Wednesday, August 08, 2012

ஸ்ருதி இல்லாத வீடு

மாலை 4.15 மணி. வழக்கம்போல பள்ளிக் குழந்தைகளைச் சுமந்துகொண்டு செல்கிறது அந்த வேன். ஒட்டுநர் தன் இருக்கையில் அமர்ந்து வாகனத்தைச் செலுத்திக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு குழந்தையாக இறக்கிவிட்ட பின், இன்னும் எட்டு குழந்தை கள் வேனில் இருக்கிறார்கள். அப்போது அலைபேசி ஒலிக்கிறது. சென்னை சேலையூர் சீயோன் பள்ளியில் படிக்கும் குழந்தை ஸ்ருதி, பேருந்து ஓட்டை வழியாகக் கீழே விழுந்த செய்தி அந்த ஓட்டுநருக்கு வருகிறது. அவர் ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன்!

 தன் குழந்தை பள்ளிப் பேருந்து விபத்தில் உயிரிழந்த அதே நொடி, அவர் இன்னொரு பள்ளியின் குழந்தைகளைச் சுமந்துகொண்டு சென்ற வேனை ஓட்டிச் சென்றிருக்கிறார். செய்தியைக் கேட்ட பின்னும் பிஞ்சுக் குழந்தைகளைப் பொறுப்புடன் அவரவர் வீட்டுக்குச் சென்று சேர்த்துவிட்டுத்தான் விபத்து நடந்த இடத்துக்கு வந்திருக்கிறார்.

''நம்மளை நம்பி குழந்தைகளை ஒப்படைச்சிருக்காங்க. அவங்களை அப்படியே விட்டுட்டு வர முடியுமா? அதனால், பத்திரமாகக் கொண்டுபோய் விட்டுட்டு வந்தேன். எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. எப்படி யும் பிள்ளை பொழைச்சுருவானு நினைச் சேன். நான் மனுஷங்களை நம்புறவன். நூறு பேர் வேடிக்கை பார்த்தாலும், அதுல மூணு பேரு பிள்ளையை ஆஸ்பத்திரியில சேர்த்துருவாங்க. எப்படியும் அவ பொழைச்சுருவானு நினைச்சேன்.

எல்லாப் பிள்ளைகளையும் விட்டுட்டு நான் திரும்பி வரும்போதே வழியில டிராஃபிக் ஜாம். வேனை நிறுத்திட்டு ஜனங்களோட ஒருத்தனா ஸ்பாட்டுக்கு நடந்துதான் போக முடிஞ்சது. 'ஒரு குழந்தைக்கு இப்படியாகி ஸ்பாட்லயே உயிர் போயிடுச்சு’னு என் காதுபட மக்கள் பேசிக்கிறாங்க. ஆவேசமா ஸ்கூல் நிர்வாகத்தைத் திட்டுறாங்க. நான்தான் குழந்தைக்கு அப்பானு யார்கிட்டயும் சொல்லிக்கலை. ஸ்பாட்டுக்கு வந்து பார்த் தப்போ, பஸ் எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. ஸ்ருதி, என் மனைவி, நண்பர்கள் யாரையுமே காணோம். ஆஸ்பத்திரிக்கு குழந்தையின் உடலைத் தூக்கிட்டுப் போயிட்டதா சொன்னாங்க'' - அதற்கு மேல் பேச முடியாமல் கண்ணீர்விடுகிறார் ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன்.

சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார். ''நான் ஆட்டோ டிரைவரா இருந்தேன். இப்போதான் ஸ்கூல் வேன் ஓட்டுறேன். எத்தனையோ பேரு என் வண்டியில தவறவிட்ட பொருளை எல்லாம் பத்திரமாத் தேடிப்போய்த் திருப்பிக் குடுத்திருக்கேன். டிரைவருங்களை எப்படி மதிப்பாங்கனு உங்களுக்குத் தெரியாததா? என்னதான் உழைச்சாலும் எவ்வளவுதான் நேர்மையா  இருந்தாலும் 'இங்கே வாடா’ன்னுதான் கூப்பிடுவாங்க. அவ்வளவுதான் எங்க ளுக்கு மரியாதை... நானெல்லாம் செத்தா யாருங்க வரப்போறா? என் பொண்ணுக்குப் பாருங்க... எவ்வளவு கூட்டம். 20,000 பேர் இருக்கும்னு சொல்றாங்க. பொதுமக்களோட ஆதரவை என்னைக்கும் என்னால மறக்க முடியாது. மீடியாக்காரங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கேன். இத்தனை கூட்டம் எங்கே இருந்து வந்துச்சு? என் மகளை இதுக்கு முன்னால யாருக்குத் தெரியும்? விஷயம் தெரிஞ்சவுடன் ஓடோடி வந்த பல பேரை எனக்கு யாருன்னே தெரியாது. ஒரு கஷ்டம்னா யாருன்னே தெரியாம வந்த ஜனங்களைப் பார்க்கும்போது...'' என்று முடிக்க முடியாமல் மீண்டும் கண்ணீரின் பிடிக்குள் செல்லும் சேதுமாத வனைப் பார்க்கையில் துயரும் நெகிழ்ச்சியு மாகக் கண்கள் குளமாகின்றன.

'நடுரோட்டில் மயக்கம் போட்டு விழுந் தாலும்கூடக் கண்டுகொள் ளாத நகரத்து மக்கள்’ என்று சென்னைக்கு இருக் கும் பிம்பத்தை உடைத்து எறிந்திருக்கிறது சுருதியின் மரணம்.

பகலிலும் துயரத்தின் இருள் படிந்துகிடக்கிறது ஸ்ருதியின் வீடு. அவள் துள்ளி விளையாடிய அந்த வீட்டில் கனத்த மௌனம். அவளுடைய அண்ணன் பிரணவும் ஸ்ருதியும் எப்போதும் எல்லாவற்றுக்கும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள். இப்போது பிரணவுக்குச் சண்டை போடத் தங்கை இல்லை. அவன் உள்ளம் ஸ்ருதிக்கு நேர்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதை அவன் கண்கள் பிரதிபலிக்கின்றன. ''எப்ப வும் சண்டை போட்டாலும் வெளியில பிரணவை யாராவது அடிச்சுட்டா 'எங்க அண்ணனை நீ எப்படி அடிக்கலாம்’னு சண்டைக்குப் போவா ஸ்ருதி'' என்கிறார் ஸ்ருதியின் தாய் ப்ரியா.


வீட்டில் உள்ள புகைப்பட ஆல்பம் பூராவும் ஸ்ருதியே நிறைந்திருக்கிறாள். நடனம், பாட்டு, ஓவியம் என்று எல்லாவற் றிலும் பரிசு வாங்கும் ஸ்ருதியின் படங்களில் தெரியும் மின்னல் போன்ற முகமும் பளீர் கண்களுமாக ஓர் ஓவியம்போல் இருக்கிறாள். ''பாட்டுன்னா ஸ்ருதிக்கு ரொம்ப இஷ்டம். டி.வி-யில் அவளுக்குப் பிடிச்ச பாட்டு வந்தா பாடிக்கிட்டே டான்ஸ் ஆடுவா. அவளுக்குப் பிடிச்ச விஷயம் பாட்டும் டான்ஸும். பரதமும்

கர்னாடக சங்கீதமும் கத்துக்கிட்டா. திடீர்னு ஸ்ருதி சத்தமா 'ஸரிகமபதநிஸ’னு பாடி பிராக்டீஸ் பண்ணுவா. எல்லாப் போட்டிகள்லேயும் கலந்துப்பா. அவளுக்குச் சமைச்ச காய்கறி பிடிக்காது. பச்சைக் காய்கறியா சாப்பிடுவா. சாயங்காலம் ஸ்கூல் முடிச்சு வந்தவுடன் பையை வெச்சுட்டுக் கிளம்புவா. அப்புறம் அவ எந்த வீட்டுல இருக்கான்னே தெரியாது. இந்த ஏரியாவுக்கே அவ செல்லப் பிள்ளை. எல்லாருக்கும் அவளைப் பிடிக்கும். அவ பேச்சும் சிரிப்பும் எல்லாரையும் கவர்ந்துரும். 'எங்க வீட்டுக்கு வா... உங்க வீட்டுக்கு வா’னு அக்கம்பக்கத்தில் உள்ளவங்க அவளைக் கூப்பிட்டுக் கொஞ்சுவாங்க. அவ எங்க பிள்ளைனு சொல்றதைவிட, இந்த குவார்ட்டர் ஸுக்கே பிள்ளையா இருந்தா'' என்ற ப்ரியாவை அக்கம்பக்கத்து வீட்டினர் ஆமோதித்தனர்.

''ஸ்ருதி படிச்ச சீயோன் ஸ்கூல் தாளாளருடைய மகன் கல்லூரியில படிச்சப்ப டூர் போனார். போன இடத்துல புதைகுழில விழுந்து இறந்துட்டார். அப்போ இதே தாளாளர் பத்திரிகையில கொடுத்த பேட்டியை நான் படிச்சேன். 'கல்லூரி நிர்வாகம் அலட்சியமா இருந்ததாலதான் என் பிள்ளை இறந்தான்’னு அன்னைக்குக் குத்தம் சொன்னார்.

ஆனா, ஏழாயிரம் பிள்ளைகளைக் காப்பாத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிற இவரே இன்னைக்கு அலட்சியமா இருந்துட்டாரே! அவருக்கு ஒரு நியாயம்; எனக்கு ஒரு நியாயமா? நீங்களே சொல்லுங்க'' என்று கேள்வி எழுப்பிய சேதுமாதவனைத் தொடர்ந்த ப்ரியா, ''எப்பவும் பிள்ளைகளோட ஷூ, டிபன்பாக்ஸுன்னு காணாமப் போயிடும். நாங்கள்லாம் பிள்ளைங்கதான் காணடிச்சுடறாங்கனு நினைச்சுட்டு இருந்தோம். பிள்ளையே விழுந்ததுக்கு அப்புறம்தான் தெரியுது, அதெல்லாம் அந்த ஓட்டை வழியா விழுந்துருக்குனு. ஷூ, டிபன் பாக்ஸ் போனா வாங்கிக்கலாம். எங்க ஸ்ருதியை எங்களுக்கு யார் திருப்பித் தருவாங்க?'' என்று தேம்பியபடியே தொடர்ந்தார் ப்ரியா.

''மெயின் ரோட்டுல பஸ் வந்து பிள்ளைகளை இறக்கிவிடும். அங்கேர்ந்து அவளைக் கூட்டிட்டு வீட்டுக்கு வர்றதுக்கு வழக்கம்போலக் காத்திருந்தேன். பஸ் எங்களைக் கடந்து 200 அடி போய் யூ-டர்ன் எடுத்துத் திரும்பி வந்து நிற்கும். அப்படிக் கடக்கும்போது பிள்ளைகள் எங்களுக்குக் கை ஆட்டுவாங்க. அப்படி அன்னைக்கும் என்னைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே கையாட்டினா ஸ்ருதி. அதுதாங்க அவளைக் கடைசியா உயிரோட பார்த்தது. யூ-டர்ன் எடுத்துத் திரும்பி வர்றதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. யாருக்கும் வரக் கூடாது இந்த மாதிரி சாவு... நாங்க இத்தனை துக்கத்துல இருக்கும்போது, வீட்டுக்கு யாரோ மூணு பேர் வந்து ஸ்கூல் பேரை பத்திரிகைகாரங்ககிட்ட சொல்லாதீங்க’னு மிரட்டினாங்க. கூடியிருந்த கூட்டமே அவங்களைத் துரத்தி அனுப்பிடுச்சு'' என்றார்.

''எங்களுக்கு நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்கக் கூடாதுங்க. செத்தும் கொடுத்த சீதக்காதி மாதிரி என் பொண்ணு தன் உயிரைக் குடுத்து இந்த நாட்டுக்கே ஒரு பாடம் சொல்லிக்குடுத்துட்டுப் போயிருக்கா. இப்பப் பாருங்க அங்கங்க ஸ்கூல் பஸ்ஸை எல்லாம் செக் பண்றாங்களாம். பல புள்ளைங்களோட உயிரைக் காப்பாத்த என் பொண்ணு உயிர் குடுத்துருக்கா. இனி, ஒரு புள்ளைக்கு இந்த நிலைமை வரக் கூடாதுங்க'' என்கிறார் சேதுமாதவன்.

ஸ்ருதியின் வீட்டைவிட்டு வெளியே வந்தபோது வீட்டுக்குள் பரவி இருந்த துக்கத்தின் இருள் வெளியேயும் பரவி இருந்தது.

4 comments:

  1. இழப்பின் வலியை உணர்ந்திருக்கிறேன். நாட்டுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கத் தன் உயிரையே தந்திருக்கிறால் ஸ்ருதி. அவள் புகழுடம்பு வாழும்..

    ReplyDelete
  2. வலிக்கிறது. வலிக்கிறது. சுருதிக்கும் பிறகு அடுத்தடுத்து 3 குழந்தைகள்..சிறுமிகள் வெவ்வேறு பிரதேசங்களில் பலியாகியிருக்கிறார்கள். சாபக்கேடான மாதமாக அமைந்த இந்த காலங்களை சபிக்க தோன்றுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் பொறுப்பேற்க வேண்டிய துயரமிது. கவனயீனமும்..அலட்சியமும் குழந்தைகளை காவு கொடுத்து விட்டிருக்கிற நிலைக்கு தள்ளி விட்டிருக்கிறது.

    ReplyDelete
  3. வேதனைப்படும் சம்பவம்....

    படித்து விட்டு மனதில் பாரம்...

    சேதுமாதவன் அவர்களின் மனித நேயத்திற்கு தலை வணங்குவோம்...

    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  4. அவரவர் பொறுப்பை அவ்ரவர் உணர நாம் கொடுக்க வேண்டிய விலை குழந்தைகளின் மரணம்தானா? வெட்கக்கேடு.

    ReplyDelete