந்த வயதிலும் படிக்கிறாங்க. அதனால நாங்களும் நல்லா படிக்கணும்னு குறியா இருக்கிறோம்என்கிறாள் மகாலட்சுமி.

மதுரை மருத்துவக்கல்லூரியில் உடல்தானத்திற்கு எழுதிக்கொடுத்திருக்கிறார். மாரிமுத்து. இவரைப் பார்த்து இவரது மனைவியும் குழந்தைகளும் கூட உடல்தானத்தில் ஆர்வமாய் இருக்கிறார்கள்
.
“நாகப்பட்டினத்தை சுனாமி தாக்கியபோது பல குழந்தைகள் பெற்றோரை இழந்தார்கள். அவர்களில் இரண்டு குழந்தைகளையாவது தத்தெடுத்து படிக்க வைக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் எங்க வீட்டு கஷ்டத்தில் அந்தப் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று புரியவில்லை. அத்னால் மனபாரத்தோடு அந்தத் திட்டத்தை கைவிட்டோம்.என்றார் மாரிமுத்துவின் மனைவி புவனேஸ்வரி வேதனையோடு.

குடிசை வீடாக இருந்ததை இந்தியன் வங்கியில் கடன் பெற்று கான்கிரீட் வீடாக மாற்றிக் கட்டியிருக்கிறார் மாரிமுத்து. ஒரு சைக்கிள் இருக்கிறது. எங்கே போவதாக இருந்தாலும் சைக்கிளில்தான் செல்கிறார். அரசாங்கம் அவருக்கு சைக்கிள் அலவன்ஸ் கொடுக்கிறது.

“முக்கியமான ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இடையில் மது, சிகரெட் பழக்கம் எனக்கு அதிகமானது. என் மனைவி என்னுடைய இந்த நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டார். சில வருஷங்கள் ரொம்ப மோசமான நிலைமையில் இருந்தேன். படிக்கத் தொடங்கியதும், எங்கள் சாலைப்பணியாளர் சங்கத் தொடர்புகள் ஏற்பட்டதும் என் வாழ்க்கையை மாற்றின. கொள்கைப்பிடிப்பு வந்தது. நமக்கும் பொறுப்பிருக்கிறது. இப்படி இருக்கக்கூடாது என உணர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவற்றிலிருந்து விடுபடத் தொடங்கினேன். இப்போது நான் முழுமையான மனிதனாக இருக்கிறேன். மனநிறைவாக இருக்கிறேன். எப்படி வாழக்கூடாது என்பதற்கும் நானே உதாரணமாக இருந்தேன். அவற்றிலிருந்து மீண்டு வந்து எப்படி வாழவேண்டும் என்பதற்கும் நானே உதாரணமாக இருக்கிறேன்.என்கிறார் மாரிமுத்து.

தற்போது டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்விற்கு விண்ணப்பித்திருக்கிறார் மாரிமுத்து. மாரிமுத்துவின் கல்விதாகம் எம்.காம். படிப்போடு நின்று விடவில்லை. மதுரையில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் மாலைநேரத்தில் டிப்ளமோ பயில்கிறார். இதில் தேர்ச்சி பெற்றவுடன் இவருக்கு இளநிலை பொறியாளர் பதவி காத்திருக்கிறது.

“நான் இழந்த கல்வியை கற்றுக்கொண்டே இருப்பேன். மரணம் வரை மாணவனாக இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசைஎன்கிறார் மாரிமுத்து.

சல்யூட் மாரிமுத்து சார் !!!

நன்றி: புதிய தலைமுறை

Friday, April 16, 2010

எவரது முதுகையும் சொரிந்து கொடுக்க நகம் வளர்க்கவில்லை நான்

  • ஆதவன் தீட்சண்யா
ஏப்ரல் 15 ஆம் தேதி நடந்த “எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை” என்ற தலைப்பில் இக்‌ஷா மையத்தில் நடந்த கூட்டத்தில் வாசிக்கப்பட்ட ஆதவன் தீட்சண்யாவின் உரை:

புறக்கணிப்பு, அவமானம், அச்சுறுத்தல், வன்முறை, வறுமை ஆகியவற்றை ஒருசேர எதிர்கொள்ள நேர்ந்திடாத சாதிகளில் பிறந்து ஓரளவுக்கு பாதுகாப்பான வாழ்க்கைப் பின்புலத்தையும் கொண்டவர்களாக சமகால ஆண் கவிஞர்களில் பெரும்பாலானவர்கள் இருக்கின்றனர். குடும்பம், பணியிடம், பொதுவிடங்களில் தனிமனிதனாகிய தான் யார் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் ஏற்படுகிற சிக்கல்களிலிருந்தே இவர்கள் கவிதை எழுதுவதற்கான மனவெழுச்சி அல்லது உளவியல் நெருக்கடியை எய்துகிறார்கள். நிலவும் சமூகச்சூழலோடு பொருந்திப்போக முடியாத அல்லது சமரசம் செய்துகொள்ள முடியாத தனித்துவப் பிறவியாக தம்மை கற்பனை செய்துகொள்வதன் மூலம் ஏற்படுகிற ஒருவித மயக்கநிலை இவர்களை தரையிறங்கவிடாமல் அந்தரத்தில் சுழற்றியடிக்கிறது.எனவே சமகாலத்திய சமூக அவலங்கள், அவற்றிலிருந்து விடுபடுவதற்கான எத்தனங்கள், அதன் பொருட்டு ஏவப்படும் அடக்குமுறைகள் எதுவும் இவர்களது பார்வைக்குப் படுவதில்லை. அல்லது அதைச் சொல்வது கவிஞனின் வேலையல்ல என்று நிலைபாட்டை பேசத் தொடங்குகிறார்கள். பத்திருபதாண்டுகள் கழித்து 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தை மதிப்பீடு செய்ய இவர்களது கவிதைகளை முதன்மைத் தரவுகளாகக் கொண்டு ஒருவர் ஆராயத் தொடங்குவாரெனில் கட்டற்ற காமம், மட்டில்லாத குடி, கடவுள் நிந்தனை, சாத்தானைக் கொண்டாடுதல், புனிதங்களை பகடி செய்தல் ஆகிய புள்ளிகளை மையங் கொண்டே தமிழ்ச் சமூகம் இயங்கியது போலும் என்ற முடிவுக்கே வர முடியும். கட்டற்ற காமம், மட்டற்ற குடி வழியாக வருவித்துக்கொள்ளும் மிகையான கொண்டாட்டம் இறுதியில் ஒரு பெண்ணை தன்னிஷ்டம்போல் கையாள்வதற்கான உரிமையைக் கோருவதிலேயே நிறைவு கொள்கிறது. பாலின அரசியல் சார்ந்து சமகாலத்தில் மேலெழுந்து வந்திருக்கும் விவாதங்களை உள்வாங்காமல் வெற்று ஆண்களாய் தேங்கி நின்றுவிட்ட இவர்களின் கவிதைகள் குறித்து நேர்மையானதொரு விமர்சனத்தை முன்வைப்பதற்கான தேவை அதிகரித்து வருகின்றது.






மறுதலையாக தம் மீதான கற்பிதங்கள், மதிப்பீடுகள், தாய்மை உள்ளிட்ட பொறுப்புகள் வழியாக நிகழ்த்தப்பெறும் பாலியல் ஒடுக்குமுறை மற்றும் உழைப்புச்சுரண்டலை அம்பலப்படுத்தியும் தமது சுயத்தை நிறுவியும் பெண் எழுத்தாளர்களின் கவிதைகள் வெளிப்பட்டு வருகின்றன. ஏற்கனவே நிறுவப்பட்டு இயல்பானதுபோல செயற்பட்டு வருகிற ஆண்மையவாத சிந்தனையிலிருந்து தன்னையும் அதன்வழியே சமூகத்தையும் விடுவித்துக் கொள்வதென்ற பாலின சமத்துவத்திற்கான நெடியப் போராட்டத்தின் விளைபொருட்கள் என்றே இந்தக் கவிதைகளை இனம் காண வேண்டியுள்ளது. கல்வியறிவு மறுக்கப்பட்டிருந்த நிலையை முறித்துக்கொண்டு ஒரு பெண் எழுதத் தொடங்குவதே ஆண்மையவாதத்திற்கு எதிரானதுதான் என்ற முடிவுக்கு வருவோமேயானால், பெண்கள் எழுதுவதெல்லாமே பெண்ணியக்கவிதைகளா என்ற கேள்வியே இடக்கானது என்பதை புரிந்துகொள்ள முடியும். பெண்ணாய் பிறந்தது குறித்து புகாரிடும் தொடக்கநிலை உணர்விலிருந்து தான் ஒரு பெண் என்று சுயமரியாதையோடு முழங்குவது வரையான வெவ்வேறு மட்டங்களில் தொழிற்படும் இவர்களது எழுத்துகள்தான், எவ்வளவு பெரிய ஆளுமையாக இருப்பினும் சமூகத்திற்கு அவரது பங்களிப்பு எத்தகையதாய் இருப்பினும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை வெற்று ஆணாகவே மிஞ்சிவிடுகிற குரூரத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே, எது அல்லது எப்படியானது பெண்ணியம் என்று ரெடிமேடாய் முன்வைக்கும் சட்டகங்களையும்கூட ஒவ்வொரு பெண்ணும் திருத்தியமைக்கிறார், தேவைப்பட்டால் உடைத்தும் எறிகிறார். இதன்பொருட்டு அவர்கள் பயன்படுத்தும் மொழி, உருவகங்கள், வெளிப்பாட்டு வடிவங்கள் உள்ளிட்ட எதுவுமே ஏற்கனவே நிலவுகின்றவையுடன் பொருந்திப்போக மறுக்கின்ற புள்ளியை மறித்து நின்றுகொண்டுதான் ஆபாசம் அருவருப்பு என்கிற கூப்பாடு கிளம்புகிறது.

எதையாவது எழுதி இடையிடையே மலம், மூத்திரம் போன்ற சில வார்த்தைகளைத் தெளித்துவிட்டால் அது தலித் கவிதை, யோனி, ஆண்குறி என்று தெளித்துவிட்டால் அது பெண்ணியக் கவிதை என்ற அபத்தமான புரிதல் வாசகர்களிடம் மட்டுமல்லாது எழுதுகிறவர்களிடமும் இருக்கிறது. சொல்ல வரும் விசயத்தை அதன் வீரியத்தோடு வெளிப்படுத்திட தேவைப்படுமாயின், மிகுந்த அரசியல் புரிதலோடு பயன்படுத்தப்படும் சொற்களை யாந்திரீகமாக ஒரு மசாலாவைப்போல தூவிவிடுகிற ஜிகினாத்தனங்கள் விரைவில் உதிர்ந்துவிடும் என்று தெரிந்தேயிருந்தாலும்கூட அப்போதைய பரபரப்புக்காக அவிழ்த்துக் கொட்டுகிற மலினமான உத்திகள் இங்கு இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அப்படியான எழுத்துகள் மீது எனது கருத்தைச் சொல்லத்தான் எனக்கு உரிமையுண்டேயொழிய தீர்ப்பெழுதும் அதிகாரத்தை எதன்பேராலும் நான் கைக்கொள்ள முடியாது.



எது அசலானது, போலச்செய்தது எது என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்று கடந்தகாலத்தில் சாசுவதம், சாகாவரம் என்று பேசி வந்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூக அடுக்கினராகிய தலித்துகள், பெண்களது எழுத்துகளுக்கு அந்த அளவுகோலை நீட்டிக்க விரும்பாமல் உடனடியாகவே தீர்ப்பெழுத விரும்புகின்றனர். அவ்வகை எழுத்துகள் தமது இருப்பையும் ஒளிவட்டத்தையும் கேள்விக்குள்ளாக்கி சமகாலத்தின் அதிகார அடுக்குகளை கலைத்துப் போட்டு விடும் என்று பதற்றமடைகிற இவர்கள், தந்திரமாய் எழுப்பும் கேள்விதான் இப்படி பச்சைபச்சையா எழுதணுமா? என்பது. ஆபாசம் என்று இவர்கள் கிளப்பிவிடுகிற செய்தி கலை இலக்கியத்திற்கு வெளியே வேறுதுறை சார்ந்து இயங்குகிறவர்களின் கவனத்தையும் ஈர்க்கிறபோது, அதன் பிறகான விவாதம் இலக்கியம் பற்றியதாக அல்லாமல் ஒழுக்கம் அறம் பற்றியதாக திசைமாற்றி எடுத்துச் செல்லப்படுகிறது. நாடகப்பிரதியை தம்மிடம் காட்டி முன்னனுமதி பெறவேண்டுமென்ற காலனீய காலத்து சட்டங்களை இன்னும் கையில் வைத்துக்கொண்டிருக்கிற காவல்துறையின் கண்காணிப்புக்கு கலை இலக்கிய ஆக்கங்களை முழுமையாக கீழ்ப்படுத்தும் ஆபத்திற்கே இப்போக்கு இட்டுச்செல்லும் என்று அஞ்சவேண்டியுள்ளது.

இப்படியான பின்புலத்துடனேயே லீனா மணிமேகலையின் கவிதைகளையும் அவற்றை பற்றிய விமர்சனங்களையும் விமர்சனம் என்ற பெயரிலான அருவருப்பான வசவுகளையும் புரிந்துகொள்கிறேன். அவரது கவிதைத் தொகுப்பை தடைசெய்ய வேண்டும் என்று கோரும் இந்து மக்கள் கட்சியின் நடவடிக்கையை எதிர்த்த இந்த ஒன்றுகூடலுடன் எனது ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதற்கும் இந்தப் புரிதலே காரணமாய் இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதியார் இல்லத்தில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிகழ்வொன்றில் பெரியாரின் பெயர் உச்சரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவாவினர் ரகளை செய்தனர். போரூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறுக்கே பாய்ந்து ரகளை செய்த அதேகும்பல் சென்னை கலைக்குழுவினரின் நாடகத்தை தடுத்து நிறுத்தியது. அவற்றின் தொடர்ச்சி என்று சொல்லமுடியாவிட்டாலும் அச்சுறுத்தல் என்ற வகையில் லீனாவின் கவிதைகள் மீதான புகாரை கண்டிக்க வேண்டியுள்ளது. லீனாவின் கவிதைகள் மீதான விமர்சன உரிமையை தக்கவைத்துக் கொள்வதும் அவரது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கண்டிப்பதும் ஒன்றுக்கொன்றுக்கு முரணானதல்ல.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதானது லீனாவின் கவிதைகள் மீதான மதிப்பீட்டின் அடிப்படையிலானது அல்ல. அல்லது அவரது செயல்பாடுகள் கருத்துகள் எல்லாவற்றுடனும் இணக்கம் தெரிவிப்பதற்குமானதும் அல்ல. அவரல்லாமல் பிறிதொருவராய் இருப்பினும் அவர் மற்றும் அவரை விமர்சிக்கிற யாவருடைய கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்குமான வெளியை தக்கவைத்துக் கொள்வதென்ற அக்கறையிலிருந்தே இந்த ஒன்றுகூடலில் பங்கெடுக்கிறேன். தவிரவும், நாலாந்தரமான மொழியில் சில கட்டுரைகளையும் பின்னூட்டங்களையும் தமது இணையதளங்களில் வெளியிட்டு தமிழ்நாட்டில் யாருக்காக யார் கூட்டம் நடத்தவேண்டும், அதில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் அல்லது கூடாது என்று தம்மால் தீர்மானித்துவிட முடியும் என்று நம்புகிற சிலர் தமது அகங்காரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்காகவும் கூட இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது சரியானது என்று நம்புகிறேன்.

Wednesday, April 14, 2010

தூற்று.காம்

ஊர்கூடி பார்த்திருக்க நடுத்தெருவில் வீழ்த்தி
எம் பெண்களை வல்லாண்ட உம்மைக் கண்டு
மறைவிடம் ஓடியொளிந்த நாய்கள்
பிறிதொருபோதும் உம்முன்னே வருவதற்கஞ்சிய குற்றத்திற்காக
கைகால்கள் கட்டப்பட்டு
பனிப்பாளத்தின் மீது கிடத்தப்பட்டிருக்கிறேன்
பிணமென விரைக்கும் உடலுக்குள் கடுத்தேறுகிறது சில்லிப்பு
நடுங்கிச் சரிகிறது உயிர்

தண்ணீர் கேட்டால் மூத்திரம் பெய்வதும்
வாயைத் திறந்தால் மலம் திணிப்பதுமே
நாகரீகக் கனவான்களாகிய உமது வாடிக்கையென்பதால்
பசிதாகம் குறித்து புகாரிடாமல் மயக்கத்தில் வீழ்கிறேன்

சித்திரவதைகளை உணராமலே செத்துவிடக்கூடாதென்ற பயத்தில்
பந்தம் கொளுத்தி என்தலையைத் தீய்த்து
பிரக்ஞையின் எல்லைக்குள் இழுத்துப் போடுகிறீர்கள் என்னை

விசேஷமாய் பயிற்சி எடுத்தக் காவலரைப் போன்ற ஒருவன்
என் கால்களில் லாடமடித்துக் கொண்டிருக்கிறான்
நகங்களைப் பிடுங்கி எடுத்துவிட்டு
என் பற்களையும் பிடுங்கும் அவசரத்தில்
குறடு ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது இன்னொருவன் கையில்
வன்மங்களை நவீனமாய் தணிக்கத் தெரிந்த மற்றையவன்
வயர்களை என்குறியில் சுற்றி மின்னதிர்ச்சிக் கொடுக்கிறான்

அடுக்களையிலிருந்து டப்பர்வேருடன் வந்த
உங்கள் மனைவி/மகள்/ சகோதரி/ யாரோ ஒருத்தி
இந்தக் கண்களா எம்மை ஏறெடுத்துப் பார்த்தவையென
பலவந்தமாய் இமைபிரித்துத் தூவுகிறாள் மிளகாய்ப்பொடியை

கொத்தியெறிந்தது போக நினைவில் எஞ்சியிருக்கும் என்னைத்தாளாது
புதிய கொலையாயுதங்களை தேடிக்களைத்த உமது வாரீசுகள்
கணினியின் விசைப்பலகை அதிர்ந்திடாத வண்ணம்
மென்மையாக பதிவேற்றத் தொடங்குகின்றனர்
என்மீதான அவதூறுகளை.


- ஆதவன் தீட்சண்யா
14.04.2010


****************

பறவைகளை அண்டாத வாழ்வில்..






அவளுக்கு தொலைவிலிருந்து காணும்போது மட்டுமே
பறவைகள் அழகு!
அருகில் நெருங்கிவிட்டாலோ
மேனியெங்கும் மின்னலாய் அச்சம் பரவி
நகக்கண்ணின் ஊடாக வழிந்தோடும்.

அவளின் நினைவடுக்குகளில் ஒரு காட்சி..
பால்குடி மாறா பருவத்தில் ஒரு நாள்..
உண்ண மறுத்து கண்ணயர்ந்த ஒரு தருணத்தில்
நாசியிலும் நெற்றியிலும் வலியுணர்ந்து
கழுத்தில் பிறாண்டும் நகமுணர்ந்து
திடுமென விழிக்கையில்..
மிக அருகில்... மிக மிக அருகில்...அண்மைக்காட்சியாய்...
தாதிப்பெண் ஏவிய
ஒரு கோழியின் தலை.
அதிர்ந்தலறிய அவளின்  மழலைக் குரலோடு
சுருதிபேதமாய் கோழியின் கூக்குரலும் கலந்தது.
அன்று தொடங்கி...
அவள் உண்ண மறுக்கும்போதேல்லாம்
காது குடையும் கோழி இறகு
தாதிப்பெண்ணின் மிரட்டல் ஆயுதமானது.
உணவுக்கு பதில் அச்சத்தை ஊட்டினாள் தாதி.
கையகல கோழிக்குஞ்சும் சிட்டுக்குருவியும் மைனாவும் கூட
அவளுக்கு மரணபயத்தை அளிக்க..
ஒரு காகம் தலைக்கருகில் பறந்த நாள்
அவள் சுரத்தில் விழுந்தாள்.
அண்டை வீட்டின் கோழிக்குஞ்சுகளை
இரைக்கு தூக்கிச்சென்ற கழுகினத்தால்
அவள் அடைந்தது அருவருப்பின் உச்சம்!
இறந்த காகத்தின்  உடலை மிதித்த நாளில்
உண்ணவில்லை அவள்...
கருமைநிறம் கண்டபோதெல்லாம்
காகம் மிதித்ததாய் பீதி கொண்டாள்.
பறவை பொம்மைகள்  அவளிடம் என்றைக்குமிருந்ததில்லை.
கோழி இறைச்சியை தொட்டதே இல்லை.
ஆட்டிறைச்சி என்றெண்ணி உண்ட ஒரு நாளில்
உண்மை தெரிந்தபின்
உள்ளே சென்றதெல்லாம் வெளியே வந்தது
இவளின் அச்சத்தை பிறர் எள்ளிநகையாட..
இவளோ..அச்சப்படுவதற்கு அச்சப்படவேயில்லை.
பறவைகளை அண்டாத வாழ்வு அவளுடையது..

அவளுக்கு திருமணம்..
இத்தனை நாள் சேர்த்து வைத்த
மொத்த குடும்பத்தின் சேமிப்பனைத்தும்
அவளுக்கு சீருமாகவும் மணமகனுக்கு தங்கச்சங்கிலியாகவும் மின்ன..
ஊர்கூடி உறவினர் புடைசூழ மணமுடித்தபின்..
கடைக்கண்ணால் தன் வாழ்கைத்துணையை பார்க்க..
மிக அருகில்...  மிக மிக  அருகில்... அண்மைக்காட்சியாய்..
ஆறடி உயரத்தில்
பெயர் தெரியாத பறவை!

- கவின் மலர்

நன்றி -உயிர்மெய் சிறப்பிதழ் (2009-2010)



Wednesday, April 07, 2010

எனக்கு நிறைய கண்கள்




ன்றைய நிலையில் தீவிர வாசிப்புக்குரிய அனைத்து தன்மைகளோடும் ஒரு பத்திரிகை நடத்துவது என்பது அத்தனை எளிதல்ல. எந்தவித கைமாறும் எதிர்பார்க்காமல் இருந்தாலொழிய அது சாத்தியமில்லை. சிரமப்பட்டு கையிலிருந்து பணம் செலவழித்து இதழ் நடத்தி ஒரு கட்டத்தில் முடியாமல் போக அதை நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் ஏற்படும் வலி ‘வல்லினம்’ ஆசிரியர் குழுவுக்கும் ஏற்பட்டிருக்கும். அதன் வாசகர்களுக்கோ அதைவிட பெரிய வலி. இருதரப்பினரின் வலிநிவாரணியாக வந்திருக்கிறது http://www.vallinam.com.my/இணைய இதழ். காலாண்டிதழாக வந்து கொண்டிருந்த ‘வல்லினம்’ செப்டம்பர் 2009 முதல் இணைய இதழாக வெளிவருகிறது.
முதல் இதழான http://www.vallinam.com.my/issue9/index.html செப்டம்பர் இதழ் குறித்த ஒரு பார்வை இக்கட்டுரை.
ஆழமான கட்டுரைகள், உணர்வுகள், புனைவுகள் என தளம் பூராவும் பரவிக் கிடக்கின்றது. ஒவ்வொரு படைப்பிலும் ஒரு துடிப்பான ஆசிரியர் குழு பின்னால் இருப்பது தெரிகிறது.
‘சை. பீர் என்ற……’ என்ற தலைப்பிலான யுவராஜனின் கட்டுரை படிக்கத் துவங்கி கொஞ்சநேரம் ஆனவுடனேயே ‘என்ன இது வெறும் அனுபவப்பகிர்வாகவே போகிறதே’ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கும்போது, எழுத்தின் பாதை திரும்புகிறது. அதன்பின் ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கால் அடிப்பது போலிருக்கிறது. அதிகார மையங்களை நோக்கிக் குழையும் மனிதர்களின் மேலுள்ள வெறுப்பும் ஆத்திரமும் யுவராஜனின் விரல்வழி வெளியேறி சொற்களாகி இருக்கின்றன. அதே ஆத்திரம் வாசகருக்கும் வருவது அவரது எழுத்தின் பலம்தானே!
மாரக்சீயத்தின் அவசியம் குறித்தும், முதலாளித்துவத்தின் பின்னடைவான , அண்மை பொருளாதாரச் சரிவு குறித்தும் சேனனின் ‘How To Fight Back’ கட்டுரை பேசுகிறது. உலக நாடுகளின் ராணுவத்திற்கு ஆகும் செலவுகள் குறித்து, குறிப்பாக இலங்கையில் கடந்த முப்பது வருடத்தில் இராணுவச்செலவு 800 மடங்கு உயர்ந்துள்ளது என்பன போன்ற புள்ளிவிவரங்கள் குறிப்பாகக் காணப்படுகின்றன.
‘சிற்றிதழ்களும் தெருநாய்களும்’ என்ற தலைப்பில் சிவா பெரியண்ணன் எழுதியிருக்கும் கட்டுரை தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத புதிய செய்திகளைத் தருகிறது. மலேசிய நாட்டில் மக்களின் வாழ்முறையைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
சித்ரா ரமேஸ் எழுதிய ‘ஒரு டோடோ பறவையின் வரலாறு’
இலக்கியத்தின் வகைகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. நவீனத்துவம், அது தோன்றிய வரலாறு , பின்நவீனத்துவ காலம், இலக்கியத்தில் அதன் தாக்கம் போன்றவற்றை டோடோ பறவையின் உதாரணத்தோடு சொல்கிறது கட்டுரை. மிக ஆழமான விஷயங்களையும் எளிமையான நடையில் சொல்ல முயன்றிருப்பது தெரிகிறது. ஆனால் பேச வரும் விஷயங்கள் ஆங்காங்கே தனித்தனியாக தொக்கி நிற்பது போன்ற உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

’ஏய் டண்டனக்கா… ஏய் டனக்கணக்கா’ என்கிற லும்பனின் பதிவு வாசிக்கும்போது இரண்டு விஷயங்கள் தோன்றின. ஒன்று: ஏற்கன்வே சை.பீர் குறித்த ஒரு பதிவு இருக்கையில் அதே இதழில் மீண்டும் அவரைக்குறித்த அதே செய்தி இடம்பெறுவதைத் தவிர்த்திருக்கலாம். இரண்டு: கட்டுரையாசிரியர் குறிப்பிடும் ‘கைப்பழக்கம்’ குறித்து அவர் கூறுவது நம் சமூகத்தில் பேசப்படாத பல விஷயங்களை பேசத்துணிந்ததன் அடையாளமாக வைத்துக்கொள்ளலாம். அதோடு மட்டுமல்லாமல் வேறொரு நினைவும் உள்ளுக்குள் ஓடியது. ஒரு ஆண் இவ்வாறு எழுதுவது குறைந்த அளவே சர்ச்சைக்குள்ளாகிறது அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதையே ஒர் பெண் எழுதி இருந்தால் அந்த எழுத்துக்கு இந்நேரம் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்திருப்பார்கள். குட்டிரேவதி எழுதிய ‘முலைகளுக்கும்’ சல்மாவின் ‘எல்லா புரிதலுடன் விரிகிறதென் யோனி” க்கும் இன்னும் இதுபோன்ற பெண் எழுத்துக்களுக்கும் எத்தனை எதிர்ப்புகள்? பெண்ணுணர்வுக்கு எந்த மதிப்பும் இல்லாத சமூகத்தில் ஆண்களின் இந்த சுதந்திரத்தை கேள்வி கேட்கும் வகையில் பெண்கள் தங்களின் படைப்புகளை காத்திரமாகத் தர முயல வேண்டும். வல்லினம் அதற்கொரு தளமாக இருக்கவேண்டும்.
வீ.அ.மணிமொழி எழுதிய ‘நிறைய கண்களுடன் ஒருவன்’ வாசிக்கும்போது தோன்றிய உணர்வுகள் அற்புதமானவை. தொலைக்காட்சியில் ஞாயிறு மதியம் காது கேளாதோருக்கான செய்தி அறிக்கையை பார்த்ததைத் தவிர இது குறித்து வேறு பரிச்சயமில்லாத என் போன்றவர்களுக்கு, ஒரு மனிதனால் இந்த முறையில் கூட கல்வி கற்று பட்டம் பெற முடியுமா என்ற பிரமிப்பு நம்மை ஆட்கொள்கிறது. குறிப்பாக அந்தோணிக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் அந்த ஆசிரியை செய்யும் இன்றியமையாத பணி குறித்த மரியாதை உயர்கிறது. ‘எனக்கு நிறைய கண்கள்’ என்ற காதுகேளாத, வாய்பேசாத அந்தோணி கூறும்போது விஸ்வரூபமெடுத்து நிற்கிறான்.
‘தி பியானிஸ்ட் – அடையாளம் கடந்த நேயம்’ – The Pianist திரைப்படம் குறித்த யுவராஜனின் ஆழமான விமர்சனம் சமூக வரலாற்றுப் பார்வையோடு வந்திருக்கிறது. இப்படி எப்போதும் ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொண்டு நல்ல சினிமாவை அறிமுகப்படுத்தலாம். குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் இந்தப் பகுதியில் சேர்த்துக்கொள்ளலாம் (எங்கே கிடைக்கும் என்ற தகவலகளுடன்).
‘உலகின் இறுதி நாள் 21-12-2012 - மாயன்கள் உறுதி!’ - விக்னேஷ்வரன் அடைக்கலம் எழுதிய கட்டுரை மாயா இனத்தவர்கள், அவர்களோடு சேர்த்து அவர்களின் நாகரீகமும் புதைந்து போனதைக் கூறுகிறது. இந்தியாவின் சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் இதற்கும் ஓரளவு ஒற்றுமை இருப்பதாகப் படுகிறது. இது குறித்த ஆய்வாக இக்கட்டுரை உள்ளது. அழகான பிரமிடுகள், அவர்களின் நம்பிக்கைகள் என பல தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறது கட்டுரை.
சீ. முத்துசாமி யின் ‘வசூல்’ ஏற்கெனவே பேசப்பட்ட விஷயத்தையே பேசுகிறது. ஒரே விஷயத்தை ஒரே இதழில் மூன்று முறை படிக்க நேர்வது சிரமமான விஷயம். அந்த அளவு எழுத்துப்பஞ்சமா என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒரே விஷயத்தைக்கூட ஒரே இதழில் கட்டுரை, கவிதை, சிறுகதை என வெவ்வேறு வடிவங்களில் கொடுத்தால் அதில் நிச்சயமாக அலுப்பு தட்டாது. இப்படி ஒரே விஷயத்தைப் பற்றி மூன்று முறை கட்டுரை வடிவில் மட்டுமே வருவது சற்று அலுப்பூட்டுகிறது. இதை ஆசிரியர் குழு நண்பர்கள் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் நல்லது.
கதைகளின் பக்கம் கொஞ்சம் பார்வையைத் திருப்பினால், முதல் கதையாக கண்களுக்குத் தெரிவது ‘ஒரு மழைப் பொழுதில் கரையும் பச்சை எண்கள்’. முனிஸ்வரன் எழுதியது. பீட்சாவை வீடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் தொழில் செய்யும் ஒருவரின் பார்வையில் இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது. ‘இவர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி இருக்குமா? உயிரைப் பணயம் வைத்து இப்படி அதிபயங்கர வேகத்தில் செல்லும் இவர்கள் வேறு தொழில் ஏன் செய்யக்கூடாது? முதலாளிகளும் பன்னாட்டுக் கம்பெனிகளும் வயிறு வளர்க்க இவர்கள் இந்தப் பாடு படுவதேன்?’ – தினமும் சாலையில் செல்லும்போது மின்னல் வேகத்தில் பறக்கும் இந்த பையன்களைப் பார்க்கும்போதேல்லாம் தோன்றும். இப்படி ஒரு பீட்சா பையனின் அனுபவமே இந்தக் கதை. சொல்லப்பட்ட விதம் ரசிக்கும்படியும் அழகாகவும் இருக்கிறது. ‘இந்த மழை இருக்கிறதே, இது மிக விசித்திரமான ஒன்று. வா வா என்று கம்பளம் விரித்துக் கூப்பிடும் இடங்களுக்குப் போகாமால் போ போ என்று விரட்டியடித்தாலும் வெட்கமில்லாமல் வந்து கால் வரை விழுந்து பின் மண்ணோடு மண்ணாகிப் போகும் மானங்கெட்ட இயற்கை அது. கவிஞன் கிடக்கிறானைய்யா. மழையை வர்ணிப்பான் வீட்டுக் கூரையின் இதமான பாதுகாப்பில்’ இந்த வரிகளை வாசித்தவுடன்,
“தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.’
என்ற ஆதவன் தீட்சண்யாவின் ‘வேறு மழை’ கவிதை நினைவுக்கு வருகிறது.

மிக இயல்பாகப் போய்க்கொண்டிருக்கும் கதையில் ஒரே ஒரு சொல் வந்து இடறிவிட்டது. ‘அவைதான் எனது ஆண்மையைச் சோதித்துப் பார்க்கும் சக்தி மிகுந்த எண்கள்.’ என்கிறார் முனீஸ்வரன். அதென்ன ஆண்மை? வேகம் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. பெண்கள் சோம்பேறிகள். அப்படித்தானே? ‘பெண்கள் முழுமையாக விடுதலை பெறவேண்டுமென்றால் ‘ஆண்மை’ என்ற பதம் அழியவேண்டும்’ என்கிறார் பெரியார். ஆண்களின் ஆண்மையை ஒழித்துவிட்டால் அவர்கள் வண்டி ஓட்டக்கூட முடியாது போலிருக்கிறதே!
‘தூரத்தே தெரியும் வான் விளிம்பு’ சிறுகதை ஜெயந்தி சங்கரின் கற்பனை. படித்துக்கொண்டிருக்கும் பள்ளியை விட்டு விலகி புதுப்பள்ளியில் சேரும் ஒரு மாணவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலைச் சொல்கிறது கதை. புது சூழலுக்கு ஒவ்வாமையால் அவனுக்குள் நிகழும் மாற்றங்களும் அதன்பின் பழைய நண்பர்களை சந்தித்தபின் ஏற்படும் மனமாற்றத்தையும் நுணுக்கமாக சித்தரிக்கிறது கதை. ஒவ்வொரு மனிதருக்கும் இதுபோன்றதொரு சூழல் வாழ்நாளில் எங்கேனும் எப்போதேனும் ஏற்பட்டிருக்கும். இந்தக் கதையில் பள்ளி. சிலருக்கு வீடாக இருக்கலாம். சிலருக்கு அலுவலகமாக இருக்கலாம். சிலருக்கு ஊராக இருக்கலாம். சிலருக்கு தேசமாகவும் இருக்கலாம்.
‘பல வேடிக்கை மனிதர்கள் போல!’ தொடரில் மலேசியத் தரகர்கள் குறித்து ம.நவீன் எழுதியிருக்கிறார். ‘பதிப்புத் துறையில் தேர்ந்த உயிர்மை, காலச்சுவடு, தமிழினி போன்ற பதிப்பகங்களில் புத்தகம் பதிப்பிக்கப்படுவதன் மூலம் இயல்பாக ஒரு புத்தகம் நல்ல இலக்கியத்திற்கான அடையாளத்தைப் பெற்றுவிடுகின்றது.’ என்கிறார் நவீன். அது எப்படி ஒரு பதிப்பகம் வெளியிடுகிறது என்பதற்காக அதனை நல்ல இலக்கியம் என்று அடையாளம் பெற்றுவிடும் என்று கூற முடியும்? நவீனுக்கு இப்பதிப்பகங்கள் குறித்த ஒரு மயக்கம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இவை தமிழ்சூழலில் செய்யும் அரசியல் குறித்து எந்த விமர்சனமும் இன்றி இப்படி ஒரு நற்சான்றிதழ் கொடுப்பது எப்படி சரியாகும்?
மஹாத்மன் எழுதும் ‘பரதேசியின் நாட்குறிப்புகள்’ என்ற தொடரும் இந்த இணையதளத்தில் வெளிவருகிறது. வீடற்ற, முகவரியற்ற நிலை என்பது உலகத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. கிடைத்த இடத்தில் உறங்கி, சோறு கண்ட இடத்தில் உண்டு வாழ்வது பரதேசி வாழ்க்கை. இந்த வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இயல்பாக ‘வீடுபேறு’ பெற்று குடும்பம், குட்டி என வாழ்பவர்களை விட அதிக அனுபவங்கள் கிடைக்கும். இவ்வகை அனுபவங்கள் இத்தொடரில் காணக்கிடைக்கிறது.
இளைய அப்துல்லாஹின் ‘எனது நங்கூரங்கள்’ இலங்கையின் வட்டார வழக்கு மொழியில் அமைந்து நிறைய புதிய வார்த்தைகளை அறிமுகப்படுத்துகிறது. வாசிக்கும்போது நமக்கும் நம் பள்ளிக்கூட நினைவுகளும் பால்யமும் தவிர்க்கமுடியாமல் மனக்கண்ணில் வந்து போகின்றன.
தர்மினி, சந்துரு , லதா , தினேசுவரி, யோகி, தோழி , ரேணுகா, இளங்கோவன் ஆகியோரின் கவிதைகள் தளத்தில் இடம்பெற்றிருக்கின்றன. கவிதை மொழியும் பாடுபொருளும் மனதைத் தொடுகின்றன. பௌத்ததின் பெயரால் ஆட்சி நடத்தும் இலங்கை அரசு மக்களைக் கொன்றழிக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் இந்துத்வாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்து மதத்தை ஒழிக்க பௌத்தமே முன்வைக்கப்படுகிறது. ஆக, திரும்ப திரும்ப புத்தரை போருக்குள் இழுப்பது சரியா என்று தோன்றுகிறது. இது போன்ற கவிதைகள் நிறைய தமிழ்சூழலில் சமீபமாக வெளிவந்திருக்கிறது. இதிலும் இளங்கோவனின் கவிதை அப்படியான ஒன்றுதான்.
பிரிவின் வலியை அழகாகச் சொல்ல யோகி எழுதிய கவிதை ஓர் ஆணாதிக்க மனநிலையில் எழுதப்பட்டதால் கவிதை தோற்றுப்போகிறது.

‘பிரிவதற்கு முடிவெத்தபின்
சிலவற்றுக்கு ஆய்த்தமாகவேண்டியுள்ளது
……………………….
………………………..
சேர்த்து எழுதின பெயரை மீண்டும்
பிரித்தெடுப்பதை
ஆசையுடன் போட்டுக்கொண்ட
சில நகைகளை கழட்டி எறிவதை’

ஏன் பேரை சேர்த்துக்கணும்?.அப்புறம் பிரித்தெடுக்கணும்? திருமணத்துக்குப் பின் வந்து சேரும் நகை என்று பார்த்தால் தாலியும் மெட்டியும்தான். ஏன் ஆசையோடு அதைப் போட்டுக்கணும்? அப்புறம் கழட்டி எறியணும்?
தர்மினியின் ‘சாவுகளால் பிரபலமான ஊர்’ ஊரே சுடுகாடாய் மாறிய அவலத்தைச் சொல்கிறது. மற்றபடி ரேணுகாவின் ‘சிவப்பில் பயணிப்பவள்’, தோழியின் தலைப்பிடப்படாத ஒரு கவிதை, தினேசுவரியின் ‘மூழ்காத காகிதக் கப்பல்’ போன்ற பல கவிதைகள் மிக் எளிமையாகவும், அழகியலோடும் இருக்கின்றன..
வடிவமைப்பைப் பொறுத்தவரை மிக நன்றாகவே இருக்கிறது. வாசிக்கும்போது தொல்லை செய்யாத வடிவமைப்பு கவருகிறது. ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் கண்ணில் படுகின்றன.
கட்டுரைகள், பத்திகள், கதைகள், கவிதைகள், தொடர்கள் இப்படி எல்லாவற்றிலும் ஒரு முத்திரை முயற்சி உள்ளது. மலேசியாவில் இருந்து உலகெங்கும் உள்ள தமிழ் உறவுகளோடு உரையாட, பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு அற்புதமான தளம் ‘வல்லினம்’.

நன்றிகள்


          1. ஷோபா சக்தி
            http://www.shobasakthi.com/shobasakthi/?p=522


           2. வல்லினம்
            http://vallinam.com.my/issue10/paarvai.html 


Thursday, April 01, 2010

ஆம்! இப்போதிருக்கும் நானாக.... நான் செதுக்கப்பட்டேன்..


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கத்தின்பால் நான் கொண்ட ஈடுபாடு என்னை சமூக அக்கறை உள்ள நபராக மாற்றியது.   தமுஎகச, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.என்னை செதுக்கிய உளிகள் அவை. 

ஒரு சிற்பத்தை மேலும் அழகுபடுத்தும் மற்றோர் உளியாக வந்தது காலக்கனவு. அண்மையில்  “காலக்கனவு”நாடகம் நூலாக வெளிவந்தது. அதில் இடம்பெற்ற என்னுடைய கட்டுரை இது. 

இனி... எனது அனுபவங்கள்...

குஜராத்தில் ஓவியர் சந்திரமோகனை ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் தாக்கி, அவருடைய ஓவியங்களை சிதைத்த அராஜகத்தைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு கண்டனக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலைத்துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அதில் அ. மங்கையும் ஒருவர். நான் அங்கே ஒரு பாடல் பாடினேன். நிகழ்ச்சி முடிந்தபின் மங்கை என்னிடம் “ஒரு நாடகம் போடப்போகிறேன். அதற்கான வேலைகள் துவங்கும்போது நாடகத்தில் பங்கு கொள்ள அழைக்கிறேன்” என்று கூறி என் கைபேசி எண்ணை வாங்கினார். 

அதன்பின்  மங்கை காணாமல் போனார் நெடுநாளைக்கு. நானும் சரி அவ்வளவுதான் போலிருக்கிறது என்று இருந்துவிட்டேன். திடீரென்று ஒரு நாள் மங்கையிடமிருந்து அழைப்பு. ஒரு நாளில் நாங்கள் கூடினோம். மங்கை, ரேவதி தவிர குழுவில் யாரையும் எனக்கு அறிமுகமில்லை. பொன்னியையும் கல்பனாவையும் அன்றுதான் சந்தித்தேன். எனக்கு உள்ளுக்குள் ஒரு நினைவு. “எனக்கு நடிப்பு நாடகம் இதெல்லாம் வருமா? எதை வைத்து மங்கை நான் நடிப்பேன் என்று முடிவு செய்தார்?” என்று குழப்பம். பள்ளி கல்லூரியில் நடித்தது தவிர நாடகத்தில் நடித்ததில்லை. முதல் நாள் பரஸ்பர அறிமுகங்கள். வ.கீதாவின் எழுத்து, அவரது மேடைப்பேச்சு எனக்கு பரிச்சயம். ஆனால் அவருடன் பேசியதில்லை. பெரியாரியலுக்கு அவர் புரிந்த அளப்பரிய சேவை குறித்து அவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தேன். அன்றுதான் அவருடனும் அறிமுகமாகிறேன்.  

எங்கள்  கையில் காகிதங்கள் திணிக்கப்பட்டன. “இதுதான் முதல் அத்தியாயம். இதை ஒவ்வொருத்தர் ஒரு பாரா படிங்க!” என்று மங்கை சொல்ல எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாடகம் என்றால் ஸ்கிரிப்ட் இல்லையே. இங்கே கீதா எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்ட் நாடக வடிவத்தில் இல்லையே என்று புதிதாய் குழப்பம். அடுத்த முறை வரும்போது இதை நன்றாகப் படித்துப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. “உனக்கு ஏதாவது புரியுதா?” என்று கண்களால் கேட்டுக்கொண்டு “இல்லையே” என்று பதிலும் சொல்லிக்கொண்டு கலைந்தோம். 

பின்  வந்த நாட்களில் கொஞ்சம்  கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. இது நாடகம்தான். ஆனால் நாடகமில்லை என்பது புரிந்தது. இதில் கையாளப்பட்ட உத்தி மிகவும் புதிதாக இருந்தது. பார்வையாளர்களோடு ஒருவராய் நாடக மாந்தர்களும் அமர்ந்துகொண்டு அவரவர் இடத்திலிருந்து பேசத்துவங்குவோம்.  

நான்  அப்போது கணினித்துறையில்  மென்பொருள் வல்லுனராக பணியாற்றி வந்தேன். அதிகமாக என்னால் விடுமுறை எடுக்க முடியாது என்பதற்காக வார இறுதி நாட்களில் மட்டுமே ஒத்திகை வைத்துக்கொள்வோம். அதிலும் நான் வார இறுதி நாட்களில் எங்காவது வெளியூரில் ஒரு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டிருப்பேன். அது போலவே ரேவதியும். பொன்னி ஒவ்வொரு முறையும் பெங்களூரிலிருந்து வரவேண்டும். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் இருந்துகொண்டு ஒன்றுகூடுவதற்கு மிகவும் சிரமப்பட்டோம். எல்லோரும் சென்னையில் இருக்கும் தேதியைக் கண்டுபிடிப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் சமாளித்து எங்கள் ஒத்திகை வாரமொரு மேனியும் நாளொரு வண்ணமுமாக வளர்ந்தது. இந்த நாட்களில் நாங்கள் மிக அன்னியோன்யமாகிப் போனோம். எல்லோரும் சேர்ந்து மங்கைக்கும் கீதாவுக்கும் பட்டப்பெயர் வைப்பது, கேலி செய்வது என மகிழ்ச்சியும் குதூகலமுமாகக் கழிந்தது. எங்கள் ஒத்திகை நடைபெற்ற தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கதவுகள் எங்களுக்காக ஒவ்வொரு வார இறுதியிலும் திறக்கப்பட்டன. 

ஒத்திகையின்போது எனக்குள் இருந்த குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி நான் தெளிவடையத்தொடங்கினேன். “நமக்கும் நடிப்பு வருமோ?” என்று முதன்முறையாக நினைத்தேன். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பெண்ணியம் தொடர்பான புரிதலை அறிந்துகொள்வதற்காகவும், மேம்படுத்தவும் அவ்வபோது எங்களுக்குள் உரையாடல் நிகழும். வட்டமாக அமர்ந்து எங்கள் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். இவையெல்லாம் நாடக ஒத்திகையின் ஒரு பகுதியாகவே நடந்து கொண்டிருந்தது. பிரதியைக்கொடுத்து ஒவ்வொருவருக்குமான வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது என்ற பேச்சே இல்லை. அதோடு மட்டுமல்லாமல் நாங்கள் ஒருமுறை பேசிய வசனத்தையே அடுத்த முறை பேசும்போது வேறு மாதிரி கூடப் பேசினோம். அந்த சுதந்திரம் எங்களுக்கு இருந்தது. ஏனெனில் கீதாவின் அந்தப் பிரதி எங்களோடு இரண்டற கலந்துவிட்டிருந்தது. 

முத்துலட்சுமியும், மூவலூர் ராமாமிர்தமும்  என்னோடு உரையாடினார்கள். சுப்புலட்சுமியும், கிரேஸும் கனவில் வந்தார்கள். தேவதாசிப்பெண்களின் கண்ணீர் என் விழிகள்  வழியே வந்தது. கிறிஸ்துவ  மிஷினரி பெண்கள் எங்கள் வடிவில் கைகளின் பைபிளோடு காடு, மலை, சமவெளி, வயல்வெளி எங்கும் சுற்றித் திரிந்து சனாதன இந்து மதத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்து கிறிஸ்துவத்தை வளர்க்கத் தொடங்கினார்கள். கே.பி.சுந்தராம்பாள் எங்கள் அபிநயங்களில் வாழ்ந்தார். சித்தி ஜுனைதாபேகம் பொன்னியின் பாங்கு ஒலியின் பின்னணியில் என் குரல் வழியே பெண்ணியம் பேசினார். மார்சீலை அணிய பெண்கள் கண்ட போராட்டத்தின் வெற்றி எங்களின் முகங்களில் பிரதிபலித்தது. வேட்டி கட்டி தலையை கிராப் வைத்த மணலூர் மணியம்மா, கே.பி.ஜானகியம்மா போன்றவர்கள் எங்களுக்கு வழிகாட்டினார்கள். மணியம்மாவின் அந்த வேட்டியை நாங்கள் சுற்றிக்கொண்டு கையில் செங்கொடியோடு நிற்கும் காட்சியில் உடல் சிலிர்த்துப்போகும். பெரியார் வளர்த்த பெண்களாக குஞ்சிதம், நீலாவதி, இந்திராணி, கண்ணம்மாள், அன்னபூரணி, ராமமிர்தம்மாள், மரகதவல்லி, ரெங்கநாயகி, விசாலாட்சி, பொன்னம்மாள், சுந்தரி, அஞ்சுகம், சிவகாமி, மேரி, மகாலட்சுமி, மஞ்சுளா பாய், வள்ளியம்மை, சுலோசனா, சிதம்பரம்மாள், மீனாட்சி, கிரிஜாதேவி, பினாங்கு ஜானகி, ஜெயசேகரி, ஆண்டாள் அம்மாள் ஆகியோர் எங்கள் நால்வரிலும் கூடு விட்டு பாய்ந்து வாழ்ந்தார்கள். 

‘தோளோடு தோள் இணைந்து சிறை வரைக்கும்’ என்று வில்லுப்பாட்டு மெட்டில் தோழர் இன்குலாப் இடதுசாரிப் பெண்களைப் பற்றி எழுதிய பாடல் எங்கள் தேசிய கீதமானது. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட சில மனசஞ்சலங்களின்போது இந்தப் பாடல் வரிகளை ஒரு முறை பாடினால் ஏற்படும் நெஞ்சுறுதியும் மனவலிமையையும் வேறு எதுவும் எனக்குத் தரவில்லை. இதையே ஒருமுறை ரேவதியும் கூறியபோது வியப்பு மேலிட்டது. இந்தப்பாடலை ஒரு தொலைபேசி அழைப்பில் எழுதி தொலைபேசியிலேயே வாசித்துக் காண்பிக்க, அதை எழுதிக்கொண்டோம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு தேவதாசிப்பெண்ணாக மாறி நான் நடிக்க வேண்டிய  காட்சி ஒன்று உண்டு. அந்த வலியையும் துயரத்தையும் “நான் இழந்த வாழ்க்கையை நாணம் விட்டு சொல்லவா..? என்ற பாடல் காத்திரமாக சித்தரித்தது. அதைப் பாடும்போது நான் காண்பிக்க வேண்டிய முகபாவங்களுக்காக எனக்கு மங்கை அளித்த பயிற்சி மறக்க முடியாதது. ஒரு பெண் எத்தனையோ முறை ஆண்களால் பேருந்து போன்ற இடங்களிலும், தனியான இடங்களிலும் பாலியல் தொல்லைகள் எதிர்கொண்டிருப்பாள். அதுபோன்ற அனுபவங்களை மீண்டும் நினைத்துப் பார். கண்களை மூடிக்கொள்” என்று எனக்குக் கூறிய அவர் மற்றவர்களைக் கொண்டு என்னை பாதிக்காத வகையில் மிக மென்மையாக லேசாக கைகள் பட்டும் படாமலும் என்னை தொடச்சொன்னார். எனக்கு அந்தக் காட்சியில் நான் என்ன செய்ய வேண்டும் எனப் புரிந்தது. அந்தக் காட்சிக்காக பார்த்தவர்கள் என்னைப் பாராட்டும் ஒவ்வொரு முறையும் இந்த ஒத்திகைக் காட்சி என் கண் முன் நிழலாடும். ஒவ்வொருவருக்கு உள்ளும் இருக்கக்கூடிய திறமையை வெளிக்கொணருவதற்கு சில சமயம் அன்பாகவும் சில சமயம் கோபமாகவும் மங்கை நிறைய முயற்சிகள் எடுத்தார்.  

என்னால் மறக்க முடியாத நாடகத்தின் முதல் அரங்கேற்றம் சென்னை ராணிமேரி கல்லூரியில் ஏற்பாடானது. நாடகத்தின் முதல் குரலாக பேராசிரியை சரஸ்வதியின் குரலைக் கேட்டபோது  இதயம் படபடவென அடித்துக்கொண்டது. நாடகம் முடிகையில் ஏதோ உன்மத்த நிலையை அடைந்ததுபோலிருந்தது. ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும்போது, “இவள் பெரியாரால் சுயமரியாதைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட தம்பதியரின் மகள்” என்று மங்கை என்னை அணைத்துக்கொண்டு கூறியபோது என் பெற்றோர் சபையை வணங்க, அத்தனை கூட்டத்தின் முன் கண்ணீர் பெருக்கடுக்க, சொல்லவொண்ணாத உணர்வுகளின் குவியலாய் நின்றிருந்தேன்.  
அதன்பின்  முக்கிய நகரங்களான மதுரை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், புதுச்சேரி, புதுடில்லி போன்ற இடங்களில் எங்கள் நாடகம் நடந்தேறியது. மதுரையில் மட்டும் நான்கு முறை நிகழ்த்தியிருக்கிறோம். நிறைய பத்திரிகைகளில் நாடக விமர்சனங்கள் வெளிவந்தன. தெரிந்தவர்கள், தமிழ்ச்சூழலில் இயங்கும் அறிவுஜீவிகள் என பலரும் வெவ்வேறு ஊர்களில் வந்து நாடகத்தைப் பார்த்தனர். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அனுபவம். சேலத்தில் நாடகம் பார்த்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா “எனக்குள் குற்றவுணர்வை உண்டாக்குகிறீர்கள்!” என்றார். இதுபோல ஆண்களின் மனதிற்குள் மாற்றத்தை அல்லது சலசலப்பையாவது காலக்கனவு ஏற்படுத்தியதை கண்கூடாக என்னால் அனுமானிக்க முடிந்தது. ஆண்களின் நிலை இது என்றால் மதுரையில் பாத்திமா கல்லூரியில் ஒரு மாணவி நாடகம் குறித்து கருத்து சொல்ல ஒலிவாங்கிமுன் வந்தபோது கண்ணீர் விட்டு “இத்தனை ஆண்டுகளுக்கு முன்னரே எப்படிப்பட்ட பெண்களெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்” என நெகிழ்ந்து நின்றாள்.  

காலக்கனவுக்கு விமர்சனங்களும் வந்தன. எங்கள் முதல் அரங்கேற்றம் முடிந்தவுடனேயே, குறிப்பாக இடதுசாரி இயக்கப் பெண்கள் குறித்த அதிக அளவிலான தகவல்கள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவள் என்ற முறையில் எனக்கு இது பெரிய மனநெருக்கடியைக் கொடுத்தது. இனம்புரியாத அழுத்தமாக உணர்ந்தேன். இடதுசாரி இயக்கப் பெண்கள் குறித்த பதிவுகள் இருந்தாலும் அவர்களின் குரல்களில் ஒலித்த உரையோ கட்டுரையோ அதிகம் கிடைக்கப்பெறவில்லை. நான் தேட ஆரம்பித்தேன். எங்காவது ஒரு குரல் கிடைக்காதா என ஏக்கத்தோடு தேடினேன். கிடைக்கவில்லை. இறுதியில் தோழர் எஸ்.ஏ.பெருமாள் கைகொடுத்தார். அவர் செய்தது காலக்கனவைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான உதவி என்று நினைக்கிறேன். ருக்மிணி அம்மாவின் ஒரு உரையை அவர் எடுத்துக்கொடுத்தார். ஆனால் நாங்கள் நாடகத்திற்கு எடுத்துக்கொண்ட காலகட்டத்துக்குள் இல்லாமல் மிகப் பிந்தைய காலத்தில் அவர் பேசியது அது. அதனால் அதை நாடகத்தில் இணைக்க முடியவில்லை. கே.பி.ஜானகியம்மாவின் நாட்குறிப்பில் இருந்து மணலூர் மணியம்மா மன்னார்குடியில் ஒரு பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை எடுத்துக் கொடுத்தார். மிக முக்கியமான பேச்சு அது. எங்கள் இரண்டாவது மேடையில் அதை இணைத்துக் கொண்டோம். காலக்கனவின் சிறப்பே இப்படி எப்போது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளலாம். அதன் வடிவம் அப்படி.  

ஒவ்வொரு மேடைக்கு முன்னும் மங்கை  அடையும் டென்ஷனைப் பார்த்து நாங்கள் அவருக்கு Hyper No. 1 என்று பெயர் வைத்தோம்.  முழுதும் பெண்கள் மட்டுமே இருந்த எங்கள் குழுவில் ஒரே ஆணாக இருந்தது ஸ்ரீஜித். எங்கள் நாடகத்தின் மேடை வடிவமைப்பாளர். அதை மேடை என்று சொல்ல முடியாது. நடிப்பிட வடிவமைப்பாளர் எனலாம். கொஞ்சகாலத்திலேயே ஸ்ரீஜித் ஒரு ஆண் என்பது மறந்துபோனது. அந்த அளவுக்கு காலக்கனவோடு ஸ்ரீஜித்துக்கு ஈடுபாடு உண்டு. 

ஒவ்வொரு நிகழ்வுக்கு முன்பும் ஒருமுறையாவது ஒத்திகை பார்க்கவேண்டும். சில சமயங்களில் எங்களுக்கு அதற்குக்கூட நேரமில்லாமல் ஓடும் ரயிலில் ஒத்திகை பார்த்திருக்கிறோம். அதன்பின் தெரிந்த சினிமா பாட்டு, இயக்கப் பாட்டு எல்லாம் பாடி தூங்க நள்ளிரவாகிவிடும்.  

ஒவ்வொரு முறையும் நாடகம் முடிந்தபின் நாங்கள் எப்படி செய்தோம் என பட்டியலிடுவார் மங்கை. அதில் குறைகள் நிறைகள் எல்லாம் இருக்கும். அநேகமாக ஒவ்வொரு நிகழ்வுக்கு முன்னும் எனக்கு சோதனையாக சளி பிடித்து தைலத்தோடு அலைந்து கொண்டிருப்பேன். ”எப்படி பாடுவது?”   என்ற பதைபதைப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் எப்படியோ சமாளித்து வந்திருக்கிறேன். சாதாரண நாட்களில் எனக்கு உடல்நலமில்லாமல் போனால் “நாடகம் போடலையே! ஏன் உனக்கு உடம்பு சரியில்லாமல் போகுது?” என்று பிறர் கேட்கும் அளவுக்குப் போனது.  

ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும். என்னை காலக்கனவுக்கு முன், காலக்கனவுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். ஒரு நாடகப்பிரதி பார்வையாளனை சென்றடைவதற்கு முன்னால் முதலில் நடிப்பவரைச் சென்றடைய வேண்டும். நடிப்பவரை நாடகம் முதலில் அரசியல்படுத்தவேண்டும். காலக்கனவு அந்த வேலையைச் செய்தது. கீதாவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். முதலில் அந்தப் பிரதி படிக்கும்போது இதில் நடிப்பதற்கு நமக்கு தகுதியிருக்கிறதா என்று என்னை நானே கேட்டுக்கொண்டபோது “இருக்கிறது” என்று என்னால் முழுமனதோடு எனக்கு நானே கூட சொல்லிக்கொள்ள முடியவில்லை. பெண்ணியம் குறித்த புரிதல்கள் இருந்தாலும், அதைக் கடைபிடிக்க ஆசைப்பட்டாலும், அதுவே எனது விருப்பமாக இருந்தாலும் கூட, சில புற–அக சூழல்களுக்குள் அடைபட்டு நான் கிடப்பதை உணர்ந்தேன். வீட்டில் என்ன சொல்வார்களோ, பெற்றோர் என்ன சொல்வார்களோ, இந்தச் சமூகம் என்ன சொல்லுமோ என்று நினைத்து நினைத்தே எத்தனையோ விஷயங்களில் நான் மௌனம் சாத்தித்திருப்பதும் சமரசம் செய்து கொண்டிருப்பதும் எனக்குப் புரிந்த்து.

திருமணத்தின்போது  தாலி வேண்டாம் என்ற என் பிடிவாதம்  எடுபடவில்லை. என் விருப்பத்திற்கு  மாறாக தாலி அணியும் சடங்கு நடந்தது. என் பெற்றோருக்கு பெரியார் திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் அவர்களின் திருமணத்திலும் தாலி இருந்தது. ஆகவே என் கோரிக்கை மணமகனைத் தவிர மற்றவர்களால் புறந்தள்ளப்பட்டது. எனக்கும் யாரையும் புண்படுத்தக்கூடாதென்ற உணர்வு இருந்ததால் கசப்போடு  போராட்டத்தைக் கைவிட்டேன். நான் தேர்ந்தெடுத்தவரை திருமணம் செய்துகொள்வதற்காக என் பெற்றோருடனும் மணமகன் வீட்டாருடனும் நான் செய்துகொண்ட சமரசம் அது எனச் சொல்லலாம்.  

ஒவ்வொரு முறை ஒத்திகையிலும் பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் குறித்த  காட்சியில் நடிக்கும்போதும்  குற்றவுணர்வு என்னை ஆட்கொண்டது. என் குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்றியது. ஒருநாளில் தாலியை கழற்றி வைத்தேன். இது ஏதோ ஒரே நாளில் நடந்தது என்றும் நான் சொல்ல மாட்டேன். இந்த மாற்றம். குற்றவுணர்வுக்கு ஆளாகி அதன் விளைவாக மன உளைச்சலுக்குட்பட்டு ஒரு கட்டத்தில் நடந்தது அது.  ஆனால் அதன்பின் மனநிறைவாய் உணர்ந்தேன். இப்போது யோசித்துப் பார்த்தால் எப்படி நாம் அப்படி இருந்தோம் என்று நினைத்தால் வியப்பாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது. 

இது ஒரு  உதாரணம்தான். இதுபோல எத்தனையோ உண்டு. இன்று இருக்கும்  ‘நான்’ ஆகிய என்னை செதுக்கியது காலக்கனவு. ஆனால் இதற்கு நான் நிறைய விலை கொடுக்க வேண்டியிருந்தது. பல கேள்விகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது. எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. போராட வேண்டியிருக்கிறது. போராட்டத்தில் நிறைய இழக்க வேண்டியிருக்கிறது. இழப்புகளுக்காக சில சமயம் வருந்தவேண்டியும் உள்ளது. ஆனால் நேர்மையும், உண்மையும், திருப்தியும் தரும் மனநிறைவுக்கு முன் அது தரும் கலக மனப்பான்மைக்கு முன் எதுவும் சாதாரணம்தான்!