Sunday, March 31, 2013

காம்ரேடுக்கே காப்பிரைட்டா?


சேகுவேரா - உலகெங்கும் உள்ள இடதுசாரிகள், போராளிகள், புரட்சிக்காரர்கள், ஏகாதிபத்திய-காலனியாதிக்க எதிர்ப்பாளர்கள் மற்றும் முற்போக்காளர்களுக்கு ஆதர்ச நாயகன். சே எழுதிய நூல்கள், சே குறித்த நூல்கள் என்று ஏராளமான நூல்கள் உள்ளன. சே உருவம் பொறித்த டி-ஷர்ட்டுகள், பிற உடைகள் எல்லாம் ஒருகாலத்தில் புரட்சியை விரும்புபவர்கள் மட்டுமே அணிந்துகொண்டிருந்தனர். ஆனால் சேகுவேராவை வியாபாரத்துக்கு பயன்படுத்தத் தொடங்கி அவருடைய உருவம் ஒரு வணிகப் பொருளாகி நெடுநாட்களாகின்றன. இந்த வணிகம் எல்லா துறைகளுக்கும் விஸ்தரிக்கப்படத் தொடங்கியுள்ளது.




அண்மையில் ஒரு நாளிதழில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட விளம்பரம் ஒன்று பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ’சேகுவேராவின் நூல்களை கண்ணதாசன் பதிப்பகம் தவிர, வேறு எவரும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடக்கூடாது. இந்த எச்சரிக்கையை மீறுவோர் மீது காப்புரிமைச் சட்டத்தின்படியும், இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்படியும் கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் தொடரப்பட்டு மற்றும் இதர சட்டங்களின் கீழ் இழப்பீடுகளும் பெறப்படும்’ என்கிறது அவ்விளம்பரம். ‘மோட்டார்சைக்கிள் டயரி, சேகுவேரா - ஓர் நினைவு - பிடல் காஸ்ட்ரோ, பொலிவியன் நாட்குறிப்பு ஆகிய மூன்று நூல்களுக்கும் முறையாக காப்புரிமை பெற்றிருப்பதாக அறிவிக்கிறது விளம்பரம். ’மேலும் பல நூல்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. சேகுவேராவின் அனைத்து புகைப்படங்கள், தொலைக்காட்சி தொடராக்கும் உரிமையும் கண்ணதாசன் பதிப்பகம் காப்புரிமை பெற்றுள்ளது’ என்கிறது விளம்பரம். 

சேகுவேராவின் படங்கள் இல்லாத இடதுசாரிகளின் மாநாடோ கூட்டங்களையோ காண்பது அரிது. இந்தியாவின் முக்கிய இடதுசாரிக்கட்சிகளுள் ஒன்றான சி.பி.ஐ(எம்) கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளரும் பாரதி புத்தகாலயத்தின் நிறுவனருமான ஜி.ராமகிருஷ்ணன் ‘’காரல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் எங்கல்ஸ், மாவோ, ஹோ-சி-மின், சேகுவேரா போன்ற தலைவர்கள் எல்லோருமே மக்கள் தலைவர்கள். சர்வதேச உழைப்பாளர் வர்க்கத்தின் தலைவர்கள் இவர்கள். அவர்களுடைய நூல்கள் மக்களுக்கானவை. மக்கள் தலைவர் ஒருவரை நான் விலைக்கு வாங்கிவிட்டேன் என்று கண்ணதாசன் பதிப்பகம் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. முற்றிலும் வணிக நோக்கமே இதில் உள்ளது. சேகுவேராவின் எழுத்துக்கள் விலைமதிப்பற்றவை. அவற்றை நான் இத்தனை டாலர் கொடுத்து வாங்கிவிட்டேன் என்று கூறுவதை ஏற்க முடியாது’’ என்றார்.

எழுத்தாளர்கள், இடதுசாரிகள், அறிவுஜீவிகள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள் அனைவருமே இந்த அறிவிப்பைக்கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் ஏற்கனவே சுமார் 200க்கும் மேற்பட்ட சே தொடர்பான நூல்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. பல்வேறு பதிப்பகங்கள் இவற்றை வெளியிட்டிருக்கின்றன. இந்நிலையில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட விளம்பரத்தில் 3 நூல்களின் பெயர்கள்தான் இருக்கின்றன. மற்ற நூல்களின் பெயர்கள் இல்லை. சேகுவேராவை 40க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் படம் எடுத்துள்ளனர். அத்தனை புகைப்படங்களுக்கும் எப்படி ஒருவர் உரிமை பெற்றிருக்கமுடியும் என்பது போன்ற பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கண்ணதாசன் பதிப்பக உரிமையாளர் காந்தி கண்ணதாசனை இந்தியா டுடே அணுகியது.

’’சேகுவேராவின் மகளான அலெய்டா குவேரா ஆஸ்திரேலியாவில் உள்ள ஓஷன் பிரஸ் நிறுவனத்திடம் சே-வின் அனைத்து நூல்களுக்குமான உரிமையை அளித்துள்ளார். நாங்கள் 2009ல் இருந்து முயற்சி செய்து அவர்களிடமிருந்து காப்புரிமையைப் பெற்றுள்ளோம். தமிழில் இயங்கும் பதிப்பகங்கள் பலவற்றுக்கு காப்புரிமை குறித்த விழிப்புணர்வு இல்லை. எந்த மொழியில் இருந்து எந்த நூலை தமிழுக்குக் கொண்டுவரவேண்டுமென்றாலும், முறையாக காப்புரிமை பெற்றுத்தான் கொண்டுவரவேண்டும். மற்றவர்கள் இதைச் செய்யவில்லை. நான் முறையாக காப்புரிமை பெற்றுச் செய்கிறேன். இதற்கு எதற்கு அதிர்ச்சி அடையவேண்டும்? இவர்கள் இதற்கு முன்னர் வெளியிட்ட புத்தகங்களுக்கு காப்புரிமை வாங்காமல் இருந்ததே தவறுதான். முறையாக ஒரு விஷயத்தைச் செய்யவேண்டுமென்று எண்ணியதால்தான் நாங்கள் காப்புரிமை பெற்றோம். இப்போது 3 நூல்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளோம். மேலும் சில நூல்களுக்கும் காப்புரிமை பெறும் முயற்சியில் இருக்கிறோம். நாங்கள் காப்புரிமை பெற்ற நூல்கள் தொடர்பான புகைப்படங்களுக்கு எங்களுக்கு காப்புரிமை உண்டு. நாங்கள் பெற்றது போல வேறு நூல்களுக்கு யார் வேண்டுமானாலும் காப்புரிமை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்றார்.

சி.பி.ஐ.கட்சியின் மூத்த தலைவரும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் பதிப்பாளருமான ஆர்.நல்லக்கண்ணு ‘’இந்த விளம்பரம் அதிர்ச்சியை அளிக்கிறது. இது மிகவும் தவறு. மேற்கொண்டு இந்த விஷயத்தில் என்ன செய்வது என்பது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். சட்டரீதியான விஷயங்கள் குறித்தும் விவாதித்துக்கொண்டிருக்கிறோம்’’ என்றார். சி.பி.ஐ.(எம்) கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (டி.ஒய்.எஃப்.ஐ.) மாநிலச் செயலாளரான வேல்முருகன் ‘’சே-வின் படங்களையோ நூல்களையோ இடதுசாரிகள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் வியாபார நோக்கத்தில் இப்படியான ஒரு விளம்பரத்தை கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருப்பதை நாங்கள் நிராகரிக்கிறோம்’’ என்றார்.

கண்ணதாசன் பதிப்பகம் மூன்று நூல்களுக்கு மட்டுமே காப்புரிமை வாங்கியுள்ள நிலையில், விளம்பரத்தில் காணப்படும் வாசகங்கள் தவறானவையாக இருப்பதாகவும், மூன்றே மூன்று நூல்களுக்கு காப்புரிமை வாங்கிவிட்டு, மேலும் பல நூல்களுக்கு வாங்கும் முயற்சி இன்னும் கைகூடாதபோது ‘’சேகுவேராவின் நூல்களை கண்ணதாசன் பதிப்பகம் தவிர, வேறு எவரும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடக்கூடாது’’ என்று பொத்தாம்பொதுவாக விளம்பரம் செய்வதையே பலரும் விமர்சிக்கிறார்கள். அத்துடன் அந்த குறிப்பிட்ட மூன்று நூல்களுடன் தொடர்புடைய படங்களுக்கு மட்டும் காப்புரிமை உள்ளபோது, சேகுவேராவின் அனைத்து புகைப்படங்களுக்கும் காப்புரிமை பெற்றுள்ளதாக விளம்பர வாசகங்கள் கூறுகின்றன. சிறு பதிப்பகங்கள் பல கொள்கைரீதியாக உடன்பட்டு சேகுவேராவின் நூல்களை வெளிக்கொணரும் தங்களுக்கு மிகப்பெரிய சிக்கலை இது உருவாக்கும் என்று சிறுபதிப்பகத்தார் கூறுகிறார்கள். எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் தற்போது ஓஷன் பிரஸ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பும் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கின்றனர். ஓர் இடதுசாரி புரட்சிக்காரரான சேகுவேராவின் நூல்களின் உரிமையை கொள்கைகளுக்கு மாறாக வலதுசாரி கண்ணதாசன் பதிப்பகம் பெற்றிருக்கிறது என்றும் அதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டும் ஓஷன் பிரஸுக்கு கடிதங்களும் கண்டனங்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. 

பெரியார் குடியரசு இதழில் எழுதியவற்றைத் தொகுத்து பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டபோது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெரியாரின் எழுத்துக்களுக்கு தங்களிடம் காப்புரிமை உள்ளதால் தொகுப்பை வெளியிட தடைவிதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் அண்மையில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு இப்படி தீர்ப்பு கூறினார். ‘’சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் பெரியார். தன்னுடைய கருத்துக்களை அவர் குடியரசு பத்திரிகையில் எழுதியுள்ளார். தன்னுடைய கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். நூறு ஆண்டுக்கு பிறகும் இளைய சமுதாயத்தினர் அவருடைய கொள்கைகளை தெரிந்து கொள்வது நல்லது. எனவே, பெரியாரின் கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும், யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது. காப்புரிமை என்ற பெயரில் அவரது கருத்துக்களை முடக்கவும் கூடாது. வழக்கு ஆவணங்களுக்கு இடையே அவரது கொள்கைகளை முடக்கி, அடைத்து விடக்கூடாது. அவரது கருத்துக்கள் அனைவருக்கும் சொந்தமானவை.’’ என்று கூறி கி.வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தார் நீதிபதி.
சட்டங்கள் என்னவாக இருந்தாலும் நீதிமன்றம் தெரிவித்த இந்தக் கருத்துகள் அப்படியே சேகுவாராவுக்கும் பொருந்தும் என்று இடதுசாரி அறிவுஜீவிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். எவர் வேண்டுமானாலும் பதிப்பித்துக்கொள்ளும் வகையில் சேகுவேராவின் நூல்களை மக்களின் பொதுச் சொத்தாக்கவேண்டும் என்கிறார்கள் அவர்கள்.அவர்களின் முயற்சி பலிக்குமா? அல்லது காப்புரிமை பெற்றவருக்கே சே சொந்தம் என்றாகுமா?

Monday, March 25, 2013

பரதேசி

'எரியும் பனிக்காடு' நாவலை பாலா பரதேசியாக எடுக்கப் போகிறார் என்று 2011 டிசம்பர் மாதம் கேள்விப்பட்டேன். அப்போதே பயமாக இருந்தது. ஏனென்றால் 'அவன்-இவன்' பார்த்த பாதிப்பில் இருந்து இன்னமும் மீளாமல் இருந்தேன். அத்துடன் விபத்தில் அடிபட்டு வேலை வெட்டி எதுவும் செய்யாமல் மருத்துவமனையில் இருந்தேன் 24 மணி நேரமும் சதா எதையாவது சிந்தித்துக்கொண்டிருந்த எனக்கு இந்த தகவல் கொஞ்சம் கலவரத்தை உண்டுபண்ணியது. பாலா எப்படி இந்த நாவலை எடுககப் போகிறார் என்று இரண்டு நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்போது கூட படத்தின் தன்மை குறித்தும், எடுக்கப்படும் விதம் குறித்தும்தான் யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருபோதும் பாலா அதை தன் கதை என்று சொல்வார் என்று நினைக்கவேயில்லை. 
 
 

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், தேயிலை எஸ்டேட்டுகளில் கூலிவேலைக்குச் சென்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவம் செய்யச் சென்ற ஆங்கிலேய பாதிரியார் பி.எச். டேனியல் எழுதிய ‘ரெட் டீ’ என்கிற ஆங்கில நாவலின் தமிழாக்கமான ‘எரியும் பனிக்காடு’ நாவலை பாலா ‘பரதேசி’ ஆக செல்லுலாய்டில் உருவாக்கியிருக்கிறார். இந்த நாவலை படமாக்கவேண்டும் என்கிற பாலாவின் முனைப்பு நல்ல விஷயம்தான். அத்தோடு வழக்கமாக கதாநாயகன் வன்முறை தாண்டவமாடும் படமாக இல்லாமல், தொழிலாளர்கள் அடக்குமுறைக்கும் கொடுமைக்கும் ஆளாவதை படத்தில் காட்டியிருப்பதும் பாலாவின் படங்களில் பரதேசியை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

படத்தின் பலம் செழியனின் ஒளிப்பதிவும் உடைகள் தேர்வும் தான். அவைதான் நம்மை அந்த காலகட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அதர்வாவின் நடிப்பு அற்புதம். அதிலும் ஒன்றுமறியா அப்பாவியாய் ஊரில் நடமாடும்போதும், ஊரே கேலி பேசினாலும் புறந்தள்ளி சிரித்துக்கொண்டே இருப்பதும், கஷ்டப்பட்டு மரம் வெட்டியபின் கூலி கிடைக்கவில்லை என்று அழுது புலம்பும்போதும் மனதைத் தொடுகிறார். வேதிகாவின் பாத்திரப் படைப்புதான் அதீதமாகப் படுகிறது. பெரியப்பா இறந்துபோயிருக்கும் நிலையில் ஒருவனை அப்படியா கேலி செய்து பார்ப்பாள் ஒருத்தி? இயல்பாக இல்லை. அதுபோலவே ஊரார் நெல்சோறு சாப்பிடவேண்டும் என்று தன் கணவனின் மரணத்தை மறைக்க நினைப்பது சரி. ஆனால் மொத்த ஊரும் நெல்சோறுக்காக ஒரு மரணத்தை மறைப்பதாகக் காட்டுவது நெருடுகிறது. இதில் எவர் முகத்திலும் கவலையின் ரேகைகூட இல்லை. கிண்டலும் கேலியுமாக சந்தோஷமாக அதர்வாவை வம்பிழுக்கிறார்கள்.அவர்களுக்கு மனிதத் தன்மையே இல்லையா என்ன? தன்ஷிகா தன் வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார். அதர்வாவின் பாட்டியாக வரும் கச்சம்மா நடித்ததாகவே தெரியவில்லை. பாத்திரங்களுக்குப் பொருத்தமான கலைஞர்களை தேர்வு செய்தது பாலாவின் பலம். ஆனால், நாஞ்சில் நாடனின் வசனங்களைப் பேசும் அதர்வாவும், வேதிகாவும் உச்சரிக்கும் தமிழில் 2012ம் ஆண்டு வாடை அடிக்கிறது.

ஊர்மக்கள் அனைவரும் கால்நடையாக எஸ்டேட்டுக்குப் பயணமாகும் காட்சி கண்ணீர் வரவழைக்கிறது. ஆனால் மண்ணே போய்வரவா...காடே போய்வரவா போன்ற வைரமுத்துவின் வழக்கமான வரிகளைத் தவிர்த்திருக்கலாம். மற்றபடி வைரமுத்துவின் வரிகள் கவர்கின்றன. படத்தின் உயிர்நாடியாக இருந்திருக்கவேண்டிய ஜீ.வி.பிரகாஷ்குமாரின் இசை பாடல்களில் நன்றாக இருந்தாலும், பின்னணி இசையில் முற்றிலுமாக கைவிட்டுவிட்டது. அதிலும் அந்த மருத்துவமனை காட்சியில் காதுகளைக் கிழிக்கும் வயலின் ஓசை ஒருசோறு பதம் ரகம். தொடக்கத்தில் கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் திரைக்கதை, எஸ்டேட்டுக்குள் நுழைந்தவுடன் சரசரவென்று போகிறது . எஸ்டேட்டுகளின் உள்ள ‘லயன்’ வீடுகள் காலனி போல வரிசையாகவே இருக்கும். ஆனால் படத்தில் சமவெளியில் இருப்பது போன்றே மலைப்பகுதியிலும் குடிசைகள் இருக்கின்றன.

சேது,நந்தா மாதிரி படங்களில் தேவையற்ற காட்சிகள் இருக்காது. ஆனால் இந்தப் படத்தில் தேவையற்ற காட்சிகள் நிறைய ஆக்ரமிக்கின்றன. நாவலாசிரியர் பி.எச்.டேனியல், படத்தில் பரிசுத்தம் என்கிற பாத்திரமாக்கப்பட்டிருக்கிறார். எந்த மருத்துவர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலைகண்டு இறங்கி வருத்தப்பட்டு அதைப் பதிவு செய்தாரோ, அவர்களுக்காக சங்கம் அமைக்க பாடுபட்டாரோ அவர் கேலிப்பொருள் போல, மதமாற்றம் செய்ய மட்டுமே வந்தவர்போல சித்தரித்திரிக்கப்பட்டிருப்பது படைப்பு நேர்மையற்றது. பரிசுத்தமும் அவருடைய ஆங்கிலேய மனைவியும் ஆடிப்பாடும் காட்சி ரசனை குறைவான வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. கொள்ளை நோயில் தன்ஷிகா சாகக்கிடக்க, அவர்கள் அப்பத்தைத் தூக்கியெறிந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதுபோன்ற காட்சியமைப்புகள் துருத்திக்கொண்டு தெரிகின்றன. மருத்துவமும், கல்வியும் கிறிஸ்துவ மிஷனரிகள் இன்றி இந்தியாவில் இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது என்கிற வரலாற்று உண்மைக்கு மாறாக, கிறிஸ்துவர்கள் மதப்பிரசாரம் மட்டுமே செய்தார்கள். மருத்துவமே செய்யவில்லை என்கிறது பரதேசி. இந்தக் காட்சிகள் அனைத்துமே படத்தின் கதையோட்டத்துக்குத் தொடர்பே இல்லாமல் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது படத்தின் தரத்தை பாதாளத்திற்கு இட்டுச் செல்கிறது. ‘எரியும் பனிக்காடு’ நாவலில் எஸ்டேட் வேலைக்குச் செல்பவர்கள் சாதிய பாகுபாடு காரணமாக உள்ளூரில் கஞ்சிக்கு வழியின்றித் தவித்த தலித்துகள் என்பது மிக ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் ஒரு கடையில் பலகையின்மேல் அமர அதர்வாவுக்கு அனுமதி மறுக்கப்படும் ஒரே ஒரு காட்சியில் மட்டும் அப்படி ஓர் உணர்வை பார்வையாளருக்குத் தருகிறது பரதேசி. இப்படியான காட்சிகளால்தான் முற்பாதியை நிரப்பி அவர்கள் ஊர்விட்டு ஊர்சென்று எஸ்டேட்டுக்குச் செல்வதற்கான காரணங்களை அடுக்கி இருக்க வேண்டும். பிற்பாதியில் மிஷனரிகள் குறித்த காட்சிகளுக்குக் கொடுத்த நேரத்தை இத்தகைய காட்சிகளுக்குத் தந்திருந்தால், பரதேசியை எந்தத் தயக்கமும் இன்றி பாராட்டலாம். பாலாவின் நேர்மை மீதும் நமக்கு கேள்வி எழுந்திருக்காது. மொழிபெயர்ப்பு செய்த இரா.முருகவேளிடம் கதை உரிமையைப் பெற்ற மறுநாளில் இருந்து தொடர்புகளை துண்டித்துக்கொண்டார் என்று ச.பாலமுருகம் தெரிவித்திருப்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நாவலில் உள்ளது போல் கணவன் - மனைவியாக எஸ்டேட்டுக்கு வராமல் இயக்குநர் மனைவியை மட்டும் கிளைமாக்ஸில் வரவைத்திருப்பது புத்திசாலித்தனம். அதுவே படத்திற்கு பலம் சேர்க்கிறது.இப்படி சிற்சில மாற்றங்களைச் செய்தாலும் பரதேசியின் கதை ‘எரியும் பனிக்காடு’ நாவல்தான். அப்படியிருக்கையில் ’மூலக்கதை - பி.எச்.டேனியல்’ என்றலலவா டைட்டிலில் போட்டிருக்கவேண்டும்? அவருக்கு வெறும் நன்றி கார்டு போட்டுவிட்டு, கதை என்று பாலா தன் பெயரைப் போடுவது அதிர்ச்சியாய் இருக்கிறது. நாஞ்சில் நாடன் கதை, ஜெயமோகன் கதை எல்லாவற்றையும் இணைத்தார் பாலா. அதனால் கதை அவருடையதுதான் என்கிறார்கள் சிலர். இந்தப் படத்திற்கு எந்த வகையிலும் பொருந்தாத உதவாத அந்தக் கதைகளை ஏன் வலிந்து திணிக்கவேண்டும்?அது படைப்பு சுதந்திரம் என்றால், அது நாவலின் மையக்கருவுக்கு அப்படியே நேர் எதிரானதாக இல்லாமல் இருக்க வேண்டும். அதுபோலவே நாவலின் முன்னுரையில் வரும் ஆதவன் தீட்சண்யாவின் கவிதைவரிகளையும் மிகச் சிறிய மாற்றம் செய்து படத்தின் ஆரம்பத்தில் தன் பெயரில் பயன்படுத்தி இருப்பதையும் ஏற்கமுடியாது. தரமான படமாக வந்திருக்கவேண்டிய படம் பரதேசி. படைப்பு நேர்மை தவறியதால் படத்தை பாராட்ட முடியவில்லை.

ஈழத்துப் பெண்ணை தமிழகத்து மருமகளாக்கியதால் நாம் ‘நந்தா’வைக் கொண்டாடினோம். சேது படத்தில் ‘அக்ரஹாரத்தில் பாலியல் விடுதியா?’ என்று கொதிப்பார்கள். அப்போது நாம் கேட்கவில்லை ‘ஏன்? அப்ப மற்ற தெருக்களைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?’ என்று நாம் கேட்கவில்லை. ‘பார்ப்பனப் பெண் பாலியல் விடுதிக்கு வர வெட்கமாக இல்லை?’ என்று நாயகன் கேட்கும்போதும், ‘அப்படியென்றால் மற்ற சாதிப் பெண்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்’’ என்று நாம் கேட்கவில்லை. ஒரு முழு பாட்டையுமே பாலா சமஸ்கிருதத்தில் வைத்தபோதும் நாம் கேள்வி கேட்கவில்லை. சேதுவின் அழகியலுக்காவும், கலை நேர்த்திக்காகவும் வாய்மூடி இருந்தோம். வெகுஜனபத்திரிகைகள் போற்றிப் புகழ்ந்த சேது குறித்து ‘நந்தன்’ இதழ் மட்டுமே இந்தக் கேள்விகளை அப்போது முன்வைத்தது. நாம் கேட்கத் தவறிய கேள்விகள்தான் பின்னாளில் உருமாறி மாற்றுத்திறனாளிகள் இவ்வுலகில் வாழத் தகுதியற்றவர்கள் என்று தீர்ப்பு கூறிய ‘நான் கடவுளா’கவும், இட ஒதுக்கீட்டுக்கு எதிரானதாகவும் மாட்டுக்கறி உண்பவர்களை இழிவானவர்களாகக் காட்டும் ஆதிக்க சாதித் திமிராக ‘அவன் - இவன்’ ஆகவும், இப்போது உச்சகட்டமாக ‘பரதேசி’யாகவும் உருமாறி நிற்கிறது. இதை உலக சினிமா, உள்ளூர் சினிமா என்றெல்லாம் கொண்டாடுவதன் மூலம் பி.எச்.டேனியலையும் எரியும் பனிக்காட்டையும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும் கொச்சைப்படுத்தாமல் இப்போதாவது கேள்வி கேட்போம்.