Monday, January 19, 2015

இதுவே அர்த்தமுள்ள வாழ்க்கை

சேலத்தின் ஏற்காடு மலையடிவாரத்தில் இருக்கிறது அந்த இல்லம். உள்ளே நுழைந்தால் மனதில் துயரமும் கருணையும் நிரம்பி வழிகிறது. பல்வேறு வயதில் விதவிதமான மனிதர்கள்; இதுவரை பார்த்தறியாத மருத்துவ கருவிகள் என அங்கு நிலவும் சூழல் வித்தியாசமாக உள்ளது. கருவிகளின்மீது அமர்ந்து உடல் பாகங்களுக்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். அவனுடைய தாய் அவனுக்கு அருகில் நின்று கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். சற்று தள்ளி உள் அறையில் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தவழ்ந்து சென்று ஒரு புத்தகத்தை எடுக்கிறார். அவரால் நடக்க முடியவில்லை. கால்களை அசைக்க முடியாமல் இன்னொருவர் என அங்கு எவரும் இயல்பாக இல்லை. இவர்களுக்கு எல்லாம் என்ன பிரச்சனை? அனைவருமே தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

தசைச் சிதைவு நோய் என்றால் என்ன? நமக்கு பழைய செல்கள் இறந்து புது செல்கள் தோன்றுவது இயல்பு. இந்த தசைச் சிதைவு நோயாளிகளுக்கு பழைய செல்கள் அழிந்துபோகும். ஆனால் புது செல்கள் உருவாகாது. இவர்களுக்கு பிறர் உதவியின்றி செயல்பட முடியாது. ஒரு பொருளை வலுவாக பிடிக்கமுடியாது. நழுவி விழுந்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக நோய் தாக்கம் அதிகமானவுடன் நடமாட முடியாது. எழவும் அமரவும் பிறர் உதவி தேவைப்படும். குளிக்க, கழிவறைக்குச் செல்ல என எல்லாவற்றுக்கும் பிறர் உதவி வேண்டும். இந்நோய் தாக்கியவர்கள் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில்தான் இன்றைய மருத்துவம் இருக்கிறது. இதற்கான மருந்துகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்தவை. சாமான்ய மக்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை.

இத்தகைய நோயாளிகளூக்கான இல்லம் ஒன்றைத்தான் இயல் இசை வல்லபியும் வானவன்மாதேவியும் தங்கள் ஆதவ் டிரஸ்ட் மூலம் நடத்துகிறார்கள். இவர்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள். தங்களைப் போலவே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படியான இல்லம் ஒன்று தொடங்கப்படவேண்டும் என்பதற்காக இந்த இல்லத்தைத் 2009 மார்ச் மாதம் துவங்கினர் இச்சகோதரிகள். இவர்களை சந்திப்பதற்காக சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்குச் சென்றபோது, முகம் நிறைய சிரிப்புடன் வரவேற்றனர் அச்சகோதரிகள். நோயின் தாக்கம் சிறிதும் முகத்தில் தெரியாமல் ஒருபோதும் வாட்டமுறாமல் எப்போதும் சிரிப்புடனும் சந்தோஷத்துடனும் வாழ்க்கையை வாழத் தெரிந்த இச்சகோதரிகளிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளதுதான். ”பத்து வயதில் இந்த நோய் தாக்கியது. பள்ளிக்குச் செல்லும்போது திடீரென்று கீழே விழுந்துவிடுவேன். காரணம் தெரியவில்லை. அப்புறம் மருத்துவரிடம் காட்டியபோதுதான் இப்படியொரு நோய் இருப்பது குறித்து தெரியவந்ததுஎன்கிற இயல் இசை வல்லபியைத் தொடர்கிறார் வானவன் மாதேவி. “அடுத்த கொஞ்ச காலத்திற்குள் இந்நோய் எனக்கும் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அடுத்தவரின் உதவியில்லாமல் இருக்க முடியாது என்கிற நிலையை அடைந்தோம்என்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் நடத்தும் முகாம்களில் கலந்துகொண்டிருக்கின்றனர். எழுத்தாளர் யூமா வாசுகி தன்னுடையசாத்தானும் சிறுமியும்நூலை இவர்களுக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களுடன் தொடர்ந்து பயணிக்கிறார். செல்போனில்கூட தொடர்ச்சியாக பேச முடியாத நிலையில் இருந்தாலும் இச்சகோதரிகளின் சமூக அக்கறை பிரமிக்கவைக்கிறது. மூலையில் முடங்கிவிடவில்லை இவர்கள். இவர்களை நன்கறிந்த எஸ்.ராமகிருஷ்ணன் இந்தியா டுடேயிடம்நோய்க்கு சவால்விடும் இவர்களின் மனோதிடம்தான் நான் இவர்களிடம் பிரமிப்பது. சமூக அக்கறைகொண்ட இவர்கள் நடத்தும் மருத்துவ முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். நோயாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கி உதவும் அவர்கள் நடத்தும் விழாக்களுக்குச் சென்றிருக்கிறேன். இவர்கள் சமூகத்துடனான நேரடி தொடர்பில் இருப்பதும் அதற்காக உழைப்பதும் அபூர்வமானது. நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் தொடர்பான கூட்டங்களுக்கு வருவது, சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளில் ஈடுபடுவது என தொடர்ந்து இவர்கள் இயங்குகிறார்கள். என் அனுபவத்தில் இப்படி யாரையுமே சந்தித்ததில்லை. இத்தனை தன்னம்பிக்கையுடன் இருப்பது மட்டுமல்லாமல், இவர்களின் வாசிப்பு அற்புதமானது. புதிய நூல்கள் எல்லாவற்றையும் வாசித்துவிட்டு எழுத்தாளர்களிடம் அழைத்து விமர்சனம் செய்வதை தொடர்ந்து செய்கின்றனர். இந்த மன உறுதி வியக்கவைப்பதுஎன்கிறார்.

அண்மையில் இவர்களைக் குறித்த ஆவணப் படம் ஒன்றை எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன்எனக்கு முதலில் இவர்கள் குறித்து கேள்விப்பட்டபோது ஆவணப்படம் எடுக்கவேண்டும் என்கிற எண்ணம் வந்தது. ஆனால் நோயை வெளிச்சம்போட்டுக் காண்பித்து பச்சாதாபம் வரவைத்துவிடக்கூடாதே என்கிற கவலை இருந்தது. அவர்களுடைய வீட்டுக்குள் நுழைந்ததும் அந்தக் கவலை பறந்துவிட்டது. சராசரி மனிதர்கள் கூட அத்தனை மகிழ்ச்சியாக ஜாலியாக இருக்கமாட்டார்கள். நமக்கெல்லாம் பல குறைகள் உண்டு. ஆனால் அவர்கள் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து கொண்டாட்டமாக வாழ்கிறார்கள். என் படம் குறித்து எனக்கு நம்பிக்கை வந்தது. ‘நம்பிக்கை மனுஷிகள்என்கிற பெயரில் நான் எடுத்த படம் பலருக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்பதே மகிழ்வூட்டுகிறதுஎன்கிறார்.

ஆதவ் அறக்கட்டளை மூலம் நோயாளிகளுக்கு இவர்கள் ஒருங்கிணைந்த மருத்துவ முறையை கையாண்டு சிகிச்சை அளிக்கின்றனர். இல்லத்தில் தங்கியும் இருக்கலாம். தினமும் வந்து இல்லத்தில் உள்ள கருவிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். சேலத்தில் பல இளைஞர்கள் தன்னார்வமாக இவர்களின் அறக்கட்டளைக்கு உதவுகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்துகின்றனர். சேலத்தை அடுத்த அனுபூரில் மருத்துவமனையுடன் கூடிய ஆராய்ச்சி மையம் ஒன்றை தொடங்கவேண்டும் என்பது இவர்களின் கனவு. இதற்காக நிலம் வாங்கிவிட்ட இவர்கள் கட்டடம் கட்டுவதற்கான தொகையைத் திரட்டும் முயற்சியில் உள்ளனர். ”இலக்கியம்தான் எங்களுக்கு வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுத்தந்ததுஎன்கின்றனர் இவர்கள். இசை, ஓவியம் என்று இவர்களின் ஆர்வங்கள் விரிகின்றன. வீட்டில் ஒரு நூலகம் இருக்கிறது. பெரிய புத்தகமாக இருந்தால் அதைக் கையில் வைத்து வாசிக்க சிரமப்படுகிறார்கள்.

இவர்கள் குறித்து கேள்விப்பட்டு ஒரு பெரிய மருத்துவமனை சிகிச்சை அளிக்க முன்வந்தபோதுஎங்களைப் போல இன்னும் பலர் இருக்கிறார்கள். எல்லோருக்கும் சிகிச்சை அளித்துவிட்டு இறுதியாக எங்களிடம் வாருங்கள்என்று கூறிவிட்டனர். அதுபோலவே ஒரு பன்னாட்டு குளிர்பான நிறுவனம் இவர்களுடைய மருத்துவச் செலவுகளை ஏற்க முன்வந்தபோதுஉங்கள் நிறுவனம்போன்ற பன்னாட்டு நிறுவனங்களால்தான் இந்தியா போன்ற நாடுகளுக்குக் கேடு. ஆகவே உங்கள் பணம் வேண்டாம்என்று மறுத்துவிட்டனர். ”அந்த நிறுவனத்தின் பெயரைக் கூடச் சொல்லி விளம்பரம் தேடித்தர விரும்பவில்லைஎன்கிறார் வானவன் மாதேவி.

இவர்களின் தாய் கலையரசியும் இளங்கோவனும் இவர்களின் உற்ற துணை. வெளியூர் பயணங்களில் எல்லாம் இவர்களே துணை நிற்கின்றனர். “பெண்ணாக உடல்ரீதியான சில சிரமங்கள் இவர்களுக்கு உண்டு. அப்போதெல்லாம் இவர்கள் சிரமப்படுவதைப் பார்க்க வேதனையாக இருக்கும்என்று சொல்லும்போதே கண்ணீர்விடுகிறார். கனத்த இதயத்துடன் சகோதரிகளை நோக்கித் திரும்பிய மறுநொடியே அவர்களின் மலர்ந்த முகம் மனதை லேசாக்குகிறது.

 “ஆறு மாத காலத்திற்கு இயங்கும் பலத்தை இவர்களின் ஒரு சந்திப்பின்மூலம் பெறுகிறேன்என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். எந்த நோயுமின்றி வாழும் நமக்கே வாழ்வின்மீது எத்தனை புகார்கள்! எபப்டி அலுத்துக்கொள்கிறோம்! ஆனால் தங்கள் துயரங்களை ஒரு புன்னகையில் கடந்துவிடும் இவர்கள் வாழ்க்கையை அத்தனை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு பிறருக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்கள். வாழ்வின் மீது எத்தனை அவநம்பிக்கை கொண்ட மனிதரும் கூட ஒரு முறை இவர்களை சந்தித்தால்,  இவர்களின் உற்சாகம் அவரையும் தொற்ற அவரை புது மனிதராய் மாற்றிவிடும் ரசவாத வித்தை அறிந்த இந்த இளவரசிகளின் வாழ்வும் பணியும் பிறருக்கு ஒரு பாடம். அவர்களிடம் விடைபெற்று வெளிவந்தபோது காணும் மனிதர்கள் அனைவரும் அழகானவர்களாக அன்பானவர்களாகவே தெரிந்தனர். வாழ்வின் பொருள் விளங்கியது.






1 comment:

  1. நாட்டுப் பற்றுமிக்க நல்லவர்களும்
    அந்த நல்லவர்களுக்கு உதவுகிற நல்லவர்களும்
    இன்னும் இருக்கிறார்கள் என்பதாலேயே-
    “உண்டால் அம்ம இவ்வுலகம்“ எனும் புறநானூறு உண்மைதான். இதுபோலும் கடடுரைகளில் அவர்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்களைத் தரலாமே? நன்றி கவின்.

    ReplyDelete