Sunday, November 07, 2010

அந்தோணியின் கதை



(இது 2009 ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்டது. ஈழத்தில் மே 2009 நிகழ்வுகளுக்குப் பின்  ஷோபாசக்தி தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது அவருடன் நேர்காணல் செய்து எழுதிய கதை இது. கதைக்குள் வைக்க இயலாத உரையாடலை கேள்வி-பதில் வடிவத்தில் தந்திருக்கிறேன்.  நிலைமைகள் இன்றைக்கு வேறாக இருக்கின்றன. ஷோபாவிற்கே கூட அப்போது அவர் கூறிய விஷயங்கள் சில இப்போது பொருந்தாமல் இருக்கின்றன என்றார். அத்னாலேயே இதை எந்த இதழிலும் வெளியிடவும் இயலவில்லை. ஆனாலும் இந்த நேர்காணல் வீணாகப் போவதை விரும்பாமல் இப்போது என் வலைப்பூவில் பதிகிறேன். 2009 ஈழத்தின் நிகழ்வுகளுக்கு சற்றுப் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்ந்த உரையாடல் இது என்பதை நினைவில் வைத்து வாசிக்கவும்)

ங்களில் யாருடைய ஊராவது இன்று மனிதர்கள் வாழ முடியாதபடி ஆனதுண்டா? உங்கள் ஊரில் நீங்கள் பிறந்து வளர்ந்த வீதியில் மீண்டும் நுழைய முடியாத நிலை உங்களில் யாருக்கேனும் வந்ததுண்டா? உங்கள் ஊர் எல்லையில் நுழைய முற்பட்டால் ராணுவத்தால் துரத்தப்படும் அவலத்தை அனுபவித்ததுண்டா? உங்கள் ஊரின் மனிதரகள் அனைவரும் இடம் பெயர்ந்து இன்று அந்த ஊர், கடற்படைத்தளமாக மட்டும் சுருங்கிய கொடுமையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் ஊர் அதிஉயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு, நீங்கள் உங்கள் நிலத்திலிருந்து துரத்தப்பட்டிருக்கிறீர்களா?

அந்தோணி துரத்தப்பட்டிருக்கிறான்.

தன் மக்களின் சந்தோஷம், துக்கம் என எல்லாவற்றிற்கும் சாட்சியான அவனுடைய மணற்தீவு, அத்தீவிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் போலவே தனியாய் நிற்பதை வெகுதொலைவிலிருந்து பார்க்கிறான். அல்லைப்பிட்டி...ஆம் அதுதான் அவனுடைய ஊரின் பெயர். மனித மனங்களின் கனவுகளையும் சேர்த்துப் புதைத்த தீவு அது. யாழ்ப்பாணத்திற்கு வடக்கே உள்ள அந்தத்தீவுதான் பிற வடபகுதி தீவுகளுக்கு நுழைவாயில்.

அது அந்தோணி பிறந்த ஊர். ஒருவேளை அவன் அந்த ஊரில் பிறக்காது போயிருந்தால் இந்தக் கதைக்கான அவசியமே வந்திருக்காது.அந்தோணிக்கு ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. அப்பா உள்ளூரில் உள்ள ஒரு ரௌடி. அடிக்கடி சிறைக்குப் போய்விடுவார். போலீஸ் அவரைத் தேடி வரும்போது அவர் இல்லையென்றால் அவன் அம்மாவைப் பிடித்துக்கொண்டு போய்விடும்.

இந்துக்கோவில்களில் வெள்ளாளர்களுக்கு மட்டுமே மரியாதை அளிக்கப்பட்டது. கிறிஸ்துவ தேவாலயத்தில் தனித்தனியாகத்தான் வெள்ளாளர்களும் தலித்துகளும் அமர்ந்தனர். பாடசாலைகள், ரேஷன் கடைகள் போன்றவை வெள்ளாளர் வாழும் பகுதியிலேயே இருந்தன. உள்ளுக்குள் வெதும்பினாலும் அது பற்றி தலித் குடும்பங்கள் பெரிதாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டிருந்த அவர்கள் கல்வி குறித்தெல்லாம்  கவலைப்படும் சூழ்நிலையில் இல்லை. புகழ்பெற்ற திரைப்படப் பாடலான “அல்லா அல்லாபாட்டு மெட்டில்

“அல்லா அல்லா
 அல்லைப்பிட்டி பள்ளா பள்ளா!

என்று வெள்ளாளர்கள் பள்ளர்களை வக்கிரமாகக் கேலி செய்து பாடுவதை அந்தோணி பார்த்திருக்கிறான்.

ஐந்தாம் வகுப்புவரை அந்தோணி அல்லைப்பிட்டியில் படித்தான். ஆறாம் வகுப்புக்கு வேலணை சென்றான். பள்ளியில் அந்தோணிக்கு நல்ல பெயர். கெட்டிக்காரனாக வருவான் என்று வாத்தியார்மார்கள் சொல்வதைக் கேட்கும்போது, ‘அப்பாடா! படிச்சு நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் முன்னேறணும்என்று நினைப்பான். விடுதியில் தங்கித்தான் அவன் படித்தான். தமிழ் வெறி அவனுக்கு. பத்தாவது வரை அங்கேதான் படித்தான். படிக்கிற காலத்திலேயே அவனுக்கு எப்படியோ இயக்கத்தின் மீது பற்று வந்து விட்டது. அப்போது அவனுக்கு பற்று வராமல் இருந்திருந்தால்தான் ஆச்சர்யப்பட நேர்ந்திருக்கும்.

1983 ஆம் ஆண்டு குட்டிமணி, தங்கதுரை கொல்லப்பட்ட ஆண்டு. மிகப்பெரிய கலவரம் வெடித்து தமிழர்களை தின்றது.அப்போது அந்தோணியின் தீவையும் அயற்தீவுகளையும் சேர்ந்த நிறைய தமிழர்கள் கொழும்பு நகரத்தில் புகையிலை விற்பவர்களாக, கூலி வேலை செய்பவர்களாக, கடை வைத்திருந்தவர்களாக இருந்தார்கள். கலவரம் பற்றிக்கொள்ள, தினமும் தமிழர்கள் கைகால்கள் இழந்தும், அடிபட்டும், பிணமாகவும் வந்தவண்ணம் இருந்தனர். அல்லைப்பிட்டிதான் நிறைய தீவுகளுக்கு நுழைவாயில் என்பதால் எல்லாமே இந்த எல்லையில்தான் வந்து சேர்ந்தன. அந்தக் கொடூரக் காட்சிகளெல்லாம் இவன் கண்களில் வந்து விழுந்தன. இந்தக் காட்சிகள் இயற்கையாகவே இவனுக்குள் விடுதலை வேட்கையை உண்டுபண்ணின. அந்தோணிக்கு இயக்கத்தில் சேர்ந்தாக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.

ஆனால் இவன் நினைத்ததுபோல இயக்கத்தில் சேருவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.அவர்களுக்கென்று பரீட்சை எல்லாம் உண்டு. ஒரு இடம் சொல்லி அந்த இடத்திற்கு 5 மணிக்கு சரியாக வரவேண்டுமென்று சொல்வார்கள். போனால் யாரும் இருக்க மாட்டார்கள். நெடுநேரம் நின்று பார்த்துவிட்டு வந்துவிடுவான். ஆனால் எங்கிருந்தோ இருந்து இவன் பொறுமையாக நிற்கிறானா என்று இவன் சகிப்புத்தன்மையின் அளவை தெரிந்துகொள்ள முனைந்திருப்பது பின்னாளில்தான் இவனுக்குத் தெரிய வந்தது. திடீரென ஒரு 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்திற்கு வரச் சொல்லுவார்கள். பேருந்து வசதி கிடையாது. சைக்கிளில்தான் செல்லவேண்டும். மாங்கு மாங்கென்று இவன் மிதித்துச் செல்வான். இப்படி பலமுறை சோதனைகள் நடக்கும்.

அன்றைக்கு பல இயக்கங்கள் இருந்தாலும் புலிகள் இயக்கத்தில் சேர வேண்டுமென்று இவன் உறுதியாய் இருந்தான். அதற்கு பல காரணஙகள் உண்டு. செயல்படும் இயக்கமாக இருந்தது புலிகள் இயக்கம்தான். திருநெல்வேலியில் கண்ணிவெடி வைத்து 13 பேரைக் கொன்றிருந்தது புலிகள் இயக்கம். அப்போது மகேஷ் என்பவர்தான் இவனது இயக்கத் தொடர்பாளர். அவர் மூலமாகவே அந்தோணி இயக்கத்தை தொடர்புகொள்ள இயலும். அவருக்கு மேலே உள்ள ஒருவரையும் அவனுக்குத் தெரியாது. இயக்கத்தில் படிநிலையில் தனக்கு மேலிருக்கும் ஒரே ஒருவரைத்தவிர வேறு யாருடனும் தொடர்புகொள்ள முடியாது. இது இயக்கத் தலைவர் வரை பொருந்தும். அந்தோணி தினமும் சென்று என்னை இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கண்ணா!என்று கெஞ்சுவான். என்னை எப்போ இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்புவீங்கண்ணா? எப்போ எனக்கு ஆயுதம் குடுப்பீங்கண்ணா? எப்போ எனக்கு குப்பி குடுப்பீங்கண்ணா?” என்று துளைத்தெடுப்பான். சவூதி போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல தினமும் ஏஜெண்டுகளை பார்த்து ஓயாமல் நச்சரிக்கும் இளைஞனைப் போல இவன் நச்சரிக்கத் தொடங்கினான்.

ஆறு மாதகாலம் இவனை கண்காணித்தது இயக்கம். கண்காணிப்பு காலத்திலேயே இவனுக்கு சுவரொட்டி ஒட்டும் வேலை உட்பட பல வேலைகளை இயக்கம் கொடுத்தது. இப்படியான வேலைகளை அவன் செய்துகொண்டிருக்கையில் 84இல் இவனுக்கு கொரில்லா பயிற்சி கொடுத்தது இயக்கம். 10 பேருக்கு ஒரு துப்பாக்கி இருக்கும். அதில் குழுத்தலைவருக்கு அந்த துப்பாக்கி. மற்றவர்கள் ஒரு தடி வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு ஆள் நியமிக்கப்பட்டு இயக்கத்திற்கு ஆளெடுக்கும் பணி உட்பட அனைத்து இயக்கப்பணிகளையும் அவர் செய்யவேண்டும். அவருக்கு ஏரியாக்காரர் என்று பெயர். பயிற்சி முடிந்ததும் அந்தோணி ஏரியாக்காரன் ஆனான். அந்த சமயத்தில் யாழ்ப்பாணத்தில் திலீபன் அரசியல்பிரிவுத் தலைவராகவும் கிட்டு ராணுவத் தளபதியாகவும் பொறுப்பில் இருந்தனர்.

அந்தோணியின் அண்ணன் வெளிநாட்டிலிருந்து இவனுக்கு எழுதிய கடிதத்தில் இயக்கத்தில் சேர்வதெல்லாம் வெறும் ஏமாத்து வேலை. பொய் வேலை. அதெல்லாம் உனக்கு வேண்டாம்என்று எழுதினார். இவன் அவருக்கு பதில் சூடாக எழுதினான். தட்டுகழுவப் போனா பேசாம தட்டு கழுவணும். இயக்கத்தை பத்தி உமக்கு என்ன தெரியும்?

அந்தோணி ஆயுதக்கவர்ச்சி உடையவன். அப்போது கம்யூனிச சைனாவிலிருந்து ஒரு சஞ்சிகை  வந்து கொண்டிருந்தது. அதில் விதவிதமான வண்ணப்படங்கள் வரும். அதை பாடப்புத்தகங்களுக்கு அட்டை போடுவதற்காகவே பொடியன்கள் விரும்பி வாங்குவார்கள். அந்த புத்தகத்தில் முதுகில் துப்பாக்கியோடு வயலில் மக்கள் வேலை செய்வது போல தான் பார்த்த புகைப்படங்களில் வருவது போல தமிழீழ மக்களையும் கற்பனை செய்வான்.

ஆங்காங்கே கூட்டங்கள் ஏற்பாடு செய்து மக்களை சந்தித்து பேசும் பணி அவனுக்குத் தரப்பட்டது.. ஆயுதரீதியாக போராட்டம் நடத்தி தமிழீழம் பெற வேண்டுமென வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தினான். கவிஞர் நிலாந்தன் (தற்போது அவர் முள்கம்பிகளுக்குப் பின்னால் முகாமில் இருக்கிறார் என்று கேள்வி) தலைமையில் மக்கள் கூடும் இடங்களில் விடுதலை காளிபோன்ற நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. அந்த நாடகத்தில் அந்தோணி நடித்தான்.

தமிழீழமே எங்கள் தாகம்! - அந்தத்
தாகம் தீரும் வரை போராடிச் சாவோம்!
.
.
கொக்குளாய் காணாதோ சாமி சாமி!
கொக்காவில் காணாதோ சாமி சாமி!
காரைநகர் போதாதோ சாமி சாமி!
களப்பலிகள் போதாதோ சாமி சாமி!
கடலில் பலிகொடுத்தோம்!
களத்தில் பலிகொடுத்தோம்!
விடலைப்புலிகளெல்லாம்
விஷம்தின்று சாகிறார்கள்!

போன்ற தெருக்கூத்து வடிவப் பாடல்களோடு நாடகம் களை கட்டும்.


திம்பு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது அதை எதிர்த்து பூட்டான் என்ன பாட்டன் வீடா?” என்ற கோஷத்தோடு நாடகம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. அப்போது புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் பல பகுதிகள் வந்து விட்டன. ஆனாலும் கூட ஆங்காங்கே ராணுவம் கண்காணிக்க வரும். மக்கள் ஆதரவு இருந்ததால் எப்படியாவது ராணுவம் வரப்போகும் செய்தி வந்து விடும். குழுவினரோடு அடுத்த ஊர் சென்று விடுவான்.

இப்படியே களமும் கலையுமாக நாட்கள் கழிந்தன. அநுராதபுரத்தில் இயக்கம் 120 சிங்களரைக் கொன்றது. அதில் 25 பள்ளிக் குழந்தைகளும் அடக்கம். அதற்கு பழிவாங்குவதற்காக 65 தமிழர்கள் பயணம் செய்த குமுதினி படகில் இருந்த அனைவரும் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 65 உடல்களை சுமந்துகொண்டு அந்தப் படகு கடலில் ஆடியாடி மிதந்தது. அந்தோணியும் மற்றவர்களும் அந்த உடல்களை கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள். அநுராதபுரம் தாக்குதல் தவறானதோ? இது நமக்கு சரிப்பட்டு வராது போல் தெரிகிறதே... மனசஞசலத்திற்கு ஆளானான் அந்தோணி. ஆனால் இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்குப்பின் இலங்கை அரசு திம்புவில்  பேச்சுவார்த்தைக்கு வந்தது. இப்படி அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்தியிராவிட்டால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்திருக்காது என இயக்கம் சொல்ல அதுவும் சரிதான் என்றிருந்துவிட்டான். ஆனால் அவனது ஒன்றரை வருட மனப்போராட்டத்திற்கு அது ஆரம்பமாக இருந்தது.

இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியில் சிவில் நிர்வாகம் கிடையாது. ஆக ஒரு பதில் நிர்வாகம் அமைக்கப்பட்டது. பல்வேறு இயக்கங்கள் இருந்ததால் ஒரு குற்றத்திற்கு எல்லா இயக்கஙகளிடமிருந்தும் தண்டனை கிடைக்கும். பொலிஸ்காரனின் அதிகாரத்திற்காவது எல்லையுண்டு. நம் இயக்கஙகளுக்கோ வானளாவிய அதிகாரம். பத்தாததற்கு 37 இயக்கங்கள் இருந்தன.

பத்து ஏக்கர் நிலம் குறித்த தகராறா? இவ்வளவு உனக்கு.. இவ்வளவு அவனுக்கு, மிச்சம் இயக்கத்துக்கு என்ற ரீதியிலேயே தீர்ப்புகள் இருந்தன. பாலியல் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். கையில்லாத ஜாக்கெட் போட்ட அல்லது முடியை குட்டையாய் வெட்டிய ஒரு பெண் வெளியில் நடமாட முடியாது. உளவாளி என்றெண்ணி பிடித்துக் கொண்டு போய் கொன்று விடுவார்கள். இந்த காரியங்களை புலிகள் மட்டுமல்ல, எல்லா இயக்கங்களும் செய்தன. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனானான். மரத்தில் கட்டிவைத்து அடிப்பது போன்ற தண்டனைகள் எல்லாமே உண்டு. உழைத்து களைத்து வடிசாராயம் குடிப்பவர்களை துவைத்து எடுத்தனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இயக்கம் கட்டினான் அந்தோணி. சில சமயங்களில் வெறுப்பாய் உணர்ந்தான். என்ன செய்ய? இது ஒரு ராணுவ அமைப்பாயிற்றே? அருகிலேயே இருப்பவன் கூட இயக்கத்திற்கு உளவறிந்து சொல்பவனாய் இருக்கக்கூடும். அதனால் யாரிடமும் எதுவும் பேசவில்லை அவன்.

85இல் இலங்கை அரசோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடாகி போர்நிறுத்தம் ஏற்படுகிறது. தமிழீழத்திற்கு பதில் மாநில சுயாட்சி என்றெல்லாம் பேச்சு வந்தபோது அவன் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இயக்க உறுப்பினர்களுக்கு அரசியல்ரீதியான கல்வி எதையும் இயக்கம் அளிக்கவில்லை. 1986 ஏப்ரலில் புலிகள் டெலோ இயக்கத்திற்கு தடை விதித்தனர். ஸ்ரீசபாரத்தினம் உட்பட 300 டெலோ போராளிகள் கொல்லப்பட்டனர். அந்த ஆண்டு இறுதியிக்குள் புளோட், ஈபிஆர்எல்எப், TEA, TELA போன்ற இயக்கங்கள் தடை செய்யப்பட்டன.

இயக்கத்திலிருந்து வெளியேறுவது என்ற முடிவு அப்போது தற்கொலைக்கு சமம். வெளியேறினால் கைது செய்யப்படுவோம், நிறைய தொல்லைகள் வரும் என்று தெரிந்தே அந்தோணி வெளியேற முடிவெடுத்தான். வெளியேறிய பிறகு போய் சேர வேறு முற்போக்கு அரசியல் இயக்கம் இல்லை. ஆனாலும் தனது அடையாள அட்டை, குண்டுகள் ஆகியவற்றை ஒப்படைத்துவிட்டு வெளியேறினான். இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டால் மரணதண்டனை என்ற நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டுதான் அவன் இயக்கத்தில் சேர்ந்தான். சயனைடு குப்பியை மட்டும் அவன் வைத்துக் கொண்டான்.

இயக்கத்திலிருந்து வெளியேறிய ஞானம் அம்மான் சுற்றிவளைக்கப்பட்டபோது குப்பி கடித்து தற்கொலை செய்துகொண்டார். இயக்கத்திலிருத்து வெளியேறியவர்களும், மற்ற இயக்கங்களை தடை செய்திருந்ததால் இயங்கமுடியாமல் இருந்த மற்ற இயக்கக்காரர்களும் ஒன்றாகவே அலைந்தனர். கும்பலாகவே சுற்றினர். இயக்கத்தில் இருந்த ஆள் என்று இறுமாப்பில் எங்களுக்கே முதல் பங்கு என்ற ரீதியில் விடுதலைரௌடிகளாக வலம் வந்தனர். எந்த இயக்கமாவது வந்து கடையடைப்பு செய்யச் சொல்லிவிட்டுச் சென்றால் பின்னாடியே போய் கடையைத் திறக்கச் சொல்லி மிரட்டுவது என எல்லாமே நடந்தேறின.

மீனவர்கள் கடலுக்குள் வெடி வீசி மீன்கள் செத்து மிதக்கும்போது அப்படியே மீன்களை அள்ளிக் கொண்டுவருவார்கள். அதற்காக சில பேர் இயக்கத்தின் கண்ணிவெடிகளை திருடிவிட, இயக்கம் இவர்கள்தான் திருடினார்கள் என முடிவு செய்து இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இவன் குப்பி கடிக்காமல் விட்டுவிட, கைது செய்ததும் குப்பி பறிபோனது. பத்து நாட்கள் சிறையில் இருந்தான்.

வெளியே வந்தபின் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது அவனுக்கு எப்படியோ இருந்தது. அந்தோணியின் அண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இங்கிலீஷ் படிக்கப்போகிறேன். அதனால் பணம் அனுப்பி வைக்கவேண்டும்என்று கடிதம் எழுதினான். அண்ணன் 8000 ரூபாய் அனுப்பி வைக்க, இவனுக்கு தலை கால் புரியவில்லை. கையில் வாட்ச், கூலிங்கிளாஸ், சைக்கிள், புதுப்புது உடுப்புகள் என அந்த பணத்தில் செலவு செய்து சுற்றித் திரிந்தான்.

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதே. மீண்டும் நாடகம் போடத்துவங்கினான். இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டானேயொழிய பிரபாகரனே தனது தலைவர், தமிழீழமே தனது லட்சியம் என்பதில் உறுதியாய் இருந்தான் அந்தோணி. பிரபாகரனுக்குத் தெரியாமலேயே வேண்டத்தகாதவை சில நடக்கின்றன என்று உறுதியாய் நம்பினான். கண்ணன் வருவானா?” என்று ஒரு நாடகம். இந்தியா வருமா? வந்து தமிழீழம் பெற்றுத்தருமா?” என்ற பொருளில் அந்த நாடகம் போட்டான்.

87இல் கண்ணன் வந்தேவிட்டான். இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இயக்கம் தொட்டதெல்லாம் வெற்றிதான் அப்போது. மிகக்குறைந்த நபர்களையே இயக்கம் இழந்திருந்தது. திலீபன்தான் இயக்கம் இழந்த 650ஆவது நபர். இயக்கத்தின் பெரும்பாலான தாக்குதல்களில் உச்சபட்ச வெற்றி கிட்டியது. மக்களின் ஆதரவு, சர்வதேச ஆதரவு எல்லாமும் இருந்தன.

வடமராட்சியில் லிபரேஷன் ஆபரேஷன்என்ற பெயரில் ராணுவம் முழுவீச்சில் தாக்குதலைத் தொடங்கியது. வல்வெட்டித்துறை, பருத்தித்துறை என வரிசையாய் பகுதிகள் கையைவிட்டுப் போயின. இந்திய விமானங்கள் ஈழத்தில் உணவுப் பொட்டலங்களை வீசின. தொடர்ந்து இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அந்தோணியின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்திய விமானத்தில் ஈழத்துக்கு அழைத்து வரப்பட்டார். முதலும் கடைசியுமாக பொதுமக்கள் மத்தியில் அவர் சுதுமலையில் தோன்றியபோது சில அழுத்தங்கள் காரணமாகவே ஆயுதத்தை ஒப்படைக்கிறோம்என்றார். அதன் பின் இலங்கை அரசும், இந்திய அமைதிப்படையும் புலிகளை தாக்கத் துவங்கின. இந்திய அமைதிப்படைக்கும் இயக்கத்துக்கும் போர் மூண்டது.

பிரபாகரனே தனது தலைவன், தமிழீழமே தனது லட்சியம் என்றிருந்தவன்தானே? அந்தோணி மறுபடியும் ஊர்வலங்கள், ஆள்சேர்த்தல் என மீண்டும் எல்லாவற்றையும் செய்தான். வடகிழக்கில் ராணுவத்தை வெளியேற்றவேண்டும், சிங்கள குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற அந்தோணியின் கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. இந்திய அமைதிப்படை அந்தோணியைத் தேடியது. இவன் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள அப்பா அம்மா தங்கை என எல்லோரையும் மிரட்டத் தொடங்கினார்கள். அந்தோணி தலைமறைவானான்.

தனது இருபதாவது வயதில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு தன் தந்தையுடன் எந்த சோதனைச் சாவடியிலும் சிக்காமல் வந்து சேர்ந்தான்.

கொழும்பில் தங்கியவுடன். அண்ணா! நான் திருந்திவிட்டேன். நான் ஜெர்மனி போகப் போறேன். எனக்கு பணம் அனுப்புங்க”  என்று அண்ணனுக்கு கடிதம் எழுதினான் ஏஜெண்டுக்கு அறுபதாயிரம் ரூபாய் கட்டவேண்டும். அவன் அண்ணன் ஒரு தவறு செய்தார். அறுபதாயிரம் மட்டும் அனுப்பாமல் ஒரு பதினைந்தாயிரம் அதிகமாக அனுப்பி விட்டார்.

இவனுடன் கூட இருந்த ஒரு நண்பன் இந்தியாவுக்கு பயணமாக ஆய்த்தமாகிக் கொண்டிருந்தான். இந்தியா போனால் என்ன? ஆனால் பாஸ்போர்ட் ஏஜெண்ட் கையில். அவசரத்திற்கு எமர்ஜென்ஸி பாஸ்போர்ட் ஒன்றை எடுத்துக் கொண்டு பதினைந்தாயிரத்தோடு மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு விமானம் ஏறினான்..

சென்னை - இவன் பார்க்க ஆசைப்பட்ட நகரம். பெரிய சாலைகள், கட்டிடங்கள் என அவனுக்கு சென்னை பற்றி ஒரு பிரமிப்பு இருந்தது. ஒரு லாட்ஜில் தங்கினான். அந்தோணி ஒரு சினிமா ரசிகன். பத்மம் திரையரங்கிற்குச் சென்று செந்தூரப்பூவே’, பிரபுவிற்கு தொடர்ந்து வெற்றிகரமான 13ஆவது படம் என்ற விளம்பரத்தோடு ஓடிக்கொண்டிருந்த ரத்ததானம்போன்ற படங்களை கண்டுகளித்து சுற்றித் திரிந்தான்.

அப்போது இலங்கையிலிருந்து லக்ஸ் சோப், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை இந்தியாவிற்குக் கொண்டுவந்து விற்பது, இந்தியாவிலிருந்து கைலி, பட்டுச்சேலைகள் போன்றவற்றை இலங்கைக்கு எடுத்துச் சென்று விற்பது சர்வசாதாரணம். இந்த சாக்கில் ஹெராயின் கடத்துவதும் நடந்தது. அப்படி ஒருவன்தான் அந்தோணியோடு கூட வந்தவன். தனது வியாபார விஷயமாக பம்பாய்க்கு சென்றுவிட்டான். அவன் போனகையோடு அந்தோணிக்கு அம்மை வார்த்தது.. 20 நாட்கள் அவஸ்தைப்பட்டு லாட்ஜ் அறையை விட்டு வெளியே வரவேயில்லை அந்தோணி. அதற்குள் கொழும்பில் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. இவனுக்கு விசா எப்போதோ வந்துவிட்டிருந்தது. இவன் போக வேண்டிய கப்பல் புறப்பட்டுச் சென்றிருந்தது.

இவன் கொழும்புக்கு திரும்பியபோது இவன் கையில் ஒற்றை பைசா கிடையாது. அதற்குள் ஏஜெண்ட் அந்தோணியில் அப்பாவுக்கு கடித்ம் எழுதிவிட்டார் இவன் ஊருக்குத் திரும்ப மறுத்தான்.

எப்படியாவது என்னை ஜெர்மனிக்கு அனுப்பிவிடுங்கள்

ஏஜெண்ட்டிடம் மன்றாடினான். அவர் தினமும் 100 ரூபாய் செலவுக்குக் கொடுப்பார். அதை வைத்துதான் நாட்களை ஓட்டிவந்தான்.

சாய்பான் நாட்டிற்குப் போனால் நன்றாக சம்பாதிக்கலாம் என்று அந்தோணிக்கு ஏஜெண்ட் ஆசை காட்ட, அவனுக்கோ குழப்பம். உலக வரைபடத்தில் இதுவரை இந்த பேரில் ஒரு நாட்டை பார்த்ததில்லையே என்று தயங்கினான். விசாரித்த பின் ஒத்துக்கொண்டு கிளம்பினான். ஹாங்காங் சென்று அதன்பின் சாய்பான் நாட்டிற்கு அழைத்துப் போவதாக ஏஜெண்ட் சொன்னதை நம்பி அந்தோணியும் டெலோ கணேஷும் வேறு சிலரும் ஹாங்காங் புறப்பட்டனர். அங்கே சென்றவுடன் ஏஜெண்ட் அத்தனை பேரின் பணத்தோடும் மாயமாகி விட்டார். விசா இன்றி பத்து பேரும் மொத்தமாய் ஹாங்காங் பொலீஸிடம் சரணடைந்தனர். கிட்டத்தட்ட ஆறு மாதம் விசாரணை நடந்தது. அந்த ஆறுமாதமும் ரெஸ்டாரண்ட் போன்ற இடங்களில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தான். விசாரணை முடிந்து ஒருவழியாய் கொழும்பு திரும்பினான்.

கொழும்பு திரும்பியவுடன் அந்த ஏஜெண்ட்டின் அலுவலகத்திற்குச் சென்று கண்ணாடியை எல்லாம் அடித்து நொறுக்கி ரகளை செய்தான் அந்தோணி. அதன் விளைவாக பணத்தை திருப்பிக் கொடுத்தார் ஏஜெண்ட்.

1990 ஜுன் மாதம் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான தேன்நிலவு முடிவுக்கு வந்தது. அரசின் தேடுதல் வேட்டையில் பிடிபட்டு அந்தோணி சிறை சென்றான். அவனுடைய சிங்களத்தோழி ஒருத்தியின் முயற்சியினால் பிணையில் வெளிவந்தான்.

தாய்லாந்தில் அகதிகளுக்கு மாதாமாதம் 3000 பாத்கள் தொகை கொடுத்து பராமரிப்பதாகக் கேள்விப்பட்டபோது அங்கு போய்விடலாம் என்று தோன்றியது அந்தோணிக்கு. பாங்காங் நகருக்கு டிக்கெட் எடுக்க காசுக்கு என்ன செய்ய? மீண்டும் அண்ணா! நான் மறுபடி திருந்திவிட்டேன். எனக்கு பணம் அனுப்புங்கஎன்று கடிதம் போனது அண்ணனுக்கு. இந்த முறையும் அண்ணன் போனமுறை செய்த அதே தவறை செய்திருந்தார். டிக்கெட்டுக்குப் போக அதிக பணம் அனுப்பியிருந்தார்.

பாங்காக் நகரில் இறங்கியவுடன், ஒரு விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கினான். கையிலிருந்த பணமும் வயதும் சேர்ந்து மது, சிகெரெட் என எல்லா பழக்கமும் வந்தது. இப்படி ஒரு ஏழெட்டு நாட்கள் கழிந்தவுடன் கையிருப்பு தீர்ந்தது. இனி என்ன? இருக்கவே இருக்கிறது அகதிகள் தங்குமிடம். அந்தோணி அங்கே கிளம்பினான். கிளம்புவதற்குமுன் அவன் நிலையை எழுதி, தன்னை அகதியாகக் கருதும்படி ஒரு மனு தயார் செய்து கொண்டான். அதனடியில் ரத்தத்தால் கையெழுத்திட்டான்.

யுஎன்எச்சிஆர் (United Nations High Commission for Refugees) கட்டிடத்தின் முன்னால் வந்து அவன் நின்றபோது அவனை உள்ளே விடக்கூட இல்லை. அப்போதுதான் சமீபமாக இரான் அகதி ஒருவர் அங்கே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாராம். எனவே பாதுகாப்பு மிகக் கடுமையாக இருந்தது. ஆகவே கட்டிடத்துக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தார்கள். இந்த செய்தி அந்தோணிக்கு பேரிடியாய் இருந்தது. கையில் ஒரு பைசா இல்லை. மொழி தெரியாத ஊரில், யாருமில்லாமல் என்ன செய்வது? கையில் பெட்டியோடு நிராதரவாக நின்றான்.

சீலோம் வீதியில் ஒரு மாரியம்மன் கோவில் இருந்தது. அங்கே மதியச் சாப்பாடு கிடைக்கும் என்று யாரோ சொல்ல அங்கே சென்று உண்டான். அதன்பின் எதிரில் இருந்த ஒரு பூங்காவில் குழம்பிய மனநிலையிலேயெ மதியம் உறங்கிப்போனான். அந்த பூங்காவும் மாரியம்மன் கோவிலும் அவனுக்கு தினமும் கைகொடுத்தன. பல வேளைகள் பட்டினிதான். வறிய சூழலில் வளர்ந்தவனுக்கு தனது வறுமையை பிறர் அறியக்கூடாதென்ற எச்சரிக்கை உணர்வு அதிகமாக இருந்தது. சாப்பிடாதது போல் காண்பித்துக் கொள்ளவில்லை அவன். எங்கேயாவது ஒரு துண்டு சிகரெட் கிடைத்தால் அதை ஒரு இழுப்பு இழுத்துக் கொள்வான். இவன் பூங்காவில் தங்கியதை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த காவலாளி அவனை அழைத்து ஒரு நாள் சாப்பாட்டுக்காக இருபது ரூபாய் கொடுத்தார். அவன் அதை சாப்பிட வைத்துக் கொள்ளாமல் நேரே கடைக்குச் சென்று சவரம் செய்யவேண்டுமென்று கூறி இரண்டு சின்ன கத்திகளை வாங்கினான். ஒன்றை சட்டைப் பையிலும் ஒன்றை ஷூவிலும் வைத்துக் கொண்டான்.

இப்போது அந்தோணி யுஎன்எச்சிஆர் கட்டிடத்தின் காவலாளிமுன் நின்றான்.

நான் கமிஷனரைப் பார்க்க வேணும்

முடியாது

சட்டைப்பையிலிருந்து கத்தி வெளியே வந்தது. அடுத்த நொடி அந்தோணியின் இடது கையின் கீறல்களிலிருந்து ரத்தம் கொட்டியது. அந்த இடமே கலவரமானது. அவன் உள்ளே அனுமதிக்கப்பட்டான். கமிஷனர் வந்தார்.

என்ன வேண்டும்? ஏன் இப்படி செய்தாய்?”

அகதியாய் என்னை ஒத்துக்கொள்ள வேணும்

முடியாது!!!

ஷூவிலிருந்து அடுத்த கத்தி வெளியே வந்த்து.

அக்செப்டட்

அலறினார் கமிஷனர். அன்றிலிருந்து அகதி அந்தஸ்தோடு தாய்லாந்தில் தங்கத் தொடங்கினான்.

இங்கு பிரச்சனை வேறு வடிவில் வந்த்து. அகதிகளை பராமரிப்பது யுஎன்எச்சிஆர் அமைப்பு. இதற்கும் தாய்லாந்து அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் விசா வழங்கவேண்டியது அரசாங்கம்தான். விசா காலாவதியாகிவிட்டால் அருகிலுள்ள லாவோஸ் நாட்டிற்குச் சென்று தங்கிவிட்டு மீண்டும் விசா வாங்கி தாய்லாந்து வந்தான். அங்கே அகதிகளுக்கு வழங்கப்படும் 3000 பாத்களில் 1000 பாத்களே ஒரு மாதத்தை ஓட்ட போதுமானதாக இருந்த்து. தாய்லாந்தில் இருந்தவரை தெருச்சண்டைகள், அடிதடி என எல்லாவற்றிலும் அந்தோணியின் பெயர் இருந்தது. சண்டையில் ஒரு சிறுநீரகத்தை இழந்தான். சிறைவாசம் பழகிப்போனது. இப்படியே நான்கு ஆண்டுகள் போயின.

93இல் பிரான்ஸிலிருந்து அல்லைப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் வந்தார். அவர் மூலமாக பிரான்ஸ் செல்ல தீர்மானித்தான். அண்ணா! நான் மறுபடி திருந்தி விட்டேன். பிரான்ஸ் போக பணம் அனுப்புங்க!என்று கடிதம் மறுபடி அண்ணனுக்கு போனது. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத அவரும் சளைக்காமல் பணம் அனுப்பினார்.

பிரான்ஸ் வந்து சேர்ந்தான் அந்தோணி. இத்தனை ஆண்டுகால இடைவெளியில் அந்தோணியின் குடும்பம் 1990இல் அகதியாய் ஊரைவிட்டு இடம்பெயர்ந்திருந்தது. 1993 மேதினம் - பிரேமதாசா கொல்லப்பட்ட சமயம் அந்தோணி பிரான்ஸில் இருந்தான். பாரிஸில் புலிகள் இயக்கத்தின் அலுவலகம் இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தன் தலைவர் பிரபாகரன், தன் தாகம் தமிழீழம் என்பதில் அந்தோணி உறுதியாய் இருந்தான். மீண்டும் இயக்கத் தோழர்களின் நட்பு. அவர்கள் இவனை இயக்கத்திறகாகப் பணியாற்ற அழைத்தார்கள். அந்தோணியும் மீண்டும் இயக்கத்திற்காக வேலை செய்ய மனதை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.

ஒரு நாள்.. மது போதையில் சாலையில் அலம்பல் பண்ணிக்கொண்டே அந்தோணி வந்து கொண்டிருந்த்போது, நான்கைந்து பேர் சாலையோரத்தில் தொழிலாளர் பாதைஎன்ற பத்திரிகையை கையில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.

நம்ம ஊர் பசங்க மாதிரி தெரியுதே..

அருகில் சென்று விசாரித்தான். புரட்சி கம்யூனிஸ கழகத்தின் பிரெஞ்சுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றார்கள். இவனும் ஒரு பத்திரிகை வாங்கினான். அவர்கள் இவனிடம் முகவரியும் தொலைபேசி எண்ணும் கேட்க போதையில் கொடுத்து வைத்தான்.

அடுத்த நாள், தொலைபேசி மணி ஒலிக்க ஆரம்பித்தது. அவன் அவர்களை மீண்டும் சந்திக்கும் வரை தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. தொல்லை தாங்காமல்தான் அவர்களை சந்த்திக்க ஒத்துக்கொண்டான். ஒரு சிறிய மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள்.

நீங்கள் எந்த இயக்கம்?”

எல்டிடிஈ

நீஙகள் எல்லோரும் ரொம்ப பாவம்!!!!!!

அந்தோணிக்கு அந்த வார்த்தைகள் அலை அலையாய் அதிர்வலைகளை உண்டாக்கின. வாழ்நாளில் முதன்முறையாக இந்த வார்த்தைகளைக் கேட்கிறான். பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை பாவம் என்று முதன்முதலாக பிறர் கூறக் கேட்கிறான்.

ஏன் பாவம்?” - அந்தோணி கேட்டான்.

இந்த கேள்விக்கு விடையாக ஏசுவின் மலைப்பிரசங்கத்தைப் போல மூன்று மணி நேர பிரசங்கம் கிடைத்தது. பிரசங்கத்தின் முடிவில் அந்தோணி ஷோபாசக்தியாக உருமாறத் தொடங்கினான்..

- எழுத்தாளர் ஷோபாசக்தியுடனான நீண்ட உரையாடலின்வழி பின்னப்பட்ட அந்தோணியின் கதை



ஷோபாசக்தியின் குரல் இதோ...

93இல் இருந்து 97 வரை மிகத் தீவிரமாக கட்சிப்பணி செய்தேன். நிறைய புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கினேன். கட்சிக்கவிதைகள் எழுதினேன். எனது முதல் சிறுகதை அம்மாஎன்ற சிறுபத்திரிகையில் வெளிவந்தது. ஆனால் கட்சியில் என்னை எழுத விடமாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கட்சிக்காரர்களிடமிருந்து விலகத் தொடங்கினேன். எனது அறையில்தான் பெரும்பாலும் கட்சிக்கூட்டங்கள் நடக்கும். பின் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்திற்கு தோழர்கள் வந்தபின் அவர்களை அறையில் விட்டுவிட்டு நான் தப்பித்து வெளியேறத் தொடங்கினேன். நான் இப்போது லூத் ஊவிரிர் என்ற ட்ராட்ஸ்கியக் கட்சியின் ஆதரவாளர்.

95இல் என் பெற்றோர் சென்னையில் அகதிகளாகக் குடியேறினர். எனக்கு 98இல் இந்தியா வர விசா கிடைத்தது. அப்போது எனக்கு தமிழக இலக்கியவாதிகள் யாரிடமும் அறிமுகம் இல்லை. பிரான்ஸிலிருந்து கிளம்புகையில் தஞ்சாவூரில் இரண்டு முகவரிகளை நண்பர்கள் கொடுத்தார்கள். ஒருவர் கே.ஏ.குணசேகரனின் சகோதரி ஜோதிராணி. மற்றொருவர் அ.மார்க்ஸ். இந்த முகவரிகளுடன் தஞ்சாவூர் போனேன். ஜோதிராணியை சந்திக்க இயலவில்லை. அ. மார்க்ஸை சந்தித்தேன். சென்னையில் வளர்மதி, ராஜன்குறை போன்ற நண்பர்களை அறிமுகப்படுத்தினார். 2004இல் என் தங்கை பிரான்ஸ் வந்ததிலிருந்து தங்கையின் வீட்டிலே தங்கியிருக்கிறேன். அவ்வபோது பிரான்ஸிலிருந்து வந்து நண்பர்களை சந்திக்கிறேன்.

ஒரு பேட்டியில் நீங்கள் பயனற்ற வாழ்வு வாழ்வதாகச் சொல்லியிருக்கீங்களே! ஏன் அப்படி?

என்னால் இயங்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு இயங்குவதற்கு அமைப்பு வேணும். அமைப்பில்லாமல் இயங்க முடியாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஈழத்திலும் சரி அதற்கு வெளியேயும் சரி நான் தேடும் அமைப்பு இல்லை. நானே உருவாக்கலாமென்றால் எனக்கு அதற்கு சக்தி இல்லை. எனக்கு தலைமைப்பண்பு கிடையாது. யாராவது அமைப்பு தொடங்கினால் நான் அதற்கு விசுவாசமான தொண்டனாக இருப்பேன். வேலை பார்ப்பேன். அது முடியாததால் என் ஆற்றாமையை போக்கிக்கொள்ள எழுதுகிறேன். என்னுடைய கதைகள் ஒவ்வொன்றும் ஒரு அரசியல் துண்டு பிரசுரம்.

எனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாததை ஒரு இழப்பாகத்தான் நான் பார்க்கிறேன். எத்தனையோ பிற மொழி இலக்கியங்களை வாசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. குற்றமும் தண்டனையும்தமிழில் வந்தபின்தானே என்னால் வாசிக்க முடிந்தது?


மரபுரீதியான ராணுவமாக புலிகள் இயக்கம் மாறியதால்தான் ராணுவப்பின்னடைவு ஏற்பட்டதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் சேகுவேரா ஒரு கொரில்லா ராணுவம் கட்டாயம் மரபான ராணுவமாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?

சே காலத்தில் இன்றிருப்பது போல் நவீன ஆயுதங்கள் இல்லை. ஷெல்லிங் இல்லை. கொத்துகுண்டுகள் இல்லை. அதனால் அவருடைய காலத்துக்கு அது பொருந்தும். இப்போது நிலைமை வேறு மாதிரி இருக்கிறது.

இலங்கை இந்தியாவின் ஒரு மாகாணமாக ஆகிவிட்டது. அதிலும் சிறைபிடிக்கப்பட்ட மாகாணமாக ஆகிவிட்டது. இன்று எம் மக்களுக்கு வேண்டியது நிம்மதியான ஒரு வாழ்க்கை, அவர்களுக்கு அன்றாடம் சாப்பாடும், மருந்தும் வேணும். முகாம்களில் இருந்து அவர்கள் வெளியேறணும். ஆனால் ராஜபக்சே அரசாங்கம் இதைச் செய்யாது. உலகமே சேர்ந்து அழுத்தம் கொடுத்தாலும் முகாம்களை அவவளவு சீக்கிரம் கலைக்க மாட்டார் ராஜபக்சே. ஏனென்றால் வழக்கறிஞரான அவருக்கு மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய அனைத்து சட்டங்களும், சட்டங்களை ஏமாற்றுவதும் அத்துப்படி.

புலிகள் அவர்களுக்கு மாற்று கருத்துடையவர்களை விட்டுவைக்க மாட்டார்கள் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். உஙகளை எப்படி விட்டு வைத்தார்கள்?

ஒருமுறை குமுதத்தில் பேட்டி வந்தபிறகு பிரான்ஸில் உள்ள இயக்க ஆதரவாளர்களால் பாரிஸில் வைத்து ஒரே மாதத்தில் மூன்று முறை நான் தாக்கப்பட்டேன். என்னை இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாளன் என்று சிலர் பொறுப்பில்லாமல்  எழுதி வெறுப்பேற்றுகிறார்கள். புலிகள் இயக்கத்தில் இருந்தபோதும் சரி, வெளியே வந்தபோதும் சரி, நான் அரசாங்கத்தை எதிர்த்தே வந்திருக்கிறேன். புலிகளை நூறு சதவிகிதம் எதிர்க்கிறேன் என்றால் அரசை இருநூறு சதவிகிதம் எதிர்க்கிறேன் என்றெல்லாம் பிரகடனப்படுத்தி இருக்கிறேன். 160 பக்கங்களைக் கொண்ட என்னுடைய ம்நாவலில்  155 பக்கங்கள் அரசாங்க எதிர்ப்புதான். கடைசி 5 பக்கம்தான் புலிகள் குறித்த விமர்சனம் வரும். வெறும் ஐந்து பக்கம் எழுதியதற்காக என்னை புலி எதிர்ப்பாளன் என்று சொல்பவர்கள் 155 பக்கங்களூக்காக என்னை அரசு எதிர்ப்பாளன் என்று சொல்வதில்லை. என் அரச எதிர்ப்பு என்பது சரியான ஒரு இடதுசாரி பார்வையுடனான் நிலைப்பாடு.

ஈழத்திற்கு செல்ல ஆசைப்படுகிறீர்களா?

டால்ஸ்டாய் கதைகளில் வரும் கதாநாயகனுக்கு உள்ள குற்றவுணர்ச்சியின் அளவு இல்லாவிட்டாலும்கூட, எனக்கு சிறிதளவாவது குற்றவுணர்வு இருக்கிறது. அங்கையற்கண்ணியின் அப்பாவும் அம்மாவும் நிலக்கடலை விற்பவர்கள். குழந்தையாய் இருந்தபோது நான் என் கையால் தூக்கி விளையாடிய அங்கையற்கண்ணி இயக்கத்தின்  தற்கொலைப்படையில் பலியான முதல் பெண். அவள் இயக்கத்தில் சேரும் சூழல் என்னால்தான் எங்கள் ஊரில் உண்டானது. எம் மக்களில் சிலரை நானே இயக்கத்தில் சேர்த்துவிட்டேன். இப்படி நான் சேர்த்த என் மக்கள், எம் இளைஞ்ர்கள் எத்தனையோ பேர் இன்று பலியாகிவிட்டார்கள். அவர்களது அம்மா அப்பா, சொந்தபந்தங்கள் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்? ஈழத்திற்குப் போக ஆசைதான். எப்படி ஆசை இல்லாமலிருக்கும்? ஆனால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் அங்கே இனி போவேன்?

13 comments:

  1. தனது பேட்டியில் அவர் சுருக்கமாக சொன்ன பல விடயங்களை விரிவாக 'கொரில்லா'

    வாசித்திருக்கிறேன்..

    நன்றி உங்கள் பதிவிற்கு!!

    ReplyDelete
  2. அந்தோணியின் கதை! நெஞ்சைநெருடும் கதை! பல வருடங்களுக்கு முன்பாக குமுதத்தில் வந்த பட்டாம்பூச்சிக்கு (ரா. கி. ரங்கராஜனின் மொழிபெயர்ப்பு நாவல் ) பிறகு மனதில் வலியை உணர்ந்தேன்! நல்ல நடை ! நல்ல பதிவு!

    ReplyDelete
  3. ஜீ!
    மாரிமுத்து!

    உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க் நன்றி!!

    ReplyDelete
  4. GREAT...KAVIN...!PLEASE CONTINUE TO WRITE..!!!
    THERE WERE MANY TAMIL YOUTHS JOINED VARIOUS MOVEMENTS..BUT EVERYTHING WAS RUINED BECAUSE OF DISUNITY,MISTRUST,UNDEMOCRATIC WAYS,IGNORANCE,FEAR,NON-RESPECT TO HR ETC!

    ReplyDelete
  5. நன்றி அக்கா அவரைப்பற்றிய தகவலை சொன்னதற்கு

    ReplyDelete
  6. வரலாற்றில் நெருக்கடிகளும் சிக்கல்களும் கொடுமைகளும் மட்டுமே நிரம்பிய ஒரு காலகட்டத்தில் சிக்கியிருக்கிறது இலங்கை. அதன் புயல்களில் அலைக்கழிக்கப்பட்ட ஒரு தனி மனிதர். பெரும் எதிர்பார்ப்புகளோடும் செல்வாக்கோடும் தாக்கத்தோடும் வலிமையோடும் இருந்த, தனக்கென கறாரான விதிகளைக் கொண்டிருந்த ஒரு இயக்கத்தில் செயல்பட்டவர். அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட பின் அவர் சந்திக்க நேரிடுகிற பலமுனைத் தாக்குதல்கள். இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது. பிசிறில்லாமல் அதையெல்லாம் சீராகத் தெரிவிக்கிறது கவின் மலரின் எழுத்தோட்டம்.

    ஆயினும், அந்தோணி ஷோபா சக்தியாக மாறியது எப்படி என்பதற்கான சிறு அறிமுகமே இதில் கிடைக்கிறது. ஏன் என்பதற்கான தெளிவு கிடைக்கவில்லை. எங்கே முரண்பட்டார், எதிலே முரண்பட்டார் என்பதும் திட்டவட்டாக வெளிப்படவில்லை. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் குழுவைச் சேர்ந்தவர்களது பிரசங்கத்தால் மாறியதாக மட்டும் வருவதால், சில தமிழ் ஈழ ஆதரவாளர்களின் இடதுசாரி எதிர்ப்புச் சாடல்களுக்குக் கொஞ்சம் அவல் கிடைத்ததாகிவிடுகிறது. இடதுசாரிப் பார்வையோடு இலங்கை அரசியலை அணுகத் தொடங்கினார் என்பது உயர்வான பாராட்டிற்குரியதுதான். இந்த இடம் தெளிவுபடுத்தப்பட்டிருந்தால் அந்தப் பாராட்டிற்கான ஒரு வலுவான காரணம் இதிலேயெ கிடைத்திருக்கும்.

    ஒருவேளை ஷோபாவின் எழுத்துகளில் ஏன் என்ற கேள்விக்கு விடையிருக்கலாம்தான். அது இதிலேயும் வந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  7. @shan nalliah & @shahul

    Thank you very much..

    @குமரேசன்

    Thank you

    நீங்கள் கூறுவது சரியே. இது ஒரு நேர்காணல். அதை வழக்கமான கேள்வி பதில் பாணியில் இல்லாது இப்படி சொன்னாலென்ன என்று தோன்றியது. அந்த இடம் வந்தவுடன் இங்கேதான் முடிக்க வேண்டுமென்று தோன்றியது. முடித்துவிட்டேன்.

    ”இது ஷோபா சக்தியின் கதையல்ல..” “அந்தோணியின் கதை தான்”.. அந்த நொடியில் இப்போது நாம் காணும் ஷோபாசக்தி உருவாகத்தொடங்கிய நொடி. அதோடு கதையை நிறுத்திவிட்டேன். இனி புதிதாக “ஷோபாசக்தியின் கதை” என்று ஒன்று எழுதலாம்.

    ReplyDelete
  8. வலிகளின் வரிகளாக அந்தோணி ஷோபா சக்தியாக மாறிய கதை.ஆனால் இன்னும் முழுவதுமாக வந்து இருந்தால் இன்னும் நன்று.பகிர்விற்க்கு நன்றி கவின்..

    ReplyDelete
  9. மிக அருமையான பதிவு. வாழ்வை ஒருபோதும் முழுமையாக விளக்கிவிட முடியாது. சில சமயம் கருத்தியல்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. அவை மழைக்கோ, வெயிலுக்கோ பிடிக்கும் குடைகளே தவிர, இல்லங்கள் அல்ல. ஷோபா சக்தியின் வாழ்க்கைக் கதை கூறுவது இதைத்தான் என நினைக்கிறேன். அவருக்கு எப்போதும் குடைகள் தேவைப்பட்டாலும்.

    ReplyDelete
  10. imagine. this Genocide is still being aggressively denied by certain self- proclaimed tamil Diaspora intellectuals. Some shamelessly act as PR-agents of Indian or srilankan Government. Some are real paid agent. only money makes that part of the world go round...

    ReplyDelete
  11. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
    சில நிகழ்வுகள் சினிமா தனமாக கற்பனை தனமாக இருக்கிறது. இலங்கையில் இருந்து ஜெர்மனி போக விரும்பும் ஒரு இளைஞன் சென்னை வந்ததும் ஜெர்மனி பயணம் பற்றிய அக்கறை இல்லாமல் இருப்பது போன்றவை.

    நண்பர் குமரேசன் சொல்வது போல, அந்த மலை பிரசங்கம் பற்றிய விவரங்கள் இன்னும் விளக்கமாக கூடுதலாக இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். தமிழ் சினிமாவில் ஒரு பாடலால் அல்லது ஒரு இரண்டு நிமிட ப்ளாஷ் பாக் காட்சியால் பாட்சா மாணிக்கம் ஆவனது போல இருக்கிறது, அந்தோனி ஷோபா சக்தி ஆவது.

    ReplyDelete
  12. அந்தோணி ஷோபா சக்தியாக மாறிய கதை. அருமையான பதிவு

    ReplyDelete
  13. Very nice, knew about LTTE.

    ReplyDelete