Monday, May 13, 2013

கூடங்குளம் - ஊழல் குற்றச்சாட்டால் கேள்விக்குள்ளாகும் பாதுகாப்பு


மே 14 அன்று கன்னியாகுமரி - தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் ஒரு வேலை நிறுத்தம் செய்கின்றனர். ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. கூடங்குளம், செட்டிக்குளம் போன்ற பகுதிகளில் கடையடைப்பும் நடத்தப்படுகின்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையொட்டி அணு உலை செயல்படத் தொடங்கிவிடுமோ என்கிற பதட்டம் அப்பகுதி மக்களிடையே உள்ளது. கூடங்குளம் அணு உலை இயங்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு பல மட்டங்களிலும் பேசுபொருளாகி இருக்கிறது. போராட்டக்குழு தலைவரான சுப. உதயகுமார் ’’இன்னும் தீவிரமாக சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் செய்யவிருக்கிறோம். அப்போது நாங்கள் கைதுசெய்யப்படலாம். அதற்கும் தயாராகத்தான் இருக்கிறோம். எல்லாவற்றையும் மீறி அணு உலை இயங்கத் தொடங்குமென்றால், தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவோம்’’ என்கிறார்.

கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்துக்கு 1989ல் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டிருக்கிறது.  அந்த அனுமதிக் கடிதம், முதலில் 500 மெகாவாட்ஸ் திறனுள்ள 4 அணு உலைகளை அமைகக்விருப்பதாகவே தொடங்குகிறது. அதே கடிதத்தில் பிற்பகுதியில் 1,000 மெகாவாட்ஸ் திறன் கொண்ட 2 அணு உலைகளை அமைக்கவிருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் எத்தனை அணு உலைகள் அமைக்கப்படவிருக்கின்றன என்பதில் அரசுக்கே தெளிவில்லை என்பது விளங்குகிறது. அணு உலையை குளிர்விக்க பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் எடுத்துவருவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தது அரசு. ஆனால் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள மக்களுக்கான தண்ணீர்த் தேவை, அணையின் கொள்ளளவு, நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள மழையின் அளவு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போதுதான் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது சாத்தியமில்லை என்கிற உண்மை 2004ல் உறைக்கிறது அரசுக்கு.  அதன்பிறகுதான் கடல் நீரில் இருந்து உப்பை பிரித்தெடுத்து அந்தத் தண்ணீரை பயன்படுத்தப்போவதாக திட்டத்தை மாற்றுகிறது அரசு. அரசு விதிகளின்படி, அறிவித்த திட்டத்தில் ஏதாவது மாறுதல் இருந்தால் மீண்டும் ஒரு முறை சுற்றுச்சூழல் அனுமதியும், பொதுமக்கள் கருத்துக் கேட்பும் நடத்தப்பட வேண்டும். ஆனால் இவற்றை அரசு செய்யவில்லை. ஆகவே இப்போதிருக்கும் சூற்றுச்சூழல் அனுமதி செல்லாது என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஜி.சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார்.
புகுஷிமாவுக்குப் பிறகு பிரதமர் நியமித்த குழு, பாதுகாப்பு தொடர்பான 17 பரிந்துரைகளை நிறைவேற்றாமல் அணு உலையில் எந்த செயல்பாடும் கூடாது என்று கூறியிருக்கிறது. இந்த 17 பரிந்துரைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு அளித்த இந்திய அணுசக்திக் கழகம் 17 பரிந்துரைகளை நிறைவேற்றாமல் செயல்பாட்டில் இறங்கமாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தது. ஆனால் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இடைப்பட்ட காலத்தில் எரிபொருள் நிரப்ப உத்தரவிட்டுவிட்டது. எரிபொருள் நிரப்பியபின் தண்ணீரை ஊற்றி செயல்பாட்டைத் தொடங்குவதற்குப் கிரிடிக்காலிட்டி (Criticality) என்று பெயர்.  இதனையடுத்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மீண்டும் ஒரு வழக்கு போட்டது. ''17 பரிந்துரைகளில் 6 பரிந்துரைகளை நிறைவேற்றி விட்டோம். மீதமுள்ளவை அதீத பாதுகாப்பு சார்ந்தது (Abundant Safety) என்றது அரசு. ’’உலகமெங்கும் அணு உலை குறித்த விழிப்புணர்வு வந்துவிட்ட சூழலில், அங்கு வசிப்பவர்கள் தலித்துகளாகவும் மீனவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கு அதீத பாதுகாப்பு தேவையில்லையென அரசே நினைத்துவிட்டது போலிருக்கிறது’’ என்கிறார் மனுதாரர் ஜி.சுந்தர்ராஜன். ‘’அமைச்சர்களுக்கு மட்டும் இசட், இசட்+ என்று பாதுகாப்பை வலுப்படுத்திக்கொண்டே போகிறீர்களே...! சாதாரண மகக்ள் என்றால் அத்தனை இளக்காரமா?’’ என்று உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘நாங்கள் தொழில்நுட்பக்குழு அல்ல’ என்று கூறிவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். ’’17 பரிந்துரைகளையும் நிறைவேற்றியபின் செயல்பாடு தொடங்கும் என்று உறுதி அளித்துவிட்டு 6 முடிந்தவுடன் எரிபொருளை நிரப்புவது சரியா என்று விசாரிக்க தொழில்நுட்பக் குழுவாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை” என்பது பூவுலகின் நண்பர்கள் தரப்பின் வாதமாக இருந்தாலும், அதை மறுத்துவிட்டது உயர் நீதிமன்றம். அதன்பின்னரே உச்ச நீதிமன்றத்தை நாடியது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. ‘எத்தனை ஆயிரம் கோடி செலவழித்திருந்தாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம்’ என்று உச்ச நீதிமன்றம் விசாரணையின்போது கருத்து தெரிவித்தது. டிசம்பர் 3 வரை விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இப்போது வெளிவந்திருக்கிறது. 5 அமைப்புகள் இணைந்து அணு உலையின் ஒவ்வொரு பாகத்தையும் ஆராய்ந்து அதன் தரம் குறித்து அறிக்கை அளித்தபின்னரே அணு உலை இயக்கபப்டவேண்டும் என்று கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனாலும் சுற்றுப்புற மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியை அரசு அளிக்காமல் இருப்பது தொடர்பான எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை இந்தத் தீர்ப்பு

‘’இந்தத் தீர்ப்பு துரதிஷ்டவசமான தீர்ப்பு என்றாலும் 15 நிபந்தனைகளுடன் தான் அணு உலை திறக்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ரஷ்ய நிறுவனமான ஜியோபோடால்ஸ்க்கிடமிருந்து பெறப்பட்ட எந்திர பாகங்கள்தான் கூடங்குளம் அணு உலைக்கு வாங்கப்பட்டிருக்கின்றன. தரம்குறைந்த பாகங்களை அயல்நாடுகளுக்கு அனுப்பிய குற்றத்தின் கீழ் அந்நிறுவனத்தின் இயக்குநர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே புதிதாக் ஒரு வழக்குபோடுவதா அல்லது மறுசீராய்வு மனு போடுவதா என்று அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் ஜி.சுந்தர்ராஜன். 

ஜியோபோடால்ஸ்க் என்கிற ரஷ்ய நிறுவனம், ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்டு, மற்ற நாடுகளில் நிர்மாணிக்கப்படுகிற அணுஉலைகளுக்கு நீராவி இயந்திரங்களையும் முக்கிய அணு உலை பாகங்களையும் தயாரித்து விற்பனை செய்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் இந்த நிறுவனம்தான் எந்திரபாகங்களை அனுப்பியது. இந்நிலையில் திருட்டுத்தனம், ஏமாற்றுதல், ஊழல்,  போன்ற குற்றங்களுக்காக ரஷ்ய உளவு நிறுவனம் ஜியோ போடால்ஸ்க் நிறுவனத்தின் இயக்குநர் .செர்கை ஷுடோவ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  பல்கேரியா, ஈரான், உக்ரேனியாவில் கிடைக்கும் தரமற்ற, விலை குறைந்த இரும்புத் தகடுகளினால் தயாரிக்கப்பட்ட எந்திரங்களை சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கட்டப்பட்டுள்ள அணு உலைகளுக்கு விற்றதாக ஜியோ போடால்ஸ்க்  மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலையில் 4 வால்வுகள் பழுதடைந்ததாக அரசுத் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. அதை சீர் செய்தவுடன் உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.  

ஜியோ போடால்ஸ்க் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட  உதிரி பாகங்களால் இந்தியா, பல்கேரியா, ஈரான், சீனா போன்ற நாடுகளில் கட்டப்பட்டுவருகிற அனைத்து உலைகளும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்குப் பின் ரஷ்யாவிடம் அனைத்து பாகங்களின் தரச்சான்றிதழ்களைக் கேட்டிருக்கிறது பல்கேரியா.  சீனா 3000 கேள்விகள் கொண்ட பட்டியலை தயாரித்து அனுப்பி விளக்கம் கேட்டிருக்கிறது. இதுபோன்ற எந்த முயற்சியையும் இந்தியா செய்யவில்லை. ஷியோ போடால்ஸ்க் கம்பெனி விற்பனை செய்த தரங்குறைந்த இயந்திரப்பாகங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யவில்லை எனில், மிகப் பெரிய பேரிடரை இந்தியா சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் ஆர்மீனியன் தலைநகரில் செயல்படும் பெல்லோனா ஃபவுண்டேஷன் அமைப்பும்,  இந்திய மக்கள்தான் இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ரஷ்ய சுற்றுச்சூழல் நிறுவனமான இகோ டிபென்ஸ் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.  ‘’ஊழல் செய்து தரம் குறைந்த பாகஙக்ளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அணு உலை எங்களை அச்சுறுத்துகிறது. அதை மூடும் வரை நாங்கள் ஒய மாட்டோம்’’ என்கிறார் இடிந்தகரை சுந்தரி.

ஜியோ போடால்ஸ்க் போன்றே இசர்ஷோர்கி சவோடி என்கிற ரஷ்ய நிறுவனம், 2002ல் கூடங்குளம் அணுஉலைக்கு தேவையான கொதிகலன்களை வடிவமைக்க முறைப்படியான ஒப்பந்தம் போடும் முன்பே, கூடங்குளம் அணுஉலைகளுக்கு தேவையான இரண்டு அணுஉலை கொதிகலன்களையும் தயாரிக்க தொடங்கிவிட்டதாக அதன் பொது இயக்குனர் யோவ்ஜெனி செர்கிவ், அந்த கொதிகலன்களை ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி  துறைமுகத்திற்கு கடல் வழியாக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் தெரிவித்தார். கூடங்குளம் அணுஉலை கட்டப்படுவதற்கு தேவையான கொதிகலன்களை உறுதியாக இந்தியா தங்களிடம் தான் வாங்கும் என்ற நம்பிக்கை கிடைத்துவிட்ட காரணத்தால் அவற்றை முன்னதாகவே தயாரிக்கத் தொடங்கிவிட்டதாக அந்த வழியனுப்பும் நிகழ்விலே 2004 நவம்பர் மாதத்தில் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவில் வெளிவரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. இன்ஃபார்ம்டெக் நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸாண்டர் முராக் ரஷ்ய அணு உலைகளுக்கு தரம் குறைந்த அளவீட்டுக் கருவிகள் வழங்கியதில் முறைகேடுகள் செய்ததற்காக 3 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பட்டிருக்கிறார்

ஏப்ரல் 19,2013 தேதியிட்ட கடிதம் எண் NPCIL/VSB/CPIO/2574/KKNPP/2013/737 ல் அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் ஜியோ போடால்ஸ்க், இன்ஃபார்ம்டெக், இசர்ஷோர்கி சவோடி ஆகிய நிறுவனங்களிடமிருந்துதான் கூடங்குளம் அணு உலையின் முக்கியமான பாகங்கள் அனைத்தும் பெறப்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தரோ தனது rediff.com நேர்காணலில் ‘’நாங்கள் ரஷ்யாவிடமிருந்து மட்டுமில்லை, தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, செக் குடியரசு, ஸ்ளோவாகியா மற்றும் பல நாடுகளிலிருந்தும் பாகங்களை இறக்குமதி செய்திருக்கிறோம். ஆகவே இது முழுக்க முழுக்க ரஷ்ய அணு உலை என்று கூற முடியாது’’ என்று கூறியிருக்கிறார். ‘’இதுவரை ரஷ்ய அணு உலை என்று கூறிவந்தவர்கள் இப்போது அப்படி கூற முடியாது என்று சொலவதன் மூலம் ஊழல்வாதிகளை மறைக்கப் பார்ப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது’’ என்கிறது அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம்.

‘’கூடங்குளம் அணு உலை தொடர்பான  ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. அந்த இசர்ஷோர்கி சவோடி நிறுவனம் தயாரித்த அணுஉலைக் கொதிகலனில்தான் வெடிப்புகள், வெல்டுகள் இருப்பதாக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் வல்லுனர் குழு சுட்டிக்காட்டிய பிறகு இந்திய அணுசக்திக் கழகம் இறுதியாக ஒப்புக்கொண்டுள்ளது. வெல்டிங் செய்யப்படாமல் இருந்தால்தான் அது பாதுகாப்பான அணுஉலை. இல்லையெனில் இது வேதி வினை புரியும் போது மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் தற்போது, கூடங்குளம் அணுஉலைகளுக்கு கூடுதலாக மேலும் 4000 கோடி செலவிடப் பட்டுள்ளதாக அணுசக்திக் கழகம் சொல்லுகிறது. அணு உலைகள் இயக்கப்படும் நிலையில் இருக்கும் போது, ஏன் கூடுதலான செலவு என்று மக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும். தரமற்ற பாகங்களை மீண்டும் மீண்டும் கொள்முதல் செய்வதால் கூடுதல் செலவாகிறதா அல்லது நடந்த ஊழல் பேரங்களை மறைக்க மேலும் கையூட்டு கொடுக்கப்படுகிறதா? என்று காங்கிரசு அரசு விளக்க வேண்டும்.’’ என்கிறார் புஷ்பராயன்.

இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமியை தொடர்புகொண்டபோது ‘’தரமில்லாத பொருள் எதையும் இந்தியா வாங்கவில்லை. முதலில் இந்திய விஞஞானிகள் ரஷ்யாவுக்குச் சென்று உற்பத்தி செய்யுமிடத்திலேயே பொருட்களை பார்வையிட்டு தரம் சரியாய் இருக்கிறதா என்று பார்த்தார்கள். அதன் பின் ஏற்றுமதி செய்யும் தருவாயில் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள விஞ்ஞானியின் தரச் சான்றிதழ் பெற்று, இந்தியாவுக்கு வந்திறங்கியதும் அணுசக்தி கழகத்தின் விஞ்ஞானிகள் குழு ஒரு தரச்சான்றிதழ் வழங்கும். பின் ஹைட்ரோ சோதனை நடத்தப்பட்டு அதிலும் தரம் சோதிக்கபப்டும். ஆகவே தரம் குறித்து எந்த சந்தேகமும் தேவையில்லை. அங்கே ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதற்கும் தரத்துக்கும் தொடர்பே இல்லை. 'மே மாத இறுதியில் அணு உலை செயல்படத் தொடங்கும் என்பது உறுதி. அணு உலை கட்டுப்பாட்டு வரியம் அதன் செயல்பாடுகளை நேர்த்தியாக கண்காணித்து வருகிறது. மின் உற்பத்தி துவங்கப்படவேண்டும் என்பது முக்கியம். போராடும் மக்கள் யார் சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறார்கள். போராடுபவர்களுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் விஞ்ஞானிகள் குழு அளித்த அறிக்கைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களின் போராட்டம் இல்லையென்றால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே மின் உற்பத்தி தொடங்கி இருக்கும். அரசுக்கு இதனால் 1,464 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.’’ என்றார்.

அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய கட்டுரையில் ’’கூடங்குளத்தில் இரண்டு அணுஉலைகளின் பல்வேறு பகுதிகலில் ஷியோ போடால்ஸ்க்  நிறுவனத்தின் பாகங்கள், குறிப்பாக அணுஉலை கொதிகலன் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றால் தற்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருப்பது போன்று தோன்றலாம். ஆனால், அணுஉலை இயங்கத் தொடங்கும் போது தான், அந்த தரமற்ற பாகங்கள் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டும். மக்களின் பாதுகாப்பிற்கு அவைகள் உறுதியாக பெரிய கேடு விளைவிக்கும்.’’ என்கிறார்.

’’அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர். எஸ். சுந்தர் திடீரென்று இப்போது ரஷ்யாவில் இருந்து பாகங்கள் பெறப்பட்டாலும், அதை நாங்களேதான் நிர்மாணித்தோம் என்று அணு உலைக்கு சான்றிதழ் அளிக்கிறார். கோபாலகிருஷ்ணன் வெளிப்படையாக தரமற்ற பாகங்கள் குறித்து கட்டுரை எழுதிய பிறகு அவசரம் அவசரமாக இப்படிச் சொல்லவேண்டிய அவசியம் என்ன? யாரையோ காப்பாற்ற எண்ணுகிறதா அரசுத் தரப்பு? ஆதாரங்களுடன் குற்றம்சாட்டும்போது, தரத்தை மீண்டும் சோதித்துப் பார்ப்பதில் என்ன பிரச்சனை? மடியில் கனமில்லாவிட்டால் எதற்கு வழியில் பயம்?’’ என்கிறார் சுப.உதய்குமார்.

அண்மையில் rediff.com தளத்துக்காக அதன் பத்திரிகையாளர் வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தரை சந்திக்க அணு மின் நிலைய வாயில் வரை வந்தபின்னும், அவரை உள்ளே அனுமதிக்காமல் அங்கிருந்து வேறிடத்துக்கு அழைத்துச் சென்று பேட்டி தந்திருக்கிறார். அந்த நேர்க்காணலில் ‘’ஏன் என்னை அனுமதிக்கவில்லை?’’ என்கிற கேள்விக்கு ‘’நாங்கள் பத்திரிகையாளர்களை அனுமதிப்பதில்லை’’ என்று பதில அளித்திருக்கிறார். 

‘’ஏன் ஊடகங்களை உள்ளே விடுவதில்லை? எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. செயல்படாத அணு உலையை செயல்பட்டதாகக் காட்ட அரசு அவசரம் அவசரமாக ஏதோ செய்கிறது. ஒருநாளாவது நாங்கள் அணு உலையை செயல்படுத்தினோம் என்று யாருக்கோ நிறுவ நினைக்கிறார்கள். அதன்மூலம் ஊழலை மூடி மறைக்கிறதோ என்றும் எங்களுக்கு சந்தேகம் உண்டு. முதல் அணு உலை செயல்படுவதில்லை. இரண்டாவது அணு உலையை தொடங்கப்போவதாக அரசு சொல்கிற்து. தொடங்கும் நாளன்று பத்திரிகையாளர்கள், சுதந்திரமான விஞ்ஞானிகள் என்று எல்லொரையும் உள்ளே அனுமதித்து எல்லோரையும் சாட்சியாக வைத்துத் தொடங்கட்டுமே பார்க்கலாம்’’ என்கிறார் சுப. உதயகுமார்.

ஒரு நிபுணர் குழு இதன் தரத்தை ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ளவேண்டும். அநதக் குழுவில் அணுசக்தித் துறை, இந்திய அணுசக்திக் கழகம், அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குறைவாகவும், நாட்டின் மற்ற நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகள் அதிகமாகவும் இடம்பெற்றிருக்கவேண்டும். அக்குழுவின் அறிக்கை வெளிவரும்வரை அணு உலை செயல்படக்கூடாது’’ என்று கோபாலகிருஷ்ணன் கூறியிருப்பதை புறந்தள்ள முடியாது. இதுவே போராடும் மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. மின் உற்பத்தியை விட இந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதே அரசின் முன் உள்ள முதல் கடமை.

நன்றி : இந்தியா டுடே

No comments:

Post a Comment