Saturday, February 12, 2011

பிரியம் சமைக்கிற கூடொன்று

சில ஆண்டுகளுக்கு முன் தீக்கதிர் அலுவலகத்தில் அமர்ந்து கூகிளில் எதையோ தேடிக்கொண்டிருந்தேன். எதையோ தேட எதோ சிக்கியது போல என் கண்களுக்குத் தென்பட்டது அந்தத் தலைப்பு. “வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு” (http://www.agiilan.com/?p=329). படிக்கத் தொடங்கினேன். அந்த மொழிநடையும், அனுபவமும் மனதைத் தைத்து வலியுண்டாக்கின. ஈழத்திலிருந்து அகதியாய் வந்து சென்னையில் வீடு கிடைக்காமல் அனைவராலும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்படும் துயர் வலியுடன் சித்தரிக்கப்பட்டிருந்தது. 

எதை வாசித்தாலும் பிடித்திருந்தால் அதை பிறரிடம் சொல்லி வாசிக்கச் சொல்வேன். ஆனால் எழுதியவரைத் தேடிப்பிடித்து பாராட்டுவதெல்லாம் நான் செய்ததேயில்லை. யதேச்சையாக பேச நேர்ந்தால் சொல்வதுண்டு. இதற்காக எந்த மெனக்கெடலும் செய்ததில்லை. அதிலும் முன் பின் அறியாத ஒருவர் என்றால் சொல்லவே வேண்டாம். பேசாமல் விட்டு விடுவேன். ஆனால் இந்தக் கட்டுரை என்னை அப்படி இருக்க விடவில்லை. கட்டுரை இருந்த வலைப்பூவிலேயே தொடர்பு எண் இருந்தது. அந்த எண்ணிற்கு என் கைபேசியில் அழைத்தேன்.

மறுமுனையில் ஒரு குரல்.

“நான் அகிலன் பேசுறேன். நீங்க?”

என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத்தொடங்கினேன். பேசிமுடிக்கப் போகும் சமயத்தில் நான் சந்தேகம் கேட்டேன்..”என்ன நீங்க? எனககு இலங்கைத் தமிழ் என்றால் ரொம்பப் பிடிக்கும். நீங்க அப்படித்தான் பேசுவீங்க..காது குளிர அந்த பாஷையைக் கேட்கப் போறேன்னு நினைச்சேன். நீங்க என்ன எங்களைப் போல தமிழ் பேசுறீங்க?” என்றேன்.

“அது நானாக மாத்திக்கொண்டது..இங்கே என் பாஷையை வைத்தும் கூட சந்தேகப்படுறாங்க. ஒரு ஆட்டோ பிடிக்கணும் என்றால் கூட முடிய மாட்டேங்குது” - இது பதில்

பேசி முடித்தபின்னும் நெடுநேரம் இது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். அருகிலிருந்த நீதிராஜன், அ.குமரேசன் ஆகியோரிடம் இதைப் பகிர்ந்துகொள்ள அவர்களோடு கொஞ்ச நேரம் அகதிகள் குறித்தும் அவர்களின் மனநிலை குறித்துமாய் விவாதித்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கே அமர்ந்து அகிலனின் வலைப்பூவிலிருந்த சில கவிதைகளையும், வேறு பல கட்டுரைகளை வாசித்தேன். நண்பர்களுக்கும் கூட சுட்டிகள் அனுப்பி வைத்தேன். அகிலனின் மொழி எனக்குப் பிடித்திருந்தது. அதில் அடர்த்தி, உண்மை, நேர்மை என எல்லாமும் இருந்தன. அவற்றை என்னால் உணர முடிந்தது. போர் தந்த வேதனையையும், அதன் கொடூரத்தையும் அகிலனின் எழுத்து மூலம் மேலும் விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆயிரம் இருந்தாலும் நாம் இங்கே பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு ஈழம் குறித்து கதைபப்வர்கள் தானே. பட்டவர்கள் சொல்லும்போதுதானே அதன் வலியும் வேதனையும் புரியும்? 

அதன் பின்னர் அவ்வபோது அகிலனின் வலைப்பூ பக்கம் செல்வதுண்டு. அவ்வளவே. அதற்குப்பிறகு மீண்டுமொரு முறை பேசினேன் என்று நினைக்கிறேன். எதற்கு என்று நினைவில்லை. கிட்டத்தட்ட ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை புத்தகச்சந்தையில் கருப்புப்பிரதிகள் ஸ்டாலில் இருந்தபோது பாரதிதம்பியோடு வந்த அந்தப் பையனை எங்கோ பார்த்தது போலிருந்தது. யோசித்துக்கொண்டே விட்டுவிட்டேன்

 அவன் என்னை நெருங்கி “கவின்மலரக்கா தானே நீங்க?” என்றான். 

 நான் “ஆமாம்! நீங்க?” என்றேன்.

 “நான் அகிலன்” என்றான். 

எனக்குப் புரியவில்லை. “எந்த அகிலன்?” என்றேன். “த.அகிலன். ஒருமுறை நீங்க போன் பண்ணினீங்களேக்கா?” என்றான்.

நான் அதிர்ந்துதான் போனேன். ஏனென்றால் அகிலன் எழுதுவதை வாசித்து கொஞ்சம் பெரியவராக கற்பனை செய்து வைத்திருந்தேன். என்னைவிட வயதில் மூத்தவராய்த்தான் அகிலன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியதோ தெரியவில்லை. அப்படி நினைத்துத்தான் கைபேசியிலும் பேசினேன். ஒரு பொடியனாக என்னை அக்கா என்று அழைக்கும் அளவிற்குச் சின்னப் பையன் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. முதன் முதலில் பார்த்தபோது இப்போதுள்ளதை விட இன்னும் ஒல்லியாக இருந்தான் அகிலன்.




அன்றிலிருந்து ஏனோ அகிலனை ரொம்பப் பிடித்துப்போனது. காரணம் தெரியாமல் சிலர் மீது நமக்கு அன்பு ஊற்றெடுக்கும். ஒரு காட்டுச்செடியாய் அது பாட்டுக்கு வளரும். சில நேரம் நாம் யார் மீது அன்பு செலுத்துகிறோமோ அவர்களுக்கே தெரியாது நம் அன்பின் அளவு. அப்ப்டியானதொரு அன்பும் பாசமும் அகிலன் மீதெனக்கு ஏறபட்டதற்கு இன்று வ்ரை காரணம் தெரியவில்லை. கூடப் பிறவாத சகோதரனாய் அவன் எனக்குத் தோன்றினான். ஒரு வேளை அவனுடைய துயரங்கள் என்னை அப்படி நினைக்கவைத்தனவோ என்னவோ?

’அக்கா’ என்ற சொல் ரொம்ப இனிமையாய்த் தோன்றியது அவன் அழைத்தபோதுதான். அதன்பின்னும் கூட நாங்கள் அதிகம் சந்தித்துக்கொள்ளவில்லை. அதிகம் சாட்டிலும், கைபேசியிலும் பேசுவோம். நடுவில் இலங்கை போனபோது பனைவெல்லம் வாங்கி வந்து தந்தான். ஒரே ஒருமுறை வீட்டிற்கு வந்திருக்கிறான். அன்றைக்கு நீலகண்டன், அமுதா, பாரதிதம்பி, அகிலன், லிவிங் ஸ்மைல் வித்யா என்று நண்பர்கள் அனைவரும் வந்து வீட்டில் ஒரு பொழுதை மீன்குழம்போடு உண்டு களித்தோம். அப்போது தன் வடலி பதிப்பக வெளியீட்டு நூலொன்றை எனக்கு பரிசளித்தான். எப்போதும் தன் குறித்து ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது “பாரதிதம்பி அண்ணா இதை உங்ககிட்ட சொல்லலையா?” என்று கேட்டுத்தான் ஆரம்பிக்கவேண்டும் என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறான்.

நான் ஒருமுறை கூட அவன் வீட்டிற்குப் போகும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவன் எனக்கு சமைத்து சாப்பாடு போடுவதாகச் சொல்லிக்கொண்டேயிருந்தான். 

“இரவில் கரையும் நிழல்கள்” -  என் முதல் கதை.  தலைப்பெல்லாம் வைககவில்லை அப்போதே எழுதி முடித்தவுடன் அவனுக்குத்தான் மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன். வாசித்துவிட்டு நெடுநேரம் பேசினான்.

 “உங்களுக்கு ஏன் என்னுடைய ‘வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு’ கட்டுரை பாதித்தது என்று இப்போது புரிகிறதக்கா.உங்கள் கதையில் உள்ளதுபோல நானும் இருந்திருக்கிறேன். உணர்ந்திருக்கிறேன்” என்றான். 

நான் அவனிடம் சொன்னேன் ”அந்த அனுபவம் உன் கட்டுரையை வாசித்ததற்கு பின்பு எனக்கு நிகழ்ந்தது அகிலன். எனவே உன் எழுத்து என்னை பாதித்ததற்கு உன் எழுத்து மட்டுமே காரணம். என் அனுபவம் அல்ல” என்றேன்.

“நம் இருவருக்கும் வீடு விஷயத்தில் ஒரே அனுபவம்” என்றான்.

நிச்சயமாக ஒன்றில்லை. ஒரு நாட்டின் குடியுரிமை பெற்று அந்த நாட்டின் ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், இன்ன்பிற இதியாதிக்கள் என்று எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு உள்நாட்டில், தெரிந்த் சூழலில் வீடில்லாமல் இருபப்தற்கும், யாருமேயில்லாமல், புதிய சூழலில், நாடு விட்டு நாடு வந்து வீடு கிடைக்காமல், இருக்க இடமின்றித் திரிவதற்கும் வேறுபாடுண்டு. அகிலன் போன்ற அகதிகளின் அவலத்தோடு ஒப்பிடுகையில் என் அனுபவம் கால்தூசு. போரில் இழந்த தன் தம்பியைக் குறித்த பதிவொன்றையும்,அம்மாவின் ஆர்மோனியப்பெட்டியும் (’நான் சங்கீத ரீச்சரிண்ட மகன்’ - இது அகிலன் அடிக்கடி சொல்லும் வாசகம்), வாசித்து கலங்கியிருக்கிறேன்.  புத்தர் பற்றிய குறிப்புகள் வாசித்தபோது அவன் எழுத்துக்கு விசிறியாகி இருந்தேன்.


மீண்டும் அகிலன் இலங்கைக்குப் போகும் நாள் வந்தது. இந்த முறை உங்களுக்கு செருப்பு வாங்கி வருகிறேன் என்று சொல்லிச் சென்றான். திரும்ப வரவில்லை. அப்ப்டியே கனடா பறந்துவிட்டான் தன் துணையைத் தேடி. 

துஷ்யந்தி - அங்கே அகிலனுக்காக காத்துக்கிடந்த அவன் காதலி.
அவளைத்.தேடி பறந்துவிட்டான். இருவரது இரவையும் பகலையும் ஒன்றாக்கிக்கொள்ள அவன் கனடா சென்றுவிட்டான்.

இன்று அவர்களுக்குத் திருமணம்.  போக இயலாது.. இங்கிருந்தே வாழ்த்திக்கொள்ள வேண்டியதுதான். புது வாழ்க்கையில் இன்றைக்கு அடியெடுத்துவைக்கும் அகிலனுக்கும் துஷிக்கும் அன்பான வாழ்த்துகளை அவர்களை இணைத்த இணையத்தின் மூலமே அனுப்பி வைக்கிறேன்.

அகிலனின் வரவுக்காக வடலி பதிப்பகத்தோடு சேர்த்து,  சில நண்பர்களும் காத்திருக்கிறோம்.

அகதியாய் வந்த அகிலன் தமிழ்நாட்டில் எத்தனை மனங்களை சம்பாதித்துவிட்டுச் சென்றிருக்கிறான்!  இனியொரு முறை “வீடெனப்படுவது பிரியம் சமைக்கிற கூடு” போன்றதொரு கட்டுரையை எழுதும் வாய்ப்பு அகிலனுக்கு இருக்காது .

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அகிலன் மீண்டும் துஷியோடு இங்கு வரக்கூடும். அப்போது அவனையும் துஷியையும் வரவேறக வீடொன்று காத்துக்கிடக்கிறது. 

அகிலன்! எப்பொது வரப்போகிறாய் உன் துணையுடன்?

பிரியம் சமைக்கிற இந்தக் கூடு உங்களிருவருக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறது அகிலன்! 



14 comments:

  1. இருவருக்கும் இனிய மணநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. ஆனந்த விகடனில் படித்து ரசித்தேன் , அகிலனின் இல்வாழ்க்கை இனிதே அமைய , நல்வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  3. எனக்கு மாலனின் "வீடென்று எதனைச் சொல்வீர்" கவிதை மனதிலோடுகின்றது. "பிரியம் சமைக்கிற கூடொன்று" வாய்க்கப் பெற்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்...

    ReplyDelete
  4. புதுமாப்ளை

    ReplyDelete
  5. அகிலனுக்கும் இணைக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அன்புடன் அருணா, இணையத் தமிழன், விந்தைமனிதன், யோ.கர்ணன், காமராஜ்

    அனைவருக்கும் மிக்க நன்றி!!

    ReplyDelete
  7. Anonymous11:53 pm

    Nice Ms.Kavin Malar

    ReplyDelete
  8. Anonymous9:18 pm

    kavin photo la irukkarathu neengala?

    ReplyDelete
  9. இல்லை. அது அகிலனின் துணைவி

    ReplyDelete
  10. நன்றி கவின் மலர் நீண்ட நாள் ஒரு பிரியமான் கட்டுரையை வாசித்தேன்.=

    ReplyDelete
  11. அகிலனுக்கும் துஷிக்கும் வாழ்த்துகள். அகிலனை அகிலத்துக்கு அறிமுகப்படுத்திய கவிக்கும் வாழ்த்துகள் ....

    ReplyDelete
  12. அகிலனுக்கும் துஷிக்கும் வாழ்த்துகள். அகிலனை அகிலத்துக்கு அறிமுகப்படுத்திய கவிக்கும் வாழ்த்துகள் ....

    ReplyDelete
  13. your language is powerful & emotional too like arunthathi ?

    regfrds,

    ppeterdurairaj

    ReplyDelete
  14. மணநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete