Tuesday, March 30, 2010

தேசியவாதம் - இந்தியா மற்றும் இலங்கை உதாரணங்களினூடாக ஒரு அலசல்

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஆற்றிய உரை

(தமிழில் : கவின் மலர்)

தொன்மையான தேசங்களானாலும் புதிதாக தோன்றிய தேசங்களானாலும் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அரசியல் வடிவத்தைப் பெற்றிருக்கின்றன. எப்போதுமே எல்லைக்கோடுகளும், பிரச்சனைக்குரிய விரிவாக்கங்களும் நாடுகளில் உண்டு. எங்கே எல்லைக் கோடுகளும், பிரச்சனைக்குரிய விரிவாக்கங்களும் இல்லையோ அங்கே வேறுவிதமான சிக்கல்களும் தோன்ற வாய்ப்புண்டு. இணைத்துக் கொள்ளுதல், பிரிந்துபோதல், ஒன்றுபடுதல் என பல வகைகளில் தேசங்களின் எல்லைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றையுமே தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகள்தான் என நிறுவ முயல்கின்றன. இதன்மூலம் மனம் போன போக்கில் தங்கள் நாடுகளின் வரைபடங்களை உருவாக்கி கொண்டதை மறைக்கின்றன. தங்கள் விருப்பத்திற்கும் உண்மையான அதிகார எல்லைக்கும் இடையேயான ஒப்பிட இயலாத வேறுபாடுதான் கற்பனாவாத தேசத்தைக் குறிக்கிறது.  இந்த உடோபிய தேசத்தை நிலைநாட்ட முயற்சிப்பது என்றுமே மாயையாகவும் அத்தனை எளிதாக புலப்படாத வன்முறை திட்டமாகவே இருக்கும்.

இந்த விஷயம் பற்றிப் பேசத் துவங்குவதற்கு முன் இந்தியா மற்றும் இலங்கை தொடர்பான இரண்டு செய்திகளைக் கூற விழைகிறேன். தேசத்திற்கான தீராத தாகத்தையும் தேசம் என்னும் வடிவத்தின் வன்முறையையும், இவ்விரு செய்திகளைக் கொண்டு நன்றாக விளங்கிக் கொள்ளலாம்.

இந்தியா தொடர்பானதை முதலில் பார்ப்போம். புதிதாக விடுதலை பெற்ற ஒரு நாட்டின் கதை இது. தங்கள் தேசத்தைப் பற்றிய எதிர்பார்ப்போடும் ஏக்கத்தோடும் எதிர்வரும் சவால்களோடும் போராடிக் கொண்டிருந்த ஒரு தேசத்தின் கதை இது. 1960இல் இந்தியா இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்று பதின்மூன்று ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் மாநில கல்வி அமைச்சர்களின் மாநாடு நடந்தது. அந்த மாநாடு  தேசிய ஒருமைப்பாட்டிற்காக ஒரு குழு அமைக்கப்படவேண்டும் என பரிந்துரைத்தது. அந்தக் குழுவிற்கு ‘உணர்வுரீதியான ஒருமைப்பாட்டிற்கான குழு’ என்று பெயரிடப்பட்டது. கல்வியின் மூலம் உணர்வு ரீதியான தேச ஒருமைப்பாட்டை வளர்ப்பது எப்படி என்று ஆராய வேண்டும் என்பதே அக்குழுவிற்கு இடப்பட்ட கட்டளை.

இந்தக் கட்டளையை, இந்திய தேசம் என்று ஒன்று அதுவரை இல்லை என்பதையும், அதற்குப்பிறகு  தான் அப்படி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதன் ஒப்புகையாகவும் கொள்ளலாம்.

எப்படி ஒரு ஒருமைப்பாட்டுணர்வை அல்லது ஓரினத்தன்மையை உருவாக்குவது? இதுவே அந்தக் குழுவின் முன் விடைதேட வேண்டிய கேள்வியாக நின்றது. தேசங்கள் நிர்ணயிக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டாலும், இந்தக் கேள்வி அவை அப்படி அல்ல என்று பறைசாற்றுகின்றது. ஒரு தேசமாக உருவாவதற்கான சாத்தியங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி அந்தக் குழு கீழ்கண்டவாறு பிரகடனம் செய்கிறது.

“தேசியம் ஒரு மனோரீதியான வலுவான அடித்தளத்தைக் கொண்டது. ஒரே மாதிரியான அனுபவங்களைக் கொண்டிருக்கும் மக்களைச் சார்ந்தது. அவ்வனுபவங்களை ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் அம்மக்கள் அணுக வேண்டும் என்பதே மிக முக்கியம். ஒரு அரசியல் நிகழ்வு  அல்லது வேறு ஒரு நிகழ்வு வெவ்வேறு குழுக்களுக்கு வெவ்வேறு அர்த்தத்தைக் கொடுக்கிறது என்றால் அந்த மக்கள் ஒருமைப்பாடில்லாமலும் கருத்து வேறுபாடுகளோடும்தான் தொடர்ந்து இருக்கமுடியும்.’’

கிடைக்கப்பெறும் அனுபவங்கள் எல்லோருக்கும் ஒரேமாதிரியானதாக இருப்பதும், அந்த அனுபவங்களினால் கிடைக்கும் புரிதலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒன்று போல இருப்பதும் ‘நாடு’ அல்லது ‘தேசம்’ என்பதற்கான அடிப்படை கோட்பாடாகக் கொள்ளலாம். ‘ஒன்று போல சிந்தி!.’ எனச் சொல்லலாம். தேசிய அடுக்கில், வேறுபாடு என்பதற்கு இடமே கிடையாது. இந்தியாவில் தேசிய கீதத்தை எந்த வகையில் பாட வேண்டும் என்று ஒருமைப்பாட்டுக் குழு பரிந்துரைத்தது. தேசியகீதத்தைப் பாடுவதில் ஒரு ஒழுங்கு இருக்கவேண்டும்; ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பாடக் கூடாதென பரிந்துரைத்தது. “முழுமையாக ஒரே மாதிரி தேசியகீதத்தை பாட வழி செய்யும் விதத்தில் அகில இந்திய வானொலியில் பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்தையே வாய்ப்பாட்டாக பாடுவதானாலும் இசைக்கருவியால் இசைப்பதானாலும் பின்பற்ற வேண்டும்’’ என்றது குழு. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சீரான தன்மை என்பதே இங்கு தேசிய ஒருமைப்பாட்டைக் குறிக்கிறது.

ஆக தேசம் என்பதற்கு ஓரினத்தன்மையும் ஒருமித்த தன்மையும்தான் அடிப்படை என்ற கருத்தை வலியுறுத்தியது குழு. அதனால் வேறுபாடுகளை தேசிய உருவாக்கத்திற்கான இடையூறாகவே மீண்டும் மீண்டும் குழு குறிப்பிட்டது. ஆகவே மற்றவரிடையே காணப்படும் பூகோள அடையாளம், சாதிய அடையாளம், மற்றும் மத அடையாளம் குறித்து திரும்பத் திரும்ப குழு பேசியது. இவ்வகை அடையாளங்கள் ஒரு புதிய இந்திய தேசத்தை உருவாக்குவதற்கான தடைக்கற்கள் என்றது. இந்த அடையாளங்களில், தேச உருவாக்கத்திற்கு பூகோள அடையாளம் எப்படி தடையாக இருக்கிறது என்பதை நான் கூறுகிறேன்.

உணர்வால் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பதில் ஒருமைப்பாட்டுக் குழு முனைப்போடு இருந்த அதே சமயத்தில், தமிழ் பேசும் தென்பகுதி வேறு ஒரு அரசியலைப் பேசியது. இந்திய தேசியவாதிகள் விரும்பிய உணர்வை இந்தியா என்ற நாடு அவர்களுக்குத் தரவில்லை. அதன் அரசியல் எதிர்காலம் ‘திராவிட நாடு’ என்று சொல்லப்படும் தன் சொந்த தேசத்தில் உள்ளது என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இவ்வகை தனி அடையாளத்தை மறுதலிக்கும் வண்ணம், வடக்கு மற்றும் தென்பகுதிகள் எப்படி முற்காலத்தில் இணைந்திருந்தன என்பதை விளக்கும் வரலாற்றை உருவாக்கி முன்வைத்தது ஒருமைப்பாட்டுக் குழு.

“தென்பகுதியில் இன்றும் வணங்கப்படும் அகத்திய முனிவர் வடபகுதியிலிருந்துதான் விந்திய மலை வழியாக தென் பகுதிக்குச் சென்று, அங்கேயே தங்கிவிட்டவர். உபநிடதங்கள் வடக்கில் தோன்றியிருந்தாலும் அந்த வேதத்தத்துவங்களை கேரளாவின் சங்கராச்சாரியார்தான் உலகிற்கு வெளிச்சமிட்டு காண்பித்தவர் என்பது யாருக்குத்தான் தெரியாது? ராமர் மற்றும் கிருஷ்ணர் தொடர்பான அயோத்தி, மதுரா, பிருந்தாவனம் எல்லாம் வடபகுதியில் இருந்தாலும், ராமர் தென்பகுதி வழியாக இலங்கையை அடைந்தார் என்பது இந்துக்களின் நினைவில் அழுத்தமாக பதிந்துள்ளது அது மட்டுமல்லாமல் வழிபாட்டுக்கு உகந்த புனித தலங்களான காஞ்சியும் ராமேஸ்வரமும் இவைகளுக்கு நிகரான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன.’’

புராணமும், வரலாறும் கலந்த இந்தக் கலவையை (அவ்வப்போது புராணத்தையே வரலாறு என்றும்) நம்புவதை உண்மை என்று வைத்துக்கொண்டாலும் துரதிஷ்டவசமாக, குழுவிற்கும், இந்திய நாட்டிற்கும் அவை ஒரே வகையான அனுபவங்களையோ அல்லது புரிதலையோ தரவில்லை. ராமனின் தென்னோக்கிய பயணத்தை எடுத்துக் கொள்வோம். தெற்குப் பகுதியில் உள்ளவர்களுக்கு இதிலே மாற்றுக்கருத்து உண்டு. செலிக் ஹாரிசன் இப்படிக் கூறுகிறார்.

“இந்துக்களின் புராணங்களை கேள்வி கேட்பதே திராவிடத்தின் அடிப்படையான வாதம். ஆரியர் அநீதியை நிலைநாட்ட இராமாயணமே பெருமையாகக் கொண்டாடப்பட்டு முன்வைக்கப்பட்டது. சீதையை கவர்ந்து சென்ற ராவணனைத் தேடி ராமனின் தென்னோக்கிய பயணம் என்பது, பூர்வகுடிகளாக இருந்த திராவிடர்களை வெற்றி கொள்ள வந்த ஆரியர்களின் முன்னேற்றத்தைக் குறிக்கும் குறியீட்டுக் கதை என்பதே திராவிட பிரச்சாரமாக இருக்கிறது.

தென்னகக் காடுகளில் ராமன் எதிர்த்துப் போரிடும் வானரப் படைகளை பார்ப்பனரல்லாத நிறைய தமிழர்கள் திராவிடர்களாகவே பார்க்கின்றனர். ஆகவே இந்த இதிகாசம் ஒரு இனத்தையே அவமானப்படுத்துகிறது.’’

வடக்கிற்கும் தெற்கிற்கும் முன்னர் இருந்த பிரச்சனைகளை புறந்தள்ளி விட்டுத்தான் இருபகுதிகளுக்குமான தோழமை உணர்வை வளர்க்க ஒருமைப்பாட்டுக்குழு எண்ணியது. அப்படி புறந்தள்ளுவது ஒரு நொடியேனும் தேசஒற்றுமையை மீட்க உதவும். ஆனால் புறந்தள்ளப்பட்ட பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கவே செய்யும்.

வடக்கு தெற்கு பகுதிகளின் ஒருமைப்பாட்டிற்கு குழு பல வகைகளில் செயல்பட்டது. இவர்களால் சொல்லப்பட்ட கதைகள் ஒற்றுமையை மீறி பகுதிகளுக்கிடையே அடுக்குகளை உருவாக்கியது. மேல் அடுக்கில் வடபகுதியும் கீழ் அடுக்கில் தென்பகுதியும் இருந்தன. ஒருமைப்பாட்டிற்காக இவர்கள் கூறிய அகத்தியர், உபநிடதங்கள், ராமர் பற்றி அனைத்துமே வடக்கில் இருந்து தென்பகுதிக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக இருந்தன. தெற்கின் வேலை அவைகளை அப்படியே ஏற்றுக் கொள்வதாகவே இருந்தது. பரிமாற்றம் போல முதல் பார்வையில் தெரிந்தவையெல்லாம் உற்று நோக்கினால் ஒருவழிப்பட்டதாய் இருந்தது. ஆக, ஒற்றுமைக்காக சொல்லப்பட்டவையே வேறுபாடுகளை மேல்கீழ் நிலைகளை உருவாக்கின.

“யாருக்குத்தான் தெரியாது?’’ என்று குழு கூறியது. கடைசியில் “இந்துக்களின் நினைவில் அழுத்தமாகப் பதிந்துள்ளது’’ என்று முடிகையில், குட்டு வெளிப்பட்டு விடுகிறது. பலவகை மதத்தார் இங்கே வாழ்கையில் இந்து மதத்தைச் சாராத பிற மதத்தினருக்கு இக்குழு காட்டும் ஒருமைப்பாட்டுணர்வில் என்ன பங்கு என்ற கேள்வி எழுகிறது. அவர்களுக்கு வேறு பல விஷயங்கள் நினைவில் அழுத்தமாகப் பதிந்திருக்கும். அந்தப் பதிவுகள் அங்கீகாரத்தைப் பெறும் அளவு தகுதியற்றவை என்றே கருதப்படுகிறது. ஒருமைப்பாட்டிற்கான அழைப்பு இவர்களுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஆனாலும் உணர்வு ரீதியான ஒருமைப்பாட்டிற்காக இவ்வகை கதைகளையே அந்தக்குழு எடுத்தாண்டது. தேசத்தை உருவாக்கும் வேலை வேலைக்காகவில்லை.

தேச ஒருமைப்பாட்டிற்கான இது போன்ற அறைகூவல்கள் அப்போதைய சமகால வாழ்வியல் உண்மைகளோடு பொருந்தவில்லை. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் பேசப்படும் வெவ்வேறு மொழிகளை கையாள்வதில் குழுவுக்கு சிக்கல் இருந்தது. “இந்தியாவில் பேசப்படும மொழிகளில் எந்த மொழியை பொதுவான தொடர்புக்கான மொழியாக பள்ளிகளில் கற்றுக் கொடுப்பது? எந்த மொழியை இம்மண்ணின் மொழியாக நினைத்து தகவல் பரிமாற்றத்திறகான பொது மொழியாக்குவது? இந்த கேள்விகள் இன்னமும் இருக்கினறன’’ என்றது குழு. தேசத்தின் உத்தேசமான ஒருமைத் தன்மையையும் ஓரின தன்மைக்கான தாகத்தையும் குறிக்கிறது “மண்ணின் மொழி’’ என்ற பதம். “இந்தி மொழி இந்தியாவில் பெரும்பகுதி மக்களால் பேசப்படும் மொழி. அதோடு, மற்ற பல மொழிகளும் இந்தியோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியே இந்தி மொழியும் அவைகளோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்தியை இந்தியாவின் பொதுமொழியாக்கினால் நாட்டு மக்களை நெருங்கி வரச்செய்து, ஒருமைப்பாட்டிற்கு உதவும்’’ என்றது குழு என்னதான் பெரும்பான்மை மக்கள் பேசுவதால் ஒரு மொழியை தேசியமொழியாக்க முடிவு செய்தாலும், நிறைய பணிகளை தேசம் செய்ய வேண்டி இருந்தது. இந்தி பேசாத பகுதிகளில் மக்களை இந்தி கற்க செய்வது குதிரைக் கொம்பாக இருந்தது. தேசம் கட்டும் வேலை முடிவடைவதாகத் தெரியவில்லை.

தேசம் என்னும் வடிவத்தின் ஒருமைத்தன்மையையும், அது உருவாக்கிய மாறாத எதிர்பார்ப்பும் பற்றி இவ்வளவு நேரம் கூறினேன். இனி... அப்படிப்பட்ட எதிர்பார்ப்பின் விளைவுகளைப் பற்றிப் பார்க்கலாம். இலங்கையை எடுத்துக்காட்டாக வைத்துக் கொள்ளலாம்.

1981, மே மாதம் 31ஆம் தேதி இரவு... இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணம் நகர், தேசியவாத வஞ்சகத்தின் மிக மோசமான ஒரு கொடுமையைக் கண்டது. இலங்கை காவல்துறையால் யாழ்ப்பாண நூலகம் தாக்குதலுக்கு ஆளாகி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மறுநாள் காலை அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்த்தவர்களில் ஏ.வி.ஜே. சந்திரகாந்தனும் ஒருவர்.
கொதிப்போடு அவர் இப்படி எழுதுகிறார்.

“ஜூன் 1981, 1ஆம் திகதி, காலை 8 மணி அளவில் நூலக வளாகத்தின் நுழைவாயிலுக்கு வெகு அருகில் நின்று கொண்டிருந்தேன். என்னைப்போலவே பல்வேறு தொழில்புரியும், பெரியவர்கள், சிறியவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள் அங்கே அதிர்ச்சியோடு, நம்ப முடியாமலும், செய்வதறியாமலும் நிர்க்கதியாக நூலகக் கட்டிடத்திலிருந்து வெளியேறும் புகையையும், நூலகத்தின் உள்ளே இருந்த விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை தன் கோர நாக்குகளால் தின்று தீர்த்த தீ ஜூவாலையின் மிச்சமாக கனன்று கொண்டிருந்த தீக்கங்குகளையும் பார்த்தவாறு நின்றிருந்தோம். நூலகத்திற்கு தீ வைத்த சிங்கள ரிசர்வ் காவல்துறையினரோ சில நூறு அடி தொலைவில் யாழ்ப்பாண ஸ்டேடியத்தின் வெவிலியனில் அமர்ந்து எரிந்த நூலகத்தைப் பார்த்தவாறே இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.”

இந்த கோர சம்பவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் மேலும் இப்படிக் கூறுகிறார்:

“இந்நூலகம் தமிழர்களின் கலாச்சாரப் பெருமையை பறைசாற்றுவதாக இருந்தாலும், அங்கே சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலுமுள்ள அரிய நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் கொண்டிருந்தது. தமிழர், சிங்களர், இசுலாமியர் ஆகியோருக்கு படிப்பதற்கும் ஆய்வுக்குமான ஒரு பொது புனிதத்தலமாக விளங்கியது. முன்பொரு காலத்தில் காணப்பட்ட இன ஒற்றுமைக்கான அடையாளச் சின்னமாக திகழ்ந்து வந்தது யாழ்ப்பாண நூலகம்.

அதன் சுவர்களுக்கு நடுவே சிங்கள பௌத்தத்தில் தீவிரமான அனகரிகா தர்மபாலாவும் தமிழக இந்து சீர்திருத்தவாதி ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரும் தங்கள் எழுத்துக்கள் மூலம் நல்லிணக்கத்தோடு அருகருகே வாழ்ந்திருந்தனர். எத்தனையோ எழுத்தாளர்களும், அரசியல்வாதிகளும், மத மறுமலர்ச்சியாளர்களும், சட்டத்தை உருவாக்கியவர்களும் தமிழ் கூட்டாட்சியாளர்களும் சிங்கள தேசியவாதிகளும், அவர்கள் எவ்வளவோ கடுமையாக தங்கள் வாழ்நாளில் முரண்பட்டிருந்தாலும் கூட, நூலகத்தில் அழகாக, சீராக அமைக்கப்பட்ட தேக்குமர அலமாரிகளில் மட்டும் தான் அமைதியாய் சாந்தமாய் இருந்தனர். ஆனால் இப்போது... அவர்களோடு சேர்த்து நல்லிணக்கத்திற்கான குறைந்தபட்ச நம்பிக்கையும் சாம்பலாக்கப்பட்டு விட்டன.’’

சந்திரகாந்தனின் பதிவில் தெரியும் திரிபுகளில் ஒரு சிலருக்கு மாறுபாடு இருக்கலாம். உதாரணமாக ஆறுமுக நாவலர் சமூக சீர்திருத்தவாதி என எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் அல்ல. வெகு சிலரால் அவர் சைவப் பிரிவைச் சேர்நத்வராகத்தான் பார்க்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் சந்திரகாந்தனின் பதிவிலுள்ள முக்கியத்துவத்தையும், குறியீட்டு உள்நோக்கத்தையும் கணக்கில் கொள்ளாமல் இருக்க இயலாது. கடந்த காலத்தில் எழுப்பப்பட்ட பல்வேறு குரல்களின் பிரதிநிதித்துவமாகவும் எதிர்காலப் பார்வையாகவும் வேற்றுமைகளுக்கும் இடமளிக்கும் ஒரு மாகாணமாகவும் நூலகம் திகழ்ந்தது. ஒருமித்த தன்மைக்கு பதிலாக முரண்கூறுகளைக் கொண்ட ஒரு முழுமையடையாத தேசத்தையே இவ்வேறுபாடுகள் காட்டுகின்றன. ஆகவே தேசியவாத தாகத்திற்கு இந்த வேறுபாடுகளும் அடிப்படையாய் அமைகின்றன. தேசம் ஓரினத்தன்மையை அடைவதற்காக ஆறுமுக நாவலரோடு ஒன்றாய் நிற்கும் அனகரிகா தர்மபாலா போன்ற தன்பக்க நண்பர்களையே கூட இழக்கத் தயங்காது.

II

இவ்விரு கதைகளுமே நமக்கு ஒரு விஷயத்தை புரிய வைக்கின்றன. எப்போதுமே ஓரினத்தன்மைக்கான ஆசையுமாய், அதே சமயத்தில், நிஜத்தில் இருந்து கொண்டிருக்கும் வேறுபாடுகளுமாய் தேசியவாதத்தில் ஒரு ஊசலாட்டம் இருந்து கொண்டே இருக்கின்றது. இதற்குத் தீர்வு என்று எதுவுமில்லை. இந்நிலையில் தேசவடிவத்தின் தவிர்க்க இயலாததும் அதனோடு ஒன்றாகிப் போனதுமான வன்முறையைப் பற்றிப் பார்ப்போம்.

தேசம் என்பது எல்லோருக்கும் பொதுவானதாகக் கூறப்பட்டாலும், அது ஒரு சார்பானதாகவே இருக்கும். அதுவே அதன் தன்மை. அதாவது தேசத்தைக் கட்டும் முயற்சியில் அனைத்துப் பகுதிகளுக்குமான பிரதிநிதி என்று ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் காட்டிக்கொள்ளும். இந்தியாவை எடுத்துக் கொண்டால், இந்தி மாநிலங்களே இந்தியாவின் இதயமாக முன்வைக்கப்படுகிறது. ஆகவே இந்தி மொழியே மண்ணின் மொழியாக தேசிய பெருமையாக முன்வைக்கப்படுகிறது. இலங்கையிலும்  இதே நிலைதான். சிங்கள ஒருமைப்பாட்டாளர்கள் என்று கார்த்திகேசு சிவதம்பியால் வர்ணிக்கப்படுபவர்களைப் பற்றி அவர் இப்படி எழுதுகிறார். “இலங்கையின் கலாச்சாரத்தை பேசுகையில் அவர்கள் பிற சமூகங்களின் வரலாற்றை மறுதலிப்பது மட்டுமல்லமல், பிற சமூகத்தினரையோ, அவர்களின் பண்பாட்டையோ, கலாச்சாரத்தையோ அவர்களின் வாழ்முறைகளையோ இலங்கையின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்வதில்லை. இலங்கையின் இசை, நடனம் அல்லது இலக்கியம் என்ற பேச்சு வரும்போதெல்லாம் அது சிங்கள இசை, நடனம், இலக்கியம் என்றானது. அதில் தமிழ் இசைக்கோ, நடனத்திற்கோ, இலக்கியத்திற்கோ இடமில்லை’’ என்கிறார். இந்த வகை பிரதிநிதித்துவங்கள்.. அது இந்தியாவில் இந்தி மொழியாகட்டும் அல்லது இலங்கையின் சிங்கள மொழியாகட்டும் இவை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சுருக்கமாக ஒரு சார்பாக தேசத்தைக் கட்டும் வேலையில் இறங்கினால் அது எப்போதுமே பாதுகாப்பற்றது. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் விடுபட்டுப் போனவர்களின் எதிர்ப்பு வெளிப்படும்.

பலவற்றின் பிரதிநிதியாக ஒன்றை மட்டும் நிறுவ முயலும்போது பல்வேறு விளைவுகள் ஏற்படும். “ஜனநாயகம் சாத்தியமாயிருக்கிறது என்றால், அங்கே ஒருமைக்குத் தேவைப்படும் அமைப்பும், தேவைப்படும்  உள்ளடக்கமும் இல்லை என்று அர்த்தம். தங்களை பெரும்பான்மையினராகக் காட்டிக்கொள்ள பல்வேறு குழுக்களும் தங்கள் தனித்துவத்தை இழக்க போட்டியிடுகின்றன என்று அர்த்தம். சொல்லப்போனால் ஜனநாயகத்தின் மிக முக்கியமான அம்சமே பல்வேறு அடையாளங்களுக்கிடையேயான போட்டியே, ஆனால் இது தேசத்தைக் கட்டுவதில் சிக்கலை உண்டாக்கும். ஏனெனில் தேசம் என்பதன் அடிப்படையே ஒரே தன்மையும், ஓரினத்தன்மையுமே. இலங்கை தமிழர்கள் சிங்களர்களாக மாறவேண்டும் என இலங்கை அரசு எதிர்பார்க்கிறது’’ என்கிறார் சிவதம்பி.

சிவதம்பி கூறுவது சரியே. இலங்கை அரசாங்கம் ஓரளவிற்கு இதை சாதித்துமிருக்கிறது. உதாரணமாக 1983 தமிழர்களுக்கெதிரான கலவரங்களில் தப்பித்து நியூஸிலாந்துக்கு புலம் பெயர்ந்த கமலாவை எடுத்துக் கொள்வோம்.

நியூஸிலாந்தில் ஒருமுறை அவர்கள் ஒரு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். கமலாவின் மகள் அவரை “அம்மா’’ என்றழைக்க, அவளுடைய அண்ணனோ, “வீட்டிற்கு வெளியே ‘அம்மா’ என்று அழைக்காதே. ’அம்மி’ என்றுதான் அம்மாவைக் கூப்பிட வேண்டும் என நான் ஏற்கனவே உனக்குச் சொல்லி இருக்கிறேன்’’ என்றான். ஆக அவன், தாயைக் குறிக்கும் சிங்களச் சொல்லை ஏற்றுக் கொண்டான். அந்த சொல் மட்டுமல்ல சிங்களர்களின் பல வழிமுறைகளையும் அவன் ஏற்றுக் கொண்டுள்ளான். ஏனெனில் அப்போது தான் தமிழனாய் இருப்பதால் உண்டாகும் மோசமான விளைவுகளிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

வன்முறை மீதான அச்சமே கமலாவின் குடும்பத்தை சிங்கள வழிமுறைகளை ஏற்றுக் கொள்ளத் தூண்டியது. அதுவும் பொது இடத்தில் மட்டுமே! தன்னை சிங்களத்தனமாக பாசாங்காகக் காட்டிக் கொள்வதால், அதை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமல்ல. மாறாக அவனின் தமிழ் தன்மையை மேலும் இது வலியுறுத்துவதாகவே இருக்கிறது. ஆக மறைவான வன்முறையைக் கொண்டதாக இருந்தாலும் ஓரினத்தன்மையான ஒரு கற்பனாவாத தேசத்திற்கான ஆசை இருந்து கொண்டே இருக்கிறது. “இழப்புகளின் விளிம்பில்தான் எப்போதும் தேசம் இருக்கிறது’’ என்று வில்லியம் கான்னாலியின் அற்புதமான கூற்று ஒன்று இருக்கிறது.
.
எப்போதுமே இழப்புகளின் விளிம்பிலேயே தேசம் இருப்பதால், தன்னை மீண்டும் மீண்டும் ஸ்திரப்படுத்திக் கொள்ளவே விழைகிறது. ஆனால் எதிர்மறையாக இப்படி மீண்டும் மீண்டும் ஸ்திரப்படுத்துவதற்கும் கூட தேசிய இனம் தவிர்த்த ‘மற்றவை’ தேவைப்படுகிறது. இந்து தேசத்திற்கு இஸ்லாமியர்கள் போல, சிங்களதேசத்திற்கு தமிழர்கள்போல ‘மற்றவை’ தேவைப்படுகிறது. “தேசத்திற்கும், மற்ற தேசியவாத இனப்பிரிவுகளுக்கிடையேயான சிக்கல்கள் இவை இரண்டின் வளர்ச்சிக்கும் பாதகமாகவே அமையும்’’ என சங்கரன் கிருஷ்ணா கூறியதுபோல் தேச வடிவம் மற்ற இனங்களோடு பிணைக்கப்பட்டிருந்தாலும், பெறப்படாமலேயே இருக்கும் ஓரினத்தன்மையை விரும்புகிறது. தேச வடிவம் அதன் ஒருமைத்தன்மையை தக்க வைக்க இரண்டு வகை குறுக்கீடுகளைச் செய்கிறது.

வில்லியம் கான்னாலி கூறியபடி முதல் வகை தேசியவாத குறுக்கீட்டை ஒத்துப்போகும் உத்தி எனலாம். அதாவது தேசவடிவம் தனக்கு அடங்க மறுக்கும் குழுக்களோடு ஒத்துப்போவது போல் கருத்து தெரிவித்து அதன் ஒருமைத்தன்மையை நிலைநாட்டும் உத்தி. அதனால்தான் இநதியாவில் ஒருமைப்பாட்டுக்குழு இந்தியை தேசிய மொழியாக்கும்படி வற்புறுத்துவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. தங்களுக்கு இதனால் நன்மையில்லாமல் போனாலும் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொண்ட இந்தி பேசாத மக்களை போற்றவும் செய்கிறது. “ஒரு நல்ல பொது நோக்கிற்காக இந்தி பேசாத நிறைய மக்கள் தங்கள் சொந்த விருப்பங்களை விட்டுக்கொடுத்து இந்தியை தேசியமொழியாக ஏற்றுக் கொள்வது நல்ல அறிகுறி. இந்தியை தாய்மொழியாய்க் கொண்டவர்களுக்கு ஏற்படும் நன்மைகளோடு ஒப்பிடுகையில் இந்தி பேசாத மக்களுக்கு இதனால் நன்மைகள் விளையப் போவதில்லை; சிரமங்களே அதிகம் என்ற போதிலும் அவர்கள் மனமுவந்து இந்தியை ஏற்றுக் கொள்கிறார்கள்’’ என்று ஏற்றுக் கொண்ட மக்களை புகழ்கிறது ஒருமைப்பாட்டுக் குழு அறிக்கை. 1983இல் ஜெயவர்த்தனே கொண்டு வந்த இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில 6ஆவது திருத்தத்தில் இதே போன்ற யுத்தி கையாளப்பட்டது. இலங்கை பாராளுமன்றத்திலும், பொது அலுவல்களிலும் இருக்கும் தமிழ் உறுப்பினர்களையும் “ஒன்றுபட்ட இலங்கை’’க்காக உறுதிமொழி ஏற்கச் சொன்னது. சுருக்கமாகச் சொல்வதானால் தேசிய வரிசையில் இந்தியாவின் தமிழ் மக்கள் இந்தி பேசும் மக்களாகவும், இலங்கையின் தமிழ் மக்கள் இலங்கை சிங்கள மக்களாகவும் மாற நிர்பந்திக்கப்படுகிறார்கள். இந்த ஒத்துப்போகும் யுக்தியால் கிடைக்கும் வெற்றிக்கு அடிப்படையாக சுயவெறுப்பும், தேசியவாத வன்முறையுமே இருக்கின்றன. வில்லியம் கன்னாலி தனது குறிப்பில் “ஒரு பக்கம் பார்த்தால் இப்படி ஒத்துப்போகும் உத்தி மிக வாஞ்சையானதாகத் தெரியும். ஆனால் மறுபக்கம் பார்க்கையில் வலிநிறைந்த வஞ்சகமான அதேசமயம் சட்டரீதியான பிரித்தாளும் சூழ்ச்சியாகவும் தெரியும்’’ எனக் கூறுவது உண்மையே.

இந்த ஒத்துப்போகும் உத்தி வேலைக்காகாத போது (பெரும்பாலான சமயங்களில் அப்படித்தான்) தண்டனைகள் மிகுந்த, வன்முறையாலே தேசத்தோடு ஒத்துப்போகாத சக்திகளை அடக்கி அதன் இறையாண்மையை தேசம் நிலைநாட்டும். தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில் இலங்கை அரசின் வன்முறையும், வடகிழக்கு இந்தியாவிலும் காஷ்மீரிலும் இந்திய அரசின் வன்முறையும் இவற்றிற்கு உதாரணங்கள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், இப்படிப்பட்ட அரசு சார்ந்த வன்முறைகள் வன்முறையாகப் பார்க்கப்படுவதில்லை. ஏனெனில் தேசவடிவத்தின் ஒரே அரசியல் ஏற்பாடாக இவ்வன்முறையை தேசத்தின் இயல்பு என ஏற்றுக் கொண்டிருக்கிறது. உலகம். ஆனால் அது இயல்பு அல்ல. திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கையின் ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகையின் தலையங்கம் இதற்கொரு எடுத்துக்காட்டு. கொழும்பு விமான நிலையத்தின் மீதான வான்வழித் தாக்குதல் பற்றிக் குறிப்பிடுகையில் “இரண்டாம் உலகப் போரில், ஏப்ரல் 5, 1942 அன்று இலங்கை மேல் மோசமான வான்வழித்தாக்குதல் நடந்தது. அதன் பின்னர் கடந்த ஞாயிறு இரவு அது போன்றதொரு தாக்குதல் நிகழ்ந்துள்ளது’’ என்கிறது. “தி சன்டே டைம்ஸ்’’ பத்திரிகை கொண்டிருக்கும் சிறந்த தேசிய பாரம்பரியத்தின் உதவியோடு வரலாற்றை தவறாக்குகிறது. அந்த பத்திரிகையின் பார்வையில், இலங்கை அரசால் தமிழர் பகுதிகளான கிழக்கு மாகாணத்தில் மீண்டும் மீண்டும் நடத்தப்படும் குண்டு வீச்சுகள் எல்லாம் கண்ணில் படவே இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தேசத்தின் பெயரால் நடத்தப்படும் அரசாங்கத்தின் வன்முறை என்பது வன்முறையல்ல மாறாக தேசத்தை நிர்மாணிப்பதில் அதிகாரம் கொண்டவர்களின் அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கை என்றாகிறது.

சுருக்கமாகச் சொன்னால் தேச வடிவத்தின் இந்த முரண்பட்ட தன்மை, ஓரினத்தன்மைக்கான ஆசையின் காரணமாக எழுந்ததாக இருந்தாலும், ஒன்றிணைக்க வேண்டிய வேறுபாடுகளைக் கொண்டதாகவே இன்னும் இருக்கிறது. ஆகவே பழிவாங்கும் பாதையில் தேசம் செல்வது தவிர்க்க முடியாததாகிறது. இதனால்தான் அர்ஜுன் அப்பாதுரை இப்படிக் கூறுகிறார்.

‘சிறியவைகளின் பால் உள்ள அச்சம்’ முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார். சிறுபான்மை பெரும்பான்மை பற்றி கூறும்போது அவர் இப்படிக் கூறுகிறார்.
“எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ளவர்கள் கறைபடியாத தேசத்தின் மாசுமருவற்ற ஒரே தேசிய இனம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பெரும்பான்மையோரின் நிலைக்கும் தங்களது நிலைக்குமான சின்ன இடைவெளியை சுட்டிக்காட்டும்போது பெரும்பான்மை இனம் சிறுபான்மையினத்தை சூறையாடி அழிக்கும் அளவிற்குச் செல்கிறது. இந்த சமஉரிமையற்ற தன்மை பெரும்பான்மையினரை சிறுபான்மையினர் மீதான வன்முறையாளர்களாக மாற்றுகிறது.’’
ஆக, சிறுபான்மையினர் தேசத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க வேண்டுமென்பதில்லை. தேசத்தில் அவர்களுடைய இருப்பே பெரும்பான்மையினருக்கு பிரச்சனையாக இருக்கிறது.

ஒரு இனத்தையே முற்றிலுமாக ஒழித்து அழித்துவிட்டாலும் கூட (மிக மிக அரிதானதும், சாத்தியமில்லாததும்) அது ஒரு முழுமையான குறைபாடற்ற மாசுபடாத தேசியத்தை உருவாக்கி விடாது. ஏனெனில் இதுபோன்ற சிறுபான்மை அடையாளங்கள் இன்னும் தேசத்தில் உள்ளனவா என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாது. அவர்கள் இன்னும் கேள்வி கேட்கத் தொடங்கவில்லை என வேண்டுமானால் கூறலாம். எப்போது வேண்டுமானாலும் சம உரிமைக்காகப் போராடத் துவங்கலாம். அதனால்தான் தேசவடிவத்தின் தீவிர ஆதரவாளராகிய எர்னஸ்ட் ரேனன்கூட இப்படிக் கூறுகிறார்.

“தேசத்தின் இருத்தல் என்பது அன்றாடக் கருத்துக்கணிப்புக்கு உட்பட்டது’’ என்கிறார். இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் சமீபமாகக் கொண்டாடப்படும் ‘காதலர் தினம்’ கூட தேசத்திற்கு எதிரானது என்று கூறப்பட்டு அதுவே கூட வன்முறைக்கு வித்திடலாம். ஏனெனில் இந்து தேசியவாதிகள் காதலர் தினக் கொண்டாட்டங்கள் இந்தியாவிற்கு எதிரானவை; அவை அந்நியக் கலாச்சாரம் என தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள். ஆக அந்நிய கலாச்சாரம் தேசக்கலாச்சாரத்திற்கும்,அதன் முழுமைக்கும் குறுக்கே நிற்கிறது. ஆகவே தேசங்கள் எப்போதும் இழப்பின் விளிம்பில் நிற்கத் தயாரில்லை. ஆகவே அவை வன்முறையாய் மாறுகின்றன.

III

தேசத்தைக் கட்டும் வேலையை நாம் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பரீட்சித்துப் பாத்துக்கொண்டே இருக்கிறோம்.  நம் காலத்தில் சாத்தியமான அரசியல் ஏற்பாடாக தேச வடிவத்தை உருவாக்குவது என்பது நடக்காத காரியம்.  தேச வடிவத்திற்கு அப்பாற்பட்டு ஒரு புதிய பன்முகத்தன்மையுள்ள அரசியல் வடிவம் நாம் கனவு காணும் அரசியலுக்குத் தேவைப்படுகிறது.  இந்த அளவில் கூறமுடிந்த என்னால் அந்த புதிய அரசியல் வடிவம் எப்படி இருக்கும் என்பதை அறுதியிட்டு கூறமுடியவில்லை.  அது எதிர்காலத்தின் அதிகார எல்லைக்குட்பட்டது.  ஆனால் கடந்த காலங்களில் தேசியவாதத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை வைத்துக் கொண்டு வருங்காலத்தில் புதிய அரசியல் ஏற்பாடு எப்படி இருக்கும் என ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.

தேசியவாதத்தை விமர்சனம் செய்த ரவீந்திரநாத் தாகூரையும் பெரியார் ஈ.வெ.ராமசாமியையும் பற்றி சற்று பார்க்கலாம்.  இவர்களில் தாகூரின் கவிதை தேசிய கீதமாயிற்று.  இருபதாம் நூற்றாண்டில் தமிழ் பேசிய தென்னக மக்களின் அரசியல் பொது புத்தியில் தீவிரமான மாற்றங்களைக் கொண்டு வந்தவர்  பெரியார்.  எல்லைகளற்ற தேசம் பற்றிய கற்பனைக்குப் பின்னர் எழும்பிய ஒழுக்கம் சார்ந்ததாகவே இவர்களின் விமர்சனங்கள் இருந்தன.

தாகூர், பெரியார் இருவருமே தேசியத்திற்கு தங்கள் பங்கை ஆற்றி இருந்திருக்கின்றனர்.  1905இல் ஏற்பட்ட வங்கப்பிரிவினைக்குப் பின் தாகூர் சுதேசி இயக்கத்தை பிரச்சாரம் செய்து அந்நியப்பொருட்களை நிராகரித்தார்.  பெரியார் 1920ல் காங்கிர கட்சியில் இணைந்தார்.  5 வருடங்களுக்குப் பின்னர் 1925 இல் கட்சியில் இருந்து வெளியேறினார்.  தமிழகத்தில் ஒத்துழையாமை இயக்கத்தை வலுப்படுத்தியதில் சிறந்த பங்காற்றினார் பெரியார்.  முதலாம் உலகப் போரில் ஏற்பட்ட பேரழிவும், சூறையாடலும் தாகூரை தேசியவாதத்திற்கு எதிரானவராக ஆக்கியது.  பெரியார் தேசியவாதத்தை ஒரு கட்டத்தில் கைவிட்டார்.  அதன்பின் ஒரு போதும் தேசியவாதத்திற்கு ஆதரவாக அவர் இல்லை.  தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என காரணம் கூறி இந்திய தேசிய காங்கிர சாதிய ஒடுக்குமுறையை கேள்வி கேட்க மறுத்தது.  இதனால் பெரியார் தேசியவாதத்தைக் கைவிட்டார்.  முழுதாக உருவாகிவிட்ட தேசமானாலும் சரி, அல்லது உருவாகிக் கொண்டிருக்கும் தேசமானாலும் சரி, வேறுபாடுகளை எப்படி கையாள்கிறது என்பதே தாகூர், பெரியார் இருவரின் கவலையாக இருந்தது.   தேசியவாதத்தின்பால் எந்த மயக்கமும் கொண்டிராத தாகூரின் தன்மை ஏறக்குறைய நிபந்தனையற்றது.

“மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே, மயக்கம் கொள்ளச் செய்யும் சக்தி தேசம் என்ற கருத்தாக்கமே.  தேசத்தின் நீதி பிறழ்வு பட்டாலும் கூட அதைப் பற்றி அறியாமல், மிக மோசமான முறையில், தன்னலத்தோடு கூடிய தேசத்தின் நிகழ்ச்சிநிரலை நடத்துவது என்று தேச வெளிச்சத்தின் பிடியில் இருக்கும் மக்கள் முடிவு செய்ய நேரும்” என்கிறார் தாகூர்.  ஆக தேசியவாதம் மயக்கும் திறன் கொண்டது; தன்னலமே அதற்கு அடிப்படை. தேசியவாதத்தினால் நன்மை ஏதுமில்லை என தாகூர் நினைத்திருப்பாரேயானால் அதற்கு தேசியவாதத்தின் அதிகார கேட்கையே காரணமாய் இருந்திருக்கும்.  எந்த தேசியவாதத் திட்டத்திகும் அதிகார வேட்கையே மையமாக இருக்கும்.  “தேசியவாதம் அதிகாரத்தின் நிறுவனத்தை உருவாக்குகிறது.  அது ஆன்மீக தத்துவார்த்தத்தை உருவாக்குவதில்லை.  தான் தேடுகிற இரையையும் தன்னகத்தே வைத்துக்கொண்டிருக்கும் உயிரினங்களின் கலவை போல தேசியவாதம் திகழ்கிறது” என்கிறார் தாகூர்.   தேச வடிவத்தை விடுதலையின் சின்னமாக அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.  காலனியாதிக்கத்தில் இருந்து தேசத்தை மீட்டெடுக்கும் சுதந்திர வேட்கையைக் கூட இதற்கு போதுமானதில்லை என்றார்.  “இன்றைய காலகட்டத்தில் அரசியல் சுதந்திரம் பெற்றவர்கள் எல்லோரும் விடுதலை பெற்றுவிடவில்லை என்பதை நாம் மறக்கக் கூடாது.  அவர்கள் அதிகாரமிகுந்தவர்கள்.  அவ்வளவுதான்!  சுதந்திரம் என்ற புனைவின் கீழ் ‘பெரிய பெரிய அடிமை நிறுவனங்களை’ அவர்களுக்குள்ளே இருந்த சுதந்திரத்திற்கான கட்டற்ற ஆவல் உருவாக்கியது”.   ‘பெரிய அடிமை நிறுவனங்கள்’ என அவர் குறிப்பிடுவது தேசத்தின் அரசு மற்றும் அதன் நடைமுறைகளையே என  நான் நினைக்கிறேன்.

கவிஞரின் உணர்ச்சி வசப்படும் தன்மையிலில்லாது மக்களின் மனிதராக இருந்த பெரியார் ‘ஆன்மிக தத்துவார்த்தத்தைப்’ பற்றிப் பேசவில்லை.  தீவிர பகுத்தறிவாளராக இருந்ததால் ‘ஆன்மிகம்’ அவருக்கு ஒத்துவராத ஒன்றாக இருந்திருக்கக்கூடும்.  சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகள் எவ்வாறு தேசத்தின் அதிகார இயக்கவியலை புரிந்து கொண்டனவோ அதைப்போலவே பெரியாரும் வெளிப்படுத்தினார்.   சுயாட்சி அல்லது சுயராஜ்யம் என்ற இந்திய தேசியவாதிகளின் கோரிக்கையை பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.

“பார்ப்பனர்களின் சுயராஜ்யம் பறையர்களுக்கு உண்டா?  பூனையின் சுயராஜ்யம் எலிக்கு உண்டா?  நிலச்சுவான்தார்களின் சுயராஜ்யம் குடியானவர்களுக்கு -  விவசாயிகளுக்கு உண்டா? உடைமையாளர்களின் சுயராஜ்யம் தொழிலாளிகளுக்கு உண்டா?” என்கிறார்.  சுருக்கமாகச் சொல்வதானால் பெரியாரின் இந்தக் கேள்வி ரவீந்திரநாத் தாகூர் கூறிய விடுதலை என்ற புனைவின் கீழ் அடிமைகளாக இருப்பது என்பதையே உணர்த்துகிறது.

பெரியாரின் கேள்விகளைப் பார்ப்போம்.  அதிகாரத்தில் உள்ள அல்லது அதிகாரத்தில் இல்லாத பல்வேறு வகைப்பட்ட அடையாளங்கள் தேச வெளிக்குள் இருக்கிறதென்பதால், தேசத்தின் ஒருமைத்தன்மை, ஓரினத்தன்மை ஆகியவற்றை முதலாவதாக கேள்விக்குள்ளாக்குகிறார்.  இரண்டாதாக தேசத்தின் சுயாட்சி என்பது சாத்தியமற்ற அரசியல் திட்டம் என்றார்.   ஏனெனில் எண்ணற்ற படிநிலைகளும், அதிகார மட்டத்திற்கும் கீழ் மட்டத்திற்கும் இடையேயான  உறவுகளும் இருப்பதால் சுயாட்சி சாத்தியமற்றது என்கிறார்.  மூன்றாவதாக அதிகார மையங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் போட்டியிடுவதற்கான வெளியை உருவாக்குவதற்கான வகையில், அரசியல் வடிவம் இருக்க வேண்டும் என்றார்.

வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை மட்டுமே தேச அதிகாரத்திற்கான அடிப்படை என தேசியவாதம் கொண்டாடுகிறது.  அதே வேளையில், தாகூரும், பெரியாரும் தேசம் என்ற சுமையை விட்டு விடுதலையாகி நின்று, தேசத்தின் குறுகிய எல்லைகளின் வரம்புகளை மீற எத்தனித்தனர்.  அவர்கள் இருவருமே பரந்த இவ்வுலகின் அறிவுசார் மற்றும் அரசியல்சார்ந்த விஷயங்களை தேச எல்லைக்கப்பால் தேடினர்.  அவர்களைப் பொறுத்தவரை எல்லைகள் ஒரு பொருட்டல்ல.  ஆனால் கருத்துக்களை பொருட்படுத்தினர்.  காலனியாதிக்க எதிர்ப்புணர்வோடு மக்கள் ஒன்று திரண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் காலனி ஆதிக்கம் குறித்து தாகூர் இப்படி எழுதுகிறார்.  “, மேற்கின் ஆற்றலுக்கும், மேற்கின் நாடுகளுக்கும் இடையே இந்தியாவில் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார்.  அவரைப் பொருத்தவரை மேற்கின் ஆற்றலை ஒத்துக்கொள்கிறார்.  ஆனால் மேலை நாடுகளை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்.  அதைப் போலவே “ஆட்சியாளர்கள் கடவுளுக்கு சமம்; மக்கள் ஆட்சியாளர்களின் ஆதிக்கத்திற்கு அடங்கி நடக்க வேண்டும் என்பது ‘இந்து இந்தியா’ வின் நம்பிக்கை. ஆட்சியாளர்கள் மக்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்.  ஆட்சியாளர்கள் மக்களின் வேலைக்காரர்கள் என பாடம் சொல்லிக் கொடுத்தது ‘ஆங்கிலேயரின் இந்தியா’” என்கிறார் பெரியார்.  தாகூரைப் போலவே அவரும் இந்தியா மீதான ஆங்கிலேயர்களின் பேராசைகள் தோல்வியுற்றதைக் குறிப்பிடுகிறார்.  “இந்தியாவில் அவர்களின் ஆட்சியை என்றென்றைக்குமாக நிலைநாட்டுவதிலும் இந்தியாவின் வளங்களை சூறையாடி அவர்களுடையதாக்கிக் கொள்வதிலும்” அவர்களுடைய தோல்வி பற்றி பெரியார் குறிப்பிடுகிறார்.  ‘திராவிடர்’ என்ற சொல்லுக்கான பொருளை பரந்ததாகக் குறிப்பிடுகிறார்.  எந்த விதத்தில் ஒடுக்கப்படும் மக்களாக இருந்தாலும், அவர்கள் இந்த தேசத்தின் எல்லைக்குட்படாதவர்களாக இருந்தாலும், அவனோ அவளோ சமத்துவத்தின் பக்கம் நின்றால் அவர்களும் திராவிடர்களே என்கிறார்.  “பிறப்பின் அடிப்படையில் ஒருபோதும் ஏற்றத்தாழ்வு இல்லை என்று ஒத்துக்கொள்ளும்,  ஏற்றத்தாழ்வை எல்லா வகையிலும் நடைமுறையில் எதிர்க்கும் ஒருவன் ஜப்பானியனாக இருந்தாலும் அவனை திராவிடனாக நாம் ஒத்துக் கொள்ள முடியும்” என்கிறார்.

இரண்டு கடினமான சிந்தனைவாதிகளின் தேசியவாதம் குறித்து சுருக்கமான, அதேசமயம் பலவகையிலும் எந்த வண்ணமும் பூசப்படாத சாராம்சம் இது.  ஆனால் இது நமக்கு தேசவடிவத்தைக் தாண்டிய அரசியல் குறித்து குறைந்தது இரண்டு முன்னுரைகளைத் தருகிறது.  முதலாவதாக, சமூகத்தின் பல வேறுபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டி ஒத்துக்கொண்டு, பல்வேறு சக்திகளும் எப்போதுமே போட்டியிடும் ஒரு தளமாக, அரசியல் இருக்க வேண்டும்.  இரண்டாவதாக எல்லைகளுக்குள் அடங்காத கற்பனையாகவும், தேச வடிவத்தின் எல்லைகளைக் கடந்து எல்லா சாத்தியங்களும், கூட்டணிகளும் முரண்பாடுகளும் கொண்ட இவ்வுலகை ஆரத்தழுவிக் கொண்டதாகவும் தேசத்திற்கப்பாலான அரசியல் இருக்க வேண்டும்.  இவ்விரு கருத்துக்களுக்கும் உள்ள உள்ளார்ந்த ஆற்றலை விளங்கிக் கொள்ள வேண்டுமானால் தேசமே நமது ஒரே அரசியல் வடிவம் என்ற நம்பிக்கையை முதலில் கைவிட வேண்டும்.

தாகூரை மீண்டும் நினைவுகூர்ந்து முடிக்கலாம் என எண்ணுகிறேன்.  தேசியவாதத்தின் மீதான அவரது முரண்பாட்டையும், அதன் பின்னே செல்பவர்களைப் பற்றியும் இப்படி எழுதுகிறார்.

“தேசத்தை வழிபடுவது என்பது கடவுளின் மீதும், மனிதத்தின் மீதும் வைத்திருக்கும் பயபக்தியை விட மேலானது என குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கு கற்பிக்கப்பட்டது.  நான் அந்த கற்பிதத்தை உடைதெறிந்து வளர்ந்துவிட்டதாக நம்புகிறேன்.  தேசமே ‘மனிதத்துவத்தின் குறிக்கோள்களை’ விட உயர்ந்தது என்று தங்களுக்கு கற்பிக்கப்பட்டதற்கு எதிராக போராடி என் நாட்டு மக்கள் தங்களுக்கான இந்தியாவை படைப்பார்கள் என்பதே என்னுடைய திடமான முடிவு”.

“மனிதத்துவத்தின் குறிக்கோள்கள்” - ஆம் பன்மையில் தான் சொல்லவேண்டும்.  அதன்மூலமே மனிதத்துவத்தை ஒருமைப்படுத்துவதைத் தவிர்க்க முடியும்.  இங்கிருந்துதான் தேச வடிவத்திற்கும், அதன் வன்முறைக்கும் அப்பாற்பட்ட ஒரு கனவை, காணத் தொடங்க வேண்டும்.

No comments:

Post a Comment