Wednesday, August 20, 2014

வலுப்படுத்தவேண்டிய வன்கொடுமை தடுப்புச் சட்டம்

அண்மையில் சென்னை பல்கலைக்கழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. பா.ம.க. வழக்கறிஞர் பாலு சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இச்சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஒரு தரப்பு சட்டம் வலுப்பெறவேண்டுமென கேட்பதும் மறுதரப்பு சட்டம் ரத்து செய்யப்படவேண்டுமென கோருவதுமே இச்சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.


“பல நூற்றாண்டுகளாக ஆதிக்க சாதிகள் தலித் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சுதந்திரம் பெற்றபிறகும் ஆதிக்க சாதி நில உடைமையாளர்கள் தலித் மக்களை இழிவாகவே நடத்திவந்தனர். இதற்கு 1959 ராமநாதபுரம், 1968ல் கீழ் வெண்மணி  என்று பல கொடூரங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பழங்குடியின மக்கள்மீதான பெரும் வன்முறை வாச்சாத்தி சம்பவம். 2012ல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருந்தும் தர்மபுரியில் தலித்துகளின் ஊர்கள் கொளுத்தப்படுகின்றன. இச்சட்டங்களை இன்னும் வலுப்படுத்தவேண்டும் என்றுதான் இத்தகைய சம்பவங்கள் நமக்குச் சொல்கின்றன என்கிறார் வன்கொடுமை தடுப்புச் சட்ட வரைவை தயார் செய்த குழுவில் இருந்த பி.எஸ்.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

1955ல் தலித் மக்கள் மீதான கொடுமைகளை தடுப்பதற்கென குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டம் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்பதால் 1989ல் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தை மேலும் வலுவாக்கவேண்டுமென பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு பிப்ரவரி மாதம் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இப்போதுள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மேலும் பல மாற்றங்கள் செய்து வலுவாக்கும் விதத்தில் அச்சட்டம் இருந்தது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுக்காக தற்போது காத்திருக்கும் இச்சட்டத்தை தலித் மக்கள் வரவேற்கிறார்கள்.

“1997ல் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டனர். இது சாதியப் படுகொலை என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் இது அரசியல் படுகொலை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சட்டம் இருந்தும் அது சரியாக பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆகவே இச்சட்டம் மேலும் வலுப்படுத்தப்படவேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டம் சரியாக செயல்படுகிறதா என்று கண்காணிக்க மாநில அளவிலான 25 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவர் முதல்வர். எத்தனை முறை இக்குழு கூட்டப்பட்டப்பட்டுள்ளளது என்கிற அறிவிப்பு கூட இதுவரை இல்லை” என்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர்.

வழக்கறிஞர் பாலு ஏன் இச்சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்கிறார்? இச்சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பது இவருடைய வாதம். இவருடைய மனு என்ன சொல்கிறது. “1953இல் இயற்றப்ப்ட்ட சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம் தீண்டாமையைக் கடைபிடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்கிறது. ஆனால் 1989இல் இயற்றப்பட்ட எஸ்/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தாழ்த்தப்பட்டவர்கள் பழங்குடியினர் மீது தீண்டாமையை கடைபிடிக்கும் மற்றவர்களை மட்டுமே தண்டிக்கிறது. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்குள் பல பிரிவுகள் இருக்கின்றன. தலித்துகளிலேயே உட்பிரிவுகளில் ஒரு பிரிவை மற்றொரு பிரிவு ஒதுக்குகிறது. இந்த தீண்டாமையை தண்டிக்க வழியில்லை. எனவே இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது”

”ஆடு நனையுதென்று ஓநாய் ஏன் அழவேண்டும்?” என்று கேட்கிறார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளரும் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவருமான சாமுவேல் ராஜ். “பாலுவின் மனு சொல்வதுபோல தலித் உட்பிரிவுகளுக்குள் உள்ள தீண்டாமையை தண்டிக்க வழியில்லை என்றால் இச்சட்டத்தை மேலும் வலுப்படுத்தி அதற்கென்று பிரிவுகளை சேர்க்கத்தானே சொல்லவேண்டும்? அதைவிட்டுவிட்டு ரத்து செய்யச் சொல்வது இவர்களுடைய நோக்கத்தை அப்பட்டமாகக் காண்பிக்கிறது. தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு தமிழகத்தில் இருப்பது போல இதற்கும் சட்டத்தில் மாற்றம் கேட்டு போராடவேண்டியதுதானே? அதைவிட்டுவிட்டு ஏன் ரத்து செய்யச் சொல்லவேண்டும்?  ‘1955 சட்டம்தான் தீண்டாமைக்கு எதிராக இருக்கிறது. 1989 சட்டம் வன்கொடுமைகளுக்காகவே பேசுகிறது. ஆகவே 1955 சட்டம்தான் அரசியல் சாசனத்துக்குட்பட்டது’ என்பது பாலுவின் வாதம்.  இச்சட்டத்தின்படி போடப்பட்ட பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே இது பொய்வழக்கு என்கிறது அவருடைய மனு. இதற்கு யார் காரணம்? காவல்துறையும் அரசும்தான் காரணம். அவர்கள்தான் சாதி உணர்வின் காரணமாகவோ அல்லது ஆதிக்க சாதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டோ தலித் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இப்படியுள்ள நிலையில் மேலும் இச்சட்டத்தை வலுப்படுத்தவே கோருவோம். பாலுவின் மனுவுக்கு எதிர்மனுவை நாங்களும் தாக்கல் செய்துள்ளோம்” என்கிறார் சாமுவேல்ராஜன்.

தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் 2,00,474 வழக்குகள் உட்பட மொத்தம் 7,44,538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வெறும் 1647 வழக்குகள்தான் பதிவாகின. மொத்த வழக்கில் 0.22 சதவிகிதம்தான். 2012ம் ஆண்டு இறுதியில் இச்சட்டதின்கீழ் நீதிமன்றத்தில் 4039 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவற்றில் 119 வழக்குகளுக்கு மட்டும்தான் தண்டனை கிடைத்துள்ளது. தண்டனையின் சதவிகிதம் 17.7தான் என்கிறது எவிடென்ஸ் அமைப்பின் அறிக்கை.

”தீண்டாமை, வன்முறை என்பதுபோல மேல்மட்ட அளவில் பணியாற்றும் நிறுவனங்களில், கல்வி நிறுவனங்களில் தலித் என்பதால் பாகுபாடு காண்பிக்கும் போக்கு அதிகளவில் உள்ளது. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பதவிக்கெல்லாம் தலித்துகள் எப்படியெல்லாம் நூதனமான முறையில் ஒதுக்கப்படுகிறார்கள் தெரியுமா? முறைப்படி நேர்முகத் தேர்வுக்கு அழைக்காமல் இருக்க முடியாது. அழைத்துவிட்டு தலித்தைவிட குறைவான தகுதியுடையவரை தேர்ந்தெடுத்துக்கொள்வது சர்வசாதாரணமாக நடக்கிறது. இப்படியான நுட்பமான தீண்டாமையை கையாள ஒரு சட்டம் வேண்டாமா? வன்கொடுமை தடுப்புச் சட்டம் மேலும் வலுவாக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயம்” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

“சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம அபாயகரமானது. எந்த ஒரு குற்றத்திலும் நிரூபிக்கும் பொறுப்பு அரசு மற்றும் காவல்துறையிடம்தான் உள்ளது. ஆனால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்மீது அந்த பொறுப்பு சுமத்தப்படுகிறது. உதாரணமாக இரண்டு வாகனங்கள் மோதி அதனால் தகராறு ஏற்பட்டால்அதில் ஒருவர் தலித்தாக இருந்தால் என் சாதியை வைத்து என்னைத் திட்டினார் என்று சேர்த்துச் சொல்லிவிடுகிறார். குற்றம்சாட்டப்பட்டவர்தான் அவரைதான் அப்போதுதான் முதன் முதலில் பார்க்கிறேன் என்றும் அவரது சாதி தனக்கு தெரியாது என்றும் நிரூபிக்க வேண்டும்
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதியப்படும் வழக்குகளுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது. புகார் கொடுத்தால் கண்டிப்பாக காவல்துறையினர் எஃபிஐஆர் பதிவு செய்தாக வேண்டும்,. அதைச் செய்ய மறுக்கும் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்படும் புகாரில் உண்மைத்தன்மையை சோதிக்காமல் எஃபிஐஆர் பதிவு செய்துவிடுகிறார்கள்” என்று இந்தியா டுடேயிடம் தெரிவித்தார் பாலு.

“தலித் மக்கள் சட்டத்தின்மீது நம்பிக்கை இழக்கும்வண்ணம்தான் இதுவரை இச்சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் தகவல் அறிக்கைக்கும் குற்றப்பத்திரிகைக்கும் முரண்பாடுகள் ஏதும் இருந்தாலே வழக்கு நிற்காது. இப்படி பல வழக்குகளில் ஆதிக்க சாதிகளுக்கு சாதகமாக நடந்துகொள்ளும் காவல்துறையை எத்தனை வழக்குகளில் பார்த்திருப்போம். புகார் கொடுத்த தலித் மீதே எதிர்புகார் கொடுக்க வைத்து மனதளவில் அவர்களை சோர்ந்துபோகச் செய்யும் வழிமுறையையும் தொடர்ந்து காண்கிறோம். இவற்றுக்கெல்லாம் தீர்வு சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தவறிழைத்தவர்கள் வெளியேறாதவாறு வலுவாக்கவேண்டும். அதை இந்த அவசரச் சட்டம் செய்திருக்கிறது” என்கிறார் சாமுவேல் ராஜன்.

வழக்குகளை பதிவு செய்யாமை, புலன் விசாரணையில் தாமதம், கைது நடவடிக்கைகளிலும்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலும் தாமதம், நீதிமன்ற விசாரணையில் தாமதம் என்று அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க அவசரச் சட்ட திருத்தம் உதவுமென்று தலித் மக்கள் நம்புகிறார்கள். அண்மைக் காலமாக அடிக்கடி நடைபெறுகிற ஆனால் புதிய வடிவங்களிலான வன்முறைகள் தொடர்பாகவும் புகார் பதிவு செய்ய பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு இச்சட்டம் உதவும் என்று அவசரச் சட்டம் கூறுகிறது.

வழக்கறிஞர் பாலுவின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. குடியரசுத் தலைவர் பிறப்பித்த அவசரச் சட்டத்தை ரத்து செய்யும் சக்தி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உண்டா என்பதுதான் இப்போதைய கேள்வி.  சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பாலுவின் மனுவுக்கு இடையீட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். “நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குச் சென்றுவிட்ட ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து எதுவும் செய்துவிட முடியும் என்று நினைப்பது அறியாமை. தெரிந்தே இதைச் செய்வதால் இவ்விஷயத்தை வைத்து ஒரு விவாதத்தைக் கிளப்பி அரசியல் ஆதாயம் தேட முயல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. இப்படித்தான் தலித் அல்லாதோர் கூட்டணி, காதல் திருமண எதிர்ப்பு என்று பிரச்சாரம் செய்தனர். இப்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு பிரச்சாரம் செய்கின்றனர்.  இதில் தேர்தல் கணக்கும் வாக்கு வங்கி அரசியலும் உண்டு. இவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு அம்பலப்படுத்தவே இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது” என்று இந்தியா டுடேயிடம் தெரிவித்தார் திருமாவளவன்.

என்ன சொல்கிறது அவசரச் சட்டம்?
  • தண்டனைக்குரிய குற்றச்செயல்கள் பட்டியலில் தலை-மீசை வழித்தல், நீர்ப்பாசன உரிமைகளை மறுத்தல், கையால் துப்புரவு பணி செய்ய வைத்தல், டலித்துகள் வேட்புமனு தாக்கல் செய்வதை தடுத்தல் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன
  • இந்திய குற்றவியல் சட்டத்தின்கீழ் தலித்துகளுக்கு எதிரான பொதுவான குற்றங்கள் சில சேர்க்கபப்ட்டுள்ளன
  • கால விரயத்தை தவிர்க்கும் நோக்குடன் குற்றங்களை விரைந்து விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றங்களையும் சிறப்பு அரசு வழக்குரைஞர்களையும் நியமிக்க வழிசெய்யப்பட்டுள்ளது.
  • குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இரண்டு மாதங்களில் வழக்கை முடிக்க தனி நீதிமன்றங்களுக்கு அதிகாரம்
  • மிரட்டல்களிலிருந்து சாட்சிகளைக் காப்பாற்றும் வகையில அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் பல முக்கிய உரிமைகள் சேர்க்கபப்ட்டுள்ளன
  • அனைத்து மட்டங்களிலும் அரசு ஊழியர்கள் தலித்துகளை வேண்டுமென்றே புறக்கணித்தால், கடமை தவறியவர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது (உதாரணம்: எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய மறுத்தல்)
  • குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதிக்கப்பட்டவரை முன்பே தெரியும் என்றால் பாதிக்கப்பட்டவரின் சாதியை முன்பே அறிவார் என்றே நீதிமன்றம் கருதவேண்டும.
(நன்றி : இந்தியா டுடே)

No comments:

Post a Comment