Friday, March 26, 2010

ஆயிஷா



(நன்றி: புதிய தலைமுறை)

யிஷா ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்று சாதனை படைத்த நூல் இது.

இந்தியாவின் பள்ளிக்கூடங்கள் அறிவாளிகளை உருவாக்குவதில்லை. நல்ல மதிப்பெண் பெறுபவர்களை மட்டுமே உருவாக்குகிறது. இந்த உண்மையை முகத்தில் அறைவது போல் சொல்கிறது இரா.நடராசனின் ‘ஆயிஷா நூல்.

அன்பும் அறிவும் ததும்பும் சிறுமி ஆயிஷா ஆயிஷாவின் சின்ன மண்டைக்குள் எத்தனை கேள்விகள்? எத்தனை சிந்த்னைகள்? இந்தச் சின்னப்பெண் வகுப்பில் எழுப்பும் கேள்விகளுக்கு விடையளிக்க இயலாமல் தவிக்கும் ஆசிரியைகள் அவளை தங்கள் பிரம்புக்குத் தீனியாக்குகின்றனர். .

கேள்வி கேட்கும் மாணவர்களை பெரும்பாலும் ஆசிரியர்களுக்குப் பிடிப்பதில்லை. அதிலும் பதில் சொல்ல இயலாத அளவுக்கு அந்தக் கேள்வி  புத்திசாலித்தனமாக இருந்தால்.. கேள்வி கேட்ட மாணவர் ம்றுமுறை கேள்வி கேட்காத அளவிற்கு தண்டனைதானே விடையாகக் கிடைக்கும்? ஆயிஷாவுக்கும் அதுவே நேர்கிறது.

அப்படி இருந்த ஆசிரியைகள் மத்தியில் ஒரே ஒரு ஆசிரியை ஆயிஷாவுக்கு செவிசாய்ப்பவராக இருக்கிறார். ஆயிஷாவின் அறிவியல் அறிவும், கேள்விகளும் செக்குமாடாய் உழன்று கொண்டிருந்த அவரின் வாழ்வில் புதிய ஒளியை ஏற்றுகின்றன. அவருடைய பார்வையிலேயே கதை தொடங்கி விரிகிறது.

“இத்தனை வருடத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் என்ன பெரிதாக மாறிவிட்டது? காலையில் எழுந்து பல் துலக்குவதை உற்சாகத்தோடவா செய்கிறோம்? எப்போதாவது புதிய பிரஷ் அல்லது பேஸ்ட்! இங்கே அதுவும் இல்லை. அதே ஓம்ஸ் விதி. ஒரெ செல் பிரிதல். புதிதாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வமற்று ஓர் இயந்திரமாய் கிரீச்சிட்டுக் கொண்டிருந்த என்னை என் முகத்தில் கேள்விகளால் ஓங்கி அறைந்தாள் ஆயிஷா என்கிறார் அவளது ஆசிரியை.

எல்லா மாணவர்களுக்கும் எண்கள் தரப்பட்டுள்ளன. வகுப்பு, வரிசை எண், தேர்வு எண், பெற்றெடுக்கும் மதிபெண்கள், எங்கும்  எண்கள், எண்களே பள்ளிகளை ஆள்கின்றன.


பிள்ளைகளின் தனித்திறன்களை உணர்ந்துகொள்ளாமல் அவர்களை மந்தை போல் பாவிக்கும் மனப்பான்மை, அவர்களின் தனித்துவம் தெரியாமல் எண்களால் அவர்களின் பால்யம் கடந்து போவதை இதைவிட அழகாக விளக்க முடியுமா என்ன?

ஆயிஷா கேட்கும் கேள்விகள் மிக அறிவார்த்தமானவை. அவற்றுள் ஒன்று இதோ:

“ஒரு மெழுகுவர்த்தியில் ஒளி அதிகமாகவும் வெப்பம் குறைவாகவும் உள்ளது. ஆனால் ஒரு அடுப்பில் எரியும் நெருப்பில் ஒளி குறைவாகவும், வெப்பம் அதிகமாயும் இருக்குதே. ஏன் மிஸ்?

நியூட்டன் அறிவியல் சோதனைகள் நடத்த ஆரம்பித்த்போது அவருக்கு வயது பன்னிரண்டு என்பது போன்ற பல தகவல்கள் ஆயிஷாவின் வார்த்தைகள் வழியாகவே வாசிக்கும் நமக்கும் வந்து சேர்கிறது.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஆயிஷாவை அவள் விரும்பிய விஞ்ஞானமே தத்தெடுத்துக்கொள்கிறது. அறிவியலின் த்த்துப்பிள்ளையாயும் வரலாற்றின் செல்லப்பிள்ளையாகவும் வளர்கிறாள் ஆயிஷா. அவள் நேசிக்கும் அறிவியலின் துணை கொண்டு அவள் தன்னை தன்னை அடிக்கும் ஆசிரியைகளின் பிரம்படிகளிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முனைகையில் வாசகரின் நெஞ்சம் பதைபதைத்துப் போகிறது.

ஆயிஷா மெக்காலே கல்விமுறைக்கு சாட்டையடி... மாற்றத்தின் முதல் படி..


நாலாசிரியர்       : இரா. நடராசன்

நூல் வெளியீடு     : பாரதி புத்தகாலய்ம்
                    7, இளங்கோ சாலை,
                    தேனாம்பேட்டை,
                    சென்னை -600 018
                    தொலைபேசி : 044 - 24332924

விலை             : ரூ. 10/-
                                

Tuesday, March 23, 2010

வீடு....


நன்றி : உயிர் மெய் சிறப்பிதழ் (2009-2010)

நாற்புறமும் சுவர்கள்தான்
ஆனாலும் நீ வெறும் சுவரல்ல!
உணர்வுகளின் கோர நர்த்தனத்தில்
நான் திக்குமுக்காடியபோது
அக்கறையாக அனுதாபமாக
அவ்வபோது இளக்காரமாக
என்னை ஆற்றுப்படுத்தியது
நீ மட்டும்தான்!

என் மகிழ்ச்சி... பொங்கிப் பிரவாகமெடுத்து...
அழகிய வண்ணப்பூச்சாக... உன் சுவர்களில்...!
என் கண்ணீர்... மழைநாளின் ஈரமாக
உன் சுவற்று கசியலாய்...!
என் கோபம்... கோடையில் அனலாய் தகித்திருக்கிறது உன்னில்..!
என் பைத்தியக்காரத்தனம்... உன் அழகிய வண்ணப்பூச்சின் இடையே..
தெறிப்பாய்... சுவரின் நடுவே..!
என் விரக்தியின் உச்சக்கட்ட எண்ணங்கள்...
உன் விட்டம் பூராவும் நிறைந்திருக்கின்றன...
என் உயிரைத் தாங்கிப் பிடித்தவாறு...!
என் மனதின் விசாலம்... உன் வாசலாய்..!
அவ்வபோது என்னுள் தோன்றும் வெறுமை...
உன் குழாய்களில்..!
எங்கிருந்தாலும் இவ்வுலகை நோக்கும் என் கவனம்...
உன் சாளரங்களாய்..!
என் மன அழுக்குகள்.. உன் சமையலறையின்
எண்ணை பிசுபிசுப்பாய்..!
என் நினைவலைகள்...
உன் பரணாக..!
என் மன இறுக்கம்... அவ்வபோது
காற்றை மறுத்த உன் புழுக்கமாய்..!
என் மன அதிர்வுகள் கூட...
பூகம்ப நடுக்கமாய்..!

அதிர்ச்சியை தாங்காமல் நொறுங்கும் என் மனதாய்..
ஒரு குண்டுவீச்சில் நீ தரைமட்டமாய்..!

இப்போது...
எவருமற்ற என் தனிமை.. உன் வெற்றிடமாய்..!

- கவின் மலர்

Saturday, March 20, 2010

தனிமையில் ஒரு நெடும்பயணம்



(நன்றி : புதிய தலைமுறை)

ரு நாளைக்கு எத்தனை கிலோமீட்டர் நாம் நடப்போம்? இரண்டு? மூன்று? சரி! நாம் நடப்பது நம் உடல்நலத்திற்காக! பழங்குடியின மலைவாழ் மக்கள் நலனுக்காக நடப்பவரைப் பார்த்திருக்கிறீர்களா? அதுவும் 18 ஆண்டுகளாக!

கிரண்.என்.மஸ்கி தன் சொந்த ஊரான கோவாவிலிருந்து தன் நடைபயணத்தை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் 1991 ஜூன் மாதம் 5ம் தேதி துவக்கினார். இன்று வரை நடந்துகொண்டே இருக்கிறார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்தபின் இதோ இப்போது தமிழ்நாட்டில் தனது பயணத்தை கன்னியாகுமரியில் முடித்துவிட்டு கோவா சென்று கொண்டிருக்கிறார். இந்த நெடிய பயணத்தின் நோக்கம்தான் என்ன?

“நான் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்களை சந்திக்கிறேன். அவர்களோடு மாதக்கணக்கில் த்ங்கியிருந்து அவர்களது பிரச்சனைகளை கேட்டறிந்து என்னாலான உதவிகளை நான் செய்கிறேன். அரசாங்கத் தரப்பில் அவர்கள் சார்பில் யாரை சந்திக்க வேண்டுமோ அவர்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சிகள் செய்கிறேன்.என்கிறார் கிரண்.

42 வயதாகிறது. மெல்லிய உருவம். சரியாய் சாப்பிடாமல் நெடுநாள் பசியில் வாடியத்ன் பலனாய் கண்களின் கீழ் கருவளையம். கையில் ஒரு படுக்கை.மூன்று மாற்று உடுப்புகள் அவர் சந்தித்த அதிகாரிகள் அளித்த கடிதங்கள், கோப்புகள், மலைவாழ் மக்கள் குறித்த தகவல்கள் கொண்ட குறிப்புகள் அடங்கிய ஒரு பை. இவையே கிரண்.என்.மஸ்கியின் அடையாளங்கள். இப்படி ஒரு பயணம் செய்ய வேண்டும் என்று ஏன் தோன்றியது?

“நான் 8ஆம் வகுப்பு பயிலும்போது அஸ்ஸாமைச் சேர்ந்த ஒரு சைக்கிள் பயணியை சந்தித்தேன். அவர் தேச ஒற்றுமையை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டிருந்தார். அதுதான் முதல் பொறி. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக ஏதாவது செய்தாக வேண்டுமென்ற துடிப்பு எனக்கிருந்த்து. மலைவாழ் மக்களும் நரிக்குறவர்களும் மிகவும் பின் த்ங்கிய நிலையில் இருக்கின்றனர். அவர்களின் நலனுக்காக என் பயணம் அமைய வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி பத்தாயிரம் ரூபாய் பணத்துடனும் ஒரு கேமிராவுடனும் புறப்பட்டேன். என் பெற்றோர் உட்பட அனைவரும் என்னை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்தனர். ஏனிந்த வேண்டாத வேலை என்பதே அனைவரின் எண்ணமாக இருந்த்து. ஆனாலும் நான் தீர்மானமாய் இருந்தேன். என் பயணம் ஏதாவதொரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணினேன்.  ஒவ்வொரு மாநிலத்திற்குச் செல்லும்போதும் அந்த மாநிலத்தின் மாவட்டங்கள், அவற்றின் தாலுகாக்கள், ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள மலைவாழ் பழங்குடி மக்கள், நரிக்குறவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொள்வேன். எனக்கு தாலுகா அளவில் உள்ள தாசில்தார், பிடிஓ போன்ற அதிகாரிகள் உதவுகிறார்கள். அவர்க்ளுடைய உதவி கிடைக்காத இடங்களில் வனத்துறையினர் எனக்கு உதவுவார்கள்என்கிறார் கிரண்.

சரி! அரசு தரப்பில் இவருக்கு எப்படி உதவிகள் கிடைக்கின்றன? இவர் சொல் எடுபடுகிற்தா? ஒரு சாமானியனாக இருந்துகொண்டு இவர் சொல்வதை அரசு எந்திரம் காது கொடுத்து கேட்கிறதா? இவரது மனுக்களும் கோரிக்கைகளும் எந்தளவு வெற்றி பெறுகின்றன?
“ஐம்பது சதவிகித வெற்றி என்று சொல்லலாம். நூறு சதவிகித வெற்றி என சொல்ல முடியாது.என்னால் முடிந்த வரை என் மக்களுக்கு நான் செய்திருக்கிறேன்.என்கிறார் கிரண் நேர்மையாக.

கொன்கனியை தாய்மொழியாக்க் கொண்ட கிரணுக்கு ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி, கன்னடம் ஆகிய மொழிகள் தெரிந்திருக்கின்றன. தமிழ கொஞ்சம் புரிகிறது. பேசத் தெரியவில்லை. மொழி தனக்கு தடையாக ஒருபோதும் இருந்ததில்லை என்கிறார் கிரண்.

கிரண் இரவுகளில் பயணம் செய்வதில்லை. பகலில் மட்டுமே பயணிக்கிறார். இரவில் சிறிய நகரத்தில் ஏதாவதொரு நடுத்தர விடுதியில் தங்குவது போல தனது பயணத்திட்ட்த்தை வகுத்துக்கொள்கிறார். பெரும்பாலும் நகரத்தில் தங்குவதை கிரண் விரும்புவதில்லை. கிராமங்களில் தங்குகிறார். மலைவாழ் மக்களும் நரிக்குறவர்களும் இருக்கும் இடங்களுக்குச் சென்றுவிட்டால் அங்கேயே ஐக்கியமாகிவிடுகிறார். அவர்கள் தரும் உணவை உண்கிறார். நகரங்களைவிட இந்த மனிதர்களின் இருப்பிடம் ஆயிரம் மடங்கு மேல். அஸ்ஸாமில் ஒரே ஒரு முறை காட்டுப்பகுதியில் நடந்தபோது மிருகங்களிடம் சிக்கி தப்பித்தேன் பீகாரில் ஐந்து முறையும் உத்தரப் பிரதேசத்தில் இரண்டு முறையும் கொள்ளையர்களிடம் சிக்கினேன். என் உடைமைகள் அனைத்தும் பறிபோயின.என்கிறார் கிரண்.

பின் எப்படி தன் பயணத்தை தொடர்ந்தார் கிரண்?

“நல்லவர்கள் எங்கும் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு உதவுகிறார்கள். பயணத்தைத் தொடங்கும்போது என் கையிலிருந்த பத்தாயிரம் ரூபாய் தீர்ந்தபின் இன்று வரை நான் சந்திக்கும் மனிதர்கள் எனக்கு உதவுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தில்தான் நான் என் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறேன்என்று சிரிக்கிறார் கிரண். ஒரு மணிநேரத்திற்கு 5.5 கிலோமீட்டரிலிருந்து 8 கிலோமீட்டர் வேகம் வரை நடக்கிறார். அதன்பின் ஒரு தேனீர். பின் திரும்ப நடை. இப்படித்தான் பதினெட்டு வருடங்களாக தனது நெடும்பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார் கிரண். அரிசி, காய்கறிகள், மீன் இவற்றை விரும்பி உண்ணும் இவருக்கு தினமும் நடப்பதால் ஒருபோதும் எந்த நோயும் வந்த்தில்லை.

மலைவாழ்மக்களின் கல்வித்தரம், அவர்களின் வாழ்க்கைதரம், அடிப்படை தேவைகள், சாலை வசதிகள், குடிநீர் வசதி என எது அவர்களுக்கு கிடைக்காமலிருந்தாலும் அவர்களுக்காக அரசின் உதவியை நாடி பெற்றுத்தருகிறார். குறிப்பாக பெண்களை பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார். மிக அதிக காலமாக சட்டிஸ்கரில் உள்ள பஸ்டர் மலைப்பகுதியில் எட்டுமாதங்களும் 20 நாட்களும் தங்கியிருந்திருக்கிறார் கிரண்.

தனது பயணத்தில் இதுவரை ஒரு அரசியல்வாதியைக் கூட கிரண் சந்திக்கவில்லை என்பது மிகப்பெரிய விஷயம். அரசியல்வாதிகளின் பொய் வாக்குறுதிகளை நம்புவதில்லை கிரண். எங்கு சென்றாலும் அரசு அதிகாரிகளை மட்டுமே சந்திக்கிறார். அவர்களிடமே மனு கொடுக்கிறார். பேசுகிறார். தன்னால் முடிந்த உதவிகளை பெற்றுத் தருகிறார். இந்தியா முழுவதிலும் பயணித்திருக்கும் கிரண் தமிழ்நாடு குறித்து என்ன கூறுகிறார்?

“ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டில் உள்ளது போன்ற சலுகைகள் வேறு மாநிலத்தில் இல்லை. இதன் காரணமாக மலைவாழ் மக்களிடையே படிப்பறிவு அதிகரித்திருக்கிறது .நீலகிரியில் உள்ள தோடர்கள், இருளர்கள், படுகர்கள் இனத்தாரிடையே நன்கு கல்வி கற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல நீங்கள் பார்க்க முடியாது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் மலைவாழ் மக்களின் நலனுக்காக பல திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் ஏட்டளவில் அவை நின்று விடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமே ஓரளவிற்கு அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மிக அதிக அளவில் என்.ஜி.ஓக்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. கடலூர், சிவகங்கை போன்ற ஊர்களில் நரிக்குறவர்களுக்கென்று தொண்டு நிறுவனங்கள் இருந்தன. நரிக்குறவர்கள் பேருந்து நிலையங்களிலும் மற்ற மக்கள் கூடும் இடங்களிலும் ஊசிபாசி விற்றுக் கொண்டிருந்தவர்கள். அவர்களுக்கு கல்வி தருகிறோம் என்று அவர்களை அழைத்து 90 நாட்கள் மட்டும் வைத்திருந்துவிட்டு அவர்களை விரட்டிவிட்ட கதைகளையும் மக்கள் என்னிடம் விவரித்தார்கள். என்கிறார் கிரண்.

தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின்போது ஒரு விபத்தில் சிக்கி தன் சிகிச்சைக்காக ஏராளமாக செலவு செய்ய நேர்ந்தபோது உத்தமபாளையம் தாசில்தாரும், அந்தப் பகுதி மக்களும் தனக்கு உதவியதை நன்றியோடு நினைவு கூர்கிறார் கிரண்.
“நான் இயற்கையில் காதலன். இயற்கையை பாழ்படுத்துவதில் இன்றைய நவீன சமூகம் முன்னிலையில் இருக்கிறது. இச்சூழலில் காடுகளையும் அவற்றின் வளங்களையும் காப்பாற்றிக் கொண்டிருப்பது பழங்குடி மக்களே. இதுவே நான் அவர்களை அதிகம் நேசிக்க காரணம்என்கிறார் கிரண்.

கையில் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமலிருந்தாலும் மாறாத புன்னகையோடும் நம்பிக்கையோடும் இருக்கும் கிரண் விடும் சவாலை எதிர்கொள்ள எந்த இந்திய குடிமகனாலும் முடியுமா என்பது சந்தேகமே! என் அளவிற்கு இந்தியாவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பயணம் செய்த ஒரு மனிதர் இருக்க முடியாது. என்னால் சவால் விட்டு சொல்ல முடியும்எனும் கிரண் அதே பெருமையோடு புன்னகை மாறாமல் சொல்கிறார்.. இந்த வயதிலேயே என் தாய்நாட்டை நான் யாரை விடவும் மிக நெருக்கமாகக் கண்டிருக்கிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.


கிரண் இந்திய நாட்டின் மலைப்பகுதிகள் குறித்த அரிய தகவல்களை தன்னகத்தே வைத்திருக்கிறார். அவர் பகிர்ந்துகொண்ட ஏராளமான தகவல்களில் சில இதோ:

“என் அனுபவத்தில் சிக்கிம் மாநிலமே மிகவும் அமைதியான மாநிலம். மக்கள் இரவுகளில் கூட த்ங்கள் வீடுகளைப் பூட்டுவதில்லை. அந்த்ளவு திருட்டு போன்ற விஷயங்கள் அங்கே குறைவு. பாஞ்சாபிலும், ஹரியானாவிலும் மலைவாழ் மக்களும் காடுகளும் கிடையாது. மிசோரமும் மேகாலயாவும் பெண்க்ளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் மாநிலங்களாக இருக்கின்றன. ஆனால் ஆண்களும் பெண்களும் சம்மானவர்களாக இருப்பது கேரளாவில் மட்டுமே. மலைவாழ் மக்கள் சமூகத்தைப் பொறுத்தவரை பெண் தான் அந்த சமூகத்தின் முதுகெலும்பே.

ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூல் மாவட்ட்த்தில் சென்சியூ என்றழைக்கப்படும் பழங்குடியினர் சமூகத்தில் ஏதாவதொரு குற்றம் புரிந்து சிறைக்குச் சென்று வந்த இளைஞர்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள தகுதியானவர்கள். அவர்களை மட்டுமே பெண்கள் மணம் செய்துகொள்கின்ற்னர் கர்நாடகாவில் ஆக்கிபீக்கி என்ற மலைவாழ் சமூகத்தினர் குழந்தை பிறந்தபிறகு முதலில் தந்தையின் மனதில் தோன்றும் எந்த ஒரு சொல்லையும் தங்கள் குழந்தைகளுக்கு பெயராக வைப்பார்கள். போஸ்ட் ஆபீஸ், எக்ஸ்பிரஸ் என்று வித்தியாசமான பெயர்களெல்லாம் கூட இச்சமூகத்தில் காணப்படும்.

அந்தமான் நிகோபர் தீவுகளில் கற்கால மனிதர்கள் போன்ற மனிதர்கள் இன்னும் வாழ்கிறார்கள். சுனாமியின்போது அவர்களில் ஒருவர் கூட இறக்கவில்லை. எல்லோருமே தப்பித்தார்கள். ஏனெனில் அவர்களுக்கு பறவைகளின் பாஷை புரியும். அவற்றின் குறிப்பறிந்து முன்பே அவர்கள் தப்பிவிட்டனர். அருணாச்சலப்பிரதேசத்தில் ஆபாதானி என்றழைக்கப்படும் ஒரு வகையான பழங்குடியினர் இருக்கிறார்கள். அவர்கள் எந்த மத்த்தையும் சார்ந்தவர்களில்லை. மனித ஜாதி ஒன்று மட்டுமே அவர்கள் அறிந்த ஜாதி. சூரியனையும் சந்திரனையும் மட்டுமே வழிபடுகிறார்கள். என் இறுதிக்காலத்தில் அந்த மக்களோடு சென்று என்னை நான் மதமற்றவனாக்கிக்கொள்ள ஆசைப்படுகிறேன்

ஹேட்ஸ் ஆஃப் டு யூ கிரண்!!!

Tuesday, March 16, 2010

வானவில் பள்ளி




லையில் முண்டாசு. கையில் ஒரு கயிறு. கயிற்றின் மறுமுனையில் ஒரு மாடு. அதன்மீது சேகரிக்கப்பட்ட பழைய துணிகள். தோளில் தொங்கும் ஒரு உறுமி. மற்றொரு கையில் குச்சி. குச்சியால் உறுமியில் உரசி சத்தம் எழுப்பிக்கொண்டே வீட்டுக்கு வீடு வந்து பழைய துணிகளை கேட்டு வாங்கிச் செல்லும் பூம்பூம்மாட்டுக்காரர். சத்தத்துக்கு ஏற்ப தலையை ஆட்டும் மாடு. அவர் பின்னாலேயே செல்லும் தெரு குழந்தைகள்..
பேருந்து நிலையங்களிலும், இன்ன பிற மக்கள் கூடும் இடங்களிலும் கையில் ஊசி, பாசி, மணிகள் போன்றவற்றை விற்றுக் கொண்டிருக்கும் பெண்கள், ஆங்காங்கே இருக்கும் அவர்களின் டெண்ட்கள், எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பாஷை என நகர்புற நாகரிகத்திற்கு சற்றும் தொடர்பில்லாத நரிக்குறவர்கள்..
பூம்பூம்மாட்டுக்காரர் அல்லது நரிக்குறவர் சமுதாயத்தைச்
சேர்ந்த இவர்கள் நாடோடிகளாக
இருப்பதால் பள்ளிக்கூடம் பக்கம் போவது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இப்படி பூம்பூம்மாட்டுக்காரர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு. 2004 டிசம்பர் 26 அன்று கோரத்தாண்டவமாடிய சுனாமிக்குப் பிறகு அவர்கள் வைத்திருந்த இரண்டு முன்று மாடுகளும் மாயமாகிவிட, அதன் பின் வாழ வழியின்றி தடுமாறி நின்றனர். அரசாங்கத்தின் நிவாரணப் பொருட்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அளித்த பல்வேறு உதவிகளும் இந்த சமுதாயத்தினருக்குக் கிடைக்கவில்லை.
சுனாமியில் நரிக்குறவர்கள், பூம்பூம்மாட்டுக்காரர்கள் நிறைய பேர் உயிரழந்தனர். அவர்களது குழந்தைகள் அனாதைகள் ஆயினர். இந்த குழந்தைகளின் எதிர்காலம்? பெற்றோர் இருந்தாலும் கூட வாழ்வாதாரத்தை இழந்து நின்றதால் செய்வதறியாது திகைத்து நின்றனர். தாங்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. தங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு ஆறுதலாக ஒரு அருமருந்தாக வந்தது “வாவில் ள்ளி
நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது சிக்கல். சிக்கல் என்பது ஊர் பெயர்தான். வேறு ஏதாவது நினைத்துக் கொள்ள வேண்டாம். தில்லானா மோனாம்பாளில் வரும் சிக்கல் சண்முகசுந்தரத்தின் ஊரான அதே சிக்கல்தான். அங்கே சிக்கல் சிங்காரவேலர் கோவில் நுழைவாயிலுக்கு எதிர்புறம், சாலையின் வலதுபுறம் திரும்பினால்... 20, வடக்குத்தெரு என்ற முகவரியில் இயங்குகிறது வானவில் உண்டு உறைவிடப் பள்ளி.
வாசலில் திண்ணை, நடுவில் முற்றம், நான்கு புறமும் தூண்கள், சமையலறை அதைக் கடந்து சென்றால் விசாலமான கொல்லைப்புறம். இப்படி நாகை மாவட்டத்தில் காணப்படும் பழைய வீடுகளைப் போலவே இருக்கிறது வானவில் பள்ளியும்.
உள்ளே நுழையும்போதே குழந்தைகளின் வெவ்வேறு குரல்கள் காதுகளில் மோதுகின்றன. “இது எப்டி செய்றது?- சந்தேகம் கேட்கும் ஒரு குரல். அக்கா! என்னை இவன் அடிச்சுட்டான் புகார் கூறும் ஒரு குரல். “நீங்க யாரு? ரேவதி அக்கா பிரெண்டா? கேள்வி கேட்கும் ஒரு குரல். கொஞ்சம் உற்றுக்கேட்டால் மட்டுமே அது தெலுங்கு அல்லது இந்தி என புரியும்படி பேசும் ஒரு குரல் இப்படி பல்வேறு குரல்கள் ஒலிக்கின்றன. அத்தனை குரல்களிலும் இனிமையும் மழலையும் பொங்குகின்றன.
முற்றத்திற்கு ஒருபுறம் மரப்பலகைகள் கொண்டு தடுப்பு ஏற்படுத்தி வகுப்பறைகள்! வானவில், நட்சத்திரம் என ரசனையாய் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு அழகான பெயர். ஒரு வகுப்பில் ஆசிரியர் வண்ண வண்ண அட்டைகளை வைத்து பாடம் சொல்லிக் கொடுக்க, அத்தனை ஆர்வத்தோடு குழந்தைகள் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகள் கைப்பட வரைந்த ஒவியங்கள், ஜமுக்கிகளையும், மணிகளையும் வைத்து அவர்களே செய்த சின்ன சின்ன உருவங்கள்.. வண்ணத்துப்பூச்சி, மயில் இப்படி...கண்களுக்கு விருந்தாக எல்லா வகுப்புகளிலும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
முற்றத்தைக் கடந்து கொல்லைப்பக்கம் சென்றால் கண்களுக்கு குளுமையாய் ஒரு குளம்.... குளத்திற்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட சிறிய மைதானம் போன்ற இட்த்தில் நிறைய குழந்தைகள் அங்கே அமர்ந்தும் நடந்தும், ஓடிக்கொண்டும், ஹோஎன்று கத்திக்கொண்டும், கும்மாளமிட்டுக்கொண்டும் இருந்தனர். என்னைப் பார்த்ததும் ஒரு சிறுவன் வந்து “நீங்க தமிழா இங்கிலீஷா?என்றான்.
“தமிழ்தான். ஏன்?
“எனக்கு இங்கிலீஷ்ல பேசினா புரியாது. உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதா?
“தெரியும். உன்கிட்ட தமிழ்லதான் பேசுவேன்.
“வோட்டு சரணம்
“அப்படின்னா?
“வோட்டு சரணம்
“புரியலையே கண்ணா!.அப்படின்னா என்ன?
அருகில் இருந்த இன்னொரு குழந்தை சொல்லிற்று. “அக்கா! அவன் உங்க பேரை இங்கிலீஷில் கேட்கிறான்
வாட் இஸ் யுவர் நேம் தான் அவனிடம் வோட்டு சரணம் ஆனது புரிந்தது.
அத்தனை குழந்தைகளின் கைகளிலும் களிமண். வானவில் இருக்கும் அதே சாலையில் உள்ள ஒரு குளத்திற்கு அருகில் சென்று களிமண் எடுத்து வருகிறார்கள். கையிலும் பாலிதீன் கவரிலும் பெரிய பையிலும் என்று அவரவர் சைசுக்கு தகுந்தாற்போல விதவிதமாய் களிமண் சேகரிப்பு நடக்கிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் எழில் ஒரு கலைஞர். ஓவியம், களிமண் சிற்பம், கராத்தே என எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு கற்று தருகிறார். குழந்தைகளுக்கு இவர் “எலி அண்ணா”. அப்படித்தான் மழலையில் இவரை அழைக்கிறார்கள்.
எழில் மட்டுமல்ல, இங்கு பணிபுரியும் அனைவருமே இளைய தலைமுறையினர்தான். யார் எக்கேடு கெட்டால் என்ன நம் கதை நடந்தால் போதும் என்றுதான் இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுபவர்கள் ஒரு முறை வானவில் பள்ளிக்கு வந்தால் தங்கள் கருத்தை கட்டாயம் மாற்றிக் கொள்வார்கள். பள்ளிக்கு அருகிலேயே உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் அத்தனை பேரும் அங்கேயே தங்கி அர்ப்பணிப்போடு சமுதாய மாற்றமுடியும் என்ற நம்பிக்கையோடு இப்பள்ளியை நடத்துகிறார்கள். இளைய சமுதாயம் சமூக அக்கறையோடு இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது வானவில்.
செல்லூர், வாஞ்சூர் ஆகிய கிராமங்களிலிருந்து பள்ளி வேன் சென்று குழந்தைகளை அழைத்து வருகிறது. அங்கேதான் அரசு இவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறது. இந்த பள்ளியை நடத்தும் ரேவதிக்கு இந்த வீடுகளை பெற்றுத் தந்ததில் பங்கு உண்டு.
ரேவதி - சென்னையைச் சேர்ந்த இவர் சுனாமிக்குப் பிறகு நாகைக்கு வந்து இந்த பள்ளியை தொடங்கினார்.பத்திரிகையாளரான இவருக்கு குறும்பட இயக்குனர், களப்பணியாளர் என பல முகங்கள் உண்டு. நவீன நாடகங்களிலும் நடித்திருக்கிறார். வானவில் பள்ளிக் குழந்தைகளின் தேவதை. ரேவதி அக்கா! ரேவதி அக்கா!என்று குழந்தைகள் அவர் தோளின் மீதும் மடியின்மீதும் உரிமையோடு மேலேறிக்கொள்கிறார்கள்.
"நாகப்பட்டினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து சுனாமி நிவாரணப்பணிகள் செய்துகொண்டிருந்தேன். அப்போது கிராமம் கிராமமாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் ஒரு முறை நாகை பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது ஒரு சிறுமி கையில் ஒரு குழந்தையோடு வந்து கையேந்தினாள். எனக்கு அது அதிர்ச்சியாகவே இருந்தது. ஏனென்றால் அப்போது ஏகப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வந்து குவிந்திருந்தன. முதல் இரண்டு நாட்கள் மக்களுக்கு சாப்பாட்டுக்கு சிரமங்கள் இருந்தாலும் அதன்பின் அப்படியான சூழல் இல்லை. அவளை அழைத்து விசாரித்தபோதுதான் அவள் பெயர் முருகம்மா என்றாள். அவள் நரிக்குறவர் இனச்சிறுமி என்பதும் அவர்கள் அனைவரும் சாப்பாட்டுக்குக் கூட கஷடப்படுகிறார்கள் என்பதும் புரிந்தது. அப்போதுதான் இந்த குழந்தைகளுக்காக ஒரு பள்ளி தொடங்கினால் என்ன என்று எண்ணம் தோன்றியது. அதன்பின்னர் நாங்கள் எடுத்த சர்வேபடி எந்தெந்த ஊர்களில் எத்தனை பேர் இப்படி எந்த நிவாரணமும் கிடைக்காமல் இருக்கி
றார்கள் என்று ஆராய்ந்தபோது பூம்பூம்மாட்டுக்காரர் மற்றும் நரிக்குறவர் சமுதாய மக்கள்தான் அதிக சிரமத்தில் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து அவர்களிடம் போய்ப் பேசி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச் செய்தோம்.””என்று வானவில் உருவான கதையை பகிர்ந்து கொண்டார் ரேவதி.
ஒரு குழந்தையை அழைத்து ரேவதி பாட்டுப்பாட சொல்ல, “சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம்என்று அழகாகப் பாடியது. தினமும் காலையில் அசெம்பிளி உண்டு. திருக்குறள் சொல்வது, பாட்டுக்கள் பாடுவது என்று வித்தியாசமான அசெம்பிளி. குருவி தலையில் பனங்காயா?என்று குருவிகளே பாடுவதைக் கேட்கையில் மனம் கனத்துத்தான் போகிறது.
“மனுசங்கடா! நாங்க மனுசங்கடா!
உன்னைப்போல அவனைப்போல
எட்டு சாண் உயரமுள்ள மனுசஙகடா!
டேய்....
நாங்க மனுசங்கடா!
என்று கவிஞர் இன்குலாபின் பாடலை கூட்டாக குரலெடுத்து பாடுகிறார்கள் குழந்தைகள். அந்த “டேய்... மட்டும் அடிக்க வருவது போல் உச்சத்தில் வருகிறது.
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவை வாங்க முடியுமா?” - பரிணாமனின் பாடல் மழலைகளின் குரலில் தேனாய் பாய்கிறது. இது போன்ற விதம் விதமான பாடல்கள்... குழந்தைகள் சளைக்காமல் பாடுகிறார்கள். பள்ளிக்கு வர அழும் குழந்தைகள் இருக்கும் நம் நாட்டில் இப்படி பாட்டு, ஓவியம், சிற்பம் என வித்தியாசமான பள்ளி.
இந்த குழந்தைகள் இங்கே விளையாட்டு முறையில் கல்வி கற்கிறார்கள். ஆனால் ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு ஆறாம் வகுப்புக்குச் செல்லும்போது சிரமப்பட நேருமே என்ற சந்தேகத்தைக் கேட்டபோது, “பள்ளி தொடங்கிய காலத்தில் மூன்று பேர்தான் ஆசிரியர்கள் இருந்தார்கள். அப்போது விளையாட்டுமுறையிலான கல்வி மட்டும்தான் அளித்தோம். இந்த சிக்கல் இருப்பதால் இப்போதெல்லாம் அதோடு சேர்த்து வழக்கமான முறையிலும் கற்றுக் கொடுக்கிறோம். அதுமட்டுமில்லாமல் இப்போதுதான் அரசாங்கக் கல்வியே செயல்வழிகற்றல் முறையில்தானே இருக்கிறது?என்கிறார் ரேவதி.
“குழந்தைகள் ஆர்வமாகத்தான் வருகிறார்கள். ஒரு சில பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பதில் பிச்சையெடுக்க அனுப்பினால் தினமும் நூறு ரூபாய் கிடைக்கும் என்று வயிற்றுப்பாட்டுக்கு அவ்வபோது திடீரென பத்து நாள் இருபது நாள் என குழந்தைகளை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றுவிடுவதுண்டு. நாங்கள் போய் பார்த்து திரும்ப கூட்டிக்கொண்டு வருவோம். நானே சென்னை மெரீனா பீச்சில் பலமுறை எங்கள் பள்ளிக் குழந்தை பெற்றோரோடு பிச்சை எடுப்பதை பார்த்திருக்கிறேன். அப்படி சென்ற குழந்தையை சக குழந்தைகள் பிச்சை எடுக்கப் போயிட்டு வந்தியா என்று கேலி செய்யும்போது அந்த குழந்தையின் மனம் பாதிக்கப்படுகிறது. அதனால் அப்படி பிச்சை எடுக்கப் போவது சரியில்லை என்ற மனோபாவத்தை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டியிருக்கிறது. 106 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையுமே பள்ளியிலேயே தங்கச் செய்தால் இதைத் தடுக்கலாம். ஆனால் பெற்றோரிடமிருந்து ஒரேயடியாக பிரிப்பதாக நினைத்துவிடக்கூடாது என்பதற்காக ஹாஸ்டல் கட்டாயமாக்கப்படவில்லை. 36 குழந்தைகள் மட்டும் ஹாஸ்டலில் இருக்கிறார்கள்.
இவர்களிடம் மிக சிறிய வயதிலேயே பெண்களை கல்யாணம் செய்து கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. 12 வயதில் திருமணம் செய்து 20 வயதில் நான்கைந்து குழந்தைகள் பெற்று உடல் சோர்ந்து போகிறார்கள். எங்களிடம் படித்த ஒரு பெண்குழந்தைக்கு இன்று திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது என்கிறார் ரேவதி.
ஐந்தாம் வகுப்பு வரை இங்கே தங்கி கல்வி கற்கும் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு சென்றபின் என்ன செய்வார்கள்?
“எங்கள் பள்ளி விடுதியிலேயெ தங்கிக் கொண்டு வேறு பள்ளிகளுக்குச் செல்லாம். அது போல எங்களிடம் பயின்று இன்று சிக்கல் உயர்நிலைப்பள்ளியிலும், பொரவச்சேரி நடுநிலைப்பள்ளியிலும் மேலே படிக்கும் பிள்ளைகள் பள்ளி விடுதியில் தங்கிப் பயில்கிறார்கள். பூம்பூம்மாட்டுக்காரர், நரிக்குறவர் சமூகங்களில் இதுவரை ஒரு பட்டதாரிகூட இல்லை. யாரும் பள்ளி இறுதி வகுப்புவரை வந்ததில்லை. இந்த பிள்ளைகள் அந்த குறையை போக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதுஎன்கிறார் ரேவதி.
பள்ளிக் கட்டிடம் இப்போதைக்கு வாடகைக்குத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. விப்ரோ நிறுவனம் வானவில்லுக்கு ஒரு சொந்தக்கட்டிடம் கட்டித் தர முன்வந்து கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. இப்போதிருக்கும் பள்ளியிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது புதுக் கட்டிடம். அங்கேயே குழந்தைகள் தங்குவதற்கு வசதியாக ஒரு விடுதியும் வளாகத்திற்குள்ளேயே கட்டிக்கொண்டிருக்கிறார்கள். வகுப்பறைகள் பாதி கட்டப்பட்ட நிலையில் நிதிவசதியின்றி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
குழந்தைகளுக்கு காலை உணவு, மதிய உணவு ஆகியவை கட்டாயம் பள்ளியில்தான். பள்ளியிலேயே இரவு தங்கும் பிள்ளைகளுக்கு இரவு உணவு வழங்கப்படுகிறது. குழந்தைகளை அவரவர் வீடுகளில் விடச் செல்லும்போது மளிகை பொருட்களை வேன் ஓட்டுனர் சாரதி (பெயரே சாரதிதான்) வாங்கி வந்து விடுகிறார். சிறிய அளவில் நிலம் வாங்கி அதில் காய்கறிகள், நெல் போன்றவற்றை பயிரிட்டிருக்கிறார்கள். மாடு ஒன்று சொந்தமாக உள்ளது. அதனால் குழந்தைகளின் உணவுக்குத் தேவையான பொருட்கள், பால் போன்றவற்றை கூடுமானவரை இவர்களே உற்பத்தி செய்துகொள்கிறார்கள். ஆனாலும் கூட அன்றாட தேவைகளுக்கான நிதி பற்றாக்குறையாகவே உள்ளது. அதுமட்டுமில்லாது வயல்களில் வேலை செய்பவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சம்பளம், தற்போதைய பள்ளிக் கட்டிட வாடகை, சமையல் செய்பவர்களுக்கான சம்பளம், குழந்தைகளுக்கான சீருடைச் செலவு இப்படி கணக்கெடுத்தால் செலவு எங்கேயோ போகிறது. சமாளிப்பது கஷ்டமாக இருந்தாலும் தொடர்ந்து பள்ளியை நம்பிக்கையோடு நத்திக்கொண்டிருக்கிறார் ரேவதி.
பள்ளியை விட்டுக் கிளம்பும்போது இங்கேயே இருங்க! இங்கேயே இருங்க என்று குழந்தைகள் சுற்றி சுற்றி வந்தது இன்னமும் நிழலாடுகின்றது. அவர்களின் சிரிக்கும் கண்களும் தயங்காத பேச்சும் இன்னும் கண்களை விட்டு அகல மறுக்கின்றன. நரிக்குறவர் மற்றும் பூம்பூம்மாட்டுக்காரர் சமுதாயத்தின் முதல் பட்டதாரியை பிற்காலத்தில் உருவானால் அதற்குக் காரணமாகவும், அந்த பட்டதாரியை பட்டை தீட்டிய இடமாகவும் இருக்கும் வாவில்.
நன்றி : புதிய தலைமுறை

Wednesday, February 10, 2010

கல்லறை இருக்கிறது- கல்வெட்டு மட்டுமே காணவில்லை

- ஆதவன் தீட்சண்யா


எழுத்தாளர் தோழர் கே.டானியல் அவர்களின் கல்லறையை கண்டுவர முடியாத என் ஆதங்கத்தைநண்பர்கள் பலரும் தங்களது வலைப்பூக்களிலும் இணையதளங்களிலும் வெளியிட்டிருந்தார்கள்.தீக்கதிர் நாளிதழும் வெளியிட்டிருந்தது. இன்னும் சில நண்பர்கள் இந்தக் கட்டுரை வேறுசிலஇணையதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறதே என்று புருவத்தை உயர்த்தி தமது தளத்தில் வெளியிடமுடியாதென உதட்டைப் பிதுக்கியிருந்தனர். எல்லாவற்றுக்கிடையிலும் டானியலின் கல்லறை பலரதுகவனத்தையும் ஈர்த்திருக்கிறது. டானியல் கல்லறை குறித்த விசயம் இப்போது அந்த சுடுகாட்டில்மண்டியுள்ள புதர்களை சுத்தப்படுத்தும் வேலையை கிளப்பிவிட்டிருக்கிறது.


பிப்ரவரி 2 ம் தேதி வாக்கில் ஊருக்குப் போகவிருப்பதாகவும் அப்போது இதுகுறித்து விசாரிப்பதாகவும்தோழர் மார்க்ஸ் தெரிவித்ததையடுத்து இடுகாடு முழுவதும் மண்டிக்கிடக்கும் முட்புதருக்குள்டானியலின் கல்லறை சேதமின்றி இருக்கிறது தோழரே, நீங்கள்தான் சரியாய் தேடிப்பார்த்திருக்கதவறிவிட்டீர்கள் என்று மார்க்ஸ் சொல்ல வேண்டுமேன்று விரும்புகிறேன்...’ என்று முந்தையகட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.


நான் விரும்பி எதிர்பார்த்த அந்த தகவல் கிடைத்திருக்கிறது. டானியலின் கல்லறை என்னவானது என்றுபார்த்தறியுமாறு தன்னிடம் .மார்க்ஸ் தெரிவித்ததன் பேரில் பொ.வேல்சாமி தஞ்சை இடுகாட்டுக்குப்போய் பார்த்துவிட்டு 08.02.10 அன்று அங்கிருந்து என்னை தொடர்பு கொண்டார். டானியலின் கல்லறைஅவ்விடத்தில் இருப்பதாகவும் ஆனால் கல்லறையின் மீதிருந்த கல்வெட்டை யாரோபெயர்த்தெடுத்துள்ளதால்தான் உங்களால் அடையாளம் காண முடியாமல் போயிருக்கிறது என்றும்தெரிவித்தார். ஆறுமாதங்களுக்கு முன்பும்கூட அந்த கல்வெட்டு இருந்ததாகவும், வேண்டுமென்றே (அதாவது வேண்டாமென்று) பெயர்த்தெடுப்பதைப் போலிருப்பதாகவும், கல்வெட்டு இருந்த இடத்தில்தாறமாறாக சிமெண்ட் பூசப்பட்டிருப்பது ஏனென்று தெரியவில்லை என்றும் வருத்தப்பட்டார்.கல்லறையுள்ள பகுதியை யாரோ சிலதினங்களுக்கு முன்பு செதுக்கி சுத்தப்படுத்தியிருப்பதாகவும்கூறினார். எப்படியாயினும் தனது நண்பர் செல்வபாண்டியன் மூலமாக மீண்டும் புதிதாக கல்வெட்டுபதிக்க ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். டானியல் கல்லறையை அடையாளம்காட்டியமைக்காக .மார்க்ஸ்- பொ.வேல்சாமி ஆகியோருக்கு நன்றி.


காணவில்லை- டானியல் கல்லறை என்ற எனது முந்தைய கட்டுரையிலுள்ள கீழ்க்காணும் தகவல்பிழைகளுக்கு வருந்துகிறேன்.


1. கல்லறை எழுப்பியதில் .மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியோரது பங்களிப்பு குறித்து விடுபட்டிருந்தது. ‘டானியலின் கல்லறையை மக்கள் கலைஇலக்கியக் கழகம் கட்டியெழுப்பியிருந்ததாக தோழர்கள் சிலர்கூறினார்கள். .மார்க்ஸூக்கும், பொ.வேலுசாமிக்கும் இதில் கூடுதல் பங்களிப்பு இருந்திருக்கிறது...’என்ற திருத்தத்தை கவின்மலர் மூலமாக நிச்சாமம்.காம், உயிர்மெய்.காம் உள்ளிட்ட தளங்களுக்கும்அனுப்பிவைத்தேன். சிலர் அந்த திருத்தங்களை வெளியிட்டுள்ளனர்.


2. மக்கள் கலைஇலக்கியக் கழகம் கல்லறையை எழுப்பியது என்ற குறிப்பும் பிழையானது. அந்தஅமைப்பு இதனோடு யாதொருவகையிலும் தொடர்புபடவில்லை. உடன் வந்த தோழர்கள் சொன்ன இந்ததகவலை தோழர்.மார்க்ஸ் போன்றவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளாமல் நானும்குறிப்பிட்டிருக்கக்கூடாது. உண்மையில் தானும் தனது சகோதரர்களுமே இக்கல்லறையைஎழுப்பியதாக பொ.வேல்சாமி 08.02.10 அன்று என்னிடம் தெரிவித்தார்.


3. டானியல் பற்றிய வி.டி.இளங்கோவன் கட்டுரையில் வெண்மணிக்குப் போய்விரவேண்டும் என்றஅவரது விருப்பம் நிறைவேறவில்லை என்பதான தொனி இருந்ததை வைத்து அதை அவ்வாறேகுறிப்பிட்டிருந்தேன். டானியல் வெண்மணிக்கு சென்று வந்திருக்கிறார் என்ற தகவலைகரவைதாசனிடம் வி.டி.இளங்கோவன் குறிப்பிட்டிருக்கிறார்.

Thursday, January 28, 2010

காணவில்லை: டானியலின் கல்லறை

- ஆதவன் தீட்சண்யா

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியர். இலங்கை தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராட கட்சியின் முன்னெடுப்பில் உருவான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். மார்க்சீய அறிதல்முறை மற்றும் தலித் உள்ளுணர்வின் வழியே சமூகத்தின் அடிப்படையையும் நிகழ்வுப் போக்குகளையும் விளங்கிக் கொண்டவர். தமிழர் என்ற பொது அடையாளத்திற்கு வெளியே தாழ்த்தப்பட்ட மக்களை நிறுத்திவைப்பதற்கு சாதியம் வழங்கிக் கொண்டிருந்த உளுத்துப்போன நியாயங்களையும் நடைமுறைகளையும் தனது எழுத்தாக்கங்கள் வழியே அம்பலப்படுத்தியவர். அவரது எழுத்துகள் அவரை தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி என்ற பெருமைக்கு உயர்த்தி நிறுத்தியுள்ளன. விழுங்க முடியாத முள் அல்லது மறக்க முடியாத சொல்லாக அவரது பெயர் மேலெழுந்து வந்தது. அ.மார்க்ஸ், தஞ்சை பிரகாஷ் போன்ற தமிழக எழுத்தாளர்கள் பலருடனும் தோழமை கொண்டிருந்தவர்.

... இப்படி சொல்லிக் கொண்டே போகுமளவுக்கு புரட்சிகரமான வாழ்வைக் கொண்டிருந்த தோழர் கே.டானியல், மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்து 1986 மார்ச் 23 அன்று தஞ்சையில் காலமானார்.வெண்மணிக்குப் போய் அந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு வரவேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறாமலே போய்விட்டதென்கிறார் அவரது உற்றத்தோழர் வி.ரி.இளங்கோவன். பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளும் டானியல் நினைவுநாளும் ஒன்றுதான். டானியலின் கல்லறையை மக்கள் கலை இலக்கியக் கழகம் கட்டியெழுப்பியிருந்ததாக தோழர்கள் சிலர் கூறினார்கள். அ.மார்க்ஸுக்கும், பொ.வேலுச்சாமிக்கும் இதில் கூடுதல் பங்களிப்பு இருந்திருக்கிறது. கடந்த சிலவருடங்களில் மாதம் ஒருமுறையாவது ஏதேனுமொரு வேலையாக தஞ்சாவூருக்குப் போய்வந்து கொண்டுதானிருக்கிறேன். டானியலின் கல்லறையை இம்முறையாவது பார்த்துவிட்டு வரவேண்டும் என்று ஒவ்வொருமுறை போகும்போதும் நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் நிகழ்ச்சிகள், அதற்குப் பிறகு தோழர்களுடனான சந்திப்புகள் என்று இருந்துவிட்டு கிளம்பி வந்து வண்டி பிடிப்பதே வழமையாய் இருந்தது. இம்முறையும் அப்படி வந்துவிட்டிருந்தால் மனம் தொந்திரவு அடைந்திருக்காது என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

2010 ஜனவரி 22 அன்று தஞ்சை மாவட்ட தமுஎகச செயலாளர் களப்பிரனின் தங்கை திருமணம். மண்டபத்திலிருந்து அறைக்குத் திரும்பி தோழர்கள் தஞ்சை சாம்பான், சோமலிங்கம் ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். கொஞ்சநேரத்தில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜாவும் திரைத்துறையில் பணியாற்றி வரும் தோழர் சசிகுமாரும் வந்து சேர்ந்தார்கள். உரையாடல் எனது இலங்கைப் பயணம் குறித்து திரும்பியது. ( ஆதவன் எப்படி போய்வந்தார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று விஷமத்தனமாக பாவ.செயப்பிரகாசம் பழிபோட்டுக் கொண்டிருக்கிறாரே அந்த பயணம் பற்றியதுதான். அவருக்கு பதில் சொல்ல இதுவல்ல இடம். வேறு இடம் கிடைத்தாலும் அவரது ஊத்தை உளறல்களுக்கு பதில் சொல்லி ஆகப்போவதென்ன?) மலையகத்திலாகட்டும் கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்திலாகட்டும் அங்குள்ள எழுத்தாளர்கள் மறைந்த தோழர் டானியல் மீது வைத்திருக்கும் ஈடுபாடு அளவற்றதாய் இருப்பதையும், ஹரிகிருஷ்ணனின் மணல்வீடு டானியல் சிறப்பிதழாக வெளியானதை அவர்களில் பலர் நினைவு கூர்ந்ததையும் சொல்லிக் கொண்டிருந்தேன். டானியலின் நாவல்கள் குறித்து புதுவிசையில் லெனின் மதிவானம் எழுதிய கட்டுரை, டென்மார்க்கிலிருக்கும் தோழர் கரவைதாசன் கொண்டு வரவிருக்கும் இனி இதழில் வி.ரி.இளங்கோவன், சிவசேகரம், சி.கா.செந்திவேல், எஸ்.சந்திரபோஸ் ஆகியோர் டானியல் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் என்று அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருந்த போதுதான், டானியல் கல்லறைக்குப் போவமா தோழர் என்று கேட்டேன். பிறகென்ன, ஐந்துபேரும் கிளம்பினோம்.

தஞ்சையின் ராஜகோரியும் அதையடுத்துள்ள இடுகாடும் திறந்தவெளி பீக்காடாக நாறிக் கொண்டிருக்கின்றன. உயிருள்ள மனிதர்கள் வாயில் மலத்தை திணிக்கிற கேடுகெட்ட நாட்டில் செத்தவர்கள் மேல் கழிந்துவைப்பதில் யாருக்கு என்ன வருத்தமிருக்கப் போகிறது? பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறைக்கு அருகில்தான் டானியலின் கல்லறை என்று உறுதியாக தெரிவித்த சாம்பான் அவ்விடத்திற்கு அழைத்துப்போனார். (பாவம் திமுக. யாராவது ஒரு அழகிரியை மட்டும் பார்த்துக்கொள்கிற வலுவும் மனமும்தான் அதற்கிருக்கிறது போலும். பட்டுக்கோட்டை அழகிரியெல்லாம் இனி எதற்கு? சீந்துவாரற்று கிடக்கிறது அந்த கல்லறை).

தஞ்சை சாம்பானும், சசிகுமாரும் அங்குமிங்குமாக தேடிச் சலித்துவிட்டு கடைசியில் உதட்டைப் பிதுக்கி நின்றனர். இத்தனைக்கும் அவர்கள் ஏற்கனவே டானியல் கல்லறைக்கு வந்துபோனவர்கள்தான். ஆனால் அப்படியெதுவும் அங்கு தென்படவில்லை. சந்தேகம் வந்துவிட்டால் பானையைத் திறந்து யானையைத் தேடுகிற மாதிரி அவரும் சசியும் அங்குமிங்குமாக அலைந்தார்கள். ராவணன் என்கிற தோழரை செல்போனில் அழைத்து சரியான இடம் குறித்த விவரங்களைத் கேட்டுக்கொண்டு மீண்டும் தேடினோம். ஒருவேளை இவர்கள் சரியான இடத்தை மறந்திருக்கக்கூடும் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

தோழர்.அ.மார்க்ஸ் சரியான இடத்தை சொல்லக்கூடும் என்ற நம்பிக்கையில் அவரை அலைபேசியில் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. ஒருவேளை யாராவது இடித்துத் தள்ளியிருப்பார்களோ என்று யோசிக்கக்கூட எனக்கு தைரியம் வரவில்லை. சோர்வும் ஏமாற்றமும் பீடித்த மனநிலையோடு அறைக்குத் திரும்பிய கொஞ்நேரத்தில் தோழர் மார்க்ஸ் லைனில் வந்தார். விசயத்தை சொன்னதும் அவரும் பதறிவிட்டார். அவருக்கும் டானியலுக்குமான நெருக்கமும் தோழமையும் அப்படியானது. அழகிரியின் கல்லறைக்குப் பக்கத்தில் அதேவரிசையில்தான் டானியல் கல்லறை என்று உறுதியாக தெரிவித்தார். பிப்ரவரி 2ம் தேதி தஞ்சை வரவிருப்பதாகவும் அப்போது நேரில் சென்று பார்ப்பதாகவும் அவர் கூறியது சற்றே ஆறுதலாயிருந்தது. இடுகாடு முழுவதும் மண்டிக் கிடக்கும் முட்புதருக்குள் டானியலின் கல்லறை சேதமின்றி இருக்கிறது தோழரே, நீங்கள்தான் சரியாய் தேடிப் பார்த்திருக்க தவறிவிட்டீர்கள் என்று மார்க்ஸ் சொல்ல வேண்டுமென விரும்புகிறேன்.

தோழர்கள் சசியும் கீரனூர் ஜாகீர் ராஜாவும் அலைபேசியில் தெரிவித்த அண்மைச்செய்திகள்:

மொழிப்போர் தியாகிகள் கூட்டத்திற்காக தஞ்சை வந்திருந்த தமிழச்சி தங்கபாண்டியனிடமும், எஸ்.தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்காக வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரிடமும் டானியலின் கல்லறைக்கு நேர்ந்துள்ள கதியை சசி எடுத்துரைத்திருக்கிறார். இதனிடையே தஞ்சை மாநகராட்சி உறுப்பினராயிருக்கும் சசியின் நண்பர் குமார், “உலகம் போற்றும் ஒரு எழுத்தாளரின் கல்லறையைக்கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லையே” என்கிற அவமானமும் ஆதங்கமும் கொண்டு இப்பிரச்னையை 25.01.2010 அன்று அவைக்கூட்டத்தில் எழுப்பியிருக்கிறார். டானியலின் கல்லறைக்கு நேர்ந்த கதியை தஞ்சை நாளிதழ்களும் கவனப்படுத்தி வெளியிட்டுள்ளன. டானியல் இப்போது ஒரு பேசுபொருளாகியிருக்கிறார் தஞ்சையில். “சரியான இடத்தை கண்டுபிடித்து சொல்லுங்கள், அவருக்கு நேர்ந்த அவமானத்தைப் போக்கும் வகையில் மிகச்சிறப்பாக கல்லறையை எங்கள் செலவில் எழுப்பித் தருகிறோம் என்று பலர் முன்வந்திருப்பதாக சசி கூறிய தகவல் நெகிழ்ச்சியளிக்கிறது. புனரமைப்புக்கு உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள் தோழரே என்று உயிர்மெய் தமயந்தியும் (நார்வே) கூறியிருக்கிறார்.

தோழர் டானியலின் நினைவுநாளான மார்ச் 23 நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு கம்யூனிஸ்டாக இருந்து போராடி ஈட்டிய வெற்றிகள், அவரது நூல்கள், அவர் உருவாக்கிய அறிவுப் பாரம்பரியம், முன்னெடுத்த தலித் இலக்கியம் ஆகியவற்றின் வழியாக நம்முடனேயே இருக்கும் தோழர் டானியலுக்கு அவரது கல்லறையையாவது மீட்டுத்தர என்ன செய்யப்போகிறோம்? அந்த பீக்காட்டில் அவரது கல்லறையை மறுபடியும் தேடப்போகிறோமா அல்லது அவருக்குரிய மரியாதையுடன் புனரமைக்கப்பட்ட ஒரு கல்லறையின் முன் அஞ்சலி செலுத்தப்போகிறோமா என்பதை அரசாங்கமும், தஞ்சை மாநகராட்சியும்தான் இனி சொல்லியாக வேண்டும்.

2. கல்லறைகளைப் பற்றிய பிற நினைவுகள்

அ) லண்டன் ஹைகேட் இடுகாட்டில் இருக்கும் காரல் மார்க்சின் கல்லறையைப் பார்க்க இப்படித்தான் நானும் ஷோபாசக்தியும் கீரனுடன் கிளம்பிப்போனோம் ஒரு சாயங்காலப் பொழுதில். சுடுகாட்டை பூட்டிவைப்பார்கள் என்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கடுங்குளிர் காலமானதால் மாலையில் 4.30 மணிக்கே கதவடைத்துவிட்டார்கள். எதெதற்கோ சுவர் தாண்டுகிறவர்கள் இருக்க, மார்க்ஸ் கல்லறையைப் பார்க்க சுவரேறி குதித்தால் என்ன என்றுகூட யோசித்தோம். கீரன்தான் நாளைக்கு வருவோம் என்று சமாதானம் சொன்னார். பிறிதொருநாள் நானும் காண்டீபனும் போய் பார்த்தோம். யாரோவொரு தனிநபர்தான் தன் சொந்த செலவில் மார்க்சின் கல்லறையைக் கட்டியதாக சொன்னார்கள். அந்த கல்லறைத் தோட்டத்தில் 300 வருடங்களுக்கு முந்திய பல கல்லறைகளைக்கூட காணமுடிந்தது.

ஆ) கலை இலக்கிய ஆளுமைகளின் கல்லறைகள் ஆழ்ந்த பொறுப்புணர்வுடனும் அழகுணர்ச்சியுடனும் பிரான்சில் பராமரிக்கப்படுவதை நேரில் கண்டு நெகிழ்ந்த அனுபவத்தை ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இ) இலங்கை மலையகப்பகுதியில் வீறுடன் செயல்பட்ட செங்கொடி சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர் சுந்தரம் அவர்களின் கல்லறையைப் பார்த்ததும்கூட இப்படியான ஒரு அனுபவம்தான். கடும் மழையில் சிக்கிக் கொண்டு வெகுவாக தாமதமாகி இருட்டும் நேரத்திற்குதான் அங்குபோய் சேர முடிந்தது. ஒரு தேயிலைத் தோட்டத்தினூடே நீளும் சாலையொன்றின் ஓரத்தில் சுந்தரத்தின் கல்லறை இருந்தது. தொழிலாளி வர்க்கத்திற்காக தோழர் சுந்தரம் ஆற்றிய பணிகள் குறித்து மரியாதை கொண்டிருந்த சிங்களவரான ஒரு கம்யூனிஸ்ட் தன் சொந்த செலவில் அந்த கல்லறையை கட்டியதாக தோழர்கள் ஜேம்சும் மகேந்திரனும் தெரிவித்தார்கள். தொழிலாளர்களை ஒடுக்கி தனக்கு ஆதாயம் தேடித் தந்த பெரிய கங்காணிகளின் கல்லறைகளை எஸ்டேட் நிர்வாகங்களே கட்டி வருடந்தோறும் நினைவுதினத்தை அனுஷ்டித்து வருவதும், தமக்காக உழைத்து மாண்ட ஒரு தலைவரின் கல்லறையை தொழிலாளிவர்க்கம் கண்டுகொள்ளாதிருப்பதும் ஏனோ இவ்விடத்தில் நினைவில் தோன்றி உறுத்துகிறது.

ஈ) சேகுவேராவை கொன்றவர்கள் அவரை எங்கே புதைத்தார்கள் என்பது 30 வருடங்கள் கழித்தே வெளியுலகுக்கு தெரியவந்தது. கொன்றபிறகும் ஆத்திரமடங்காமல் சேவின் கரங்களை மணிக்கட்டுடன் வெட்டியெடுத்துவிட்டு புதைத்தார்கள் என்கிற குறிப்புதான் கண்டுபிடிக்க உதவியாய் இருந்தது. தோண்டியெடுக்கப்பட்ட அவரது எலும்புக்கூடு வழியே உலகம் மீண்டும் சேகுவேராவை கண்டது.

உ)டானியலின் கல்லறையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கு வருந்திய தோழர்.அழகிய பெரியவன், பெருநகரத்தின் கழிவுகளால் திணறி அழுக்கேறிப் போன கடலின் ஓரத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சமாதி முறையான பராமரிப்பின்றி இருந்ததைக் காணநேர்ந்ததாக கவலை தோயக்கூறினார்.