Wednesday, July 09, 2014

மனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை

ரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில்   தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் மழைத்தூறலுடன் கொல்லம் அருகேயுள்ள இரவிபுரத்திலுள்ள அந்த வீட்டிற்குச் சென்றபோது குழந்தைமை பொருந்திய சிரிப்புடன் வரவேற்கிறார் மணியன்பிள்ளை.  தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சீரியல். வெளியே தடதடத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு ரயில். ஓர் உரையாடலுக்குத் தயாராய் எதிரில் வந்து அமர்கிறார்.

யார் இந்த மணியன்பிள்ளை? “பதினேழு வயதுமுதல் இன்று வரையிலான என்னுடைய வாழ்க்கை முழுவதுமே பயத்தாலும் பாதுகாப்பின்மையாலும் உழன்றுகொண்டிருக்கிறது. இளமையை என்னால் அனுபவிக்க இயலவில்லை. மனைவியுடன் ஒருபோதுமே மன அமைதியாகப் படுத்துத் தூங்கியதுமில்லை. குற்றவாளிகளாலும் குற்றவாசனையுள்ளவர்களாலும் நிம்மதியாகத் தூங்க முடியாது. சிறைச்சாலைகளும் போலீசாரின் சித்திரவதைகளும் தந்த வியாதிகள்...” என்கிறார் ‘நான்’ என்கிற தலைப்பில் தன்குறித்து எழுதும் முன்னாளில் திருடனாயிருந்த மணியின்பிள்ளை. ஒரு நாள் திருடனை வாழ்நாள் திருடனாக்கியது காவல்துறை என்பதை தனது சுயசரிதையில் பல்வேறு வாழ்க்கைச் சம்பவங்கள் மூலம் நமக்குச் சொல்கிறார். இவர் சொல்லச் சொல்ல மலையாளத்தில் ஜி.ஆர். இந்துகோபன் எழுதிய இவரது சுயசரிதை நூல் இன்றுவரை 6,000 பிரதிகள் விற்றிருக்கின்றன. அண்மையில் தமிழில் குளச்சல் முகமது யூசுப் மொழியாக்கத்தில் தமிழில் ’திருடன் மணியன்பிள்ளை’ என்கிற பெயரில் வெளிவந்தது. தமிழ் இலக்கிய வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த இப்பிரதி குறித்து மலையாள இலக்கிய உலகில் நூல் வெளியான சமயத்தில் கனத்த மௌனம் நிலவியதாக மதுரையில் இந்த நூலுக்காக நடந்த விமர்சனக்கூட்டத்தில் பேசிய ஜி.ஆர்.இந்துகோபன் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அதே கூட்டத்தில் வந்து பேசமுடியாமல் கண்ணீர் சிந்தியவாறே கூட்டத்தை நோக்கி கைக்கூப்பிய மணியன்பிள்ளையின் மனதில்  பொங்கும் மனிதநேயத்தை தரிசிக்கவேண்டுமெனில் நூலை வாசிப்பது ஒன்றுதான் வழி. இவர் திருடிய ஒரு வீட்டின் சிறுமி நீதிமன்றத்தில வந்து அழுததைப் பார்த்த அவர் சிறையிலிருந்து ஒரு கடிதம் எழுதி “மகளே! மாமா திருடியதை உனக்கே திருப்பித் தந்துவிடுவேன். இனி நீ நீதிமன்றத்துக்கு வரவேண்டாம். அழவும் வேண்டாம்” என்று ஒரு அக்குழந்தையிடம் பாவமன்னிப்பு கேட்கும் இடம் ஒன்றுபோதும்.

நூலில் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், சிறைத்துறையினர், பெரும்புள்ளிகள், அரசியல்வாதிகள் என்று பலர் குறித்தான உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவர்கள் எல்லாம் இதை எவ்வாறு எதிர்கொண்டனர்? “நீதிபதிகள் போன்ற வெகு சிலருடைய பெயர்களை மாற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். மற்றபடி என் உறவுக்காரர்கள் இதை விரும்பவில்லை. ஆனால் எனக்கு அவர்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் இந்த நூல் வருவதற்கு முன்பிருந்தே இல்லை” என்கிறார் மணியன்பிள்ளை. நூல் வெளியானபின் காவல்துறை அவர்மீது இதுவரை 12 வழக்குகள் போட்டிருக்கிறது. அதில் 11 வழக்குகளில் மீண்டு ஒரே ஒரு வழக்கு மட்டும் நடந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார் மணியன்பிள்ளை சகோதரியின் வீட்டில் வசிக்கிறார். சாலைகளில் பேருந்தில் ரயிலில் என்று செல்லும்போது மக்கள் அடையாளம் கண்டுகொண்டு வந்து பேசுவதைக் குறிப்பிடும் அவர் “மக்கள் என்னிடம் நீங்கள்தானா மணியன்பிள்ளை என்று கேட்டு அன்போடு அணைத்துக்கொள்கிறார்கள். என்ன வித்தியாசம் பாருங்கள்!” என்கிறார்.”நான் 95ல் வி.ஆர்.எஸ். வாங்கிவிட்டதால் இப்போது ஃபீல்ட் எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை.” என்று சிரிக்கிறார்.

ஒரு கச்சிதமான திரைக்கதை போல உள்ளது மணியன்பிள்ளையின் வாழ்க்கை. 65 வயதாகும் அவருடைய வாழ்வில் நிகழ்ந்தவற்றைவிட ஒரு சினிமா எதையும் பெரிதாகச் சொல்லிவிடப்போவதில்லை. அத்தனை திகில், திருப்பங்கள், வேதனைகள், மரணங்கள், உயரங்கள், பள்ளங்கள் என்று எல்லாவற்றையும் பார்த்துவிட்ட அவரிடம் எல்லாமே அனுபவங்களாக எஞ்சி நிற்கின்றன. மணியன்பிள்ளையிடம் இந்த நூலில் உங்களுக்குப் பிடித்த பகுதி எது என்று கேட்டால் “அம்மா குறித்தவைதான்” என்கிறார். தன் பர்ஸில் நடிகை அமலாவின் சாயலில் இருக்கும் மனைவி மெஹருன்னிசா, தங்கை, தங்கையில் பிள்ளைகள் என்று குடும்பத்தினர் அத்தனை பேரின் புகைப்படங்களையும் பாஸ்போர்ட் அளவில் வைத்துக்கொண்டே போகுமிடமெல்லாம் செல்கிறார். மெஹருன்னிசாவை மணக்க முஸ்லிமாக மாறி யூசுப் பாட்சாவானார்.


இவருடைய நூலை பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டபோது அது ஒரு திருடனின் சுயசரிதை என்பதாலேயே நிராகரிக்கப்பட்டது. ஆனால் என்ன முரண்பாடு? அவருடைய கதை இன்று சினிமாவாகி உலகமே பார்க்கப்போகிறது.  ”பலர் என்னை பணம் சேர்க்கச் சொல்கிறார்கள் இனி சேர்த்து என்னதான் செய்யப்போகிறேன்? என் கதை சினிமாவாகப் போகிறது. அப்போது கொஞ்சம் பணம் கிடைக்கும். அதில் இரண்டு செண்ட் நிலம் வாங்கி ஒரு வீடு கட்டவேண்டும். இதுதான் ஒரேயொரு ஆசை எனக்கு. ” என்கிறார்.

26 திரைப்படங்களிலும் 30 நெடுந்தொடர்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் ‘வேட்டைக்காரன்’ படத்தில் சாமியார் வேடத்தில் நடித்த மணியன்பிள்ளைக்கு தமிழில் விஜய் படங்கள் என்றால் மிகவும் இஷ்டம். அழகாகப் பாடும்திறன் கொண்டவர் இப்போது உடல்நலம் சரியில்லை என்பதால் பாடுவதில்லை. மலையாளத்தில் மிகவும் பிடித்த இசையமைப்பாளர் ரவீந்திரன். தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன். இந்தியில் பப்பிலஹரி என்று அடுக்குகிறார். தமிழில் தன் அபிமான பாடலென அவர் குறிப்பிடும் பாடல் இது. “குயிலைப் புடிச்சு கூண்டிலடைச்சு கூவச்சொல்லுகிற உலகம். இந்தப் பாட்டைக் கேட்டால் கண்ணீர் விட்டு அழுவேன். அப்படித்தானே என் வாழ்க்கையும். நிம்மதியில்லாத வாழ்க்கை. அதற்குக் காரணமும் நான் தான். வேறு யாரைச் சொல்ல முடியும் நான்” என்கிறார்.

வாழ்த்துங்கல் கிராமத்தின் ரயில்வே கேட்டை கடந்து வந்து அந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து ஆட்டோ ஏற்றிவிடுகிறார். தங்கும் விடுதிக்கு விரையும் ஆட்டோவிலிருந்து இறங்கியபின் பேசிய நூறு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் குறைத்துக்கொண்டு தொண்ணூறு ரூபாய் மட்டும் வாங்குகிறார் ஆட்டோ ஓட்டுநர். வியப்போடு புருவம் உயர்வதைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார். “நீங்கள் மணியன் அண்ணனின் விருந்தாளியல்லவாமணியன் அண்ணனுக்காக பத்து ரூபாய் குறைத்துக்கொண்டேன் அவரை எங்களுக்குப் பிடிக்கும். அவர் எப்போதும் கொழுத்தவர்களிடம் திருடி இல்லாதவர்களுக்குத் தந்து உதவுவார்” என்கிறார். 

****

புத்தகத்திலிருந்து...
-------------------------------- 

பாட்டுப் பாடியே வலியைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தால் அம்மா. எனது குழந்தைப் பருவத்து நினைவுகலில் செத்துக்கிடந்த நிறைய பாடல்களை மாஅ பாடிப்பாடி உயிரூட்டினாள். ஒருநாள், பெரிய அக்கா வரும்போது படுத்திருந்தபடியே அம்மா பாடிக்கொண்டிருந்தாள். ‘’என்னதான் முடியலைன்னாலும் பாட்டுக்கெல்லாம் ஒரு குறையுமில்லை,” அக்கா கேலி செய்தாள். பிறகு பாட்டுக் கேட்கவில்லை. தான் சொன்னதைக் கேட்டு அம்மா பாட்டை நிறுத்தியிருப்பாளென்று நினைத்து அவள் உள்ளே போனாள். அதற்குள் அம்மாவும் போய்விட்டாள். வாய் திறந்தபடியே இருந்தது. பாதி பாடல் அம்மாவின் உதடுகளில் தங்கியிருந்தது.

மணிக்குட்டன் தன் சட்டையைக் கழற்றி அவளிடம் கொடுத்தான். அதை அணிந்து அவள் தண்ணீரில் இறங்கி நின்று துணியை அவிழ்த்து அவனிடம் கொடுத்தாள். அவள் குளிக்கும்போது அவன் விலகியிருந்து அழுக்குத் துணுகளை ஒரு கல்லில் அடித்துத் துவைத்தான். அன்று அவன் செய்த வேலைகளைப் புரிந்துகொள்வதற்கான அறிவு எங்களுக்கில்லை. .....அன்று அவளிருந்த நிலைமை இப்போதும் என் கண்களில் நிற்கிறடு. அனாதைமையின் மனித பிம்பம். அவனை உதாசீனம் செய்யுமளவிலான தன்னம்பிக்கை அன்று அவளிடம் தென்படவே இல்லை. ...எங்கள் மனங்களிலிருந்து பங்களா மணிக்குட்டன் ஒருபோதுமே மாய்ந்துவிட முடியாது. ஒருபோதுமே! அவளுடைய உடுப்புகளை கல்லில் அவன் துவைத்துப் பிழிந்த அந்தக் காட்சி ஒன்றே போதும், இதற்குச் சான்று!

என்னுடைய இச்சிறு உடலானது ஒரு வீட்டினுள் நுழைந்துவிட்டால் பிறகு ஆட்சியதிகாரத்தின் எல்லாக் கட்டமைப்புகளும் ஓடி வருகின்றன மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள், உயரதிகாரிகள், தொழிட்நுட்பப் புலனாய்வாளர்கள், மக்கள் திரள், அவர்களை விரட்டியடிக்கும் போலீசார், அதிகாரவர்க்கத்தின் இந்தப் பதற்றம் நமக்குள் தோற்றுவிக்கும் மமதை, நான் உருவாக்கி வைத்த உற்சவம் கனஜோராக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதிலிருக்கும் அக மகிழ்ச்சி. இதுதான் ஒரு திருடனின் மனதினுள் செயல்படுகிற அம்சங்கள்.

***
என்னுடைய வழக்குகளுக்கு நானே வழக்கறிஞர். புதிதாக வந்த நீதிபதிகள் கேட்பார்கள்: “நீ ஏன் வக்கீல் ஏற்பாடு செய்யல? கேஸ்ல ஜெயிக்க வேண்டாமா?” நான் சொல்வேன்: “யுவர் ஹானர், நான் நிரபராதின்னு தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏதோ ஒரு வழக்கறிஞரை விடவும் எனக்குத்தானே அதிகம்?”
என்னுடைய வழக்குகள் கொல்லம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிற நாட்களில், நீதிபதியாக இருந்த சுரேந்திரநாத பணிகர் கோட்டுப்போட்ட ஜூனியர் பையன்களிடம் சொல்வார்: “மதியத்துக்குப் பிறகு மணியன்பிள்ளையோட வழக்கு இருக்கு. சீக்கிரமாக சாப்பிட்டுட்டு வந்தீங்கன்னா வாதாடக் கத்துக்கலாம்.”

***

அப்போது ஜனதா கட்சியால் சட்டமன்றத் தொகுதிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த வேட்பாளர் நான். அன்று பிடிபடாமலிருந்திருந்தால் திருடர்கள் ஒற்றுமையுடன் வாழும் அரசியல் அரங்கில் நானுமொரு ‘விலைமதிக்க’ முடியாத அன்பளிப்பாகி இருப்பேன். அந்தத் தேர்தலில் ஞனதா கட்சிதான் அதிகாரத்திற்கு வந்தது. ‘சிறுபான்மை’ சமூகம் என்பதால் அமைச்சர்வையிலும் வாய்ப்புக் கிடைக்கும் என்று பேசிக்கொண்டார்கள்.

***
ஒரு வீட்டினுள் திருடுவதற்காக நுழைந்தேன். சமையல் கட்டின் கம்பியை வளைத்து உல்லே ஏறினேன். ஒரு கையில் கத்தி, மற்றொரு கையில் டார்ச். எதுவோ அசைவதுபோல் சத்தம் வந்தது. லைட் அடித்துப் பார்த்தேன். வெளிச்சம்பதிந்த இடம் ஒரு மூதாட்டியின் கண்கள். அதில் உலகத்திலுள்ள எல்லாத் தீவினைகளையும் ஒருசேரப் பார்த்துவிட்டதுபோன்ற பயம் தெரிந்தது. அந்த அம்மா நடுக்கத்துடன் துவண்டுகொண்டிருந்தார். வேதனையின் மெல்லிய சீகாரம் அவரிடமிருந்து வெளிப்பட்டது. பயம் ஒரு வனமிருகம்போல் அவரை வலைத்திருந்தது. எனக்கு என்னவோ போலாகிவிட்டது.
நான் மெதுவாகச் சொன்னேன்: “பயப்பட வேண்டாம்மா! நான் போயிடறேன்” வந்த வழியாக வெளியேறி, வீட்டின் மதில் சுவரில் சாய்ந்து நின்று வாய்விட்டு அழுதேன். இந்த அளவுக்கு மற்றவர்கள் பயந்து வெறுக்கிற துஷ்டனாக மாறிவிட்டேனே!இந்த இடத்தில் என்னுடைய அம்மாவாக இருந்திருந்தால்...மதிலில் தலியை முட்டி அழுதேன். பிறகு எல்லாமே தகர்ந்துவிட்டவன்போல் திரும்பி நடந்தேன்.

***
குழந்தைப் பருவத்து நினைவுகள் தீராத இரணங்களாகி விடும். வேதனைகளையும் அவமானஞ்களையும், நான்கைந்து வயதிலிருந்தே குழந்தைகள் மனதில் பாதுகாத்து வைத்திருப்பார்கல். பச்சை மனங்களை ஒருபோதும் புகைய வைத்து விடக்கூடாது

***

குட்டப்பனின் வாட்ச் ரிப்பேருக்கான சாதங்களிருக்கும் பெட்டியைச் சுமந்துகொண்டு ஐந்தாறு மாதங்கள் அவனுடன் திரிந்தேன். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஏறி வாட்ச் ரிப்பேர் செய்யணுமா என்று கேட்கும் வேலை என்னுடையது. நிறைய சொந்தக்காரர்கலின் வீடுகளுக்கும் சென்றேன். “குறவனோட பெட்டியை நாயர் பையன் சுமபப்தா?” இதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பட்டினி கிடக்கும்போது கூப்பிட்டு ஒரு பிடி சோற்றுப் பருக்கைத் தந்ததில்லை; நாலணா காசு தந்து ஏதாவது வாங்கிச் சாப்பிடு என்று சொன்னது கிடையாது. வீட்டிற்கு வந்து அம்மாவிடம் பராதி மட்டும் சொனனார்கள்.

***

இன்றெல்லாம் மூன்று நான்கு திருடர்களாக சேர்ந்து வருகிறார்கள். பயமுறுத்தித் திருடுகிறார்கள். பெண்களையும் தொந்தரவு செய்கிறார்கள். எவ்வளவு தைரியமுள்ள திருடனாக இருந்தாலும் சரி.வீட்டிலிருப்பவர்கள் பார்த்துவிட்டால் ஓடிவிடத்தான் வேண்டும். அது ஒரு மரியாதை. திருடனாகிவிட்டோம்தான். இருந்தாலும் கொஞ்சம் மரியாதையுடன் நடந்துகொள்ளலாமா? வேண்டாமா?

****

உங்களுடைய வீடுகளில் இதுவரை திருடன் நுழையவில்லை என்பதற்காக நீஙக்ள் பலத்து பாதுகாப்பினுள் இருக்கிறீர்கள் என்று அர்த்தமில்லை. டிருடன் உஞ்கள் வீட்டை இன்னும் நோட்டமிடவில்லை. அவ்வளவுதான். உங்கள் வீடு அவனுடைய கவனத்தில் படவில்லை என்பது மட்டும்தான் உங்களுடைய பாதுகாப்பு. 

****
இந்தப் புத்தகத்தை உங்களால் சுவாரஸ்யமாக வாசிக்க முடியும். காரணம், நீங்கள் சட்டத்தின்கண்களில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். ஆகவேதான் சில இடங்களில் உங்களால் சிரிக்கவும் முடிகிறது. எனுடைய கண்ணிரின் உப்பு கலந்த ஒரு கடல் இந்தப் புத்தகம். செய்துத் தீர்த்த பாவங்களின் ஆகமொத்த சாரம். ஒரு திருடனை ஊரிலோ வீட்டிலோ யாருமே வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள். 

(நன்றி: இந்தியா டுடே)


3 comments:

  1. செம இண்”ட்ரஸ்ட்”டிங் ஆள்.

    ReplyDelete
  2. அண்ணே நானும் அவரது புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன்.ஏனோ பிள்ளையை மிகவும் பிடித்துவிட்டது.மணியண்ணனை நானும் பார்க்க விரும்புகிறேன்.அவரின் தொடர்பு எண் மற்றும் முகவரி கிடைக்குமா?தரமுடியுமா?தயவு செய்து எனது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.மிக்க நன்றி. mianded2007@rediffmail.com

    ReplyDelete
  3. நூலின் சாரத்தை வடித்துத் தந்தது போன்ற சில சம்பவங்களைப் பற்றிக் கூறியதுவே நூலின் முக்கியத்துவத்தைப் புரிய வைத்தது.

    ReplyDelete