Wednesday, July 25, 2012

திருநங்கைக்கு மறுக்கப்படும் சொத்துரிமை


பெண்களுக்கான சொத்துரிமையே மிகத் தாமதமாகக் கிடைத்த நாட்டில், திருநங்கைகளுக்கான சொத்துரிமை மட்டும் அத்தனை எளிதில் கிடைத்துவிடுமா? அதற்கான போராட்டத்தில்தான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கிறார் திருநங்கை ஸ்வேதா. 
பிரச்னை என்னவாம்?
சென்னை ராயபுரம் காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்வேதா. தனது பாலினம் குறித்து தெரிய ஆரம்பித்தவுடன் மும்பைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறினார். சென்னை திரும்பியவர், திருநங்கை களுக்காகச் செயல்படும் 'சகோதரன்’ அமைப்பில் ஊழியராகப் பணியாற்றுகிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டில்தான் தன் தாயைச் சந்தித் தார். முதலில் தயங்கிய சொந்தங்கள், இப்போது இவரைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டார்கள். அதன் பிறகு நடந்ததை ஸ்வேதாவே சொல்கிறார்.
''என் மாத வருமானம் 5,000 ரூபாய். நான் தங்கி இருந்த வீட்டுக்கு வாடகையே 3,000 ரூபாய். அதனால் போக்குவரத்துச் செலவுக்கும் சாப் பாட்டுக்கும் பணம் போதவில்லை. அதனால் அம்மா வுக்குச் சொந்தமான ஒரு வீட்டில் என்னை குடியிருக்கச் சொன் னார்கள். அங்கேதான் வந்தது சிக்கல்.
அந்த வீட்டில் இரண்டு தளங்கள். ஒன்று என் அம்மாவுக்குச் சொந்தமானது, இன்னொன்றில் என் சித்தி இருக்கிறார். என் அம்மா 10 வருடங்களாக அங்கு போகவே இல்லை. அந்த வீட்டை லீஸுக்குக் கொடுத்துவிட்டு போரூரில் வேறு ஒரு வீட்டில் இருக்கிறார்கள். லீஸுக்கு இருந்தவர்களைக் காலி பண்ணச் சொல்லிவிட்டு, அந்த வீட்டில் தன்னுடைய மகளைக் குடி வைத்திருக்கிறார் சித்தி. எனக்காக அந்த வீட்டை அம்மா கேட்ட பிறகும், 'தர மாட்டேன்’ என்று சித்தி கூறியதுதான் பிரச்னைக்குக் காரணம்'' என்ற வரைத் தொடர்ந்து பேசினார் ஸ்வேதாவின் தாய் சுந்தரி.
''நான் குடி வெச்சிருந்தவங்களை என் தங்கச்சி சரளாவும் தங்கச்சி வீட்டுக்காரர் ஹரிகிருஷ்ணனும் சேர்ந்து வெளியேத்திட்டு, அவங்க பொண்ணைக் கொண்டுவந்து குடிவெச்சிட்டாங்க. அதுவே தப்பு. ஸ்வேதா வீடு இல்லாமக் கஷ்டப்படவே, நான் அந்த வீட்டைக் கேட்டேன். தர மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டாங்க. அவங்களுக்கு லோக்கல் ரவுடிகள், அரசியல்வாதிகள் சப்போர்ட் இருக்கு. அதனால் ஆள் வெச்சு மிரட்டுறாங்க. ஸ்வேதாவையும் மிரட்டினாங்க. நாங்க போலீஸுக்குப் போனோம். ராயபுரம் ஏ.சி. முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்துச்சு. லீஸ் பணம் 90,000 ரூபாயும் இதுவரைக்கும் அவங்க கட்டின வீட்டு வரிக்கும் சேர்த்து 1,20,000 ரூபாயை ஸ்வேதா கட்டினா... வீட்டைத் தர்றதா முடிவாச்சு'' என்கிறார் சுந்தரி.
அதன் பிறகும் விவகாரம் கமிஷனர் அலுவலகம் வரை வளர்ந்தது எப்படி?
பேசிய பணத்துடன் போயிருக்கிறார் ஸ்வேதா. அப்போது சித்தி சரளா, வீட்டை இடித்துத் தருவதாகவும் அங்கேயே புது வீடு கட்டிக்கொள்ளுமாறும் சொல்லவும் மீண்டும் பிரச்னை.
''நான் திருநங்கை என்பதால்தான் அப்படிச் சொல்கிறார். 'நான் புள்ளை பெத்துருக்கேன். உன்னைப்போல இல்லை. என் பொண்ணு வாழ்ந்த வீட்டில் உன்னை வாழவிட மாட்டேன். வீட்டை இடிச்சுத் தர்றேன். வேணும்னா புதுசா கட்டிக்கோ’ என்கிறார்கள். பணத்தையும் வாங்கிக்கொண்டு, வீட்டையும் இடித்து மண்ணாக்கித் தந்தால் மறுபடியும் வீடு கட்ட பணத்துக்கு எங்கே போவேன்? என் சொந்த வீட்டில் வாழ்வதற்கு நான் எத்தனை கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. என் சொந்தக்காரர்களே இப்படி என்றால், சமுதாயத்தில் மற்றவர்கள் என்னை எப்படி நடத்துவார்கள்?'' என்றார் ஸ்வேதா.
சென்னை மாநகரக் காவல் துறை ஆணையரின் உத்தரவின்பேரில் மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சரளா, ''வீட்டின் நடுவில் கோடு போட்டுப் பிரித்து ஒரு பகுதியை இடித்துத்தான் தருவேன். இப்போது ஒரே படிக்கட்டின் வழியாகத்தான் இரண்டு வீடுகளுக்கும் பாதை இருக்கிறது. ஸ்வேதா மாதிரி திருநங்கையும் நாங் களும் ஒரே படிக்கட்டை எப்படிப் பயன்படுத்துவது? அது எனக்குக் கேவலம்'' என்று கறாராய்ச் சொல்கிறார்.
ஸ்வேதாவின் முடிவு என்ன?
''வழக்குப்  போடும் முடிவில் இருக்கிறேன். ஆனாலும் அதற்கு வாய்ப்பு இல்லாமல் சித்தி எனக்கு வீட்டைக் கொடுத்துவிடுவார் என்று நம்புகிறேன். என்ன இருந்தாலும் அவர் என் ரத்த சொந்தம்தானே'' என்கிறார் ஸ்வேதா.
ரத்த பாசம் ஜெயிக்குமா என்பதைப் பார்க்கலாம்.

படங்கள்: ஆ.முத்துக்குமார், ச.இரா.ஸ்ரீதர்

No comments:

Post a Comment