Friday, March 27, 2020

கொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்


மார்ச் 17,2020 அன்று திருத்தப்பட்டது

கோவிட் -19 வைரஸ் (நாவல் கரோனாவைரஸ் என்றும் அழைக்கப்படுகிறது) , உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization (WHO)) தகவலின்படி அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் தற்போது பரவிவிட்டது.
ஜனவரி 31, 2020 அன்று கோவிட் -19 பரவலை உலகளவிலான பொது சுகாதார அவசரநிலை என அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். உலகளவிலான இடர் மதிப்பீட்டை பிப்ரவரி 28 அன்று “அதிக” ஆபத்து என்பதிலிருந்து “மிக அதிக” ஆபத்து  எனவும் உயர்த்தியது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 11 அன்று இதை உலகளாவிய நோய்த் தொற்றாக பிரகடனப்படுத்தியது எனவும் செய்திகள் வெளியாகின.
Trip.com தரும் தகவலின்படி, பெருமளவிலான நாடுகள் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன அல்லது முற்றிலும் தடைவிதித்திருக்கின்றன. உலகளாவிய அளவில் வைரஸின் பரவல் எப்படியுள்ளது என்பதைக் காட்டும் உலக சுகாதார நிறுவனத்தின் வரைபடத்தை இங்கு காணலாம். தவறாது குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போதைய மாற்றங்களுடன் இந்த வரைபடம் பதிவேற்றப்படுகிறது.
மாறிக்கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு ஏற்பவும் புதிய தகவல்கள் வரும்போதும் அவை தொடர்பான திருத்தப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்களும், வைரஸ் பரவல் குறித்த செய்திகளும் உரிய அதிகாரிகளால் வெளியிடப்படும்.  கொரோனா கிருமி பரவல் குறித்த செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் உடனுக்குடன் தகவல்களைப் பெறுவதற்கு உலக சுகாதார நிறுவனம் (WHO), ஐக்கிய அமெரிக்காவில் இயங்கும் நோய் கட்டுப்பாட்டு மையங்கள் (Centers for Disease Control (CDC)) மற்றும் இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை (Public Health England (PHE)) ஆகியற்றின் செய்திக்குறிப்புகளை பின் தொடரவும்.
கோவிட் – 19 தொற்றுப் பரவல் குறித்த செய்திகளை சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் பின்வரும் பாதுகாப்புத் தகவல்களை பின்பற்றி, அண்மைய மாற்றங்களையும், கட்டுப்பாடுகளையும் குறித்த தற்போதைய செய்திகளை அறிந்துகொள்ளுங்கள். நிலைமைகள் உடனுக்குடன் மாறிக்கொண்டே இருப்பதால், உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ செய்தி சேகரிக்கும்பொழுது, குறைந்தபட்ச கால இடைவெளிக்குள்ளோ அல்லது உடனடியாகவோ கூட  அச்செய்தி மாறுதலுக்குட்பட்டது என்பதை எச்சரிக்கையோடு நினைவில் வையுங்கள்.
செய்தி சேகரிக்குமுன்
நோய் கட்டுப்பாட்டு மையங்களின் தகவல்படி முதியவர்களுக்கும், மோசமான உடல்நிலை கொண்டவர்களுக்குமே அதிக ஆபத்து. அத்தகையோர் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடவேண்டாம். கர்ப்பிணியாக இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்.
·        ஒரு சில தேசிய இனங்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் நடந்தன என்கிறது BuzzFeed செய்தி. இதை மனதில் வைத்துதான் செய்தி சேகரிக்கும் பணிக்கு ஊடகவியலாளர்களை தேர்வு செய்யவேண்டும்.  அதிகரித்திருக்கும் பகைமையையும் நிலவும் தவறான அபிப்ராயங்களையும் கூட   கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
·        பணிநிமித்தம் நீங்கள் செல்லப்போகும் எந்த நிகழ்வும்  நடைபெறப் போகிறதா இல்லையா என்பது குறித்து தொடர்ந்து கண்காணித்தவாறு இருங்கள். ஏனெனில் பல்வேறு நாடுகளிலும்  குறிப்பிட்ட அளவுக்கு மேல் மக்களின் கூடுகை தடைசெய்யப்பட்டிருக்கிறது.
·        தவறான தகவல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென உலக சுகாதார நிறுவனம் குறிப்பாக எச்சரித்திருக்கிறது.  இது குறித்து பிபிசியும் விசேஷமாக செய்தி வெளியிட்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தில் கட்டுக்கதைகள் குறித்த எச்சரிக்கை வழிகாட்டி ஒன்றும் உள்ளது.
·        ஒருவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாட்டுக்கு நீங்கள் பயணிக்கிறீர்கள் என்றால், நீங்கள் செல்லும் இடத்திற்குத் தகுந்தாற்போல தேவையான தடுப்பூசிகளும் நோய்த் தடுப்பு முறைகளும் உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.  காய்ச்சலுக்கான தடுப்பூசியை எடுத்துக்கொள்வது குறித்துப் பரிசீலியுங்கள். இல்லையெனில் சாதாரண காய்ச்சல் வந்தாலும் கூட நீங்கள் அதன் அறிகுறிகளைக் கண்டு குழம்பிவிடநேரிடும்.
·        ஒருவேளை பணியில் இருக்கும்போது உங்களுக்கு உடல்நலம் குன்றினாலோ, தனித்திருத்தல் தேவையாக இருந்தாலோ அல்லது தனிமைப்படுத்துதலும் கட்டாயமாக உள்ளிருத்தலும்  தேவைப்படும் இடத்திற்குச் செல்ல நேர்ந்தாலோ, அங்கே அந்த இடத்தில் உங்களுக்குத் தேவையான உதவியையும் ஆதரவையும் வழங்கும் வகையில் உங்கள் நிர்வாகத்திடம் அதுகுறித்து என்ன திட்டம் இருக்கிறது என விவாதியுங்கள்.
·         உங்களோடு எவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு போகலாம் என பாருங்கள்.  மக்கள் பீதி அதிகமாகி முன்கூட்டியே எல்லாவற்றையும் கடைகளில் வாங்கி வைப்பதால், முகக்கவசம், ஹேண்ட் சானிடைஸர்கள், சோப்,  பெட்டியில் அடைக்கப்பட்ட உணவுகள், டாய்லெட் பேப்பர் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
·        நீங்கள் செல்லுமிடத்தில்  தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயுங்கள். இன்றைய சூழலில் சிப்ரஸ்ரீயூனியன் மற்றும் உக்ரைனில் தனித்தனியான வன்முறைச் சமபவங்கள் நடந்திருக்கின்றன.  அதிகரித்திருக்கும் கோவிட்-19 தொற்று காரணமாக இராக்கிலும் ஹாங்காங்கிலும் போராட்டங்கள் நடந்துள்ளன.
·        கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து, குறிப்பாக சிகிச்சைப்பகுதியிலிருந்தோ  தனித்திருத்தல் அல்லது தனிமைப்படுத்துதல் நிகழும் பகுதியிலிருந்தோ செய்தி சேகரிக்கிறீர்கள் எனில் , அது உங்களுக்குள் ஏற்படுத்தக்கூடிய உளவியல் தாக்கத்தை கவனத்தில் கொள்ளுங்கள். அதிர்ச்சிகரமான  சூழல்களில் எவ்வாறு ஊடகவியலாளர்கள் பணியாற்றுவது என்பது குறித்த குறிப்புகள் the DART Center for Journalism and Trauma இணையதளம் மூலம் கண்டறியலாம்.
·         இத்தகைய பகுதிகளுக்குச் செல்லும்போது குடும்ப உறுப்பினர்களுக்கு அது குறித்த கவலையும் மன அழுத்தமும் இருக்கக்கூடும்.  இதில் உள்ள ஆபத்தையும் அவர்களது அக்கறையையும் குறித்து அவர்களோடு உரையாடுங்கள். தேவைப்பட்டால், உங்கள் குடும்பத்தினருக்கும் உங்கள் நிறுவனத்தின் மருத்துவ ஆலோசகர்களுக்கும் இடையிலான ஓர் உரையாடலுக்கு ஏற்பாடு செய்யுங்கள். பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள எவரையும் வெளியேற்ற தயார்நிலையில் சில நிறுவனங்களும் முதலாளிகளும் உள்ளது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
டிஜிட்டல் பாதுகாப்பு
  • உங்கள் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து கவனமாக இருங்கள். இணைய பாதுகாப்பு நிறுவனமான  Norton – இன் கூற்றுப்படி மோசடி செய்பவர்களும், ஹேக்கர்களும் பல தனிநபர்களை குறிவைத்து கோவிட் -19 குறித்த போலியான மின்னஞ்சல்களை அனுப்புகிறார்கள்.
·        தனிநபர்களைக் குறிவைத்து பணம்பறிக்கும் COVID-19 Tracker போன்ற ஆப்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

·        சமூக ஊடகங்களில் கோவிட்-19 குறித்த எந்த சுட்டியையும் க்ளிக் செய்யும் முன் யோசியுங்கள். ஏனெனில் அவற்றில் சில, நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தை மால்வேர் மூலம் பாதிக்கும் இணையதளங்களுக்குச் செல்ல வழிகாட்டுவதாக இருக்கக்கூடும்.
·        சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடுகளில் இருந்து பணியாற்றும்போது அதன் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.  கோவிட்-19 தொற்று குறித்து நீங்கள் தரும் செய்திகள் கண்காணிக்கப்படலாம். சில அரசுகள் தொற்றுப் பரவல் குறித்த செய்திகளை மறைக்க எண்ணுவதால் ஊடகங்களை தணிக்கை செய்யவும், மீறி செய்தியை வெளியிட்டால், அதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புண்டு.
·        கோவிட் -19 குறித்த கட்டுரைகளை எழுதிய பத்திரிகையாளர்கள், சமூக ஊடகங்களில் இணையத்தில் அவதூறு செய்யப்படவும் ட்ரோல் செய்யப்படவும் கூடும்.
பயணத் திட்டம்
·        உங்கள் பயணக் காப்பீட்டுத் திட்டத்தை சரிபாருங்கள். செல்லும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, சில அரசாங்கங்கள் பயண ஆலோசனைகளை பல கட்டங்களில் அறிவித்துள்ளன.  பிரிட்டிஷ் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம், யு.எஸ் வெளியுறவுத் துறை, மற்றும் பிரெஞ்சு வெளியுறவுத் துறை  ஆகியவையும் ஆலோசனைகளை அறிவித்துள்ளன. கோவிட்-19 தொடர்பான பயணப்பாதுகாப்பைப் பெறுவது சாத்தியமில்லாமலும் போகலாம்.
·        நீங்கள் செல்ல நினைத்துள்ள இடத்துக்குப் பயணம் செய்வது தற்பொழுதோ அல்லது நீங்கள் செல்லவேண்டிய தேதிகளிலோ தடை செய்யப்பட்டிருக்கிறதா என பாருங்கள்.  வெளிநாட்டவர்களுக்கு கட்டுப்பாடுகளோ கூடுதல் தடைகளோ விதிக்கும் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
·        நீங்கள் செல்லும் மைய நகரங்களில், குறிப்பிட்ட பகுதிகளில் அல்லது நாடு முழுமைக்கும் கூட  லாக் டௌனுக்கோ அல்லது குறைந்த கால அவகாசத்தில் தனிமைப்படுத்துதலோ அல்லது முன்னறிவிப்பின்றி தனிமைப்படுத்துதலோ நிகழக்கூடும் என்பதை மனதில் வைத்து சாத்தியமான மாற்றுத் திட்டங்களையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
·        சாலைவழி எல்லைகள் மூடப்பட்டுவருவது அதிகரித்துள்ளதை கவனத்தில் வையுங்கள். இன்னும் கூடுதலாக எல்லைகள் மூடப்படுவது நடக்கலாம். இவையெல்லாம் உங்களுடைய மாற்றுத் திட்டத்தில் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படவேண்டியவை.
·        உடல்நிலை சரியில்லாதபோது பயணம் செய்யாதீர்கள். பல சர்வதேச, உள்நாட்டு விமான நிலையங்களும் பிற போக்குவரத்து மையங்களும் பயணிகளிடம் கட்டாய உடல்நல பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள்.
·        பயணம் ரத்து செய்யப்பட்டால், முழு பணமும் திரும்பப் பெறும் வகையிலான விமான பயணச் சீட்டுகளையே முன்பதிவு செய்யுங்கள். சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின்படி (IATA) பல விமான போக்குவரத்து நிறுவனங்களும் கோவிட் -19 பரவலால் குறிப்பிடத்தகுந்த வகையில் பொருளாதார நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளன. ஐரோப்பாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனமான ஃப்ளைபீ
(FlyBe) அண்மையில் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறது.
·        பல இடங்களுக்குமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அண்மைய வாரங்களில் உலகளவிலான பயண வாய்ப்புகள் குறைந்திருப்பதை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருங்கள்.
·        நீங்கள் செல்லுமிடத்திற்கான அண்மைய விசா நிலவரங்களை அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில் பல நாடுகள் பயணத்திற்கென ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களையும்கூட நிறுத்திவைத்திருக்கின்றன.
·        நீங்கள் செல்லும் நாட்டில் உங்களுக்கு கோவிட்-19 தொற்று இல்லை  என நிரூபிக்கும் மருத்துவச் சான்றிதழ் தேவைப்படுமா என அறிந்துகொள்ளுங்கள். சில எடுத்துக்காட்டுகளை இங்கே காணலாம்.
·        உலகெங்கிலுமுள்ள விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் உடல்நல பரிசோதனை நடவடிக்கைகளையும் உடல்வெப்பத்தை பரிசோதிக்கும் சோதனை மையங்களையும் கணக்கில்கொண்டு உங்கள் பயணத்திற்கு அதிக நேரம் ஒதுக்கி நெகிழ்வானதாக வைத்திருங்கள். ரயில் நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும், நீண்ட தூர பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும்.
·        உங்கள் வருகை குறித்த எந்த மாற்றத்தையும் எந்த நேரமும் எதிர்பார்த்து எச்சரிக்கையோடு இருங்கள்.  சவுதி அரேபியா, ரஷ்யா போன்ற நாடுகள் சில நாடுகளைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்ட விமான நிலையங்களிலும் முனையங்களிலும் மட்டுமே அனுமதிக்கின்றன.
·        நீங்கள் செல்லும் நாட்டில் உள்ள நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து கட்டுப்பாடுகளை உள்நாட்டு செய்திகள் மூலமாகவோ அந்நாட்டிலுள்ள தனிநபர்கள் மூலமாகவோ தொடர்ச்சியாக கண்காணித்தபடி இருங்கள்.
கிருமி தொற்றை தவிர்த்தல்
பல நாடுகளும் இப்போது சமூக விலக்கத்தை (Social distancing)  நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கின்றன.  மருத்துவமனைக்கோ, முதியவர்களுக்கான பராமரிப்பு இல்லத்திற்கோ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கோ, விலங்குச் சந்தைக்கோ அல்லது பண்ணைக்கோ செல்ல நேர்ந்தால், முன்கூட்டியே அங்குள்ள சுகாதார ஏற்பாடுகள் குறித்து கேட்டறியுங்கள். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அங்கு செல்லவேண்டாம். கிருமித் தொற்றை தவிர்க்க சில பரிந்துரைகள்:
·        சுவாசக் கோளாறு நோய்க்கான அறிகுறிகளான இருமல், தும்மல் போன்றவை இருந்தால், அவர்களிடமிருந்து விலகி இருக்கவும் (குறைந்தபட்சம் 6 அடி தொலைவு)
·        உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கும் மீண்டும் திரும்புவதற்குமான போக்குவரத்தை திட்டமிடுங்கள். பொதுப் போக்குவரத்தை  கூட்டமான நேரங்களில் பயன்படுத்துவதை தவிருங்கள். இறங்குகையில் மறக்காமல் கைகளுக்குஆல்கஹால் ஜெல்லை பயன்படுத்துங்கள். (குறைந்தபட்சம் 60 % எத்தனால் அல்லது 70% ஐஸோப்ரோபனால் உள்ள ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஹேண்ட் சானிடைஸர்களை பயன்படுத்துமாறு CDC பரிந்துரைக்கின்றது) உங்கள் சொந்த வாகனத்தில் பயணிக்கிறீர்கள் என்றால், வாகனத்தில் ஒருவருக்கு கிருமித் தொற்று ஏற்பட்டாலும் அதில் பயணிக்கும் பிறரையும் தொற்றும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
·        கிருமித் தொற்று அறிகுறிகளோடு இருக்கும் ஒருவரையோ, முதியோரையோ, மோசமான உடல்நிலை கொண்டவர்களையோ, அறிகுறிகளோடு இருக்கும் தனிநபர்களுக்கு நெருக்கமானவர்களையோ, கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களையோ அல்லது அதிக ஆபத்தான பகுதிகளில் உள்ள பணியாளர்களையோ பேட்டி எடுக்கும்பொழுது பத்திரிகையாளர்கள் எச்சரிக்கையோடு ‘பாதுகாப்பான’ தொலைவில் இருந்துகொள்வது குறித்து கவனத்தோடு இருக்கவேண்டும்.
·        க்ளிப் மைக்குகள் பயன்படுத்துவதைத் தவிர்த்து பாதுகாப்பான தொலைவில் நின்று திசை ஒலிவாங்கிகளை (directional microphones) பயன்படுத்துங்கள்.  அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் பணியாற்றும் செய்தியாளர்கள் தினமும் ஒலிவாங்கியை மூடியிருக்கும்  பஞ்சு போன்ற பகுதியை சுடுநீரில் கழுவுகிறார்கள்.
·        வெந்நீரில் உங்கள் கைகளை சோப் கொண்டு  அடிக்கடி கழுவுங்கள். வெந்நீரும் சோப்பும் கிடைக்கவில்லையெனில் நோயெதிர்ப்பு பாக்டீரியா ஜெல் அல்லது டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். ஆனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சோப்பையும் வெந்நீரையும் கொண்டு கைகளை கழுவிவிடுங்கள்.
·        மருத்துவ சிகிச்சை நடக்கும் பகுதிகள் போன்ற கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பான கையுறைகளை பயன்படுத்துங்கள். பிற தனிநபர் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களான  பாடிசூட் எனப்படும் முழு உடலுக்குமான பாதுகாப்புக் கவச உடையும் முகம் முழுமைக்குமான மாஸ்க்கையும் அணிவது அவசியம் ஆகலாம்.
·        அதிக தொற்று அபாயம் நிறைந்த பகுதிகளுக்குச் சென்று திரும்பும் செய்தியாளர்கள் தங்கள் உடைகளை அதிக வெப்பத்தில் உள்ள நீரைக்கொண்டு துவைப்பதாகச் சொல்கிறார்கள்.
·        சமைத்த இறைச்சிகளையும் முட்டைகளையுமே உட்கொள்ளுங்கள்.
·        தொற்று பாதிப்பு உள்ள சுகாதார மருத்துவமனைகளுக்கோ, சந்தைகளுக்கோ, பண்ணைகளுக்கோ  பணிநிமித்தம் செல்ல நேர்ந்தால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய காலணிகளையோ அல்லது நீர்புகாத ஓவர்ஷூக்களையோ பயன்படுத்துங்கள். அந்த இடத்தைவிட்டு வந்தபின்னர், இரண்டையுமே நன்கு துடைத்து/ அலசவேண்டும். நீர்புகாத ஓவர்ஷூக்களை பயன்படுத்தினால், பணிமுடிந்து இடத்தைவிட்டுச் செல்லுமுன் அவை தூக்கியெறியப்படவேண்டும். மீண்டும் அவற்றை பயன்படுத்தக் கூடாது.
·        கோவிட்-19 இருக்கக்கூடிய எந்த இடத்தில் நீங்கள் இருந்தாலும், எப்பொழுதும் எல்லா உபகரணங்களையும் துரிதச் செயல்பாடுகொண்ட மெலிசெப்டால்  போன்ற நுண்ணுயிர்கொல்லிகளைக் கொண்டு சுத்தம் செய்தபின் முழுமையான கிருமி நீக்கமும் அவசியம். எல்லா உபகரணங்களையும் மீண்டும் எடுத்துவருகையில் முழுமையான கிருமிநீக்கம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள். உபகரணங்களுக்கு உரியவர்கள் இதை முன்கூட்டியே அறிந்திருப்பதையும் உறுதி செய்யுங்கள்.
·        எப்பொழுதும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லும் முன்னும் , அங்கு இருக்கும்பொழுதும், அங்கிருந்து புறப்பட்டபின்னும் உங்கள் கைகளை சுடுநீரும் சோப்பும் கொண்டு கழுவவேண்டும் என்பது கட்டாயம்.
·        உங்களுக்கு ஒருவேளை தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றினால், குறிப்பாக காய்ச்சலோ, மூச்சுவிடுவதில் சிரமமோ இருந்தால், எவ்வாறு மருத்துவ சிகிச்சை பெறுவது என பரிசீலனை செய்யுங்கள். அடுத்தவருக்கு தொற்று ஏற்படாமல் இருக்க, சில அரசு சுகாதார நிறுவனங்கள் சுய-தனித்திருத்தலை அறிவுறுத்தக்கூடும். கடுமையான பாதிப்புக்குள்ளான நாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள் எனில், கூட்டமான சிகிச்சை மையங்களில் கோவிட்-19 தொற்று உள்ள நோயாளிகளை எதிர்கொள்ள நேரிடும் அபாயம் இருக்கிறது. அது உங்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.
·        உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலையும் உத்தரவுகளையும் எப்பொழுதும் பின்பற்றுங்கள்.

நீங்கள் சீனாவிலிருந்து இயங்குபவர் எனில்:
·        பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் ஈரச் சந்தைகளுக்கோ பண்ணைகளுக்கோ செல்ல வேண்டாம். விலங்குகளுடனான (உயிருள்ளது அல்லது உயிரில்லாதது) எந்த நேரடித் தொடர்பையும் தவிருங்கள். விலங்குகளின் கழிவுகளால் கிருமித்தொற்று ஏற்பட  வாய்ப்புள்ள இடங்களைத் தொடாதீர்கள். மருத்துவ சிகிச்சைக்கான இடம், சந்தை அல்லது பண்ணை போன்றவற்றில் ஒருபொழுதும் உங்கள் உபகரணங்களை தரையில் வைக்காதீர்கள்.  துரிதமாகச் செயல்படும் மெலிசெப்டால் போன்ற நுண்ணுயிர்கொல்லிகளைக் கொண்டு உங்கள் உபகரணங்களைத் துடைத்தபின் முழுமையான கிருமிநீக்கம் செய்யுங்கள்.
·        விலங்குத் தொழுவத்தையோ, பெரிய விலங்குகள் அல்லது  காட்டுவிலங்குகளோ அடைத்துவைக்கப்பட்டிருக்கும் கூண்டையோ தொடுவது வேண்டாம்; அவற்றுக்குள் செல்வதும் வேண்டாம்.  ஒருவேளை ஏதேனும் விலங்கு உங்களைக் கடித்துவிட்டால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள்.
·        விலங்குகளைத் தொடும்போது எதையாவது உண்ணுவதோ குடிப்பதோ கூடாது. அதுபோலவே சந்தைக்கு அருகிலோ பண்ணைக்கு அருகிலோ இருக்கும்போதும் இவற்றைச் செய்யவேண்டாம்.
முகக் கவசம்
நீங்கள் கோவிட் -19 தொற்றுக்கான அறிகுறிகளோடு இல்லையெனில், முகக் கவசம் அணியத் தேவையில்லை  எனினும், உள்ளூர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டாலோ, மருத்துவமனை போன்ற அதிக தொற்று அபாயம் உள்ள இடங்களில் இருந்தாலோ, கோவிட்-19 தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபரை கவனித்துக்கொள்பவராக இருந்தாலோ முகக்கவசம் அணியலாம் என CDC மற்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆகியவை ஒப்புக்கொள்கின்றன. முகக்கவசம் அணிகிறீர்கள் என்றால், பின்வரும் அறிவுரைகளை பின்பற்றுங்கள்:
·        தேவையெனில், தரமான சர்ஜிக்கல் மாஸ்க்குக்கு பதிலாக, N95 முகக்கவசம் (அல்லது FFP2 / FFP3) அணிய பரிந்துரைக்கப்படுகிறது.
·        மூக்குக்கு மேலே தொடங்கி தாடைக்குக் கீழேவரை பாதுகாப்பாக மறைக்கப்பட்டிருக்கிறதா என உறுதிசெய்துகொள்ளவும். முகத்தில் உள்ள ரோமங்கள் நீக்கப்பட்டு முறையாக பராமரிப்பதை உறுதி செய்யவும்.
·        முகக்கவசத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும். பட்டைகளைப் பிடித்தே அதை எடுக்கவும். முன்பகுதியை ஒருபோதும் தொடாதீர்கள்
·        முகககவசத்தை நீக்கியபின், எப்பொழுதும் சோப்பையும் சுடுநீரையும் கொண்டு கைகளைக் கழுவவும். அல்லது ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட ஹேண்ட் சானிடைஸரைக் (குறைந்தபட்சம் 60% எத்தனால் அல்லது 70% ஐஸொப்ரொபனால் உள்ள) கொண்டு கழுவவும்.
·        முகக்கவசம் ஈரமாகவோ அல்லது ஈரப்பதத்துடனோ மாறிவிட்டால், அதைத் தூக்கியெறிந்துவிட்டு புதிய நன்கு உலர்ந்த முகக்கவசத்தை அணியவேண்டும்
·        ஒருபோதும் முகக்கவசத்தை மீண்டும் ஒருமுறை பயன்படுத்தக்கூடாது. மூடப்பட்ட குப்பைத்தொட்டிக்குள் அல்லது பைக்குள் பயன்படுத்தப்பட்ட முகக்கவசத்தை போட்டுவிடவும்.
·        முகக்கவசம் அணிவது என்பது தனிப்பட்ட பாதுகாப்பில் ஒரு பகுதிதான். வாய், மூக்கு, கண்கள் ஆகியவற்றை தொடாமலிருக்கவும், அடிக்கடி கைகளைக் கழுவவும் வலுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
·        பஞ்சு அல்லது  கட்டுபோட பயன்படும் காஸ் துணி கொண்டு தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் எந்தச் சூழலிலும் பரிந்துரைக்கப்படவில்லை.
·        முகக்கவசங்களுக்கான விநியோகம் குறையலாம் என்பதை மனதில் வையுங்கள். ஆகவே  நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து அவற்றின் விலையும் கூடலாம்.
செய்திசேகரித்து முடித்தபின்னர்
·        அதிக தொற்று விகிதம் உள்ள இடத்திலிருந்து நீங்கள் திரும்பியிருக்கும்பட்சத்தில் உறுதியாக உங்களை நீங்களே  தனிமைப்படுத்திக்கொள்ள நேரிடும். இது தொடர்பான அரசின் அறிவுறுத்தல்களை கடைபிடியுங்கள்
·        நீங்கள் புறப்பட்ட இடத்திலோ சென்று சேர்ந்த இடத்திலோ ஏதேனும் தனிமைப்படுத்தல்களோ தனிமைப்படுத்தும் நடைமுறைகளோ பின்பற்றப்படுகிறதா என்பது உட்பட கோவிட் – 19 தொடர்பான அண்மைய தகவல்களையும் விவரங்களையும் கண்காணித்துக்கொண்டே இருங்கள்.
-- உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால்
·        உங்கள் நிர்வாகத்திடமும் மேலதிகாரிகளிடமும் தகவல் தெரியுங்கள்
·        விமான நிலையத்திலிருந்தோ  ரயில் நிலையத்திலிருந்தோ அல்லது பேருந்து நிலையத்திலிருந்தோ வீடு திரும்புபுமுன் உங்கள் நிர்வாகத்தினரோடு பேசிவிட்டு தகுந்த போக்குவரத்தை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். வழக்கமாகச் செல்வதுபோல  டாக்ஸியில் ஏறி சென்றுவிடவேண்டாம்.
·         வீட்டுக்குச் செல்லுங்கள். சென்றவுடன் சுய-தனிமைப்படுத்துதல் தொடர்புடைய அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்.
--உங்களுக்கு அறிகுறிகள் இல்லை என்றால்
·        உங்கள் உடல்நலத்தை தொடர்ந்து கண்காணியுங்கள்
·        உங்கள் நாட்டில் உள்ள தொற்று விகிதத்தைப் பொறுத்து, நீங்கள் திரும்பி வந்தபின்னர் 14 நாட்களுக்கு, ஒரு குறிப்பேட்டில் நீங்கள் சந்தித்த நபர்களின் பெயர்கள்/ அவர்களுடைய தொடர்பு எண்கள் என எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அவர்களோடு நெருக்கமான தொலைவில் நீங்கள் இருந்திருக்கும்பட்சத்தில் ஒருவேளை உங்களுக்கு அறிகுறிகள் தோன்றினால் அவர்களைத் தேடி தகவல் சொல்லி எச்சரிக்க வசதியாக இருக்கும்.
·        உள்நாட்டு கலவரங்கள்தேர்தல்கள் போன்றவற்றை செய்தியாக்கும்போது உடல்ரீதியான பாதுகாப்பு, டிஜிட்டல் பாதுகாப்பு, மனரீதியான பாதுகாப்பு ஆகியவற்றுக்கான அடிப்படை பாதுகாப்புத் தகவல்களை பத்திரிகையாளர்களுக்கும் செய்தி அறைகளுக்கும் அளிக்கிறது CPJ-யின் பாதுகாப்புக் குறிப்புகள் .
 [ஆசிரியர் குறிப்பு : முதன்முறையாக இந்த பாதுகாப்பு ஆலோசனைகள் பிப்ரவரி 10, 2020 அன்று வெளியிடப்பட்டு, அவ்வப்போது மாறுதலுக்குட்பட்டு வருகிறது. இந்தப் பக்கத்தின் மேற்பகுதியில் உள்ள தேதி இறுதியாக இந்த ஆலோசனைகளில் திருத்தப்பட்ட தேதியைக் குறிக்கிறது]