Tuesday, November 15, 2011

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக மாற்றம், பரமக்குடி தலித் படுகொலைகள் - எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கல்வியாளர்கள் கண்டன ஆர்பாட்டம்


அன்புடையீர்,

அறிவுலகத்தின் மீது கடுமையான தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் தருணம் இது. அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மருத்துவமனையாக்கும் தமிழக அரசின் அறிவிப்பு நம் மனங்களில் நெருப்பை அள்ளிக் கொட்டியிருக்கும் நிலையில், கொழுந்து விட்டு எரியும் அந்தத் தீயை அணைக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? நம் எதிர்ப்பை தெரிவிக்க ஆங்காங்கே பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நம் கருத்துக்களை எடுத்து வைத்தாலும், நாம் ஒன்று கூடி நமக்கு நேர்ந்த இந்த அவமானத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பது கடமையல்லவா?

தமிழக அரசு தலித்துகளின் உயிரை கிள்ளுக்கீரையாய் நினைத்து பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பலியானோர் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் மட்டுமே வழங்கி, தலித்துகளின் உயிரை மலிவெனக் கருதுவதை வெளிப்படுத்தியது. கண் துடைப்பு விசாரணை கமிஷன் ஒன்றை நிறுவியிருக்கும் தமிழக அரசின் செயல், பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் செயல். தவறு செய்பவரும், தண்டிப்பவரும் ஒருவரேயெனில் நியாயமும் நீதியும் எப்பக்கம் செல்லும் என்பது திண்ணம். ஆகவே, சி.பி.ஐ விசாரணை கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கக் கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரக் கோரியும் எழுத்தாளர்களாகிய நாம் ஒடுக்கப்ப்ட்ட மக்களின் குரலாய் ஒலிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்காகவும், அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. நவம்பர் 20, ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே திரள்வோம் நண்பர்களே! நம் எதிர்ப்பை தெருவில் இறங்கி முழங்குவோம். தமிழ்நாடெங்கிலும் இருந்து தங்கள் கடமையெனக் கருதி நண்பர்கள் புறப்பட்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளுமாறு அழைக்கிறோம். தனிநபராகவோ, தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பிலோ எப்படியாயினும், தங்கள் பங்கேற்பு இன்றியமையாதது!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் ஒலிக்கப் போகும் நம் கண்டனக் குரல்கள் அறிவுலகின் மீது விடப்பட்டுள்ள சவாலின் எதிர்வினை.

நம் எதிர்ப்புக் குரலின் வலிமையில் கோட்டைக் கதவுகள் திறந்து கொள்ளட்டும்!

சென்னை நோக்கி அணிவகுத்து வாருங்கள்!

நண்பர்கள் இதை உங்கள் முகநூல் பக்கத்திலும் வலைப்பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். மின்னஞ்சல் மூலம் மற்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கவும் வேண்டுகிறோம்.

இப்படிக்கு

எஸ்.வி.ராஜதுரை, இன்குலாப், வ.கீதா, பிரின்ஸ் கஜேந்திர பாபு, எஸ்.எஸ்.ராஜகோபாலன், அழகிய பெரியவன், அரங்க மல்லிகா, சந்திரா, தி.பரமேஸ்வரி, கம்பீரன், விஷ்ணுபுரம் சரவணன்,கவின் மலர்
தொடர்புக்கு : 98411 55371, 93603 33336, 94437 54443 

Wednesday, November 09, 2011

ஆசான்களின் ஆசான் தாஸ் வாத்தியார்!

படம் : என்.விவேக்
தூரிகையில் உயிர்த் தொழிற்சாலை நடத்தும் ஆதி மூலம், மணியம் செல்வன், டிராட்ஸ்கி மருது போன்ற முக்கியமான ஆளுமைகளின் ஆசான்... சி.ஜே.ஆன்டனிதாஸ்!
அவரது தூரிகையின் மேல் கொண்ட தீராக் காதலின் சாட்சியாக 'தி கேலரி ஆஃப் சி.ஜே.ஆன்டனிதாஸ்’ என்ற பெயரில் அவரது ஓவியங்கள் அடங்கிய தொகுப்பை அவரது மகள் அனிதா தாஸ் உருவாக்கி இருக்கிறார்.

டிராட்ஸ்கி மருதுவிடம் ஆன்டனிதாஸ் குறித்துக் கேட்டபோது, குரலில் பெருமிதம் பொங்கி வழிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்...

''தாஸ் வாத்தியார் என்றுதான் அவரை அழைப்போம். ரியலிஸ்ட்டிக் ஓவியங்களில் அவர்தான் எங்களின் பிதாமகன். ஏறத்தாழ 500 ஓவியர்களை உருவாக்கிய முக்கியமான ஆளுமை. மூன்று ஆண்டுகள் அவருடைய மாணவனாக இருந்தேன். சென்னை ஓவியக் கல்லூரிக்கும் அவருக்கும் 45 ஆண்டு கால உறவு. எளிய குடும்பத்தில் பிறந்தவர். உலகப் புகழ்பெற்ற வில்லன் நடிகர் வின்சென்ட் ப்ரைஸ் இந்தியாவுக்கு வரும்போது, தாஸ் வாத்தியாரின் ஓவியங்களை வாங்கிச் செல்வார். நடிகர் சந்திரபாபு, தான் கஷ்டப்பட்ட காலத்திலும்கூட அவருடைய ஓவியத்தைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தார். மீனவர்களின் வாழ்க்கையை மிகத் தத்ரூபமாக ஓவியங்களில் படைத்திருக்கிறார். அவருடைய ஓவியங்கள் இந்தியாவின் மிக முக்கியமான மியூஸியங்கள், ஆளுநர் மாளிகைகள், நாடாளுமன்றத்தில் எல்லாம் அலங்கரிக்கின்றன. இந்தியாவில் ஓர் ஓவியத் தலை முறையையே அவர் உருவாக்கினார் என்பேன்!'' என்று சிலிர்க் கிறார் மருது.

காத்திருக்கும் பெண்ணின் கண் கள், இசைக் கருவி வாசிக்கும் பெண்கள், உழைக்கும் மாந்தர்கள், காற்றோடும் மழையோடும் அல்லா டும் மீனவ மக்கள், தாயின் அணைப்பில் தன்னை மறக்கும் குழந்தை, கருணையும் வலியும் வேதனையும் நிரம்பிய இயேசு கிறிஸ்து, கோட்டோவியமாக உருமாறி இருக்கும் மாடல்கள் என்று ஒவ்வொரு விதத்திலும் அசரவைக்கின்ற ஓவியங்கள். கலை நேர்த்தியோ அதிஅற்புதம்!

40 ஆண்டுகளுக்கும் மேல் பேராசிரியராக இருந்த ஆன்டனிதாஸ் ஓய்வு பெறுவதற்கு முன் சென்னை ஓவியக் கல்லூரியின் முதல்வராக இருந்தார். அவர் இறந்த சமயம் அவர் இறுதியாக வரைந்திருந்த ஓவியம் ஈரம்கூடக் காயாமல் இருந்ததை நெகிழ்வோடு நினைவுகூர்கிறார் அனிதா தாஸ்.

''அப்பாவின் 75-வது பிறந்த நாளுக்குப் பரிசாக இந்தத் தொகுப் பைப் பரிசளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அவர் காலமாகி மூன்று மாதங்கள் கழித்துத் தான் தொகுப்பை என்னால் உருவாக்க முடிந்தது. தனது ஓவியங்களைப் புத்தகமாகப்  பார்க்கும்போது அப்பாவின் முகத்தில் தோன்றும் கண நேரப் புன்னகையை நான் இழந்துவிட்டேன். நான் பார்க்காத அந்தப் புன்னகை என் வேதனையின் வெம்மை யைத் தினம் தினம் அதிகரிக் கிறது!'' - சட்டென மௌனிக் கிறார் அனிதா.
இயேசுவின் ஒவ்வொரு ஓவியத் தையும் வரைவதற்கு முன் ஆன்டனிதாஸ் தன் மனதுக்குள் ஒரு சிலுவை சுமந்திருப்பாரோ என்று எண்ணும் அளவுக்கு இவர் வரைந்த இயேசுவின் முகபாவனைகள் விசேஷமானவை. தலையில் முள்கிரீடம் சுமந்து, கை கால்களில் ஆணி அறையப்பட்டு, பாரச் சிலுவை சுமக்கும் இயேசுவின் துயரத்தில் அத்தனை அடர்த்தி. ''இயேசுவின் ஓவியங்களை வரைவதற்கு முன்பு மனதை ஒருங்கிணைக்க தியானம் செய்வார் அப்பா. அப்போதுதான் இயேசுவின் துன்பங்களை மனதில் உணர்ந்து அதைப் பாவமாக ஓவியத்தில் வெளிப் படுத்த முடியும் என்பார்'' - மெல்லிய குரலில் சொல்கிறார் அனிதா.

தொகுப்பில் உள்ள நான்கு பென்சில் கோட்டோ வியங்களை எடுத்துக் காட்டியபடியே, ''இவை கல்லூரியில் அவரது அறையின் குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்தவை என்றால் நம்புவீர்களா? இந்தத் தொகுப்பை உருவாக்குவதில் எனக்குப் பெருமளவில் உதவியவர் என் நண்பர் ஸ்வரூப். ஓவியர் மணியம் செல்வனுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

அப்பாவின் ஓவியங்களை வைத்து நடந்த கண்காட்சியில், 10 நாட்களும் தினமும் ஒருவர் வந்து ஓர் ஓவியத்தின் முன்னால் நெடுநேரம் நிற்பார். இசைக் கருவிகளை வைத்து அப்பா வரைந்த ஓவியத்தின் முன் நின்று பார்த்த ஒரு பெண், பிறர் பார்ப்பது குறித்துக் கவலைப்படாமல் நெடுநேரம் பாடினாள். அப்பாவின் ஓவியங்கள் மனித மனங்களுக்குள் செய்யும் வித்தைகளை நான் இன்னும் ஆழமாக உணர்ந்த தருணங்கள் அவை!'' - சிலிர்ப்புடன் முடிக்கிறார் அனிதா