Wednesday, April 16, 2014

உத்தபுரத்தில் மீண்டும் பதற்றம்


உத்தபுரத்தில் சாதிய பிரச்சனைகள் வருவது புதிதல்ல. தீண்டாமைச் சுவர் எழுப்பி தலித் மக்களையும் ஆதிக்க சாதியினரையும் பிரித்த பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்த அதே ஊரில் உள்ள் முத்தாலம்மன் கோயிலை பூட்டி அந்த ஊர் சாதி இந்துக்களான பிள்ளைமார் சமூகத்தினர் சாவியை எடுத்துக்கொண்டு ஊரைவிட்டு வெளியேறிவிட பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. பல ஆண்டுகளாகவே தலித் மக்களுக்கு உத்தபுரம் முத்தாலம்மன் கோயிலுக்குள் நுழைய தடை இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆலய நுழைவு போராட்டம் நடத்தியபோது இரு சமூகத்துக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து ஓர் ஒப்பந்தம் போடப்பட்டதென்றும் அந்த ஒப்பந்தத்தை இப்போது சாதி இந்துக்கள் மீறிவிட்டதாக தலித் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உத்தபுரம் தலித் மக்கள் தரப்பில் இந்தியா டுடேயிடம் பேசிய சங்கரலிங்கம்ஆர்.டி.., டி.எஸ்.பி முன்னிலையில் திருவிழாவை இரு சமூகத்தினரும் இணைந்து நடத்துவது என 2012ல் ஒப்பந்தம் போட்டோம். ஆனால் அவர்கள் தரப்பில் தன்னிச்சையாக முடிவெடுத்து ஏப்ரல் 8,9 தேதிகளில் நடத்துவதென்று முடிவு செய்தனர். அதை அறிந்த நாங்கள் எங்களை கோயிலில் நுழைந்து வழிபட அனுமதிக்கவேண்டும் என்றோம். இதற்கான பேச்சுவார்த்தை உத்தபுரம் காவல்நிலையத்தில் நடந்துகொண்டிருந்தபோதே ஆண்களும் பெண்களுமாக கும்பலாக வந்த அவர்கள் கற்களை வீசி எறிந்து தாக்கினர். வெளியே வந்தபோது என்னை சாதிப்பெயர் சொல்லித் திட்டி தாக்க வந்தனர். அன்றைக்கு மட்டும் போலீஸ் இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கும்என்கிறார்.

இந்தப் பிரச்சனையடுத்து கோயிலைப் பூட்டிவிட்டு சாவியையும் எடுத்துக்கொண்டு ஆண்களில் பெரும்பான்மையானோர் ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர். பெண்கள் மட்டுமே ஊரில் உள்ளனர். காவல் நிலையத்தில் நடந்த தாக்குதலில் தாசில்தாரின் வாகனமும், ஒரு பெண் கான்ஸ்டபிளும் தாக்கப்பட்டதாக டி.எஸ்.பி. சிவக்குமார் இந்தியா டுடேயிடம் தெரிவித்தார். ”திருவிழா காலத்தில் மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் தலித் மக்களை கோயிலுக்குள் அனுமதிக்கவேண்டும் என்கிறது அரசியல் அமைப்புச் சட்டம். ஆனால் திருவிழாவின்போதும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை..பி.கோ. பிரிவு 307ன் கீழும், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தற்காகவும் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது. அன்றைக்குப் பிரச்சனையில் ஈடுபட்டதில் பல பெண்களும் இருப்பதால் அவர்களை கைது செய்வதில் நடைமுறை சிக்கல்களும் உள்ளன.” என்கிறார் டி.எஸ்.பி.

பதற்றம் நிறைந்த சூழலில் தேர்தல் வேறு வருவதால், உத்தபுரம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.



No comments:

Post a Comment