Thursday, January 10, 2013

அன்பானவர்களுக்கு ஒரு கடிதம்


ன்பானவர்களுக்கு...

 இந்தக் கடிதம் ஆண்களுக்கு மட்டுமே அல்ல. அனைத்துப் பாலினத்தவரை யும் உள்ளடக்கிய பொது சமூகத் துக்கு! துரதிர்ஷ்டவசமாகப் பெரும்  பாலான பெண்களின் அடிமனதிலும் ஆணாதிக்கம் பொதிந்துகிடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகவே, இது அத்தகைய பெண்களுக்கும் சேர்த்துதான்.

'என் வீடு... என் மக்கள்’ என்று வாழும் நம்மில் பலரையும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த டெல்லி மாணவியின் மரணம் அசைத்துப் பார்த்திருக்கிறது. பக்கத்து வீட்டில் இடி விழுந்தாலும் எனக்கென்ன என்றிருக்கும் மனோபாவத்துடன் இருப்பவர்களைக்கூட, தெருவில் இறங்கிப் போராடவோ அல்லது ஒரு சொட்டுக் கண்ணீர் விடவோ அல்லது கணநேரம் கவனிக்கவோ வைத்திருக்கிறது மிகக் கொடூரமாக நிகழ்ந்த அந்த வன்முறை வெறியாட்டம். டெல்லியில் 23 வயது மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, இரும்புத் தடிகொண்டு தாக்கப்பட்டு, வீசி எறியப்பட்டு குற்றுயிரும் கொலையிருமாகக் கிடக்கும் செய்தி வெளியானவுடன் பதறும் நாம், இத்தனை நாட்களும் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளை வெற்றுச் செய்திகளாகக் கடந்துகொண்டுதானே இருந்தோம்? நம்மை சிந்திக்கவைக்க, நம்மைச் சமூகத்தின் மேல் அக்கறை கொள்ளவைக்க ஒரு பெண் தன்னுயிரை ஈந்திருக்கிறாள். இவ்வளவு கொடூரம் நடந்தால்தான் நான் திரும்பிப் பார்ப்பேன் என்கிற நம் மனநிலை சரிதானா? டெல்லியில் மட்டும் அல்ல... தமிழ்நாட்டில், நமக்கு மிக அருகே, நம் ஊரில் நடக்கும் பாலியல் கொடுமைகள்குறித்து நாம் கவலைப்பட்டு இருப்போமா?



டெல்லி மாணவியின் உண்மையான பெயர் எதுவாகவும் இருக்கட்டும். ஆனால், இந்தியப் பெண் களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் சித்ரவதை அனுபவித்த அந்த மாணவியை நான் 'அவள்’ என்றே உரிமையுடன் அழைக்க எண்ணுகிறேன். அவள் மீது இரும்புத் தடியால் விழுந்த ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் இந்தியப் பெண்ணின் மீதும் விழுந்த அடி. அந்தக் கதறல் நாடெங்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வெளியில் கூற இயலாமல் உள்ளுக்குள் மருகிக்கொண்டு இருக்கும் எண்ணற்ற பெண்களின் கதறல். மருத்துவ மாணவி அவள். ஒருவேளை இந்தக் கொடூரம் நிகழாமல் இருந்திருந்து, அவள் சகஜ வாழ்க்கை வாழ்ந்திருந்தால், அவள் ஒரு பிசியோ தெரபி மருத்துவர் ஆகியிருப்பாள். ராம்சிங்குக் குக்கூட பின்னாளில் அவள் மருத்துவ சிகிச்சை அளித்திருக்கக்கூடும். ராம்சிங் அவளைச் சிதைத்த ஆறு பேர்களில் ஒருவர். என்ன செய்வது?


மரணப்படுக்கையில் இருந்தபோது அவள் வாழ விரும்பியதாக அவளுடைய தாய் தெரிவிக் கிறார். என்னென்ன எண்ணியிருக்கும் அந்த மனம்? அவளுடைய சிந்தனை, கனவுகள், கற்பனைகள், எதிர்காலம், வாழ்க்கை எல்லாமும் அவளை எரித்த சிதையிலேயே சாம்பலாகிவிட்டன. ஆனால், அவள் இறப்பு பல  விவாதங் களுக்கு வழிவகுத்து இருக்கிறது.

நாகரிகம், கலாசாரம்குறித்த மதிப்பீடுகளை வைத்திருக்கும் சாதாரண மக்களை நோக்கியே இந்தக் கடிதம்!

டெல்லி மாணவி, ஏன் இரவு 9 மணிக்கு மேல் ஆண் நண்பருடன் வெளியில் சென்றாள் என்றும், பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களுக்கெல்லாம் பெண்கள் உடுத்தும் உடைதான் காரணம் என்றும் கருத்துக் கூறுபவர்களை நோக்கி ஒன்று கேட்க விரும்புகிறேன். சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகாஷாவின் துப்பட்டாவைப் பிடித்து இழுத்து அவள் உயிரைப் பறித்தனர். சிறைக்குள்ளேயே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார் ரீட்டா மேரி. மகாராஷ்டிராவில் கயர்லாஞ்சியில் நடு வீதியில்... குடும்பத்தினரின் கண் எதிரே அணுஅணுவாகச் சிதைக்கப்பட்டார் பிரியங்கா. உத்தர்காண்ட் மாநிலத்தில் சோனாலி முகர்ஜியின் பொலிவான முகம் திராவகம் வீசிச் சிதைக்கப்பட்டது. திருக்கோவிலூரில் இருளர் பெண்கள் நான்கு பேரைக் காவல் துறையினர் வன்புணர்ச்சி செய்தனர். வாச்சாத்தி கிராமத்தில் வனத் துறை யினரும், காவல் துறையினரும் இணைந்து பெண்கள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டனர். காதலை மறுத்த காரணத்தால் காரைக்கால் விநோதினியின் பொலிவான முகம் மீது திராவகம் வீசப்பட்டது. இவர்களெல்லாம் அரைகுறை ஆடை உடுத்தியிருந்தனரா? அல்லது இரவு 9 மணிக்கு மேல் ஆண் நண்பருடன் வெளியில் சென்றனரா? தூத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஒரு பள்ளிச் சிறுமி வல்லூறுகளால்சிதைக்கப் பட்டு கொல்லப்பட்டாள். சிதம்பரம் முட்லூர் அருகே சந்தியா என்ற பெண், தான் வேலை பார்த்த ஸ்டுடியோவிலேயே அண்மையில் மூன்று பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். ப்ரியா என்கிற மாணவி விழுப்புரம் அருகே அண்மையில் கொலை செய்யப்பட்டார். இவர்கள் மூவருமே தலித் பெண்கள். சரிகாஷா, விநோதினி மீது ஏவப்பட்டது ஆணாதிக்கம் என்றால், திருக்கோவிலூர், வாச்சாத்தியில் நிகழ்ந்தவை அதிகார வர்க்கத்துடன் இணைந்த ஆணாதிக்கம். கயர்லாஞ்சி, தூத்துக்குடி, சிதம்பரம், விழுப்புரத்தில் அது சாதிய ஆணாதிக்கம்.

இன்றும் இந்தியக் கிராமப்புறங்களில் குளியலறை வசதி இல்லாத வீட்டுப் பெண்கள் குளங்களிலும் மற்ற நீர்நிலைகளிலும்தான் குளிக்கிறார்கள். அவர்கள் கட்டிய பாவாடையுடன்தான் குளிக்கிறார்கள். உடை தான் காரணம் என்றால், அவர்கள் அனைவரும் தினமும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு இருக்க வேண்டுமே? உங்கள் வீட்டுப் பெண்ணுக்கு வெளியில் சென்றபோது இப்படியான கொடூரம் நிகழ்ந்தால், அவள் குறைவாகவே உடுத்தி இருந்தாலும், அவள் உடுத்திய உடைதான் காரணம் என்று சொல்லி இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுவீர்களா?

இந்த 21-ம் நூற்றாண்டிலும் பொழுதுபோன பின்னால் பெண்களை வீட்டுக்குள்ளேயே பூட்டிவைப்போம் என்று கூறும் விந்தை மனிதர்களாக இங்கே பலர் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் என்று பல பெண்கள் விண்வெளிக்குச் சென்றார்கள். அவர்கள் வெளிநாடுகளில் வசித்தாலும், இந்தியாவின் சார்பாக விண்வெளிக்குச் செல்லவில்லையெனினும், பல தலைமுறைகளுக்கு முன்னரே அமெரிக்காவில் சென்று தங்கிவிட்டவர்களாகவே இருந்தாலும், 'எங்கள் இந்திய வம்சாவளிப் பெண் சாதித்துவிட்டாள்’ என்று கொண்டாடுகிறீர்களே? விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்த பி.டி.உஷா, ஷைனி வில்சன், சானியா மிர்சா, சாய்னா நேவால், மேரிகோம் என்று அத்தனை பேரையும் உச்சி முகர்ந்து வரவேற்கிறீர்களே? உங்கள் சிலாகிப்புக்கு ஆளாகும் இவர்களுக்கு, விளக்கு வைத்த பின் வெளியில் செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருந்தால், இந்தச் சாதனையை அவர்களால் நிகழ்த்தியிருக்க முடியுமா? இன்றைக்கு அபார சம்பளத்தை வாரி வழங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பெண்களில் பலர் இரவு நேரங்களில் பணியாற்றுகிறார்கள். அவர்களைப் பணிக்குச் செல்லக் கூடாது என்று தடுக்க முடியுமா? அந்த சம்பளத்தை அவர்கள் தத்தமதுக் குடும்ப நலனுக்குத்தானே செலவழிக்கிறார்கள்? உயிர் காக்கும் மருத்துவச் சேவையில் ஈடுபடும் செவிலியர் கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வந்து மருத்துவமனைகளில் பணி யாற்றக் கூடாது என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு உண்டா?

உலகம் எங்கோ சென்றுகொண்டு இருக்கிறது நண்பர்களே! ஆனால், நாம் இந்தப் புள்ளியில் தேங்கி நிற்கிறோம் என்பதை நினைக்க வேதனையாக இருக்கிறது. குற்றம் செய்தவர்களை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாக்கும் விநோதம் இங்கே நிகழ்கிறது. இப்படிப்பட்ட விநோதத்தை நிகழ்த்துபவர்கள் உங்களில் சரிபாதியினர் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனம் இருக்கிறதா உங்களிடம்?

பாலியல் குற்றங்கள் வீடுகளிலும், குடும்பங் களிலும் நிகழ்கின்றன. எத்தனையோ பெண்கள் இவற்றை வெளியில் சொல்லா மல் தங்களுக்குள் புதைத்துக்கொள்கின்றனர். நெருங்கிய சொந்தங்கள்கூட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் குற்ற ஆவண அமைப்பின் புள்ளி விவரப்படி 2011-ம் ஆண்டில் 677 பாலியல் வன்கொடுமை வழக்குகள் தமிழ்நாட்டில் மட்டும் பதிவாகி இருக்கின்றன. இந்தப் புள்ளிவிவரம் கூறுவது என்ன?

பெண்கள் மீதான பார்வை நமக்கு எப்படி இருக்கிறது? இந்தக் கேள்வி, பாலினப் பாகுபாடு இன்றி அத்தனை பேரின் முன்னரும் வைக்கப்படும் கேள்வி. பெண்கள் என்றால் யார்? இந்தக் குடும்ப அமைப்பும் சமூகமும் பெண்கள்குறித்து என்ன பார்வையை வளரும் குழந்தையின் மனதில் பதியவைக்கிறது? கள்ளங்கபடம் இன்றிப் பழகும் குழந்தைகளில், பெண் குழந்தை பெரியவளானதும், ஆண்களுடன் பேசத் தடை விதிப்பது, அவளை விளையாட அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்வது போன்ற நடைமுறைகள் இன்றும் தொடரத்தான் செய் கின்றன. ஒரு குழந்தை அதிக நேரத்தைச் செலவழிப்பது பள்ளியிலும் வீட்டிலும்தான். இந்த இரண்டு இடங்களிலுமே பெண்கள் குறித்து நாம் என்ன போதிக்கிறோம்? நம் வீடு களில் எத்தனை வீடுகளில் ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் சமமாகப் பாவித்து வளர்க்கிறோம்? வளரும்போது காட்டும் பாகு பாடு, ஓர் ஆண் குழந்தையின் மனதில் பெண் என்பவள் ஆணுக்கும் கீழே என்கிற கருத்தை மிக ஆழமாகப் பதிவுசெய்கிறது. இதன் நீட்சி யாகவே இன்றைக்குப் பெண்களுக்குப் பாலியல் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

ஓர் ஆண் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை வல்லாங்கு செய்துவிட முடிகிற ஒரு சமூகத்தில், திருமணத்தில்கூட ஒரு பெண்ணுக்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது. அவளுடைய பாலியல் சுதந்திரத்தைக் கேள்வி கேட்கும் ஆணாதிக்கம்தான் தர்மபுரியில் மூன்று கிராமங்களின் மீது நடந்த தாக்குதலுக்கு அடிப்படைக் காரணம். திவ்யா என்கிற ஆதிக்க சாதிப் பெண் இளவரசன் என்கிற ஒரு தலித் இளைஞனைத் தன் துணையாகத் தேர்ந்தெடுக்கிறார். அப்படித் தேர்வு செய்யும் சுதந்திரத்தை அவளுக்கு மறுத்தவர்கள், சாதி உணர்வுடன் கூடிய ஆணாதிக்கத்தால்தான் மூன்று ஊர்களைக் கொளுத்தினார்கள். ஓர் ஆதிக்க சாதி ஆண், தன்னைவிட சமூக அடுக்கில் கீழே வைக்கப்பட்டுள்ள சாதியிலோ அல்லது தலித் சாதியிலோ துணையைத் தேர்ந்தெடுத்தால் அதற்காக இத்தகைய கொடூரத் தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றனவா? நம் வீடுகளிலும் குடும்பங்களிலும் காணப்படும் பாலினப் பாகுபாடுதான் தர்மபுரி, டெல்லி வரை பயணிக்கிறது.

வீடுகளில் நிலைமை இப்படியென்றால், நம் கல்விக்கூடங்கள்? ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக பள்ளிகளும் கல்லூரிகளும் நடத்துவதே அடிப்படையில் மிகத் தவறானது. வளரிளம் பருவத்தில் இரு பாலினத்தவரையும் பிரித்துவைப்பதால், எதிர்பாலினத்தவரை ஏதோ கிடைப்பதற்கரிய பொருள் என்று இரு பாலினத்தாருமே நினைத்துக்கொள்வதற்கே வழிவகை செய்கிறது.
பாலினம் கடந்த நட்பு என்கிற ஒன்றுக்கு சாத்தியம் இல்லாமல் செய்யும் இந்தப் பிரிவினை கள், பெண்ணை ஒரு போகப் பொருளாகப் பார்க்கச் செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக் கின்றன. வீடுகளிலும் கல்விக்கூடங்களிலும்

மட்டும் அல்ல; பொழுதுபோக்கச் செல்லும் திரையரங்குகளில் காட்டப்படும் திரைப்படங் களும், விளம்பரங்களும் பெண்களை நுகர்வுப்பொருளாகச் சித்திரிக்கின்றன. பெரும்பாலும் ஆண்களின் கைகளில் இருக்கும் இத்தகைய துறைகளில் பெண்களைச் சித்திரிக்கும் விதம் குழந்தைகளின் மனங்களில் ஆழமாகப் பதி கின்றன. இவற்றையெல்லாம் பார்த்து வளரும் பெண் குழந்தை, தன்னை ஆணைவிடப் பலவீன மானவள் என்றும், ஆண் குழந்தை தன்னைப் பெண்ணைவிடப் பலமானதாகவும் எண்ணிக் கொள்ளும் அபாயம் நிகழ்கிறது. ஆகவே, வாய்ப்பு கிடைக்கும்போது பாலியல் குற்றங்களில் ஈடுபட இவையெல்லாம் ஏற்கெனவே அடித்தளம் அமைத்துக்கொடுத்திருக்கின்றன.

நம் வீட்டுக் குழந்தைகளிடம் பாலினப் பாகுபாடு காட்டி வளர்ப்போம்; ஆனால், டெல்லியில் நிகழும் ஒரு வன்கொடுமைக்காக வருத்தப்படுவோம் என்று இருப்பதில் நியாயமே இல்லை. பெண் குழந்தைகளுக்கு 'குட் டச், பேட் டச்’ சொல்லிக்கொடுப்பதோடும், தற்காப்புக் கலைகள் கற்றுக்கொடுப்பதோடும் நின்றுவிடுவதல்ல இந்தச் சமூகத்தின் கடமை. ஆண் குழந்தைகளின் மனதில் எதிர்பாலினத்தவரைத் தோழமையுடன் அணுகக் கற்றுத்தர வேண்டும். குழந்தைகளை இருபாலினத்தவரும் படிக்கும் பள்ளியில் படிக்கவைப்போம். எதிர்பாலினத்தவருடன் நட்புகொள்ள அனுமதிப்போம்.

மாற்றங்கள் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். நம் துறையில் இருந்து தொடங்க வேண்டும். நம் வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும்!


இப்படிக்கு,
உங்களில் ஒருத்தி.

(நன்றி - ஆனந்த விகடன்)

1 comment:

  1. பட்டாசு தான் அக்கா உங்கள் எழுத்து...மிகத்தேவையான ஒன்று.
    உங்கள் சகோதரனுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவன் நாகையில்.
    உங்கள் எழுத்துக்களை தவறாமல் படிக்கிறேன்.

    ReplyDelete