Friday, March 26, 2010

ஆயிஷா



(நன்றி: புதிய தலைமுறை)

யிஷா ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்று சாதனை படைத்த நூல் இது.

இந்தியாவின் பள்ளிக்கூடங்கள் அறிவாளிகளை உருவாக்குவதில்லை. நல்ல மதிப்பெண் பெறுபவர்களை மட்டுமே உருவாக்குகிறது. இந்த உண்மையை முகத்தில் அறைவது போல் சொல்கிறது இரா.நடராசனின் ‘ஆயிஷா நூல்.

அன்பும் அறிவும் ததும்பும் சிறுமி ஆயிஷா ஆயிஷாவின் சின்ன மண்டைக்குள் எத்தனை கேள்விகள்? எத்தனை சிந்த்னைகள்? இந்தச் சின்னப்பெண் வகுப்பில் எழுப்பும் கேள்விகளுக்கு விடையளிக்க இயலாமல் தவிக்கும் ஆசிரியைகள் அவளை தங்கள் பிரம்புக்குத் தீனியாக்குகின்றனர். .

கேள்வி கேட்கும் மாணவர்களை பெரும்பாலும் ஆசிரியர்களுக்குப் பிடிப்பதில்லை. அதிலும் பதில் சொல்ல இயலாத அளவுக்கு அந்தக் கேள்வி  புத்திசாலித்தனமாக இருந்தால்.. கேள்வி கேட்ட மாணவர் ம்றுமுறை கேள்வி கேட்காத அளவிற்கு தண்டனைதானே விடையாகக் கிடைக்கும்? ஆயிஷாவுக்கும் அதுவே நேர்கிறது.

அப்படி இருந்த ஆசிரியைகள் மத்தியில் ஒரே ஒரு ஆசிரியை ஆயிஷாவுக்கு செவிசாய்ப்பவராக இருக்கிறார். ஆயிஷாவின் அறிவியல் அறிவும், கேள்விகளும் செக்குமாடாய் உழன்று கொண்டிருந்த அவரின் வாழ்வில் புதிய ஒளியை ஏற்றுகின்றன. அவருடைய பார்வையிலேயே கதை தொடங்கி விரிகிறது.

“இத்தனை வருடத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் என்ன பெரிதாக மாறிவிட்டது? காலையில் எழுந்து பல் துலக்குவதை உற்சாகத்தோடவா செய்கிறோம்? எப்போதாவது புதிய பிரஷ் அல்லது பேஸ்ட்! இங்கே அதுவும் இல்லை. அதே ஓம்ஸ் விதி. ஒரெ செல் பிரிதல். புதிதாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வமற்று ஓர் இயந்திரமாய் கிரீச்சிட்டுக் கொண்டிருந்த என்னை என் முகத்தில் கேள்விகளால் ஓங்கி அறைந்தாள் ஆயிஷா என்கிறார் அவளது ஆசிரியை.

எல்லா மாணவர்களுக்கும் எண்கள் தரப்பட்டுள்ளன. வகுப்பு, வரிசை எண், தேர்வு எண், பெற்றெடுக்கும் மதிபெண்கள், எங்கும்  எண்கள், எண்களே பள்ளிகளை ஆள்கின்றன.


பிள்ளைகளின் தனித்திறன்களை உணர்ந்துகொள்ளாமல் அவர்களை மந்தை போல் பாவிக்கும் மனப்பான்மை, அவர்களின் தனித்துவம் தெரியாமல் எண்களால் அவர்களின் பால்யம் கடந்து போவதை இதைவிட அழகாக விளக்க முடியுமா என்ன?

ஆயிஷா கேட்கும் கேள்விகள் மிக அறிவார்த்தமானவை. அவற்றுள் ஒன்று இதோ:

“ஒரு மெழுகுவர்த்தியில் ஒளி அதிகமாகவும் வெப்பம் குறைவாகவும் உள்ளது. ஆனால் ஒரு அடுப்பில் எரியும் நெருப்பில் ஒளி குறைவாகவும், வெப்பம் அதிகமாயும் இருக்குதே. ஏன் மிஸ்?

நியூட்டன் அறிவியல் சோதனைகள் நடத்த ஆரம்பித்த்போது அவருக்கு வயது பன்னிரண்டு என்பது போன்ற பல தகவல்கள் ஆயிஷாவின் வார்த்தைகள் வழியாகவே வாசிக்கும் நமக்கும் வந்து சேர்கிறது.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஆயிஷாவை அவள் விரும்பிய விஞ்ஞானமே தத்தெடுத்துக்கொள்கிறது. அறிவியலின் த்த்துப்பிள்ளையாயும் வரலாற்றின் செல்லப்பிள்ளையாகவும் வளர்கிறாள் ஆயிஷா. அவள் நேசிக்கும் அறிவியலின் துணை கொண்டு அவள் தன்னை தன்னை அடிக்கும் ஆசிரியைகளின் பிரம்படிகளிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முனைகையில் வாசகரின் நெஞ்சம் பதைபதைத்துப் போகிறது.

ஆயிஷா மெக்காலே கல்விமுறைக்கு சாட்டையடி... மாற்றத்தின் முதல் படி..


நாலாசிரியர்       : இரா. நடராசன்

நூல் வெளியீடு     : பாரதி புத்தகாலய்ம்
                    7, இளங்கோ சாலை,
                    தேனாம்பேட்டை,
                    சென்னை -600 018
                    தொலைபேசி : 044 - 24332924

விலை             : ரூ. 10/-
                                

1 comment:

  1. புத்தகம் பற்றிய பகிர்விற்கு நன்றி நண்பரே..

    ReplyDelete