Thursday, July 28, 2011

குழந்தைகள் அடம்பிடிக்கலாம்...அம்மா?


டந்த தி.மு.க. ஆட்சியில் சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டபோது,  'ஆசிரியர்-மாணவர் விகிதம், பள்ளிக் கட்டடம், உள்கட்ட மைப்பு வசதிகள் உள்ளிட்ட எல்லாமே சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது சமச்சீர்க் கல்வி. இதைப் பொதுப் பாடத்திட்டம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சமச்சீர்க் கல்வி என்று சொல்லக் கூடாது. அனைத்து வசதிகளை யும் அரசு செய்துவிட்டு, முழுமையான சமச்சீர்க் கல்வியை அமல்படுத்த வேண்டும்’ என்று தொடக்கத்தில் கல்வியாளர்கள் குரல் எழுப்பினர். அதன் பின்னர், 'சமச்சீர்க் கல்விக்கான முதல் படி’ என்ற வகையில், இந்தத் திட்டத்துக்குத் தங்கள் ஆதரவை வழங்கினர்.

ஆனால், இப்போதைய அ.தி.மு.க. அரசு இந்த முதல் படியையே நிறுத்திவிட்ட காரணத்தால் சமச்சீர்க் கல்விக்கான மற்ற வசதிகளையும் கேட்டு கோரிக்கை வைத்தால், அவையெல்லாம் நிறைவேறும் சாத்தியமே இல்லை என்ற கசக்கும் உண்மை தெளிவா கத் தெரிகிறது. சமச்சீர்க் கல்வியை நிறுத்தி வைக்கும் சட்டத் திருத்தம் முதல் சுப்ரீம் கோர்ட் அப்பீல் வரை தொடர்ச்சியாக அ.தி.மு.க. அரசு மாணவர்களுக்குத் துரோகம் இழைத்தே வந்திருக்கிறது.




ஜெயலலிதாவின் பிடிவாதக் குணம் மாறவே இல்லை என்பதற்குச் சாட்சி இந்த சமச்சீர்க் கல்வி விவகாரம். 'அவர் மாறிவிட்டார்; திருந்திவிட்டார்’ என்று கட்டியம் கூறியவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா.  டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வைகோ, நெடுமாறன், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், கி.வீரமணி போன்ற தலைவர்களும், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உட்பட பல அமைப்புகளும் கேட்டுக்கொண்ட பின்னும், மேல்முறையீட்டுக்குச் சென்றது தமிழக அரசு. ஆனால், உச்ச நீதிமன்றமோ தமிழக அரசின் முகத்தில் கரி பூசிவிட்டது. அதே சமயத்தில், தி.மு.க-வினர் மீது நில அபகரிப்பு வழக்குகள் போடப்படுவதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க., மாணவர் நலனில் அக்கறை இருந்தால், தனது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒரு நல்ல திட்டத் துக்குச் சமாதி கட்டப்படுவதை எதிர்த்துப் போராட்டம் அறிவித்து இருக்க வேண்டாமா?

இதுநாள் வரை இது குறித்து ஆசிரியர் சங்கங்கள் காத்து வந்த மௌனத்தைக் கலைத்து, சமச்சீர்க் கல்வியை வலியுறுத்தி யும், முத்துக்குமரன் கமிட்டியின் 109 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவித்தது.

ஆகஸ்ட் 2 வரை புத்தகங்கள் வழங்க காலக்கெடுவை நீட்டித்து இருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், இன்னமும் ஒரு பள்ளியில்கூட பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டதாகத் தகவல் இல்லை. இது குறித்து ஆசிரியர்களிடம் பேசியபோது, ''புத்தகம் எப்போது வரும் என்று எதுவுமே தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்கவும்கூட எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அரசுக்கு எதிரான ஆள் என்ற முத்திரை விழுந்துவிட்டால், டிரான்ஸ்ஃபர் மாதிரி ஏதாவது நடவடிக்கை எடுக்குமோ அரசு என்கிற பயம் எல்லோருக்கும் இருக்கிறது. சமச்சீர்க் கல்வி பற்றி மாணவர்களிடம் பேசக் கூடாது என்று அரசு சுற்றறிக்கை அனுப்பி இருப்பதால், நீதிமன்ற உத்தரவை மாணவர்களிடமோ மற்றவர்களிடமோ சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்ளக்கூட முடியவில்லை. ஆசிரியர்கள் மத்தியில் அறிவிக்கப்படாத ஒரு எமர்ஜென்சி காலச் சூழல் நிலவுகிறது. ஆட்சியாளர்களின் விருப்பங்களையும் கொள்கை களையும் பள்ளிக்கூடத்தில் பின்பற்றும் இழிநிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டு விட்டது'' என்று வேதனைப்பட்டார் ஓர் ஆசிரியர்.

கூடுமானவரையில் புத்தகங்கள் வழங்குவதைக் கால தாமதம் செய்கிறது அரசு. உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்நேரம் அனைத்துப் புத்தகங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் 2 வரை புத்தகங்கள் வழங்க உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நீட்டித்து உள்ளது. ஏன் அரசு இன்னும் புத்தகங்கள் வழங்கும் பணியைத் தொடங்கவில்லை?

''இணையத்தில் இருந்து சமச்சீர்க் கல்வி புத்தகங்களை முன்பே பதிவிறக்கம் செய்து வைத்து இருக்கிறோம். ஆனாலும், உத்தரவு வரும் வரை பாடம் நடத்த முடியாது என்பதால், குழப்பத்துடன் காத்திருக்கிறோம்'' என்கிறார்கள் சில ஆசிரியர்கள். இதற்கிடையே ஏற்கெனவே அச்சிடக் கொடுத்த பழைய பாடப் புத்தகங்களுக்கான ஆர்டரை அரசு இன்னும் ரத்து செய்யவில்லை. அச்சடிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

www.textbooksonline.tn.nic.in என்கிற அரசு இணையதளத்தில் இருந்த சமச்சீர்க் கல்வி நூல்களை இப்போது காணவில்லை. ஏற்கெனவே சமச்சீர்க் கல்வி அமலில் இருக்கும் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான நூல்களையும் சேர்த்து நீக்கி இருக்கிறது அரசு. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, சமச்சீர்க் கல்விக்கு உச்ச நீதிமன்றத் தின் இறுதித் தீர்ப்பில் தடை வாங்கி விடலாம் என்று அரசு எதிர்பார்க்கிறதோ என்பது ஆசிரியர்களின் அச்சமாக இருக் கிறது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், ''உடனடியாகப் புத்தகங்களை வழங்காவிட்டால், இது நாள் வரை
பொறுமையாக இருந்ததுபோல இனியும் இருக்க மாட்டோம்'' என்று அரசை எச்சரித்து உள்ளது. விருத்தாசலம் அருகே பள்ளி மாணவர்கள் அரசைக் கண்டித்து வகுப்புகளைப் புறக் கணித்துப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். உச்சகட்டமாக, நீதிமன்ற உத்தரவை அவமதித்த தாக தமிழக அரசுக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்தப் பிரச்னைகள் ஒருபுறம் இருக்க... தமிழக அரசு செய்த இன்னொரு காரியமும் மிகுந்த கண்டனத்துக்கு உரியது. சென்னை உயர் நீதிமன்ற விசாரணையின் போது நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை தவிர, ஒவ்வொரு உறுப்பினரும் தனித் தனியே கொடுத்த கருத்துகளையும் சமர்ப் பிக்க வேண்டும் என்று ஆணை யிட்டது நீதிமன்றம். அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட தனித் தனி அறிக்கைகளையும், இறுதி அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தனர் நீதிபதிகள்.

''நிபுணர் குழு அறிக்கை, ஒவ்வொரு உறுப்பினரின் கருத்தையும் பிரதிபலிக்க வில்லை. சமச்சீர்ப் பாடத்தில் பல திருத் தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், அதைப் படிப்படியாகச் செய்ய வேண்டும் என்றும் நிபுணர் குழுவில் ஒரு சிலர் கூறி உள்ளனர். ஆனாலும், சமச்சீர்க் கல்வியை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஒட்டுமொத்தமாகக் கருதவில்லை. அதோடு, பழைய 2004-ம் ஆண்டு பாடத் திட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கூறவில்லை. ஆனால், அறிக் கையோ தமிழக அரசு எடுத்துள்ள நிலையைத் தான் பிரதிபலிக்கிறது. அதுமட்டுமல்ல, வரைவு அறிக்கை முதல் இறுதி அறிக்கை வரை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதாதான் முடிவு எடுத்து உள்ளார். சமச்சீர்க் கல்வித் திட்டம் சிறப்பானது என்றும், அது தேவையானது என்றும் நிபுணர் குழுவின் பெண் உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார். அவரது முழு கருத்தும் எங்களிடம் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில் இடம்பெறவில்லை. சமச்சீர்க் கல்வியின் ஆக்கபூர்வமான விஷயங்களையும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், இவையெல்லாம் இல்லா மல் அரசின் கருத்து மட்டுமே இறுதி அறிக்கையாக வந்திருக்கிறது'' என்று தனது 81 பக்க தீர்ப்பில் கூறியிருக்கிறது நீதிமன்றம்.

ஆக, நிபுணர் குழு, உறுப்பினர்களின் கருத்துகளைப் பிரதிபலிக்காமல், தன் இஷ்டத்துக்கு ஓர் அறிக்கையைத் தயார் செய்திருக்கிறது அரசு. இது மக்களையும் நீதிமன்றத்தையுமேகூட ஏமாற்றும் வேலை. நேர்மையற்ற இந்தச் செயலை நீதிமன்றம் மன்னித்தாலும், மக்கள் மன்றம் மன்னிக்கப் போவது இல்லை!

நன்றி : ஆனந்த விகடன்

Friday, July 22, 2011

மீண்டும் தேர்தல் வரும்!


மிழ்நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த சமச்சீர்க் கல்வி வழக்குத் தீர்ப்பு ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் வந்தது. ஜூலை 18 அன்று காலையில் இருந்தே தீர்ப்பு அளிக்கப்படவிருந்த உயர் நீதிமன்ற அறையில் நிற்க இடம் இல்லாத அளவுக்குக் கூட்டம். வழக்கறிஞர்களும், பொதுமக்களும், பத்திரிகையாளர்களுமாக நிரம்பியது ஹால். நீதிபதிகள் இக்பால், சிவஞானம் அடங்கிய பெஞ்ச்சின் தீர்ப்பு விவரம்...  

 

 தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சமச்சீர்க் கல்வி சட்டத் திருத்தம் செல்லாது!
 உடனடியாக இந்த ஆண்டே 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமச்சீர்க் கல்விக்கான பொதுப் பாடத் திட்டம் நடைமுறைக்கு வர வேண்டும்!
 ஜூலை 22-க்குள் பொதுப் பாட நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்!
 பழைய பாடத்திட்ட நூல்களை மாணவர்களுக்கு வழங்கத் தடை!
 வேறு ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டும் எனில், ஒரு குழுவை அமைத்து மூன்று மாதங்களுக்குள் அந்தத் திருத்தங்களைத் துணைப் பாடத்திட்டமாக பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
 அரசு நியமித்த குழுவின் அறிக்கை நிராகரிக்கப்படுகிறது.

ஒரு கோடியே 38 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். 22-ம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை வழங்குவது சாத்தியம் இல்லை என்றும், 28-ம் தேதி வரை கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். தமிழக அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது.

தீர்ப்புக்கு முதல் நாள் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்வில், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்வதாக இருந்தது.  தி.மு.க. வழக்கறிஞர்கள் சிலர் அவரது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால், முதல்வர் வரவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், சமச்சீர் வழக்கு தீர்ப்பின் திசை எப்படி இருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையிலேயே அவர் தனது வருகையைத் தவிர்த்தார் என்று ஒரு தகவல்.

சமச்சீர்க் கல்விக்கான பொது மேடை என்கிற அமைப்பை ஏற்படுத்தி, பல ஆண்டுகளாகப் போராடி வரும் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ''இது மிகத் தெளிவான தீர்ப்பு. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டியே சமச்சீர்க் கல்வி வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எந்தத் தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல், எல்லா மாணவர்களும் படிக்க இந்தத் தீர்ப்பு வழிவகை செய்யும்!'' என்றார்.

தீர்ப்பு வெளியானதும், 'அப்பாடா... ஒரு வழியாக நமக்கு ஒரு விடிவுகாலம் பிறந்ததே!’ என்ற மகிழ்ச்சி  ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும். கூடவே, 'மறுபடியும் அப்பீல் பண்ணாம இருக்கணுமே அரசாங்கம்!’ என்று கவலை. அதற்கேற்றாற்போல சிறிது நேரத்திலேயே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறது என்ற தகவல் வந்து, மீண்டும் பதற்றப் பரபரப்பை உண்டாக்கியது.

கல்வியாளர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள்?

பேராசிரியர் வசந்திதேவி, ''அரசு நல்லெண்ணத்தோடு இந்த விஷயத்தை இதோடு விட்டுவிட்டால் பரவாயில்லை. ஏற்கெனவே, மாணவர்களுக்கு இரண்டு மாதங்கள் வரை கால விரயம் ஏற்பட்டு இருப்பதை உணர்ந்து, அரசு செயல்பட வேண்டும்.
அரசுக்கு மூன்று மாத காலம் அவகாசம் அளித்து இருக்கிறது உயர் நீதிமன்றம். எவை எல்லாம் வேண்டாமோ அவற்றை நீக்கிவிட வேண்டியதுதானே?'' என்கிறார்.

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால், ''இது குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு உண்மையான அக்கறையோடு வழங்கப்பட்ட தீர்ப்பு. இந்தத் தீர்ப்புக்குப் பின்னால் 40 ஆண்டு காலப் போராட்ட வரலாறு இருக்கிறது. இது ஏதோ இன்று நேற்று எழுந்த கோரிக்கை அல்ல. இது மக்களின் கோரிக்கை. இதை எந்தத் தனி மனிதருக்குமானது என்று கருதுவது தவறு. இது மக்களுடைய திட்டம். மக்களுக்குக் கிடைத்த வெற்றி. அரசு இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதுதான் நல்ல மரபாக இருக்கும்!'' என்கிறார்.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுமானால், தங்களைக் கேட்காமல் தீர்ப்பு வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யவிருப்பதாக சமச்சீர்க் கல்வி வழக்கைத் தொடர்ந்த மனுதாரர்கள் கூறி இருக்கின்றனர்.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், மாணவர்கள் கதி அதோகதிதான்! மீண்டும் வழக்கு, மீண்டும் தடை, மீண்டும் பிரச்னை, மீண்டும்... மீண்டும் என்று தொடர்ந்தால்...
ஐந்து ஆண்டுகளில் மீண்டும் தேர்தல் வரும்!

Monday, July 18, 2011

கிராமப்புற மாணவர்கள் என்றால் இளக்காரமா?

மச்சீர்க் கல்வி நூல்களை ஆராய உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு உருவாக்கிய குழு, தனது அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டது. விசாரணையின்போது தலைமை நீதிபதி இக்பால் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது, நீதிமன்ற உத்தரவை மீறி பாடப் புத்தகங்களைத் தமிழக அரசு அச்சடித்து வருவது குறித்து விளக்கம் கேட்டார். இதற்குப் பதில் அளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.பி.ராவ், ''சமச்சீர்க் கல்வி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விட்டன. மாணவர்களின் நலன் கருதி ஒரு மாற்று ஏற்பாடாகத்தான் பழைய பாடத் திட்டத்தின்படி புத்தகங்கள் அச்சிடப் படுகின்றன. அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால், இந்தப் புத்தகங்களைப் பயன் படுத்திக்கொள்வோம். இல்லாவிட்டால், சமச்சீர்க் கல்விப் பாடப் புத்தகங்களைப் பயன்படுத்திக்கொள்வோம்!'' என்று 'பொறுப்பாக’ப் பதில் சொல்லி இருக்கிறார். இவர்கள் இங்கி-பிங்கி-பாங்கி போட்டு விளையாடுவதற்கு, மக்களின் வரிப் பணம் கோடி கோடியாகச் செலவாகிறது.

500-க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட இந்தக் குழுவின் அறிக்கை என்ன சொல்கிறது? 'மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும் வகையில் சமச்சீர்க் கல்வி இல்லை!’ என்கிறது. முன்பு தரம் இல்லை என்றவர்கள் இப்போது, 'பாடச் சுமை அதிகம். சில பாடங்கள் மெட்ரிக் பாடத் திட்ட அளவுக்குச் சுமையுடன் இருக்கின்றன. ஆகவே, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது!’ என்கிறது அறிக்கை. கிராமப்புற மாணவர்களை இளக்காரமாகப் பார்க்கும் போக்கையே, இது எதிரொலிக்கிறது. இந்தியாவின் உச்ச பதவிகளை வகித்த, வகிக்கும் பலர் கிராமப்புறங்களில் படித்து வந்தவர்களே என்கிற உண்மையை உரக்கச் சொல்ல வேண்டி இருக்கிறது!
மின்னல் வேகத்தில் தயாராகி இருக்கும் 

இந்த அறிக்கைக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திராவிடர் கழகத்தின் மாணவர் அணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் அறிக்கையை எரிக்கும் போராட்டம் நடத்தினர். இத்தனைக் களேபரங்களுக்கு நடுவில் சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவந்த தி.மு.க. தலைமை மௌனம் காக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி இது குறித்து அறிக்கை வெளியிட்டதோடு சரி. முந்தைய தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்து சமச்சீர்க் கல்விக்கு வழிசெய்து கொடுத்த தங்கம் தென்னரசுவிடம் இது குறித்துப் பேசியபோது...

''முதலில் இந்த அறிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். தமிழ் நாட்டில் 85 சதவிகித மாணவர்கள் தமிழ் வழியில் அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பயில்பவர் கள். இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர்கூட அரசு நியமித்த குழுவில் இல்லை. தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர்கூட குழுவில் இல்லை. உண்மையான கல்வியாளர்களும் இல்லை. தமிழே தெரியாதவர்கள் எப்படித் தமிழ் வழிப் புத்தகங்களைப் படித்து, அதன் தரம் குறித்து கருத்து சொல்ல முடியும்? ழிசிணிஸிஜி யில் இருந்துகூட தமிழ் அறிந்த ஒருவரைக் குழுவில் சேர்க்கவில்லை அரசு. இந்த அறிக்கை எப்படி நியாயமானதாக இருக்கும்? நான்கு நாட்கள் மட்டுமே கூடி, இரண்டு நாட்கள் மட்டுமே விவாதித்து, இவ்வளவு குறுகிய காலத்துக்குள் எப்படி இவர்களால் அத்தனை புத்தகங்களையும் படித்து அதன் தரம் பற்றி கருத்து கூற இயலும்?
இது ஒரு பக்கம் என்றால், உச்ச நீதிமன்றம் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு இப்போது இருக்கும் சமச்சீர்க் கல்வி நூல்கள் அப்படியே தொடர வேண்டும் என்றது. ஆனால், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அந்த நூலில் சில பகுதிகளைக் கிழிக்கிறார்கள். மறைக்கிறார்கள். இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?'' என்று கேட்கிறார்.

''தி.மு.க. தலைவரின் துதி பாடும் பகுதிகள் இருப்பதாகவும், அதைத்தான் கிழிப்பதாகவும் அரசு கூறுகிறதே?''

''கலைஞரின் செம்மொழிப் பாடல் இருக்கிறது. அதில் அவர் குறித்த துதியா இருக்கிறது? அப்படியே அது இருக்கக் கூடாது என்றாலும் கலைஞர் சொன்னதுபோல், அதை எடுத்துவிட்டுப் பயன்படுத்த வேண்டியதுதானே?

இதே அ.தி.மு.க. அரசு ஆளுநர் உரையில், திருக்குறளை அரபு, சீன, ஆங்கில மொழி யில் மொழியாக்கம் செய்யப்போவதாகச் சொன்னது. ஆனால், வள்ளுவரின் படத்தைப் பாட நூல்களிலேயே மறைக்கிறார்கள். லாட காந்தம், சட்ட காந்தம் பற்றி ஒரு பாடம். இதில் சட்ட காந்தத்துக்குக் காலங்காலமாக சிவப்பு வண்ணம் தான் பூசப்பட்டு வந்தது. இது அறிவியல் உண்மை. இதில் கறுப்பு-சிவப்பு நிறம் என்பது தி.மு.க. என்று முத்திரை குத்தி, அதைக் கிழிக்கச் சொல்லி இருக்கிறார்கள். இந்த அரசுக்கு அடிப்படை அறிவியல் அறிவு கூட இல்லைபோல! சூரிய கிரகணம் குறித்த பாடத்தில் சூரியன் படம்தானே வரும்? அதையும் மறைத்தாயிற்று!

இது இப்படி என்றால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 10-ம் வகுப்பில் திராவிட இயக்க வரலாறு, நீதிக் கட்சியின் தோற்றம், பெரியார், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் போன்றவர்கள் குறித்து வரும் பாடம் ஆட்சேபகரமான பகுதி என்கிறார்கள். இதில் இருந்து சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்யும் சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதோடு, அதைக் கொண்டுவந்த நல்ல பெயரையும் கலைஞர் பெற்றுவிடக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்!'' என்று பொங்கிப் பொருமுகிறார் தங்கம் தென்னரசு.

அரசு நியமித்த குழுவின் அறிக்கை குறித்து கல்வியாளர்களின் கருத்தறிய பேராசிரியர் கல்யாணியிடம் (பிரபா கல்விமணி) பேசினேன். ''இத்தனை அவசரமாக, குறுகிய காலத்தில் 40 நூல்களை வாசித்து அறிக்கை தருவது எல்லாம் சாத்தியமா என்று உச்ச நீதிமன்றம் யோசித்திருக்க வேண்டும். தமிழக அரசுக்கு இந்த வாய்ப்பு ஏதுவாக அமைந்துவிட்டது. அதன் விருப்பப்படி தனக்கு வேண்டியவர்களை நியமித்துக்கொண்டது. அந்தக் குழுதான் இப்போது நூல்கள் சரி இல்லை என்கிறது. ஒவ்வொரு நூலும் ஒரு குழுவால் எழுதப்பட்டது. ஒரு வாதத்துக்காக நூல்கள் சரியில்லை என்று வைத்துக்கொண்டாலுமே, 40 குழுக்களுமே சரி இல்லாமலா பாடம் எழுதி இருக்கும்?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

இதற்கிடையில், அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 'சமச்சீர்க் கல்வி குறித்து பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவர்களிடையே பேசக் கூடாது!’ என்று ஆணையிட்டு, அதில் ஆசிரியர்கள் கையெழுத்திடப் பணிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. சென்னையில் ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் கையெழுத்திட மறுத்துள்ளனர். சென்னையிலேயே இன்னொரு பள்ளியில் திரு வள்ளுவர் படத்தின் மேல் ஸ்டிக்கர் ஒட்ட மாட்டோம் என்று ஆசிரியர்கள் மறுத்து விட்டதாகவும் தகவல். இப்படி ஆங்காங்கே எதிர்ப்புகள் இருந்தாலும், ஆசிரியர் சங்கங்கள் வாய் திறக்காமல் இருப்பது வியப்பூட்டுவதாக இருக்கிறது.

தமிழக அரசைக் கண்டித்து சென்னை யில் கல்வியாளர்கள் நடத்திய கூட்டத்தில், ''ஊதிய உயர்வுக்காக மட்டும்தான் போராட் டம் நடத்த வேண்டுமா? இது கல்வியின் உயிர் நாடிப் பிரச்னை இல்லையா? இதற்கு தெருவில் இறங்கிப் போராடாவிட்டால், வரலாறு மன்னிக்காது!'' என்றார்கள்.  
ஆனால், பேராசிரியர் கல்யாணியோ இந்த மௌனத்துக்கு இப்படி விளக்கம் கொடுக்கிறார்...

''ஏற்கெனவே, எஸ்மா, டெஸ்மா சட்டம் பாய்ச்சி, ஒரு லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா. அதனால், இயல்பாக ஆசிரியர்களுக்கு அச்சம் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதே ஆசிரியர்கள் தி.மு.க. ஆட்சியில் செயல் வழிக் கற்றல் முறை கொண்டுவந்தபோது, அதை எதிர்த்துப் போராடினார்கள். பிறகு, கல்வியாளர்கள் அந்தத் திட்டத்தின் நன்மைகளை எடுத்துரைத்த பின் புரிந்துªகாண்டனர். அப்போது, அவர்களுக்கு அரசின் முடிவை எதிர்ப்பதற்கு உரிய ஜனநாயக உரிமை இருந்தது!'' என்கிறார்.
எது எப்படியோ, அறிக்கை, கண்டனம், போராட்டம், வழக்கு என அனைத்துக்கும் நடுவே தமிழ்நாட்டு மாணவர்கள் திசை அறியாது தடுமாறுவதுதான் வேதனை!

***************

எனக்கு இல்லையா கல்வி?

'கல்விக் களத்தில் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?’ என்ற தலைப்பில் மனித உரிமைக் கல்வி நிறுவனம் சென்னையில் ஜூலை 9 அன்று ஒரு கலந்தாய்வரங்கம் நடத்தியது. தமிழக அரசின் மீதான கண்டனம் வலுவாக கூட்டத்தில் வெளிப்பட்டது. கல்வியாளர்கள் வசந்திதேவி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், பிரின்ஸ் கஜேந்திரபாபு, பிரபா.கல்விமணி, பேரா.ச.மாடசாமி, புனித பாண்டியன், பேரா.சரஸ்வதி, பெ.மணியரசன், ஹென்றி டிபேன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், பாரதி கிருஷ்ணகுமார் உட்பட பலர் உரையாற்றினர். கூட்டத்தில் வெளியிடப்பட்ட பிரகடனம் இப்படிச் சொல்கிறது - 'குழு அறிக்கையில் உள்ள குறைபாடு களைச் சுட்டிக்காட்ட மற்றொரு அறிக்கை தயாரிக்க வேண்டியிருக்கும். குழுவுக்கு விதிக்கப்பட்ட முக்கிய ஆணை - முந்தைய பாடத்திட்டத்தைவிட சமச்சீர்த் திட்டம் சிறந்ததா எனபதைக் கண்டறிவதுதான். ஆனால், அதைப்பற்றிய கருத்துக்கள் எவையும் சொல்லப்படவில்லை. கிராமப்புறக் குழந்தைகளின் கற்கும் திறன் குறித்தும் கேள்வி எழுப்புகிறது அறிக்கை. அவர்களை இழிவுபடுத்தும் இந்த வர்க்க கண்ணோட்டம் ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படை களையே தாக்குவதாகும். மெட்ரிக் பள்ளிகளின் கோரிக்கைகளை மட்டுமே ஏற்று, சமச்சீர்க் கல்வியை ஆதரித்த பல குரல்கள் அறிக்கையுடன் இணைக்கப் படவில்லை. நூல்கள் குறித்து ஆராய்வதுதான் குழுவுக்கு இடப்பட்ட பணி. ஆனால், அதையும் தாண்டி சமச்சீர்க் கல்விக்கு, பொதுப் பாடத்திட்டமே தேவை இல்லை என்று குழு பரிந்துரைப்பது கண்டனதுக்கு உரியது!’ என்கிறது அந்தப் பிரகடனம்.

பெ.மணியரசன், ''இது வல்லுநர் குழு அல்ல... கொல்லுநர் குழு. ஆம்! இத்தனை மாணவர்களை வாட்டி வதைத்துக் கொல்லும் குழுவை இப்படித்தான் அழைக்க வேண்டும்!'' என்றார்.

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால் பேசுகையில், ''இந்துத்வா கொள்கைதான் பழைய பாடத்திட்டத்தில் திணிக்கப்பட்டது. அதைத்தான் மீண்டும் கொண்டுவரத் துடிக்கிறது அரசு!'' என்றார். பேராசிரியர் மாடசாமி ''விவரம் அறியாத வயதில் குலக் கல்விக்கு எதிரான கோபத்தைப் பலரது முகங்களில் பார்த்திருக்கிறேன். அது போன்றதொரு கோபம் இன்றைக்கு ஆசிரியர்கள் - மாணவர்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக இருப்பதைப் பார்க்கிறேன். இந்தக் கோபம் ஆட்சியாளர்களைச் சும்மா விடாது!'' என்றார்.

'தலித் முரசு’ ஆசிரியர் புனிதபாண்டியன் பேசும்போது, ''எதற்காக மறைத்து மறைத்துப் பேச வேண்டும்? பார்ப்பனீயம்தான் சமச்சீர்க் கல்வியைத் தடை செய்யக் காரணம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாமே?'' என்றபோது, கூட்டத்தில் இருந்து ஒருவர் வெளிநடப்பு செய்தார்.

கூட்டத்தில் பாரதி கிருஷ்ணகுமாரின் 'எனக்கு இல்லையா கல்வி?’ ஆவணப் படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. சரியான நேரத்தில் வெளிவந்திருக்கும் சரியான படம் என்று கல்வியாளர்கள் பாராட்டினர்.

ஏற்புரை நிகழ்த்திய பாரதி கிருஷ்ணகுமார், ''தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும். தனியார் பள்ளிக்கூடங்கள் பெருகிய பின்னர்தான் நாட்டில் முதியோர் இல்லங்களும் அநாதை இல்லங்களும் பெருகின. திண்ணைப் பள்ளிக் கூடங்கள் என்கிற பெயரில் முன்பு தனியார் பள்ளிகளுக்கு அடிகோலியவர்கள்தான் இன்றைக்கு கல்வியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். நான் எடுத்த படங்களிலேயே துயரமான படம் 'எனக்கு இல்லையா கல்வி?’ படம்தான். இதற்கு முன் 44 உயிர்கள் கொல்லப்பட்ட கீழ்வெண்மணி கொடூரத்தை வைத்து 'ராமையாவின் குடிசை’ படமும் 94 பிஞ்சு உயிர்கள் கொல்லப்பட்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்தை வைத்து 'என்று தணியும்’ படமும் எடுத்து இருக்கிறேன். ஆனால், தமிழ்நாட்டில் வாழ்வா சாவா என்று தெரியாமல், கல்வி கிடைக்காமல் தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கும் கோடிக் கணக்கான குழந்தைகளின் துயரம் இந்தப் படம்!'' என்று நெக்குருகினார்.

நன்றி : ஆனந்த விகடன்
படங்கள் : வின்செண்ட்பால், சொ.பாலசுப்பிரமணியன்

Saturday, July 09, 2011

சமச்சீர் கல்வி தடை... சாதி உணர்வு காரணமா?

மிழ்நாட்டில் எந்த ஒரு விஷயமும் ஒரு மாதத்துக்கு மேல் செய்திகளில் அடிபடாது. ஆனால், சமச்சீர்க் கல்வி விவகாரம்... இதில் விதிவிலக்கு. சமச்சீர்க் கல்வி குறித்த விவாதங்களும் விவகாரங்களும் தொடர்கின்றன.

 சமச்சீர்க் கல்விப் பாட நூல்களில் ஆட்சேபகரமானவை என்று கூறி, சில பகுதிகளின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வருகிறது தமிழக அரசு. தமிழ்ப் பாட நூலில் இலக்கியம் இருட்டடிப்பு செய்யப்படுவதாக, இலக்கியவாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், அறிவொளி இயக்கம் மூலம் கிராமங்கள்தோறும் மக்களுக்குக் கல்வி கற்றுத் தந்தவரும், எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வனிடம் உரையாடியதில் இருந்து...


''தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே கல்வி குறித்து  விசாலமான பார்வை இல்லை. ஆனால், முந்தையஆட்சி யின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மட்டும் இதுகுறித்து ஆழ்ந்த அக்கறையும் தெளிவும்கொண்டு இருந்தார். அதன் காரணமாகவே, இந்த அளவுக்காவது சமச்சீர்க் கல்வி வாய்ப்பு சாத்தியமாகி இருக்கிறது. இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கல்வி குறித்த பார்வை என்ன என்பதை, சமச்சீர்க் கல்வி நூல்களை ஆய்வு செய்ய அவர் உருவாக்கி உள்ள குழுவை வைத்தே அளவிட முடியும். சமச்சீர்க் கல்வி நூலில் இடம்பெற்றுள்ள கவிஞர் அப்துல் ரகுமானின் மிகப் பிரபல வரிகள் இவை -


'வேலிக்கு வெளியே
தலை நீட்டிய
என் கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே...
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?’


விடுதலை உணர்வின் வீரியம் உரைக்கும் அற்புத வரிகள் இவை. இவற்றை ஸ்டிக்கர்கொண்டு மறைக்கிறார்கள். அவர் தி.மு.க. சார்பானவர் என்று கருதி, அப்படிச் செய்து இருக்கிறார்கள். பாவேந்தர் பாரதிதாசனையும் விட்டுவைக்கவில்லை இந்த அரசு. அவரு டைய ஆத்திசூடியையும் மறைத்தாயிற்று. அவர் திராவிட இயக்க முன்னோடிக் கவிஞர். அ.தி.மு.க. என்கிற ஆளும் கட்சியின் பெயரில் 'திராவிட’ என்கிற சொல் இருக் கிறது. ஆனால், கட்சியின் பெயர் அளவில் மட்டுமே திராவிடம் இருக்கிறது. புரட்சிக் கவிஞருக்கே இந்தக் கதியா?

தைப் பொங்கல் குறித்தான பாடத்தையும் நீக்கி இருக்கிறது அரசு. தைத் திருநாளை தி.மு.க. அரசு தமிழ்ப் புத்தாண்டு தினமாக அறிவித்ததால் இந்த நீக்கம். தமிழர்கள், காலங்காலமாகக் கொண்டாடி வரும் பண் பாட்டை, இப்படி ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துவிட முடியுமா என்ன?
சமச்சீர்க் கல்வி விவகாரத்தை, ஓர் ஆரிய - திராவிடக் கருத்தியல் போராட்டமாகவே நாங்கள்  பார்க்கிறோம். இது ஏதோ தி.மு.க.கொண்டு வந்தது, அதை அ.தி.மு.க. நிறுத்திவைக்கிறது என்று புரிந்துகொள்ளக் கூடாது. ஏன் சில பகுதி களை ஒட்டி மறைக்கிறோம் என்று மக்களுக்கு அரசு இன்னமும் விளக்கம் சொல்லவில்லை.
கருத்தியல் சூழலில் இந்த மாதிரியான ஒரு நிலை இருப்பது ஆபத்தானது. ஏகலைவன்காலத் தில் இருந்தே ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப் பட்டு வந்த கல்வி, இப்போதும் சமூகத்தின் படி நிலையில் கீழே இருப்பவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்கிற எண்ணமே, அரசு செய்யும் இந்தக் குழப்படிகளுக்குக் காரணம். உண்மையான சமச்சீர்க் கல்வியின் முதல் படிதான் இந்த நூல்கள். அப்படியும் வெறுமனே 10 சதவிகித சமச்சீர்க் கல்வி மட்டுமே பாட நூல்கள் மூலம் நிறைவேற்றப் பட்டு இருந்தது. ஆனால், இந்த 10 சதவிகிதத் தையே அனுமதிக்கவில்லை என்றால், 'தரமான கல்வியை அளிப்போம்’ என்று சொல்லிய இந்த அரசின் மேல் நம்பிக்கை இழக்க வேண்டி இருக்கிறது. இங்கு நிகழ்வது ஒரு தத்துவப் போராட்டமே!’’

சென்ற ஆண்டு சமச்சீர்க் கல்விப் புத்தகங்கள் வெளியானபோது, இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன், பெரியார் தொடர்பான பாடம் அதில் இடம் பெற்றதற்குக் கண்டனம் தெரிவித் ததை நாம் மறந்துவிட முடியாது. வேறு எவற்றை எல்லாம் ஸ்டிக்கர்கொண்டு மறைத்து இருக்கிறது அரசு?

’’'சிரிப்பதா... அழுவதா?’ என்கிற தலைப்பில் ஒரு தாத்தா சிரிப்பதுபோன்ற படம் இருக்கிறது. அதை மறைத்து இருக்கிறது அரசு. அதைப் பார்த்தால், முன்னாள் முதல்வர் கருணாநிதிபோல்கூட இல்லை. தாத்தாவே பாடப் புத்தகத்தில் இருக்கக் கூடாதா என்ன?'' என்கிறார் ச.தமிழ்ச்செல்வன்.

தி.மு.க. அரசு அச்சடித்த சமச்சீர்க் கல்விப் பாட நூல்கள் தரமற்றவையாக இருப்பதாக, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. 'சமூக நீதி என்கிற பெயரில் தரமற்ற பாடத் திட்டத்தை மாணவர்கள் மீது திணிக்க மனுதாரர்கள் முயற்சி மேற்கொள்கின்றனர்’ என்றும் கூறி இருக்கிறது.
உண்மையில் அரசு சொல்வதுபோல, சமச்சீர்க் கல்விப் பாடப் புத்தகங்கள் தரமற்றவையா?

''இல்லவே இல்லை! தேசியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் (NCERT) புத்த கங்களைவிட தரமானவை!'' என்கிறது தமிழ்நாடு அறிவி யல் இயக்கம். இந்த இயக்கம்  அண்மையில் ஒரு கள ஆய்வு மேற்கொண்டு, சமச்சீர்க் கல்விப் புத்தகங்களின் தரம் குறித்து அறிக்கை அளித்து இருக்கிறது. இந்த ஆய்வில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்றனர். ''மெட்ரிகுலேஷன் பள்ளி நூல்களுக்கும், NCERT பாட நூல்களுக்கும் சற்றும் தரத்தில் குறையாமல் இருப்பதோடு, சில பாடங்களில் குறிப்பாக, 10-ம் வகுப்பு கணித, அறிவியல் பாடங்கள் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தைவிட மேம்பட்டே இருக்கின்றன. மாணவர்களை மையப் படுத்தி பாட நூல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. மதிப்பீட்டு முறைகள் நவீன அறிவியல் அணுகுமுறையில் உருவாக்கப்பட்டு உள்ளன. கேள்விகளும்கூட சிந்தித்து விடை அளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. பாட நூல் வடிவமைப்பு மேம்பட்டு உள்ளது!'' என்கிறது அந்த அறிக்கை.

அண்மையில், இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அறிவியல் இயக்க நிர்வாகிகள், ''ஒன்றாம், ஆறாம் வகுப்புப் பாட நூல்கள் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட போது, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இதன் தரம் குறித்துக் குறை கூறவில்லை. ஓர் ஆண்டு கழித்து இப்போது குறை கூறுவது ஏன்? நிறுத்திவைத்துள்ள பாடப் புத்தகங் களை மக்களின் கண்களுக்குக் காட்டாமலேயே, அவற்றைத் தரம் இல்லை என்று அரசு சொல்கிறது. அவை வெளியிடப்பட்ட பின் அரசு தடை செய்து இருந்தால், மக்களிடம் இருந்து மிகப் பெரிய எதிர்ப்பை அரசு சந்தித்து இருக்கும்!'' என்கிறார்கள்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ''மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சமச்சீர்க் கல்வியை எதிர்ப்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. அவர்களுக்கு வியாபார நோக்கம் இருக்கிறது. ஆனால், அரசு எதிர்ப்பதன் பின்னணியை நாம் யோசிக்க வேண்டும்!'' என்று சிந்தனையைத் தூண்டுகிறார்.

''நம் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்ட வரலாறு தவறான வரலாறு. சமச்சீர்க் கல்வி அவற்றை எல்லாம் சரிசெய்து, நிஜமான வரலாற்றை மாணவர்களுக்கு வழங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்துத்வா சக்திகள்தான் சமச்சீர்க் கல்வியை எதிர்த்து வந்திருக்கின்றன. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சோ என்று பலரும் எதிர்க் கின்றனர். கிராமப்புறங்களில் பாடம் நடத்திக்கொண்டு இருந்த ஆசிரியரும்கூட இந்த சமச்சீர்க் கல்வி புத்தகம் எழுதியதில் பங்கேற்று இருக்கிறார். இது உண்மையிலேயே பாராட்டுக்கு உரிய விஷயம். வெறுமனே நகரங்களில் படிக்கும் மாணவர் களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மட்டுமே உருவாக்கியவை அல்ல இந்தப் புத்தகங்கள். பெரும்பாலான மெட்ரிகுலேஷன் பள்ளிகள், எப்போதுமே 10-ம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம்  வகுப்பிலேயே நடத்தத் தொடங்கிவிடும். அப்படி கோடை விடுமுறையிலேயே இணையத்தில் இருந்து சமச்சீர்க் கல்வி நூல்களைப் பதிவிறக்கம் செய்து நடத்தத் தொடங்கிவிட்ட மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களே, நூல்கள் மிகத் தரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்'' என்கிறார்.

தமிழ்நாடு அரசு நியமித்த சமச்சீர்க் கல்விக் குழு, இந்நேரம், தனது அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்து இருக்கும். உயர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து, மிகச் சில நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும். 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பது, தேர்தல் முடிவுகள் வரும்போது மட்டும் அரசியல் கட்சிகள் சொல்வது.

ஆனால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்களின் தீர்ப்பை எதிரொலிக்குமா?

நன்றி : - ஆனந்த விகடன்

Tuesday, July 05, 2011

சமச்சீர் கல்விதான் எங்களுக்கு வேண்டும்!

சமச்சீர் கல்வி - தமிழ்நாட்டின் பெரும் குழப்பம்! உச்ச நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைக்கச் சொன்னால் அதில் கல்விநிறுவனங்களை நடத்தும் முதலாளிகளையெல்லாம் கல்வியாளர்கள் என்கிற பெயரில் உறுப்பினர்களாக போட்டு தமிழக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவையே கேலிக்கூத்தாக்கியது. மூன்று வாரம் கழித்து இறுதித் தீர்ப்பு...அது வரை பிள்ளைகள் பள்ளியில் என்னதான் செய்கிறார்கள்?

மாணவர்களுக்கு என்னென்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அரசு இந்த மூன்று வாரத்திற்கு மட்டும் பாடத்திட்டம் அனுப்பியிருக்கிறது. செயல்வழிகற்றல் மூலம் பொதுவான பாடங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.  சில பள்ளிகளுக்குச் சென்று பார்த்தபோது ஆசிரியர்கள் நாட்களை வீணாக்காமல் மாணவர்களுக்கு பொதுவான பாடங்களை நடத்திக்கொண்டிருந்தனர். தமிழ் மற்றும் ஆங்கிலப்பாடங்களில் பொது இலக்கணம், அடிப்படைக் கணக்கு, சமூக அறிவியலில் வரைபடங்களை வைத்து பாடங்கள், அறிவியலில் சில சின்னச் சின்ன பரிசோதனைகள் என்று சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தனர். 

பத்தாம் வகுப்பில் என்ன நடக்கிறதென்று எட்டிப் பார்த்தபோது, “ஹேப்பி பர்த்டே டூ யூ” பாடிக்கொண்டிருந்தார்கள். மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அந்தத் தீயில் ஒரு காகிதத்தைக் காட்டி அது கரிய நிறமாக மாறி எரிவதைக் காட்டிவிட்டு, கார்பன் உள்ள பொருட்களெல்லாம் எரியும் போது கரிய நிறத்தில் மாறும் என்கிற சின்ன பரிசோதனையை செய்துகாட்டிவிட்டு மெழுகுவர்த்தியை அணைத்தபோதுதான் இந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாட்டு. ஆசிரியை முகம் கொள்ளா சிரிப்போடு அதே பரிசோதனையை மாணவர்களையும் செய்யச் சொன்னார். ஆர்வத்தோடு வந்து ஒவ்வொருவராக செய்து பார்த்தார்கள். 

அடுத்த பரிசோதனையாக மாணவர்கள் வளைவாக ஒரு கோடு வரைய வேண்டும். அதன்பின் ஆளுக்கு ஒரு நூல் கொடுக்கப்பட்டது. அந்த நூலை வைத்து அந்த வளவை அளந்து அதன்பின் ஸ்கேலில் நூலை அளந்து வளைவின் நீளத்தைச் சொல்லவேண்டும். இப்படி சின்னச் சின்னதாக நிறைய பரிசோதனைகள், விளையாட்டுக்கள் என்று நேரம் செல்கிறது. ”என்ன செய்ய வேண்டுமென்பதற்கான சிலபஸ் மட்டும்தான் அரசு தந்தது. இந்த நூல், மெழுகுவர்த்தி வகையறாக்களையெல்லாம் நாங்களே வாங்கிக்கொள்ள வேண்டும்.” என்றனர் ஆசிரியர்கள். 

மாணவர்களிடம் “உங்களுக்கு சமச்சீர் கல்வி வேண்டுமா? வேண்டாமா?” என்று கேட்டபோது கோரஸாக “சமச்சீர் கல்விதான் வேண்டும்” என்று பதில் வந்தது. காரணம்? 
“அதுதான் ஈஸியா இருக்கும்!”  
“ஏழைங்க, பணக்காரங்க எல்லாரும் ஒரே மாதிரி படிப்போமில்லையா?”
“எங்க வீட்ல அதுதான் நல்லதுன்னு சொன்னாங்க”
“எங்க சார் அதுதான் நல்ல சிலபஸ்னு சொன்னார்”
“ஒண்ணாவது ஆறாவது புத்தகமெல்லாம் நல்லாருக்கு. ஈஸியா..! அதுமாதிரிதான் எங்களுக்கும் இருக்கும்னு நினைக்கிறேன். அதனால் சமச்சீர் கல்விதான் வேணும்”

- இப்படி விதவிதமான பதில்கள் கிடைத்தன. சரி. ஒருவேளை சமச்சீர் கல்வி கிடையாது என்ற நிலை வந்து விட்டால் இந்தப் பிள்ளைகளின் கதி? 

”நான் ஸ்கூலுக்கே வரமாட்டேன். பழைய சிலபஸ் கஷ்டம்” என்றாள் ஒரு மாணவி.
“அதெல்லாம் ஒத்துக்க மாட்டோம். சமச்சீர் கல்விதான் வேணும்னு கேட்போம்” என்று ஒரு மாணவன் சொல்ல, “அடேய்! நீ கேக்குறதுக்குள்ள முழுபரீட்சை வந்துடும்டா” என்று இன்னொருவன் சொல்ல “ஆமாம்ல?” என்று யோசிக்கிறான் மாணவன். “வேற வழியில்ல! படிச்சுத்தான் ஆகணும். பப்ளிக் எக்ஸாம் ஆச்சே?” என்கிறார்கள் சோகத்தோடு. கண்களில் பயமும் கலக்கமும் தெரிகிறது. இந்த மூன்று வாரம் பாடமில்லாமல் நிறைய செயல்முறை விளக்கங்கள் மூலம் கற்றுக்கொளவது மகிழ்ச்சியாக இருந்தாலும், மாணவர்களுக்கு மூன்று வாரத்துக்குப் பின் பாடத்திட்டத்தை விரைந்து முடிக்கவேண்டி வார இறுதி நாட்களிலும் பள்ளிக்கூடம் வைத்து தங்களை கொல்வார்களோ என்கிற பீதி நிலவுவது நன்றாகவே தெரிந்தது.  அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்படுவது பிஞ்சுக் குழந்தைகளாக இருப்பதைப் பார்க்க வேதனையும் கோபமுமே மிஞ்சுகிறது. இப்படி ஒரு பயத்தையும் பீதியையும் மாணவர்களிடையே உருவாக்கி அவர்களது மனநிம்மதியைக் கெடுத்ததற்கு எதைச் சொல்லி மன்னிப்பு கேட்கப்போகிறது தமிழக அரசு?

சில பெற்றோர், எப்படியும் சமச்சீர் கல்வி வராது என்கிற நம்பிக்கையில் பிள்ளைகளுக்கு பழைய பாடத்திட்டத்தின் பாடநூல்களை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். பிள்ளைகளை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்கும் சில ஆசிரியர்களும் கூட சமச்சீர் கல்வியை எதிர்ப்பதை ஆசிரியர்கள் வேதனையோடு சுட்டிக்காட்டுகின்றனர். 

கருப்பு மார்க்கர் பேனா, பிளேடு சகிதம் பள்ளிகளுக்கு வந்து பாடப்புத்தகத்தில் உள்ள சில பக்கங்களை கிழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது நிறைய ஆசிரியர்களை கொதிப்படைய செய்திருக்கிறது. அய்யன் திருவள்ளுவரின் படத்தின் மேல் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதை ஆசிரியர்கள் வேதனையோடு தெரிவித்தனர். ஆட்சியாளர்களின் விருப்பப்படியெல்லாம் ஆசிரியர்கள் தங்கள் பணிக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு வேலையில் ஈடுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்? பாடம் கற்றுக்கொடுப்பது தானே ஆசிரியர்களின் பணி? அ.தி.மு.க. அரசு விரும்பாததால், குறிப்பாகச் சொல்லப்போனால் முதல்வர் ஜெயலலிதா விரும்பாததால், கிழிப்பதற்கும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய நேரத்தையும் உழைப்பையும் வீண் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்பது பல ஆசிரியர்களின் கேள்வியாக இருக்கிறது. என்ன பதில் வைத்திருக்கிறது அரசு?

இதற்கிடையில் பழைய பாடத்திட்டத்தின் பாடங்களை அச்சடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் பார்க்கையில் சமச்சீர் கல்விக்கு முழுக்கு போடும் வகையிலேயே காரியங்கள் நடபப்தை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. கல்வியாளர்கள் இல்லாத ஒரு சமச்சீர் கல்விக்குழுவை உருவாக்கியிருக்கிறது அரசு. ம.தி.மு.க., பா.ம.க, சி.பி.ஐ(எம்), தமிழ்தேசப் பொதுவுடமைக் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் போன்றவை இந்த குழுவில் நியமிக்கப்பட்ட ‘கல்வியாளர்கள்’ குறித்த தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்திய மாணவர் சங்கத்தினர் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கைதானார்கள். இப்படி பலரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள இந்த சமச்சீர் கல்விக்குழுதான் ‘ஆராய்ந்து’ ஒரு அறிக்கையை தயார் செய்து கொடுக்கப் போகிறது. அதன்பின்னர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும். இந்த அறிக்கை எப்படி இருக்கப்போகிறது என்பதை குழுவில் உள்ளவர்களை வைத்தே முடிவு செய்து விடலாம். உண்மையான கல்வியாளர்கள் உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதை அவர்களுடன் உரையாடியபோது உணரமுடிந்தது. “பள்ளி முதலாளிகளெல்லாம் கல்வியாளர்கள் என்றால் இனி கல்வியாளர்கள் எல்லாம் தங்களை கல்வியாளர்கள் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும்.” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு. 

பொதுவாக ஒரு வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு வந்தபின் தான் குற்றவாளி யார் என்பதும் என்ன தண்டனை என்பதும் தெரிய வரும். ஆனால் இந்த சமச்சீர் கல்வி வழக்கு விசித்திரமானது. தீர்ப்புக்கு முன்னரே குற்றவாளியாய் நிற்கிறது தமிழக அரசு. 

ஆனால் தண்டனை மட்டும் மாணவர்களுக்கு! 

(நன்றி : ஆனந்த விகடன்)